Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘தெணியான்’ Category

ஏதனத்தின் ஊடாக சாதீய அடக்குமுறை- தெணியானின் புதிய நாவல்

 

தெணியானின் ஏதனம் நாவலைப் படித்து முடித்த போது பெரும் குற்ற உணர்வுக்கு ஆளானேன்.

scan_20170101

சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் எனது பதின்ம வயதுகளில் நான் எமது ஊர் எல்லையில் உள்ள வீரபத்திர கோவிலடியால் போகும் வேளைகளில் அந்தக் கோயில் வெளிவீதி கிணற்றடியில் சில பெண்கள் குடங்களுடன் நிற்பார்கள். சிலதருணங்களில் ஆண்களும் கூட நிற்பதுண்டு. தங்கள் நாளாந்த தேவைகளுக்கான நீரைப் பெறுவதற்காக. தண்ணீர் அள்ளித் தருமாறு பணிவாகக் கேட்பார்கள். தண்ணீருக்காக அவர்கள் படும்பாடு பரிதாபமாக இருக்கும்.

அவர்கள் பகுதியில் கிணறுகள் இல்லை. மிகவும் மேடான பகுதி என்பதால் ஆழமாக கிணறு வெட்ட வேண்டும். சொந்தக் கிணறு வெட்டுவதற்கான பொருளாதார வசதி அவர்களுக்கு இல்லை.

‘இதுகளோடை மினக்கட நேரமில்லை’ என்று சொல்லியடி விரைந்து ஓடும் பல பெரிய மனிதர்களைக் கண்டிருக்கிறேன். பலர் மணிக்கணக்காக தண்ணீருக்காக பரிதாபமாகக் காத்து நிற்கவும் நேரும்.

கேட்பார்களோ இல்லையோ யாராவது குடத்துடன் அக் கிணற்றடியில் நின்றால் தண்ணீர் அள்ளிக் கொடுக்காமல் நான் போனதில்லை. தண்ணீருக்காகத் துன்பப்படும் அவர்களுக்கு நான் ஒரு பெரிய சேவையை செய்கிறேன் என்ற மனத் திருப்தியுடன், பெருமிதத்துடன் தான் நான் அதைச் செய்திருந்தேன்.

அவர்களை நீர் அள்ளவி;டாது சமூக ரீதியாக தடுத்திருப்பதானது அவர்களது நாளாந்த வாழ்க்கையை எந்தளவு பாதித்திருக்கும், அதற்கு மேலோக அவர்களது சுயமரியாதiயை, தன்மான உணர்வை எந்தளவு புண்படுத்திருக்கும். அது தவறானது. அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் போராட வேண்டும் என்றெல்லாம் அக்காலத்தில் சிந்தித்து செயற்பட வில்லை என்பதை நினைக்கவே எனக்கு குற்ற உணர்வு ஏற்பட்டது.

அக்கால கட்டத்தில் வடமராட்சி மத்திய பகுதியில் இருந்த அரசாங்கப் பாடசாலையின் அதிபர் முற்போக்கு கருத்துகள் உள்ளவரான போதும், பாடசாலை கிணற்றில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தண்ணி அள்ளுவதற்கு, எழுதப்படாத சட்டம் தடையாக இருந்தபோதும் வெளிப்படையாக அவரால் குரல்கொடுக்க முடியாத சமூகச் சூழலே இருந்தது என்பதை தெணியானின் நாவலைப் படித்தபோது புரிந்து கொண்டேன். இந்நிலையில் சிறுவனான நான் என்ன செய்திருக்க முடியும் என்று மன ஆறுதல் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

தண்ணீர் அள்ள மட்டுமல்ல கிணற்றுப் பத்தலுக்குள் கூட அவர்கள் கால் வைக்க முடியாத நிலை அன்று நிலவியது.

தங்கள் மீது வன்முறை பாவிக்கப்படும் என்பதை அந்த அரசாங்கப் பாடசாலை மாணவர்கள் உணர்ந்தும் துணிவுடன் கிணற்றில் அள்ள முயன்று பெரும் இழுபறிகளின் பின்னரே தங்கள் உரிமையைப் பெற முடிந்தது.

தெணியானின் பெரும்பாலான படைப்புகள் போலவே இது சாதீயத்தை கருவாகக் கொண்ட ஒரு நாவல்தான். வடமராட்சி பிரதேசத்தின் ஒடுக்கபட்ட மக்களின் வாழ்வின் பாடுகளைக் பேசும் நாவல்.

ஈழத் தமிழர்களான தங்களுக்குள் ஒன்றான ஒரு சமூகப் பிரிவை அடக்கி ஒடுக்குவதற்கு யாழ்ப்பாண மேல்சாதி சமூகமானது தண்ணீரை எவ்வாறு ஒரு வலுமிக்க ஆயுதமாக பயன்படுத்தியது என்பதை இந்தப் படைப்பின் மூலம் உணர வைக்கிறார் தெணியான். பாதிக்கபட்டவர்களின் ஆக்கிரோசமான எதிர்குரலாக அல்லாது சமூகத்தில் நிலவுவதை உன்னிப்பாக அவதானித்து நிதானமாகவும் அழகாகவும் ஒழுங்கு ரீதியாகவும் பதிவு செய்வு செய்த நாவலாசிரியர் பாராட்டப்பட வேண்டியவராகிறார்.

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னான காலகட்டத்தில் நாவல் ஆரம்பமாகிறது. தாழ்த்தப்பட சமூகத்தில் ஏழ்மையில் வாடும் சிறுவர்களின் வாழ்க்கை சித்தரிப்புடன் களை கட்டுகிறது. உண்மையில் நாவலின் ஆரம்ப பகுதிகள் மிகவும் சுவார்ஸமாகவும் சொல்லப்படுகிறது. தருமன் என்ற பாத்திரம் அற்புதமாக படைக்கப்பட்டு இருக்கிறது. நாவல் முடிந்த பின்னரும் மனதில் நிற்கிறான்.

தருமன் தான் பிரதான பாத்திரம் என்பதான உணர்வு நாவலின் அரைவாசிப் பகுதி வரையில் எனக்கு இருந்தது. ஆயினும் பின்னர் கோபாலன் கதையை ஆக்கிரமித்துக் கொள்கிறார். சமூகத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை வெளிப்படுத்தவும், கதையின் அடிப்படைக் கருவிற்கு வலு சேர்க்கவும் இந்த மாற்றம் அவசியம் எனப் புரிந்து கொள்ள முடிகிறது. இருந்தபோதும் கதையின் உண்மையான நாயகன் கால மாற்றங்களுக்கு ஏற்ப வேறு வேறு முகங்களுடன் மேடையேறும் ‘ஏதனம்’தான்.

கற்றலில் ஈடுபாடற்று பணிசுக்காக மட்டும் பாடசாலை செல்லுமளவு தருமனை வறுமை வாட்டுகிறது. தகப்பன் நல்ல தொழிலாளியான போதும் குடியில் மூழ்கிவிடுவதால் தாய் கூலி வேலை செய்தே குடும்பத்தை ஓட்டுகிறாள். வயிற்றை நிறைக்க முடியாதளவு வறுமையில் குடும்பம் உழல்கிறது.

