மிகுந்த வெக்கமாயிற்று. இலக்கிய வனாந்திரத்தில் ஒதுங்கிக் கிடக்கிறேனோ என்று என்னை நானே நொந்து கொண்டேன்.
இதுவரை இந்த சிறுகதைத் தொகுதியை படிக்காதது மட்டுமின்றி அதனைப் பற்றி அறிந்து கொள்ளவும் இல்லையே என்று மனம் ஆதங்கப்பட்டது.
பிரண்டையாறு ஒரு சிறுகதைத் தொகுதி. 12 சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. தீவகத்தில் பிறந்த ஒருவன் போரின் வலிய அலைகளால் தூக்கி வீசப்பட்டு நிரக்கதியாகி சொந்த வீட்டை இழந்து சொந்த மண்ணிலிருந்து நீங்கி அகதி முத்திரை குத்தப்பட்டு காற்றின் திசைகளில் அள்ளுண்டு தன் தலைசாய்த்து கண்மூடி ஆறுதல்தேட இடம் ஏதும் கிடைக்கிறதா எனத் தேடி அலைந்த நினைவுகளை பதிவு செய்யும் தொகுதி இது என்று சொல்லலாம்.
‘அவனது பயணங்கள் எல்லாம் ஏதோ ஒரு தரிப்பிடத்தில் முடிந்தவையாகிப் போயின. தான் பயணிப்பதாகவே பிறந்ததாகவும் தனது பயணத்திற்கு தரிப்பிடங்கள் போதுமானவையாக இல்லை எனவும் நினைத்துக் கொள்கிறான்’ இதை அவரது வாக்குமூலமாகவும் கொள்ளலாம்.
கடந்த காலத்தில் யாழ் மண்ணிலும் வன்னியிலும் கிழக்கு இலங்கையிலும் இவ்வாறு சிதறாதவர்கள் யாரும் உண்டா?. எங்கள் ஒவ்வொருவருக்கும் கூட அத்தகைய அனுபவங்களுக்கு குறைவில்லை. இடப்பெயர்வுகள் பற்றி எத்தனையோ இலக்கியப் படைப்புகள் வந்துள்ளன. அவ்வாறு இருக்கும்போது மெலிஞ்சிமுத்தனின் சிறுகதைகள் பேசப்பட வேண்டி இருப்பது ஏன்?
அது கதையின் உள்ளடக்கத்தில் அல்ல. அது சொல்லப்பட்ட முறையில் தான் முக்கியத்துவம் பெறுகிறது. பேசப்பட வேண்டியதாக போற்றப்பட வேண்டியதாக என்று கூட சொல்லலாம். மொழியை சாணை தீட்டி உணர்வுகளுக்குள் முக்குளிக்க வைக்கும் அற்புதமான படைப்பாளிகளான கதை சொல்லிகள் எம்மிடையே இருக்கிறார்கள். ஆ.முத்துலிங்கம், ஆ.சி.கந்தராஜா, மு.பொ, உமா வரதரதராஜன் என அடிக்கிக் கொண்டே போகலாம்.
ஆனால் இவர் கதை சொல்லி அல்ல. மேம்போக்காக படிப்பவர்களுக்கு அவற்றிற்குள் கதை இருப்பதை கண்டு கொள்ளவது கூட சிரமமாக இருக்கலாம். காரணம் அவரது படைப்புகளிலுள்ள கதை அம்சம் பெரும்பாலும் குறியீடாகவே சொல்லப்படுகிறது. உதாரணத்திற்கு முதற்கதை ‘புலம்பெயரும் சாமங்களின் கதைளூ’ இவ்வாறு முடிகிறது. ‘பகல் நாய் வீணியூற்றியபடியே சுருண்டு படுத்துக் கிடக்கிறது. கண்ணுக்கெட்டிய தூரத்தில் காத்திருக்கிறது ‘மறுகரை’.’. மேலோட்டமாகப் பாரக்கும்போது. வெறும் காட்சிப் பதிவு போல தென்படுகிறது.
