Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘நாவல்’ Category

பஞ்சம் பிழைக்க வந்த சீமை

மு.சிவலிஙகம் எழுதிய மலையக மக்களின் வரவாற்று நாவல்.

அண்மையில் வந்த மிக முக்கியமான ஒரு நூல் என நம்புகிறேன்.

ஏனெனில் அந்த மக்கள் இங்கு ஆரம்பத்தில் வந்த வரலாற்றையும் இங்கு அந்நேரத்தில் மலைகளை சுத்தம் செய்து ஆரம்பத்தில் கோப்பி தோட்டங்கள் அமைத்தது பற்றியும், பின்னர் தேயிலை தோட்டங்கள் ஆரம்பித்த போது அவற்றில் வேலை செய்தது பற்றியும் மிக விரிவாகப் பேசுகின்றது.

ஆனால் அவர்கள் பட்ட துன்பங்கள் சொல்ல முடியாதவை.

1820-30 காலப்பகுதியில் தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாக அவர்கள் எங்காவது போய் உழைத்து உயிரைக் காக்க முயல்கிறார்கள்.

திருச்சியிலிருந்து பாம்பனுக்கு காடுகள் வழியே நடையாகவே வருகிறார்.

வழியில் பசியாலும். களையாலும் இறந்து மடிகிறார்கள். பாம்பன் தலைமன்னார் கப்பல் பயணத்தில் கப்பலே தாண்டு மடிகிறார்கள். மன்னாரிலிருந்து மதவாச்சி வரை பாதை காட்டுப்பாதை. அங்கும் பசி பட்டினியாலும் சிநுத்தை போன்ற காட்டு மிருகங்களால் பலர் மடிகிறார்கள். நோய்வாய்ப்பட்டும் மடிகிறார்கள்

இங்கு வந்து அவர்கள் கங்காணிமார்களாலும் துரைமார்களாலும் அடக்கப்படுவது. அவர்களது உழைப்பு சுரண்டப்படுவது. பெண்கள பலாத்காரம் செய்யப்படுவத என மிகவும் விஸ்தாரமாகவும் மனதைத் தொடும்படி சொல்லியுள்ளார்.

உண்மையில் அவர்கள் இங்கு வந்த வரலாற்றை சொல்லும் முதல் படைப்பு என்று சொல்லலாம். அதனால் மிகவும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய நூலாக இருக்கிறது. இதற்கான பாரிய தேடல் செய்த அவரது உழைப்பு பாரட்டப்பட வேண்டியதாகும்.

துன்பத்தில் உழலும் மலையக தோட்ட தொழிலாளி மக்கள் பற்றி புதுமைப் பித்தன் தனது துன்பக்கேணியில் எழுதியுள்ளார் தூரத்துப் பச்சையையும் வாசித்திருக்கிறோம்.

ஆனால் இது அவற்றையெல்லாம் விட ஒரு பரந்த பார்வையைத் தருகிறது

கிட்டத்தட்ட 400 பக்கங்கள் நீளும் நூல் இது.

பேராசிரியர் செ.யோகராசா மிகவும் காத்திரமான முன்னுரை தந்திருக்கிறார்.

அதே போல பேராசிரியர்.சோ.சந்திரசேகரம் சிறந்த அணிந்துரையையும் தந்துள்ளார்.

இது ஒரு கொடகே வெளியீடு. விலை ருபா 1000/=
661, 665, 675, மருதானை வீதி கொழும்பு 10
Tel:- 011 2685369, 2686925

Read Full Post »

வாழ்வின் நெருக்கடியான ஒரு தருணத்தின் கதை

இமையத்தின் ‘செல்லாத பணம்’

இரண்டு நாட்களாக அழுது தீர்க்க முடியாத துயரில் மூழ்கித் திணறிக் கொண்டிருந்தேன். ரேவதியின் தகப்பன் நடேசன், தாய் அமராவதி, அண்ணன் முருகன், அண்ணி அருள்மொழி இவர்களுடன் ஜிப்மர் மருத்துவமனையின் எரிகாயப் பிரிவின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு வாசலில் பசியையும் தாகத்தையும் மறந்து நின்று, அவர்கள் துயரில் பங்காளியாக இருக்க நேர்ந்தது. அவர்களது கோபமும் ஆற்றாமையும் கூட என்னையும் ஆட்கொண்டிருந்தது. கணவன் ரவியை அவர்களோடு சேர்ந்து அடித்துத் துவைக்க வேண்டும் போலிருந்தது.

220 பக்கங்களைக் கொண்ட இமையத்தின் நாவல் செல்லாத பணம். பணம் வாழ்க்கைக்கு அவசியமாக இருந்த போதும் கூட அது எல்லாத் தருணங்களிலும் நித்திய வாழ்வில் பயன்படுவதில்லை என்பதையே நாவலின் தலைப்பு சுட்டுவதாக இருந்தபோதும் அந்த நாவல் எங்களுக்கு கடத்தும் வாசிப்பு அனுபவம் பரந்தது. உள்ளத்தை ஊடுருவி அதிலும் முக்கியமாக வாழ்வின் துயர் மிகு தருணங்களில் மனிதர்களுக்கு ஏற்படுத்தும் உணர்வுகளையே இலக்கியமாக்கியுள்ளது என்றே சொல்லத் தோன்றுகிறது.

தமிழ் சமூகத்தில் பெண்கள் எவ்வளவு தூரம் அலட்சியப்படுத்தப்பகிறார்கள், குடும்ப வன்முறைக்கு ஆளாகுகிறார்கள். இருந்தபோதும் குடும்ப கௌரவத்தை காப்பாற்றுவதற்காக அவற்றையெல்லாம் மூடி மறைத்து மௌனம் காக்கிறார்கள். மன்னித்து தன்னை அந்நிலைக்கு ஆளாக்கிய குற்றவாளிகளையே காப்பாற்றியும் விடுகிறர்கள் என்பதை நித்தம் காணமுடிகிறது. ஆனால் இந்த நாவலானது அதற்கும் அப்பால், தீக்குளிப்பிற்கு ஆளான ஒரு பெண்ணின் கதை ஊடாக துயரத்தின் ஆழத்தை ஆணி அடித்தாற்போல காட்சிப் படுத்துகிறது.

எஜ்ஜினியரிங் படித்த வசதியான ஹெட்மாஸ்டரின் மகளான அவள் பர்மா பஜாரைச் சார்ந்த ஆட்டோ ஓட்டினரை காதலிப்பதும், பெற்றோர்கள் மறுப்பதும் அவள் தன் முடிவில் இறுக்கமாக நிற்பதும், அதனால் வேறு வழியின்றி அவளை அவனுக்கு கட்டிக் கொடுப்பதுமான கதையின் முன்பகுதி 20 பக்கங்களுக்குள் முடிந்துவிடுகிறது. மிச்சம் முழுவதும் அவள் மருத்துவமனையில் கிடக்கும் போது நடக்கும் கதைதான். அதுவும் பெரும்பாலும் உரையாடல் ஊடாக. அதுவும் உணர்வுகள் கொப்பளிக்கும் உரையாடல்கள்.

கதையில் திடீர் திருப்பங்கள் கிடையாது. ஆச்சரியங்கள் காத்திருக்கவி;ல்லை. ஆனால் ஒரு சிறிய கேள்வி கதை முழுவதும் தொக்கிக் கொண்டே நிற்கிறது. தீக்குளிப்பு தற்செயலாக நடந்ததா அல்லது கணவன் மூட்டிவிட்டானா என்பதே அது. இதற்கு எந்த முடிவையும் சுட்டிக்காட்டாமலே நாவல் முடிவடைகிறது. ஆனாலும் கூட ரேவதியினதும் அவளது குடும்பத்தினரதும் கண்ணீரோடு எங்களை கண்ணீரையும் கலக்க வைப்பது நாவலின் இறுதிவரை தொடர்கிறது. இதுவே அப் படைப்பின் வெற்றி எனலாம்.

மருத்துமனையின் தீக்காயப் பிரிவின் வேறு வேறு பகுதிகள், எத்தனை பேர்ச்சன்ட் தீக்காயப் பாதிப்பு, அதன் பாதகங்கள் எவ்வாறானவை போன்ற விபரங்கள். அவசரசிகிச்சை பிரிவு, அதன் செயற்பாடுகள். மருத்துவர்கள் தாதியரின் பணிகள்;, நோயாளிகளின் உறவுவினர்களடானான அவர்களது அணுகுமுறைகள் என அந்த மருத்துமனையின் இயக்கத்தை முழுமையாக அறிந்து கொள்கிறோம். அங்கு மரணங்கள் மலிந்து கிடக்கின்றன. அடிக்கடி தீக்குளிப்புக்கு ஆளானவர்களை அம்புலனஸ் வண்டிகள் ஏற்றி வருவது போலவே, இறந்த உடல்களை எடுத்துச் செல்ல பிரேத காவு வண்டிகள் வருகின்றன.

