Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘நூல் வெளியீடு’ Category

>

புலோலியூர் இரத்தினவேலோன் அவர்களது சிறுகதை தொகுப்பான “புதிய பயணம்“  நூல்  அறிமுக விழாவும் கருத்தரங்கும் எதிர் வரும் ஞாயிறு 27.03.2011 அன்று மாலை 5 மணிக்கு நடைபெற இருக்கிறது.

வெள்ளவத்தை தர்மாராம வீதியில் உள்ள பெண்கள் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற இருக்கும் இக் கூட்டத்திற்கு எழுத்தாளர் திருமதி. ராணி சீதரன் தலைமை வகிக்க உள்ளார்.

முதற்பிரதியை புரவலர் அல்ஹாஸ் ஹாசிம் உமர் அவர்கள் பெற்றுக் கொள்வார்கள்.

நூல்  நயவுரை ஆற்ற இருப்பவர்கள்

  1.  திரு.ஜி.இராஜகுலேந்திரா (சட்டத்தரணி) அவர்கள்
  2. தம்பு சிவா (தம்பு சிவசுப்பிரமணியம் எழுத்தாளர் அவர்கள்)

புதிய பயணம் அவரது மீரா பதிப்பகத்தின் வெளியீடாக சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் வெளி வந்நதது. இப்பொழுது மீள் பதிப்பாக வெளிவர இருக்கிறது.

நண்பர் புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் ஏற்கனவே தனது படைப்புகளான 5 சிறுகதைத் தொகுதிகளையும், 3 விமர்சன நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

பதிப்பாளர் என்ற முறையில் அவர்களது சொந்த முயற்சியான மீரா பதிப்பகத்தினது வெளியீடு இது. ஏற்கனவே 91 நூல்களை வெளியிட்டுள்ளார். 

புலோலியூர் இரத்தினவேலோன் எனது இனிய நண்பர். ஒரு எழுத்தாளர். அருமையான சிறுகதை ஆசிரியர். சிறந்த நூல் விமர்சனங்களைத் தருபவர். இவரது எழுத்துப் பணயம் மேலும் சிறப்புற வாழ்த்துகிறேன்.

Read Full Post »

>

அண்மையில் அடிக்கடி படிக்கக் கிடைக்கிற நல்ல எழுத்துக்களைத் தருகின்ற இளைய எழுத்தாளர்களில் ஒருவர்தான் கார்த்திகாயினி சுபேஸ். கடந்த ஒரு தசாப்தமாக எழுத்து உலகில் கவனிப்பைப் பெற்ற எழுத்தாளர். பல நல்ல சிறுகதைகளதைத் தந்துள்ளார்.
அமரர் சதாசிவம் நினைவுச் சிறுகதைப் போட்டி, செம்பியன் செல்வன் ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி ஆகியவற்றில் முதற் பரிசுகளைத் தட்டிக்கொண்டவர். மேலும் பல பரிசுகளையும் பெற்றுள்ளார்.
தினக்குரல் பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணியாற்றும் இவரதுமுதல் சிறுகதைத் தொகுதியான ‘தாய் மடி தேடி..’ வெளிவர இருக்கிறது.
எதிர்வரும் ஞாயிறு (06.03.2011) மாலை 5 மணிக்கு  வெளியீட்டு விழா நடைபெறுகிறது. வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையில் உள்ள தமிழ் சங்க சங்கரப் பிள்ளை மண்டபத்தில் நடைபெற இருக்கிறது.
தலைமை :- டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
மங்கல விளக்கேற்றல் தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவற்றைத் தொடர்ந்து வரவேற்புரையை திரு.அ.சுபேஸ் ( ஆர்த்திகன்- ஆசிரியர்) நிகழ்த்துவார்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன் அவர்களின் தலைமையுரையைத் தொடர்ந்து மூத்த எழுத்தாளர்.திரு.தெளிவத்தை ஜோசப் வெளியீட்டுரையை நிகழ்த்துவார்.
தினக்குரல் நிறுவுநர்.திரு.எஸ்.பி.சாமி அவர்கள் நூலை வெளியிட்டு வைப்பார்
பிரசித்த நொத்தரிஸ், சட்ட உதவியாளர் திரு.எம்.கேதர்மராஜா முதற் பிரதியைப் பெறுவார்
வாழ்துரைகள் 
1. திரு டொமினிக் ஜீவா (ஆசிரியர் மல்லிகை)

2. திரு.வீ.தனபாலசிங்கம் (பிரதம ஆசிரியர் தினக்குரல்)
3. டொம்டர்.தி.ஞானசேகரன் (ஆசிரியர் ஞானம்)
4. திருமதி.புஸ்பராணி நவரட்ணம் (ஆசிரியர்)

ஆய்வுரைகள்

1. திருமதி தேவகெளரி சுரேந்திரன்(விரிவுரையாளர் ஊடகவியல் கல்லூரி)
2. திரு.மு.தயாபரன்

ஏற்புரை:
திருமதி கார்த்திகாயினி சுபேஸ்

நிகழ்ச்சித் தொகுப்பு:- புலோலியூர் ஆ.இரத்தினவேலோன்.

அனைவரையும் அன்புடன் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறார்.

Read Full Post »

>

என்ன நடக்கிறது எமது நாட்டில்?

சென்ற ஆண்டு பங்குனி சித்திரை மாசங்களில் வரலாறு காணாத வெப்பம் எம்மை வாட்டி வதைத்தது. பின்னர் 62 வருடங்களுக்குப் பின்னர் சென்ற மாதம் கொழும்பில் வெப்ப நிலை 18 பாகையாகக் குறைந்து கடும் குளிரில் துன்பப்பட்டோம்.

இப்பொழுது வடக்கு கிழக்கு வடமத்திய மாகணங்களில் கடும் மழை, வெள்ளம் என அனர்த்தங்கள் தொடர்கின்றன. மலையகத்தில் மண்சரிவுகளால் பலர் மாள்கிறார்கள்.

பூகோளம் வெப்படைதலால் ஏற்பட்டு வருகின்ற அனர்த்தங்களை இவற்றின் ஊடாக நாம் அனுபவத்தில் தெரிந்துகொள்ள முடிகிறது. துன்பத்தில் ஆழவும் வைக்கிறது.

ஆனால் இவை பற்றியெல்லாம் முன்னோக்கிப் பார்த்து, கடந்த 2009ம் ஆண்டு  ஐப்பசி மாதம் பேராசிரியர் எஸ்.அன்ரனி நோர்பேட் உரையாற்றி இருக்கிறார்.

பாமர மக்களின் நலனுக்காகப் போராடிய தோழர் கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் நினைவுப் பேருரை இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றத்தின் ஆதரவில் வெள்ளவத்தை தர்மாராம வீதியில் உள்ள பெண்கள் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது அவர் ஆற்றிய உரை இப்பொழுது பூகோளம் வெப்படைதல் என்ற நூலூக வெளிவர இருக்கிறது.

அவுஸ்திரேலியா முதல் ஆசியா வரை காலநிலை நிலை மாற்றங்களால் அவஸத்தைப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அவரது இக்கட்டுரை தொகுக்கப்பட்டு முழுமையான நூலாக வெளிவருவது காலத்தின் தேவையாக இருக்கிறது. பலருக்கும் பயனளிக்கப் போவதும் நிச்சயமாகும்.

இந்நூல் பற்றிய ஆய்வரங்கு எதிர்வரும் 13.02.2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு 6, 58, தர்மராம வீதியில் உள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெறும்.

தலைமை:- கலாநிதி செல்வி திருச்சந்திரன்.

ஆய்வாளர்கள்
1. த.இராஜரட்ணம்
2. பேராசிரியர். எம். கருணாநிதி
3. பேராசிரியர் சபா. ஜெயராசா

இறுதி நிகழ்வாக நூலாசிரியர் பேராசிரியர் எஸ்.அன்ரனி நோர்பேட் அவர்களின் ஏற்புரை நடைபெறும்.

சுற்றுப்புறம் சூழல், பூகோளம் வெப்பமடைதல் போன்ற சமூதாயத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் விடயங்கள் பற்றி ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொண்டு நிகழ்வை நிறைவுறச் செய்ய அழைக்கப்படுகிறார்கள்..

Read Full Post »

>தினசரி பத்திரிகைகளின் ஆசிரியர் தலையங்களில் தினக்குரலுக்கு சிறப்பான பாரம்பரியம் உண்டு.

பொன்.ராஜகோபல், சிவநேசச்செல்வன் வரிசையில் வரும் வி.தனபாலசிங்கம் அவர்களது தலையங்கங்களும் குறிப்பிடத்தக்கவை. காலத்தால் மறக்க முடியாதவை. காலத்தின் கண்ணாடி போன்றவை.

