Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘தைத் திருநாள் வாழ்த்து’ Category

>’நாளைக்குப் பொங்கல்
யாழ்ப்பாணத்தில் என்றால்
புக்கை சமைப்போம்’
போன வரியம்
சொன்னஅந்த மூதாட்டி
“இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்”
எஸ்எம்எஸ் அனுப்பியிருந்தாள்
இன்று காலை
அங்கிருந்து.

காலம்தான்
எவ்வாறு மாறிவிட்டது
எங்கெல்லாம் ஓடிவிட்டது
ஒருவருட இடைவெளியில்
யாரெல்லாம்
எங்கெங்கோ.

“என்ரை மண்ணை
என்ரை வீட்டை
எனது சீவிய காலத்தில்
காணக் கிடைக்குமோ”
என்று ஏங்கிய பலர்
இன்று தங்கள் வீட்டில்
மகிழ்ந்திருக்க,

வீடிருந்தபோதும்
வீட்டில் குடியிருக்க ஆளில்லாது
குடும்பமாய்
மறைந்தும் மடிந்தும் போனவர்
இன்னும் ஏராளம்.

“யாழ்ப்பாணத்தில் நல்ல மழை
வயல் எல்லாம் நல்லா விளைச்சிருக்கு
மரக்கறிகள் நல்ல மலிவு
சாமான்கள் எல்லாம்
கொழும்பு விலையை விடக்
குறைஞ்ச விலையிலை
தாராளமாகக் கிடைக்கிது”
என்பர் பலபேர்.

“எல்லாம் இருந்தென்ன
வாங்குவதற்கு
காசு இங்கே கொட்டியா கிடக்கு.
வெளிநாட்டுக் காசு
கிடைக்காத எங்கள் பாடு
என்றைக்கும்
போராட்டம்தான்.”

கூலிவேலை செய்பவர்களும்
கடைகளில் பணி புரிபவர்களும்
சின்னஞ்சிறு தொழில்
முயற்சிகளில்
இருப்பவர்களும்
எழுப்பும் குரல்கள்
யாருக்கும் கேட்பதில்லை.

“மீன் நல்லாப் பிடிபடுகுது
விலையும் மலிவு
தெற்குக்கு தினமும்
லொறி லொறியா ஏற்றி
அனுப்புகிறோம்”
பவுண் சங்கில் பளபளக்க
வாயெல்லாம் பல்லாக
மொழிகிறார் சம்மட்டியார்.

“மீன் நல்லாப் பிடிபட்டாலும்
கூலியை உயர்த்தியா
தருகிறார்கள்.
சொந்தமாய் போட்
வாங்க வழியுமில்லை.
வாயும் வயிற்றுக்குமான
எங்கள் போராட்டத்திற்கு
என்றாவது விடிவு கிடைக்குமா”
மீன்பிடித் தொழிலாளியின்
ஏக்கம்
கடலலையோடு
கரைந்து மறைகிறது.

நாம் மகிழ்ந்து
மற்றவர்களும்
மகிழ்திருக்கும் காலம்
தானே கனிவதில்லை.

எல்லோர்க்கும்
எல்லாமும்
எப்போதும்
கிடைக்கின்ற
காலம் கனியட்டும்.

அதற்காக
பதிவிடுவோம்.
குரல் எழுப்புவோம்.
ஓயாது உழைப்போம்.
கிட்டும் வரை போராடுவோம்.

தைத்திருநாளின்
பொங்கலும் அன்றைக்குத்தான்
இனிக்கும்.
எங்களுக்கும் எல்லோருக்கும்.

எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>இன்று ஒரு அம்மா
சோர்ந்த கண்கள்
வாடிய வதனம்
ஆண்டுகள் 75 யை
அநாசியமாகக் கடந்துவிட்டாள்.

‘சளி இருமல்
அம்மாவைத் தொல்லைப்படுத்துகிறது’
மகளின் அக்கறை.
‘யாழ்ப்பாணத்திலை
எனக்கு இருமலே வாறதில்லை’
அம்மாவின் ஏக்கக் குரல்
இடைமறித்தது.

மற்றொருவருக்கு
Fan காற்று ஒத்து வருகுதில்லை.
மருந்தடித்த
பப்பாளிப்பழமும்
ஐஸ் மீனும்
புரொயிலர் சிக்கனும்
சம்பா அரிசிச் சோறும்
தின்று
வயிறு மந்தமானவர்
இன்னும் பலபேர்.

கிடுகு வேலி
பரந்த முற்றத்தில் உதிர்ந்த இலைகள்
வேப்பமரத்தின் சுகமான காற்று
பனை ஓலையின் சரசரப்பு
நொங்குக்குத் தாவும்
அணில் பிள்ளைகள்
இனிப் பார்க்கக் கிடைக்குமா
ஏங்கும் நெஞ்சம்!

வாடையின் கூதலும்
புழதி கிழப்பும்
சோளகத்தின் வீச்சும்
வீட்டுக் கிணற்று நீரின்
சுவையும் இழந்தனர் இவர்கள்.
மனநோயில் எத்தனைபேர்!
மனமே இல்லாதொழிந்தவர்
இன்னும் எத்தனை பேர்?

‘ஏன் இங்கே இருக்கறீர்கள்?
ஏ 9 பாதை திறந்து விட்டதே.
உங்கள் வீட்டிற்குப் போங்கள்’
எக்காளக் குரல்
அறைந்தொலிக்கிறது.

அந்நியப் படை
சமாதான ஒப்பந்தம்.
பேச்சு வார்ததை.
புனர் வாழ்வு
இப்பொழுது விடுவிப்பு
எத்தனை எத்தனை பசப்பு வார்த்தைகள்.
கேட்டு அனுபவித்து
அலுக்காதவர் இலர்.

சுந்தரத் துவீதத்திற்கு
சுதந்திரம் அலை வீசியபோது
செந்தமிழர் தொகை
35 இலட்சமாம்.
அறுபது வருடங்கள் ஓடிய
பின்னும்
இன்றும் அதே 35 இலட்சமாம்.

புணர மறந்தனரா
புணர்ந்தும் மலடானாரா
மண்ணுக்கு உரமானாரா
புறுமுதுகிட்டு ஓடினரா
மண்மிசை வீழ்ந்தாரா?

கனத்த சப்பாத்துக்களில்
மிதியுண்ட வேதனையின்
முனக்கதில் அனுங்கும் மண்.

கண்டங்கள் ஐந்திலும்
அந்நிய தேசமெங்கும்
ஓலிக்கிறது
செந்தமிழ் ஓசை
தாய் மண்ணில் மட்டும்
அந்நிய ஓசை

பிறந்த மண்ணின் ஏக்கம்
அந்த மூதாட்டிக்கு மட்டும்தானா?

‘நாளைக்குப் பொங்கல்
யாழ்ப்பாணத்தில் என்றால்
புக்கை சமைப்போம்’
என்றாள் அந்த முதாட்டி
கோலமடித்த முற்றத்தில்
கல்லடுப்பில்
பொங்கல் பானை.
ஏக்கத்தில் என்னையும்
முழ்கடித்தவாறே.

…. அழகு சந்தோஸ் ….

Read Full Post »