கண்ணீரும் கவலையும் ஆழ்ந்தகன்ற சமுத்திரம் போல நீக்கமற நிறைந்திருந்த போதும் கன்ரீனுக்கு சென்று வந்தே உறவினர்கள் தங்கள் உயிரைத் தக்கவைப்பதையும் உணர முடிகிறது.

நோயாளிகளைப் பார்ப்பதற்கு காத்திருக்கும் உறவினர்களின் உரையடல்கள் ஊடாக பலவித தகவல்கள் வருகின்றன. நோயால் துடிக்கும் பாத்திரங்களின் வாயிலாக அன்றி பார்த்திருப்பவர்களின் கூற்றாக உயிரின் வதை சொல்லப்படும்போது நெருப்பில் போட்ட நெய்யாக மனம் உருகிக் கரைகிறது. இமையத்தின் சொல்லாட்சியால் அந்தக் களத்தில் நாமும் ஒரு பாத்திரமாகவே மாறிவிடும் மாயவித்தை அரங்கேறுகிறது.

கணவனான ரவி, ரேவதியின் மச்சினியான அருள்மொழியுடன் பேசும் பகுதி முக்கியமானது. எல்லோராலும் திட்டப்பட்டு கெட்டவன் என ஒதுக்கப்படும் ரவியின் மனதில் என்ன இருந்தது என்பதைக் காட்டும் அருமையான பகுதி. கெட்டவன் எனத் தூற்றபடுபவன் மனதிலும் பல ஆதங்கங்கள் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

இமையத்தின் கதை சொல்லும் ஆற்றல் நாம் அறியதது அல்ல. இருந்தபோதும் அதை இந்த நாவலை மிக அடர்த்தியாக அதே நேரம் உணர்வுகள் தோய்ந்ததாக சொல்லியிருப்பது வியக்க வைக்கிறது. காலப்பாய்ச்சல் ஊடாக ஒரு பெரிய களத்தை அங்கும் இங்கும் நகர்த்தி, உயிர்த்துடிப்புடன் வடித்திருப்பது நயக்க வைக்கிறது.

அண்மையில் பல நாவல்கள் மற்றும் சிறுகதை நூல்களைப் படிக்க முடிந்தது. ஆனால் இதற்கு இணையாக எதையும் சொல்ல முடியவில்லை.

நூல்:- செல்லாத பணம் (நாவல்)

நூலாசிரியர்:- இமையம்

வெளியீடு க்ரியா

CreA, No2,17th East Street, Kamaraj Nagar, Thiruvanmiyur,  Chennai 600 041,

Phone 7299905950

எம்.கே.முருகானந்தன்.

0.00.0

Read Full Post »

இனமுரண்பாட்டு அரசியல் ஆவணங்களை பின்தள்ள வைக்கும் நாவல்

ஞானசேகரனின் ‘எரிமலை’

‘அந்த இளைஞர்களில் ஒருவன் மதிலால் ஏறி உள்ளே குதித்தான். வெளியே நின்ற இளைஞன் தன் தோளின்மேல் சாய்திருந்தவனைத் தூக்கி மதிலின் மேலால் அவன் உள்ளே இறங்குவதற்கு உதவி செய்துவிட்டு தானும் உள்ளே குதித்தான்.

டொக்டர் மகேசன் பதற்றத்துடன் ‘ஆர் நீங்கள் என …’

டொக்டர் மகேசனில் என்னை நான் இனங் இனங்கண்டு நாவலில் மூழ்கிப் போனேன்.

எத்தனை கெடுபிடியான நாட்கள். பதற்றமும் சஞ்சலமும் பயத்துடன் கூடவே ஆட்கொள்ள கையறு நிலையில் இயங்கிய பொழுதுகள். இயக்கங்கள் பல பன்றிபோல குட்டிபோட்டு தான் தோன்றித்தனமாக நடந்த காலம், துரோகி, காட்டிக்கொடுப்பவன் போன்ற முத்திரைகளுடன் தெருநாய் போல சுடப்பட்ட அப்பாவிகளின் குருதி வீதிகளில் செங்கம்பளம் போர்த்திய காலம். டிரக்குகளில் செல்லும் அரச ராணுவத்தினர் வீதியால் செல்லும் பொதுமக்களை அடித்து குருதி கக்கவைத்த பொழுதுகள். சுற்றிவளைப்புகள் கைதுகள் போன்ற அடாவடித்தனங்கள் மலிந்து கிடந்தன.

வங்கிக் கொள்ளையுடன் தான் கதை ஆரம்பிக்கிறது. எனது மருத்துவமனைக்கு அரை மைல் தூரத்தில் இருந்த புலோலி ப.நோ.கூ.ச வங்கியில் நடந்த கொள்ளை நினைவில் வந்தது. திகில் நிறைந்த பொழுதுகள்.

ஆம். மருத்துவர்கள் அதுவும் தனியார் வைத்தியர்கள் மத்தளம் போல இரு பக்க இடிகளையும் தாங்கிக் கொண்டு பணி செய்ய வேண்டிய ஆபத்தான காலகட்டமாக இருந்தது.

80 களின் நடுப்பகுதியில் யாழ் குடாநாட்டில் நிலவிய பதற்றமான அரசியல், பாதுகாப்புச் சூழலை மையமாக வைத்துப் புனையப்பட்ட நாவல்தான் ஞானசேகரின் எரிமலை. டொக்டர் மகேசன் போராளி ஒருவனின் காயத்திற்கு, இராணுவத்திற்கு தெரியாமல் மறைத்து வைத்து சிகிச்சை அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதும் அது தொடர்பான சம்பவங்களுமே நாவலின் முக்கிய கதைப் பொருளாகும்.

ஆனால் அதற்கு அப்பால் இனப்பிரச்சனையின் அடிமுடி தொடும் விரிந்த நாவல். ‘எரிமலை’ அனல் வீச ஆரம்பித்த வேளை. கதைச் சம்பவங்கள் குடாநாட்டிற்குள் நடப்பவையாயினும் நாடளாவிய அரசியல் பரிமாணம் கொண்ட படைப்பு.

இலக்கிய ஆர்வலர்கள் மட்டுமின்றி, எமது பிரச்சனையில் ஆர்வம் கொண்ட அனைவரும் படிக்க வேண்டிய நூல் என்பதில் ஐயமில்லை.

ஆயினும் இளைய தலைமுறையினர் கட்டாயம் படிக்க வேண்டியது. ஏனெனில் இளைஞர்கள் பலருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணவத்திற்கும் இடையேயான போர் பற்றிய செய்திகளும் அனுபவமும் மட்டுமே உண்டொழிய பிரச்சனையின் ஆணிவேரை கண்டுணரும் வாய்ப்புக் கிட்டியிருக்கவில்லை. இந்த நாவல் அவற்றை வெறும் தகவலாக அன்றி உயிரோட்டமுள்ள பாத்திரங்களாக, நாவலின் பேரங்கமாக, வரலாற்று ஆவணமெனத் தருகிறது. அதே நேரம் விறுவிறுப்பாக நகரவும் செய்கிறது. ஆரவாரமற்ற தெளிவான நடையுடன் சுவையாக வாசிக்கத் தூண்டுகிறது

உண்மையில் அவற்றை வெளிபடுத்தும் வண்ணம் சிருஸ்டிக்கப்பட்ட பல்வேறு பாத்திரங்கள் நாவலாசிரியரின் ஆக்கத் திறனுக்கு சான்றாக அமைகிறது. முக்கியமாக செல்லையா மாஸ்டர், மற்றும் சமூகவியல் பேராசிரியையான திருமதி விமல்சிறி, தொழில் முகாமைத்துவ ஆலோசகர் திரு விமல்சிறி ஆகியேருக்கு இடையேயான உரையாடல் முக்கியமானது. செல்லையா மாஸ்டர் தமிழ் அரசியலில் மிகுந்த ஈடுபாடும், சரித்திர ரீதியான அறிவும், அகிம்சை ரீதியான அணுகுமுறையும் கொண்டவர். தமிழர் விடுதலைக் கூட்டணி அபிமானி. திருமதி விமல்சிறி பேராசிரியர் மட்டுமல்ல. எழுத்தாளரும் கூட.

இந்த உரையாடல்கள் ஊடாக இனப்பிரச்சனையின் சரித்திரம் மட்டும் சொல்லப்படவில்லை. அதுவும் ஒரு பக்க பார்வையாகச் சொல்லப்படவில்லை என்பது நாவலின் பலமாக உள்ளது.. தமிழ் மக்களின் விடுதலை ஆர்வமும் அரசியல் சுதந்திர வேட்கையும் வெளிப்படுத்தப்படும் அதே நேரம் சிங்கள மக்களின் பார்வை எப்படி இருக்கிறது என்பதையும் அறிய முடிகிறது.

