Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘பாலியல்’ Category

கேள்வி:- கே.சு…..  மட்டுவல
எனது நண்பனுக்கு வயது 18. வாரத்துக்கு 5 தடவைகளாவது சுய இன்பத்தில் ஈடுபடுகின்றான். அத்தோடு அவனைவிட வயதில் மூத்த ஆண்களோடு தவறான உறவில் ஈடுபடுகின்றான். இதற்கு காரணம் என்ன? இதற்கான தீர்வு என்ன?


பதில்:- சுயஇன்பத்தில் ஈடுபடுவது அவன் மாத்திரமல்ல. ஆண் பெண் என்ற வேறுபாடு இன்றியும் வயது வேறுபாடு இன்றியும் பெரும்பாலனவர்கள் இதில் ஈடுபடுகிறார்கள். அல்லது முன்பு ஈடுபட்டிருப்பார்கள்.

இதை நான் வெளிப்படையாகச் சொல்வது பல தூய்மைவாதிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். இருந்தாலும் அதுதான் உண்மை. அமெரிக்காவில் செய்யப்பட்ட ஆய்வில் 95% சதவிகிதமான ஆண்களும் 89% மான பெண்களும் தாங்கள் சுயஇன்பத்தில் ஈடுபட்டுள்ளதாகச் சொல்லியுள்ளார்கள். எனவே உங்கள் நண்பன் ஏதோ தவறு செய்ததாக எண்ணாதீர்கள்.

ஒருவரது தனது பாலியல் தொடர்பான உளநெருக்கீட்டை தணிப்பதற்கான வடிகாலாகவே சுயஇன்பம் இருக்கிறது. பதின்ம வயதுகளில் பாலியல் எழுச்சி ஏற்படுவது அதிகம். அது இயற்கையின் நியதி. ஆயினும் கல்வி தொழில் வாய்ப்பு போன்ற காரணங்களால் அதை ஆண் பெண் உறவு மூலம் தீர்க்க சமூக ரீதியாக முடிவதில்லை. பதின்ம இதைத் தீர்ப்பதற்கு எதிர்பாலினர் கிடைப்பது சாத்தியம் இல்லை. திருமணம்கள் மிகவும் காலதாமதமாகின்றன. எனவேதான் தாமே தீர்த்துக் கொள்ள நேர்கிறது. உங்கள் நண்பரின் நிலையும் அதுதான்.

சுயஇன்பத்தால் உங்கள் நண்பருக்கு உடல்நலக்கேடு ஏற்பட வாய்ப்பில்லை. இரவில் தானே ஸ்கலதமாபவர்கள் நேய்ப்வாய்ப்படுகிறார்களா? இல்லையே!!!

இருந்தபோதும் அவரது கல்வி தொழில் போன்ற நாளந்த செயற்பாடுகளை அசட்டை செய்யும் அளவிற்கு அவரது சுயஇன்ப நாட்டம் அதிகமானால் உளவளத் துணையை நாட வேண்டும்.

உங்களது நண்பரது மற்ற பழக்கம் ஆபத்தானது.

மற்ற ஆண்களுடன் ஒருபால் புணர்ச்சியில் ஈடுபடுவதானது பாலியல் நோய்த் தொற்றுக்கு இட்டுச் செல்லலாம். சிபிலிஸ், கொனரியா, எச் ஐ வி, வைரஸ் வோர்ட் போன்ற பலவும் பாலியல் உறவுகளால் தொற்றும் நோய்களாகும்.

எயிட்ஸ் நோய் கண்டு பிடிக்கப்பட்ட 80களில் அந்நோய் தொற்றுவதற்க்கு ஒருபால் புணர்ச்சியே முக்கிய காரணமாக இருந்தது என்பதை அறிவீர்களா?

எந்த வயதுள்ள பிறருடன் உறவு வைத்தாலும் பாலியல் நோய்கள் தொற்றுவதற்கான வாய்ப்பு உண்டு.

அவரை விட மூத்த வயதுள்ளவர்கள் என நீங்கள் குறிப்பிட்டவர்கள் யார் யாருடன் எல்லாம் உறவு வைத்து நோய்க் காவிகளாக திரிகிறார்களோ தெரியாது. எனவே அதை நிறுத்துமாறு ஆலோசனை சொல்லுங்கள்.

பிகு

ஓரினப் புணர்ச்சி சரியானதா தவறானதா?
இயற்கையானதா இயற்கைக்கு மாறானதா? என்பது பற்றி
இங்கு நான் ஆராய முற்படவில்லை.

அது பற்றிய வாதப்பிரதிவாதங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.

ஆனால் பல சிறார்களை ஓரின உறவிற்கு பல நெறிகெட்ட மனிதர்கள் ஆசை ஊட்டியோ அன்றி அதிகாரத்தைப் பயன்படுத்தியோ உட்படுத்தப்படுவதை
ஊடகங்கள் மூலமும் தொழில் ரீதியாகவும் அறிய முடிகிறது.

இது தவறான நெறிமுறை என்பதை எவரும் ஏற்றுக் கொள்வர்.