கோவிலில் சர்க்கரைத் தண்ணி ஊற்றுவதைக் அறிந்த தர்மன் பாடசாலையிலிருந்து கள்ளமாகக் கிளம்பி ஓடி வயிறுமுட்ட சர்க்ரைத் தண்ணீர் அருந்துகிறான். அவன் மாத்திரமின்றி இன்னும் பல மாணவர்கள் அவ்வாறு பாடசாலைக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு ஒடி வருவதைக் காணும் போது அந்தச் சமூகத்தில் அன்று நிலவிய வறுமையின் கோரமுகம் புரிகிறது.

அவர்களுக்குச் சர்க்கரைத் தண்ணீரை எந்தப் பாத்திரத்திலும் ஊற்றிக் கொடுக்கமாட்டார்கள். பானம் உள்ள பாத்திரத்தை இவர்களது கையில் படாதவாறு உயர்திப்பிடித்து சரித்து ஊற்றுவார்கள். இவர்கள் கையில் ஏந்திக் குடிப்பார்கள். கைமண்டை என்று தெணியான் சித்தரிக்கிறார்.

கைமண்டையே நீரருந்தும் ஏதனமாகிறது. சுர்க்கரைத் தண்Pர் மட்டுமே இவர்களுக்கு கிடைக்கும். மோர்த்தண்ணியும் ஊறுகாய்தண்ணியும் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.

‘தருமன் குடிக்கிறான். குடிக்கிறான். குடித்துக் கொண்டே இருக்கிறான்.’

‘டேய் .. நீ குடிக்கக் குடிக்க எங்கையடா போகுது! ஊதென்ன வயிறோ … பீப்பாவோ.’ என்று ஊற்றுபவர் ஏளனம் செய்கிறார்.

ஆயினும் அதைச் சட்டை செய்யாது மேலும் திட்டுகளை வாங்கிக் கொண்டு, ஒரு போத்தலில் சர்க்கரைத் தண்ணி எடுத்துப் போய் வெறுவயிற்றோடு கிடக்கும் தாய்க்குக் கொடுக்க அவன் மனம் அவாவுகிறது. இதைப்; பார்க்க எங்கள் மனம் வெம்பி அழுகிறது.

கால ஓட்டத்தில் சமூக மாற்றங்கள் ஏற்பட்டன, வேகமாக அல்ல மிக மிக மெதுவாக. அதுவும் வலாத்காரமாக மாற்றப்படும் சூழலில் ஏதனங்கள் மாறுகின்றன. கைமண்டை, பச்சோலைப் பிளா, பனஞ் சிரட்டை, சோடாப் போத்தல், அலுமினிய் பேணி, கிளாஸ், மாபிள் கோப்பை, எவர்சில்வர் டம்ளர் எனப் படிப்படியாக மாறவே செய்கிறது.

பருகுவதற்கான ஏதனங்கள் மாறிய போதும், மனித மனங்கள் மாறவில்லை. எவ்வாறு குடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதன் மூலமும் தங்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தவே உயர்சாதிச் சமூகம் முயல்கிறது.

‘தமிழ் நாட்டில் எல்லோரும் எவர்சில்வர் கப்பையே உபயோகிக்கிறார்கள். பாலலென்ன மோரென்ன, தேநீரென்ன கப்பிலை வாய் வைச்சுக் படிக்கும் பழக்கம் அங்கே இல்லை..’ என்று வீட்டுக்காரர் சொல்லி முடிக்க மகள் எவர்சில்வர் கப்பில் தேநீரோடு வருகிறாள்.

ஆம் நாகரீகமாக சாதீயத்தை காக்க முனைகிறார் வீட்டுக்காரர். வாய்வைத்துக் குடித்து எங்கள் ஏதனத்தை தீட்டுப்படுத்தி விடாதே என்பதை சொல்லாமல் சொல்கிறார்.

நல்ல சாதிக்காரனுக்கும் குறைந்த சாதிக்காரனுக்கும் ஒரே விதமான கோப்பையில் தேநீர் கொடுத்தாலும் குறைந்த சாதிக்காரர் குடித்த கோப்பைக்கு அவமானம் செய்வதன் மூலம் அவர்களை இழிவுபடுத்தி இன்றும் சாதீய உணர்வு செத்துவிடாது இருப்பதை நாவலின் கடைசி அத்தியாத்தின் இறுதிப் பகுதியில் காண்கிறோம். எவ்வாறு என்பதை நீங்களே வாசித்துப் பாருங்கள்.

நாவலின் ஆரம்பம் நன்கு ரசனையோடு அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சிறுவயது அனுபவங்கள் சொல்லப்பட்ட முறையானது வாசகனை அந்தச் சூழலுக்குள் நனைந்து ஊற வைக்கிறது. ஆயினும் மேலே செல்லச் செல்ல, சற்று வேகமாக கதையைச் சொல்லி முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் சொல்லப்பட்டது போன்ற உணர்வு எழுகிறது. கருத்திற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பாத்திர மற்றும் களச் சித்தரிப்பிற்கு கொடுக்கப்படவில்லை. செழுமை பிற்பகுதியில் தளர்ந்து விடுகிறது.

தெணியானது இந்த நாவலானது சுவையான நாவலாக மட்டும் இல்லை. அந்த காலகட்டம் பற்றிய பல செய்திகளையும் தகவல்களையும் கதை முழுவதும் தூவிச் செல்கிறது. ‘யாழ்ப்பாண நகரத்தில் தேநீர்க்கடைப் பிரவேசம் நடைபெற்று பதினொரு ஆண்டுகள் கழிந்த பின்னரும் வடமராட்சியில் உள்ள தேநீர்க்கடைகள் திறந்தவிடப்படவில்லை’ என்பது உதாரணத்திற்கு ஒன்று.

இடதுசாரிக் கட்சிகளின் அக்கறை, மக்கள் சபை தோற்றம், முடி வெட்டும் சலூன்களிலும் பாகுபாடு, ஆலயப் பிரவேசம், தேநீர் கடைகளை திறந்துவிடுதல், சாதியக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள் போர்ச் சூழல் காரணமாக பின்னடைவது போன்ற பலவேறு தகவல்கள் நாவல் முழுவதும் நிறைந்து கிடைக்கின்றன.

எனவே, இதை ஒரு வெறும் கதையாக, நாவலாக, படைப்பிலக்கியமாக மட்டும் பார்க்க முடியவில்லை.

வடமராட்சி பிரதேசத்தில் சாதி ஆதிக்கம் நிலவிய முறையையும் அது எவ்வாறு படிப்படியாக நீர்த்துப் போனது பற்றியும் பேசுpறது. நீர்த்தது போல மேலோட்டமாக சலனமின்றிக் கிடந்தாலும், நீறுபூத்த நெருப்பாக உள்ளுர அரித்துக்கொண்டிருப்பதை பேசுகிறது. இருளுக்குள் மறைந்திருக்கும் கள்வன் போல அசுமாத்தமின்றி சமூகத்தை அரித்துக் கொண்டே இருக்கிறது என்பதைப் பேசும் ஆவணமாகவும் கருத முடியகிறது.

ஊர் எல்லைகளைக் கடந்து மலையகத்திலும், ஆட்சி மாற்றங்களை மீறி போராளிகளின் காலத்திலும் எவ்வாறு சாதீ ரீதியான பாகுபாட்டைக் தமிழ் சமூகம் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தது, இருக்கிறது என்பதை பதிவு செய்யும் ஆவணமாக இருக்கிறது.

scan_20170101-2

தெணியான் சோர்வின்றி இயங்கும் ஒரு படைப்பாளி சிறுகதை, குறுநாவல், நாவல் இலக்கியக் கட்டுரைகள், மேடைப் பேச்சு என தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர்.