48ல் சுதந்திரம் கிடைத்த ஓராண்டுக்குள் கிழக்கு மகாணத்தில் பட்டிப்பளையை கல்லோயா வாக்கி சிங்கள குடியேற்றத்துடன் ஆரம்பித்த தமிழர் மீதான நில ஆக்கிமிப்பு முதல் தனிச்சிங்கள சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் என தொடர்ந்தமை எவ்வாறு தமிழர் மீதான ஒடுக்குமுறையாக விஸ்வருபம் எடுத்தது என்பதை நூலாசிரியர் மாஸ்டர் ஊடாக வரலாற்றுப் பதிவு செய்வது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு புறம், தீவிரவாத சிந்தனைகளை கொண்ட செல்லையா மாஸ்டரின் மகன் ஊடாக விடுதலைப் போராளிகளின் உணர்வுகள் வெளிப்படுத்தப்படுகின்றன.

வெற்றிலை குதப்பிக் கொண்டிருக்கும் ஒரு முதியவள்- கிழவி பாத்திரம்- மனதோடு ஒட்டிக் கொள்கிறாள். இராணுவத்தினரின் அத்துமீறலுக்கு எதிரான அவளது கோபமும், போராளியை மறைப்பதற்கு அவள் காட்டிய சமோசித புத்தியும் மவைக்க வைக்கிறது. அன்றிருந்த சாதாரண மக்களின் மனஉணர்வுகளுக்கு அவளை ஒரு முன்மாதிரியாகவும் சொல்லலாம் போலிருக்கிறது.

யதார்த்தத்தை மீறி உணர்வு பூர்வமாக சிந்திப்பதால் இனமுரண்பாடு விரிவடையுமே அன்றி மக்களுக்கு நன்மை தராது. எனவே கூடிய வகையில் நிதானமாகச் செயற்பட வேண்டும் என்ற நடுநிலைச் சிந்தனை டொக்டர் மகேசன் மற்றும் அவரது மைத்துனரான சந்திரன் ஊடாக வெளிப்படுகிறது.

இன்னொரு விதத்தில் பார்க்கும்போது நாவலின் நாயகனாக சந்திரனை அல்லது டொக்டர் மகேசனையே கொள்ள வேண்டும் என்ற போதும் இனப்பிரச்சனையே நாவலின் பாடுபொருளாக அமைந்துவிடுகிறது.

வாக்கு வேட்டை அரசியல்வாதிகளின் காலத்திற்கு முன்னர் தமிழ் சிங்கள் மக்களிடையே நெருக்கமான உறவு இருந்தது, அந்நிய ஆதிக்கத்திற்கு முற்பட்ட காலத்தில் இனத்துவேசம் இருந்தத்தில்லை. எல்லாளன் துட்டகமுனு போரனது ஆட்சி அதிகாரத்திற்கு ஆனதே ஒழிய இனரீதியானது அல்ல. அதனால்தான் எல்லாளனுக்கு சமாதி அமைத்து மக்களை வணக்கம் செலுத்தச் செய்தான் போன்ற விடயங்களையும் நாவல் உரையாடல் ஊடாக தொட்டுச் செல்கிறது.

தமிழ் சிங்கள் உறவானது திருமண ரீதியாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்ததை பற்றி மிக நுணுக்கமாக நூலாசிரியர் வெளிப்படுத்தியிருந்தார். இரசித்து வாசித்தேன். இலங்கையின் கடைசி மன்னன் விக்ரமராஜசிங்கன் ஒரு தமிழன் என்பது முதல் பல சிங்கள அரசர்களின் பட்டத்து ராணிகளாக தென்னிந்திய தமிழ் ராசகுமார்களே இருந்திருப்பதை நாங்கள் அறிவோம்.

அரச மட்டத்தில் மட்டுமல் சாதாரண மக்களிடையே கூட அத்தகைய மண உறவுகள் இருந்திருக்கின்றன.

‘எனது பாட்டியின் படம் ஒன்று வீட்டில் இருக்கிறது. அதில் அவர் தமிழ் பெண்களைப் போலத்தான் சேலை அணிதிருந்தார். சில நகைகள் கூட தமிழ்ப்பெண்கள் அணியும் நகையை ஒத்திருக்கின்றன…..’

‘ஒரு வேளை உங்கள் பாட்டி ஒரு தமிழ்ப் பெண்ணாகவும் இருந்திருக்கலாம்…’

ஆசிரியர் தன் கருத்தை வாசகர்களிடம் திணிக்காமல் பாத்திரங்களின் உரையாடல் ஊடாக  நாசூக்காக சொல்லியிருப்பதை கருத்தூன்றி வாசித்தால் நீங்களும் இரசிப்பீர்கள்.

அதே போல கதை நடக்கும் காலகட்டத்திலும் ஏன் இன்றும் கூட, சிங்கள் தமிழ் கலப்புத் திருமண உறவுகள் எவ்வளவு பிரச்சனை மிக்கதாக இருக்கிறது என்பதை வேறொரு இடத்தில் மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறார். சந்திரன் அனுலாவை வெளிப்படையாக வைபவரீதியாக திருமணமாகச் செய்யாமல் ரெஜிஸ்டர் ஆபீசில் செய்ய இருப்பதை சொல்வதன் மூலம் அவ்வாறு உணர வைக்கிறார்.

அரசாங்கமும் ஊடகங்களும் ஒரு பக்க பார்வையே கொடுப்பதால் பல சிங்கள் மக்களுக்கு இராணுவத்தினரின் கொடிய முகம் தெரிவதில்லை. கதாநாயர்கள் என்று அவர்களைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். நேரடியாக அனுபவித்தால்தான் அவர்களின் கொடுர முகத்தை திருமதி விமல்சிறி போல உணர்வார்கள்.

‘அவன் (இராணுவ வீரன்) சூட்கேசை அப்படியே போட்டுவிட்டு பக்கத்தில் இருந்த பிளாஸ்டிக் கூடையை கிளறத் தொடங்கினான். அப்போது சுடுதண்ணிப் போத்தல் கூடையிலிருந்து வெளியே நழுவி ரோட்டில் விழுந்து நொருங்கியது. அதனைக் கவனித்த திருமதி விமல்சிறிக்கு கோபம் பொத்திக் கொண்டு வந்தது.

‘இவர்களுக்கு கண் கூடத் தெரியாது போலிருக்கிறது. காட்டுமிண்டித்தனமாக நடக்கிறார்கள்.’ பட்டால்தான் புரிகிறது என்பதை நிகழ்வுகளுடாக சுட்டிக் காட்டுகிறார். நேரடியாகச் தன் கருத்தை வலிந்து புகுத்தவில்லை.

நோயாளிகளில் அக்கறை கொண்ட அவர்களது பிரச்சனைகளை புரிந்து நடக்கும் பாத்திரமாக டொக்டர் மகேசனை படைத்திருக்கும் அதே நேரம் அன்று நிலவிய மருத்துவ முறைகள், அன்று உபயோகிக்கப்பட்ட மருந்துகள் என பதிவு செய்யப்படிருப்பதை பார்க்கும் போது அது அந்த காலகட்டத்து நினைவுகளில் என்னை நீந்தித் திளைக்க வைத்தது.

ஞானசேகரன் ஒரு சிறந்த நாவலாசிரியர் என்பதை அவரது ஆரம்ப நாவலான குருதிமலையிலிருந்து அறிந்திருக்கிறோம். இந்த நாவல் ஒரு சிறந்த படைப்பாக உருவாவதற்கு அவரது எழுத்தாளுமையுடன், மருத்துவனாக பெற்ற அனுபவங்களும் உதவியிருக்கின்றன. ஆனால் அவை எல்லாவற்றிகும் மேலாக அவரது நிகழ்கால அரசியல் அறிவும் வரலாற்று ஈடுபாடும் இந்த நாவல் காலத்தைக் கடந்து நின்று நிலைக்க வைக்கின்றது.

இந்த நாவல் சிங்கள மொழிபெயர்ப்பில் வர இருப்பதாக அறிகிறேன். பக்கம் சாராமல் நடுநிலையோடு எழுதப்பட்டிருப்பதால், இப் பிரச்சனையில் அவர்களுக்கு அன்னியமான பல்வேறு முகங்களையும் அறிந்த கொள்ளவும் அவர்கள் பார்வையை விரிவடையவும் செய்யும் என்பதால் வரவேற்கத்தக்கது. துறைசார்ந்தவர்களை மட்டுமின்றி சாதாரண சிங்கள மக்களின் மனங்களிலும் மாற்றம் ஏற்படுத்தக் கூடிய படைப்பு.

நீங்களும் கட்டாயம் படியுங்கள். சுவையும் பயனும் இணைந்து கிடைக்கும் இத்தகைய படைப்புகள் அத்திபூத்தாற் போலத்தான் படைக்கப்படுகின்றன.

