Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘பாடசாலை அபிவிருத்தி’ Category

>

சரஸ்வதி சிலைகள்

கல்விக்கு உரியவள் சரஸ்வதி என்பது எமது சமூகத்தின் பாரம்பரிய நம்பிக்கை. தினமும் பாடசாலை தொழுமையுடன் ஆரம்பிக்கிறது. மாணவர்கள் தேவாரம் மற்றும் துதிப் பாடல்கள் பாடி தினமும் நாளை அர்ப்பணிப்புடன் ஆரம்பிக்கும்போது அவர்கள் வணக்கத்திற்கு ஒரு சரஸ்வதி சிலை அவசியம் என சில மாதங்களுக்கு முன்னர் இங்கு குறிப்பிட்டிருந்தோம்.

இப்பொழுது எமது பாடசாலையின் இரு வளாகங்களுக்கும் தனித்தனியே ஒவ்வொரு சரஸ்வதி சிலை செய்வதற்கான நிதியுதவி கிட்டியுள்ளது.

  • பிரித்தானியாவில் (UK) வாழும் எமது பாடசாலையின் பழைய மாணவரான பத்மநாதன் சோதிநாதன் அவர்கள் ஒரு இலட்சம் பணத்தைஅன்பளிப்பாகத் தந்துள்ளார். இப் பணத்தில் பிரதான வளாகத்தில் சரஸ்வதி சிலை அமைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. தனது தாயாரான திருமதி.இராசலட்சுமி பத்மநாதன் அவர்களது நினைவாக இந்தச் சிலையை செய்து தருகிறார். இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபரான திரு.செ.பத்மநாதன் அவர்களின் பாரியாரும், புகழ் பெற்ற உயிரியல் ஆசிரியர் நாகநாதன் அவர்களது தாயார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • திரு.சிவப்பிரகாசம் முகுந்தன் (USA) அவர்கள் ரூபா ஒரு இலட்சம் பணத்தை அன்பளிப்பாகத் தந்துள்ளார். இந்நிதியைக் கொண்டு பாடசாலையின் பாலர் வளாகத்தில் சரஸ்வதி சிலை அமைக்கப்பட இருக்கிறது. இது அவரது தகப்பனார் திரு.வை.கா.சிவப்பிரகாசம் அவர்களது நினைவாக அமைக்கப்பட இருக்கிறது. வை.கா.சி எனவும் A+ எனவும் அக்கால மாணவர்களால் அன்போடு அழைக்கப்பட்ட திரு.வை.கா.சிவப்பிரகாசம் எமது பாடசாலை பெற்றெடுத்த சிறந்த கல்விமான்களில் ஒருவராவார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் M.A. பட்டதாரியான இவர் காட்லிக் கல்லூரி ஆரம்பத்தில் ஆசிரியராகக் கடமையாற்றினார். கொழும்பு சஹீராக் கல்லூரியிலும் கடைமையாற்றினார். பின்னர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியன் அதிபராகவும் கடமையாற்றிவராவார்

நிதியுதி அளித்த திரு.சிவப்பிரகாசம் முகுந்தன் USA மற்றும் பத்மநாதன் சோதிநாதன்(UK) ஆகியோருக்கு எமது பழைய மாணவர் ஒன்றியத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந் நிதியுதிகளைப் பெற்றுக் கொடுப்பதில் ஊக்கம் செலுத்திய எமது பழைய மாணவர் ஒன்றிய கண்டிப் பிரிவின் தலைவர் திரு.சி.வாசுதேவன் அவர்களுக்கும் கண்டி பழைய மாணவர் ஒன்றிய உறுப்பினர் திரு.கந்தையா செல்வமோகன் அவர்களுக்கும் எமது நன்றிகள். அதேபோல நோர்வேயில் வாழும் திரு.இரத்தினசபாபதி கிருஸ்ணராசா அவர்களுக்கும் எமது நன்றிகள்.

இச் சிலைகளை  தம்பசட்டியைச் சார்ந்த ஆச்சாரியார் வேலுப்பிள்ளை அவர்கள்  செய்து தருவதற்கு இணங்கியுள்ளதாக அறிகிறோம்.

Read Full Post »

>

புதிய கட்டிடம்

எமது பாடசாலைக்கு மிக அவசியமாகத் தேவைப்படுவது புதிய இரண்டு மாடிக் கட்டிடமாகும். இடவசதி மிகக் குறைவாக இருப்பதால் சிரமங்கள் பல எதிர்நோக்கப்படுகிறது.

போருக்குப் பின்னான இன்றைய காலத்தில் எனது பாடசாலையில் மாணவர் தொகை திடீரென அதிகரித்தததை அடுத்து இடப் பற்றாக்குறை அதிகமாக உணரப்படுகிறது.

