Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘பாலகர்களின் உணவு’ Category

>

குழந்தைகளில் கிரந்தி என்று சொல்லப்படும் எக்ஸிமா தோன்றுவது உலகளாவிய ரீதியில் வரவர அதிகரித்துக் கொண்டு போவதாக தரவுகள் கூறுகின்றன. எக்ஸிமா என்பது ஒவ்வாமையால் (Allergy) தோலில் ஏற்படும் அழற்சி நோயாகும். குழந்தைகளின் முகம், அக்குள், கால் இறை போன்ற இடங்கள் சிவந்து அரிப்பெடுத்து தோல் உரிவது போன்றவை இதன் முக்கிய அறிகுறியாகும்.

மாசடைந்து வரும் சூழலும், ஊட்டப்படும் உணவுகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களும் இதற்குக் காரணம் என நம்பப்படுகிறது. பரம்பரை அலகுகளில் மாற்றங்களைக் கொண்டு வரும் (GI Foods) உணவுகளும் காரணமாக இருக்கலாம் என பலர் நம்புகிறார்கள்.
இதனைக் கருத்தில் கொண்டு, எந்த வயதில் குழந்தைகளின் எக்ஸீமா ஆரம்பிக்கிறது, எத்தகைய உணவுகளை பாலகர்களுக்கு அறிமுகப்படுத்துவது காரணமாக இருக்கலாம் என்பதைக் கண்டறிய சுவீடன் நாட்டில் 8176 குடும்பங்களைக் கொண்டு ஒரு ஆய்வு செய்யப்பட்டது.
14 சதவிகிதமான குழந்தைகளுக்கு ஆறு மாதமாகும் போதும், 20.9 சதவிகிதமான குழந்தைகளுக்கு ஒரு வயதாகும்போதும் எக்ஸிமா வந்தது கண்டறியப்பட்டது. தாய் அல்லது சகோதரங்கள் எக்ஸிமாவால் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தைக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதும் ஆய்வின் மூலம் தெரியவந்தது.
எனவே பரம்பரை அம்சம் முக்கியமான காரணம் என இதுவரை காலமும் நம்பப்பட்டதை இவ் ஆய்வும் உறுதிப்படுத்துகிறது எனலாம். எனவே பெற்றோர் சகோதரங்களில் இருந்த எக்ஸிமாவை இவ் ஆய்வு கணக்கில் எடுத்து, அதைத் தவிர்ந்த ஏனைய காரணங்களையும் ஆராய்வுக்கு உட்படுத்தினார்கள்.

அவர்கள் ஆய்வின் படி ஐந்து குழந்தைகளில் ஒன்றிற்கு எக்ஸிமா நோய் ஒரு வயதை அடைய முன்னரே ஆரம்பிக்கிறது. குழந்தைக்கு 9 மாதமாகு முன்னரே மீன் கொடுக்க ஆரம்பித்தால் எக்ஸிமா வருவதற்கான வாய்ப்புக் குறைகிறதாம். அதே போல வீட்டில் செல்லப் பிராணியாக ஒரு பறவை வளர்த்தாலும் எக்ஸிமா வருவதற்கான வாய்ப்புக் குறைகிறதாம்.

ஆனால் முட்டை, பசுப் பால் ஆகியவற்றை எப்பொழுது ஆரம்பிக்கிறார்கள் என்பதும், எவ்வளவு காலம் தாய்ப்பால் கொடுக்கிறார்கள் என்பதும் எக்ஸிமா வருவதற்கான சாத்தியத்தில் மாற்றம் ஏற்படுத்தவில்லையாம். பெற்றோர்கள் புகைப்பதும், வீட்டில் நாய் பூனை வளர்ப்பதும் கூட வாய்ப்பை அதிகரிக்கவில்லையாம். இது முன்னைய பல ஆய்வுகளிலிருந்து மாறுபடுகிறது.

ஆயினும் 9 மாதங்களுக்கு முன் மீன் ஆரம்பிப்பது எக்ஸிமா வருவதைக் குறைக்கிறது என்பதைத் தெளிவாகச் சொல்கிறது. குளிர் பிரதேச ஆழ்கடல் மீன்களிலுள்ள ஒமேகா3 (Omega 3) எக்ஸிமாவைத் தடுக்கும் என வேறு சில ஆய்வுகள் கூறியதையும் இவ்விடத்தில் நினைவு கொள்ளலாம்.