ஆனால் அதற்கு மேலாக அது பாலியல் தொற்று நோய்களுக்கும் வித்திடும்.

எனவே இது பற்றிய விழிப்புணர்வை இளம் சமூதாயத்தினருக்கு ஏற்படுத்துவது அவசியம்.
கேள்வி:- எனது உடல் தினசரி சோர்வாகவே உள்ளது. அடிக்கடி தாகம் (15 நிமிடத்திற்கு ஒரு தடவை) வருகிறது. அடிக்கடி சிறுநீர் வருகிறது. தோன்றுகிறது. சளி தொடர்ந்துள்ளது. தொடர் வயிற்றுவலியும் இருக்கின்றது. காரணம் என்ன?

பதில்:- உங்கள் வயதைச் சொல்லவில்லை. இருந்தாலும் உங்கள் நண்பரின் வயது 18 என்பதால் உங்களுக்கும் அதை ஒட்டியே இருக்கும் என எண்ணலாம். எவ்வளவு காலமாக இந்த அறிகுறிகள் உள்ளன என்பதும் தெரியவில்லை. சிறுநீர் மற்றும் இரத்தப் பரிசோதனைகள் செய்து பார்த்தாலே நோயைத் தெளிவாகக் கண்டறிய முடியும்.

உடற் சோர்வு, தண்ணீர் தாகம் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிதல் என்றால் உடனடியாக நினைவிற்கு வருவது நீரிழிவு நோய்தான். இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்திருந்தால் உங்கள் சிறுநீரகம் கூடுதலாக தொழிற்பட்டு சீனி சிறுநீருடன் வெளியேறுவதைத் தடுக்க முயலும். இதனால் சிறுநீர் உற்பத்திஅதிகமாகி நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

எனவே உடனடியாக குருதிச் சீனியின் அளவைப் பரிசோதித்துப் பாருங்கள். குயளவiபெ டிடழழன ளுரபயச செய்து பார்ப்பது அவசியம்.
அத்துடன் சிறுநீர்ப் பரிசோதனை (ருசiநெ குரடட சநிழசவ) செய்து பார்க்கவும் வேண்டும். ஏனெனில் சிறுநீரில் கிருமித் தொற்று ஏற்பட்டிருந்தால் அடிக்கடி சிறுநீர் கழிவதுடன் அடிவயிற்றில் வலியும் ஏற்படலாம். ஆனால் பொதுவாகச் சலக் கடுப்பும் சேர்ந்திருக்கலாம்.

சளித்தொல்லையும் இருப்பதாகச் சொன்னீர்கள். சளி மூக்கடைப்பு, மற்றும் சைனஸ் தொல்லை இருந்தாலும் உடற் சோர்வு, தண்ணீர் தாகம் ஆகியவை ஏற்படும்.

இவற்றைத் தவிர மனப் பதற்றம், உளநெருக்கீடு, மனச் சோர்வு போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் உடற்சோர்வும் அடிக்கடி சிறுநீர் கழிதலும் ஏற்படலாம்.

அடிக்கடி கோப்பி குடிப்பவர்கள், தூக்கக் குறைபாடு, கபால வலி எனப்படும் மைக்கிரேன் தலைவலி என இன்னும் பல காரணங்களும் இருக்கலாம்.

எனவே இது ஏன்ன நோய் என நீங்களே யோசித்து மனப்பதற்றம் அடைவதைத் தவிர்த்து உங்கள் மருத்துவருடன் நேரில் சென்று கதைத்து வேண்டிய பரிசோதனைகள் செய்வதன் மூலம் நோயை சரியயாகக் கண்டறிவதே உசிதமானதாகும்.

0.00.0
இது போன்ற பல கேள்வி பதில்கள் எனது ஹாய் நலமா புளக்கில் வெளியாகின்றன

Read Full Post »

கணவனுக்கு ஒரு பிரச்சனை. அது மனைவியையும் கூடப் பாதிக்கிறது. ஆனால், இருவருமே வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறார்கள். அது என்ன பிரச்சினை? ‘ என ஒரு விடுகதை போட்டால் உங்களால் அவிழ்க்க முடியுமா ?

விந்து முந்துதல்.

விந்து முந்துதலை ஆங்கிலத்தில் Premature ejaculation என்பார்கள். இதுதான் ஆண்களை மிக அதிகமாகப் பாதிக்கும் பாலியல் பிரச்சினையாகும்.

பத்து ஆண்களில் ஒருவர் என்ற விகிதத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. உறவின் போது பெண் உணர்வின் உச்ச கட்டத்தை எய்துவதற்கு முன்னரே ஆணுக்கு உணர்வின் உச்ச கட்டம் எட்டி விந்து வெளியேறிவிடுவதைத்தான் விந்து முந்துதல் என்கிறோம்.

இது ஆண்மைக் குறைபாட்டினால் ஏற்படுவதல்ல. இங்கு ஆண் உறுப்பு விறைப்படுவதில் பிரச்சனை இருப்பதில்லை.

