Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘நிகழ்வு’ Category

>

பிரபல எழுத்தாளரான நீல.பத்மநாதனின் சிறந்த நாவலான ‘தலைமுறைகள்’ திரைப்படமாக வெளிவந்துள்ளது. வ.கெளதமனின் நெறியாள்கையில் ‘மகிழ்ச்சி’ என்ற பெயரில் இது வெளியாகியுள்ளது. இலங்கையில் திரையிடப்பட்டதாகத் தெரியவில்லை.

இத் திரைப்படத்தை எதிர்வரும் ஞாயிறு 15.05.2011 அன்று இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் காட்சிப்படுத்த இருக்கிறது.

இடம்:- பெண்கள் கல்வி ஆய்வு மையம்
                கேட்போர் கூடம்
                58, தர்மாராம வீதி
                கொழும்பு 06.

நேரம்:- மாலை 4.30 மணி (ஞாயிறு 15.05.2011)

நல்ல திரைப்படங்களை ரசிக்க விரும்புபவர்கள் தப்பவிடக் கூடாத சிறந்த திரைப்படம்.

நீல.பத்மநாபனின் தலைமுறைகள் நாவலைப் படிக்காத நல்ல வாசகன் இருக்க முடியாது. கைவிரல்களுக்குள் அடக்க கூடிய மிகச் சிறந்த தமிழ் நாவல்கள் எனப் பட்டியலிட்டால் அதற்குள் நிச்சயம் இது கட்டாயம் இருக்கும்.

கேரளத்தை அண்டிய தமிழ் பரப்பான குமரி மாவட்டத்தின் இரணியல் கிராமத்து செட்டிமார் சமுதாயதினரின் வாழ்வை இயல்பு கெட்டாமல் யதார்தமாகச் சித்தரிக்கும் படைப்பு எனலாம்.

வட்டார வழக்கு, சாதீயத்திற்கு எதிரான குரல், பெண்ணியம் ஆகியவை முக்கியத்துவம் பெறும் இந்நாவல் பிரச்சாரத்தனமான வரண்ட படைப்பு அல்ல.

ஒரு கிராமியச் சூழலில் சுமார் 50-60 வருடங்களுக்கு முன் நடந்ததாக வருகிறது. அக் காலத்தில் நினைத்தும் பார்க்க முடியாத மறுமணம், அதுவும் கணவன் உயிரோடு இருக்கும்போது, அதே கிராமத்தில் நடப்பது முடியாத காரியம். இவற்றை துணிந்து கூறும் மிகச் சிறந்த இலக்கியம் எனலாம்.

அந்தக் கதையைத்தான் இப்பொழுது மகிழ்ச்சி என்ற திரைப்படமாகத் தருகிறார் இயக்குனர் கௌதமன்.

Read Full Post »

>தினசரி பத்திரிகைகளின் ஆசிரியர் தலையங்களில் தினக்குரலுக்கு சிறப்பான பாரம்பரியம் உண்டு.

பொன்.ராஜகோபல், சிவநேசச்செல்வன் வரிசையில் வரும் வி.தனபாலசிங்கம் அவர்களது தலையங்கங்களும் குறிப்பிடத்தக்கவை. காலத்தால் மறக்க முடியாதவை. காலத்தின் கண்ணாடி போன்றவை.

இப்பொழுது அவரது  கையெழுத்தில் பிறந்த 100 தலையங்கங்கள் ஒன்று தொகுக்கப்பட்டு ‘ஊருக்கு.. நல்லது சொல்வேன்’ என்ற நூலாக வெளிவருகிறது.

புரவலர் புத்தகப் பூங்காவின் 29வது வெளியீடான இந் நூல் நாளை வெளியிடப்படுகிறது.

நாளை ஞாயிறு (05.12.2010) மாலை 5 மணிக்கு உருத்திரா மாவத்தையில் உள்ள தமிழ்ச்சங்க மண்டபத்தில் இது வெளியிடப்பட இருக்கிறது.

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் சி்விக்னேஸ்வரன் தலைமை தாங்க, பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார்.

மிகுதி விபரங்களை அழைப்பிதழில் காண்க.