இப்பொழுது அவரது  கையெழுத்தில் பிறந்த 100 தலையங்கங்கள் ஒன்று தொகுக்கப்பட்டு ‘ஊருக்கு.. நல்லது சொல்வேன்’ என்ற நூலாக வெளிவருகிறது.

புரவலர் புத்தகப் பூங்காவின் 29வது வெளியீடான இந் நூல் நாளை வெளியிடப்படுகிறது.

நாளை ஞாயிறு (05.12.2010) மாலை 5 மணிக்கு உருத்திரா மாவத்தையில் உள்ள தமிழ்ச்சங்க மண்டபத்தில் இது வெளியிடப்பட இருக்கிறது.

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் சி்விக்னேஸ்வரன் தலைமை தாங்க, பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார்.

மிகுதி விபரங்களை அழைப்பிதழில் காண்க.

Read Full Post »

>ராணி சீதரனின் ‘நிலவும் சுடும்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா (07.11.2010 ஞாயிறு) மாலை 4.30 மணியளவில் கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது.

திருமதி பத்மா சோமகாந்தன் விழாவிற்குத் தலைமை தாங்கினார்.

திறந்த பல்கலைக் கழகத்தின் ஓய்வு பெற்ற சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.சீ.து.இராசேந்திரம் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்

வழமையான நிகழ்ச்சிகளான மங்கல விளக்கேற்றல், தமிழ்தாய் வாழ்த்து, வரவேற்புரை(செல்வி.ஷாமிலா ஷெரீப்) ஆகியவற்றின் தொடர்ச்சியாக
வாழ்த்துரை வழங்கினார்கள்

  • டொக்டர்.திஞானகேரன் (ஞானம் சஞ்சிகை)
  • திரு.மு.கதிர்காமநாதன்(தலைவர் கொழும்பு தமிழ் சங்கம்)
  • திரு.அன்ரனி ஜீவா(எழுத்தாளர்)

ஆகிய மூவரும்.

அன்ரனி ஜீவா தனது உரையின்போது,  தமிழ் நாட்டில் திருகோணமலைச் சார்ந்த எமது எழுத்தாளரான தர்மு சிவராம் அவர்களுக்கு தமிழ் நாட்டில் அளிக்கப்படும் உயர்ந்த இடம் பற்றிக் குறிப்பிட்டார். பாரதி, புதுமைப்பித்தன் ஆகியோருக்குப் பின்னான இலக்கிய ஆளுமையாக அங்கெல்லாம் மதிக்கப்படுவதாகவும் சொன்னார். நான் கூட்டத்திற்குச் சென்ற போது அன்ரனி ஜீவாதான் பேசிக் கொண்டிருந்தார்.

தனது தலைமையுரையில் திருமதி பத்மா சோமகாந்தன் மனையாள் என்று கெளரவமாக மதிப்பது போல பெண்களை வீட்டிற்குள் அடைத்து வைத்த காலம் மாறிவிட்டது. இப்பொழுது பெண்கள் இலக்கியத் துறையில் மட்டுமின்றி நிர்வாகம், பொலீஸ், ராணுவம் என பல நிலைகளிலும் உயர் நிலைக்கு வந்துள்ளதை நினைவூட்டினார்.

பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட திரு.சீ.து.இராசேந்திரம்தான் விக்டோரியா கல்லூரியில் ராணி, சீதரன் ஆகியோருக்கு கல்வி கற்பித்த நிகழ்வுகளை சுவைபடக் கூறினார்.

வெளியீட்டு உரையை வழங்கியவர் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்துறைத் தலைவர் கலாநிதி.துரை மனோகரன் ஆவார். ராணி சீதரன் தன்னிடம் M.A. பட்ட ஆய்விற்காக வருமுன்னரே அவரது சிறுகதை பற்றி ஞானம் சஞ்சிகையில் எழுதியது பற்றி நினைவு கூர்ந்தார்.

தொகுதியில் உள்ள படைப்புகள் அனைத்தும் தனக்கு பிடித்திருந்த போதும் 5- அல்லது 6 கதைகளைக் குறிப்பிட்டு அவை தனக்கு மிகவும் பிடித்ததாகச் சொன்னார். அவை எவை என்பதை என்னால் இப்பொழுது நினைவுக்குக் கெர்ணடு வர முடியவில்லை.

நீண்டு சென்ற நூல் வெளியீட்டுவில் சிறப்புப் பிரதிகள் வழங்கல் நிகழ்வைத் தொடர்ந்து மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் நூல் அறிமுகம் செய்தார். ‘மீண்டும் வருமா’ என்ற சிறுகதையில் திருகோணமலையில் திடீரென முளைத்த புத்தர் சிலையைப் பற்றி மிக அழகாகவும் நாசூக்காகவும் எழுதியிருப்பதைச் சுட்டிக் காட்டினார். பெரிய சாமி என ஒரு சாதாரணன் புத்தர் சிலை வந்ததைக் குறிப்பட்டதை மிகவும் ரசித்துக் கூறினார்.

மீண்டும் சிறப்புப் பிரதிகள் பிரதிகள் வழங்க ஆரம்பித்தனர். வேறு ஒரு முக்கிய பணியிருந்ததால் மெளலானா M.N.M.மர்ஷீம் அவர்களின் நூல் நயவுரையைக் கேட்க முடியாத மனக் குறையுடன் மண்டபத்திலிருந்து வெளியே வந்தேன்.

இந்த நூலை பிரான்ஸ் சில் வசித்து மறைந்த தனது சகோதரி ரசிந்தாவின் ஞாபகமாக அவர் மறைந்த தினமான நவம்பர் 7ம் திகதியில் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

தனது சித்தியின் நினைவாக ராணி சீதரனின் மகள் கீர்த்தனி சீதரன் கவிதாஞ்சலி நிகழ்வு நூல் வெளியீட்டிற்கு முதல் நடைபெற்றமை மனதை நெகிழ்வித்தது.

நூலை இன்னமும் வாசிக்கவில்லை.ஆனால் பேராசிரியர் சபா.ஜெயராசாமிக சிறப்பான அணிந்தரையை வழங்கியுள்ளார். சிறிய உரையாயினும் மிகவும் கூர்மையான வார்த்தைகளைக் கொண்ட நல்ல அணிந்துரை. அதன் முக்கியத்துவம் கருதி அதன் ஸ்கான் பிரதியை இணைக்கிறேன்.

அடுத்த பக்கம்
‘வலிகளின் வெளிப்பாடு’..என்ற தலைப்பில் அண்ணாமலைப் பல்கலைக் கழக தமிழியல் துறை புலமுதன்மையர், பேராசிரியர் பழமுத்து வீரப்பன் முன்னுரை வழங்கியுள்ளார்.
நூலின் விலை:- ரூபா 250.00
தொடர்புகளுக்கு:- 077243619
முகவரி:- 136, மத்திய வீதி
                    திருகோணமலை.

எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>மிக வித்தியாசமான நூல் வெளியீடு அது. வெளியீட்டு விழா என்று கூட நான் சொல்லவில்லை. வெளியீடு என்றேன். விழாவாகக் கோலங் கொள்ளவில்லை.கனதியான கருத்தரங்கமாக உருக்கொண்டது.

போற்றலும் பொய்ப் புழுகும், மாலையும் மங்கல விளக்கும், விசேடப் பிரதியெனப் பேரிட்டு மேடையில் பணங் கறத்தலும், போட்டோவில் புன்சிரிக்கும் அதிதிகளுமாய் நாற்றமெடுக்கும் விழாவல்ல இது.

காலங்காலமாய் சடங்குச் சகதியில் சிக்கித் திணறும் விழாக்களுக்கு மாற்றாக தெளிவான நோக்கத்துடனானது. தீர்க்கமான கருத்துக்களுக்கு இடமளித்து, குற்றங் காண்பதை திரையிட்டு மேவாது சுதந்திரமாய் கருத்துரைக்க வைத்த காத்திரமான கூட்டம் இது.

கூடலில் ஆர்வலர்கள்.

கூடல் என்று கூறலாம் போலிருக்கிறது. ஏனெனில் தலை மேசையில் இருப்பவர்கள் மட்டுமின்றி கூட்டத்தில் கலந்து கொண்ட ஆர்வலர்களும் கருத்துரைக்க இடமளித்ததால் கூட்டம் கூடலாயிற்று.

இலக்கியத்தில் நாட்டமுடைய சிலரின் கூடல் எனலாம். முக்கியமாக சிறுகதைத் துறையில்.

மேலும் சிலர்

50 வருடங்கள் நீளும், நீண்ட படைப்புலகமெனும் காலவெள்ளத்தில் தளாராது நீந்திப் பயணிக்கும் ஒருவரது 9தாவது சிறுகதைத் தொகுப்பு நூலின் வெளியீட்டு விழா.