ஆனால் தொண்ணுறுகளின் முற்கூறுகளில் யாழ் மண்ணிலிருந்து பெருநிலப்பரப்பிற்கு போவதானால் கிளாலி கடற்பரப்பை கடக்க வேண்டும் அந்த திகிலூட்டும் பயணங்களின் பின்னணியை நினைகூரும்போது ஆயிரம் ஆயிரம் கதைகள் சொல்லாமல் சொல்லப்படுகின்றன. மெலிஞ்சி முத்தனும் சொல்கிறார். இரவில் படகுகளில் மக்கள் முண்டியடித்து பயணப்படுவதும், படகுகள் ஒன்றை விட்டு மற்றது பிரிந்து செல்லாது இருக்க கயிறுகளால் பிணைக்கப்படுவதும், கடற்படைக்கு தெரியாதிருக்க வெளிச்சமின்றி படகுகுள் பயணிப்பதும், எப்படியோ மோம்பம் பிடித்த கடற்படை சுட்டுத்தள்ளுவதும், சனங்கள் மரணிப்பதும், பிணங்கள் மிதப்பதும், இவற்றெயெல்லாம் அறிந்திருந்தும் மற்றவர்கள் இறப்புக்களை மறந்து மரணதேவதை கிளாளிக் கடலில் காத்திருக்கிறான் என்பதை மனதில் ஆழப் புதைத்துவிட்டு அடுத்த நாளும் மக்கள் பிரயாணத்திற்கு முண்டியடிப்பதும்…..
கதையை வாசித்துவிட்டு கண்ணை மூடிப்படுத்துக்கிடந்தால் கதைகதையாக விரியும். நானும் அவ்வாறு பயணப்பட்டிருந்ததால் அணுவணுவாக கதையை அர்த்தப்படுத்திப் படிக்க முடிந்தது.
அவரது படைப்பாக்க முறையின் மற்றொரு முக்கிய அம்சம், தன் ஆழ்மனத்து எண்ணங்களை, தாவித் தாவிச் செல்லும் சிந்தனை ஓட்டங்களை சொல்லோவியமாக்குவதே ஆகும். தன ஆழ் மனத்தில் எழும் நினைவுகளை எண்ணங்களை சிந்தனைகளை ஒரு வரையறைக்குள் ஒழுங்குபடுத்தி சிறுகதையாகப் படைக்கிறார். அந்த எண்ண ஓட்டங்களுடன் இணைந்து பயணிக்கும் வாசகனுக்கு தன்னையும் அங்கு இனங்காண முடியும். புதிய சாளரங்களை வாசகனுக்கு திறக்க வைக்கும். தன்னைப் பற்றி மட்டுமின்றி இந்தச் சமூகம் பற்றி, இந்த தேசம் பற்றி தன்னைச் சுற்றி நடப்பவற்றின் உள்ளரசியல் பற்றி பல உண்மைகள் வெளிச்சமாகும்.
இந்த மாற்றுப் பாதையே மெலிஞ்சிமுத்தனது படைப்புகளின் ஆணிவேராக இருப்பதாகப் படுகிறது. கதை எங்கோ தொடங்கி வேறெங்கோ இழுபட்டு நகர்வதாகத் தோன்றினாலும் பூடகமாக தன் கருத்தை வெளியடவே செய்கிறது.
உதாரணமாக கொழுக்கட்டை கள்வர்கள் கதையைச் சொல்லலாம். சவீனா ரீச்சர் வீட்டில் ஒவ்வொரு பெரிய வெள்ளியும் ருசியான கொழுக்கட்டைகள் களவு போவது பற்றி சுவாரஸ்மான கதை சொல்லப்படுகிறது. கதை இப்படி முடிகிறது. ‘கொழுக்கட்டை கள்வர்களின் சடலங்களை ஓலைப் பாய்களாலும் சாக்குகளாலும் சுற்றிப் புதைத்தார்கள். டக்ளஸ் மட்டும் ‘உயிர்தெழுந்த ஞாயிறைக்’ கொண்டாடிக்கொண்டு கொழும்பில் இருந்தான்’; (பக் 16) எவ்வளவு அழகாக முடித்திருக்கிறார். சொல்லமால் சொல்லப்பட்டவை ஏராளம் தொக்கி நிற்கிறது இந்த ஒரு வசனத்தில்.
போரினதும் அதன் அவலங்களதும் பார்வையாளனாகவும் பாதிப்புக்கு ஆளானவனாகவும் இருக்கும் இந்தப் படைப்பாளி வீர வசனங்கள் பேசவோ இலட்சியங்கள் முழங்கவோ இல்லை. அரசாங்கத்தையும் மாற்று இயக்கங்களையும் வார்த்தைகளால் வறுத்தெடுக்கவும் இல்லை. நடந்தவற்றை உள்ளதை உள்ளபடி சொல்கிறார். அதனை அர்த்தப்படுத்தும் பணியை வாசகனிடமே விட்டுச் செல்கிறார்.
