நன்னாரி- Indian Sarsaparilla(Hemidesmus indicus)- iramusu in Sinhala
இன்று தேநீர் வெறும் தேநீர் ஆகவா கிடைக்கிறது.
இங்கு பலருக்கு தேநீர் என்றால் பால் ரீ என்றுதான் அர்த்தம்.
பால் ரீயில் பாலின் சுவைதான் இருக்கும். தேயிலையின் சுவை அடங்கிவிடும்.
பிளேன் ரீ மீது எனக்கு தனிப் பிரியம். அதன் சுவையே அலாதியானது. ஒவ்வொரு பிரதேச தேயிலைக்கும் பிரத்யேக சுவை உண்டு.
மறைந்த எழுத்தாளர் புலோலியூர் சதாசிவம் பண்டாரவளை யில் வேலை பார்த்தவர். அங்கிருந்து அவர் கொண்டு வந்து தரும் தேயிலை யின் சுவையை என்றும் மறக்க முடியாது.
இன்று தேயிலைக்கு வெவ்வேறு சுவை ஊட்டுகிறார்கள். பல்வேறு flavors சில் வாங்க முடியும்.
முன்பு எனது மனைவி ஏலம், கராம்பு, கறுவா, தேசிப் பழம் என சுவை ஊட்டி தரும் பிளேன் ரீகளின் சுவையை மறக்க முடியாது.
ஆனால் நான் சிறுவனாக இருந்த காலத்தில் இத்தகைய ரீக்கள் கிடைப்பதில்லை.
நன்னாரி தேநீர் தயாரிப்பார்கள்.
படத்தில் உள்ளது தான் நன்னாரி செடி. இன்றும் எனது வீட்டில் இருக்கிறது. ஆனால் நன்னாரி தேநீர் தயாரிக்கத் தான் நேரமில்லை.
நன்னாரி சர்பத் தும் பேர் போனதுதான்.
நன்னாரி பற்றி தமிழ் விக்கிபீடியா சொல்வது கீழே
“ நன்னாரி அல்லது கிருஸ்ணவல்லி அல்லது நறு நெட்டி (Hemidesmus indicus ஆங்கிலத்தில் பொதுப்பெயர்:Indian Sarsaparilla) என்பது தென்னாசியாவில் வளரும் நிலைத்திணை (தாவரம்) படரும் ஒரு கொடி இனம் ஆகும். இதன் கெட்டியான வேர் மணம் மிக்கது. இக் கொடியின் இலைகள் மாற்றிலை அமைப்பு கொண்டது. இலைகள் நீண்டு கண் அல்லது மீன் வடிவில் இருக்கும். இக்கொடியின் தண்டு மெல்லியதாகவும், குறுக்குவெட்டு வட்டமாகவும் இருக்கும். இக்கொடியின் பூக்கள் வெளிப்புறம் பசுமையாகவும், உள்புறம் கத்தரிப்பூ நிறத்திலும்(செம்மை கலந்த ஊதா நிறம்) இருக்கும். இச்செடி ஒரு மருத்துவ மூலிகையாகும்.
நன்னாரியின் சாறில் இருந்து ஒருவகையான பருகும் நீருணவு செய்வர். நன்னாரி சர்பத் என்று கூறப்படும். நன்னாரி சாறு இந்திய மருத்துவத்திலும் பயன்படுகின்றது. ஆயுர்வேத மருத்துவ முறையில் இதன் பெயர்அனாதமூலா (Anantmula.). நன்னாரி குடிப்பதற்கு இதமாகவும், உடல் வியர்வையைக் கூட்டுவதற்கும், சிறுநீர் போக்கை கூட்டுவதற்கும் குருதியை தூய்மைப்படுத்துவதற்கும் பயன்படும் ஒரு பொருளாக கருதப்படுகின்றது. இது சிபிலிஸ் (syphilis), மூட்டுவலி, உடல் சூடு, மேல் பூச்சான தோல் நோய்களுக்கும் தீர்வாக பயன்படும் என்று கருதப்படுகின்றது.”
இருந்தபோதும் இந்த மருத்துவ குணங்கள் இருப்பதை விஞ்ஞான ரீதியாக நிரூபித்து இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எனவே நான் அவற்றை சிபார்சு செய்ய முடியாது. தகவலுக்காகச் சொன்னேன்.
0.00.0