Read Full Post »

>தோழர் மு.கார்த்திகேசன்இலங்கையின் அரசியலைத் தெரிந்த, அதிலும் முக்கியமாக வட பகுதியின் இடதுசாரி அரசியலைத் தெரிந்த எவரும் கார்த்திகேசன் மாஸ்டரைத் தெரியாது இருக்க முடியாது.

தமிழ் மக்களிடையே இடதுசாரி சிந்தனைகள் உருவாவதற்கு அவரும் ஒரு முக்கிய நபராவார்.

இலங்கை இடதுசாரி இயக்கதின் முன்னோடிகளில் ஒருவரும், சிறந்த கல்விச் சிந்தனையாளருமாகிய தோழர் மு.கார்த்திகேசன் அவர்களது 32 வருட நினைவுப் பேருரையும், பேராசிரியர் சோ.சந்திரசேகரன் எழுதிய ‘இலங்கையில் உயர் கல்வி: பல்கலைக்கழக வளர்ச்சியும் பிரச்சினைகளும்’ என்ற நூல் வெளியீடும் சென்ற 27.09.2009 ஞாயிறு அன்று கொழும்பு 06ல் 58, தர்மாராம வீதியில் உள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடலில் நடைபெற்றது.

தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திரு சிவா சுப்பிரமணியம் தலைமையில் கூட்டம் சரியாக மாலை 4.30 ற்கு ஆரம்பமாகியது.

தலைமையுரை “வடக்கில் கம்யூனிஸ்ட் கட்சியை ஆரம்பித்த ஆரம்பகர்த்தாக்களில் கார்த்திகேசன் மாஸ்டர் முக்கியமானவர். அரசியலில் முழு ஈடுபாடு கொண்ட போதும் ஆசிரியராக இருந்த அவர் தனது ஆசிரியர் பணிக்கு தொய்வு ஏற்படாதவாறு கல்விப் பணியைத் தொடர்ந்தார்.

அவரிடம் கல்வி பெற்ற ஒரு சிலர் பின்னாட்களில் அவரது கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாத போதும் அவரில் பெரு மதிப்பு வைத்திருந்தனர். வார்த்தை ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சிலம்பாட்டங்கள் இன்றி நாசூக்கான சிந்தனைகள் ஊடாக அரசியலை மக்களிடம் கொண்டு சென்றார்.

எளிமையான சொற்களும், நகைச்சுவை நயமும் சேர்ந்திருப்பதால் அவரது கருத்துக்கள் சுலபமாக விளங்கப்பட்டன. இன்று தமிழ் அரசியலில் உள்ள பலரும் அவரூடாகவே வந்தவர்களாகும்.”

“சொந்த வாழ்வுக்கும் அரசியலுக்குமிடையே எந்த வித்தியாசமும் காட்டாதவர் அவர். போஸ்டர் ஒட்டுவதாயின் தொண்டர்களுடன் களம் இறங்கிவிடுவார். ராமசாமி ஐயர், பூபாலசிங்கம், M.C.சுப்பிரமணியம் ஆகியோரும் இணைந்து செல்வதுண்டு.

எனது வீட்டுப் படலையில்தான் முதல் நோட்டீஸ் ஒட்ட வேண்டும் என்பாராம். ஒரு முறை அவ்வாறு நோட்டீஸ் ஒட்டும்போது பொலிஸ் பிடித்துக் கொண்டு போய்விட்டது. பொலிஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் வந்து விடயத்தை அறிந்தபோது இது சிறிய குற்றம் விட்டு விடுங்கள் என்றாராம். கார்த்திகேசு மாஸ்டர் கதிரையை விட்டு அசையவில்லை. நாங்கள் குற்றம் அற்றவர்கள். எங்கு பிடித்தீர்களோ அங்கு கொண்டு போய் விட்டு விடும்படி சொன்னார்” எனப் பழைய நிகழ்வுகளை சுவையாக எடுத்துரைத்தார்.

