Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘தினக்குரல்’ Category

நண்பர் புலோலியூர் இரத்தினவேலோன் ஞாயிறு தினக்குரலிலின் பனுவல் பகுதியில் புலோலியூரின் இலக்கியகர்த்தாக்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை தொடர் எழுதி வருகிறார்.

இன்றைய கட்டுரையில்புனைகதை சாரா இலக்கியம் படைப்பவர்கள் பற்றிய தகவல்களைத் தந்துள்ளார்.

இந்த வகையில் சில வாரங்களுக்கு முன்னைய இக் கட்டுரையில் எனது எழுத்துக்கள் பற்றிய தகவல்களை வழங்கியுள்ளார்.

இதைத் தவிர திரு.பேராசிரியன், வே.ஆறுதுகம், வேல்நந்தகுமார், பாலவயிரவநாதன், பேராசரியர் வேலுப்பிள்ளை, பேராசரியர் மனோன்மணி சண்முகதாஸ், பேராசரியர் சண்முகதாஸ் உள்பட பலரைப் பற்றிய தகவல்களையும் தந்துள்ளார்.

இதில் என்னைப் பற்றி எழுதியவற்றை ஸ்கான் பிரதி பண்ணி உங்களுடன் பகிர்கிறேன்.

என்னைப் பற்றி விரிவாக  எழுதியிருக்கும் புலோலியூர் இரத்தினவேலோன் அவர்களுக்கும் பிரசுரித்த தினக்குரல் பத்திரிகைக்கும் எனது நன்றிகள்

நன்றி இரத்தினவேலோன் அவர்களே

0.00.0

Read Full Post »

தினக்குரல்  வழமையாக தனது பத்திரிகையில் இணைக்கும் அனுபந்தங்களுடன் இன்று புதிதாக ‘டிஜிட்டல் யுகம்’ என்பதை வெளியிட்டுள்ளது.

இதில் எனது வலைப்பதிவு அனுபவங்கள் பற்றிய சுருக்கமான நேர்காணலை இணைத்துள்ளார்கள்.

‘கண்டங்களை தாண்டிய வாசகர்களைக் கூட சில நிமிடங்களுக்குள் அடைய முடிகிறது’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.

1.    கடந்த வருடத்தின் சிறந்த தமிழ் வலைப்பதிவாளராக நீங்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தீர்கள். அத்துடன் 5 வலைப்பதிவுகளையும் நீங்கள் மேற்கொண்டுவருகின்றீர்கள். ஒரு மருத்துவராகவும், எழுத்தாளராகவும் உள்ள நீங்கள் வலைப்பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று எவ்வாறு ஈர்க்கப்பட்டீர்கள்?

தினக்குரல் டிஜிட்டல் யுகம்

கணனியை காணாத கிடைக்காத போர்பிரதேசத்தில் 1996 வரை வாழ்ந்ததால் அதில் ஒரு அபரிதமான மோகம் இருந்தது. அதனால் கொழும்பு வந்ததும் கணனியை வாங்கி அதில் தட்டுத்தடுமாறி கீபோட் கொண்டு சுயமாக எழுதப் பழகினேன். பின் நோயாளர்களின் விபரங்களைப் பேணுவதற்காக கணனியை நான் உபயோகிக்கத் தொடங்கியபோது இலங்கையில் அவ்வாறு பேணுவதில்; ஒரு முன்னோடியாக இருந்தேன் எனலாம்.

தொடர்ந்து தமிழில் கீபோட்டில் மிகச் சிரமத்துடன் பாமினி பொன்டில் எழுதப் பழக நேர்ந்தது. பதிவுகள் இணைய இதழுக்காக மருத்துவ இலக்கிய கட்டுரைகளை எழுதுவதற்கு அது அவசியமாக இருந்தது. இது சுமார் 10-12 வருடங்களுக்கு முன்னராகும்.

இவ்வாறு கணனியிலும் இணையத்திலும் எழுதி வந்தபோதும் வலைப்பதிவளானக வேண்டும் என்ற சிந்தனை இருக்கவேயில்லை. ஆனால் அதற்கான ஆர்வத்தை தூண்டிவிட்டது நண்பர் மேமன் கவிதான்.