சில மாணவர்களுக்கான வகுப்புகள் களஞ்சிய அறையிலும்,

களஞ்சிய அறை வகுப்பிறையானது

மற்றொன்று விளையாட்டு மைதான அரங்கிலும் நடப்பதை புகைப்படங்களில் நீங்கள் காணலாம்.

விளையாட்டு மைதான அரங்கும் வகுப்பறையானது

ஆயினும் புதிய கட்டம் ஒன்றை அமைப்பதற்கு நிதி மிகப் பெரும் பிரச்சனை. குறைந்தது 30 – 40 இலட்சங்களாவது தேவைப்படும். இதனை உள்ளுர், வெளிநாடுகளில் உள்ள பழைய மாணவர்கள் மற்றும் அபிமானிகளால் நிறைவு செய்வது கஸ்டம்.

சில அரச சார்பற்ற நிறுவனங்களை அணுகியபோதும் நிறைவேறவில்லை. தொடர்ந்து முயற்சி செய்யப்படுகிறது. வன்னயில் முனைப்பாக இருப்பதால் அரசாங்கமும் அண்மையில் செய்யும் எனத் தோன்றவில்லை.

கைவிடப்பட்ட பழைய இரட்டைமாடிக் கட்டிட அத்திவாரம்

புதிய கட்டடம் அமைப்பதற்கான உங்கள் அனைவரதும் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.
கருத்துரைப் பக்கத்தில் உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாமே.

சிறுநீர்க் கழிப்பிடம்.

 பிரதான பாடசாலைக்கான சிறுநீர்க் கழிப்பிடம்.

பிரதான பாடசாலையின் சிறுநீர்க் கழிப்பிடம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. அது சுத்தமும் சுகாதாரமும் மிக்கதாக இருந்தால்தான் மாணவ மாணவிகள் அசூசையின்றி செல்லக் கூடியதாக இருக்கும். அதற்கேற்ற புதிதாக நவீன சிறுநீர்க் கழிப்பிடம் அமைக்க வேண்டியது மிக அவசரத் தேவையாகும்.

இதற்கும் அரசநிதி பெறுவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகிறது.

சுற்றுமதில் சித்திரங்கள்

பாடசாலையின் சுற்றுமதில் சுவரின் முற்புறமதில், உட்பக்கங்கள் மற்றும் கட்டிடங்களின் வெளிச் சுவர்களிலும் சித்திரங்கள் வரையப்பட வேண்டும்.

மாணவர்களின் அறிவிவிருத்திக்கு பயன்படக் கூடிய சித்திரங்களையும், வரைபடம், ஒழுக்க சுகாதார நடைமுறைகள் போன்றவற்றை பல முன்னணிப் பாடசாலைகள் வரைந்திருப்பதை அறிவீர்கள். இது மாணவர்களின் பொது அறிவு விருத்திக்கும், கற்றலுக்கு உதவும் விதமாகவும், பாடசாலையை அழகுறுத்தவும் அவசியமானது.

வெறுமையான சுவர்

வெறுமையாக இருக்கும் சுற்றுமதிலின் இந்த பகுதியில் அழகிய, அறிவுறுத்தும் சித்திரம் இருந்தால் எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை பண்ணிப் பாருங்கள்.

ஒரு இடைவெளியை சிமெந்து பூசி சித்திரம் வரைய சுமார் இருபத்தி ஐயாயிரம் (25,000) தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பங்களித்தவர் விபரங்கள் அனுசரணை என்ற சிறுதலைப்பில் ஒவ்வொரு சித்திரத்திலும் எழுதப்படும். மறைந்தோர் ஞாபகமாகவும் செய்யலாம்.

சரஸ்வதி சிலை

கல்விக்கு உரியவள் சரஸ்வதி என்பது எமது சமூகத்தின் பாரம்பரிய நம்பிக்கை. தினமும் பாடசாலை தொழுமையுடன் ஆரம்பிக்கிறது. மாணவர்கள் தேவாரம் மற்றும் துதிப் பாடல்கள் பாடி தினமும் நாளை அர்ப்பணிப்புடன் ஆரம்பிக்கும்போது அவர்கள் வணக்கத்திற்கு ஒரு சரஸ்வதி சிலை அவசியம் என அதிபர்களும் ஆசிரியர்களும் அபிப்பிராயப்படுகிறார்கள்.

அவ்வாறான ஒரு சிலை செய்வதற்கு சுமார் 35,000 முதல் 40,000 செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மறைந்த உங்கள் தாய் தந்தையர் அல்லது குடும்பப் பெரியார் நினைவாக செய்யப்பட்டால் அவர் பெயர் அதனடியில் பொறிக்கப்பட்டு காலாகாலத்திற்கு நினைவு கூரப்படும்.

