Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘ஏதனம்’ Category

ஏதனத்தின் ஊடாக சாதீய அடக்குமுறை- தெணியானின் புதிய நாவல்

 

தெணியானின் ஏதனம் நாவலைப் படித்து முடித்த போது பெரும் குற்ற உணர்வுக்கு ஆளானேன்.

scan_20170101

சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் எனது பதின்ம வயதுகளில் நான் எமது ஊர் எல்லையில் உள்ள வீரபத்திர கோவிலடியால் போகும் வேளைகளில் அந்தக் கோயில் வெளிவீதி கிணற்றடியில் சில பெண்கள் குடங்களுடன் நிற்பார்கள். சிலதருணங்களில் ஆண்களும் கூட நிற்பதுண்டு. தங்கள் நாளாந்த தேவைகளுக்கான நீரைப் பெறுவதற்காக. தண்ணீர் அள்ளித் தருமாறு பணிவாகக் கேட்பார்கள். தண்ணீருக்காக அவர்கள் படும்பாடு பரிதாபமாக இருக்கும்.

அவர்கள் பகுதியில் கிணறுகள் இல்லை. மிகவும் மேடான பகுதி என்பதால் ஆழமாக கிணறு வெட்ட வேண்டும். சொந்தக் கிணறு வெட்டுவதற்கான பொருளாதார வசதி அவர்களுக்கு இல்லை.

‘இதுகளோடை மினக்கட நேரமில்லை’ என்று சொல்லியடி விரைந்து ஓடும் பல பெரிய மனிதர்களைக் கண்டிருக்கிறேன். பலர் மணிக்கணக்காக தண்ணீருக்காக பரிதாபமாகக் காத்து நிற்கவும் நேரும்.

கேட்பார்களோ இல்லையோ யாராவது குடத்துடன் அக் கிணற்றடியில் நின்றால் தண்ணீர் அள்ளிக் கொடுக்காமல் நான் போனதில்லை. தண்ணீருக்காகத் துன்பப்படும் அவர்களுக்கு நான் ஒரு பெரிய சேவையை செய்கிறேன் என்ற மனத் திருப்தியுடன், பெருமிதத்துடன் தான் நான் அதைச் செய்திருந்தேன்.

அவர்களை நீர் அள்ளவி;டாது சமூக ரீதியாக தடுத்திருப்பதானது அவர்களது நாளாந்த வாழ்க்கையை எந்தளவு பாதித்திருக்கும், அதற்கு மேலோக அவர்களது சுயமரியாதiயை, தன்மான உணர்வை எந்தளவு புண்படுத்திருக்கும். அது தவறானது. அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் போராட வேண்டும் என்றெல்லாம் அக்காலத்தில் சிந்தித்து செயற்பட வில்லை என்பதை நினைக்கவே எனக்கு குற்ற உணர்வு ஏற்பட்டது.

அக்கால கட்டத்தில் வடமராட்சி மத்திய பகுதியில் இருந்த அரசாங்கப் பாடசாலையின் அதிபர் முற்போக்கு கருத்துகள் உள்ளவரான போதும், பாடசாலை கிணற்றில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தண்ணி அள்ளுவதற்கு, எழுதப்படாத சட்டம் தடையாக இருந்தபோதும் வெளிப்படையாக அவரால் குரல்கொடுக்க முடியாத சமூகச் சூழலே இருந்தது என்பதை தெணியானின் நாவலைப் படித்தபோது புரிந்து கொண்டேன். இந்நிலையில் சிறுவனான நான் என்ன செய்திருக்க முடியும் என்று மன ஆறுதல் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

தண்ணீர் அள்ள மட்டுமல்ல கிணற்றுப் பத்தலுக்குள் கூட அவர்கள் கால் வைக்க முடியாத நிலை அன்று நிலவியது.