இது அவரது 22வது நூல் என நினைக்கிறேன். அட்டைப்படத்தை ஜீவநதி ஆசிரியர் பரணீதரன் அழகாக வடிவமைத்துக் கொடுத்துள்ளார். மறைந்த எழுத்தாளர் ராஜ சிறீகாந்தன் நினைவாக வெளிவந்திருக்கிறது.

பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியீடாக வந்திருக்கிறது. விலை ரூபா 300 மட்டுமே.

தொடர்புகளுக்கு

பூபாலசிங்கம் புத்தகசாலை

202,செட்டியார் தெரு

கொழும்பு 11.

எம்.கே.முருகானந்தன்

0.00.0

Read Full Post »

>

‘தவறிப் போனவள்’ பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். முன்னால் ‘நடத்தை’ என்ற சொல்லை அடைப்புக்குறிக்குள் போட்டுவிட்டால் அதன் அர்த்தம் தெள்ளத் தெளிவாகப் புலப்படும்.

ஆனால் அவ்வாறான  ‘தவறிப்போனவன்’ பற்றித் தமிழில் எழுதுவார் யாருமில்லை. எமது இனிய தமிழின், தமிழ்க் கலாசாரத்தின் பாலியல் ரீதியான பாகுபாட்டு அம்சத்தின் அல்லது ஒடுக்குமுறை அம்சத்தின் கயமையான வெளிப்பாடுதான் பெண்பாலான, அந்த சொற்பிரயோகம் எனச் சொல்லலாம்.

‘நடத்தை தவறிப்போனவன்’கள் இல்லாத ‘கோவலன்’ வழி வந்த புனித சமூகம் அல்லவா எம்மது?.

தமிழர்களாகிய நாம் இன ரீதியான பாகுபாடு பற்றிப் பேசுவோம். மொழி ரீதியான ஒடுக்குமுறை பற்றிப் பேசுவோம். பிரதேச ரீதியான பாகுபாடுகள் பற்றியும் வாய்கிழியப் பேசுவோம். பால்ரீதியான பாரபட்சம் பற்றி  மட்டுமே மேலோட்டமாக அவ்வப்போது பட்டும் படாமாலும் பேசுவோம்.

ஆனால் எழுத்து வடிவில் அதிகம் பயன்படுத்தாத மொழிப் பிரயோகத்தைப் தனது படைப்பின் தலைப்பாகக் கையாண்டிருக்கிறார்; எழுத்தாளர் தெணியான். சகல ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் கொடுத்துக் கொண்டேயிருக்கும் தெணியான் அவ்வாறு செய்வது அதிசயமல்ல. ஆனால் அவர் பேசுவதும் ஒழுக்க ரீதியாகத் தவறிப் போனவன் கதையை அல்ல என்பதும் உண்மையே.

எமது பக்கத்தில் பேச்சுவழக்குத் தமிழில் ‘தவறிப் போனான்’ என்று சொல்வது வழக்கம். அந்த அர்த்தத்தில்தான் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. ஆனால் இது ஒரு தவறிப் போனவன் கதை மட்டுமல்ல. தவறிப்போனவன்கள் பலர் பற்றிய கதையாகவும், தவறிப்போனவனாகக் கருதப்பட்டுத் தப்பியவன் கதையாகவும் இருக்கிறது.

எதையும் வழமைபோலச் சொல்லக் கூடாது சற்று வித்தியாமாகச் சொல்ல வேண்டும் எனத் தெணியான் அடிக்கடி சொல்லுவார். அது அவரது படைப்பின் தலைப்பிலும்  வெளிப்படுகிறது.

தவறிப்போனவன் கதை என்பது தெணியான் எழுதிய நாவலாகும். தினகரன் வாரமஞ்சரியில் 2005ம் ஆண்டில் ஆறு மாதங்களாகத் தொடராக வெளியான இந்நாவல் இப்பொழுது கொடகே நிறுவனத்தால் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.

தணிகாசலம் ஒரு ஆசிரியர். தனது பாடசாலையில் உபஅதிபராகக் கடமையாற்றுகிறார். தனது பதவி பற்றி இவ்வாறு சொல்கிறார். “உபஅதிபர் கதிரை இரண்டும் கெட்டான் நிலையுள்ள போலி ஆசனம். கேலியாகப் பேசப்படும். பார்க்கப்படும்…. சம்பளமில்லாத வேலை என்கிறார். இது நூலாசிரியர் தெணியானது ஆசிரியத் தொழில் பற்றிய ஒரு விமர்சனம் எனக் கொள்ளலாம். காலை மணி அடிப்பதற்கு முன் ஆரம்பித்து முடியும் வரை ஒரு பாடசாலையின் நாளந்த நடப்புகளில் அதிபர், ஆசிரியர், மாணவர்களின் நடவடிக்ககைளில் கதையாகவும் சுய விமர்சனமாகவும் வருவது சுவார்ஸமாக இருக்கிறது. அது முதல் அத்தியாயம்.

திடீரென நோய்வாய்ப்பட்ட அந்த மனிதனின் வாழ்வில் சிலநாட்களுக்குள் நடந்த நிகழ்வுகளாகக் கதை சுவார்சமாக விரிகிறது. நோயுற்ற அவன், வீடு தனியார் மருத்துவமனை ஆதார வைத்தியசாலை யாழ் பொது ஆஸ்பத்திரி என அலையும் நேரத்தில், தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள குடும்பம், நண்பர்கள் ஊடாக சமூகத்தைப் பார்ப்பதாக அமைகிறது.

நோய்வாய்ப்பட்டவன் கதையான போதும் உயிர் பறிக்கும் நோயல்ல, ஆனால் பார்த்தவர்களைப் பயமுறுத்துகிற நோய். திடீர் திடீரென மூக்கிலிருந்து இரத்தம் வடியும். மண்டை ஓட்டிற்குள் ஏதோ வெடித்து மூக்கினால் குருதி வடிகிறது என்ற எண்ணத்தைக் கொடுக்கும். இதனால் பயந்தடித்து மருத்துவமனை நோக்கி ஓடுவார்கள். இங்கும் ஓடுகிறார்கள். தனது உடலில் வேறு ஒரு நோய் உபாதியும் இல்லையே என எண்ணி அவன் பயப்படாதபோதும் குடும்பம் சுற்றத்தவர் நெருக்கடியால் ஓட நேர்கிறது. அங்கெல்லாம் பல்வேறு சுவார்ஸமான நிகழ்வுகள் நடக்கின்றன.

மிக இக்கட்டான ஒரு காலகட்டத்தின் கதை இது.