பிரதான மண்டபத்தின் தரைக்கு மாபிள் கல் பதித்தல்

பாடசாலை பிரதான மண்டபத்தின் தரை மிகப்பழமையானது. எவ்வளவு முயன்றாலும் முழுமையாகச் சுத்தப்படுத்த முடியாதளவு பழுதாகிவிட்டது. ஆயினும் பிரார்தனையின் போதும் ஏனைய விழாக்கனிள் போதும் மாணவர்கள் அந்தத் தரையிலேயே உட்கார வேண்டியுள்ளது.

இப்பொழுதுள்ள செப்பனிட வேண்டிய மண்டபத் தரை

எனவே இத்தரைக்கு மாபிள் கல் பதித்தல் மிக அவசியமான பணியாகியுள்ளது. அவ்வாறு செய்தால் சிரமமின்றி கூட்டி அல்லது ஈரத்தால் துடைத்தோ இலகுவாகச் சுத்தம் செய்து மாணவர்களை அழுக்குப் படாமல் உட்காரச் செய்யலாம்.

ஏற்கனவே அதிபர் காரியாலயம்  மாபிள் பதிக்கப்ட்டுள்ளது.

மாபிள் பதித்த அதிபர் காரியாலயம் மற்றும் மண்டபத்தின் வரவேற்புப் பகுதி

முழு மண்டபத்திற்கும் பதிக்க ரூபா 5 இலட்சம் செலவாகக் கூடும். ஒருவரால் இதைச் செய்ய முடியாதவிடத்து இதனைக் கூட்டு முயற்சியாகச் செய்யலாம் எனத் தோன்றுகிறது. கருத்துக்களை வரவேற்கிறோம்.

சிறிய பாடசாலையின் முன் வாயில் மொட்டையாக நிற்கிறது. அதற்கு முகரி செய்ய வேண்டியுள்ளது.

தளபாட பராமரிப்பும், வர்ணம் பூசுதலும்

பாடசாலை தளபாடங்களை பேணிப் பாதுகாப்பதற்கு பராமரிப்பு அவசியம். 2-3 வருடங்களுக்கு ஒரு முறை அவற்றைத் திருத்தி வர்ணம் பூச சுமார் ஐப்பதினாயிரம் தேவைப்படும்

சிறிய பாடசாலை சுற்று மதில்

சிறிய பாடசாலையின் முற்பகுதி அழகிற்காகவும் பாதுகாப்பிறகாகவும் இரும்புவலை வேலி அமைக்கப்பட்டுள்ளது.

ஆரம்பப் பாடசாலையின் பிற்புற கிளுவமர வேலி

ஆயினும் ஏனைய மூன்று பக்கங்களையும் சுற்றி மதில் அமைக்க வேண்டியுள்ளது.

Read Full Post »

>
பாடசாலையின் அண்மைக்கால அபிவிருத்திப் பணிகள்

பாடசாலையின் அபிவிருத்தியில் பழைய மாணவர்கள் பலரும் ஈடுபாடு காட்டி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கு வாழ்ந்தாலும் தாம் ஆரம்பக் கல்வியைப் பெற்ற பாடசாலையின் அபிவிருத்திக்கும், தற்போதைய மாணவர்களின் முன்னேற்றத்திலும் பலரும் அக்கறை காட்டி வருவது மிகவும் பெறுமதி வாய்ந்த பணியாகும்.

அண்மையில் ஆரம்பிக்கபட்டுள்ள மற்றும் செய்து முடிக்கப்பட்டுள்ள சில பணிகள் பற்றிய தகவல்களை தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

முகப்பில் உள்ள புகைப்படம் பாடசாலையின் மேற்குப் புற வாசலுக்கு அருகில் உள்ள மரமொன்றில் மாணவர்களின் பொது அறிவு விருருத்திக்காக அதன் பெயர் எழுதப்பட்டு இருப்பதைக் காணலாம்

சைக்கிள் தரிப்பிடம்

எமது பாடசாலை ஒரு உள்ளுர் சிறிய ஆரம்பப் பாடசாலையாக இருந்த போதும் அதற்கும் ஒரு சைக்கிள் தரிப்பிடம் (பார்க்) அவசியமாக இருந்தது.

இதுவரை இவ்வாறுதான் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

பாடசாலைக்கு சைக்கிளில் வரும் சில மாணவர்களுக்காக மட்டுமின்றி, ஆசிரியர்களது சைக்கிள்கள் மற்றும் வேறு தேவைகளுக்காக வரும் அதிகார்கள், பெற்றோர், நலன்விரும்பிகள் போன்றோரது வாகனங்களை விடுவதற்குமாக இது அவசியம் என உணரப்பட்டது.

மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்படுவதைக் காணுங்கள்.


இதற்கான நிதியை டென்மார்க்கில் வாழும் இரத்தினசபாபதி. கிருஸ்ணராசா அவர்களும் அவரது நண்பர்களுமாக இணைந்து சேர்த்துக் கொடுத்துள்ளார்கள்.