அமெரிக்க குழந்தைகள் மருத்துவ நிபுணர்கள் சபை கூட எக்ஸிமா வரக் கூடிய வாய்ப்புள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பாலை மட்டுமே முதல் ஆறு மாதம் வரையாவது கொடுக்க வேண்டும் எனச் சிபார்சு செய்துள்ளது. அதேபோல அத்தகைய குழந்தைகளுக்கு பசுப்பால், முட்டை ஆகியவற்றை விரைவில் ஆரம்பிப்பதை தவிர்க்க வேண்டும் என்றே பல மருத்துவ வழிகாட்டல்களும் சொல்லி வந்துள்ளன.

இந் நிலையில் இந்த ஆய்வின் முடிவை கண் மூடித்தனமாகப் பின்பற்றும் படி சிபார்சு செய்ய முடியாது. எக்ஸிமா நோய் ஏற்படுவதற்கு பரம்பரை முக்கிய காரணம் எனத் தெளிவானபோதும், பசுப்பால், முட்டை, கடலுணவு, விதைகள் ஆகியன எந்தளவு காரணமாகலாம் என்பதைத் தெளிவாகக் காட்ட மேலும் ஆய்வுகள் தேவைப்படுகிறது எனலாம்.

அத்துடன் குழந்தைகளுக்கு 9 மாதத்திற்கு முன்னரே மீன் அறிமுகப்படுத்த வேண்டும் என்று பெற்றோர்களுக்கு உடனடியாக அறிவுறுத்த முடியாதுள்ளது. மேலதிக ஆய்வுகள் இதனை உறுதிப்படுத்தும் வரை காத்திருப்பதே புத்திசாலித்தனமானது.எம்மவர்கள் பலர் ஆறு மாதத்தின் பின் குழந்தைக்கு மீனை அறிமுகப்படுத்துகிறார்கள். ஆயினும் இதன் சாதக பாதக பலன்கள் பற்றிய ஆய்வுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நன்றி:-தினக்குரல்

ஹாய் நலமா?

31.10.2008

Read Full Post »

>
உணவு ஒவ்வாமை என்பது பாலகர்கள் சிலருக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது.தாய்ப் பாலுடன் மட்டும் இருக்கும் குழந்தைகளுக்கு ஒவ்வாமை Allergy ஏற்படுவது குறைவு.தாய்ப்பாலுடன் அல்லது தாய்பாலை முற்றாக நிறுத்திய பின் மாப்பால் அல்லது முட்டை, Cereals போன்ற திட உணவுகளை ஆரம்பிக்கும் போதே பெரும்பாலும் இத்தகைய பிரச்சினைகள் தலை காட்ட ஆரம்பிக்கின்றன.

முட்டை,பசுப்பால்,கோதுமை,சோயா,கச்சான், ஏனைய விதைகள், சில வகை மீன்கள்,நண்டு,இறால் போன்ற கோதுள்ள கடலுணவுகள் ஒவ்வாமையை அதிகளவு ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.இவை குழந்தைகளிடம் மட்டுமல்லாது வளர்ந்த சிலரிடமும் அலர்ஜியை ஏற்படுத்துகின்றன.

இத்தகைய ஒவ்வாமை என்பது தோல் சிவந்து தடிப்பது, அரிப்பு எடுப்பது போன்றே பெரும்பாலும் வெளிப்படும்.ஆயினும் எப்பொழுதுமே அவ்வாறு என்றில்லை.

நாம் கிரந்தி என்று பொதுவாக சொல்லும் பாலகர்களின் எக்ஸிமா என்பது இத்தகைய உணவு ஒவ்வாமையின் வெளிப்பாடுதான். அதேபோல சில உணவுகளை உண்டால் வயிற்றுக் கோளாறுகள் ஏற்படுவதுண்டு. வயிற்று முறுக்கு,வயிற்றுப் பொருமல், வாய்வு,வாந்தி,வயிற்றால் இளக்கமாகப் போதல் போன்றவையும் கூட உணவு ஒவ்வாமையின் வெளிப்பாடுதான்.

பாலகர்களில் அதாவது ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் தோன்றும் இத்தகைய ஒவ்வாமைகள் அவர்கள் வளரவளர படிப்படியாக மறைந்து விடுவதுண்டு. இதற்கு வெளிப்படையான காரணம் சொல்ல முடியாதபோதும்,ஒவ்வாமைப் பொருளைக் குறைந்த அளவில் சிறிதுசிறிதாக குழந்தைக்குத் தெரிந்தோ தெரியாமலே கொடுக்கும்போது அவர்கள் அதிலிருந்து விடுபடுகிறார்கள் எனலாம்.