“தமிழ் ஈழம் பற்றி முதல் முதலில் பேச்சு வந்தபோது, ஈழம் ஈழம் என்று சொன்னால் சிங்களம் நீளம் நீளமாக வளரும்” என அன்றே தீர்க்கதரிசனமாகச் சொன்னதை நினைவுபடுத்தினார். தொடர்ந்து பேசிய சிவா சுப்பிரமணியம் அவரது ஆங்கிலப் புலமை பற்றியும் குறிப்படத் தவறவில்லை. பல துறைகளிலும் மாணவர்களை வளர்த்து எடுத்துள்ளார். உதாரணமாக SLAS பரீட்சைக்கு தோற்றும் பலருக்கு ஆங்கிலத்தில் கட்டுரை எழுதுவதற்கு பழக்கியிருக்கிறார்.

பல துறைகளிலும் கார்த்திகேசு மாஸ்டருக்கு திறமை இருந்த போதும் ஒரு கம்யூனிஸ்ட் ஆகவே வாழ்ந்தார் தனது கடைசி மூச்சு வரை அவ்வாறே உறுதியாக வாழ்ந்த பெருமைக்கு உரியவர்.

நூல் வெளியீடு


இதைத் தொடர்ந்து நூல் வெளியீடு இடம் பெற்றது. பேராசிரியர் சோ.சந்திரசேகரன் எழுதிய ‘இலங்கையில் உயர் கல்வி: பல்கலைக்கழக வளர்ச்சியும் பிரச்சினைகளும்’ என்ற நூலின் வெளியீட்டுரையை ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியரான திரு.தி.ஸ்ரீவிசாகராசா ஆற்றினார்.

“ஏராளமான புள்ளிவிபரங்களைத் தேடி எடுத்து மிக ஆழமாக எழுதப்பட்ட நூல். மிக நல்ல முயற்சி என்றார். தமிழ் பெற்றோர்கள் அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம். தமது குழந்தைகளின் கல்வியில் ஆர்வமுள்ள பெற்றோர்கள் அனைவருக்கும் மிகவும் பயன்படும்.” என்றார்.

முதல் பிரதியை நூலாசிரியரிடமிருந்து இந்நூலின் ஏக விநியோகஸ்தர் ஆன பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர் பூபாலசிங்கம் ஸ்ரீதரசிங் பெற்றுக் கொண்டார்.


சிறப்புப் பிரதியை பேராசிரியர் சபா ஜெயராசா நூலாசிரியரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

நினைவுப் பேருரை ஆற்ற இருந்த பேராசிரியர்.இரா.சிவச்சந்திரன் விமானசேவை அன்று திடீரென தடைப்பட்டதால் வரமுடியாது போயிற்று.

பேராசிரியர் சோ.சந்திரசேகரன் உரை
அதை ஈடுசெய்யும் முகமாக பேராசிரியர் சோ.சந்திரசேகரன் ‘அறிவுசார் பொருளாதாரமும் கல்வியறிவும்;’ என்ற பொருளில் மிகவும் பயனுள்ள ஒரு உரையை ஆற்றினார்.

“உலகளாவிய ரீதியில் இப்பொழுது இரண்டு சித்தாந்தங்கள் முன்னிலையில் இருக்கின்றன. 1990 களில்

‘கோளமயமாக்கல்’ முன்வைக்கப்பட்டது. இப்பொழுது ‘அறிவுசார் பொருளாதாரம்’ முக்கியமாகப் பேசப்படுகிறது.

உலக வங்கி, சர்வதேச நிதியம் ஆகிய இரண்டும் இக்கருத்துக்களை முன் வைக்கின்றன. உலகவங்கியானது உலகளாவிய ரீதியில் நிதி சார்ந்த ஆதிக்கம் செய்வதுடன் கல்வி சார்ந்த சித்தாந்தத்தையும் முன்நிலைப்படுத்துகிறது. இதற்காக அதன் கொள்கை வகுப்போர் குழுவைச் சார்ந்த கல்வியாளர்கள் இங்கு வந்து கல்வி அமைச்சில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வுக் கூட்டங்களை நடாத்துகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, தங்களது கல்விச் சிந்தனைகள் இலங்கைப் பாடசாலைகளில் இடம் பெறுகிறதா என்பது பற்றிய தரவுகளைப் பெற்று அறிக்கையாக எழுதுகிறார்கள். அதனை உலக வங்கியின் ஆய்வு மையம் பகுந்தாய்ந்து முடிவுகளை எடுக்கிறது என்றார்.