இதற்காக ரூபா 128,000 கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்த நிதியைக் கொண்டு 40 அடி நீளமான சைக்கிள் தரிப்பிடத்தை பாடசாலையின் பெரிய கதவிற்கு மேற்குப் புறமாக மதிலை அண்டிய நிலப்பரப்பில் அமைப்பதற்கான பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான விசேட வகுப்புகள்

மெல்லக் கற்கும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கான விஷேட வகுப்புகளை பாடசாலையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கல்வித் தரத்தில் மிகவும் பின்தங்கியிருந்த எட்டு (8) மாணவர்கள் இவ் வகுப்புகள் மூலம் முன்னேற்றமடைந்து வழமையான வகுப்புகளுக்கு சேர்க்கப்பட்டுள்ளமை இத்திட்டத்தின் மிகப் பெரிய வெற்றியாகும்.

அண்மையில் வன்னியிலிருந்து இடம் பெயர்ந்த 17 மாணவர்கள் எமது பாடசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் நான்கு பேர் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதால் அவர்கள் இப்பொழுது இவ் விசேட வகுப்புளில் உள்வாங்கப்பட்டுளனர்.

பிரபல வர்த்தகர்களான அமரர்.சி.திருச்செல்வம் மற்றும் அமரர்.சி.சிவகுலசிங்கம் ஆகியோர் நினைவாக இத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நிதியுதவியை அவர்களது புத்திரர்களான தி.செல்வமோகன், திரு.சி.வசந்தன் ஆகியோர் வழங்கி வருகிறார்கள். இரண்டாம் கட்ட நிதியான ரூபா 20,000 இம் மாதம் வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலை நூலகத்திற்கான தளபாடங்கள்

பாடசாலை நூலகத்தின் முகப்புத் தோற்றம்

பாடசாலை நூலகத்திற்கான ஒரு புதிய கட்டடம் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பாடசாலையில் தெற்குப் பகுதியில் திறந்த அரங்கத்திற்கு மேற்குப் புறமாக அமைக்கப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். இதற்கான நிதியை தன்னார்வத் தொண்டு நிறுவனம் வழங்கியிருந்தது.

ஆயினும் தளபாடங்கள் இல்லாமையால் அது முழுமையாகச் செயற்பட முடியாதிருந்தது.

இப்பொழுது தளபாடங்களுககான நிதியை வியாபாரிமூலை பிரபல வர்த்தகர் அமரர் திரு.நா.ம.பரஞ்சோதி, திருமதி.பரஞ்சோதி அவர்களின் நினைவாக அவரது அருமைப் பிள்ளைகளும் மருமக்களும் தாமாகவே முன்வந்து உதவி உள்ளனர்;.

இந்த முயற்சியில் ஈடுபட்டு உழைத்த அமரரின் மகன் பரஞ்சோதி அருளானந்தம் (லண்டன்) மற்றும், மருமகன் இராசலிங்கம் சுந்தரலிங்கம் (இளைப்பாரிய தபாலதிபர்.கனடா) அவர்கள் பாராட்டுக்குரியவர்.

அவர்கள் அளித்த ரூபா 150,000 நிதியைக் கொண்டு தகுந்து தளபாடங்களை பெறும் முயற்சியில் அதிபர் மு.கனகலிங்கம் ஈடுபட்டுள்ளார்.

பாடசாலை கணனி வசதிகள்

கல்வி அமைச்சின் அனுசரனையுடன் கணனிக் கூடம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு இப்பாடசாலை அடையாளம் காணப்பட்டுள்ளது. பாடசாலை அதிபரின் கணனித் தேர்ச்சியும் ஆர்வமும் அதற்கான ஒரு நேர்நிலையை ஏற்படுத்தியுள்ளமை காரணங்களாக அமைந்தன.

மேலே உள்ளது தற்போது பாடசாலை அலுவலகத்தில் உள்ள ஒரே ஒரு கம்பியூட்டர் ஆகும்.

இதற்கு வலுசேர்க்கும் வகையில் ஒரு கணனித் தொகுதியை பாடசாலை அபிவிருத்திச்சங்கம் அல்லது பழைய மாணவர் அமைப்பு ஏற்படுத்திக்கொடுப்பது அத்தியாவசியமாக உள்ளது. பங்களிப்பு செய்ய விரும்புவோர் தயவு செய்து தொடர்பு கொள்ளவும். இதற்கு நிதியாக ரூபா 20,000.00 இருபதினாயிரம் தேவைப்படுகிறது.

நன்றி

மேற்படி பணிகளுக்கான நிதியுதவியை அளித்த பழைய மாணவர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றி பழைய மாணவர் ஒன்றியம் தெரிவித்துக் கொள்கிறது

எமது பாடசாலையின் அபிவிருத்திக்கு உங்கள் தொடர்ச்சியான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கிறோம்.