தங்கள் மீது வன்முறை பாவிக்கப்படும் என்பதை அந்த அரசாங்கப் பாடசாலை மாணவர்கள் உணர்ந்தும் துணிவுடன் கிணற்றில் அள்ள முயன்று பெரும் இழுபறிகளின் பின்னரே தங்கள் உரிமையைப் பெற முடிந்தது.

தெணியானின் பெரும்பாலான படைப்புகள் போலவே இது சாதீயத்தை கருவாகக் கொண்ட ஒரு நாவல்தான். வடமராட்சி பிரதேசத்தின் ஒடுக்கபட்ட மக்களின் வாழ்வின் பாடுகளைக் பேசும் நாவல்.

ஈழத் தமிழர்களான தங்களுக்குள் ஒன்றான ஒரு சமூகப் பிரிவை அடக்கி ஒடுக்குவதற்கு யாழ்ப்பாண மேல்சாதி சமூகமானது தண்ணீரை எவ்வாறு ஒரு வலுமிக்க ஆயுதமாக பயன்படுத்தியது என்பதை இந்தப் படைப்பின் மூலம் உணர வைக்கிறார் தெணியான். பாதிக்கபட்டவர்களின் ஆக்கிரோசமான எதிர்குரலாக அல்லாது சமூகத்தில் நிலவுவதை உன்னிப்பாக அவதானித்து நிதானமாகவும் அழகாகவும் ஒழுங்கு ரீதியாகவும் பதிவு செய்வு செய்த நாவலாசிரியர் பாராட்டப்பட வேண்டியவராகிறார்.

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னான காலகட்டத்தில் நாவல் ஆரம்பமாகிறது. தாழ்த்தப்பட சமூகத்தில் ஏழ்மையில் வாடும் சிறுவர்களின் வாழ்க்கை சித்தரிப்புடன் களை கட்டுகிறது. உண்மையில் நாவலின் ஆரம்ப பகுதிகள் மிகவும் சுவார்ஸமாகவும் சொல்லப்படுகிறது. தருமன் என்ற பாத்திரம் அற்புதமாக படைக்கப்பட்டு இருக்கிறது. நாவல் முடிந்த பின்னரும் மனதில் நிற்கிறான்.

தருமன் தான் பிரதான பாத்திரம் என்பதான உணர்வு நாவலின் அரைவாசிப் பகுதி வரையில் எனக்கு இருந்தது. ஆயினும் பின்னர் கோபாலன் கதையை ஆக்கிரமித்துக் கொள்கிறார். சமூகத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை வெளிப்படுத்தவும், கதையின் அடிப்படைக் கருவிற்கு வலு சேர்க்கவும் இந்த மாற்றம் அவசியம் எனப் புரிந்து கொள்ள முடிகிறது. இருந்தபோதும் கதையின் உண்மையான நாயகன் கால மாற்றங்களுக்கு ஏற்ப வேறு வேறு முகங்களுடன் மேடையேறும் ‘ஏதனம்’தான்.

கற்றலில் ஈடுபாடற்று பணிசுக்காக மட்டும் பாடசாலை செல்லுமளவு தருமனை வறுமை வாட்டுகிறது. தகப்பன் நல்ல தொழிலாளியான போதும் குடியில் மூழ்கிவிடுவதால் தாய் கூலி வேலை செய்தே குடும்பத்தை ஓட்டுகிறாள். வயிற்றை நிறைக்க முடியாதளவு வறுமையில் குடும்பம் உழல்கிறது.

கோவிலில் சர்க்கரைத் தண்ணி ஊற்றுவதைக் அறிந்த தர்மன் பாடசாலையிலிருந்து கள்ளமாகக் கிளம்பி ஓடி வயிறுமுட்ட சர்க்ரைத் தண்ணீர் அருந்துகிறான். அவன் மாத்திரமின்றி இன்னும் பல மாணவர்கள் அவ்வாறு பாடசாலைக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு ஒடி வருவதைக் காணும் போது அந்தச் சமூகத்தில் அன்று நிலவிய வறுமையின் கோரமுகம் புரிகிறது.