நூலாசிரியர் நீர்வை

பொன்னாடை, மலர் மாலைகள், பூச்செண்டு, நூல் திணித்தல் எதுவுமில்லை. வரவேற்புரை, நன்றியுரை போன்ற நித்தியச் சடங்குகளும் கிடையாது.

முக்கியமான கருத்துரைகளைச் செய்தவர்கள் மாணவர்களாகும்.

மாணவ ஊடகவியலாளர் ரவிவர்மன்

பள்ளி மாணவர்கள் அல்ல.

மாணவ ஊடகவியலாளர் எஸ்.சில்மியா

இலக்கியப் படைப்புகளோடும், செய்திகளோடும் உறவாடுபவர்கள். மற்றவர்களைச் சிந்திக்க வைக்க தமது பேனாவோடு எதிர்காலத்தில் உலா வரப் போகிறவர்கள்.

மாணவ ஊடகவியலாளர் ரகுவரன்

ஆம் ஊடகக் கல்வித்துறை மாணவர்கள்.

மாணவ ஊடகவியலாளர் வீ.முகிலன்

ஊடகத் துறைக் கல்லூரியின் விரிவுரையாளரான தேவகௌரியின் மாணவர்கள் அவர்கள்.

ஊடகக் கல்லூரி விரிவுரையாளர் தேவகெளரி

ஆசிரியரின் நெறியாள்கையானது யார் பேசுவது, எப்பொழுது பேசுவது எவ்வளவு நேரம் பேசுவது போன்ற பொதுவிடயங்கள் குறித்தேயன்றி எதைப் பேசுவது, எப்படிப் பேசுவது என அவர்கள் கருத்துச் சுதந்திரத்தில் தலையிடுவதாக இருக்கவில்லை எனத் தெரிகிறது.

தலைமை ஏற்று காத்திரமான உரை ஆற்றியவர் பேராசிரியர் சபா ஜெயராசா ஆகும்.

தலைமையுரை பேராசிரியர் சபா ஜெயராசா

கூட்டத்தை ஆரம்பித்து வைத்து சில வார்த்தைகள் பேசியவர் தினகரன் பிரதம ஆசிரியரான திரு. சிவா சுப்பிரமணியம்.

தினகரன் ஆசிரியர் சிவா சுப்பிரமணியம்

மாணவர்களின் கருத்துரைகளை அடுத்து விரிவான கருத்துரை வழங்கியவர் பிரபல எழுத்தாளரான திக்குவல்லை கமால்.

கருத்துரை திக்குவல்லை கமால்

இதைத் தொடர்ந்து பார்வையாளர்களின் சுருக்கமான கருத்துரைகள் இடம் பெற்றன.

மற்றொரு பிரபல எழுத்தாளரான இக்பால் கருத்துரை வழங்கினார்.

கவிஞர் இக்பால்

கே.விஜயன், எம்.கே.முருகானந்தன் போன்ற சிலரும் கருத்துரைகள் வழங்கினர். அவர்கள் கமராவில் சிக்கவில்லை.

நூலாசிரியர்  நீர்வை பொன்னையன் சுருக்கமான பதிலுரை அளித்தார்.

நீர்வை பொன்னையன்

தலைமை ஏற்ற பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் முடிவுரையுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.

வெள்ளவத்தை தர்மாராம வீதியில் உள்ள பெண்கள் கல்வி ஆய்வு மையத்தில் (WERC) சென்ற ஞாயிறு 24.10.2010 மாலை 4.30 முதல் மாலை 6.45 வரை இக் கூட்டம் நடைபெற்றது.

பேராசிரியர் சபா ஜெயராசா

நூலில் அடங்கியுள்ள சிறுகதைகளும் பின்னுரையாக ‘நீர்வையின் படைப்புகளும் சமூக இயங்குதளமும்’ என்ற தலைப்பிலான எம்.கே.முருகானந்தனின் கட்டுரையும் பொருளடக்கம் பக்கத்தில் அடங்கியுள்ளன.

நூலின் பொருளடக்கம்

கூட்டத்தில் ஆற்றிய உரைகள் எங்கே என்ற கேள்வி எழுகிறதா? Voice Recording ஆக என்னிடம் உள்ளன. அவற்றைப் பதிவேற்றும் வழி எனக்கு தெரியாது. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

அல்லது இலக்கியக் கூட்டங்கள் பற்றி மிகச் சிறப்பான தகவல் கட்டுரைகளை பத்திரிகைகளில் தரும் மா.பா.சி (மா.பாலசிங்கம்)  எனது அருகில் இருந்து விரிவான குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்தார். அதற்குக் காத்திருப்போம்.

ம.பாலசிங்கம்

மல்லிகை ஒக்ரோபர் இதழில் அவர்தான் அட்டைப் பட நாயகன். அவருக்கு வாழ்த்துக்களும், முற் கூட்டிய நன்றிகளும் உரித்தாகுக.

Read Full Post »

>இலங்கை இடதுசாரி இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர் தோழர் கார்த்திகேசன். தமிழ் மக்கள் மத்தியில் முதல் முதலாக கம்பூனிஸ்ட் இயக்க விதைகளை ஊன்றியவர்களில் அவர் ஒருவர்.

முற்று முழுதாக இன்றைய தமிழ் அரசியல் முதவாளித்துவாதிகளின் கைகளில் சிக்கியிருந்தாலும், இன்னும் எம்மிடையே சிறிதளவாவது முற்போக்கு சிந்தனைகள் மிஞ்சியிருக்கிறது என்றால் அதற்கு அவரும் அவரது அரசியல் வாரிசுகளும் செய்த முன்னோடி முயற்சிகளே காரணம் எனலாம்.

அவரது நினைவாக திரு சண்முக சுப்பிரமணியம் தொகுத்த ‘கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் நகைச்சுவை, ஆளுமை, தீரக்கதரிசனம்’ என்ற நூல் வெளியிடப்பட உள்ளது.

எதிர்வரும் 19.09.2010 ஞாயிறு மாலை 3.30 மணிக்கு யாழ் பலநோக்கு கூட்டுறவுச் சங்க கேட்போர் கூடத்தில் (யாழ் பிரதம தபாலகத்திற்கு அருகில்) நடைபெற இருக்கிறது.

தலைமை :- திரு. ரெங்கன் தேவராஜன் (வழக்கறிஞர்)

நினைவுரைகள்:- திரு.எஸ.ஜி.புஞசிகேவா (வழக்கறிஞர்)
                            திரு.எம்.ஜி.பசீர் (யாழ் மாநகர முன்னாள் துணை முதல்வர)
                            கலாநிதி செல்வி திருச்சந்திரன் (பெண்கள் கல்வி ஆய்வு                  நிறுவன   பணிப்பாளர்)
                            திரு.வீ.சின்னத்தம்பி (இளைப்பாறிய ஆசிரியர்)

ஏற்பாட்டாளர்கள்

இந்த நூலை

  1. இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றம், 
  2. கம்யூனிஸ்ட் கார்த்திகேசன்அறக்கட்டளை நிதியம் 

ஆகியன இணைந்து வெளியிடுகின்றன.

Read Full Post »

>வெலிகம ரிம்சா முஹம்மத் எழுதிய தென்றிலின் வேகம்

வெலிகம ரிம்சா முஹம்மத் எழுதிய தென்றிலின் வேகம் கவிதைத் தொகுப்பின் நூல் ஆய்வு அரங்கம் சென்ற ஞாயிறு 14.02.2010 நடைபெற்றது.

இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையால் வெளியிடப்பட்ட இந் நூல் அவர்களது ஆதரவில் 58, தர்மாராம வீதியில் உள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

எம்.கே.முருகானந்தன் தலைமை தாங்கினார். வழமையான கூட்டங்கள் போலன்றி மண்டம் நிறைந்து வழிந்து வெளியேயும் சிலர் நிற்க வேண்டியளவிற்கு பார்வையாளர்கள் முழு அளவில் பங்கு பற்றிய மிகச் சிறப்பான கூட்டமாக இருந்தது.

எம்.கே.முருகானந்தன் தலைமையுரை ஆற்றினார். தலைமையுரை மற்றொரு பதிவாக இணைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஆய்வுரைகள் இடம் பெற்றன. எழுத்தாளரும் தகவம் அமைப்பின் முக்கிய உறுப்பினருமான வசந்தி தயாபரன் முதலாவது உரையை வழங்கினார்.

வசந்தி தயாபரன் தனது உரையில்:-

‘ஆன்மாவின் கருவிலிருந்து வருவது கவிதை. நல்ல கவிதை எழுதுவதற்கு மொழி வசப்பட வேண்டும்.

