Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘பக்க வாதம்’ Category

>’ஒரு செக்கண்ட், ஒரு செக்கண்ட்தான், எனக்கு நேற்று திடீரென ஒரு பக்க கையையும் காலையும் இழுத்தது போலிருந்தது. மகனைக் கூப்பிடுவதற்கிடையில் எல்லாம் மாறிவிட்டது’ என உங்கள் உறவினர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது சொல்கிறார். கலவரமின்றிப் பேச்சோடு பேச்சாகச் சொல்கிறார்.

அவரைப் பார்க்கிறீர்கள், மிக நன்றாகப் பேசுகிறார், நடக்கிறார், கை கால்கள் வழமைபோல இயங்குகின்றன. ஆரோக்கியமாகத்தானே இருக்கிறார்! ஏதோ பயந்திட்டார் போல என நினைக்கிறீர்கள். ‘அப்பாவின்ரை அண்ணா இரண்டு மாதத்துக்கு முந்தித்தான் ஸ்ரோக் வந்து இறந்தவர். அதை நினைச்சிட்டார் போல’ என மகன் அலட்சியமாகச் சொல்கிறார்.

அலட்சியப்படுத்தக்கூடிய விடயமாகத் தெரியவில்லை. இவரைப்போன்ற 21000 பேரின் மருத்துவ ஏடுகளை ஆராய்ந்து பார்த்து, அவர்களை மேலும் விசாரித்த ஒரு கள ஆய்வின் பிரகாரம் அவர்களில் பலருக்கு உடல் ரீதியாகவும் நரம்பு மண்டல ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத்தான் முணுமுணுக்கும் பக்கவாதம் என்கிறார்கள்.

இது ஏதோ புதிதான வியாதியோ அல்லது எப்போதாவது ஒரு சிலரை மட்டும் தாக்கும் முக்கியமற்ற பிரச்சினை என எண்ணி விடாதீர்கள். 45 வயதிற்கு மேற்பட்டவர்களில் ஏறத்தாழ 20 சதவிகிதமானவர்கள் இதனால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என இவ் ஆய்வைச் செய்த டாக்டர் ஜோர்ஜ் ஹோவர்ட் கூறுகிறார். இவர் அலபாமா பல்கலைக்கழககத்தின் சமூக மருத்துவத்துறையின் தலைவராக இருக்கிறார்.

அதென்ன ‘முணுமுணுக்கும் பக்கவாதம்’ என்கிறீர்களா? பக்கவாதம் பற்றி நிச்சயம் அறிநிதிருப்பீர்கள். சிறிய அளவிலான பக்கவாதம் (Minor Stroke) பற்றியும் கேள்விப்பட்டிருக்கக் கூடும், அது பற்றிய எனது கட்டுரையை வாசித்திருக்கவும் கூடும். இப்பொழுது முணுமுணுக்கும் பக்கவாதம் பற்றிப் பேசலாம்.

இவர்களுக்கு பக்கவாதத்தை ஒத்த சில அறிகுறிகள் ஏற்படுகின்றன. ஆயினும் அவை மிக அற்பமாக இருப்பதால் பாதிக்கப்பட்டவரை கலவரப்படுத்துவதில்லை, வைத்தியர்களின் கவனத்தையும் பெரிதாக ஈர்ப்பதில்லை. இது வெளிக்காட்டாத பக்க வாதத்திலிருந்து (Silent Stroke) வேறுபட்டது. வெளிப்படையாக எந்தவித அறிகுறிகளுமற்ற போதும் CT Scan செய்து பார்க்கும் போது மூளையில் பாதிப்புகள் ஏற்பட்டது தெரிய வருவதையே ‘வெளிக்காட்டாத பக்க வாதம்’ என்கிறோம்.

‘நிச்சமற்ற அறிகுறிகளாக இருப்பதாலும், வெளிப்படையான பாதிப்புகள் அதிகம் இல்லாததாலும் முணுமுணுக்கும் பக்கவாதம் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை, வீண் மருத்துவப் பரிசோதனைகளுக்கும் உட்படுத்த வேண்டியதும் இல்லை’ எனச் சில மருத்துவரகள் கருதுகிறார்கள். ஆயினும் ‘பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைத் தரம் குறைகிறது, அறிவார்ந்த செயற்பாடுகள் பாதிப்புறுகின்றன, மேலும் பல பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம். எனவே இது வெளிக்காட்டாத பக்க வாதத்தை ஒத்ததாக இருக்கலாம்’ என கருதுகிறார் டொக்டர் ஜோர்ஜ் ஹொவேட்.