நன்றி.

Read Full Post »

>எமது பாடசாலை அபிவிருத்தியில் மற்றுமொரு பங்களிப்பு.

பாடசாலையின் பழைய மாணவியும் சுகாதார திணைக்களத்தில் பெருந்தோட்டப் பகுதிப் பணிப்பாளருமான மருத்துவ கலாநிதி உமா சிவபாதசுந்தரம் அவர்களின் நிதியுதவியில் நடைபெற்றுள்ளது.

எமது பாடசாலையின் பாலர் பிரிவினது வளாகம் சுற்று மதில் இன்றி வெறுமனே கதியால் நடப்பட்டு முட்கம்பி வேலியினால் அடைக்கப் பட்டிருந்தது.

இது காலத்திற்கு ஏற்றது அல்ல. தற்போதையை பாடசாலைகள் எல்லாம் வர்ணம் பூசப்பட்ட மதில்களுடன், அதில் பொதுஅறிவையும் அழகுணர்ச்சியையும் வளர்க்கும் சித்திரங்கள் தீட்டப்பட்டு கவர்ச்சியாக இருக்கும்போது எமது மாணவர்கள் முட்கம்பி வேலிக்குள் இருப்பது பொருத்தமன்று.

பதிவின் ஆரம்பத்திலுள்ளது புதிய தோற்றம்.

கீழேயிருப்பது முன்பிருந்து பழைய முள்வேலி.

அதனால் அது பாதுகாப்பு அற்றதாக இருந்ததுடன் பிள்ளைகளுக்கு தவறுதலாகக் காயம் ஏற்படுத்தவும் கூடும் என அஞ்சப்பட்டது.
அத்துடன் பாடசாலைக்கு அழகு சேர்ப்பதாகவும் இருக்கவில்லை.

அழகான மனதிற்கு இதமான சுற்றுச் சூழல் கற்கைச் செயற்பாட்டை ஊக்குவிக்கவும் செய்யும்.

அதனால் பாடசாலையின் முகப்பு எல்லையை சுற்றுமதில் கொண்டு அடைப்பது அவசியம் எனப்பட்டது. அது நல்லதாயினும் அந்த மதிலானது குறுகிய பரப்பளவில் இருக்கும் கட்டடத்திற்கான வெளிச்சத்தை தடைசெய்யும் என அஞ்சப்பட்டது.

எனவே அதிபர் அதனை பாதுகாப்பாக அடைப்பதற்கு புதிய திட்டம் ஒன்றைத் தீட்டினார்.

அதன் பிரகாரம் அத்திவாரம் இட்டு தூண்கள் நாட்டி இடைவெளிகளை இரும்பு வலையினால் அடைப்பது என முடிவு செய்யப்பட்டது.

அதற்கான நிதியுதவியை டாக்டர் செல்வி உமா சிவபாதசுந்தரம் தந்து உதவினார்கள்.

ரூபா அறுபதினாயிரம் செலவு கொண்டு தனது பெற்றோர்களான ஆ.சிவபாதசுந்தரம் தம்பதிகளின் நினைவாக அந்த இரும்புவலை வேலி அமைக்கப்பட்டுள்ளது.

இது பாடசாலையின் மற்றொரு தோற்றம். புதிதாக அமைக்கப்பட்ட இரும்பு வலை அடைப்புடன் அழகாகத் தோற்றம் அளிக்கிறது.

அவரின் தன்னலம் கருதாத பணிக்கு எமது பழை மாணவர் ஒன்றியம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது

Read Full Post »

>பாடசாலை அபிவிருத்திக்கான புதிய வேலைத் திட்டங்கள்.

எமது ஆரம்பப் பாடசாலையான மேலைப் புலோலி சைவப்பிரகாச வித்தியாலயம் கட்டடங்கள், தளபாடங்கள், விiயாட்டு உபகரணங்கள் உட்பட பொதீக வளத் பற்றாக்குறையில் இருப்பதை அறிவீர்கள். கல்வியிலும் முகாமைத்துவத்திலும் முன்னேற்றம் கண்டு வடமராட்சிப் பகுதியின் சிறந்த ஆரம்பப் பாடசாலையாக கல்வித் திணைக்களத்தால் தெரிவு செய்யப்பட்ட போதும் அதன் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை.

அவற்றை நிவர்த்தி செய்வதற்கு எமது ஒன்றியம் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர்கள், தொண்டு ஸ்தாபனங்கள் மூலமாக பெரிய திட்டங்களையும், சிறிய அளவிலான திட்டங்களை பழைய மாணவர்கள் மூலமாகவும் நிறைவேற்ற உத்தேசித்துள்ளோம்.