அறிவியலோடு சேர்ந்த சில ஆங்கிலச் சொற்களுக்கு அவர் அளித்த விளக்கங்கள் மிகத் தெளிவாக எல்லோருக்கும் புரியும்படி இருந்தது.

“அறிவின் அடிப்படை Data ஆகும். இதனைத் தரவு எனச் சொல்லலாம். தரவை வழங்குபவர் தரவாளர் ஆவார். தரவுகளைப் பெற்று ஆய்ந்து தரும் போது அது தகவல் (Information) ஆக மாறுகிறது.

அத்தகைய தகவல்கள் நிறைய உள்ளவரை அறிவுள்ளவர் அதாவது அறிஞர் எனலாம். அறிவின் உச்சநிலையை ஞானம் என்பர். ஞானத்தின் உறைவிடமாக விளங்குபவர் ஞானி” என விளக்கினார்.

“அறிவு முகாமைத்துவம் என்பது ஒரு மேலைத்தேசக் கோட்பாடு. ஆனால் எல்லா நாடுகளுக்கும் பொதுவானது. மேலைத்தேச நாடுகளுக்கானது மட்டுமல்ல. ஏனைய நாடுகளும் அதற்கு மாற வேண்டும். இந்தியா, கொரியா போன்ற பல நாடுகளும் அதில் ஆர்வம் காட்டி வருகின்றன. இலங்கையிலும் அறிவியல் பொருளாதாரம் வளர வேண்டும்”; என்றார்.

“பொருள் உற்பத்தி ஒன்றே பொருளாதார வளத்தின் முக்கிய அம்சம் என ஏற்றுக் கொள்ளப்பட்டு;ள்ளது. ஆனால் எல்லா உற்பத்திக்கும் அறிவியல் தேவை. விவசாயம் திறம்படச் செய்ய அறிவியல் தேவை. மீன் பிடித் தொழிலுக்கும் அதற்கான அறிவியல் தேவை. அவ்வாறே எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அதன் முன்னேற்றத்திற்கு அத்துறை சார்ந்த ஆழ்ந்த அறிவும் தேவை என்பது மறுக்க முடியாதது” என்றார் பேராசிரியர்.

இலங்கையைப் பொறுத்த வரையில் உலகளாவிய ரீதியில் கிடைக்கப் பெற்ற விஞ்ஞான தொழில் நுட்ப அறிவை உள்வாங்க வேண்டும். அதற்கேற்ற கல்வி முறை தேவை. பழைய கால முறைகள் பயனற்றது. உதாரணம் Assesment of knowledge என்றார். அறிவு, ஞானம் போன்றவை யாவும் பல்கலைக்கழக சமூகம் மட்டும் பெற்றால் போதாது. ஏனையோருக்கும் பரப்ப வேண்டும் என்றார்.
இன்றைய பல்கலைக் கழகங்கள் உலகளாவிய ரீதியில் கிடைக்கும் அறிவை

1. உள்வாங்க வேண்டும்
2. சமூகத்தில் பரப்ப வேண்டும்
3. புதிய அறிவை உருவாக்க வேண்டும், அல்லது மேம்படுத்தவும் கூர்மையாக்கவும் வேண்டும்
4. அதை நடைமுறைப்படுத்தவும் பயன் பயன்பாடு உடையதாக மாற்ற வேண்டும்.

இதை நடைமுறைப்படுத்துவதற்காக சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வழமையான கல்விக் கூடங்களுக்கு மாற்றாக Thinking Schools உருவாக்கியுள்ளார்கள். மாணவர்கள் சுயமாகச் சிந்தித்துச் செயலாற்றுவதற்கான கல்வி அங்கு கிடைக்கிறது.