அந்த வகையில் சிறப்பான மொழிநடை ரிம்ஸா மொஹம்மத் அவர்களுக்க இயல்பாகக் கிடைத்திருகிறது.

அவரது படைப்புகளை திரும்பத் திரும்ப வாசிக்கத் தேவையில்லை.
ஒரு முறை வாசித்தால் போதுமானது.
வாசகனைப் பயமுறுத்தும் வார்த்தைப் பிரயோகங்கள் கிடையாது.

கவிதை உருவாக்கத்தில் அவருக்கு தனித்துவமான பாணி உள்ளது.
புதுக்கவிதை என்றால் படிமங்களையும் குறியீடுகளையும் அள்ளி வீசப்படுகிறது.
புதுக்கவிதைக்கு அதுதான் அடையாளம் என்று சிலர் எண்ணுகிறார்கள்.

ஆனால் இவர் அவற்றை கிள்ளித் தெளித்திருக்கிறாரே ஒழிய அள்ளித் திணிக்கவில்லை.
எதுகை மோனை தானே வந்து சேர்ந்திருக்கிறது அவருக்கு.
இதற்கு துணை செய்வது நீரோட்டம் போன்ற நடையாகும்.

உணர்வுகளைப் பேசுகிறார். தாய்பாசம் பற்றி எழுதியுள்ளார்.

ஆனால் காதல்தான் இவரது படைப்புகளில் பல்வேறு வடிவங்களில் பரிமாணங்களில் புதைந்து கிடக்கின்றன.
வயது காரணமாக இருக்கலாம்.
படிப்படியாக மலரும் பூப்போல காதலின் பரிமாணங்கள் இவரது கவிதைகளில் வெளிப்பட்டிருக்கிறது.

குறை எனில் ஒன்று சொல்வேன்.
சமூகம் பற்றிய பார்வை சொற்பமாகவே வந்திருக்கிறது. அகன்ற பார்வை வேண்டும்.

இவரது கவிதைகளில் பெண் என்ற நிலைப்பாடு இருக்கிறது.
அதை இஸ்லாமியப் பார்வை என்று நான் பிரித்துப் பார்க்கவில்லை.
ஒட்டு மொத்தப் பெண் பார்வை என்பேன்.
தனிய இருக்கும் பெண்ணை விடுப்புப் பார்க்கும் தன்மை எமது சமூகத்தில் உள்ளது.
அவள் வாழ்வுக்காகப் போராடும்போது சமூகம் வேடிக்கை பார்த்திருக்கும் வாயிருந்தால் சமூகம் எதையும் பேசும். அதற்கு எதிரான குரல் ரிம்ஸாவிடமிருந்து எழுகிறது’

அடுத்து பிரபல கவிஞரும் விமர்சகருமான கவிஞர் இக்பால் ஆய்வுரை வழங்கினார்.

இவரே வெலிகம ரிம்சா முஹம்மத் எழுதிய தென்றிலின் வேகம் கவிதைத் தொகுப்பிற்கு முன்னுரை வழங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கவிஞர் இக்பால் தனது உரையில்:-

இயல் இசை நாடகம் என முத்தமிழ் என்பார்கள்.
ஆனால் கவிதை இவை எல்லாவற்றிகள்ளும் அடங்கும்.
இந்த நூல் சிறியதாக இருந்தாலும் இவை யாவற்றையும் உள்ளடக்குகிறது. நடை நன்றாக இருக்கிது.
சுய அனுபவத்தோடு சேர்ந்து வந்திருக்கிறது.

கருத்து செம்மையாக இல்லாவிடில் படைப்பு காலத்தைக் கடந்து நிற்கமுடியாது.

கவிதையானது காதையும் கண்ணையும் நம்பி வெளிவரும் இலக்கிய வடிவமாகும்.

ஆனால் புதுக்கவிதைகள் கண்ணை மட்டும் நம்பி வெளிவருகின்றன.

இவருக்கு வாசகனின் கண் காது இரண்டையும் கவரும் புலமை இருக்கிறது.

இந்நூலில் 63 தனிக் கவிதைகள் உள்ளன.
64வது, கவித் துளிகள் என்ற தலைப்பில் சில படைப்புகள் உள்ளன.
இவை விடுகதை அல்லது நொடி போல உள்ளன.

பெரும்பாலான படைப்புகள் தன் உணர்ச்சிக் கவிதைகளாக உள்ளன. கவிதைகளின் உள்ளடக்கங்களை ஒன்று சேர்த்துப் பார்க்கும்போது காவியம் போல இருக்கிறது.

இவரது படைப்புகள் உணர்ச்சி வெளிப்பாட்டுடன் நின்று விடாமல் கற்பனைத் திறனும் கொண்டுள்ளதைக் காண முடிகிறது.

மனித மனக் கிளர்வுகளே பெரும்பாலும் பாடுபொருளாக இருக்கின்றன. சமூகம் பற்றிய கவிதைகள் குறைவு.
வயது காரணமாக இருக்கலாம்.

எதிர்காலப் படைப்புகளில் சமூக உணர்வு கூடுதலாக விழம் என எதிர்பார்க்கலாம்.

ஆய்வுரைகளைத் தொடர்ந்து, பார்வையாளர்களாக வந்திருந்த சிலர் தமது கருத்துக்களை முன் வைத்தனர். மேமன்கவி.
டொமினிக் ஜீவா,
அஹ் அசுமத் போன்றோர் தமது கருத்துக்களைச் சருக்கமாகச் செல்லி நூலாசிரியருக்கு வாழ்த்தும் கூறினர்.

நூலசிரியரன் ஏற்புரையுடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.

தேநீர் விருந்தின் போது மூத்த மற்றும் இளைய தலைமுறை எழுத்தாளர்கள் ஒருவரோடு ஒருவர் அறிமுகமாகி கருத்துப் பரிமாறல்களிலும் ஈடுபட்டு மகிழ்ந்தனர்.

நல்ல ஒரு நிகழ்வில் பங்குகொண்ட உணர்வுடன் வீடு திரும்ப முடிந்தது.

நூலின் பெயர்: தென்றலின் வேகம் ( கவிதை )
வெளியீடு: இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை
விலை: 150/=

நூல் விநியோக உரிமை:-

பூபாலசிங்கம் புத்தக சாலை
Poobalasingam Book Depot
202,Sea Street
Colombo 11.

Read Full Post »

>எம்.கே.முருகானந்தன் தலைமையுரை

அனைவருக்கும் அன்பு வணக்கம்

இன்று ஒரு நூல் வெளியீட்டிற்காக கூடியுள்ளோம்.

இது ரிம்ஸா முகம்மத் அவர்களுடைய முதல் நூல். இது ஒரு கவிதைத் தொகுப்பு.

இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை

இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை பல இலக்கியச் செயற்பாடுகளைத் தொடர்ந்து செய்து வருவதை நீங்கள் அறிவீர்கள். இலக்கியக் கருத்தரங்குகள், ஆய்வரங்கங்கள், நூல் விமர்சன அரங்கங்கள், நூல் வெளியீடுகள் போன்ற பலவும் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன.

சிறுகதைத் தொகுப்புகள் 4 வெளிவந்தள்ளன, முற்போக்கு கவிதை மற்றும் சிறுகதை பற்றிய ஆய்வுகள் நூலாகப்பட்டுள்ளன. ‘பின்னவீனத்தை விளங்கிக் கொள்ளல்’ என்ற பேரா.சபா ஜெயராசாவின் இலக்கிய செல்நெறி சார்ந்த கட்டுரை நூலானதும் முக்கியமானது

எமது கல்வி முறைமைகள் தொடர்பாக, பேரா.சபா ஜெயராசாவின் ‘கோளமயமாக்கலும் இலங்கையின் கல்வியும்’, தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்’ மற்றும் பேரா.சந்திரசேகரனின் ‘இலங்கையில் உயர்கல்வி’, தை.தனராஸ் ‘ஒடுக்கப்பட்டோர் கல்வி- மலையக் கல்வி பற்றிய ஆய்வு’ ஆகியவை பெறுமதி வாய்ந்த நூல்களாகும்.

இதேபோல சூழலியல் பற்றி பேரா. ஆன்ரனி நோபேட் எழுதிய ‘சேது சமுத்திரம் கப்பற் கால்வாய்- அமைவிடம் பற்றும் பௌதீகச் சூழல் பற்றிய ஆய்வு’ காலத்தின் தேவை கருதிய முக்கிய வெளியீடுகளாகும்.

தொடர்ந்து ‘பண்பாட்டு உலகமயமாதலும் தாக்கங்களும் புத்துயிர்ப்பும்’, ‘மார்க்சிய உளவியலும் அழகியலும்’, ‘காலவெள்ளம்’, ‘பூகோளம் வெப்பமடைதல்’ ஆகிய நூல்களையும் வெளியிட உள்ளது.