நாவலைப் படைத்த ஞானசேனரன் அவர்களுக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

எம்.கே.முருகானந்தன்

0.00.0

Read Full Post »

ஏதனத்தின் ஊடாக சாதீய அடக்குமுறை- தெணியானின் புதிய நாவல்

 

தெணியானின் ஏதனம் நாவலைப் படித்து முடித்த போது பெரும் குற்ற உணர்வுக்கு ஆளானேன்.

scan_20170101

சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் எனது பதின்ம வயதுகளில் நான் எமது ஊர் எல்லையில் உள்ள வீரபத்திர கோவிலடியால் போகும் வேளைகளில் அந்தக் கோயில் வெளிவீதி கிணற்றடியில் சில பெண்கள் குடங்களுடன் நிற்பார்கள். சிலதருணங்களில் ஆண்களும் கூட நிற்பதுண்டு. தங்கள் நாளாந்த தேவைகளுக்கான நீரைப் பெறுவதற்காக. தண்ணீர் அள்ளித் தருமாறு பணிவாகக் கேட்பார்கள். தண்ணீருக்காக அவர்கள் படும்பாடு பரிதாபமாக இருக்கும்.

அவர்கள் பகுதியில் கிணறுகள் இல்லை. மிகவும் மேடான பகுதி என்பதால் ஆழமாக கிணறு வெட்ட வேண்டும். சொந்தக் கிணறு வெட்டுவதற்கான பொருளாதார வசதி அவர்களுக்கு இல்லை.

‘இதுகளோடை மினக்கட நேரமில்லை’ என்று சொல்லியடி விரைந்து ஓடும் பல பெரிய மனிதர்களைக் கண்டிருக்கிறேன். பலர் மணிக்கணக்காக தண்ணீருக்காக பரிதாபமாகக் காத்து நிற்கவும் நேரும்.

கேட்பார்களோ இல்லையோ யாராவது குடத்துடன் அக் கிணற்றடியில் நின்றால் தண்ணீர் அள்ளிக் கொடுக்காமல் நான் போனதில்லை. தண்ணீருக்காகத் துன்பப்படும் அவர்களுக்கு நான் ஒரு பெரிய சேவையை செய்கிறேன் என்ற மனத் திருப்தியுடன், பெருமிதத்துடன் தான் நான் அதைச் செய்திருந்தேன்.

அவர்களை நீர் அள்ளவி;டாது சமூக ரீதியாக தடுத்திருப்பதானது அவர்களது நாளாந்த வாழ்க்கையை எந்தளவு பாதித்திருக்கும், அதற்கு மேலோக அவர்களது சுயமரியாதiயை, தன்மான உணர்வை எந்தளவு புண்படுத்திருக்கும். அது தவறானது. அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் போராட வேண்டும் என்றெல்லாம் அக்காலத்தில் சிந்தித்து செயற்பட வில்லை என்பதை நினைக்கவே எனக்கு குற்ற உணர்வு ஏற்பட்டது.

அக்கால கட்டத்தில் வடமராட்சி மத்திய பகுதியில் இருந்த அரசாங்கப் பாடசாலையின் அதிபர் முற்போக்கு கருத்துகள் உள்ளவரான போதும், பாடசாலை கிணற்றில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தண்ணி அள்ளுவதற்கு, எழுதப்படாத சட்டம் தடையாக இருந்தபோதும் வெளிப்படையாக அவரால் குரல்கொடுக்க முடியாத சமூகச் சூழலே இருந்தது என்பதை தெணியானின் நாவலைப் படித்தபோது புரிந்து கொண்டேன். இந்நிலையில் சிறுவனான நான் என்ன செய்திருக்க முடியும் என்று மன ஆறுதல் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

தண்ணீர் அள்ள மட்டுமல்ல கிணற்றுப் பத்தலுக்குள் கூட அவர்கள் கால் வைக்க முடியாத நிலை அன்று நிலவியது.

தங்கள் மீது வன்முறை பாவிக்கப்படும் என்பதை அந்த அரசாங்கப் பாடசாலை மாணவர்கள் உணர்ந்தும் துணிவுடன் கிணற்றில் அள்ள முயன்று பெரும் இழுபறிகளின் பின்னரே தங்கள் உரிமையைப் பெற முடிந்தது.

தெணியானின் பெரும்பாலான படைப்புகள் போலவே இது சாதீயத்தை கருவாகக் கொண்ட ஒரு நாவல்தான். வடமராட்சி பிரதேசத்தின் ஒடுக்கபட்ட மக்களின் வாழ்வின் பாடுகளைக் பேசும் நாவல்.

ஈழத் தமிழர்களான தங்களுக்குள் ஒன்றான ஒரு சமூகப் பிரிவை அடக்கி ஒடுக்குவதற்கு யாழ்ப்பாண மேல்சாதி சமூகமானது தண்ணீரை எவ்வாறு ஒரு வலுமிக்க ஆயுதமாக பயன்படுத்தியது என்பதை இந்தப் படைப்பின் மூலம் உணர வைக்கிறார் தெணியான். பாதிக்கபட்டவர்களின் ஆக்கிரோசமான எதிர்குரலாக அல்லாது சமூகத்தில் நிலவுவதை உன்னிப்பாக அவதானித்து நிதானமாகவும் அழகாகவும் ஒழுங்கு ரீதியாகவும் பதிவு செய்வு செய்த நாவலாசிரியர் பாராட்டப்பட வேண்டியவராகிறார்.

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னான காலகட்டத்தில் நாவல் ஆரம்பமாகிறது. தாழ்த்தப்பட சமூகத்தில் ஏழ்மையில் வாடும் சிறுவர்களின் வாழ்க்கை சித்தரிப்புடன் களை கட்டுகிறது. உண்மையில் நாவலின் ஆரம்ப பகுதிகள் மிகவும் சுவார்ஸமாகவும் சொல்லப்படுகிறது. தருமன் என்ற பாத்திரம் அற்புதமாக படைக்கப்பட்டு இருக்கிறது. நாவல் முடிந்த பின்னரும் மனதில் நிற்கிறான்.

தருமன் தான் பிரதான பாத்திரம் என்பதான உணர்வு நாவலின் அரைவாசிப் பகுதி வரையில் எனக்கு இருந்தது. ஆயினும் பின்னர் கோபாலன் கதையை ஆக்கிரமித்துக் கொள்கிறார். சமூகத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை வெளிப்படுத்தவும், கதையின் அடிப்படைக் கருவிற்கு வலு சேர்க்கவும் இந்த மாற்றம் அவசியம் எனப் புரிந்து கொள்ள முடிகிறது. இருந்தபோதும் கதையின் உண்மையான நாயகன் கால மாற்றங்களுக்கு ஏற்ப வேறு வேறு முகங்களுடன் மேடையேறும் ‘ஏதனம்’தான்.

கற்றலில் ஈடுபாடற்று பணிசுக்காக மட்டும் பாடசாலை செல்லுமளவு தருமனை வறுமை வாட்டுகிறது. தகப்பன் நல்ல தொழிலாளியான போதும் குடியில் மூழ்கிவிடுவதால் தாய் கூலி வேலை செய்தே குடும்பத்தை ஓட்டுகிறாள். வயிற்றை நிறைக்க முடியாதளவு வறுமையில் குடும்பம் உழல்கிறது.

கோவிலில் சர்க்கரைத் தண்ணி ஊற்றுவதைக் அறிந்த தர்மன் பாடசாலையிலிருந்து கள்ளமாகக் கிளம்பி ஓடி வயிறுமுட்ட சர்க்ரைத் தண்ணீர் அருந்துகிறான். அவன் மாத்திரமின்றி இன்னும் பல மாணவர்கள் அவ்வாறு பாடசாலைக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு ஒடி வருவதைக் காணும் போது அந்தச் சமூகத்தில் அன்று நிலவிய வறுமையின் கோரமுகம் புரிகிறது.

அவர்களுக்குச் சர்க்கரைத் தண்ணீரை எந்தப் பாத்திரத்திலும் ஊற்றிக் கொடுக்கமாட்டார்கள். பானம் உள்ள பாத்திரத்தை இவர்களது கையில் படாதவாறு உயர்திப்பிடித்து சரித்து ஊற்றுவார்கள். இவர்கள் கையில் ஏந்திக் குடிப்பார்கள். கைமண்டை என்று தெணியான் சித்தரிக்கிறார்.

கைமண்டையே நீரருந்தும் ஏதனமாகிறது. சுர்க்கரைத் தண்Pர் மட்டுமே இவர்களுக்கு கிடைக்கும். மோர்த்தண்ணியும் ஊறுகாய்தண்ணியும் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.

‘தருமன் குடிக்கிறான். குடிக்கிறான். குடித்துக் கொண்டே இருக்கிறான்.’