2 வலைப்பதிவை மேற்கொள்ளும் ஒரு எழுத்தாளர் எதிர்கொள்ளம் முக்கியமான பிரச்சினையாக இருப்பது தொழில்நுட்பப் பிரச்சினை. குறிப்பாக வலைத்தளத்தை அமைத்துக்கொள்வது பதிவேற்றம் செய்வது, தமிழ் யுனிகோட் எழுத்துருவைப் பயன்படுத்துவது என்பவையே அவை. இந்தப் பிரச்சினைகளை நீங்கள் எவ்வாறு வெற்றிகொண்டீர்கள்?

கண்டங்களை தாண்டிய வாசகர்களைக் கூட சில நிமிடங்களுக்குள் அடைய முடிகிறது'

மருத்துவனான எனக்கு கணனி ஒரு சாவாலாகவே இருந்தது. வலைத்தளத்தை அமைப்பது எப்படி என்று தெரியாத நிலையில் வலையில் தேடிதேடி வாசித்துக் கற்றே முதலாவதை கற்றுக்குட்டி போல அமைக்க முடிந்தது. படிப்படியாக அதை அழகுபடுத்தவும், விளக்கப் படங்களுடன் தெளிவாக்கவும் கற்றுக் கொண்டேன். இப்பொழுதும் வலைப் பதிவு சம்பந்தமாகக் பல புதிய விடயங்களை வலையிலேயே கற்று என்னை முன்னேற்ற முயல்கிறேன்.
ஆனால் அடிப்படைக் கணனி அறிவு எனக்கு இல்லாதது ஒரு குறையாகவே படுகிறது.

நான் ஆரம்பத்தில் blogspot.com வைப் பயன்படுத்தினேன்.

இப்பொழுது wordpress.com லும் எழுதுகிறேன்.

இவை இரண்டுமே அதிக கணனி அறிவு இல்லாதவர்களும் இலகுவாக தமக்கென சுலபமாக வலைப் பதிவுகளை (புளக்) அமைக்க கை கொடுக்கி;ன்றன. அவற்றின் தளத்திற்கு சென்றால் படிமுறையாக புளக் அமைக்க வழி காட்டுகின்றன. ஆங்கில அறிவு அதிகம் இல்லாதவர்கள் தமிழிலும் செய்யக் கூடியதாக இவை அண்மைக்காலமாக தமிழிலும் கிடைப்பது மற்றொரு சிறப்பாகும்.

Keyman மென்பொருளை உபயோகிப்பதால் பாமினியில் டைப் பண்ணுவதுபோலவே டைப் பண்ண முடிகிறது. அது எனக்குச் சிரமமாக இருக்கவில்லை.

3. உங்களுடைய தொழில் மற்றும் பத்திரிகைகளுக்கு எழுதுவது என்பவற்றுக்கு மத்தியிலும், இவ்வாறு ஐந்து வெவ்வேறான வலைத்தளங்களை வைத்து உங்களால் எவ்வாறு பராமரிக்க முடிகின்றது. அதற்கான நேரத்தை எவ்வாறு பெற்றுக்கொள்வீர்கள்?

வலைதளத்திற்கு என நான் தனியாக எழுதுவது குறைவு. எற்கனவே பத்திரிகை சஞ்சிகையில் வெளியான எனது கட்டுரைகளையே வலைத்தளத்தில் பகிர்கிறேன்.

இருந்தபோதும் பல வலைப் பதிவாளர்கள் போல என்னால் தினமும் பதிவேற்ற முடியவதில்லை. வாரத்திற்கு ஒரு முறையாவது மருத்துவப் பதிவு ஒன்றையும், இலக்கிய படைப்பு ஒன்றையும் பகிர முயல்கிறேன். பெரும்பாலும் இரவில் நேரங்கெட்ட நேரம்வரை முழித்திருந்தே இவற்றைச் செய்ய நேர்கிறது.

4. இவ்வாறான வலைப்பதிவுகளை மேற்கௌ;வதன் மூலமாக எவ்வாறான நன்மைகளை நீங்கள் பெற்றுக்கொண்டிருக்கின்றீர்கள்? அதாவது இதன் மூலமாக உங்களுக்குக் கிடைத்த பலன்தான் என்ன?

வயது என்பது புதிய தொழில் நுட்பங்களைக் கற்கவும் பயன்படுத்தவும் தடையாக இருக்கக் கூடாது. அதைத் தாண்ட வேண்டும் என்ற சவாலை எதிர்கொள்வதே எனது முதல் இலக்காக இருந்தது. ஆனால் காலம் செல்லச் செல்ல எனது மருத்துவ அறிவை பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்கு அப்பால் ஒரு பரந்த தளத்திற்கு நகர்த்த வேண்டும் என்ற அவாவை நிறைவேற்றிய திருப்தி கிட்டியது.