இன்று வெளியாகும் ரிம்ஸா முகம்மத் அவர்களது ‘தென்றலின் வேகம்’ ஒரு கவிதைத் தொகுப்பாகும். இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையின் முதலாவது கவிதைத் தொகுப்பு இதுவாகும். இளம் எழுத்தாளர்களை இனங் கண்டு அவர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் அவர்களது நூல்களை வெளியிடும் முயற்சியின் முதற் பெறுபேறும் இதுவாகும்.

தொடர்ந்தும் இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை சிறப்பான நூல்களையும் கருத்தரங்குகளையும் முன்னெடுக்கும் என நம்புகிறேன். அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.

நூலாசிரியர் பற்றி

‘தென்றலின் வேகம்’ ரிம்ஸா முகம்மத் அவர்களின் முதலாவது இலக்கிய நூலாகும். ஏற்கனவே கணக்கியல் பற்றி மூன்று நூல்களை மாணவ சமுதாயத்தை முன்நிறுத்தி வெளியிட்டிருக்கிறார்.

இது ரிம்ஸா முகம்மத் முதல் கவிதை நூல் ஆன போதும் இவர் இலக்கிய உலகிற்குப் புதியவர் அல்ல. 1996, 97களிலிருந்தே கவிதைகள் படைத்து வருகிறார். ஆயினும் 2004ம் ஆண்டை ஒரு திருப்புமுனையாகக் கொள்கிறார்.
இவரது வேகமான இலக்கியப் பயணம் அதன் பின்னர்தான் ஆரம்பித்தது. தினகரன் வீரகேசரி போன்ற இலங்கைப் பத்திரிகைகள் முதல் தமிழகச் சஞ்சிகையான ‘இனிய நந்தவனம்’ ஆகியவற்றில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.

இணையத்தையும் இவர் தனது இலக்கியத் தாகத்தைத் தணிக்கப் பயன்படுத்தத் தவறவில்லை. ஊடறு, வார்ப்பு ஆகிய இணைய இதழ்களிலும் தனது படைப்புகளை வெளியிட்டுள்ளார்.

இதற்கு மேலாக தனக்கு என ஒரு இணையத் தளத்தையும் வைத்திருக்கிறார். ‘ரிம்ஸா முகம்மத் கவிதைகள்’ என்ற இணையத் தளம். அதற்கு இவர் கொடுத்திருக்கும் முகப்பு வாசகம் ‘முட்களுக்கு மத்தியில்தான் ரோஜாக்களின் ராஜாங்கம் நடப்பது’ என்பதாகும்.

ஆம் மனதுக்கிய இனிய எந்த நல்ல விடயம் நடப்பதாயினும் அது பல சவால்களையும் தடைகளையும் தாண்டியாக வேண்டும் என்பது பொது நியதியாகிவிட்ட காலம் இது. தனது சொந்த வாழ்க்கையிலும் இலக்கியப் பயணத்திலும் பல பிரச்சனைகளை நூலாசிரியர் எதிர்கொண்டுள்ளார்.

‘அழுகுண்ணிச் சிந்தனைகளையும்
அடுத்துக் கெடுக்கும்
அடாவடித்தனங்களையும்
அங்கிக்குள் மறைத்து..’

என்று தனது கவிதையில் குமுறுவதிலிருந்து இதை உணர முடிகிறது.

திக்குவல்லை அருகில் உள்ள வெலிகம என்ற கிராமத்தைப் பிற்பிடமாகக் கொண்ட ரிம்ஸா முகம்மத் இப்பொழுது கல்கிசவில் வாழ்வது தனது வாழ்வைக் கொண்டு நகர்த்துவதற்கான தொழில் தேவைகளுக்காக.

‘சொந்த மண்ணின் பேறான
சுக வளத்தை இழந்து
வெந்த உள்ளத்தோடும்
வேக்காட்டுப் பெருமூச்சோடும்
வாழும் இவர்கள்’

என்று ஒரு கவிதையில் பாடுவது வெறும் கற்பனைச் சொற்களல்ல. வாழ்க்கை அனுபவங்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.

இன்றைய நூல் கவிதை பற்றியது. எனவே கவிதை பற்றி மேலும் ஆழமாகச் சிந்திப்பது பொருத்தமாக இருக்கும்.

இலங்கையில் தமிழ்க்கவிதை

இலங்கைக் கவிதைத் துறைக்கு நீண்ட வரலாறு உண்டு. அதில் இப்பொழுது தென்றலின் வேகம் கவிதை நூலும் இணைந்து கொள்கிறது. இந்த நூல் இரண்டு விதங்களில் முக்கியத்துவம் பெறுகிறது. இது ஒரு பெண்ணின் குரலாக ஒலிக்கும் கவிதைத் தொகுதி. அதிலும் முக்கியமாக ஒரு இஸ்லாமியப் பெண்ணின் பாடுகளைச் சொல்லும் தொகுதியாகவும் உள்ளது.

இலங்கை இலக்கியப் பரப்பில் பெண்களின் கவிதைகள் நூலாக வரத்தொடங்கியது ‘சொல்லாத சேதிகளுடன்’ என நினைக்கிறேன். இது 1986 ல் வெளிவந்தது. சுமார் இரண்டரை தசாப்பதமாக பெண்களின் குரல் எமது இலக்கியப் பரப்பில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. சிவரமணி, ஒளவை, ஆழியாள், சுல்பிகா, மைதிலி, பெண்ணியா, நளாயினி, லுணகல ஹஸீனா புஹாரி, பாலரஞ்சனி சர்மா, கோசல்யா, அனார் என நீளும் பட்டியலில் இப்பொழுது வெலிகம ரிம்ஸா முகம்மதின் நூலும் இணைகிறது.

ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்

கவிதை எப்பொழுதும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவே ஒலித்து வந்திருக்கிறது.
இதனால் சிறுபான்மைச் சமூகங்கள் ஒடுக்குமுறைகளுக்கு ஆளான 80 களில் கவிதையானது எமது முக்கிய இலக்கிய வடிவமாக மாறத் தொடங்கியது. வெளிப்படையாகப் பேச முடியாத குரல்கள் கவிதைகளாக வெளிப்பட ஆரம்பித்தன. எமது கவிதை தீர்க்கமாகவும் தீவிரமாகவும் ஒலித்து, தமிழக இலக்கிய உலகின் கவனத்தையும் ஈரத்தது அதன் பின்னர்தான்.

வீட்டுச் சூழலில் மாத்திரமின்றி சமூக, தேசிய ரீதியாகவும் பாதிக்கப்பட்ட பெண்களின் குரல் கவிதையில் எப்பொழும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ஒளவை, ஆண்டாள் என முற்காலத்தில் ஒலித்த குரல்கள் இப்பொழுது வேகமாகவும் வீரியமாகவும் ஒலிக்க ஆரம்பித்துள்ளன.

ஒரு கவிஞனாக, பெண்ணாக, இஸ்லாமியப் பெண்ணாக அவர் எவ்வாறு தனது உலகைப் பார்க்கிறார் என்பதை நூலை ஆராய இருப்பவர்கள் செய்வார்கள் என்பதால் நான் சில பொதுவான விடயங்களை மட்டும் சொல்லிச் செல்ல நினைக்கிறேன்.


கவிதை என்றால் என்ன?


சிறந்த சொற்களை சிறப்பான ஒழுங்கமைவில் தருவது கவிதை என்று சொல்லப்படுகிறது.  ஆனால் அது மாத்திரம் கவிதையாகிவிடாது. தான் அனுபவித்த, மனதுக்கு நெருக்கமான விடயத்தை உள்ளத்தைத் தொடும் சொற்களில் சொல்லி அது படிப்பவனின் உள்ளத்தையும் கிளற வேண்டும். தனக்கும் நெருக்கமானதாக அதனை வாசகன் உணர வேண்டும். அதுவே நல்ல கவிதையாகும்.

சொல்லப்படுவது பெரிய விடயமாக இருக்க வேண்டும், ஆழமான கருத்துக்களை உள்ளடக்க வேண்டும் என்றில்லை. பெரிய படிமங்களும் கூடத் தேவையென்றில்லை. எளிமையான சொற்களில் தனது கவிதைகளைத் தந்த பாரதியின் சொற்களோடு ஒப்பிடுகையில் இன்றைய பல கவிஞர்களின் படைப்புகள் வெறுமையான வார்த்தை அலங்காரங்களாக இருக்கின்றன.