பொதுவாக இது இளமைப் பருவத்தில் அதிகம் ஏற்படுகிறது. காலம் செல்லச் செல்ல, வயது முதிர முதிர தங்கள் உணர்வுகளைக் கட்டில் கொண்டுவர ஆண்களால் முடிகிறது. இருந்தபோதும் பல நடுத்தர வயதில் உள்ள ஆண்களையும் இது பாதிப்பதும் உண்மையே.

எந்தளவு நேரத்தில் உச்ச கட்டத்தை அடைவது உசிதமானது என்பதைப் பற்றி சரியான தகவல்கள் இல்லை. இருந்தபோதும்  2006 ல் Congress of the European Society for Sexual Medicine சமர்பிக்கப்பட்ட ஆய்வின் பிரகாரம்  பொதுவாக

  • விந்து முந்துவதாகக் கருதும் ஆண்களுக்கு சராசரியாக 1.8 நிமிடங்களில் வெளியேறியது.
  • சாதாரணம் எனக் கருதும் ஆண்களுக்கு 7.3 நிமிடங்கள் தாக்குப் பிடிக்கத்தக்கதாக இருந்தது.
  • இருந்தபோதும் 25 நிமிடங்கள் வரை எடுத்த சில ஆண்களும் கூட தமக்கு விந்து முந்தி வெளியேறிவிடுவதாகக் கவலைப்பட்டதுண்டு.
  • எனவே இந்தப் பிரச்சனை பற்றி வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறு அளவுகோல்கள் இருக்கும் என்பது தெளிவாகிறது.
  • இருந்தபோதும் 2.5 சதவிகிதமான ஆண்களுக்கு பெண் உறுப்பினுள் நுழைந்த பின்னர் 90 செகண்டுகள் கூட தாக்குப் பிடிக்க முடியாதிருந்தது. இவர்களுக்கு நிச்சயம்

இதனால்,

  • தங்கள் ஆண்மையே பாதிப்புக்கு உள்ளாகி விட்டதாகவும்
  • மனைவியைத் திருப்திப்படுத்த முடியவில்லையே எனவும் பல ஆண்கள் மனம் புழுங்குகிறார்கள்.
  • இயலாமையால் ஆற்றாமையால் மனப்பதற்றம், சோர்வு போன்றவற்றுக்கும் ஆளாகிறார்கள்.

அதேநேரம், அவர்கள் மனைவிமாரோ

  • ` இவர் தன்ரை வேலை முடிந்ததும் நடையைக் கட்டி விடுகிறார்.
  • என்னைக் கவனிப்பதில்லை ‘ என மனத்திற்குள் சினம் எழத் தவிக்கிறார்கள்.

மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருவருமே துன்புறுகிறார்கள்.

காரணங்கள்

இது ஒரு பரவலான பிரச்சினை ஆன போதும் இதற்கான அடிப்படைக் காரணம் தெளிவாகப் புரியவில்லை. இருப்பினும் உயிரியல் காரணங்களும் மனோவியல் காரணங்களும் இணைந்தே இருப்பதை வைத்தியர்கள் உணர்கிறார்கள். இதனால்தான், இதற்கான சிகிச்சையும் கூட பல் வழிப்பட்டதாகவே அமைகிறது.

  • பதற்றமான சூழ்நிலைகளில் ஆரம்ப காலங்களில் உறவு கொண்டவர்களுக்கு இது கூடுதலாக நடப்பதாக தெரிகிறது. மற்றவர்கள் கண்டு கொள்வார்களோ என

உறவின் போது நிதானத்தைக் கடைப்பிடித்து, செயல் முறைகளில் துரித ஸ்கலிதத்திற்கு இடம் அளிக்காத மாற்று முறைகளைக் கையாள்வது நல்ல பலனைக் கொடுக்கிறது. இதுதவிர சில மருந்து மாத்திரைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

இவை தவிர, சில வெளிப் பூச்சு களிம்புகளும் பலன் அளிக்கும் என நம்பப்படுகிறது. விந்து முந்தும் பிரச்சினை உள்ள ஆண்களின் உறுப்பின் முனையில் உள்ள மொட்டுப் பகுதியானது ஏனையவர்களதை விட தூண்டப்படும் போது கூடியளவு உணர் வினைத்திறனைக் கொண்டிருப்பதே முந்துவதற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது.

இதனால், அப்பகுதியை சற்று மரக்கச் செய்யும் விறைப்பு மருந்துகள்      (Topical anaesthetics) உதவும் என்ற கருத்து நிலவுகிறது. இம் மருந்துகள் உறுப்பின் மொட்டுப் பகுதியின் உணர்நிலையை ( Sensitivity ) சற்றுக் குறைப்பதன் மூலம் விந்து விரைவதைத் தாமதப்படுத்துகின்றன.