“யுத்த அனர்த்தத்தினால் சிதைந்துபோன கடற்கரைப் பட்டினம் பருத்தித்துறை”,

“கூலாகக் குடிக்கிறதுக்கு ஒண்டுமே இல்லை, ஒரு சோடா வாங்கேலாது,

“இந்த மண்ணில் வாழும் சிந்திக்கத் தெரிந்த ஆருக்கு பிறஸர் வராமல் இருக்கும்”,

“பெற்றோலும் லாம்பெண்ணையும் கலந்து புக்குபுக்கென்று புகைகக்கிக் கொண்டுஅருந்தலாகச் சில கார்கள் அந்தரத்திற்கு ஓடுகின்றன, இறுதியில் மாட்டு வண்டியில் ஏற்றிப்போவதைத் தவிர அவர்களுக்கு மாற்று வழி ஏதுமில்லை…. ஊரடங்கு நேரத்தில் தனது உயிருக்கு அஞ்சாமல் யார் புறப்பட்டுப் போய் வண்டியைக் கொண்டு வருவார்கள்…. வண்டிக்குள் பாயை விரித்து அதன் மேல் படுக்கைச் சேலையை விரித்து.. கிடத்தினார்கள்…. வண்டி நகர்ந்து நூறு மீட்டர் தூரம் போயிருக்க மாட்டாது.. அந்த வண்டிக்குள்ளேயே அவள் உயிர் பிரிந்தது.”

அதே போல அரிக்கன் விளக்கு, சிக்கன விளக்கு, சிரட்டைக்கரி போட்ட ஸ்திரிக்கைப் பெட்டி அந்த நேரத்தில் யாழ் மக்கள் பட்ட துன்ப, துயர அவலங்கள் அநேகம் ஆங்காங்கே படைப்பில் சொல்லப்படுகின்றன.

இவற்றை விடசொல்ல முடியாதவை பல. பதில் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை என்ற அர்த்தத்தில் அல்ல. சொல்ல முடியாத சூழ்நிலை. பெண்டாட்டிக்கும் சக்களத்திக்கும் இடையே மாட்டுப்பட்டவன் நிலையிலும் மோசமானதாக இருந்தது மனித வாழ்வு அக்காலகட்டத்தில்.

“அப்பு வெளியிலை திரிய வேண்டாம். படிக்கிற பிள்ளையள் எண்டு பாராமல் பிடிச்சுக் கொண்டு போகிறான்கள், சின்னவனையும் வெளியிலை விடாதையுங்கோ”. பிடித்துக் கொண்டு போவார்கள் யார் என்று சொல்ல முடியுமா?

மற்றொரு சம்பவம். ஒருவன் சுட்டுக் கொல்லப்படுகிறான்.

“யார் சுட்டது”

பதில் “தெரியாது”,

“ஏன்?’

“தெரியாது?”

‘அறிவுள்ள எந்த ஒரு மனிதன் இந்தக் கேள்விகளுக்கு இப்பொழுது பதில் சொல்லுவான்?’ என்பது கேள்வியாக நாவலில் ஆசிரியர் கூற்றாக வருகிறது.
மகாத்மா காந்தியின் குரங்குப் பொம்மைகள் போல கண் மூடி, வாய் பொத்தி, காது அடைத்து நின்ற வாழ்வு. தீயனவற்றை ஒதுக்க வேண்டும் என்பதற்காக அல்ல. தம் உயிர் காப்பதற்காக ஒண்டி ஒதுங்கிக் கிடந்த நரக வாழ்வு.

ஒருவரல்ல! யார் யாரோவெல்லாம் எமது குழந்தைகளை கழுகுகள் போல கொத்திக் கொண்டு போனார்கள். உளவாளி என்றும், காட்டிக் கொடுப்பவன் என்றும், பயங்கரவாதி என்றும் வயது வேறுபாடின்றிச் சுட்டுக் கொன்றார்கள்.

தாம் நினைப்பவற்றை எம்மைப் பேசச் சொல்லி நிர்ப்பந்தித்தார்கள். அல்லது ஊமைகள் போல வாய் மூடி இருக்கச் சொன்னார்கள்.

அந்த வாழ்வை அப்படியே வெளிப்படையாகச் சித்தரிந்திருந்தால் நூலாசிரியரும் அக்காலத்திலேயே தவறிப் போனவன் ஆயிருப்பார். “கத்தி முனையில் நடப்பதுபோல மிகுந்த நிதானத்துடன் சிலவற்றை எழுத்தில் சொல்லியிருக்கிறேன்.” என நூலாசிரியர் தனதுரையில் சொல்லிருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆனால் நாவல் என்பது சிறுகதை போன்றதல்ல. அது ஒரு மையக் குறியை நோக்கி நகர வேண்டியதில்லை. பரந்த வாழ்வின் அகண்ட் சித்தரிப்பு. அதனால்தான் இந்த நாவலிலும் பல விடயங்கள் பேசப்படுகின்றன. யாழ் சமூகத்தின் போர்க்கால வாழ்வு, சாதீயம், சமூக சீர்கேடுகள் எனப் பலவும் பேசப்படுகின்றன. பருத்தித்துறையில் ஆதியில் சேவை புரிந்த செல்லப்பா, விசுவலிங்கம், தம்பிப்பிள்ளை போன்ற மருத்துவர்களின் ஒரு முகம் புலப்படுகிறது. சுமார் 40-50 வருடங்களுக்கு யாழ் மாவட்டத்தில் எமக்குக் கிடைத்த மருத்துவ வசதிகளின் கோட்டு வரைவும் இருக்கிறது.

துறைமுகமும், சந்தை,கோடு(Magistrate and district Courts)  பொலீஸ் ஸ்டேசன், என எந்நேரமும் கலகலப்பாக இருந்த நகரம் அது. அந்த நகரின் நினைவுகளைக் கிளற வைக்கிறது இந் நூல்.

சுமார் 40-50 வருடங்களுக்கு முன்னான அக்கால வாழ்வு முறையில் காதல் உணர்வு எவ்வளவு அடக்கமானதாக இருந்ததையும், வெளிப்படுத்;த முடியாத சூழல் கொண்டதாகவும் உணரமுடிகிறது.

கதை முழுவதும் நல்ல தமிழில் எழுதப்பட்டுள்ளது. ஒரு நல்ல தமிழாசியரின் அழகான வசன நடை. ஆங்காங்கே யாழ் மண்ணின் பேச்சுத் தமிழ் மென்முறுவல் காட்டி நயக்க வைக்கிறது. கட்டிளம் பருவத்தில் தோன்றுகின்ற முகப்பருக்களுக்கு ‘குமர்ப் பருக்கள்’என்றும், சத்திர சிகிச்சைக்கு “கொத்தித்தான் பார்க்க வேண்டும்” என டொக்டரே ஓரிடத்தில் சொல்வதும் நயக்கின்றன. தகப்பனை ‘அப்போய்’ என ஆசையோடு அழைப்பதில் உள்ள நேசம் மனதில் நிற்கிறது. அதே போல தந்தை மகனை ‘அப்பு’ என நேச நெருக்கத்தோடு விளிப்பதையும் காண முடிகிறது.

மற்றொரு சுவார்ஸமான விடயம் அந்தக் காலத்துப் பேதி குடித்தல் பற்றியதாகும். இன்றும் ஒரு சிலர் மருத்துவர் என்ற முறையில் என்னிடம் பேதி குடிக்க மருந்து கேட்பதுண்டு. மருத்துவ ரீதியாகப் பேதி இப்பொழுது கொடுக்கப்படுவதேயில்லை. கொடுப்பது தீது என்பதே காரணம். சின்னப் பையனாக இருந்த காலத்தில் வயிற்று வலிக்காக சுதேசிய மருத்துவரால் தணிகாசலத்திற்கு கொடுக்கப்பட்டது. பேதி போவதற்குப் பதிலாக கடுமையாக வயிற்றை வலித்து வாந்திதான் போனது. அதற்குப் பிறகு யார் என்ன சொன்னபோதும் அதைக் குடிக்க மறுத்துவிட்டார்.