வெலிகம ரிம்ஸா முகம்மத் ஆழமான விடயங்களைத் தேடி ஓடவில்லை. அவரது கவிதைகள் பெண்ணியம் பற்றிப் பேசவில்லை. முற்போக்குக் கருத்துகளை அள்ளி வீசவில்லை. இனப் பிரச்சனை பற்றிக் கோடிகாட்டவும் இல்லை. தனது சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைளை உரத்துச் சாடவும் இல்லை. ஆனால் தனது உணர்வுகளை மட்டுமே பேசுகிறார். அதை உண்மையாகப் பேசுகிறார். ஆயினும் படைப்புகளுக்கு சமூக உணர்வு இருப்பது அவசியம். எதிர்காலத்தில் இதில் கூடிய அக்கறை செலுத்துவார் என நம்பலாம்.

தாய் பற்றிய உணர்வுகள்

அவரது கவிதைகள் ஊடாகப் பயணிக்கையில் தாய் பற்றிய உணர்வுகள் அற்புதமாக விழுந்திருப்பதை உணரமுடிகிறது. இவரது நூலின் தலைக் கவிதையான ‘ஆராதனை’ தாய் பற்றியதே

‘உன் பிரிவுத் துயர் தாளாமல்
ஓயாது புலமபும் எனக்கு..
ஓத்தடம் தர
உனை அன்றி
யார் வருவார் துணைக்கு’ என்று ஏங்குகிறார்.

‘ஓர் ஆத்மா அழுகிறது’ என்பதும் தாய் பற்றிய ஒரு நல்ல கவிதையாக எனக்குப்பட்டது.

‘தலையணை’ என்ற கவிதைத் துளியில்

‘சோகத்தில் சுகமளித்து
சயணிக்கச் செய்யும்
சிறந்த தாய்மடி’ என்கிறார்.

சுமார் 5 வருடங்களுக்கு முன் தாயை இழந்த துயர்

‘தாயின் பிரிவு
எனை வெளியேற்றியது
வீட்டை விட்டு!’

‘காத்திருக்கும் காற்று’ என்ற கவிதையில் வெளிப்படுகிறது.

தாய் பற்றிய இவரது உணர்வுகள் இவருக்கு மட்டும் சொந்தமானது அல்ல. ஒவ்வொரு மனிதனுக்குமே நெருக்கமான உணர்வுதான் தாய்ப்பாசம் என்பது. இதனால் அவரது அனுபவங்கள் எங்களது அனுபவங்களாகவும் மாறுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. எமது உள்ளத்தை ஊடுருவின்றன. வாசகனது மனத்தில் உள்ளுறைந்து மறைந்து போன உணர்வுகளைத் தொட்டுப் பேசாத எதுவுமே நல்ல கவிதை ஆகமுடியாது.

இவற்றைக் கருத்தில் கொண்டுதான் வெலிகம ரிம்ஸா முகம்மத் கவிதைகள் ‘உணர்ச்சி பூர்வமாக வாசிப்போரை இழுக்கும் தன்மையுள்ளவை’ என கவிஞர் இக்பால் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார் என எண்ணுகிறேன்.

இந்நூலில் உள்ள பெரும்பாலன கவிதைகள் நட்பு, பாசம், காதல், தாய்ப்பாசம் போன்ற உணர்வுகளைப் பேசுகின்றன. நாம் வாழ்வில் நிதம் நிதம் சந்திக்க நேரும் உணர்வுகளை அவர் அழகான கவிதைகளாக வடித்திருக்கிறார்.

இத்தகைய உணர்வுகளை வாசகனிடம் எழுப்ப அவருக்கு கடுமையான சொற்கள் தேவைப்படவில்லை. சாதாரண சொற்களே போதுமாயிருந்தன என்பதை நீங்களும் உணர்வீர்கள். கவிஞர் முருகையன் பேச்சு வழக்கிலேயே பல அற்புதமான கவிதைகளைத் தந்ததை நாம் மறக்க முடியாது.

உண்மையான கவிதைகளுக்கு ஓசை நயம், சந்தம், உருவகம், உவமானம், யாப்பு, வடிவம், படிமம் எதுவுமே தேவையில்லை. உணர்வுகளை வார்த்தைகளில் வசப்படுத்தவும், அதனை வாசகனுக்கு எளிதாகக் கடத்தவும் முடிந்தால் அது கவிஞனின் வெற்றி எனலாம்.

நம்பிக்கை ஊட்ட வேண்டும்

கவிதை மட்டுமல்ல வேறு எந்த இலக்கிய வடிவமாக இருந்தாலும் அது நம்பிக்கை வரட்சியாக இருப்பது நல்லதல்ல. படைப்பாளிக்கு சமூக நோக்கு இருக்க வேண்டும். நம்பிக்கை ஊட்டி வாசகனை எதிர்காலத்தின் வெற்றியை நோக்கி அடியெடுத்து வைக்கச் செய்ய வேண்டும். அவையே நல்ல படைப்புகள். மனித சமுதாயத்தின் வளர்சியிலும் வெற்றியிலும் அக்கறை கொள்ளாத படைப்புகளுக்கு எத்தகைய சமூகப் பெறுமாமும் கிடையாது.

‘வசந்த வாழ்க்கை – என்
வாழ்வு தேடி
நிச்சயம் வரும் ஒரு நாள்..’ என நம்பிக்கை கொள்கிறார்.
அதனூடாக வாசகனுக்கும் நம்பிக்கை ஊட்டுகிறார்.

‘புயலாடும் பெண்மை’ என்ற கவிதையில் பெண்ணியத்தின் கீற்றுக்களைக் காண்கிறோம்.

கவிதை, கவிதை மொழி என்றெல்லாம் இன்று பலரும் பேசுகிறார்கள். அதன் அர்த்தம் என்ன என்று சொல்வது இலகுவானதல்ல. ஆனால் நல்ல படைப்பான ஒரு கவிதையின் அர்த்த தளங்கள் குறுகிய பார்வையுடையனவாக இருக்கக் கூடாது. அது வாசகனின் அனுபவத்துடன் இணைந்து பரந்து விரிந்தும், எல்லை கடந்தும் பயணிக்க வேண்டும்.

முடியும் வேளையில் பேசத் தொடங்குதல்

எந்தவொரு நல்ல படைப்பினதும் மற்றொரு அடையாளம் அதன் முடிவில் தானிருக்கிறது. படைப்பு முடியும் வேளையில் அது வாசகனுடன் பேசத் தொடங்கினால் அதைவிட நல்ல படைப்பு இருக்க முடியாது. படைப்பாளி தனது முடிவை வாசகனிடம் திணிக்காது அவனது மனத்தைப் பேச வைக்க வேண்டும். அவனது தூக்கத்தைக் கெடுத்து அவனைச் சிந்திக்க வைக்க வேண்டும். கனவிலும் விடாது தொடர்ந்து பேசவைப்பதாக இருக்க வேண்டும்.

வெலிகம ரிம்ஸா முகம்மதின் படைப்புகளில் ‘கவிதை முடியும் இடத்தில் தான் தொடங்கும் பண்பு’ உள்ளதா என்பதை ஆராய்ந்து பார்ப்பது நல்ல முயற்சியாக இருக்கும் என நம்புகிறேன்.

இறுதியாக ஒரு வார்த்தை. நான் கவிஞனல்ல. கவிதை எனக்கு பிரதான நாட்டமுள்ள இலக்கிய வடிவமுமல்ல. மாணவப் பருவத்திலும் அண்மையிலுமாக சில மட்டுமே எழுத முயன்றுள்ளேன். அத்தகைய என்னை இந்த நிகழ்வுக்குத் தலைமை தாங்க அழைத்த  இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை அன்புக்கு நன்றி.

இந்நிலையில் இவ்வளவு நேரமும் பேசிய என்னைப் பாரத்து நூலாசிரியர்,

‘எழுது உன் கவிதையை நீ எழுது
அதற்கு உனக்கு வக்கில்லை என்றால்
ஒன்று செய்.
உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என
என்னைக் கேட்காமலேனும் இரு. ‘

என்று பசுவய்யா தனது கவிதையில் பாடியது போலக் கேட்காமல் இருந்தால் சரி.

நன்றி.

எம்.கே.முருகானந்தன்
14.02.2010.

நூலின் பெயர்: தென்றலின் வேகம் ( கவிதை )
வெளியீடு: இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை
விலை: 150/=

நூல் விநியோக உரிமை:-

பூபாலசிங்கம் புத்தக சாலை
Poobalasingam Book Depot
202,Sea Street
Colombo 11.

புகைப்படங்கள் நன்றி மன்னார் அழுதன் : –
http://www.facebook.com/amujo?v=photos#!/album.php?aid=146731&id=555502667

Read Full Post »

>

எனது (எம்.கே.முருகானந்தன்) தலைமையுரை


வணக்கம்
மாலை வந்தனம்

தமிழ்பிரியாவின் ‘காம்பு ஒடிந்த மலர்’.
இது ஒரு சிறுகதை நூல்.