‘டேய் .. நீ குடிக்கக் குடிக்க எங்கையடா போகுது! ஊதென்ன வயிறோ … பீப்பாவோ.’ என்று ஊற்றுபவர் ஏளனம் செய்கிறார்.

ஆயினும் அதைச் சட்டை செய்யாது மேலும் திட்டுகளை வாங்கிக் கொண்டு, ஒரு போத்தலில் சர்க்கரைத் தண்ணி எடுத்துப் போய் வெறுவயிற்றோடு கிடக்கும் தாய்க்குக் கொடுக்க அவன் மனம் அவாவுகிறது. இதைப்; பார்க்க எங்கள் மனம் வெம்பி அழுகிறது.

கால ஓட்டத்தில் சமூக மாற்றங்கள் ஏற்பட்டன, வேகமாக அல்ல மிக மிக மெதுவாக. அதுவும் வலாத்காரமாக மாற்றப்படும் சூழலில் ஏதனங்கள் மாறுகின்றன. கைமண்டை, பச்சோலைப் பிளா, பனஞ் சிரட்டை, சோடாப் போத்தல், அலுமினிய் பேணி, கிளாஸ், மாபிள் கோப்பை, எவர்சில்வர் டம்ளர் எனப் படிப்படியாக மாறவே செய்கிறது.

பருகுவதற்கான ஏதனங்கள் மாறிய போதும், மனித மனங்கள் மாறவில்லை. எவ்வாறு குடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதன் மூலமும் தங்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தவே உயர்சாதிச் சமூகம் முயல்கிறது.

‘தமிழ் நாட்டில் எல்லோரும் எவர்சில்வர் கப்பையே உபயோகிக்கிறார்கள். பாலலென்ன மோரென்ன, தேநீரென்ன கப்பிலை வாய் வைச்சுக் படிக்கும் பழக்கம் அங்கே இல்லை..’ என்று வீட்டுக்காரர் சொல்லி முடிக்க மகள் எவர்சில்வர் கப்பில் தேநீரோடு வருகிறாள்.

ஆம் நாகரீகமாக சாதீயத்தை காக்க முனைகிறார் வீட்டுக்காரர். வாய்வைத்துக் குடித்து எங்கள் ஏதனத்தை தீட்டுப்படுத்தி விடாதே என்பதை சொல்லாமல் சொல்கிறார்.

நல்ல சாதிக்காரனுக்கும் குறைந்த சாதிக்காரனுக்கும் ஒரே விதமான கோப்பையில் தேநீர் கொடுத்தாலும் குறைந்த சாதிக்காரர் குடித்த கோப்பைக்கு அவமானம் செய்வதன் மூலம் அவர்களை இழிவுபடுத்தி இன்றும் சாதீய உணர்வு செத்துவிடாது இருப்பதை நாவலின் கடைசி அத்தியாத்தின் இறுதிப் பகுதியில் காண்கிறோம். எவ்வாறு என்பதை நீங்களே வாசித்துப் பாருங்கள்.

நாவலின் ஆரம்பம் நன்கு ரசனையோடு அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சிறுவயது அனுபவங்கள் சொல்லப்பட்ட முறையானது வாசகனை அந்தச் சூழலுக்குள் நனைந்து ஊற வைக்கிறது. ஆயினும் மேலே செல்லச் செல்ல, சற்று வேகமாக கதையைச் சொல்லி முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் சொல்லப்பட்டது போன்ற உணர்வு எழுகிறது. கருத்திற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பாத்திர மற்றும் களச் சித்தரிப்பிற்கு கொடுக்கப்படவில்லை. செழுமை பிற்பகுதியில் தளர்ந்து விடுகிறது.

தெணியானது இந்த நாவலானது சுவையான நாவலாக மட்டும் இல்லை. அந்த காலகட்டம் பற்றிய பல செய்திகளையும் தகவல்களையும் கதை முழுவதும் தூவிச் செல்கிறது. ‘யாழ்ப்பாண நகரத்தில் தேநீர்க்கடைப் பிரவேசம் நடைபெற்று பதினொரு ஆண்டுகள் கழிந்த பின்னரும் வடமராட்சியில் உள்ள தேநீர்க்கடைகள் திறந்தவிடப்படவில்லை’ என்பது உதாரணத்திற்கு ஒன்று.

இடதுசாரிக் கட்சிகளின் அக்கறை, மக்கள் சபை தோற்றம், முடி வெட்டும் சலூன்களிலும் பாகுபாடு, ஆலயப் பிரவேசம், தேநீர் கடைகளை திறந்துவிடுதல், சாதியக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள் போர்ச் சூழல் காரணமாக பின்னடைவது போன்ற பலவேறு தகவல்கள் நாவல் முழுவதும் நிறைந்து கிடைக்கின்றன.

எனவே, இதை ஒரு வெறும் கதையாக, நாவலாக, படைப்பிலக்கியமாக மட்டும் பார்க்க முடியவில்லை.

வடமராட்சி பிரதேசத்தில் சாதி ஆதிக்கம் நிலவிய முறையையும் அது எவ்வாறு படிப்படியாக நீர்த்துப் போனது பற்றியும் பேசுpறது. நீர்த்தது போல மேலோட்டமாக சலனமின்றிக் கிடந்தாலும், நீறுபூத்த நெருப்பாக உள்ளுர அரித்துக்கொண்டிருப்பதை பேசுகிறது. இருளுக்குள் மறைந்திருக்கும் கள்வன் போல அசுமாத்தமின்றி சமூகத்தை அரித்துக் கொண்டே இருக்கிறது என்பதைப் பேசும் ஆவணமாகவும் கருத முடியகிறது.

ஊர் எல்லைகளைக் கடந்து மலையகத்திலும், ஆட்சி மாற்றங்களை மீறி போராளிகளின் காலத்திலும் எவ்வாறு சாதீ ரீதியான பாகுபாட்டைக் தமிழ் சமூகம் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தது, இருக்கிறது என்பதை பதிவு செய்யும் ஆவணமாக இருக்கிறது.

scan_20170101-2

தெணியான் சோர்வின்றி இயங்கும் ஒரு படைப்பாளி சிறுகதை, குறுநாவல், நாவல் இலக்கியக் கட்டுரைகள், மேடைப் பேச்சு என தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர்.

இது அவரது 22வது நூல் என நினைக்கிறேன். அட்டைப்படத்தை ஜீவநதி ஆசிரியர் பரணீதரன் அழகாக வடிவமைத்துக் கொடுத்துள்ளார். மறைந்த எழுத்தாளர் ராஜ சிறீகாந்தன் நினைவாக வெளிவந்திருக்கிறது.

பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியீடாக வந்திருக்கிறது. விலை ரூபா 300 மட்டுமே.

தொடர்புகளுக்கு

பூபாலசிங்கம் புத்தகசாலை

202,செட்டியார் தெரு

கொழும்பு 11.

எம்.கே.முருகானந்தன்

0.00.0

Read Full Post »