இப்பொழுது அவசரமாகச் செய்யக் கூடிய சில திட்டங்களை பாடசாலை அதிபர் முன்வைத்துள்ளார். ஆர்வமுள்ள பழைய மாணவர்களும், நலன் விரும்பிகளும் இத் திட்டங்களை நிறைவேற்ற முன்வருவார்கள் என நம்புகிறேன். தாங்களாக தனியாகச் செய்து கொள்ளலாம். அல்லது ஒரிருவர் சேரந்தும் நிறைவேற்றலாம். தங்கள் தாய் தந்தையர் அல்லது குடும்ப முக்கியஸ்தர் நினைவாக செய்வதும் நல்லதே.

அவ்வாறு அன்பளிப்பு செய்பவர்களது பெயர், அன்பளிப்புத்தொகை, யாரது நினைவாகச் செய்யப்பட்டதோ அவரது பெயர், நிறைவு செய்யப்பட்ட பணி ஆகியவற்றை குறிக்கும் செய்திப் பலகை பாடசாலை உள் மண்டபத்தில் வைக்கப்படும். ஏற்கனவே நினைவுப் பரிசில்கள் சம்பந்தமாக எமது ஒன்றியம் தயாரித்தளித்த அத்தகைய அறிவுப் பலகை பாடசாலை மண்டபத்தை அலங்கரிப்பது குறிப்பிடத்தக்கது.

அ. பாடசாலை சுற்றுமதிலின் உட்புறத்தில் கல்வி சம்பந்தமான ஓவியங்கள் வரைதலும், ஓவியங்களும்

ஓவ்வொன்றும் ரூபா15,000/- (10துண்டுகள் வரை)

ஆ. வருடாந்த விளையாட்டுப் போட்டி

1) பரிசில்கள் – ரூபா 15,000.00 வருடாந்தம்

2) சிற்றுண்டிகள் ரூபா 10,000.00 வருடாந்தம்

3) போட்டிக் கிண்ணங்கள் ரூபா 10,000.00

4)ஏனைய தேவைகள் தொடர்பானவை (மின்சார ஒலிபெருக்கி, புகைப்படங்கள்,போக்குவரத்து) ரூபா 10,000.00 வருடாந்தம்

இ. கீழ் மட்ட வகுப்பு வளாகத்திற்கு சுற்று மதில் அமைத்தல் (பெண் பாடசாலை)

ரூபா 35,000/- (முன்பக்கம் மாத்திரம்)

ஈ. துவிச்சக்கரவண்டி தரிப்பிடம்- ரூபா 50இ000ஃ-

உ. இரண்டு பாடசாலை கிணறுகளையும் மேற்புறம் மூடி அடைத்தல் (துப்பரவாக வைத்திருப்பதற்கு) – ரூபா 35,000

கிணறுகள் மூடி அடைத்தல்

பாடசாலையின் இரு வளாகங்களிலும் தனித்தனியாக கிணறுகள் உள்ளன. அவற்றிலிருந்து நீர் எடுக்க மோட்டார் வசதியும் உண்டு. ஆயினும் அக் கிணறுகள் சுகாதார முறைப்படி மூடி அடைக்கப்படவில்லை. அதனால் வெளிலுள்ள அழுக்குகளால் அது மாசடையவும் அதனால் மாணவர்களின் ஆரோக்கியம் கெடுவதற்கும் வாய்ப்பு உள்ளது என்பதை மறுக்க முடியாது.

அந்த இரு கிணறுகளையும் மூடி அடைப்பதற்கு ரூபா 30000.00 (முப்பதினாயிரம்) தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

ஆரம்ப பாடசாலை முற்பக்க மதில் அமைத்தல்

ஆரம்ப பாடசாலை (முன்னைநாள் பெண்கள் பகுதி) தற்பொழுது முற்கம்பி வேலியால் அடைக்க்பட்டுள்ளது. இது ஓடிவிளையாடும் பிள்ளைகளுக்கு ஆபத்தானது. எனவே சுற்றி மதில் கட்ட வேண்டியுள்ளது.

ஆயினும் பாடசாலையின் இவ்வளாகம் சிறியது ஆகையால் முழுமையாக மூடி மதில் கட்டுவது காற்றோற்றத்திற்கு தடையாக இருக்கம் எனக் கருதுகிறார்கள். எனவே முhண்களை சிமேந்தினால் கட்டி இடைவெளிகளை பிளாஸ்டிக் வலைகளால் அடைப்பபதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதற் கட்டமாக பாடசாலையின் முற்பக்கத்தை மட்டும் இவ்வாறு அடைப்பதற்கு ரூபா 30,000 தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுமதிலில் அறிவு மேம்பாட்டுச் சித்திரங்கள் வரைதல்

பாடசாலைச் சூழல் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு உகந்ததாக அமைதியுடனும், வசதிகள் நிறைந்ததாக இருக்க வேண்டும். ஆனால் அது மட்டும் போதாது அவர்களின் அறிவு வளர்ச்சியை ஊக்குவிப்பதாகவும் அமைய வேண்டும் எனக் கல்வியாளர்கள் கருதுகிறார்கள்.