தெணியானின்  மற்றொரு நூல் பற்றிய எனது விமர்சனம் படிக்க …  

சுவாரஸ்சமாக நாவல் நகருகிறது. ஒரே மூச்சில் படித்து முடிக்க வைப்பது அதன் சிறப்பு. சிறந்த ஆற்றொழுக்கான நடையும் வாழ்வோடு ஒன்றிய சுவார்ஸமான நிகழ்வுகளும், மனித வாழ்வின் பல்வேறு பக்கங்களை பூமாலை போலத் தொடுத்த நுணக்கமும் அதற்குக் காரணமாகும்.

சில எழுத்துப் பிழைகளும், சொற்கள் பிரிந்து கிடப்பதும் மனத்தை அருட்டினாலும் சிறந்த வகையில் நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ் நூல் வெளியீட்டுத்துறைக்கு கொடகே நிறுவனம் பங்களிக்க முன்வந்தமை பாராட்டத்தக்கது. ஆயினும் பரந்த வளமும் அனுபவ விஸ்தாரமும் கொண்ட அவர்கள் இன்னமும் செம்மையாகச் செய்யலாம் என எண்ணத் தோன்றுகிறது.

இந்த நாவல் எனக்கு  பிடித்ததற்கான காரணங்கள் பலவான போதும்,
தனிப்பட்ட காரணமும் உண்டு. ஏனெனில் இது எனது பிரதேசத்தின் கதை. கதை மாந்தர்கள் பெரும்பாலானவர்கள் எனக்கு அறிமுகமானவர்கள். தவறிப் போனவர்கள் அனைவரும் எனக்குத் தெரிந்தவர்கள். தவறிப்போனவனாகக் கருதப்படும் தணிகாசலம் ஆசிரியர் எனது மிக நெருங்கிய நண்பர். அவர் வேறு யாருமல்ல. நூலாசிரியர் தெணியான் அவர்களே. எனவே இது தெணியானின் சொந்த அனுபவம்.

“தவறிப் போனவன் கதை” என்னும் இந்தப் படைப்பினுள் நான் மறைந்திருக்கவில்லை. எனது வாழ்வில் 1996ல் சம்பவித்த மிக நெருக்கடியான சம்பவம் ஒன்றினை மையமாக வைத்துக் கொண்டே இந்த நாவல் நகருகிறது” என வாக்குமூலம் தருகிறார்.

அதற்கு மேலாக நானும் அந்த நாவலில் பாத்திரமாக வருகிறேன். டொக்டர் ஆனந்தன், ஆனந்தன் வைத்தியசாலை யாவும் நானும் என்னைச் சுற்றியவையுமே.

எனது பருத்தி்த்துறை மருத்துவநிலையம் அன்று

அந்தச் செய்தி எட்டியபோது நானும் எனது நண்பர்களும் பட்ட மனஅவஸ்தை சொல்லி மாளாது. நண்பர் குலசிங்கம் உடனடியாகவே தகவல் தந்தார்.

நேற்றுப் பார்த்த நண்பனை இவ்வளவு விரைவாக இழப்போம் எனக் கனவும் கண்டதில்லை. ஆனால் இழப்பது அன்றைய போர்ச் மூழலில் ஆச்சரியமானதல்ல. இரவு 7 மணிக்கு சந்தித்த நண்பன் நெல்லை.க.பேரனை காலையில் கண்விழ்த்தபோது இழந்ததாகச் செய்தி கேட்ட போது பட்ட துயரத்திற்கு மேலானது தெணியான் பற்றிய செய்தி.

நோயாளிகள் காத்திருந்ததால் என்னால் விட்டகல முடியவில்லை. என்ன நடந்தது என அறிய நண்பர்கள் குலசிங்கமும், ரகுவரனும் தெணியானது வீடு நோக்கி சைக்கிளில் விரைந்தனர். நான் மனப்பதற்றத்துடன் பணியில் ஈடுபட நேர்ந்தது. எதிர்பாராதது! ஆனால் நல்ல செய்தியுடன் திரும்பி வந்தனர்.

“தெணியான் சுகமே உள்ளார். காலமானது வேறொரு ஆசிரியர்.” என்றார்கள். மகிழ்ந்தோம். மற்றொருவர் இறப்பில் நாம் மனமகிழ்ச்சியடைய நேர்ந்தது வாழ்க்கையில் அந்த ஒரே தடவையாகத்தான் இருக்கும். நண்பர் தப்பிவிட்ட நிம்மதியானது வேறு சிலர் துன்பத்தைக் கணக்கெடுக்காது மகிழ வைத்த முரண் அனுபவம் அது.

பன்முக ஆற்றல் கொண்ட தெணியானின் எழுத்தாள முகத்தின் ஒரு பக்கம்தான் நாவல். நாவல் படைப்புத்துறையில் பஞ்சம் மிக்க எமது நாட்டில் நாவல், குறுநாவல் என ஏற்கவே எட்டு நூல்களை தெணியான் எழுதி வெளியிட்டுள்ளார். பல வருடங்களுக்கு முன் வெளியான ‘கழுகுகுள்’ என்ற நாவலும் மருத்துவமனைகளையும், மருத்துவர்களையும் சுற்றிப் படர்ந்திருந்தாலும் ஒன்றுக்கொன்று முடிச்சுப்போட முடியாத மிக வித்தியாசமான படைப்பு ‘தவறிப்போனவன்’ ஆகும்.

அவர் எழுதிய சிறுகதைகளில்; பெரும்பாலானவை நான்கு தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. சிறுகதை, கட்டுரை, கவர்ச்சியான பேச்சாற்றல், ஆசிரியத்துவம் என கைவைத்த ஒவ்வொரு துறையிலும் தன் ஆளுமையைப் பதித்துள்ளார்.

சுமார் 5 தசாப்தங்களாகப் படைப்புலகில் இருந்தாலும் அவரது படைப்பாற்றல் இன்னும் வற்றாத சுனையாகப் பிரகாவித்து, வித்தியாசமான புனைவுகளுடன் மெருகேறிக் கொண்டேயிருக்கிறது. இன்னும் பல பொக்கிஸங்கள் அவரது பேனாவிலிருந்து சுரந்து கொண்டே இருக்கும் என நம்பலாம்.

எம்கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0.0

Read Full Post »

>அகதிகள் பிரச்சனை இப்பொழுது இலங்கையில் மிகத் தீவிரமடைந்துள்ளது. அதன் தாக்கம் உலகளாவிய ரீதியில் உணரப்படுகிறுது. அது பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன. ஆனால் இக்கட்டுரை 2005ம் ஆண்டளவில் வெளியிடப்பட்ட தெணியானின் குறுநாவல் தொகுப்பு பற்றிய கட்டுரையாகும். அது பேசுவதும் அகதிகள் பற்றியே. 2005ல் வெளியான இக்கட்டுரையை இப்பொழுது எனது வலைத்தளத்தில் பதிவிடுகிறேன்.

அகதிகள், இடம் பெயர்தல் போன்ற சொற்களின் அர்த்தத்தைத் தெரியாத ஈழத்துத் தமிழர்கள் எவருமே இருக்க முடியாது. அரசியல், மதம், மொழி போன்ற காரணங்களால் தமது சொந்த நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்தவர்களையே அகதிகள் என்று அகராதிகள் பொருள் கூறும்.