ஆயினும், விந்து வெளியாகும் உணர்வையோ, திறனையோ பாதிப்பதில்லை. பாவனையில் உள்ள இம் மருந்துகளின் ஆற்றல் பற்றிய சிறப்பான ஆய்வுகள் செய்யப்படாத போதும் கிடைக்கும் ஆய்வு முடிவுகளானது இவை ஓரளவு செயற் திறன் கொண்டவை என்பதை உறுதிப்படுத்துகின்றன.

களிம்பு மருந்துகளை விட விசிறப்படும் (Spray ) மருந்துகள் உபயோகிப்பதற்கு சுலபமானவை. அத்துடன், விசிறியவுடன் உலர்ந்து விடுவதால் பாவிப்பதும் வெளிப்படையாகத் தெரியாது. இது உறுப்பை மருந்தால் அசிங்கப்படுத்தவோ மனத் திடத்தை குறைக்கவோ செய்யாது என்பது சில நன்மைகளாகும். பக்க விளைவுகள் குறைவு என்பதும் தேவைப்படும் போது மட்டும் உபயோகித்து விட்டு நிறுத்தி விடலாம் என்பவையும் மேலதிக சிறப்புகளாகும்.

ஏற்கனவே இத்தகைய பல மருந்துகள் பாவனையில் இருந்தபோதும் புது மருந்துகள் பற்றிய ஆய்வுகளும் அவற்றின் செயற்திறன் பற்றிய களப் பரிசோதனைகளும் இப்பொழுது செய்யப்படுகின்றன. இப்பிரச்சினைக்கான சிகிச்சையின் முதற் படிச் சிகிச்சை முறையாக மாத்திரமன்றி மிகப் பொருத்தமான சிகிச்சை முறையாகவும் இதுவே எதிர்காலத்தில் நிலைக்கும் எனவும் நம்பப்படுகிறது.

மனப்பதற்றம், மனச்சோர்வு ஆகியவற்றிற்கு உபயோகிக்கப்படும் சில மருந்துகள் (Selective serotonin reuptake inhibitors (SSRIs) and antidepressants with SSRI-like effects ) உதவலாம்.

இவற்றை மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்தலாம்

போட்டிகளின் போது முந்துவது முந்துபவருக்கு மட்டுமே எப்போதும் வெற்றியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும்.

ஆனால், குடும்ப வாழ்வில்

  • முந்துவதைவிடவும் பிந்துவதை விடவும் இணைந்து ஓடுவதில்தான் இருவருக்குமே திருப்தியும் சந்தோஷமும் கிட்டும்.
  • ஆனால், கணவன் மனைவி இடையே நம்பிக்கையும் புரிந்துணர்வும் விட்டுக் கொடுப்புகளும் நிலவினால் முந்துவதும் பிந்துவதும் அர்த்தம் கெட்டுப் போகும் என்பதே நிஜமாகும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

நன்றி:- தினக்குரல்

Read Full Post »

தூசணம் எனப்படும் கெட்ட வார்த்தைகளை மற்றவர்கள் முன் உச்சரிக்க மாட்டோம். தயங்குவோம். கூச்சப்படுவோம். அது போலவே சுயஇன்பம் என்ற சொல்லையும் அது தொடர்பான விடயங்களையும் மற்றவர்கள் முன் பேசுவதற்கு நாம் தயங்குகிறோம். அதேபோல கேட்பவர்களும் அருவருப்பு அடைவார்கள்.

Feeling-Guilty

அவ்வாறு பேசப்படாததன் காரணமாக எத்தனை இளம் வயதினர் தங்கள் பிரச்சனைகளை வெளிப்டையாகச் சொல்ல முடியாது தங்களுக்குள் மறுகுவதும் குற்றவுணர்வுடன் சோர்ந்து இருப்பதும் உங்களுக்குத் தெரியுமா? தங்கள் திருமண வாழ்வு, எவ்வாறு அமையும், மனைவியைத் திருப்திப்படுத்த முடியுமா, குழந்தைப் பாக்கியம் கிட்டுமா என்றெல்லாம் பயந்து வாழ்கிறார்கள் என்பதை எத்தனை பெற்றோர்கள் அறிந்திருக்கிறார்கள்.

“ஒரு போதும் குற்றம் செய்யாதவன் முதற் கல்லைத் தூக்கட்டும்” என்று அமுத வாக்குப் போல நானும் இவ்விடயம் பற்றி ஒரு கேள்வி எழுப்பினால் எத்தனை பேர் பின்கதவால் நழுவி ஓடுவீர்கள் என்பது தெரியவரும்.

இது பொய்யான செய்தி அல்ல. அமெரிக்காவில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில் 95% சதவிகிதமான ஆண்களும் 89% மான பெண்களும் தாங்கள் சுயஇன்பம் பெற்றதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் எந்த ஒரு ஆணினது அல்லது பெண்ணினது முதன் முதல் பாலியற் செயற்பாடு சுய இன்பமாகவே இருக்கும்.

masturbation

ஒருவர் தனது பால் உறுப்பைத் தானே தூண்டுதல்  செய்து (stimulate)  உணர்வெளுச்சியையும், இன்பத்தையும் அடைவதையே சுயஇன்பம் எனலாம். தனது ஆணுறுப்பையோ அல்லது யோனிக் காம்பை (clitoris)  யையோ தொடுவது, நீவி விடுவது அல்லது மஜாஜ் பண்ணுவதன் மூலம் உச்ச கட்டத்தை அடைவதையே சுயஇன்பம் என்கிறோம்.