இலங்கையில் 40 லட்சம் மாணவர்கள் இருக்கிறார்கள். 10 வருடங்களில் இவர்கள் கல்வியை முடித்து வெளியேறும்போது வேலை செய்ய வேண்டும். அப்பொழுது அரசதுறைகளில் 15 சதவிகிதத்தினரையே உள்வாங்க முடியும். 35 சதவிகிதத்தினர் தனியார் துறையில் இறங்குவர். மிகுதி 35 சதவிகிதம் சுயதொழில் புரிய வேண்டியிருக்கும்.

எனவே தனியார் துறையின் தேவை கருதி அதற்கேற்ற கல்வியைக் கொடுக்க வேண்டும்.

இன்று தனியார் துறையினர் எதிர்பார்ப்பது என்ன?

1. ஆங்கிலம் தெரிய வேண்டும்
2. தொடர்பாடல் திறன் (Communication Skill) வேண்டும்.

இன்று சராசரியாக இலங்கை மாணவர்களின் கல்வித் தகமை 9ம் வகுப்பு மட்டுமே. இது போதாது. உயர வேண்டும்.

ஒரு காலத்தில் இலங்கையில் சுயமொழிக் கல்வியும், இலவசக் கல்வியும் முக்கியமாகக் கருதப்பட்டன. பெயர் பெற்று இருந்தன. அது ஒரு நேரத்தில் முக்கியமாக இருந்தது. ஆனால் இன்று ஆங்கிலக் கல்வியின் அவசியம் உணரப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே தனியார் கல்வி முறை முக்கியத்துவம் பெறுகிறது.

இவ்வாறு இன்றைய கல்வி பற்றி ஒரு பயனுறு சொற்பொழிவை நடாத்தினார். திடீரென பேச அழைத்தபோதும் மிகவம் சரளமாகவும், தரவுகள் நிநை;ததாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது.

மறைந்த ஆசான் கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் மாஸ்டர் அவர்கள் மறைந்து வருடங்கள் பல ஆயின போதும் அவர் எமது சமூகத்தின் முன்னேற்றத்திற்கு ஆற்றிய பணிக்கு நன்றி கூறும் வண்ணம் மண்டபம் நிறைய அறிஞர்களும் கல்விமான்களும் கலந்து கொண்டனர்.

பேராசிரியர் சபா.ஜெயராசா, விரிவுரையாளர்களான ரவீந்திரன், தனராஜ், சட்டத்தரணி சோ.தேவராசா, வீரகேசரி ஆசிரியர் வீ.தேவராஜ், போன்ற பலரும் கலந்து கொண்டனர். சிலர் தமக்கும் அவருக்கும் இடையேயான உறவை நினைவு கூர்ந்து கருத்துரைத்தனர். அவரது மகள், மருமகன், பேரக் குழந்தைகள் உட்பட்ட குடும்ப அங்கத்தவர்கள் கலந்து கொண்டதும் நிகழ்ச்சிக்கு பெறுமதி சேர்த்தது.

= எம்.கே.முருகானந்தன்
நன்றி பதிவுகள் pathivukal.com

Read Full Post »

>வலைப்பதிவர்களுக்கும் அச்சு இலத்திரனியல் ஊடகங்களுக்கும் இடையிலான சந்திப்பு இருக்கிறம் சஞ்சிகையின் ஏற்பாட்டில் அவர்களது காரியாலயத்தில் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.

அது பற்றிய பதிவுகளை விரைவில் எமது வலைப்பதிவு நண்பர்கள் வலையேற்றுவார்கள்.

அதற்கிடையில் எனது கமராவில் சிக்கிய சில புகைப்படங்களைப் பார்த்து ரசியுங்கள்.

கூட்டம் ஆரம்பம் ஆவதற்கு முன்னர் வெளியே காத்திருக்கும் நண்பர்கள்.



மழை தூறிக் கொண்டிருப்பதால் குடையுடன் வருகின்றார்கள்

இணையத் தொடர்புக்கு முயற்சிக்கிறார்கள்

இருக்கிறம் வளாகத்தின் ஒரு அழகிய தோற்றம். இந்தக் கூடாரத்துள்தான் கூட்டம் நடப்பதாக இருந்தது. மழை வந்ததால் அவசர அவரமாக உள்ளே சென்றோம்.