அதாவது CT Scan போன்ற மேலதிக பரிசோதனைகளைச் செய்தால் தான் தெரியவரும்.அத்துடன் இது சிறிய அளவிலான பக்கவாதமாக இருக்கக் கூடம் என்பதும், அவ்வாறாயின் அத்தகையவர்களுக்கு பெரியளவிலான பக்கவாம் வருவதற்கான சாத்தியங்களும் அதிகம் என்பதும் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது.

முணுமுணுக்கும் பக்கவாதம், வெளிக்காட்டாத பக்க வாதம், சிறிய அளவிலான பக்கவாதம் போன்றவை வந்தவர்கள் தங்களது அறிகுறிகளை அலட்சியம் செய்வது புத்திசாலித்தனமானது அல்ல. அவர்கள் தங்களது இரத்த அழுத்தம், இரத்த சீனி அளவு, இரத்த கொலஸ்டரோல் அளவு ஆகியவற்றை பரிசோதித்துப் பார்த்து, அவை கூடுதலாக இருந்தால் அவற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், எடை அதிகமாக இருந்தால் அதைக் குறைப்பதன் மூலமும் எதிர்கால ஆபத்துகளை தவிர்த்துக் கொள்ளலாம்.

பக்கவாதத்தினது அறிகுறிகள் அல்லது பக்கவாதம் வருகின்றது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்ன?

திடீரென முகம், கை, கால் ஆகியவற்றில் தோன்றும் விறைப்புத்தன்மை அல்லது செயலிழப்பு மிக முக்கியமான அறிகுறியாகும். பொதுவாக உடலின் ஒரு பக்கத்தில் மட்டும் இது தோன்றுவதுண்டு.

திடீரென ஏற்படும் மாறாட்டம் மற்றும் பேசமுடியாதிருப்பது, மற்றவர்கள் பேசுவதை புரிந்து கொள்வதில் சிரமப்படுவது, சடுதியாக ஏற்படும் பார்வைக்கோளாறு அல்லது முற்றாக பார்வைத் திறனை இழத்தல் இன்னுமொரு முக்கிய அறிகுறியாகும். ஒரு கண்ணில் அல்லது இரண்டு கண்களிலும் இது தோன்றலாம்.

சடுதியாக ஏற்படும் வேறு அறிகுறிகளான நடப்பதில் சிரமம், உடற் சமநிலை தளம்புதல், ஈடாட்டம், தலைச்சுற்று, உடல் உறுப்புகளின் செயற்பாட்டை ஒருங்கிணைத்து செயலாற்றுவதில் சிரமம் ஆகியவற்றிற்கும் முணுமுணுக்கும் பக்கவாதமே காரணமாகலாம்.

காரணம் சொல்ல முடியாத மிகக் கடுமையான தலைவலி மற்றுமொரு முக்கிய அறிகுறியாகும்.

இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால், அவை மிகக் குறைந்த நேரம் மட்டுமே நீடித்தாலும் இலேசாக எடுத்து, கவனத்தில் கொள்ளாமல் விடவேண்டாம். உடனடியாக பாதிப்புற்றவர் வைத்திய ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

Source; American Health Association

– டாக்டர் எம்.கே. முருகானந்தன்-

Read Full Post »

திடீரென வந்து மறைந்த பக்கவாதம்

அந்த மரணச் செய்தியை அறிந்தபோது மிகுந்த கவலையாக இருந்தது. போதிய வைத்திய வசதி இல்லாத பிரதேசத்தில் வாழ்ந்த அந்த அறுபது வயதான குடும்பத் தலைவரை வீணாக இழக்க நேர்ந்ததோ எனச் சிந்திக்க வைத்தது. ஆயினும் மருத்துவம் என்பது கடவுளுக்கோ அல்லது இயற்கை நியதிக்கோ சவால் முடியாதது என்பதையும் மனம் ஒத்துக் கொண்டது.