Masturbation 1

தற்புணர்ச்சி என்ற சொல்லையும் சிலர் பயன்படுத்துகிறார்கள்.

யார்? ஏன்?

யார் யார் செய்வார்கள் என்று கேட்டால் பெரும்பாலும் எல்லோருமே செய்திருப்பார்கள். தொடர்ந்து செய்து கொண்டிருக்கவும் கூடும். இனியும் செய்யவும் கூடும். இதனை வெறுமனே இளைஞர்களை மட்டும் கருத்தில் கொண்டு சொல்கிறேன் என எண்ண வேண்டாம்.

“எனது மனைவிக்கு இயலாது. எண்டபடியால்  நான் இடைக்கிடை கைப்பழக்கம் செய்வதுண்டு. இதனால் ஏதாவது பிரச்சனை வருமா” என கதவுப் பக்கமாகப் பார்த்துவிட்டு அடங்கிய தொனியில் லச்சையோடு கேட்டார் ஒருவர்.

அவரது வயது வெறும் 70 தான் என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். அவரது மனைவி பக்கவாதம் வந்து நீண்ட நாட்களாகப் படுக்கையில் கிடக்கிறா.

“இவன் படுக்கயிக்கை குஞ்சாவிலை கை போடுகிறான்”, அல்லது “குப்பறப்படுத்துக் கொண்டு அராத்துறான்” எனப் பல தாய்மார்கள் சொல்வது பாலியல் வேட்கைகள் எழும் பதின்ம வயதுப் பையன்கள் பற்றி அல்ல. பாலுறவு, செக்ஸ் போன்ற வார்ததைகளையே இதுவரை அறியாத  மூன்று நாலு வயதுக் குட்டிப் பையன்கள் பற்றியும்தான்.

“அல்லது ‘பூச்சி கடிக்கிதோ தெரியவில்லை. கைவைச்சுச் சொறியிறாள்.” என்பதையும் நாம் கேட்காமல் இல்லை.

எதற்காகச் செய்கிறார்கள்

ஏதோ ஒரு இன்பத்திறாகச் என்ற சுலபமாகச் சொல்லிவிடலாம். ஆனால் ஒரு குழந்தையானது ஆரம்பத்தில் அவ்வாறு செய்வது தனது உறுப்புகள் பற்றி அறியும் தேடல் உணர்வாகவே இருக்கும். பின்னர் அதில் ஒரு சுகத்தைக் கண்டு மீண்டும் நாட வைக்கும்.

black-white

பிற்காலங்களில் ஒருவரது பாலியல் தொடர்பான உளநெருக்கீட்டை தணிப்பதற்கான வடிகாலாக மாறிவிடுகிறது. பல்வேறு சந்தர்ப்பங்களை உதாரணம் கூறலாம்.

  • பதின்ம வயதுகளில் எழும் பாலியல் எழுச்சியைத் தீர்ப்பதற்கு எதிர்பாலினர் கிடைப்பது சாத்தியம் இல்லாமையால் தாமே தீர்த்துக் கொள்ள நேர்கிறது.
  • மாறக சில தருணங்களில் சிலர் ஒருபால் புணர்ச்சியை நாடி பாலியல் நோய்களைத் தேடி பிரச்சனைகளுக்கு ஆளாவதும் உண்டு.
  • திருமணமானவர்கள் ஈடுபடுவதற்குக் காரணம் வாழ்க்கைத் துணை அருகில் இல்லாமையாகவோ அவரது துணையின் நாட்டமின்மையாகவோ இருக்கலாம்.
  • அதே போல கர்ப்பமாவதைத் தவிர்ப்பதற்காகவும் செய்கிறார்கள்.
  • பாலியல் தொற்று நோய்கள் அணுகாவண்ணம் தம்மைக் காப்பதற்கான பாதுகாப்பான உறவுமுறையாவும் கைக்கொள்ளவும் கூடும்.

சில தேவைகளுக்காகவும் ஆண்கள் இதைச் செய்ய வேண்டியது அவசியமாகிறது.

  • உதாரணமாக குழந்தைப் பேறற்ற தம்பதியினருக்கான பரிசோதனைகளின் அங்கமாக விந்துப் பரிசோதனை (seminal fluid analysis) செய்வதற்கு இது அவசியம்.
  • அதே போல குழந்தைப் பேறற்றவர்களுக்காகு உதவுவதற்காக விந்துதானம்(Sperm donation) செய்ய வேண்டிய நியையும் கூறலாம்.

தப்பில்லையா?

ஒரு காலத்தில் சுயஇன்பத்தை பாலியல் வக்கிரம் அல்லது முறை தவறிய பாலுணர்வு அல்லது இயற்கைக்கு மாறான பாலியற் செயற்பாடாகவே கருதினார்கள். ஒருவித மனநோயாகக் கருதிய காலமும் உண்டு.