உதாரணமாக பாடசாலை வளவினுள் ஒரு மரம் இருந்தால் அதன் பெயர், தாவரவியல் பெயர். பயன்பாடு போன்றவற்றை அதன் மீது ஒரு பலகையில் எழுதித் தொங்கவிடலாம். அதனைப் பார்க்கும் கீழ்வகுப்பு மாணவனுக்கு தாவரத்திற்கு வழமையான பெயரைவிட தாவரவியல் பெயர் என ஒன்று இருப்பதை அறியமுடியும்.

இதேபோல பாடசாலையின் சுவர்களில் பொன்மொழிகள், அறிவியற் கருத்துக்கள் போன்றவற்றை எழுதுவதாலும், அறிவு மேம்பாட்டுச் சித்திரங்களை வரைவதாலும் மாணவர்களின் அறிவை விசாலமாக்க முடியும். இது ஏற்கனவே கொழும்பு போன்ற வசதியுள்ள பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. எமது பாடசாலையிலும் இதனைச் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.

சுவரின் குறிப்பிட்ட பகுதிக்கு மேற்பூச்சுப் பூசி, வரணம் அடித்து, அதன் மேல் சித்திரம் வரைய ரூபா பதினையாயிரும் தேவை ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான 10 சித்திரங்களுக்கு மேல் வரைய முடியும்.

விரும்பியவர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிக்கு சித்திரம் வரைய நிதியுதவி அளிக்கலாம்.

துவிச்சக்கரவண்டி தரிப்பிடம்-

எமது பாடசாலைக்கு தினமும் பல மாணவர்களும், ஆசிரியர்களும் துவிச்சக்கரத்தில் வருகிறார்கள். பெரிய இரட்டை வாசல் கதவு அமைத்த பின்னர் சைக்கிள்களை தூக்கிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. உருட்டியபடியே உள்ளே கொண்டு செல்லலாம். ஆயினும் அவற்றை ஒழுங்கான முறையில் நிறுத்தி வைக்க தரிப்பிடம் கிடையது. புதிய தரிப்பிடம் அமைக்க ரூபா 50இ000ஃ- தேவைப்படுகிறது.



வருடாந்த விளையாட்டுப் போட்டி

வருடாந்த விளையாட்டுப் போட்டிக்கு பரிசில்கள், சிற்றுண்டிகள், போட்டிக் கிண்ணங்கள், மின்சார ஒலிபெருக்கி, புகைப்படங்கள், போக்குவரத்து போன்ற பல தேவைகள் உள்ளன. அவற்றிற்கு அதிக பணம் தேவைப்படுகிறது. இவற்றில் பலவும் வருடாந்தம் செய்யப்பட வேண்டியவையாகும். இதற்கான ஒழுங்கு செய்யப்பட்டால் பாடசாலை வருடாந்தம் எதிர் நோக்கும் செலவிற்கான நிரந்தர ஒழுங்கு செய்யப்பட்டுவிடும்.

இவை பற்றிய தனித் தனி விபரங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

மொத்தம் ரூபா 45,000 தேவைப்படும். ஆயினும் மொத்தமாக அன்றித் தனித்தனியாகவும் செய்து கொள்ளலாம்.

Read Full Post »

>மெல்லக் கற்றும் மாணவர்களுக்கான விசேட வகுப்புகள் ஆரம்பம்

வருடாந்த நிதித் தேவை:- ரூபா 40,000.00 (ரூபா நாற்பதினாயிரம்)

நிதி உதவு:- கண்டி விக்கினேஸ்வரா ஸ்டோரஸ்; உரிமையாளர்களான திரு.திருச்செல்வம் செல்வமோகன், திரு.சிவகுலசிங்கம் வசந்தன் ஆகியோர் தங்கள் தந்தையர் நினைவாக.

கற்றல் செயற்பாடானது மாணவர்களிடையே ஒரே விதமாக இருப்பதில்லை. ஒருவருக்கு ஒருவர் மாறுபாடாக இருக்கும். விரைவில் கிரகிக்கும் மாணவர்கள் இருப்பர். எதிர்மறையாக மிக ஆறுதலாகவே கிரகிப்பவர்களும் இருப்பர். கற்றதை விரைவில் மறந்து விடுபவர்களும், மீள மீள நினைத்து நினைவாற்றலை அதிகரிப்பவர்களும் இருப்பர்.