அகராதிகள் அவ்வாறு கூறியபோதும் எமது நிதர்சன வாழ்வில் அது உணர்த்தும் பொருள் பரந்தது. உணர்வு பூர்வமானது. ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட அனுபவங்களுக்கு ஏற்ப பல்வேறு அர்த்தங்களைக் கொடுக்கக் கூடியது.

உயிரைக் காக்க, உடுத்த உடுப்போடு வீட்டைவிட்டு ஓடிச் சென்று மரநிழல்களிலும், கோயில், பாடசாலை அல்லது அறிந்தவர் வீடுகளிலும் தலை சாய்க்க இடந் தேடி அலைந்த துயரத்தை தமது வாழ்வில் குறைந்தது ஒருமுறையாவது அனுபவிக்காத வட கிழக்கு வாழ் மக்கள் இருக்க முடியாது.

அகதிகள் என்ற சொல் அவர்களுக்கு கொடுக்கும் அர்த்தம் துன்ப துயரத்தில் தோய்ந்தது. புதிய புதிய அர்த்தங்களுக்கான சாத்தியப்பாடுகளைத் திறந்து விடுவது. அது மாத்திரமின்றி அவர்களது இருப்பையும் தன்மானத்தையும் கேள்விக் குறியாக்குவது. வார்த்தைகளில் புரியவைத்துவிட முடியாத அதன் கனத்த, பரந்த பரிமாணத்தை ஒவ்வொருவரும் தாம் வாழ்வில் பெற்ற அனுபவங்களின் பின்னணியில்தான் காண முடியும். உணர்வுகளின் கூட்டுறவில்தான் புரிய முடியும்.

ஆனால் இவை எல்லாவற்றுக்கும் அப்பாலான, முற்றிலும் வேறுபட்ட இன்னுமொரு பரிமாணம் அகதிகள் என்ற சொல்லுக்கு இருக்கலாம் என்பதை தெணியானின் ‘பரம்பரை அகதிகள்’ என்ற குறுநாவல் எமக்கு உணர்த்துகிறது. அகதி வாழ்வின் அவலத்தை நிதர்சனமாக அனுபவித்த எம் போன்றவர்களுக்குக் கூட அந்த அர்த்தம் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

காலங்காலமாக ஒரு குறிப்பிட்ட நிலத்தில் வாழ்ந்தாலும் “குடியிருப்பதற்கு ஒரு குளி நிலந்தானும் சொந்தமாக இல்லாத’ தாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவித்த பரிதாபமான வாழ்வு இக் குறுநாவலில் சொல்லப்படுகிறது. கந்தசாமியும் அவனைச் சார்ந்தவர்களும் தங்கள் குடியிருப்பு நிலம் தமக்குச் சொந்தமாக இல்லாததால் உயர்சாதி நில உடைமையாளர்களால் பல முறை குடியெழுப்பப்பட்டு, இடம்பெயரச் செய்து, அகதிகளாக அலைக்கழிக்கபட்ட கண்ணீர்க் கதைதான் பரம்பரை அகதிகள்.

அவர்கள் அந்நிய இராணுவத்தால் விரட்டியடிக்கப்படவில்லை, வேற்று மொழி பேசும் சொந்த தேசத்து இராணுவத்தால் துரத்தியடிக்கப்படவில்லை. தமது சொந்தச் சகோதரர்களால் அகதியாக்கப்படுகிறார்கள். ஒரே மொழியான தமிழ் மொழி பேசுபவர்களால், ஒரே பிரதேசமான வடமராட்சியைத் சார்ந்தவர்களால், ஒரே மதத்தை கடைப்பிடிப்பவர்களால் இந்தக் கொடூரம் இழைக்கப்படுகிறது. அவர்கள் சாதியின் பெயரால் ஒடுக்கப்படுகிறார்கள். அடக்கப்படுகிறார்கள். அடிமைகள் போல் நடாத்தப்படுகிறார்கள், அகதிகளாக விரட்டியடிக்கப்படுகிறார்கள். இது எமது சமூகத்தின் சாபக்கேடு.

வடமராட்சியின் புலோலி பகுதியைச் சார்ந்த அவன், தான் குடியிருந்த ஒவ்வொரு நிலத்திலிருந்தும் விரட்டியடிக்கப்பட்டு தும்பளை, கரணவாய், கெருடாவில் என குடியிருக்க நிலம் தேடி அலைகிறான். உடலுரமும் முரட்டுத்தனமும் கொண்ட அவன் நாலெழுத்துப் படித்தவன் கூட. தனது சமூகத்திற்கு எதிரான உயர்சாதிமான்களின் கொடுமைகளால் குமுறி வெடித்து வேசம் கொள்பவன். ஆனால் தனி ஒருவனான அவனால் என்ன செய்ய முடியும்? கொடுரம் நிறைந்த, ஆள் அணி கொண்ட சாதி வெறியர்களை எதிர்த்துப் போராட முடியவில்லை. பணியவும் முடியவில்லை. இருக்க இடம் தேடி அலையத்தான் முடிந்தது.

இக் கதையில் சொல்லப்படுவது ஏதோ ஒரு உதிரிச் சம்பவம் அல்ல. காலங்காலமாக எமது யாழ் மண்ணில் கட்டவிழ்த்து விடப்படுகிற சாதீய ஒடுக்குமுறையின் கொடூர முகம். அதிலும் அதன் ஒரு சிறு அத்தியாயம் தான் இது. ஆனால் இன்றுதான் பதிவாகிறது.

தனது முந்தைய நாவலான ‘கானலில் மான்’ க்கு இவ்வருடத்தைய சாகித்திய பரிசைத் தட்டிக் கொண்ட தெணியானின் புதிய நு¡ல் “சிதைவுகள்’. இந் நு¡லில் இரு குறுநாவல்கள் அடங்குகின்றன. முதல் குறுநாவல் நாம் ஏற்கனவே பேசிய பரம்பரை அகதிகள். இந் நு¡லில் அடங்கும் அடுத்த குறுநாவல் சிதைவுகள். “பரம்பரை அகதிகள்’ ஈழநாடு ஞ்¡யிறு மலரில் 1985 ல் தொடராக வெளிவந்து வாசகர்களின் பாராட்டைப் பெற்றது. இரண்டாவது குறுநாவலான “சிதைவுகள்’ தேசிய கலை இலக்கியப் பேரவையும் சுபமங்களாவும் இணைந்து நடாத்திய ஈழத்துக் குறுநாவல் போட்டியில் பரிசு பெற்றது. பு¢ன் 1998ல் தினகரன் வாரமஞ்சரியில் வெளிவந்து வாசகர்களின் அமோக தரவைப் பெற்றது.

இந்த இரண்டு குறுநாவல்களையும் இணைத்து மீரா பதிப்பகத்தினர் ஒரு நு¡லாக வெளியிட்டுள்ளனர். இரண்டாவது குறுநாவலான சிதைவுகள் போர்க் காலமான 1991ல் களம் கொள்கிறது. அரசின் திடீர் அறிவித்தல் காரணமாக இரவோடு இரவாக தமது சொந்த மண்ணை விட்டு வடமராட்சி மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்து தென்மராட்சி, வலிகாமம் நோக்கிச் சென்று பட்ட துன்பங்கள் துயரங்களைச் சொல்கிறது. அகதியாகும் பிரச்சனை பற்றி மட்டுமின்றி போர்ச் சூழலின் அவலங்களையும் அதனால் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பம் யாழ், கொழும்பு, வெளிநாடு எனப் பிரிந்து சிதைவதையும், அக் குடும்பம் எதிர் கொள்ளும் அகால மரணங்களையும் மிக அற்புதமாகச் சித்தரிக்கிறது.