உள் மண்டபத்துள் கூடியிருக்கிறோம்





இருக்கிறம் நிர்வாக ஆசிரியரும் விழுதுகள் நிறுவனத்தைச் சேர்ந்தவருமான சாந்தி சச்சிதானந்தன் அறிமுக உரை ஆற்றுகிறார்.


மீண்டும் கூடல் வெளியே உள்ள கூடாரத்திற்கு நகர்ந்துவிட்டது.

நண்பர் லோஷன் உரையாற்றுகிறார்


நண்பர் மருதமூரான் உரை ஆற்றுகிறார்.



இருக்கிறம் சஞ்சிகையின் இணையாசிரியர் அருளானந்தம் சஞ்ஜீத் உரையாற்றுகிறார்.

சுடரொளி ஆசிரியர் வித்தியாதரன் உரையாற்றுகிறார்.


பலரது பெயர்கள் விட்டுப் போயிற்று. மன்னிக்கவும். சரியாகத் தெரியாததால் பதிவிட முடியவில்லை.

ஏனைய பதிவுலக நண்பர்கள் விரிவாக எழுதவும் படங்களைப் பதிவேற்றவும் செய்வார்கள்.

Read Full Post »

>நண்பர் கே. எஸ். சிவகுமாரன் அவர்களது பிறந்த தினம் இன்றாகும். அவருக்கு எனது மனம் நிறைந்த பிறந்த தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்கிறேன். தொடர்ந்து நல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து தனது கலை இலக்கியப் பணிகளைத் தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன்.

மட்டக்களப்பை பிறப்பிடமாகக் கொண்ட இவர் 1936ம் ஆண்டு அக்டோபர் முதலாம் திகதி பிறந்தார். .

கலை இலக்கிய ஊடகத் துறையில் முன்னணியில் நிற்கும் இவர்
ஒரு பத்தி எழுத்தாளர், திறனாய்வாளர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், அத்துடன் ஆங்கிய ஆசிரியராகவும் கடமை ஆற்றியுள்ளார்.

இலங்கை வானொலியில் தமிழிலும், ஆங்கிலத்திலும் நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறார்.

ஈழத்தின் குறிப்பிடத்தக்க திறனாய்வு எழுத்தாளர்களில் ஒருவர்.

ஆங்கிலத்திலும் எழுதும் ஈழத்து எழுத்தாளர். தன்னைப் பத்திஎழுத்தாளர் என்று கூறிக் கொள்வார். ஆயினும் அவருள் புதைத்திருக்கும் ஆற்றல்கள் அனேகம்.

இவர் கவிதைகள், சிறுகதைகளும் எழுதியுள்ளார்.


திரைப்படங்கள், திரைக்கலை தொடர்பான அவரது எழுத்துக்கள் காரணமாக இலங்கையில் திரைப்படம் பற்றிய தெளிவு பலருக்கும் ஏற்படக் காரணமாக இருந்துள்ளார். திரைப்படங்களில் உள்ள ஈடுபாடு காரணமாக வருடாவருடம் இந்தியாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளச் செல்வதுண்டு.

ஆங்கிலத்தில் நான்கு நூல்களையும், தமிழில் 17 நூல்களும் எழுதியிருக்கிறார்.

மிக அமைதியாகவும் மென்மையாகவும் பேசும் இவர் மற்றவர் மனங்களைப் புண்படுத்தி அறியாதவர். தனது எழுத்துக்கள் ஊடாக பலரது படைப்புகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வரும் அரும் பணி ஆற்றுகிறார்.

பதிவுலக நண்பர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து மகிழ்விக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

Read Full Post »

>ஹாட்லிக் கல்லூரியின் ஆசிரியரான திரு பா.இரகுவரனின் 50ஆண்டு பிறந்த தினம் நேற்று முன்தினமாகும் (11.09.2009) . இணைய நண்பர்கள் சார்பில் அவருக்கு பிந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது கல்விப் பணியும் கலைப் பணியும் மேலும் சிறப்புற வாழ்த்துகிறேன்.