ஈழத்துச் சிறுகதைக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. அதன் வரலாற்றைப் பலவாறு வகுத்தனர்

ஆனால் இன்றைய நிலையில் நின்று நோக்கும்போது அதவது எமது சமகால சிறுகதை பரப்பை அவதானித்தால் அதை இன்னொரு வகையில் வகுகக்கலாம் போலத் தோன்றுகிறது

1. போருக்கு முந்திய காலச் சிறுகதைகள்
2. போர்க் காலச் சிறுகதைகள்
3. போருக்கு பிந்திய காலச் சிறுகதைகள்

போருக்கு முந்திய காலச் சிறுகதைகள்

அமைதியான வாழ்க்கை, ஊர்புறங்களில் சாதிப் பிரச்சனை, படித்தவர் மத்தியில் வேலையில்லாப் பிரச்சனை, மொழிப்பிரச்சனை, சீதனப் பிரச்சனை

போர்க் காலச் சிறுகதைகள்

இனப் பிரச்சனையின் பாதிப்பு, இனப்பாகுபாடு, போர், இயக்கங்கள் பற்றிய துதிபாடல், புலிகளின் தீரம் இவை பற்றி மட்டுமே பேசப்பட்டது. போருக்கு எதிராகப் பேசியவர்கள் இனத் துரோகிகள், காட்டிக் கொடுப்பவர்கள்

போருக்கு பிந்திய காலச் சிறுகதைகள்

உண்மையில் இதை வளர்த்தெடுக்க வேண்டிய கடமை ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் உண்டு.

போரைப் பற்றிய விமர்சனங்கள்,
போரினால் தமிழ் மக்ககளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள்,
அல்லது அதனால் கிட்டிய நன்மைகள்,
இனி எமது இனம் செல்ல வேண்டிய பாதை,
இவற்றைத் தவிர ஏனைய மொழிகளில் வரும் படைப்புகள் போல மக்களின் நாளந்த வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள்,
தனிமனிதப் பிரச்னைகள்
தனிமனிதர்களின் பிரச்சனைகள்,
சாதிப்பிரச்சனை,
குடும்பப் பிரச்சனை போன்றவற்றைப் பேசுவது போன்ற மக்களின் அன்றாட மற்றம் சமூகப் பிரச்சனைகள் பற்றிப் பேச வேண்டும்.

ஆனால் ஒரு சில கவிதைகள் தவிர மற்றவை இன்னமும் பேசவில்லை.


முன்பிருந்த பயமும் தயக்கமும் இன்னும் தீரவில்லை. பலர் இன்னமும் நடந்த இழப்புகள் பற்றி மட்டுமே பேசுகிறாரகள். போருக்குப் பின்னான எமது மக்களின் வாழ்வுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையான, புதிய மகிழ்சியான வாழ்வை பெறுவதன் அவசியம் பற்றிப் பேசும் படைப்புகள் இன்னமும் வெளிவரத் தொடங்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில் தமிழ்பிரியாவின் ‘காம்பு ஒடிந்த மலர்’ நூல் வெளிவந்திருக்கிறது.

இந்த நூல் இன்றைய சூழலில் எப்படிப் பொருந்துகிறது? எதைப் பேசுகிறது? அல்லது எதைப் பேசவில்லை?

மிக முக்கியமான விடயம் இது இனப் பிரச்சனை பற்றிப் பேசவில்லை.
போரைப் பற்றிப் பேசவில்லை.
தமிழ் மக்களுக்கு எதிராக நடக்கும் அடக்கு முறைகள் பற்றிப் பேசவில்லை. அடக்கு முறையால் தமிழ் மக்கள் படும் துயரங்கள் பற்றியும் பேசவில்லை.

ஆனால் தமிழ் மக்களது அதிலும் முக்கியமாக யாழ் பிரதேச மக்கள் தமது நாளாந்த வாழ்வில் சந்திக்கும் சம்பவங்களையும் அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டவை.

இவரது சிறுகதைகளில் போர் அல்லது இனப்பிரச்சனை சார்ந்த கரு இல்லாமல் போனதற்குக் காரணம் என்ன? இரண்டு காரணங்களைச் சொல்லலாம்.

1. எமது இனப்பிரச்சனை தீவிரமடைந்த 1983 ற்கு முற்பட்ட காலத்துக் கதைகளே பெரும்பாலனவை. இந் நூலில் உள்ள 14 சிறுகதைகளில் இரண்டே இரண்டு கதைகள் 1983க்குப் பின்னர் எழுதப்பட்டுள்ளன. ‘மாற்றங்கள்’ என்ற கதை 1986ல் அமிர்தகங்கையில் வெளியாகியுள்ளது. அடுத்தது ‘நாங்கள் மனிதர்கள் என்ற சிறுகதை 1987ல் மல்லிகையில் வந்திருக்கிறது

2. அப்படியானால் அக்காலத்தில் தமிழ் மக்களுக்கு இனரீதியான பிரச்சனைகள் இருக்கவில்லையா? அடக்குமுறைகளால் துன்பப்படவில்லையா?

இருந்ததுதான்.

ஆயினும் அன்றைய சூழ்நிலையில் ஒரு அரசாங்க ஊழியரான தமிழ்பிரியாவினால் அவை பற்றி வெளிப்படையாக எழுத முடியாதது இருந்திருக்கலாம். அல்லது மணமாகாத இளம் பெண்ணாக இருந்த அவரைப் பாதித்தவை வேறு விடயங்களாக இருந்திருக்கலாம்.

காரணங்கள் எவையாக இருந்த போதும் தமிழ்பிரியாவின் சிறுகதைகள் எம்மை ஒரு புது உலகிற்குள் இழுத்துச் செல்கின்றன.
நாம் மறந்துவிட்ட ஒரு உவப்பாக காலத்திற்குள் எம்மைப் பயணிக்க வைக்கின்றன.

அதாவது போருக்கு முந்திய காலச் சிறுகதைகளைக் கொண்ட தொகுதி எனலாம்.

உண்மையில் இந்த நூலின் சிறப்பே அதுதான்.

குருதியையும், போரையும் பற்றிப் பேசியதைக் கேட்டே அலுத்துவிட்ட, அல்லது மீண்டும் மீண்டும் பேசியதால் உணர்வுகள் மரத்துவிட்ட நிலையில் உள்ள எமது மக்களுக்கு இத் தொகுதி ஒரு மாற்று அனுபவத்தை தருகிறது.

வாழ்க்கை என்பது ஒரு மலர்த் தோட்டத்தைப் போன்றது.
அங்கு அழகிய மரங்கள் இருக்கும்.
வாசமுறு மலர்களைக் கொண்டவையும் இருக்கும்.
பாறைபோல உறுதியான மரங்களும் இருக்கும்.
காற்றின் திசைக்கு ஏற்ப வளைந்து கொடுப்பவையும் இருக்கும்.

அதேபோல கதம்பமாக இருக்கும் இலக்கியங்களைப் படிக்கும்போது எமக்கு வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்க வேண்டும்.

போர்க்கால இலக்கியங்கள் எமது வரலாற்றின் ஒரு முக்கிய காலகட்டம். அந்தக் காலகட்டத்தில் அந்த உணர்வைத் தொய்யவிடாது காப்பாற்ற வேண்டிய கடமை எமது இலக்கியகர்த்தாக்களுக்கு இருந்தது. அதனை எமது இலக்கியகர்த்தாக்கள் செவ்வனே செய்தார்கள்.

இன்று போர் ஓய்ந்துவிட்டது.
இடைக்காலத்தில் நாம் பட்ட பல இடைஞ்சல்களும், தொல்லைகளும் தீரந்துவிட்டன.

ஆனால் அடிப்படைப் பிரச்சனையான அரசியல் பிரச்சனை தீரவில்லை.
அதைப் பற்றிப் பேசுவார் எவரும் இல்லை.
அதற்கு மேலாக எமது மக்களின் நாளாந்த வாழ்க்கைப் பிரச்சனைகள் ஏராளம். அவை பற்றியும் எமது இலக்கியங்கள் பேச வேண்டும். ஆனால் அவை காலப் போக்கில்தான் கிடைக்க முடியும்.

இப்பொழுது ஒரு இடைக்காலத் தீர்வாக இரத்தினவேலோன் இந்த நூலைத் தந்துள்ளார்.
போர்க்காலத்தைப் பற்றி ஒரு வசனம் கூட இல்லாத நூலாக இது வந்திருக்கிறது. கடைசிக் கதையில் மட்டும் பொடியள் வருகிறார்கள்.
ஆனால் அவர்கள் கூட அரசியல் பற்றிப் பேசவில்லை.
போரைப் பற்றியும் பேசவில்லை.
ஒரு கிராமத்தில் ஏற்படுகின்ற ஒரு சிறு பிரச்சனைக்கு அவர்கள் எவ்வாறு தீர்வு தருகிறார்கள் என்பதைப் பற்றிச் சொல்கிறது.