இக் கதை அற்புதமாக அமைந்ததற்குக் காரணம் என்ன? இது தெணியானின் அடி மனத்திலிருந்து பீறிடும் சத்தியமான பதிவாக இருப்பதுதான். தானும் தன் உறவினரும் சுற்றத்தாரும் நண்பர்களும் நேரிடையாக அனுபவித்த நிஐமான துன்பங்களின் மறுவார்ப்பு இது. மிகவும் உணர்வு பூர்வமாகச் சொல்கிறார். அவர் சொல்வது வாசகர்களான ஒவ்வொரு தமிழனதும் சொந்த அனுபவமாக இருக்கிறது. எங்கள் அனுபவம் அவரது அனுபவத்துடன் கலவியுறும்போது அற்புதமான உணர்வலைகளை எம்மில் கிளர வைக்கிறது.

இதில் வரும் பாத்திரங்கள் யார்? அப்பா, அம்மா, மூத்தவன், மூத்தவள் நடுவிலான், சின்னவள் இப்படித்தான். எல்லாமே பெயரற்ற பாத்திரங்கள். இவர்கள் யாவரும் எவரோ அல்லர். எம்மவர்கள், எமது குடும்பத்தினர் என்ற உணர்வே ஏற்படுகிறது. இதனால் இது எமது கதை போல உணர்கிறோம். இதனால் நாவலோடு உணர்வு பூர்வமாக ஒன்றிவிட முடிகிறது. பாத்திரங்களுக்கு பெயர் கொடுக்காத உத்தியைப் பயன் படுத்திய தெணியான் வெற்றி பெறுகிறார்.

இன்று முதுமை பற்றி அதிகம் பேசப்படுகிறது. அரசுகள் அக்கறை எடுக்கின்றன. மருத்துவத்தில் Geriatrics ஒரு அலகாக முக்கியத்துவம் பெறுகிறது. தெணியானும் தனது பங்காக இந்நாவலில் முதுமைக்கு இலக்கிய அந்தஸ்து கொடுக்கிறார். இந்த நாவலின் பிரதான பாத்திரம். அப்பா. இளைப்பாறிய அதிபர். முதியவர். அப் பாத்திரம் ஊடாக முதியவர்களின் எண்ணங்கள், உணர்வுகள், செயற்பாடுகள் யாவற்றையும் நுணுக்கமாக அவதானித்து பதிவு செய்துள்ளமை மருத்துவனான எனக்கு ஆச்சரியத்தை ஊட்டியது.

உறவுகளின் நெருக்கமும், நேர அவகாசம் நிறைந்ததுமான கிராமச் சமுதாயத்தில் கூட வெளிவிறாந்தையில் இரு கதிரைகள் போட்டமர்ந்து பேசுவதற்கு யாராவது வருவார்களா காத்திருக்கிறார் அப்பா. அவரூடாக முதுமையின் தனிமையுணவு நாடு, பிரதேசம் மற்றும் கலாசார எல்லைகளைத் தாண்டியது என்பதை உணர்கிறோம். மிக அற்புதமாக சித்தரித்துள்ளார்.

ஈழத் தமிழ்ச் சமுதாயத்தின் மிகத் துன்பமான, இருள் சூழ்ந்த ஒரு காலகட்டத்தின் அற்புதமான பதிவாக சிதைவுகள் குறுநாவல் அமைகிறது.. செய்தித் தணிக்கைகளாலும், இனவாத ஊடகங்களினாலும் வெளி உலகுக்கு மறைக்கப்பட்டு, இன்று சமாதானக் கேளிக்கையால் மறக்கப்படும் ஒரு சமூகத்தின் இருண்ட சோகமான காலகட்டம் தெணியானின் எழுத்தில் காவியமாக உயர்ந்து எழுகிறது.

ஆனால் கடைசி இரு அத்தியாயங்களும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஓடி கதையை நிறைவு செய்ய முனைகின்றனவே அன்றி அனுபவப் பகிர்வாக அமையவில்லை என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

இந்த இரண்டு குறுநாவல்களும் சிறப்பாக இருந்தபோதும் வெவ்வெறு விதத்தில் தனிச் சிறப்புப் பெறுகின்றன. யாராலும் பேசப்படாத ஒரு விடயத்தைப் பேசி, அகதி என்ற சொல்லுக்கே புது அர்த்தம் தேடும் ‘பரம்பரை அகதிகள்’ தனது கதையின் கருவால் உயர்ந்து நிற்கிறது. மறுபுறம் சிதைவுகளானது தமிழ் மக்களது இன்றைய எரியும் பிரச்சனையைப் பேசினாலும் தெணியானின் சித்தரிப்பு நேர்த்தியால் தரமுயர்ந்த இலக்கிய அந்தஸ்தைப் பெறுகிறது.

தெணியான் தனது அறுபது வயதிலும் வளர்ந்து வருகிறார். பல மூத்த எழுத்தாளர்கள் எழுதுவதையே கைவிட்டு ஓய்ந்த நிலையிலும், இன்னும் சிலர் தொடர்ந்து எழுதினாலும் அவர்களது எழுத்தாற்றல் நீர்த்துப் போய் சுவை கெட்டுப் புளித்துப்போன நிலையிலும் இவரோ தனது கலாரீதியான தேடலை விரிவாக்குகிறார். தனது கற்பனைத் திறனை சமூகம் சார்ந்த வெளியில் பறக்கவிடுகிறார். தனது சொல்லும் திறனை தினம் தினம் புதுப்பித்து மெருகேற்றி வருகிறார்.

இந்த இரு குறுநாவல்களையும் ஒன்று சேர்த்துப் படிக்கும்போது இது தெளிவாகத் தெரிகிறது. ஒரு பதினைந்து கால வித்தியாசத்தில் தெணியான் தனது படைப்பாற்றலை உன்னதங்களை நோக்கி எப்படி வளர்த்து வந்துள்ளார் என்பது ஆச்சரியமூட்டுகிறது. அவதானிப்பின் கூர்மை, சித்தரிப்பின் செழுமை, மொழியாற்றல் யாவும் கைகோர்த்து வர இந்நாவலை அற்புதமாகச் செதுக்கியுள்ளார்.

ஒரு எழுத்தாளனின் சிறப்பு என்பது, தான் பெற்ற அனுபவங்களையும், தான் அவதானித்ததும் கேட்டறிந்ததுமான மற்றவர்களது அனுபவங்களையும் எழுத்து வழியாக வாசகர்களுக்கு கைமாற்றுச் செய்யும் ஆற்றலில்தான் தங்கியிருக்கிறது. மொழி வழியாக தனது அனுபங்களை எளிதாக வாசகனுக்குக் கைமாற்றுச் செய்யக் கூடிய எழுத்தாளனே உச்ச நிலை எழுத்தாளனாகப் பரிணமிக்க முடியும். தெணியானும் இதையே எட்ட முயல்கிறார். பல இடங்களில் அவரது வார்த்தைகள் கருத்து ஊடாடலுக்கான வெற்று வார்த்தைகளாக அல்லாது கவிதைகளாக உள்ளத்தோடு பேசுகின்றன. நுண்ணுணர்வைப் பகிர்ந்து கொள்கின்றன. சித்திரங்களாக எமது எண்ணங்களைத் தோகை விரித்து ஆடச் செய்கின்றன. சில உதாரணங்களாக இவற்றைச் சொல்லலாம்.