களுத்துறையில் கற்பித்துக் கொண்டிருந்த அவர் Training College ல் இருந்த காலம் முதல் எனக்கு அறிமுகம். 1985 ல் இருக்கும் என நம்புகிறேன். அறிமுகப் படுத்தி வைத்தவர் மற்றொரு நண்பரான து.குலசிங்கம். அவர்தான் உதயன் புத்தக நிலைய அதிபர். டவுனில் புத்தக நிலையம் நடாத்தி வந்தவர் அது பாதுகாப்பு வலையமாக மாறிய பின்னர் எனது டிஸ்பென்சரியின் ஒரு பக்கத்தில் புத்தக நிலையத்தை தொடர்ந்து நடாத்தியது பலருக்கு ஞாபகம் இருக்கலாம்.

இரகுவரன் ஒரு பயிற்றப்ட்ட விஞ்ஞான ஆசிரியர். ஆயினும் கலைத்துறையில் இருந்த ஈடுபாடுபாடு காரணமாக நாடகமும் அரங்கியலையும் பிரதான பாடங்களாக எடுத்து வெளிவாரியாக கலைத்துறை பட்டதாரி ஆனார். திரு.பாலசிங்கம் காலத்தில் ஹாட்லிக் கல்லூரிக்கு வந்தார்.

ஹாட்லியிலும் முக்கியமாக வடமராட்சி பிரதேசம் எங்கும் சிறுவர் நாடகத் துறையில் பேசப்படத்தக்க ஒருவராக விளங்குகிறார். ஹாட்லியில் மாத்திரமின்றி தும்பளை கலட்டி ஞானசம்பந்தர் கலா மன்றத்திலும் இவரது நாடகங்கள் வருடா வருடம் ஆண்டு விழாவின் போது நடை பெறுவது வழக்கம்.

பிரபலமான ஒரு நாடகம் தப்பி வந்த தாடி ஆடு. இது பல தடவைகள் மேடையேறியது.

இவரது இலக்கிய ஆர்வம் அபரிமிதமானது.

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இருக்கும் போதே அதன் மாணவர் மன்றத்தில் முக்கிய பங்கு வகித்தார். ஏதாவது பயனுள்ள, நிலைத்து நிற்கக் கூடிய வேலையாகச் செய்ய வேண்டும் என்று யோசித்த போது அது ‘போதை’ யில் முடிந்தது.

வழமையாக மாணவர் சங்கங்கள் சஞ்சிகைகளை வருடாந்தம் வெளியிடுவார்கள். அதற்குப் பதிலாக போதை என்று ஒரு நூலை இவரது முயற்சியினால் தயாரித்து வெளியிட்டார்கள். அதில் நான் பாலியல் நோய்கள் பற்றியும், டொக்டர்.பொன்.சுகுமார் போதைப் பொருட்கள் பற்றியும் எழுதியிருந்தோம். புகைத்தல் பற்றியும், மது பாவனை பற்றியும் கட்டுரைகள் இடம் பெற்றன.

அவற்றை யார் எழுதினார்கள் என்பது உடனடியாக ஞாபகத்திற்கு வரவில்லை. அறிவியல் உலகில் மிகவும் வரவேற்புப் பெற்ற நூல் அது.

காலச்சுவடு கண்ணன் அதனை மறு பிரசுரம் செய்ய விருப்பம் கொண்டு குலசிங்கத்தைக் கேட்டிருந்தார். பலர் சம்பந்தப்பட்ட நூல். எல்லோரிடமும் அனுமதி பெறுவது அக் காலகட்டத்தில் சிரமமாக இருந்ததால் அந்த மறு பதிப்பு திட்டம் நிறைவேறவில்லை.

மற்றொரு பிரமாண்டமான பணியும் இரகுவரனால் நிறைவேற்றப்பட்டது. ‘செட்டி வர்த்தகன்’ என்ற கூத்து அவரால் மீள் அரங்கேற்றப்பட்டது. இது ஒரு வாழைக் குத்திக் கூத்தாகும். இது வாழைக் குத்திகளில் விளக்கேத்தி இரவிரவாக ஆடுவதாகும். நீண்ட காலமாக வழக்கொழிந்து கிடந்த இந்தக் கூத்தை அவர் மீள அறிமுகப்படுத்தியமை பெரு வரவேற்பைப் பெற்றது.