கண்டங்களைத் தாண்டிய வாசகர்களைக் கூட  சில நிமிடங்களுக்குள் அடைய முடிவதும், அவர்களது விமர்சனங்களையும் கருத்துகளையும் உடனடியாகவே பெற முடிவதும் மகிவும் மகிழ்சி அளிப்பதாகும். பல பழைய நட்புக்களைப் புதிப்பிக்கவும், புதிய நட்புகளை  பெற முடிவதும் உற்சாகம் அளிக்கிறது.

எனது படைப்புகளை பலர் வெவ்வேறு தளங்களில் பகிர்ந்து கொள்கிறார்கள். அதனால் இன்னமும் பரவலாக வாசிக்கப்படுகிறது. இவற்றால் எழுத்தளான் என்ற முறையில் கிட்டும் ஆத்ம திருப்தியைத் தவிர வேறு என்ன கிடைக்க முடியும்.

5. தமிழில் வலைப் பதிவுகளை மேற்கொள்பவர்களுக்கு நீங்கள் சொல்லக் கூடிய ஆலோசனை என்ன?

தெளிவான இலக்குகளுடன் பதிவிட வேண்டும். யாருக்காக எழுதப் போகிறேன், எவ்வாறு எழுதப் போகிறேன் எனத் தெளிவுடன் எழுத வேண்டும்.

எதை வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் யாருக்காவது பயன்படுவதாக இருக்க வேண்டும். சீரியசான விடயமாகத்தான் எழுத வேண்டும் என்றில்லை. சற்று ரிலக்ஸ்சாக மற்றவர்களுடன் பொழுதுபோக்கிறாக எழுதுவதாலும் இருப்பதில் தவறில்லை.

மற்றவர்களைக் கவரும் விதத்தில் எழுதுவது அவசியம். சிலரது தலைப்பு மட்டுமே கவர்ச்சியாக இருக்கும் உள்ளடக்கம் சப்பென்று இருக்கும். அவ்வாறான எழுத்துகளால் வாசகர்களைத் தக்க வைத்திருக்க முயடிhது.

0.0.0.0.0.0.0

Read Full Post »

>

எனது உறவினர் ஒருவர் இருந்தார் வயதானவர். நான் பள்ளிச் சிறுவனாக திரிந்தபோது அவருக்கு எழுபது வயதிருக்கும். அவர் கழிப்பறை சென்றால் வெளியே வர குறைந்தது ஒரு மணிநேரமாகும். அவ்வளவு நேரம் அதற்குள் என்ன செய்கிறார் சில குறும்புப் பையன்கள் ஆராச்சி செய்ய முனைவார்கள். ஆனால் அதன் இரகசியம் உள்வீட்டுப் பையனான எனக்குத் தெரிந்திருந்தது. முதல் நாள் வெளிவந்த ஆங்கிலத் தினசரியுடன் உள்ளே சென்றால், அதில் கரை கண்டு முடியவும் அவரது கழிப்புக் கடன் தீரவும் சரியாக இருக்கும். அதன் பின்தான் மிகுதி வேலை எல்லாம்.

அவரைப் போலவே பலருக்கும் தினசரிகள் இல்லாமல் காலை விடிவதில்லை.

மற்றொரு வயதானவரையும் எனக்குத் தெரியும். பத்திரிகையின் முற் பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ள வெளியூர்ப் பதிப்பு என்ற வசனத்தில் படிக்க ஆரம்பித்தால், எந்த நிறுவனத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது என்ற கடைசி வரி படித்து முடியும் வரை சார்மனைக் கதிரையிலிருந்து எழுந்திருக்கவே மாட்டார்.

இவை அந்த நாள்கதைகள். இப்பொழுது காலையில் ரீவி ஒலிபரப்பில், பத்திரிகை நியூஸ் வாசிப்பதை அவ்வப்போது அரைக் காது கொடுத்துக் கேட்பது மாத்திரமே பலருக்கு பத்திரிகை படிப்பதாகிட்டது.