நடந்தது இதுதான். கடையில் வேலையாக இருந்து விட்டு, மதியம் வீடு திரும்பி சாப்பிட உட்கார்ந்தவருக்கு திடீரென தலைசுற்றி தூக்கி எறியுமாற் போல இருந்தது. வாய் கொன்னித்தது. ஒரு பக்கம் கையும் காலும் செயலிழந்து சோர்ந்தன. எல்லோரும் பயந்துவிட்டார்கள்.

பக்கவாதம் தான் (Stroke) வந்து விட்டதோ என! மனைவி அவசர அவசரமாக எதோ கஷாயம் அவித்துக் கொடுக்க மகன் வைத்தியரிடம் ஓடினான். பட்டம் பெற்ற வைத்தியர் அருகில் கிடையாது.

சுதேச வைத்தியர் தான் பரிவோடு உதவினார். அன்றே குணமாகிவிட்டது. ஆயினும் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் அது திரும்ப வந்தபோது வைத்தியசாலையில் அனுமதித்த போதும் காப்பாற்ற முடியவில்லை.

இது ஒரு சிறிய அளவிலான பக்க வாதம் (Minor Stroke) ஆகும். மருத்துவத்தில் தற்காலிகமாகத் தோன்றி மறையும் நாடி அடைப்பு ( Transient Ischemic attack-TIA) என்பார்கள். அத்தகைய சிறிய பக்க வாதம் வந்தவர்களில் பத்து சதவீதத்தினருக்கு மீண்டும் அத்தகைய சிறிய பக்கவாதம் அல்லது பாரிய பக்க வாதம் ஓரிரு வாரங்களுக்குள் வரக் கூடும் என்பது 20 வருடங்களுக்கு மேலாக மருத்துவ ரீதியாகத் தெரிந்த செய்தியாகும்.

ஆயினும் பெரும்பாலான மேலை நாடுகளில் கூட இத்தகையவர்களுக்கு வெளி நோயாளர் பிரிவிவலயே சிசிச்சை அளிக்கப்படுகிறது. தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதில்லை.

“இது தவறு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டால் அது மீண்டும் வருவதற்கான சாத்தியம் குறைந்து விடும்” என 1314 பேரைக் கொண்டு ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்த டாக்டர் பீற்றர் ரொத்வெல் கூறுகிறார்.

நோய்க்கு முன்னும் பின்னுமாக 5 வருடங்களாகச் செய்த ஆய்வு இது. இந்த ஆய்வின் போது நோயுற்றவர்களுக்கு உடனடியாக 300 மி.கி. அஸ்பிரினும், 300 மி.கி குளொபிடோகிரல் (clopidogrel) மருந்தும் கொடுக்கப்பட்டது. இவற்றிற்கு இரத்தம் உறைதலைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. இவை தொடர்ந்து கொடுக்கப்பட்டதோடு, கொலஸ்டரோலைக் குறைக்கும் மருந்தான சிம்வஸ்டடின் 40 மி.கி மருந்தும், தேவை ஏற்படும் போது இரத்த உறைதலைத் தடுக்கும் விசேட மருந்துகளும் கொடுக்கப்ட்டன.

இவ்வாறு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட 656 பேரில் ஒருவருக்குக் கூட நோய் திரும்ப வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தீவிர சிகிச்சை அளிக்கப்படாத 658 பேரில் ஒன்பது பேருக்கு திரும்ப வந்தது.

எனவே நாம் செய்ய வேண்டியது என்ன? சிறிய பக்க வாதம் (Minor Stroke)யாருக்காவது வந்தால் உடனடியாக ஒரு அஸ்பிரின் மாத்திரையைக் குடிக்கக் கொடுத்து விட்டு வைத்தியரிடம் கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிப்பதுதான்.

குடிக்க கொடுக்க வேண்டியது அஸ்பிரின் அல்லது டிஸ்பிரின் மாத்திரைதான், பரசிட்டமோல் அல்ல என்பதை நினைவில் வைத்திருங்கள். ஏனெனில் அஸ்பிரின் மாத்திரைக்குதான் இரத்தம் உறைதலைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.

0.0.0

Read Full Post »