குழந்தை சண்முகலிங்கம், கலாநிதி ஞானகுமாரன், பேராசிரியர் சிவத்தம்பி அடங்கலான யாழ் பல்கலைக் கழக சமூகத்தைச் சேர்ந்த பலரும் இதனைப் பார்வையிடுவதைப் தனி பஸ் பிடித்து பார்க்க வந்தமை மறக்க முடியாததாகும். வடமராட்சியில் நாம் நடத்தி வந்த அறிவோர் கூடல் நிகழ்வுகளின் அங்கமாக இது அமைந்தது.

இக் கூத்தின் படங்களும் வீடியோ பிரதியும் கைவசம் இருந்தன. குலசிங்கம் இந்தியா சென்ற போது இவற்றைப் பார்த்த கன்னட சாஹித்திய அக்கடமி தலைவரும், மத்திய சாஹித்திய அக்கடமி குழு அங்கத்தவருமான ஒருவர் இவற்றை இந்தியாவில் கொண்டுவந்து போடுமாறு கேட்டுக் கொண்டார். அதற்கான செலவையும் அவர்களே பொறுப்பேற்பதாகக் கூறப்பட்டது. ஆயினும் அதுவும் நாட்டு நிலைமையால் சாத்தியப்படாது போனமை துரதிஸ்டமே.

இவரது நாடன நூல் பற்றிய எனது கட்டுரையைப் பார்க்க கீழுள்ள தளத்திற்கு செல்லவும்.

http://suvaithacinema.blogspot.com/2007/12/blog-post_23.html

இரகுவரனின் தாயார் அண்மையில் காலமாகிவிட்டார். அன்னையின் நினைவாக அவர் மிகவும் வித்தியாசமான, பிரயோசமான நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். பிராமணவீதி கமலாம்பாள் சரித்திரம் என்பதே அது. இதில் பிராமணவீதியின் பல சரித்திரத் தகவல்கள் உள்ளன. இலங்கையின் 1800 களில் ஸ்தாபிக்கப்பட்ட கலாநிதி யந்திரசாலை அச்சகம் பற்றிய அரிய தகவல்களும் அடங்குகிறது. அதன் முகப்புவாசல் தோற்றம் பின் அட்டையை அலங்கரிக்கிறது.

2001ம் ஆண்டில் தும்பளைக் கிராமம் பற்றிய ஆவணமான ‘ஊரும் வாழ்வும்’ என்ற நூலை வெளியிட்டுள்ளார்

இப்பொழுது பருத்தித்துறையின் சமூக வரலாறு பற்றிய ஒரு நூல் எழுதுவதற்காக கள ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார். முதியோர்களின் அனுபவ அறிவுகளை சேகரித்து வருகிறார்.

சில நல்ல சிறுகதைகளை எழுதிய போதும் இப்பொழுது நாடகமும் கள ஆய்வுகளுமே இவரது விருப்புக்குரிய விடயங்களாக இருக்கின்றன.

இவரது மனைவி ரஞ்சிதா ஒரு ஆசிரியை. கணவனை தனது பணிகளில் முழுமையாக ஈடுபட விடுதற்காக வீட்டுப் பணிகள் அனைத்தையும் தனது தலையில் சுமப்பவர். மூத்த மகளும் இளைய மகனும் ஆக இரு பிள்ளைகள்.

இவரது மனைவியின் தாய் தந்தையரும் அண்மையில் காலமாகிவிட்டனர். இதனால் 50வது பிறந்ததினம் கொண்டாடப்படவில்லை. பதிலாக அவர் தான் கடமைப்பட்ட நண்பர்கள் உறவினர்களுக்கு பரிசளித்து மகிழ்ந்ததாக நண்பர்களிடம் இருந்து தகவல் கிடைத்தது.

இவர் எனது நெருங்கிய நண்பர் என்று சொல்வதில் மிகவும் பெருமையடைகிறேன். அவர் நீண்ட காலம் வாழ்ந்து கலைப்பணி ஆற்ற வாழ்த்துகிறேன்.

எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »