Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘நடா சுப்பரமணியம்’ Category

மனதோடு பேசுதல் மனதிற்கு இனியது. மன நிறைவைத் தருவது. நினைவுகளை மீட்பது. மற்றவர் மனம் நோக வைக்காதது. அதே நேரம் மற்றவர்களால் இடையூறு செய்ய முடியாததும் கூட. அத்தோடு வாழ்வின் கடந்த அலைகளில் மீண்டும் நீந்திச் செல்வது போன்ற இனிய சுகம் வேறு எதிலுமே கிட்டாது.

20140919_122517-001

நடா சுப்பிரமணியம் தன் மனதோடு தான் பேசியவற்றை முதலில் முகப் புத்தகத்திலும் இப்பொழுது நூல் ஊடாக சமூகப் பரந்த வெளியில் சஞ்சரிக்க விட்டிருக்கிறார்.

இவரது கவிதைகளின் முக்கிய அம்சம் அவை மென்மையானவையாக இருப்பதுதான். ஆரவாரம், வீர முழக்கங்கள், தூற்றல்கள், நச்சரிப்பு எச்சரிப்பு போன்ற தீவிரங்கள் ஏதுமின்றி அமைதியான நீரோட்டம் போல தனது உணர்வுகளையும், இழந்த வாழ்வின் நினைவுகளைச் சுமப்பவையாகவும் அவை இருக்கின்றன.

‘.. வானில் வட்டமிட்டு பின்

கரணமடிக்கும் பட்டம் என் மனம்

நூலின் நுனியோ..

உன் நினைவுகளின் பிடியில் ….’

இவரது கவிதைகள் சிறிய சம்பவங்களின் கோவை போல பல தருணங்களில் அமைந்திருக்கும். இதனால் இதை வாசிக்கும் பலருக்கு அவை தமது வாழ்வின் பிரதிபலிப்புகள் போலவும் தோன்றலாம்.

“கவிதைகளில் சொல்லப்பட்ட சில நிகழ்வுகளும், நிகழ்ந்த இடங்களும் என் பள்ளிக் காலத்தை என் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றது. சென்ரல் தியேட்டர், வல்லிபுர ஆழ்வார் தீர்த்தத் திருவிழா போன்றவை நாம் வாழ்ந்த மண்ணின் கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்த நிகழ்வுகள். படிப்பவர்களுக்கும் இதே உணர்வு உள்ளோங்கும்” என்கிறார் மனோ தத்துவ நிபுணரான டாக்டர் வாசுகி மதிவாணன் இந்த நூலுக்கான தனது அணிந்துரையில்.

‘.. வெளிச்சத்தைத்

தொலைத்துவிட்ட

எங்கள் வெளிச்ச வீட்டின் மீது

விண்மீன்களின்

வெளிச்சம்

விழ ஆரம்பித்திருந்தது …..’

பருத்தித்துறை வெளிச்ச வீடு எவ்வாறு அவர் வாழ்வில் கலந்ததுவோ, அதுபோலவே அங்கு வாழ்ந்த எங்கள் ஒவ்வொருவருடனும் நினைவில் பயணிக்கவே செய்கிறது. இது போல ஏராளம் …

“நடாவின் மனதோடு பேசுதல் தொகுதியின் கவிதைகள் எதைப் பற்றிப் பேசினாலும் நட்பினையே முதன்மைப்படுத்துகிறது..” என்கிறார் ரவி கந்தையா தனது வாழ்த்துரையில்.

‘..பள்ளிப் புத்தகத்திற்குள்

மயிலிறகை வைத்துவிட்டு

நிமிடத்திற்கு நூறு தடவை

குட்டி போட்டிருக்கிறதா

என்று எட்டி எட்டி பார்த்திருக்கிறோம்.’

உண்மைதான் நட்புகளின் நிழல் கவிதைத் தொகுப்பு எங்கும் தொடர்வதைக் காண்கிறோம்.

நட்பு முதன்மைப்பட்டிருந்தாலும் அன்பு, காதல், நட்பு, பிரிவு, ஏக்கம், போன்ற உணர்வுகளையும் கூடவே பேசுகின்றன.