சில தகவல்கள்

இத் தருணத்தில் பத்திரிகை என்ற ஊடகத்தின்; தோற்றம் பற்றியும் சில தகவல்களை நினைத்துப் பார்ப்பது சுவார்ஸமாக இருக்கும்.
2009 ஆண்டு செய்யப்பட்ட ஒரு ஆய்வின் பிரகாரம் உலகளாவிய ரீதியில் 12,297 பத்திரிகைகள் பிரசுரமாகின்றன என World press trends அறிக்கைகள் கூறுகின்றன.

இதில் மிக அதிகமான எண்ணிக்கையில் பிரசுரமாகும் பத்திரிகை ஜப்பானிலிருந்து வெளிவரும் Yomiuri Shimbun என்பதாகும். தினமும் 10,020,000 பிரதிகள் அச்சிடப்படுகின்றன என அறியும்போது ஆச்சரியம் மேவுகிறது.

உலகில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை எது என்பதில் பல சந்தேகங்கள் உள்ளன. பத்திரிகைகளின் முன்னோடியான வடிவங்கள் ஜேர்மனியில் தொடங்கியதாகத் தெரிகிறது. கையால் எழுதப்பட்ட அந்தப் பிரதிகளாவன அங்குள்ள வர்த்தகர்களிடையே பரவியிருந்தன. நாட்டு நடப்பு, போர் செய்திகள், பொருளாதார வர்த்தகச் செய்திகள் எனப் பல அவ்வாறு அவர்களிடையே பகிரப்பட்டன. இது கிட்டத்தட்ட 700 ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்தது.

அச்சில் முதலில் வெளிவந்ததும் ஜேர்மனியில்தான். கைப்பிரசுங்கள் வடிவில் வந்த அவை பெரிதும் பரப்பான விடயங்களைப் பேசின. இவை 1400களின் பிற்பகுதியில் தோற்றம் பெற்றன.

லண்டன் கஸட் என்ற பத்திரிகையே ஆங்கிலத்தில் முதல் முதலாக வந்த செய்திப் பத்திரிகையாகும். இத 16666ம் ஆண்டு வெளியான போதும் அதற்கு முன்னரே இதற்கு முன்னோடியான 1662 The Weekly Newes ல் வெளிவர ஆரம்பித்துவிட்டது.

பணிகள்

செய்திப் பத்திரிகைகள் என்றால் என்ன என்பது பற்றி எங்கள் எல்லோருக்கும் தெரியும். உள்நாட்டு வெளிநாட்டுச் செய்திகள், உபயோகமான தகவல்கள் இவற்றோடு பத்திரிகைகளை வாசகர் வாங்கும் அளவில் குறைந்த விலையில் விற்பதற்கு உதவியாக விளம்பரங்களும் நிறைய இடம் பெறும். நூல்களைப் போல உயர்தரக் கடதாசியாக அல்லாமல் சாதாரண நியூஸ் பிரிண்ட் பேப்பரில் வெளியாவதும் விலை உயராமல் தடுப்பதற்கே ஆகும்.

இப்பொழுது பத்திரிகைகளின் எல்லைகள் அகன்றுவிட்டன. தனியே செய்திகள் என்றில்லாமல் இலக்கிய ரீதியாக கதை, கட்டுரை, கவிதைகள், விஞ்ஞானத் தகவல்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் என் பலவற்றையும் சேர்க்க வேண்டிய கட்டாயம் ஒரு காலகட்டத்தில் இணைந்தது. இப்பொழுது அவற்றுக்காக தனி இணைப்புகளை சஞ்சிகைகள் வடிவில் வழங்க வேண்டியும் இருக்கிறது.

தினசரிப் பத்திரிகைகள் எதிர்நோக்கும் போட்டிகளும் இத்தகைய மாற்றங்களுக்குக் காரணமாகின்றன. போட்டி என்பது பத்திரிகைகளுக்கு இடையே என்ற நிலையையும் தாண்டி, வானொலி, தொலைக்காட்சி, இணையம் என புதிய சவால்களையும் எதிர்கொள்ள நேர்ந்திருக்கிறது. ஆனால் இவற்றால் வாசகர்கள் மேலதிக பயன்பெறுகிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

தினக்குரல்

தினக்குரலும் இத்தகைய போட்டிகளுக்கு ஈடுகொடுத்து தனது தனித்தன்மையைத் தொடர்ந்து தக்கவைத்திருக்கிறது.