எமது வாழ்வின் அழிந்த தடங்களை பற்றி அறிந்து கொள்வதில் எவருக்குமே மகிழ்ச்சி ஏற்படவே செய்யும். கல்கி சாண்டில்யன் போன்றவர்களைப் படிப்பது இளம் பிராயத்தில் பிடித்திருந்தது. அதுவும் தமிழர் வாழ்வுதான்.
 Palaya Vethak kovil_0001_NEW
ஆனால் கந்தமுருகஞானி (முருகேசு ராஜவரோதயம்) எழுதிய பழைய வேதக் கோயில் நாவலானது எங்கள் கதை. எங்கள் சரித்திரம். எமது மூதாதையர்கள் பதித்த தடங்கள். எமது பிரதேச முன்னோடிக் குடிகளின் வாழ்கையை அவர்களது பிரச்சனைகளை பேசுகிறது. இதனால் மிகவும் ஆர்வம் ஊட்டுவதாக இருந்தது.
மிகக் குறைந்தளவு சரித்திரத் தரவுகளை வைத்துக் கொண்டு நம்பத்தன்மை வாய்ந்த புனைவைப் படைத்துத் தந்த ஆசிரியர் பாராட்டுக்குரியவர். அவர் அச்சுவேலி தோப்பு அருள்நந்தி பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றுகிறார் என்பது குறிப்படத்தக்கது.
நாவல் நம்பகத்தன்மையாக இருப்பதற்குக் காரணம் அந்த பகுதி பற்றிய புவியியல், பண்பாட்டு அம்சங்கள் பற்றிய கதாசிரியரின் நேரடி அனுபவங்களாகும் அத்துடன் அவரது பெற்றோர் மற்றும் உறவினர் ஊடாகப் பெற்ற வாய்மொழித் தகவல்களும் கைகொடுத்துள்தைக் காண முடிகிறது.
அரசமரத்துக் கோயில், மரத்தின் கீழ் கற்சிலை, உரைகல், குடுவையில் திருநீறு, அரசமிலையால் தீர்த்தம் வழங்கல் போன்ற தகவல்கள் அந்த வாழ்வைப் படம் பிடிக்கிறன. அதே போல பனம் மரத்திலிருந்து கள் இறக்கல், பாளைக் கத்தி, சுரக் குடவையில் கள்ளு, அதை அருந்துவதற்கு வடலி ஓலையில் பிளா போன்ற சித்திரிப்புகள் சிறப்பாக மண்ணின் மறைந்த வாழ்வை நாவலில் அழகாக காட்டுகின்றன.
இருந்தபோதும் 1600 ஆண்டுகளின் போது அல்வாய் வடக்கு வியாபாரிமூலை வீரபத்திரர் ஆலயத்தில் பிராமண ஐயர்கள் இருந்தார்கள் என்ற தகவலில் ஐயம் இருக்கிறது.
நாவலை படித்துச் செல்லும்போது, அது நிகழ் சரித்திரத்தின் வாழ்வியல் பிரதி பிம்பம் என்றதான உணர்வை ஏற்படுத்துகிறது. அந்நியர் ஆட்சி, வேற்றுப் படைகளின் அட்டகாசம், இடப் பெயர்வு போன்றவை நாம் அனுபவித்து உணர்ந்தவை. எமது மூதாதையருக்கும் அதே விதமான அனுபவங்கள் கிட்டின என்பது கவலையைத் தந்தாலும் அவர்களது அடிபணியாத தன்மை பெருமிதம் ஊட்டுகிறது.
 Palaya Vethak kovil_0002_NEW-001
பல சமூகங்களின் பிரதிநிதிகள் அந்நிய நாட்டு மனிதர் போன்ற பல்வேறுபட்ட பாத்திரங்கள் இருந்தபோதும் இன மத சாதி ரீதியான காழ்ப்புணர்வை ஆசிரியர் எந்த இடத்திலும் காட்டவில்லை. இது அவரது பக்கம் சாராத நடுநிலைப் போக்கிற்கு உதாரணமாக இருக்கிறது. மிகவும் நடுநிலையோடும் சமூகங்களிடையே பிரிவுகளை ஏற்படுத்தாதவாறும் நல்லியக்கம் மற்றும் சௌயன்யத்தை மேம்படுத்தும் வகையான சித்திரிப்பு நாவலின் பலமாக இருக்கிறது.
பள்ளர் சுடுகாடு, கூத்தாடும் பற்றை, கற்கோட்டை(சக்கோட்டை) போன்ற இடப் பெயர்கள் வந்ததற்கான காரணங்களை கதையோடு கதையாக நகர்த்திச் செல்கிறார்.
நானும் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவன் என்ற ரீதியில் சம்பவங்கள் நடக்கும் இடங்களான சக்கோட்டை, நாவலடி. போன்றவை நடமாடித் திரிந்த இடங்கள். அவற்றினை மையமாக வைத்து கதை நடக்கும் ஏனைய இடங்களையும் தெளிவாக இனங்காண முடிந்தது. பிரதேச வரைபடத்தைத் தந்தமை பாராட்டத்தக்கது.
பல்லி சொல்லுதல் ஆந்தை அலறுதல் போன்றவற்றை துர்க்குறியாகக் கொள்ளும் நம்பிக்கை அன்று இருந்ததை கதையில் அறிகிறோம். இன்றும் அந் நம்பிக்கைகள் இருப்பதால் அது பற்றி சொல்வதில் தவறில்லை. இருந்தபோதும் பல்லி சொல்லுதல் என்பதை மூடநம்பிக்கையாகக் கொள்ளாது அதற்கு வலு சேர்ப்பது போல கதையை நகர்த்துவது எனக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை.
மாவீரர் என்ற சொல் நாவலின் சொல்லோட்டத்துடன் இசைந்து வரவில்லை.  400 வருடங்களுக்கு முன்னான சரித்திரத்தை பேசும் நாவலில் இச்சொல்லைப் பயன்படுத்தியமை நிகழ் கால வரலாற்றை ஞாபகப்படுத்துவதற்காக வலிந்து புகுத்தியது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.
மிக தெளிவானதும் வெளிப்படையும் ஆனது ஆசிரியரின் முன்னுரை. கதையைப் படித்து முடித்த பின்னரே வாசியுங்கள். பல சந்தேகங்களுக்கும் முடிச்சுகளும் திறவுகோல் போல அமைந்திருக்கிறது.
அட்டைப்படம் சிதைந்து கிடக்கும் பழைய வேதக்கோயிலின் புகைப்படமாகும்.
புதிய எழுத்தளார் என்ற உணர்வு ஏற்படாதவாறு தங்குதடையின்றி ஓடும் நீரோட்டம் போன்ற நடை. குழப்பத்தை ஏற்படுத்தாத சம்பவக் கோர்வைகள். ஆயினும் நடை சற்று மெருகேற இடம் உண்டு. இரண்டாம் மூன்றாம் பாகங்கள் வர இருப்பதாகத் தெரிகிறது. அவற்றில் மேலும் செப்பனிடப்படும் என நம்பலாம்.
இடம் பெயர்ந்து பின் சமாதானம் என்ற நம்பிக்கையில் பலதடவைகள் மீண்டும் ஊர் வந்தவன் என்ற ரீதியில் நாவலின் இறுதியில் முருகவாணர் சொல்லும் சுதந்திரம் பற்றிய வார்த்தைகள் மரத்தில் ஆணியாகப் பதிந்து நிற்கின்றன.
Palaya Vethak kovil_0002_NEW
மொத்தத்தில் நமது சரித்திரத்திலும் பழைய பண்பாட்டுக் கோலங்களிலும் அக்கறையுள்ளவர்கள் தப்ப விடக் கூடாத நாவல் இது. ஆசிரியர் கந்தமுருகஞானி (முருகேசு ராஜவரோதயம்) அவர்களது சிறப்பான முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.
எனது மறந்துபோகாத சில புளக்கில் (14.08.2014) வெளியான கட்டுரை
நூல் :- பழைய வேதக்கோயில்
நூலாசிரியர் :- கந்தமுருகஞானி (முருகேசு ராஜவரோதயம்)
முகவரி :- ஆனந்தகானம், ஆவரங்கால், புத்தூர்
விலை :- ரூபா 300
எம்.கே.முருகானந்தன்.
0.00.0

 

Read Full Post »

>

‘தவறிப் போனவள்’ பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். முன்னால் ‘நடத்தை’ என்ற சொல்லை அடைப்புக்குறிக்குள் போட்டுவிட்டால் அதன் அர்த்தம் தெள்ளத் தெளிவாகப் புலப்படும்.

ஆனால் அவ்வாறான  ‘தவறிப்போனவன்’ பற்றித் தமிழில் எழுதுவார் யாருமில்லை. எமது இனிய தமிழின், தமிழ்க் கலாசாரத்தின் பாலியல் ரீதியான பாகுபாட்டு அம்சத்தின் அல்லது ஒடுக்குமுறை அம்சத்தின் கயமையான வெளிப்பாடுதான் பெண்பாலான, அந்த சொற்பிரயோகம் எனச் சொல்லலாம்.

‘நடத்தை தவறிப்போனவன்’கள் இல்லாத ‘கோவலன்’ வழி வந்த புனித சமூகம் அல்லவா எம்மது?.

தமிழர்களாகிய நாம் இன ரீதியான பாகுபாடு பற்றிப் பேசுவோம். மொழி ரீதியான ஒடுக்குமுறை பற்றிப் பேசுவோம். பிரதேச ரீதியான பாகுபாடுகள் பற்றியும் வாய்கிழியப் பேசுவோம். பால்ரீதியான பாரபட்சம் பற்றி  மட்டுமே மேலோட்டமாக அவ்வப்போது பட்டும் படாமாலும் பேசுவோம்.

ஆனால் எழுத்து வடிவில் அதிகம் பயன்படுத்தாத மொழிப் பிரயோகத்தைப் தனது படைப்பின் தலைப்பாகக் கையாண்டிருக்கிறார்; எழுத்தாளர் தெணியான். சகல ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் கொடுத்துக் கொண்டேயிருக்கும் தெணியான் அவ்வாறு செய்வது அதிசயமல்ல. ஆனால் அவர் பேசுவதும் ஒழுக்க ரீதியாகத் தவறிப் போனவன் கதையை அல்ல என்பதும் உண்மையே.

எமது பக்கத்தில் பேச்சுவழக்குத் தமிழில் ‘தவறிப் போனான்’ என்று சொல்வது வழக்கம். அந்த அர்த்தத்தில்தான் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. ஆனால் இது ஒரு தவறிப் போனவன் கதை மட்டுமல்ல. தவறிப்போனவன்கள் பலர் பற்றிய கதையாகவும், தவறிப்போனவனாகக் கருதப்பட்டுத் தப்பியவன் கதையாகவும் இருக்கிறது.

