எங்கெணும் பசியினில் துடியா வாழ்வும்
எம்மிடை பேதங்கள் கூறாப் பிணைவும்
கருத்தினில் மோதலை கைலாகுடன் மதித்தலும்
ஒன்றிணைந்து ஒரு கரமாய்ப் பிணையும் நேசமும்
என்றென்றும் இனிது வாழ வழி காட்டும்.
எங்கள் இடரினை மறக்க
எதிரியென எண்ணித் தூற்றலும்
தூற்றலில் களி கொண்டெழலும்
இத்தனைக்கும் இவர்தாம் காலென
இகழ் ஒலிப்பதும்
வேண்டாம் ஒரு போதும்.
சாபமிட்டுச் சாந்தியடைதல்
ஒருபோதும் ஒண்ணாது
எங்களை அழிக்கும் நீசன்
வேறெங்கும் இல்லை.
உள்ளத்துள்உறைகிறான்.
உள்ளுறையும் அசுரனை ஒழிக்க
எள்ளளவும் வேண்டாம் கத்தி, குண்டு,
துப்பாக்கியெதுவும் .
கபடமற்ற கனிவான உள்ளம்
காந்தமாய் ஒளி பரப்பும் வதனம்
கனிவான மொழி
இவை போதும்.
வேறென்ன ஆயுதம் வேண்டும்?
எரித்துப் சினத்து அழிக்காது
சிரித்து கூட வழி வகுக்கும்
நல்லாயுதம் தன்னைக் கைப்பிடித்தால்
நிதமும் தீபாவளி எம் வாழ்வில்.
எம்.கே.முருகானந்தன்
0.0.0.0.0
சென்ற வருடம் மறந்து போகாத சில வலைப்பூவில் எழுதிய வாழ்த்து