இலங்கைத் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான பத்திரிகையாக தினக்குரல் இன்று இருக்கிறது. தமிழ் மக்களின் வாழ்வு மிகவும் நெருக்கடியான நிலையிலிருந்த ஒரு இருண்ட காலகட்டத்தில் இது ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் மக்களின் அவலங்களை வெளிப்படுத்தவும், அவர்களது குரலைத் தேசிய அளவில் ஒலிக்கச் செய்யவும், தமிழ்தேசிய உணர்வுக்கு ஆதரவாகவும் ஆரம்பிக்கப்பட்டதால் மிகுந்த இக்கட்டான நிலைகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது. ஆனாலும் அந்தச் சவால்களைத் தாண்டி கட்டிளம் பருவமான 15 வருட காலத்தை வெற்றிகரமாக எட்டிப்பிடித்து இருக்கிறது.

எனது விருப்புகள்

தினக்குரலை எடுத்ததும் முற்பக்கச் செய்திகளை மேய்ந்துவிட்டு நான் தாவிப் பாய்வது அதன் நடுப்பக்கத்திற்கே ஆகும். முக்கியமாக கவனத்தை ஈர்ப்பது அங்கு நாலாம் பக்கத்தில் இடம்பெறும் ஆசிரியர் தலையங்கம் ஆகும். கவனத்தில் எடுக்க வேண்டிய விடயங்கள் அதில் அலசப்படுவது வழக்கம். மிகவும் சிறப்பாகவும், பரந்த பார்வையுடன், நல்ல தமிழில் அமைந்திருப்பது அதன் சிறப்பாகும்.

நல்ல பல புதிய தமிழ்ச் சொற்களை அங்கு ஆசிரியர் பயன்படுத்துவது வழக்கம். தமிழ் எழுத்துத்துறையில் இருப்பவர்களுக்கு பயனுடையாக இருக்கிறது. அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட பல தலையங்கங்கள் ‘ஊருக்கு நல்லதைச் சொல்வேன்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்ததும் அறிஞர்களின் பாராட்டுக்களைப் பெற்றதும் அறிந்ததே.

5ம் 6ம் பக்கங்களில் வெளியாகும் சிறப்பான கட்டுரைகள் என்னைக் கவரும் மற்றொரு அம்சமாகும். உள்நாட்டு அரசியல், உலக அரசியல், பொருளாதாரம், விஞ்ஞான முன்னேற்றம் போன்ற பல்வேறு விடயங்களில் தேர்ந்தெடுத்த கட்டுரைகள் அங்கிருக்கும். அவற்றிடையே முற்போக்குச் சிந்தனையுள்ள கட்டுரைகளும் இடம்பெறுவது ஏனைய பத்திரிகைகளில் காண முடியாத விடயமாகும். மறைந்த எழுத்தாளர் டேவிட் ராஜ் அவர்களது இதழ்க் கீற்றான ‘ஒளிவு மறைவின்றி….’ கருத்துச் சித்திரம் ஆகியவற்றை ரசிக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது.

ஞாயிறு தினக்குரலில் வெளியாகும் நேர்காணல்கள், நூல் விமர்சனம், என்னைக் கவரும் பல சிறந்த சிறுகதைகளையும் அது தொடர்ந்து தருகிறது. பெண்ணியம், உளவியல் சார்ந்த கட்டுரைகளும் அதில் சிறப்பானவையாகும்.

தமிழ்ப் பத்திரிகைகள்

தமிழ்ப் பத்திரிகைகள் பலவும் விடயத்திற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை வெளியிடும் முறைக்கு அளிப்பதில்லை. பக்க வடிவமைப்பில் நிறைய முன்னேற்றங்களுக்கு இடம் உண்டு. விடயங்கள் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் கண்களுக்கு இதமாக, வாசிப்புக்கு கவர்ச்சியான தோற்றத்தில் இருந்தால்தான் உள்ளடக்கம் வாசகனைச் சென்றடையும். பத்திரிகைத்தாளின் தரத்திற்கும் வாசக நுகர்ச்சியைத் தூண்டுவதற்கும் நிறையத் தொடர்பு உண்டென்பதையும் மறக்கக் கூடாது.

முற்பக்கத் தலைப்புச் செய்தி வாசகனைக் கவருமாறு எல்லாப் பத்திரிகைகளும் தலைப்புக் கொடுக்கின்றன. இது போலவே ஏனையவற்றிக்கும் கவனம் அளிப்பது அவசியமாகும். கவர்ச்சியும் கொச்சைத்தனமான இரண்டாம் தரத் தலைப்புகள் பொதுவாக இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகளில் இல்லையென்றே சொல்லலாம். ஆயினும் வாசிக்கத் தூண்டும் ஆவலை விதைக்காவிட்டால் அவை வாசகனைச் சென்றடையப்போவதில்லை.