ஆனால் சுயஇன்பம் என்பதை இப்பொழுது இயல்பான, இன்பம் பயக்கும், ஆரோக்கியமான ஒரு பாலியல் செயல்பாடாகவே கருதுகிறார்கள். மருத்துவ ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஏற்கத்தக்க, மனநிறைவைத் தரும் செயற்பாடாகாவே கொள்ளப்படுகிறது. பாதுகாப்பானதும் கூட. வாழ்நாள் முழுவதும் செய்வதிலும் தப்பில்லை.

ஆனால் இச் செயற்பாடு காரணமாக அவரது வாழ்க்கைத் துணையுடனான பாலுறவு பாதிப்படையுமானால் அது ஒரு பிரச்சனையாக உருவெடுக்கலாம். ஆயினும் புரிந்துணர்வுள்ள துணையானவர் இதைத் தவறானதாகவோ கேவலமானதாகவோ கருதி இழிவு செய்யமால் தன்னுடனான பாலுறவைத் தடுக்க முற்படாவது வி;ட்டால் பிரச்சனை தோன்றாது. மாறாக ஒரு சில தம்பதியினர் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர சுய இன்பம் பெறு உதவுவதும் உண்டு.

பொது இடங்களில் அதைச் செய்ய முற்பட்டால் சமூகரீதியான பிரச்சனைகள் எழ வாய்ப்புண்டு.

மிதமான அளவில் வாழ்நாள் முழுவதும் செய்து வந்தாலும் உடல் நலக் கேடு ஏற்பட வாய்ப்பில்லை.

  • ஆனால் தனது விருப்பத்திற்கு மாறாக அவரது நாளாந்த செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாதவாறு சுயஇன்பம் செய்யவது தவிர்க்க முடியாதது ஆனால் சிக்கல்கள் தோன்றலாம். அத் தருணத்தில் உளவளத் துணையை (counselling)  நாட நேரும்.

பெரும்பாலான சமூகங்கள் சுயஇன்பத்தை வெளிப்படையாக ஏற்பதில்லை. சில கண்டிக்கவும் தண்டிக்கவும் கூடும். மதரீதியான தடைகளும் உள்ளன. இது ஒரு பாவச் செயல் என்று மதரீதியாக சொல்லப்படுவதால் குற்ற உணர்விற்கு ஆளாபவர்கள் பலர்.. இதனால் வெட்கத்துககு; ஆளாவதுடன் தன் சுயமதிப்பை இழக்கவும் நேரும்.

தவறான கருத்துகள்

சுயஇன்பம் பற்றிய பல தப்பான கருத்துகள் மக்களிடையே ஆழப் பரவி இருக்கின்றன. அவை ஆதரமற்றவை. அத்துடன் இத்தகைய கருத்துக்கள் அதில் ஈடுபடுபவர்களை மன உளைச்சலுக்கும் ஆளாக்குகிறன.

  • சுயஇன்பம் செய்பவர்கள் சாதாரண பாலுறவிற்கு லாயக்கறவர்கள, தாங்களும் அதில் நிறைவு காண முடியாது. பாலியல் துணைவரைத் திருப்திப்படுத்தவும் முடியாது என்பது தவறாகும்.
  • சுயஇன்பம் செய்பவர்கள் கேவலமானவர்கள், சமூக ரீதியாக ஏற்கபடக் கூடாதவர்கள், ஒதுக்கப்பட வேண்டியவர்கள் என்பது முற்றிலும் தவறு.
  • கால ஓட்டத்தில் அவர்களது பாலியல் செயற்பாடு வீரியம் குறைந்து விடும் என்பதும் தவறானதே.
  • இதனால் ஒருவரது முடிகொட்டும், உடல் மெலியும் பலவீனமடையும் என்பவையும் தவறான கருத்துக்களே. உள்ளங் கைகளில் இதனால் முடி வளருமாமே என அறியாமையால்  பயப்படுபவர்களும் உள்ளார்கள்.
  • தொடர்ந்து செய்தால் விந்து வத்திப் போகும். விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும் ஆண்மைக் குறைபாடு ஏற்படும் போன்ற யாவும் தவறானவை.
  • சுயஇன்பம் செய்பவர்கள் ஒரு வகை மனநோயளர்கள் என அல்லது அவர்களுக்கு மனநோய் எதிர்காலத்தில் வரும் என்பதெல்லாம் தவறான நம்பிக்கைகளாகும்.

விடுபட விரும்பினால்

625px-Stop-a-Masturbation-Addiction-Intro

இது தப்பான காரியம் அல்ல என ஏலவே சொன்னோம். ஆயினும் இது ஒரு போதை போலாகி அதைவிட முடியாமல் அதிலியே மூழ்கிக் கிடந்தால், வாழ்க்கையானது சேற்றில் சிக்கிய வண்டிபோல முன்னேற முடியாது முடங்கிவிடும்.