அவர்களுக்குச் சர்க்கரைத் தண்ணீரை எந்தப் பாத்திரத்திலும் ஊற்றிக் கொடுக்கமாட்டார்கள். பானம் உள்ள பாத்திரத்தை இவர்களது கையில் படாதவாறு உயர்திப்பிடித்து சரித்து ஊற்றுவார்கள். இவர்கள் கையில் ஏந்திக் குடிப்பார்கள். கைமண்டை என்று தெணியான் சித்தரிக்கிறார்.

கைமண்டையே நீரருந்தும் ஏதனமாகிறது. சுர்க்கரைத் தண்Pர் மட்டுமே இவர்களுக்கு கிடைக்கும். மோர்த்தண்ணியும் ஊறுகாய்தண்ணியும் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.

‘தருமன் குடிக்கிறான். குடிக்கிறான். குடித்துக் கொண்டே இருக்கிறான்.’

‘டேய் .. நீ குடிக்கக் குடிக்க எங்கையடா போகுது! ஊதென்ன வயிறோ … பீப்பாவோ.’ என்று ஊற்றுபவர் ஏளனம் செய்கிறார்.

ஆயினும் அதைச் சட்டை செய்யாது மேலும் திட்டுகளை வாங்கிக் கொண்டு, ஒரு போத்தலில் சர்க்கரைத் தண்ணி எடுத்துப் போய் வெறுவயிற்றோடு கிடக்கும் தாய்க்குக் கொடுக்க அவன் மனம் அவாவுகிறது. இதைப்; பார்க்க எங்கள் மனம் வெம்பி அழுகிறது.

கால ஓட்டத்தில் சமூக மாற்றங்கள் ஏற்பட்டன, வேகமாக அல்ல மிக மிக மெதுவாக. அதுவும் வலாத்காரமாக மாற்றப்படும் சூழலில் ஏதனங்கள் மாறுகின்றன. கைமண்டை, பச்சோலைப் பிளா, பனஞ் சிரட்டை, சோடாப் போத்தல், அலுமினிய் பேணி, கிளாஸ், மாபிள் கோப்பை, எவர்சில்வர் டம்ளர் எனப் படிப்படியாக மாறவே செய்கிறது.

பருகுவதற்கான ஏதனங்கள் மாறிய போதும், மனித மனங்கள் மாறவில்லை. எவ்வாறு குடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதன் மூலமும் தங்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தவே உயர்சாதிச் சமூகம் முயல்கிறது.

‘தமிழ் நாட்டில் எல்லோரும் எவர்சில்வர் கப்பையே உபயோகிக்கிறார்கள். பாலலென்ன மோரென்ன, தேநீரென்ன கப்பிலை வாய் வைச்சுக் படிக்கும் பழக்கம் அங்கே இல்லை..’ என்று வீட்டுக்காரர் சொல்லி முடிக்க மகள் எவர்சில்வர் கப்பில் தேநீரோடு வருகிறாள்.

ஆம் நாகரீகமாக சாதீயத்தை காக்க முனைகிறார் வீட்டுக்காரர். வாய்வைத்துக் குடித்து எங்கள் ஏதனத்தை தீட்டுப்படுத்தி விடாதே என்பதை சொல்லாமல் சொல்கிறார்.

நல்ல சாதிக்காரனுக்கும் குறைந்த சாதிக்காரனுக்கும் ஒரே விதமான கோப்பையில் தேநீர் கொடுத்தாலும் குறைந்த சாதிக்காரர் குடித்த கோப்பைக்கு அவமானம் செய்வதன் மூலம் அவர்களை இழிவுபடுத்தி இன்றும் சாதீய உணர்வு செத்துவிடாது இருப்பதை நாவலின் கடைசி அத்தியாத்தின் இறுதிப் பகுதியில் காண்கிறோம். எவ்வாறு என்பதை நீங்களே வாசித்துப் பாருங்கள்.

