Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘மொழியும் அரசியலும்’ Category

‘..யுத்தம் முடிவடைந்து விட்டது. ஆனால் யுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் நிறுத்தப்படவில்லை..’ என்பதைத் தமிழ்தரப்பு எப்பொழுதும் கூறிக்கொண்டே வருகிறது.

ஆனால் இங்கே இதைச் சொல்லியது  ஒரு சிங்கள அறிவுஜீவியான திரு.எஸ்.ஜீ.புஞ்சிஹேவா ஆகும்.


‘மொழியும் மனிதநேயமும்’ என்ற நூலில் மேற் கூறிய வாசகங்களைக் கண்டேன். அதில் மேலும்

‘தமிழ்மொழிக்கு உரித்தான கௌரவத்தை வழங்காத எமது பழக்கதோஷம் காரணமாகவே நாம் முப்பது ஆண்டுகால துன்பியல் போரை எதிர்கொண்டோம்’ என்கிறார்.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் வெளியிடான இது, சிங்கள மொழியில் வெளியிட்டதின் மொழிபெயர்ப்பு நூலாகும். வாசிப்பு சுவார்ஸம் கெடாமலிருக்கும் வண்ணம் தெளிவாகவும் அழகுறவும் மொழிபெயர்த்தவர் திரு.எஸ்.சிவகுருநாதன் ஆகும்.

‘..எமது மொழி எமது தாயைப் போன்றது. நாம் பெற்ற அனைத்தும் மொழியை முதன்மைப்படுத்தியவையே…நாம் மொழியுடன் பிறந்து வளர்நதோம்….எமது மனிதத்துவத்தை நாம் மொழியின் மூலமே வெளிப்படுத்துகிறோம். எமது மனிதத்துவத்தின் பொதுத்தன்மை மொழி மூலம் வேறுபடுவதாகப்பட்டால் மற்றையவரின் மொழியை நாம் கௌரவிக்க வேண்டும்.

…. மேற்கண்டவாறு கௌரவிக்கப்படும் உரிமையை இழக்கும்போது குறிப்பிட்ட மொழியைப் பேசுபவர் எவ்வாறு உணர்வார். தனது தாயை, தனது ஆத்மாவை, தான் மனிதன் என்பதை புறக்கணிப்பதாகவே உணர்வார்…’ என்கிறார். ஏனைய மொழிகளை மதிக்கத்தக்க மனிதாபமுள்ள ஒருவரால்தான் அவ்வாறு கூறமுடியும்.

மொழி அதன் பண்பு, மனிதத்தன்மை, அதற்கான உரிமைகள் என மிக சுவார்சமாக மனதைத் தொடும் வண்ணம் நூல் ஆரம்பிக்கிறது. மொழி தொடர்பான சட்டங்கள் சுற்றறிக்கைகள் பற்றி நூல் விபரமாகச் சொல்கிறது.

ஒவ்வொரு மனிதனும் தனது கருமங்களை சிரமமின்றி ஆற்றுவதற்கு அவனது மொழியே வசதியானது.

  • ஆனால் எம்மொழி மூலம் ஆட்சி நடத்தப்பட வேண்டும் என்பது பற்றி  1815 கண்டி ஒப்பந்தத்தில் குறிப்படப்படவில்லை.
  • ஆயினும் ஆங்கிலமே நடைமுறையில் இருந்தது.
  • நிர்வாகத்தில் சுயமொழிப்பாவனை பற்றி 1939ல் திரு.பிலிப் குணவர்தன முதலில் குரல் எழுப்பினார்.
  • தமிழும் சிங்களமும் அரசகரும மொழியாக இருக்கவேண்டும் என்ற பிரேரணை 1945ல் கொண்டுவரப்பட்டது.
  • ஆனால் 1956ல் சிங்களம் மட்டும் அரசகரும மொழியானது.
  • 58ல் தமிழ் மொழி உபயோகச் சட்டம் கொண்டு வரப்பட்டபோதும், 1972ல் பௌத்தம் அரச மதமாகவும், சிங்களம் அரசகரும மொழியாகவும் ஆனது. பின்னர் தமிழும் நிர்வாக மொழியாக ஏற்கப்பட்டது.

சட்டங்கள் எவ்வாறு இருந்தபோதும் அவை என்றுமே சரியான முறையில் அமுல் செய்யப்டவில்லை என்பதை நூலசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.

அரசமைப்பு ரீதியாக ஏற்கப்பட்டவை அமுல் நடத்தப்படாவிட்டால் அதற்கு நீதி மன்றத்திலிருந்து நிவாரணம் கோருவுவதற்கு உதவியான சட்டங்கள் பற்றியும், ஒம்புட்ஸ்மன் இடமிருந்து நிவாரணம் பெறுவது பற்றிய விடயங்களும் இணைக்கப்பட்டுள்ன.

இறுதி அத்தியாயம் ‘மனித உரிமைப் பிரகடனமும், மொழியும்’ ஆகும். இனம், மொழி, மதம் சார்ந்த சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றிய ஐநா சாசனம் பற்றியும், அதில் இலங்கை கையெழுத்திட்டது பற்றியும் குறிப்பிடுகிறது.

“இன்று யுத்தம் இல்லை என்பது உண்மை. ஆனால் எவரும் அதில் வெற்றியடையவில்லை. மொழியை அடிப்படையாகக் கொண்டே நாம் வெற்றியை அடைய வேண்டும். தொடர்ந்தும் நிர்வாக நிறைவேற்று நடவடிக்கைகள் காரணமாக தமிழ் அல்லது சிங்கள மொழிக்கு பாகுபாடு காட்டப்படால், அது மேலும் வெடி மருந்து சேகரிப்பதற்கு ஒப்பாகும்..”

என்ற நூலாசிரியரின் கருத்து உரியவர்களின் காதில் விழ வேண்டும்.

பக்கம் சாராமல், ஒருவர் மீது குற்றம் சுமத்தாமல் ஆனால் மொழியின் பயன்பாட்டில் சட்ட ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் செய்யப்பட்ட தவறுகளை நூல் சுட்டிக் காட்டுகிறது. மொழி தொடர்பான விடயத்தை உணர்ச்சிகரமாக அல்லாமல் அறிவுபூர்வமாக அணுகுவது நூலின் சிறப்பாகும்.

இருந்தபோதும் சுவார்ஸமாக ஆரம்பித்த நூல் மொட்டையாக முடிவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இதற்குக் காரணம் முடிவுரையாக ஒரு அத்தியாயம் இல்லாததேயாகும்.

எதையும் உணர்ச்சிவயமாக அணுகப் பழக்கிவிட்ட நாம் (சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள்) பிரச்சனையை அறிவு பூர்வமாக அணுக உதவக் கூடியது இந்நூலாகும். கட்டாயம் படிக்க வேண்டியதும், பாதுகாத்து வைக்க வேண்டியதுமாகும்.

வெளியீடு:-
மாற்றுக் கொள்கைளுக்கான நிலையம்
24/2, 28  வது ஒழுங்கை
ப்ளவர் வீதி
கொழும்பு 07.
தொலைபேசி- 94(11)12565304

இணைய தளம்-  www.cpalanka.org

மின் அஞ்சல்-  info@cpalanka.org
விலை குறிப்பிடப்படவில்லை.

எம்.கே.முருகானந்தன்.

மறந்துபோகாத சில புளக்கிலும், தினக்குரல் ஞாயிறு பத்திரிகையிலும் வெளியான எனது கட்டுரை

0.0.0.0.0.0.0.0

Read Full Post »