இப்பொழுது பத்திரிகைகள் அதிகரித்துவிட்ட அளவிற்கு தேவையான விடயதானங்கள் கிடைப்பதில்லை போலிருக்கிறது. இதனால் பல பத்திரிகைகளும் இணையத்தில் இருந்தும் விடயங்களைப் பகிர்ந்து கொள்கின்றன. பல கட்டுரைகளும் தகவல்களும் எங்கிருந்து பெறப்பட்டன, யாரால் எழுதப்பட்டன என்ற தகவல்கள் இல்லாமல் அனாதைப் பிள்ளைகள் போல சிதறி வெளியாகின்றன. இதனால் அவற்றின் நம்பகத்தன்மை கெடுகிறது. பகுத்தறிந்து வாசிக்கத் தெரியாத வாசகனை மாயையில் சிக்க வைப்பதுமுண்டு.

உதாரணத்திற்கு நலவியல் தொடர்பான கட்டுரைகள் செய்திகளைச் சொல்லலாம். என்னிடம் வரும் நீரிழிவு நோயாளர்களில் சிலர் சீனியின் அளவு அதிகரித்த நிலையில் வந்தபோது அவர்களது உணவு முறையயைத் தீர விசாரிக்க நேர்ந்தது. பலர் பேரீச்சம் பழம் அதிகம் சாப்பிடுவதாகக் கூறியதுண்டு. “நீரிழிவுக்கு நல்லது” எனப் பத்திரிகைளில் படித்ததாகச் சொல்லுவார்கள். பத்திரிகைச் செய்தி என்பது உண்மையா பொய்யா என்பது தெரியாது.

அது கலோரிச் செறிவுள்ள பழம் என்பதால் மிகக் குறைவாகவே நீரிழிவு நோயாளர்கள் சாப்பிட வேண்டும். தகமையற்றவர்கள் எழுதியதைப் பகிர்ந்து கொள்வதால் வரும் வினை இது. யாரால் எழுதப்பட்டது, அவர் மருத்துவராயின் அவர் எத்துறை சார்ந்தவர், நவீன மருத்துவத்துறை சார்ந்தவரா சுதேசிய மருத்துவ துறை சார்ந்தவரா, அவரது கல்வித்தகமை என்ன அல்லது அது கை வைத்தியமா, என்பது போன்ற விடயங்களை தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். வாசகன் தனக்கேற்றதைத் தெரிவு செய்து படிக்க உதவும்.

மருத்துவக் கட்டுரைகள் இணையத்தில் இருந்து பெறப்பட்டதாயின் அது எந்தத் தளத்திலிருந்து பெறப்பட்டது. அது நம்பிக்கையான தளம்தானா? அது தகுதியானர்களால் எழுதப்பட்டதா என்பது தெளிவு படுத்தப்பட வேண்டும். ஏனெனில் இணையம் கட்டுப்பாடுகள் அற்றது. யார் வேண்டுமானாலும் எதைப்பற்றியும் எழுதலாம்.

நலவியல் கட்டுரைகள் மாத்திரமின்றி எத்துறை சார்ந்த தகவல்களுக்கும் இது பொருந்தும்.

எதிர்காலம்

பத்திரிகைகளுக்கு சவால்கள் பல காத்திருக்கின்றன. வாசகர் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய அவசியமிருக்கிறது. நடுநிலைமையுடன் செயற்பட வேண்டிய தார்மீகக் கடப்பாடு உண்டு. ஆனால் சுதந்திரமான செயற்பாடுகளுக்கு மறைவான தடைகளும், உயிராபத்து அடங்கலான அச்சுறுத்தல்களும் முன் நிற்கின்றன. தினக்குரலுக்கு இது புதிய சவால் அல்ல. பொறுப்புகளை நிறைவேற்ற திறமையும், சாதுர்யமாக செயற்படும் வழிமுறையும் தெரிந்திருக்கிறது.

எனவே வளமான எதிர்காலம் தினக்குரலுக்கும் அதன் வாசகர்களுக்கும் காத்திருக்கிறது என்பது நிச்சயம்.

தினக்குரல் 15 அகவை விசேட மலரில் என்னால் எழுதப்பட்ட கட்டுரை.

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0.0

Read Full Post »