‘இந்தக் கவிதைத் தெர்கப்பு நெடுகிலும் வலிகளும், குதூகலமும், மகிழ்வும், துயரமும் காதலாகவும், நட்பாகவும் விடுதலைக்கு ஏங்கும் மனத்தோடு சஞ்சரித்துக்கொண்டே இருக்கிறது என்கிறார் ஈஸ்வர சந்தானமூர்த்தி தனது பதிப்புரையில்.

அதே கருத்தை இத் தொகுதிக்கு முன்னுரை வழங்கிய கவிஞர் மேத்தா ‘பிறந்த மண்ணையும் பிரியத்திற்குரிய மனிதர்களையும் பிரிந்து வாழும் ஏக்கம் – உணவில் கலந்த உப்பைப் போல உணர்வில் கலந்து நிற்கிறது.’ எனத் தன் மொழியில் சொல்லுகிறார்.

“எத்தனை

இனிமையான

நாட்கள் அவை ..!

இன்றும்

செவிகளில்

எதிரொலித்து வரும்…”

ஒவ்வொருவரும் தம் வாழ்வின் கடந்து வந்த இனிய காலங்களில் உவகையுறவே செய்வர்.

‘காற்றின்

சீண்டல்களில்

சிணுங்கும் தென்னைகள்..’

ஆம் நிச்சமாக  தென்னையோடும் பனையோடும் கூடவே வாழ்ந்த வாழ்வு இனிமையானதுதான்.

ஆனால் வாழ்க்கையானது இறந்த காலத்துடன் நிறைவுறும் படைப்பாக முற்றுப் புள்ளியிடப்படுவது அல்ல. அது நிகழ்காலத்திலும் தொடர்கிறது. எதிர் காலத்திலும் புதிய காட்சிகளுடன் திரை விலகக் காத்திருக்கிறது.

‘செல்வம்’ என்ற புனை பெயரிற்குள் மறைந்திருக்கும் நடா சுப்பிரமணியம் தனது இனிய கவி மொழியில் அவற்றையெல்லாம் சொல்ல வேண்டும். வாழ்ந்த நாடு மட்டுமல்லாது இப்பொழுது வாழும் மண்ணும் அவரது சொந்தத் தேசம்தான்.

அந்தப் புதிய சூழலில் அவர் இணைவதில் ஏற்பட்ட சவால்களும், அங்கு பெற்ற வெற்றிகளும், கிட்டிய புதிய உறவுகளும், அவற்றுடனான ஒட்டும் ஒட்டாத் தன்மைகளும் படைப்புகளில் வெளிவர வேண்டும். அவை வாசகர்களுக்குப் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சும்.

அதேபோல அவரது படைப்பு வெளியையும் பட்டை தீட்டி புதுப் புதுப் மெருகுகளுடன் வரக் கைகொடுக்கும் என நம்புகிறேன்.

‘.. கற்பாறையினை

பிளந்தவாறு..

பசும் புற்களே துளிர்வ்pடும்போது

எமது மனங்களில்

நட்பு துளிர் விட்டது

ஆச்சரியமானதல்ல…..’

என்ற அவரது வரிகளே, சொர்க்கங்கள் எங்கும் திறக்கலாம் எமது மனது மட்டும் பரந்த வெளிகளில் சிறைவிரிக்கத் தயாராக இருந்தால் என்பதற்கு சான்றாக அமைகிறது.

வாழ்த்துக்கள் நடா.

20140919_122621-001

நூல் :- மனதோடு பேசுதல்

நூலாசிரியர் :- செல்வன்- நடா சுப்பரமணியம்

நூலாசிரியர் தொர்பு :- 0044 7722589359. நுஅயடை :- யெனய2202ளூலயாழழ.உழஅ

பக்கங்கள் :- 152

விலை :- இந்திய ரூபா 100.00

வெளியீடு :- மகிழினி பதிப்பகம்

0.0.0.0.0

 

Read Full Post »