எனவே முட்டை ஒவ்வாமை பற்றிய ஆய்வு ஒன்று செய்யப்பட்டது.முட்டை ஒவ்வாமை உள்ள 94 பிள்ளைகளை 6 மாதங்களுக்கு ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். அவர்களுக்கு முட்டை சேர்க்கப்பட்ட கேக்கை தொடர்ச்சியாகவும் மிகக் குறைந்த அளவிலும் 6 மாதங்களுக்கு கொடுத்தார்கள்.படிப்படியாக கொடுக்கப்பட்ட கேக்கின் அளவானது அதிகரிக்கப்பட்டது.6 மாதங்களுக்குப் பின்னர் அவர்களுக்கு கேக்கில் உள்ள அளவிற்கு அதேயளவு பதப்படுத்தாத முட்டை கொடுக்கப்பட்டது.ஆச்சரியம்! அவர்களில் 95 சதவீதமானவர்களுக்கு எந்தவித ஒவ்வாமையும் எற்படவில்லை.

முட்டை அலர்ஜி எந்த முயற்சியும் இன்றித் தானாகவே அற்றுப்போவது புதினமல்ல.பெரும்பாலான பிள்ளைகள் பாடசாலை செல்லும் வயதை எட்டும்போது மறைந்து விடுவதை அக்கறையுள்ள பெற்றோர்கள் அவதானித்திருப்பார்கள். ஆனால் இந்த ஆய்வு சொல்வது என்னவென்றால் நீங்கள் உங்கள் குழந்தைக்கு நன்கு பதப்படுத்தப்பட்ட முட்டையை சிறிது சிறிதாகக் கொடுத்தால் அவர்கள் முட்டைக்கு மிக விரைவிலேயே இசைவடைந்து விடுவார்கள் என்பதுதான்.

சரி முட்டையை அவித்தோ அரை அவியலாகவோ கொடுக்கலாம்தானே? ஏன் கேக்கில் சேர்த்துக் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் கேட்கக் கூடும்.கேக் என்றல்ல வேறு முறைகளிலும் கொடுக்கலாம்.முட்டையை அதிகம் சூடாக்கி மிகவும் பதப்படுத்தப்பட்ட நிலையில் குழந்தைக்கு ஆரம்பத்தில் கொடுக்க வேண்டும் என்பதே முக்கியமாகும். அவிக்கும் போது நீரின் கொதிநிலையளவு அதாவது 100 C அளவிற்கே செல்கிறது. இந்தளவு பதப்படுத்தல் போதாது.அவனில்(Oven)அல்லது போறணையில் வைத்து வேக வைக்கும்போது மிக அதிக வெட்பத்தில் பதப்படுத்தப்படுகிறது.எனவே முட்டையில் உள்ள புரதங்கள் நன்கு பதமாகி ஒவ்வாமை ஏற்படுவதைக் குறைக்கின்றன.

ஆய்வு முட்டை பற்றியதுதான். ஆயினும் அது சொல்லும் கருத்தை ஏனைய உணவுகளுக்கும் பொருத்திப் பார்ப்பது தவறில்லை என நம்புகிறேன்.அதாவது ஒவ்வாமை உள்ள உணவு வகைகளை மிக அதிகளவு வெட்பத்தில் பதப்படுத்தி,சிறிது சிறிதாக அறிமுகப்படுத்தினால் ஒவ்வாமை விரைவில் மறையக் கூடும்.

அத்தோடு குழந்தைக்கு திட உணவுகளை ஆரம்பிக்கும்போது முதலில் அரிசி சார்ந்த உணவுகளை (உதாகஞ்சி) முதலில் கொடுங்கள்.ஏனெனில் அரிசியில் ஒவ்வாமையை ஏற்படுத்தும் புரதங்கள் இல்லை.மாறாக சீரியல்ஸ் கொடுக்கும் போது அவற்றில் கோதுமை மற்றும் சோளம் சேர்த்திருந்தால் ஒவ்வாமை ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகமாகும்.

ஆதாரம்: American Academy of Allergy, Asthma & Immunology

டாக்டர் எம்.கே. முருகானந்தன்

Read Full Post »