‘மரமும் கொடுகும் மார்கழி மாதத்துக் கடும் குளிர்-‘

‘அடிப்பதற்கு கை நீட்ட வேண்டுமா? ஓவ்வொரு அசைவிலும் இன்னொருவர் இதயத்தில் ஓங்கி அடிக்கலாம்.’

‘திசைகள் எங்கும் மரணம் சூழ்ந்து நிற்கிறது. மரணத்தை மறித்துத் தப்பி ஓடுவது…’.
இவைபோல் இன்னும் எவ்வளவோ!

இதே போல வடமராட்சி மண்ணின் வாசனையை ‘உணவை ஒறுத்து நடப்பது’, ‘பத்தாள்மைக்காரர்’ போன்ற பல பாரம்பரியச் சொற்களை பொருத்தமறிந்து கையாள்வதன் மூலம் செய்நேர்த்தியுடன் பதிவு செய்கிறார்.

தெணியான் ஒரு நல்ல சிறுகதையாசிரியர். அதே நேரம் இலங்கையின் முக்கிய நாவலாசிரியர்களில் ஒருவரும் கூட. நாவல் என்பது சிறுகதையுடைய நீட்சியாகவோ, நீண்ட கதையாகவோ இருக்கக் கூடாது என்பதை நன்கு புரிந்து கொண்டவர். இதனால்தான் அந்த இரு துறைகளிலும் அவரால் வெற்றி பெற முடிந்தது. இருந்தபோதும் ‘தெணியான் பிரதானமாக ஒரு நாவலாசிரியரே’ என பேராசிரியர் சிவத்தம்பி ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார். அதுவும் இன்னொரு வகையில் உண்மைதான். ஏனெனில் அவர் தனது படைப்புகளை நாவல் என்ற பிரமாண்ட வடிவத்தின் விஸ்வரூப தரிசனத்தை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறார். பிரமாண்டம் என்பதை படைப்பின் கன அளவைக் கொண்டோ, பக்கங்களின் நீட்சியைக் கொண்டோ, பாத்திரங்களின் எண்ணிக்கையை வைத்தோ மதிப்பிடவில்லை. மாறாக அதன் உள்ளடக்கத்தையும் கலைப் பெறுமானத்தையும் வைத்துச் சொல்கிறேன்.

தெணியானின் “சிதைவுகள்’ 60 பக்கங்களைக் கூடத் தாண்டாத சிறிய படைப்பு. ஆனால் இந்தக் குறுகிய பக்க அளவுக்குள் வாழ்வின் விசாலத்தையும், அதன் பல்வேறு பரிமாணங்களையும் உள்ளடக்க முனைகிறார். முக்கிய பாத்திரங்கள் மாத்திரமின்றி பக்கத்து வீட்டுக் கடைக்காரத் தம்பி, அம்மாவை ஆஸ்பத்திரிக்கு ஏற்றிச் செல்ல உதவிய வண்டில்காரன், தானும் இடம் பெயர்ந்திருந்த போதும் ஆபத்துக்கு உதவிய வைத்தியர் போன்ற உதிரிப் பாத்திரங்களும் கூட உயிர்த் துடிப்போடு படைக்கப் பட்டிருந்தனர். இதனால் வெறும் கதை சொல்வது என்ற வழமையான பரிமாணத்தைக் கடந்து ஒரு சமூகத்தின் சிதைவை ஆழமாகவும், அகலமாகவும், இந்நாவலில் தா¢சிக்க முடிகிறது.

“நாவல் என்பது வளர்ந்து விரிந்து செல்லும் பவ்வேறு கேள்விகளின் பொ¢ய வடிவம் அல்லது artistic discussion of values(or) philosophic version of life. வரலாற்றையோ நுண்ணுணர்வுகளையோ கணக்கில் எடுக்காமல் வெறும் வாழ்க்கையை சொல்வது நாவலாகி விடுவதில்லை. ….. நாவலென்பது இன்னமும் விரிந்து விரிந்து ஒட்டுமொத்த வாழ்க்கையையே தன்னுள் அடக்கிவிடும் துடிப்போடு பொங்கி வரக்கூடியது.’ என ஜெயமோகன் அண்மையில் ஒரு நேர்காணலில் கூறியதை இவ்விடத்தில் ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். இன்று இலங்கையில் இத்தகைய ஒரு நாவலைப் படைக்கக் கூடிய ஆற்றல் உள்ள ஓரு சிலரில் தெணியான் முக்கியமானவர் என எண்ணத் தோன்றுகிறது.

அட்டைப் படம் ரமணி. ஒரு மனித உருவம் கூட இல்லாது. ஒரு சமூகத்தின் சிதைவையும், அகதியாகும் அவலத்தையும் அற்புதமாகப் படைத்துள்ளார். வழமையான ரமணியின் அட்டைப்படம் அல்ல. மிகவும் வித்தியாசமானது. எமது கற்பனைத் தேரை பாய்ந்தோட விட்டு, புதிய புதிய பரிமாணங்களைக் கிளறியெடுத்து ரசிக்கக் கூடியது. அவர் தேர்ந்தெடுத்திருக்கும் இருள் சேர்ந்த வர்ணச் சேர்க்கையால் அகதி வாழ்வின் சோகம் எமது மனத்தை அப்பிக் கொள்கிறது.

இந்த இரு குறுநாவல்களையும் தேர்ந்தெடுத்து நு¡லாக்கிய மீரா பதிப்பகத்தின் இரத்தினவேலோன் பாராட்டுக்குரியவர். இது அவர்களது 38வது வெளியீடு. திறனாய்வு, சிறுகதை, திரைப்படச் சுவடி, திரைப்படக் கலை, நலவியல், மனோவியல், அழகியல், நாட்டார் இலக்கியம், விஞ்ஞானம், தலவரலாறு, குழந்தைப் பாடல்கள் என பல்துறை நு¡ல்களை வெளியிட்டு, தணியாத தாகத்துடன் ஈழத்துப் பதிப்பகத்துறையில் புதிய எல்லைகளை எட்ட முயலும் அவர்களது முதல் நாவல் இதுதான். இருள் சூழ்ந்த ஈழத்து வெளியீட்டுத் துறையில் நம்பிக்கையூட்டும் பதிப்பகம். ஆதரவளிப்பது எம் கடமை.

நூலாசிரியர்:-
தெணியான் (கந்தையா நடேசன்),
கலையருவி, கரணவாய் வடக்கு,
வல்வெட்டித்துறை.

வெளியீடு:-
ஆ.இரத்தினவேலோன்,
வெளியீடு: இரத்தினவேலோன், மீரா பதிப்பகம்,
291/6-5/3A,Edward Avenue Colombo 05.
Telephone 94 11 2582539

இலங்கை விலை:-
ரூபா 250/=

கட்டுரையாளர்:-
எம்.கே.முருகானந்தன்.
kathirmuruga@gmail.com

Read Full Post »