துப்பாக்கி, குண்டுவீச்சு, எறிகணைத் தாக்குதல் எதுவும் அற்ற ஒரு சமூகத்தின் நாளாந்த வாழ்வில் ஏற்படுகின்ற பல்வேறு பிரச்சனைகளை இந்த நூல் பேசுகிறது.

அதனாலேயே வித்தியாசமான இந் நூல் பலரையும் கவரும் என நம்பலாம்.

ஒரு பெண்ணின் பார்வையாகப் பேசுகிறது. அவளின் குரல் நூல் முழவதும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது

அதுவும் கல்யாணம் ஆகாத வேலைக்குப் போகும் ஒரு பெண்ணின் பார்வையாக இந்த கதைகள் அமைந்துள்ளன.
தனது சமூகத்தில், தனது சுற்றாடலில் நடக்கும் சம்பவங்களை உற்று நோக்குகிறாள்.
அங்கு நடக்கும் அக்கிரமங்கள், அநியாயங்கள் அவள் மனத்தைத் தாக்குகிறது. தனக்குள் தானே தவிக்கிறாள்

அவள் ஒரு துணிச்சல் மிக்க பெண் என்று சொல்ல முடியாது.
அவள் பொது இடத்தில் அநீதி நடக்கும் போது தட்டிக் கேட்க மாட்டாள். ஆர்ப்பாட்டம் செய்யும் பெண்ணும் அல்ல.
நேரடியாகச் சண்டைக்கும் போக மாட்டாள். வெளிப்படையாகப் பேசத் தயங்கும் சாதாரண பெண்.
மனதிற்குளாக துடிக்கத்தான் முடியும்.

ஆனால் அவற்றை கதையாக எழுதுவாள்.

பெரும்பாலன சிறுகதைகள் தானே பாத்திரமாக நின்று சொல்லும் கதைகளாக இருக்கின்றன.

மற்றைய கதைகளில் பிரதான பாத்திரம் வேறு பெயர் பெற்றிருந்தாலும், இன்னும் சில ஆண் பாத்திரமாக இருந்தாலும் அவை யாவற்றிற்குள்ளும் அவளின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

ஆம் புஸ்பராணி என்ற இயற்பெயரைக் கொண்ட தமிழ்ப்பிரியா என்ற புனைப் பெயரில் எழுதும்போது தமிழினி என்ற பாத்திரமாக பல இடங்களில் வருகிறார்.

சொந்த அனுபவங்களாக வருவதால் கதைகளின் நம்பகத்தன்மை உச்சமாக இருக்கிறது. கற்பனையில் எழுதுகிறார் என்ற சந்தேகம் இவரது கதைகளில் ஏற்படாது இருப்பதற்கு இது ஒரு ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது.

இவரது கதைகளில் நான் இரசித்த விடயங்கள் பல

1. யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கும், மீண்டும் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும் தினமும் ரயிலில் பிரயாணம் செய்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள். இங்குள்ள சில வயதானவர்கள் பிரயாணித்து இருப்பார்கள். எனக்கு அந்த வாய்ப்புக் கிட்டவில்லை. ஆனால் கொழும்பு கொடிகாமம் பிரயாணத்தில் கிளிநொச்சி இரயில் நிலையத்தை 80களின் முற்பகுதியில் கண்டிருக்கிறேன். இன்றைய பல இளைஞர்களுக்கு இத்தகைய பிரயாணம் ராஜா ராணி காலத்துக் கதைபோல இருக்கும்.

கிளிநொச்சி ஸ்டேசனை, அங்குள்ள லேடீஸ் ரூமை, அதன் பிளற்பாரத்தை, அங்கு தமிழில் அறிவிப்புகள் ஒலிபரப்பப்படுவதை வாசிக்கும்போது எவ்வளவு இன்பமாக இருக்கிறது. நாம் இழந்தவிட்ட வசந்த காலங்களை மீண்டும் சுவாசிக்கக் தமிழ்பிரியாவின் எழுத்துக்கள் உதவுகின்றன.

அதே போல சுமார் 25 வருடங்களுக்கு முன்னான யாழ்ப்பாண பஸ் மற்றும் மினிபஸ் பிரயாண அனுபவங்களை மிகவம் யதார்த்மாகவும் விரிவாகவும் சொல்லியுள்ளதை இவரின் கதைகளில் சுவைத்து ரசிக்க முடிகிறது.

அந்த கொண்டக்கர்மாரின் அடாவடித்தனங்கள், அதில் பிரயாணம் செய்ய முனையும் வயோதிபர்களும் பிச்சைக்காரர்களும் படும்; அவமதிப்பு போன்றிவையும்

2. எதிர் மறையான கருத்துடன் சொல்லப்படுவது போல ஆரம்பித்து, எங்களை ஆர்வத்துடன் வாசிக்க வைப்பது. தகப்பனுக்கு கடுமை என்று தந்தி வந்த போதும், பதற்றமடையாது வீடு சென்ற போது அவர் இறந்து கிடப்பதைக் கண்டும் அலட்டிக் கொள்ளாது இருக்கும் பாத்திரத்துடன் ஆரம்பிக்கும் கதை ‘நெஞ்சில் நிலைக்காத உறவு’

அதேபோல மாற்றங்கள் என்ற கதையில் இவளை கணவனின் பெயர் சொல்லி மிஸஸ் பாலசிங்கம் என்று கூறியவுடன் நெஞ்சிற்குள் உதை வாங்கித் துடிப்பதும், அவருக்கு கடுமையான வருத்தம் என்று சொன்னவுடன் ‘அதற்கு என்ன செய்ய வேண்டும்?’ என எடுத்தெறிந்தாற்போலப் பேசுவதும் எங்களை என்ன சொல்ல வருகிறார் என யோசிக்க வைக்கின்றன.

ஏனெனில் தகப்பன், மற்றும் கணவனை உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்கும் எமது சமூதாயப் பார்வைக்கு அடி போடுவது போல எதிர்மறையாக ஆரம்பிக்கின்றன கதைகள் அவை.

3. பெண்களின் உணர்வுகள் பற்றிய இவரது சிந்தனைகளும் வரிகளும் மிகவும் உயிரோட்டமாகவும் மனதில் நிற்குமாற் போலுவவும் பல இடங்களில் அமைந்துள்ளன.

‘கருவிகள்’ என்ற சிறுகதையில் இளவயதிலேயே கணவனை இழந்த பெண்ணை (பக்கம் 88)

“5 வருடம் என்றாலும் அவனுடன் சந்தோசமாக வாழ்ந்து 2 பிள்ளைகளுக்கு தாயானவள் இன்னொருவருடன் வாழச் சம்மதிப்பாளா? அவளுக்கு அப்படி ஒரு ஆசையே கிடையாது. ஆந்த நினைவுகளுடனேயே பிள்ளைகள வளர்த்துக் கொண்டு வருகிறாள் என்று அவளைப் பெருடைப்படுத்திப் மற்றவர்கள் கதைதத்தபோதுதான் அகல்யா வெந்து போனாள். குணவன் இறந்ததும் பெண் மனத்தின் ஆசாபாசங்கள் எல்லாம் அச்தமித்துப் போய்விடும் என்று என அவர்கள் எல்லாம் முடிவு செய்கிறார்கள்.”

பெண்பார்க்கும் படலம்- ‘பார்வைகள் கோணலாகும் போது’ தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள்.
அதிசமாய் விழிகளில் ஒரு மலர்ச்சி.

அழகு இன்று ஒரு படி உயர்ந்து நிற்பது போன்ற பிரமை…. அவனுக்கு அவளைப் பிடிக்காமா போகும்.
அந்த முகம் தெரியாதா அவனைப் பற்றி மனதிற்கள்ளேயே எண்ணிப் பார்த்தாள். அவள் மனதிற்கள் வரைந்து லைத்திருக்கிற அதே முகம் மாதிரி…. பார்த்தவுடனேயே சம்மதித்துவிடக் கூடிய கம்பீரத் தோற்றத்தோடு, அவளின் அழகோடு போட்டி போடுகிறவனாக… விதம் விதமான கற்பனைகள்…

இவ்வாறு பல சிறப்பகளைக் கொண்ட இச்சிறுகதைத் தொகுதி இன்று வெளியாவதில் மிகுந்த மகிழ்ச்சி.
அதன் ஆசிரியரான தமிழ்பிரியாவிற்கு எனது வாழ்த்துக்கள்.
அவரது ஏனைய படைப்புகளையும் நூலாக்குவது அவசியம்.
நன்றி.

கூட்டத்திற்கு வந்திருந்த சிலர்

எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

Older Posts »