நாவலின் ஆரம்பம் நன்கு ரசனையோடு அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சிறுவயது அனுபவங்கள் சொல்லப்பட்ட முறையானது வாசகனை அந்தச் சூழலுக்குள் நனைந்து ஊற வைக்கிறது. ஆயினும் மேலே செல்லச் செல்ல, சற்று வேகமாக கதையைச் சொல்லி முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் சொல்லப்பட்டது போன்ற உணர்வு எழுகிறது. கருத்திற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பாத்திர மற்றும் களச் சித்தரிப்பிற்கு கொடுக்கப்படவில்லை. செழுமை பிற்பகுதியில் தளர்ந்து விடுகிறது.

தெணியானது இந்த நாவலானது சுவையான நாவலாக மட்டும் இல்லை. அந்த காலகட்டம் பற்றிய பல செய்திகளையும் தகவல்களையும் கதை முழுவதும் தூவிச் செல்கிறது. ‘யாழ்ப்பாண நகரத்தில் தேநீர்க்கடைப் பிரவேசம் நடைபெற்று பதினொரு ஆண்டுகள் கழிந்த பின்னரும் வடமராட்சியில் உள்ள தேநீர்க்கடைகள் திறந்தவிடப்படவில்லை’ என்பது உதாரணத்திற்கு ஒன்று.

இடதுசாரிக் கட்சிகளின் அக்கறை, மக்கள் சபை தோற்றம், முடி வெட்டும் சலூன்களிலும் பாகுபாடு, ஆலயப் பிரவேசம், தேநீர் கடைகளை திறந்துவிடுதல், சாதியக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள் போர்ச் சூழல் காரணமாக பின்னடைவது போன்ற பலவேறு தகவல்கள் நாவல் முழுவதும் நிறைந்து கிடைக்கின்றன.

எனவே, இதை ஒரு வெறும் கதையாக, நாவலாக, படைப்பிலக்கியமாக மட்டும் பார்க்க முடியவில்லை.

வடமராட்சி பிரதேசத்தில் சாதி ஆதிக்கம் நிலவிய முறையையும் அது எவ்வாறு படிப்படியாக நீர்த்துப் போனது பற்றியும் பேசுpறது. நீர்த்தது போல மேலோட்டமாக சலனமின்றிக் கிடந்தாலும், நீறுபூத்த நெருப்பாக உள்ளுர அரித்துக்கொண்டிருப்பதை பேசுகிறது. இருளுக்குள் மறைந்திருக்கும் கள்வன் போல அசுமாத்தமின்றி சமூகத்தை அரித்துக் கொண்டே இருக்கிறது என்பதைப் பேசும் ஆவணமாகவும் கருத முடியகிறது.

ஊர் எல்லைகளைக் கடந்து மலையகத்திலும், ஆட்சி மாற்றங்களை மீறி போராளிகளின் காலத்திலும் எவ்வாறு சாதீ ரீதியான பாகுபாட்டைக் தமிழ் சமூகம் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தது, இருக்கிறது என்பதை பதிவு செய்யும் ஆவணமாக இருக்கிறது.

scan_20170101-2

தெணியான் சோர்வின்றி இயங்கும் ஒரு படைப்பாளி சிறுகதை, குறுநாவல், நாவல் இலக்கியக் கட்டுரைகள், மேடைப் பேச்சு என தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர்.

இது அவரது 22வது நூல் என நினைக்கிறேன். அட்டைப்படத்தை ஜீவநதி ஆசிரியர் பரணீதரன் அழகாக வடிவமைத்துக் கொடுத்துள்ளார். மறைந்த எழுத்தாளர் ராஜ சிறீகாந்தன் நினைவாக வெளிவந்திருக்கிறது.

பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியீடாக வந்திருக்கிறது. விலை ரூபா 300 மட்டுமே.

தொடர்புகளுக்கு

பூபாலசிங்கம் புத்தகசாலை

202,செட்டியார் தெரு

கொழும்பு 11.

எம்.கே.முருகானந்தன்

0.00.0

Read Full Post »