எதையும் வழமைபோலச் சொல்லக் கூடாது சற்று வித்தியாமாகச் சொல்ல வேண்டும் எனத் தெணியான் அடிக்கடி சொல்லுவார். அது அவரது படைப்பின் தலைப்பிலும்  வெளிப்படுகிறது.

தவறிப்போனவன் கதை என்பது தெணியான் எழுதிய நாவலாகும். தினகரன் வாரமஞ்சரியில் 2005ம் ஆண்டில் ஆறு மாதங்களாகத் தொடராக வெளியான இந்நாவல் இப்பொழுது கொடகே நிறுவனத்தால் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.

தணிகாசலம் ஒரு ஆசிரியர். தனது பாடசாலையில் உபஅதிபராகக் கடமையாற்றுகிறார். தனது பதவி பற்றி இவ்வாறு சொல்கிறார். “உபஅதிபர் கதிரை இரண்டும் கெட்டான் நிலையுள்ள போலி ஆசனம். கேலியாகப் பேசப்படும். பார்க்கப்படும்…. சம்பளமில்லாத வேலை என்கிறார். இது நூலாசிரியர் தெணியானது ஆசிரியத் தொழில் பற்றிய ஒரு விமர்சனம் எனக் கொள்ளலாம். காலை மணி அடிப்பதற்கு முன் ஆரம்பித்து முடியும் வரை ஒரு பாடசாலையின் நாளந்த நடப்புகளில் அதிபர், ஆசிரியர், மாணவர்களின் நடவடிக்ககைளில் கதையாகவும் சுய விமர்சனமாகவும் வருவது சுவார்ஸமாக இருக்கிறது. அது முதல் அத்தியாயம்.

திடீரென நோய்வாய்ப்பட்ட அந்த மனிதனின் வாழ்வில் சிலநாட்களுக்குள் நடந்த நிகழ்வுகளாகக் கதை சுவார்சமாக விரிகிறது. நோயுற்ற அவன், வீடு தனியார் மருத்துவமனை ஆதார வைத்தியசாலை யாழ் பொது ஆஸ்பத்திரி என அலையும் நேரத்தில், தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள குடும்பம், நண்பர்கள் ஊடாக சமூகத்தைப் பார்ப்பதாக அமைகிறது.

நோய்வாய்ப்பட்டவன் கதையான போதும் உயிர் பறிக்கும் நோயல்ல, ஆனால் பார்த்தவர்களைப் பயமுறுத்துகிற நோய். திடீர் திடீரென மூக்கிலிருந்து இரத்தம் வடியும். மண்டை ஓட்டிற்குள் ஏதோ வெடித்து மூக்கினால் குருதி வடிகிறது என்ற எண்ணத்தைக் கொடுக்கும். இதனால் பயந்தடித்து மருத்துவமனை நோக்கி ஓடுவார்கள். இங்கும் ஓடுகிறார்கள். தனது உடலில் வேறு ஒரு நோய் உபாதியும் இல்லையே என எண்ணி அவன் பயப்படாதபோதும் குடும்பம் சுற்றத்தவர் நெருக்கடியால் ஓட நேர்கிறது. அங்கெல்லாம் பல்வேறு சுவார்ஸமான நிகழ்வுகள் நடக்கின்றன.

மிக இக்கட்டான ஒரு காலகட்டத்தின் கதை இது.

“யுத்த அனர்த்தத்தினால் சிதைந்துபோன கடற்கரைப் பட்டினம் பருத்தித்துறை”,

“கூலாகக் குடிக்கிறதுக்கு ஒண்டுமே இல்லை, ஒரு சோடா வாங்கேலாது,

“இந்த மண்ணில் வாழும் சிந்திக்கத் தெரிந்த ஆருக்கு பிறஸர் வராமல் இருக்கும்”,

“பெற்றோலும் லாம்பெண்ணையும் கலந்து புக்குபுக்கென்று புகைகக்கிக் கொண்டுஅருந்தலாகச் சில கார்கள் அந்தரத்திற்கு ஓடுகின்றன, இறுதியில் மாட்டு வண்டியில் ஏற்றிப்போவதைத் தவிர அவர்களுக்கு மாற்று வழி ஏதுமில்லை…. ஊரடங்கு நேரத்தில் தனது உயிருக்கு அஞ்சாமல் யார் புறப்பட்டுப் போய் வண்டியைக் கொண்டு வருவார்கள்…. வண்டிக்குள் பாயை விரித்து அதன் மேல் படுக்கைச் சேலையை விரித்து.. கிடத்தினார்கள்…. வண்டி நகர்ந்து நூறு மீட்டர் தூரம் போயிருக்க மாட்டாது.. அந்த வண்டிக்குள்ளேயே அவள் உயிர் பிரிந்தது.”

அதே போல அரிக்கன் விளக்கு, சிக்கன விளக்கு, சிரட்டைக்கரி போட்ட ஸ்திரிக்கைப் பெட்டி அந்த நேரத்தில் யாழ் மக்கள் பட்ட துன்ப, துயர அவலங்கள் அநேகம் ஆங்காங்கே படைப்பில் சொல்லப்படுகின்றன.

இவற்றை விடசொல்ல முடியாதவை பல. பதில் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை என்ற அர்த்தத்தில் அல்ல. சொல்ல முடியாத சூழ்நிலை. பெண்டாட்டிக்கும் சக்களத்திக்கும் இடையே மாட்டுப்பட்டவன் நிலையிலும் மோசமானதாக இருந்தது மனித வாழ்வு அக்காலகட்டத்தில்.

“அப்பு வெளியிலை திரிய வேண்டாம். படிக்கிற பிள்ளையள் எண்டு பாராமல் பிடிச்சுக் கொண்டு போகிறான்கள், சின்னவனையும் வெளியிலை விடாதையுங்கோ”. பிடித்துக் கொண்டு போவார்கள் யார் என்று சொல்ல முடியுமா?

மற்றொரு சம்பவம். ஒருவன் சுட்டுக் கொல்லப்படுகிறான்.

“யார் சுட்டது”

பதில் “தெரியாது”,

“ஏன்?’

“தெரியாது?”

‘அறிவுள்ள எந்த ஒரு மனிதன் இந்தக் கேள்விகளுக்கு இப்பொழுது பதில் சொல்லுவான்?’ என்பது கேள்வியாக நாவலில் ஆசிரியர் கூற்றாக வருகிறது.
மகாத்மா காந்தியின் குரங்குப் பொம்மைகள் போல கண் மூடி, வாய் பொத்தி, காது அடைத்து நின்ற வாழ்வு. தீயனவற்றை ஒதுக்க வேண்டும் என்பதற்காக அல்ல. தம் உயிர் காப்பதற்காக ஒண்டி ஒதுங்கிக் கிடந்த நரக வாழ்வு.

ஒருவரல்ல! யார் யாரோவெல்லாம் எமது குழந்தைகளை கழுகுகள் போல கொத்திக் கொண்டு போனார்கள். உளவாளி என்றும், காட்டிக் கொடுப்பவன் என்றும், பயங்கரவாதி என்றும் வயது வேறுபாடின்றிச் சுட்டுக் கொன்றார்கள்.

தாம் நினைப்பவற்றை எம்மைப் பேசச் சொல்லி நிர்ப்பந்தித்தார்கள். அல்லது ஊமைகள் போல வாய் மூடி இருக்கச் சொன்னார்கள்.

அந்த வாழ்வை அப்படியே வெளிப்படையாகச் சித்தரிந்திருந்தால் நூலாசிரியரும் அக்காலத்திலேயே தவறிப் போனவன் ஆயிருப்பார். “கத்தி முனையில் நடப்பதுபோல மிகுந்த நிதானத்துடன் சிலவற்றை எழுத்தில் சொல்லியிருக்கிறேன்.” என நூலாசிரியர் தனதுரையில் சொல்லிருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆனால் நாவல் என்பது சிறுகதை போன்றதல்ல. அது ஒரு மையக் குறியை நோக்கி நகர வேண்டியதில்லை. பரந்த வாழ்வின் அகண்ட் சித்தரிப்பு. அதனால்தான் இந்த நாவலிலும் பல விடயங்கள் பேசப்படுகின்றன. யாழ் சமூகத்தின் போர்க்கால வாழ்வு, சாதீயம், சமூக சீர்கேடுகள் எனப் பலவும் பேசப்படுகின்றன. பருத்தித்துறையில் ஆதியில் சேவை புரிந்த செல்லப்பா, விசுவலிங்கம், தம்பிப்பிள்ளை போன்ற மருத்துவர்களின் ஒரு முகம் புலப்படுகிறது. சுமார் 40-50 வருடங்களுக்கு யாழ் மாவட்டத்தில் எமக்குக் கிடைத்த மருத்துவ வசதிகளின் கோட்டு வரைவும் இருக்கிறது.