அத்தகைய நிலையில் ஒருவர் செய்ய வேண்டியவை எவை?

  • சுயஇன்பத்தைத் தேடவேண்டிய அவசியம் எத்தகைய நேரங்களில் வருகிறது என்பதை அடையாளங் காணுங்கள். ஆபாசப்படங்கள் பார்ப்பதைத் தவிருங்கள். தனிமை, பொழுது போக்கின்மை, போன்றவை அணுகாமல் தவிருங்கள். சுயஇன்பத்தைத் தூண்டுகிற நண்பர்களின் உறவைத் தள்ளி வையுங்கள்.
  • உற்சாகமும் மகிழ்ச்சியும் தரக் கூடிய வேறு நடவடிக்கைகளால் உங்கள் பொழுதுகளை நிறையுங்கள்.
  • இசை, எழுத்து, ஓவியம், இசை வாத்தியங்கள், போன்ற ஏதாவது ஒரு படைப்பூக்கம் தரும் செயற்பாட்டில் முழுமையாக மனதைச் செலுத்துங்கள்.
  • கால்பந்தாட்டம், துடுப்பாட்டம் உடற் பயிற்சி, போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுங்கள். யோகாசனம் போன்றவை உடலுக்கும் உள்ளத்திற்கும் நலத்தைத் தரும்.
  • பழவகைகளும், காய்கனிகளும் நிறைந்த ஆரோக்கியமான உணவு முறையைக் கைக்கொள்ளுங்கள்.
  • ஏதாவது சமூகப்பணிகளில் ஈடுபடுவது உங்கள் மனதைத் திசைதிருப்பும். வறிய மாணவர்களுக்கு இலவசமாக டியூசன் கொடுப்பது போன்ற ஏதாவது பணியில் ஈடுபடலாம்.

எனது ஹாய் நலமா புளக்கில் ஏற்கனவே வெளியான கட்டுரை

பாலியல் தொடர்பான எனது முன்னைய பதிவுகள்

ஆண்மைக் குறைபாடு
திருமணத்திற்கு முன்
விந்து முந்துதல்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.0.0.

Read Full Post »

பாலியல், பாலுறவு, பாலியல் உணர்வுகள், பாலியல் செயற்பாடுகளில் திருப்தி மற்றும் திருப்தியின்மை போன்றவை எமது சமூகத்தில் வெளிப்படையாகப் பேசப்படுவதில்லை. நாலு பேர் மத்தியில் பேசுவதற்கு அசூசைப்படுகிறோம். தூஸணை வார்த்தைகள் போல  உச்சரிக்க சங்கோசப்படுகிறோம்.

 03-Old Age

பாலுணர்வானது உயிரினங்களின் வாழ்வின் தொடர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் இன்றிமையாத அம்சமாக விளங்குகிறது. இருந்தபோதும் அவற்றைப் பேசா மொழிகளால் மறுதலிக்கிறோம்.

அதிலும் முக்கியமாக வயது முதிர்ந்தவர்களின் பாலியல் உணர்வு பற்றிய எண்ணமே எமது சமூகத்தில் அறவே கிடையாது எனலாம். பாட்டா பாட்டியுடன் நெருங்கிப் பேசினால் கிழட்டு வயதில் செல்லம் கொஞ்சிறார் என நக்கல் அடிக்கிறோம்.

 Old-Age-Sex-White-Hair-Couple

அம்மப்பாவிற்கு தலையிடி என்பதால் ஆதூரத்துடன் நெற்றியைத் வருடிவிடும் அம்மம்மாவின் செயல் பிள்ளைகளுக்குச் சினமாக இருக்கிறது.

‘தேவார திருவாசகம் ஓதிக் கொண்டு அல்லது வேதமொழிகளைப் படித்துக் கொண்டு மூலையில் கிடக்க வேண்டிய ஜன்மங்கள் அவர்கள்’ போன்ற எண்ணமே மேலோங்கியிருக்கிறது.

ஆனால் மேலை நாடுகளில் முதியவர்களின் பாலியல் உணர்வுகள், ஈடுபாடுகள் பற்றிய ஆரோக்கியமான ஆய்வுகளும் விவாதங்களும் நடைபெறவே செய்கின்றன.

அப்படியான ஒரு ஆய்வு The University of California, San Diego School of Medicine and Veterans Affairs ல் நடைபெற்றது.

 cutekissloveoldromancefavimcom119034large_1

பாலியல் ரீதியான திருப்தியை அவர்களில் கண்டறிவதற்கானது இந்த ஆய்வு 806 வயோதிபப் பெண்களின் 40 வருட மருத்துவப் பதிவேடுகளை ஆதாரமாகக் கொண்டு செய்யப்பட்டது. அவர்களுடைய சராசரி வயது 67 ஆக இருந்தது. 63 சதவிகிதமானவர்களுக்கு மாதவிடாய் நின்று விட்டது.

ஆச்சரியப்பட வைக்கும் சில முடிவுகள்

அந்தக் கிழங்களில் பாலியல் பற்றிய ஆய்வா எனக் கேட்பவர்கள் மூக்கில் விரலை வைத்து ஆச்சரியப்படும்படியாக சில முடிவுகள் இருந்தன.