இல்ஹாம் ஒரு அற்புதமான கதை. முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதின் பின்னணியில் பேசப்படுகிறது. அற்புதமான முடிவு. முழு தமிழ் சமூகமுமே குற்ற உணர்வு கொள்ள வேண்டியதை சொல்லாமல் சொல்கிறது.
மீனவக் கிராமம் அவர் பிறந்தது வளர்ந்தது வாழ்ந்தது. அவர்கள் வாழ்வை மொழியை அவர்களது பாடுகளை படைப்புகளில் விரித்துச் செல்கிறார். அங்கு சமூக ஒடுக்குமுறை எவ்வாறு இருந்தது என்பதை சில வரிகளில் அவரால் சொல்லிவிட முடிகிறது.
‘அவருக்கு (தந்தைக்கு) எப்போதுமே தன் முதுகில் மீன் செதில் ஒட்டிக்கொண்டிருக்கும் உணர்வே இருந்தது.’
‘நான் பள்ளிக் கூடம்போனபோது என்னில் மீன் வெடுக்கு மணக்கிறதென்று பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் சொன்னார்கள். நான் அழுதபோது கூட என் கண்ணீரிர் வெடுக்கு மணத்தபடியே இருந்தது. பின்னர் நான் பள்ளிக்கூடத்தையே மறந்து போனேன்’; மனதை நொருங்க வைக்கும் வரிகள்.
ரசித்ததில் மற்றொன்று. சமாதான காலம் ஒன்று பற்றியது ….. ‘கொழும்பில் இருந்து வந்த பெண்கள் கல்லு வீதிகளில் குதிக்கால் உணர்ந்த பாதணிகளோடு நொடுக்கு நொடுக்கு என்று இந்தரப்பட்டு நடந்தார்கள். வுன்னியில் இருந்து வந்தவர்கள் போர்த்து மூடீக்கொண்டு திரிந்தார்கள். யுhழ்ப்பாணத்திலிருந்து வந்தவர்களோ ஏதோ மாய முடிச்சுகளை சோட்டித் துண்டுகளில் முடிந்து திரிந்தார்கள்.
‘யாராவது என்னைத் தேடலாம். ‘நாடு கடந்த அரசு பற்றி’ பேச நண்பர்கள் என்னையும் அழைக்கலாம். ஏன் பிரியமான வாசகர்களே, உங்களிடமிருந்து இப்பொழுது பிரிந்து செல்கிறேன். ஏனக்கு வேண்டியது தனிமை. பிணங்களையும் புணரும் மனநிலை கொண்ட மனிதர்களை இந்த நூற்றாண்டு கொண்டிருக்கிறது என்றால்…’ (பக்கம் 64) இதுதான் அவரது படைப்புகளின் அடிநாதமாக வீசிககொண்டிருக்கிறது என எனக்குத் தோன்றுகிறது.
வித்தியாசமான பேச்சுத் தமிழ். தீவகத்திற்கே உரியது. அழகாகக் கையாண்டிருக்கிறார். கவிதை மொழியும் ஆங்காங்கே சிலிர்க்க வைக்கிறது.
இறுதியில் வரும் இரு கதைகள் தப்பிப் பிறந்த வேர்கள் போல இந்த தொகுப்பில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. அவற்றை வாசிக்கும் கட்டுரைகளை வாசிக்கும் உணர்வே ஏற்படுகிறது. துன் நிலைப்பாட்டை தெளிவாகச் சொல்ல வேண்டும் என்பதற்காக அவசரத்தில் எழுதியதாகவே படுகிறது.
அவரது இரு கவிதைத் தொகுதிகளும் அத்தாங்கு என்ற நாவலும் வெளிவந்ததாக அறிகிறேன். ஆனால் அவை கைக்கெட்டவில்லை.
கருப்புப் பிரதிகள் வெளியீடாக 2011 மார்களியில் வெளிவந்த அருமையான நூல். இதுவரை படிக்காதது கவலை அளித்தது. நீங்களும் அதே தவற்றைச் செய்யாதீர்கள்.
இந்த நூலின் பிரதியை மட்டக்களப்பு நண்பர் திலீப்குமார் கணேசன் மூலம் பெற்றேன். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
எம்.கே.முருகானந்தன்
ஜீவநதி சஞ்சிகையில் வெளியான கட்டுரை
0.00.0