துறைமுகமும், சந்தை,கோடு(Magistrate and district Courts)  பொலீஸ் ஸ்டேசன், என எந்நேரமும் கலகலப்பாக இருந்த நகரம் அது. அந்த நகரின் நினைவுகளைக் கிளற வைக்கிறது இந் நூல்.

சுமார் 40-50 வருடங்களுக்கு முன்னான அக்கால வாழ்வு முறையில் காதல் உணர்வு எவ்வளவு அடக்கமானதாக இருந்ததையும், வெளிப்படுத்;த முடியாத சூழல் கொண்டதாகவும் உணரமுடிகிறது.

கதை முழுவதும் நல்ல தமிழில் எழுதப்பட்டுள்ளது. ஒரு நல்ல தமிழாசியரின் அழகான வசன நடை. ஆங்காங்கே யாழ் மண்ணின் பேச்சுத் தமிழ் மென்முறுவல் காட்டி நயக்க வைக்கிறது. கட்டிளம் பருவத்தில் தோன்றுகின்ற முகப்பருக்களுக்கு ‘குமர்ப் பருக்கள்’என்றும், சத்திர சிகிச்சைக்கு “கொத்தித்தான் பார்க்க வேண்டும்” என டொக்டரே ஓரிடத்தில் சொல்வதும் நயக்கின்றன. தகப்பனை ‘அப்போய்’ என ஆசையோடு அழைப்பதில் உள்ள நேசம் மனதில் நிற்கிறது. அதே போல தந்தை மகனை ‘அப்பு’ என நேச நெருக்கத்தோடு விளிப்பதையும் காண முடிகிறது.

மற்றொரு சுவார்ஸமான விடயம் அந்தக் காலத்துப் பேதி குடித்தல் பற்றியதாகும். இன்றும் ஒரு சிலர் மருத்துவர் என்ற முறையில் என்னிடம் பேதி குடிக்க மருந்து கேட்பதுண்டு. மருத்துவ ரீதியாகப் பேதி இப்பொழுது கொடுக்கப்படுவதேயில்லை. கொடுப்பது தீது என்பதே காரணம். சின்னப் பையனாக இருந்த காலத்தில் வயிற்று வலிக்காக சுதேசிய மருத்துவரால் தணிகாசலத்திற்கு கொடுக்கப்பட்டது. பேதி போவதற்குப் பதிலாக கடுமையாக வயிற்றை வலித்து வாந்திதான் போனது. அதற்குப் பிறகு யார் என்ன சொன்னபோதும் அதைக் குடிக்க மறுத்துவிட்டார்.

தெணியானின்  மற்றொரு நூல் பற்றிய எனது விமர்சனம் படிக்க …  

சுவாரஸ்சமாக நாவல் நகருகிறது. ஒரே மூச்சில் படித்து முடிக்க வைப்பது அதன் சிறப்பு. சிறந்த ஆற்றொழுக்கான நடையும் வாழ்வோடு ஒன்றிய சுவார்ஸமான நிகழ்வுகளும், மனித வாழ்வின் பல்வேறு பக்கங்களை பூமாலை போலத் தொடுத்த நுணக்கமும் அதற்குக் காரணமாகும்.

சில எழுத்துப் பிழைகளும், சொற்கள் பிரிந்து கிடப்பதும் மனத்தை அருட்டினாலும் சிறந்த வகையில் நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ் நூல் வெளியீட்டுத்துறைக்கு கொடகே நிறுவனம் பங்களிக்க முன்வந்தமை பாராட்டத்தக்கது. ஆயினும் பரந்த வளமும் அனுபவ விஸ்தாரமும் கொண்ட அவர்கள் இன்னமும் செம்மையாகச் செய்யலாம் என எண்ணத் தோன்றுகிறது.

இந்த நாவல் எனக்கு  பிடித்ததற்கான காரணங்கள் பலவான போதும்,
தனிப்பட்ட காரணமும் உண்டு. ஏனெனில் இது எனது பிரதேசத்தின் கதை. கதை மாந்தர்கள் பெரும்பாலானவர்கள் எனக்கு அறிமுகமானவர்கள். தவறிப் போனவர்கள் அனைவரும் எனக்குத் தெரிந்தவர்கள். தவறிப்போனவனாகக் கருதப்படும் தணிகாசலம் ஆசிரியர் எனது மிக நெருங்கிய நண்பர். அவர் வேறு யாருமல்ல. நூலாசிரியர் தெணியான் அவர்களே. எனவே இது தெணியானின் சொந்த அனுபவம்.

“தவறிப் போனவன் கதை” என்னும் இந்தப் படைப்பினுள் நான் மறைந்திருக்கவில்லை. எனது வாழ்வில் 1996ல் சம்பவித்த மிக நெருக்கடியான சம்பவம் ஒன்றினை மையமாக வைத்துக் கொண்டே இந்த நாவல் நகருகிறது” என வாக்குமூலம் தருகிறார்.

அதற்கு மேலாக நானும் அந்த நாவலில் பாத்திரமாக வருகிறேன். டொக்டர் ஆனந்தன், ஆனந்தன் வைத்தியசாலை யாவும் நானும் என்னைச் சுற்றியவையுமே.

எனது பருத்தி்த்துறை மருத்துவநிலையம் அன்று

அந்தச் செய்தி எட்டியபோது நானும் எனது நண்பர்களும் பட்ட மனஅவஸ்தை சொல்லி மாளாது. நண்பர் குலசிங்கம் உடனடியாகவே தகவல் தந்தார்.

நேற்றுப் பார்த்த நண்பனை இவ்வளவு விரைவாக இழப்போம் எனக் கனவும் கண்டதில்லை. ஆனால் இழப்பது அன்றைய போர்ச் மூழலில் ஆச்சரியமானதல்ல. இரவு 7 மணிக்கு சந்தித்த நண்பன் நெல்லை.க.பேரனை காலையில் கண்விழ்த்தபோது இழந்ததாகச் செய்தி கேட்ட போது பட்ட துயரத்திற்கு மேலானது தெணியான் பற்றிய செய்தி.

நோயாளிகள் காத்திருந்ததால் என்னால் விட்டகல முடியவில்லை. என்ன நடந்தது என அறிய நண்பர்கள் குலசிங்கமும், ரகுவரனும் தெணியானது வீடு நோக்கி சைக்கிளில் விரைந்தனர். நான் மனப்பதற்றத்துடன் பணியில் ஈடுபட நேர்ந்தது. எதிர்பாராதது! ஆனால் நல்ல செய்தியுடன் திரும்பி வந்தனர்.

“தெணியான் சுகமே உள்ளார். காலமானது வேறொரு ஆசிரியர்.” என்றார்கள். மகிழ்ந்தோம். மற்றொருவர் இறப்பில் நாம் மனமகிழ்ச்சியடைய நேர்ந்தது வாழ்க்கையில் அந்த ஒரே தடவையாகத்தான் இருக்கும். நண்பர் தப்பிவிட்ட நிம்மதியானது வேறு சிலர் துன்பத்தைக் கணக்கெடுக்காது மகிழ வைத்த முரண் அனுபவம் அது.

பன்முக ஆற்றல் கொண்ட தெணியானின் எழுத்தாள முகத்தின் ஒரு பக்கம்தான் நாவல். நாவல் படைப்புத்துறையில் பஞ்சம் மிக்க எமது நாட்டில் நாவல், குறுநாவல் என ஏற்கவே எட்டு நூல்களை தெணியான் எழுதி வெளியிட்டுள்ளார். பல வருடங்களுக்கு முன் வெளியான ‘கழுகுகுள்’ என்ற நாவலும் மருத்துவமனைகளையும், மருத்துவர்களையும் சுற்றிப் படர்ந்திருந்தாலும் ஒன்றுக்கொன்று முடிச்சுப்போட முடியாத மிக வித்தியாசமான படைப்பு ‘தவறிப்போனவன்’ ஆகும்.

அவர் எழுதிய சிறுகதைகளில்; பெரும்பாலானவை நான்கு தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. சிறுகதை, கட்டுரை, கவர்ச்சியான பேச்சாற்றல், ஆசிரியத்துவம் என கைவைத்த ஒவ்வொரு துறையிலும் தன் ஆளுமையைப் பதித்துள்ளார்.

சுமார் 5 தசாப்தங்களாகப் படைப்புலகில் இருந்தாலும் அவரது படைப்பாற்றல் இன்னும் வற்றாத சுனையாகப் பிரகாவித்து, வித்தியாசமான புனைவுகளுடன் மெருகேறிக் கொண்டேயிருக்கிறது. இன்னும் பல பொக்கிஸங்கள் அவரது பேனாவிலிருந்து சுரந்து கொண்டே இருக்கும் என நம்பலாம்.

எம்கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0.0

Read Full Post »