இவர்கள் அனைவரும் ஒரே வகுப்பில் சேர்ந்தே கற்க வேண்டியுள்ளது. இவ்வாறு பல்வேறு தரத்தினரும் சேர்ந்திருபதால் கற்பித்தல் செயற்பாடானது சிரமமானதாகும். ஏனெனில் சாதாரணமாகக் கற்கும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் வேகத்தில் மெல்லக் கற்கும் மாணவர்களால் கிரகிக்க முடியாததாக இருக்கும்.

கற்றலில் சற்று பின்தங்கி நிற்கும் மாணவர்களை மெல்லக் கற்கும் மாணவர்கள் என அழைப்பார்கள். மெல்லக் கற்கும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தி அவர்களையும் சமுதாயத்திற்கு பிரயோசனமான பிரசைகளாக மாற்றுவதற்கு உதவுவது மிகப் பெரிய சேவையாகும். எமது பாடசாலையில் உள்ள அத்தகையவர்களுக்கு வழமையான பாடங்களுக்கு மேலதிகமாக விசேடமாகக் கற்பித்தல் அவசியம் எனக் கருதி எமது அதிபர் திரு.மு.கனகலிங்கம் அதற்கென ஒரு திட்டத்தையும் முன் வைத்தார்.

அத் திட்டத்தை நாம் எமது பழைய மாணவர்கள் முன்னிலையில் சமர்ப்பித்தபோது நல்ல வரவேற்பு கிடைத்தது. சென்ற வருடம் திரு.ராசநாயகம் சுவாமிநாதன் இதற்கென ரூபா 5000.00 கொடுத்து ஆரம்பித்து வைத்தார்; ஆயினும் நிதிப் பற்றாக் குறையால் அதனைத் தொடர முடியவில்லை.

இப்பொழுது இதற்கான நிதியை வருடா வருடம் தருவதற்கு கண்டி விக்கினேஸ்வரா ஸ்டோரஸ் முன்வந்துள்ளது. அதன் உரிமையாளர்களான திரு.திருச்செல்வம் செல்வமோகன், திரு.சிவகுலசிங்கம் வசந்தன் ஆகியோர் தங்கள் தந்தையர் நினைவாக வழங்குகிறார்கள்.

விசேட வகுப்புகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தனியாக ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டு தினமும் 2-3 மணிநேரம் விசேடமாக பாடம் சொல்லித் தரப்படுகிறது. இதற்கு வருடாந்தம் சுமார் 40,000.00 தேவைப்படுகிறது. இந்த நிதியை அவர்கள் மனமுவந்து அளிக்கிறார்கள்.

அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

Read Full Post »

>எமது பாடசாலை பல அபிவிருத்திகளைக் காண வேண்டிய நிலையில் உள்ளதை அறிவீர்கள். அண்மைக் காலமாக பழைய மாணவர்கள், பெற்றோர்கள் ஆர்வலர்கள் உதவியுடன் பாடசாலையின் அபிவிருத்திக்கு தற்போதைய அதிபர்.மு.கனகலிங்கம் புதிய முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார். பழைய மாணவர் ஒன்றியத்தினரான எங்களது ஒத்துழைப்பு அவருக்கு நிறையவே உண்டு.

பாடசாலைக்கு ஒரு டெலிபோன் இணைப்பு இல்லாதது மிகப் பெரிய குறையாக இருந்தது. ஒவ்வொரு சிறிய தேவைகளுக்கும் நேரடியாகச் செல்வது அல்லது கடிதத் தொடர்பு கொள்வது எவ்வளவு கால தாமதத்தை ஏற்படுத்தும் என்பதைக் கற்பனை பண்ணிப் பாருங்கள்.

இந்நிலையில் எமது பாடசாலையின் பழைய மாணவரும், எமது ஒன்றியத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினருமான திரு.ஆறுமுகநாதன் சிவநாதன் (Siva Tours & Travels) மறைந்த தனது தாயார் நினைவாக பாடசாலைக்கு தொலைபேசி இணைப்பை வழங்குவதற்கான நிதியை வழங்கியுள்ளார். சிறிலங்கா தொலைபேசி இணைப்பிற்காகவும், அதற்கான ஒரு வருட வாடகைப் பணமாகவும் ரூபா 20000.00 (இருபதினாயிரம்) வழங்கியுள்ளார்.

பாடசாலையின் நாளந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு டெலிபோன் இணைப்பு மிக்க உதவியாக இருக்கும் என்பதோடு பழைய மாணவர்கள் நேரடியாகத் தொடர்பு கொள்ளவும் மிக்க உதவியாக இருக்கும்.

இத்தகைய உதவியை பாடசாலைக்கு வழங்கிய திரு.ஆறுமுகநாதன் சிவநாதன் அவர்களுக்கு எமது ஒன்றியத்தின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பாடசாலையின் டெலிபோன் நம்பர்:- 0212264872

Read Full Post »