  • கணவன் பாலியல் ரீதியான ஆர்வமும்; செயற்திறனும் உள்ளவராயின், அவர்களில் 50 சதவிகிதமானவர்கள் கடந்த 4 வாரங்களிடையே உடலுறவு வைத்ததாகக் கூறினர்.
  • அவர்களில் 67 சதவிகிதமானவர்கள் உடலுறவின் உச்ச கட்டத்தை எட்டியதுடன் அதில் திருப்தியும் அடைந்தனர். கணவனின் விந்து வெளியேற்றம் தங்களது உச்சகட்டத்திற்கு முதலே நிகழ்ந்துவிடுகிறது என பெரும்பாலான இளம் பெண்கள் கவலைப்படும் இன்றைய நிலையில் 67 சதவிகிதமான முதிய பெண்கள் திருப்தியடைந்தமை ஆச்சரியப்பட வைத்தது.
  • அவ்வாறு திருப்தியடைபவர்கள் பலர் இருந்தபோதும் 40 சதவிகிதமான பெண்கள் தங்களுக்கு ஒருபோதும் பாலியல் ஆர்வம் இருக்கவில்லை என எதிர்மாறாகக் கூறினார்கள். மேலும் 20 சதவிகிதமான பெண்கள் தங்களுக்கு மிகக் குறைந்தளவே ஆர்வம் இருந்தது என்றார்கள்.
  • 80 வயதிற்கு மேற்பட்ட பெண்களில் 50 சதவிகிதமானவர்கள்; தங்களுக்கும் கூட அடிக்கடி பாலியல் உந்தல், உறுப்பில் ஈரலிப்புத்தன்மை,  உச்சகட்ட உணர்வு ஏற்பட்டதாகக் கூறினர். இருந்தபோதும் பாலியல் ஆர்வம் குறைவாகவே இருந்ததாகக் கூறினர்.

ஆனால் சாதாரண பெண்களில் பாலியல் ஆர்வமே உடலுறவிற்கு இட்டுச் செல்கிறது என்பதை நாம் அறிவோம். ஆர்வம் இல்லாதபோதும் இவர்கள் உடலுறவு கொள்வதற்கு காரணம் என்ன?

தனது கணவன் அல்லது பாலியல் பங்காளியுடனான உறவை உறுதிப்படுத்தவும் தொடருவதற்காகவுமே அவ்வாறு ஆர்வம் இல்லாதபோதும் கூட உறவு கொள்கிறார்கள் என ஆய்வாளர்கள் எண்ணினார்கள்.

  • பொதுவாக வயது முதிரும்போது பாலியல் திருப்தி ஏற்படுவது குறைவு என்றே நம்பப்படுகிறது. ஆனால் இந்த ஆய்வானது வயது முதிர முதிர பாலியல் திருப்தி அதிகம் ஏற்படுவதாகக் கூறுகிறது. அதிலும் 80 வயதிற்கு மேட்பட்டவர்களில் கிட்டதட்ட எப்பொழுதும் ஏற்படுவதாகக் கூறுகிறது.
  • மிக முக்கியமான விடயம் பாலியல் திருப்தியடைவதற்கு புணர்ச்சி எப்பொழுதும் அவசியமாக இருந்திருக்கவில்லை. தொடுகை, அன்பாகத் தட்டிக்கொடுத்தல், சரசலீலை, போன்ற எல்லாவித உள்ளார்ந்த நெருக்க நிலைகளும் திருப்தியை அவர்களுக்குக் கொடுத்தன.

இதிலிருந்து தெரிவதென்ன? உணர்வுரீதியான மற்றும் உடல் ரீதியான நெருக்கமானது பாலுறவின் உச்சநிலையை அனுபவிப்பதை விட முக்கியமானதாக இருக்கலாம்.

எனவே பெண்களின் பாலியல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில் அவர்கள் பாலியல் செயல்பாட்டில் ஈடுபடுகிறார்களா, செயற்பாட்டில் குறைபாடுகள் இருக்கின்றனவா போன்றவற்றை ஆராயும் அணுகுமுறைக்குப் பதிலாக அவர்களின் உளத் திருப்தி மையமாக கொண்ட அணுகுமுறையே அதிக நன்மை பயப்பதாக இருக்கலாம்.

மற்றொரு ஆய்வு

2007ல் செய்யப்பட்ட மற்றொரு ஆய்வும் வயதானவர்களின் பாலியல் செயற்பாடுகள் தொடர்வதை உறுதிப்படுத்தியது. 57 வயதிற்கும் 85 வயதிற்கும் இடைப்பட்ட 3000 வயோதிப அமெரிக்கப் பெண்களில் ¾ பங்கினர் ஏதாவது ஒரு வகை பாலியல் செயற்பாட்டில் ஈடுபட்டதை உறுதிப்படுத்தியது.

பெண்களில் மட்டுமின்றி ஆண்களும் முதிரும்போது

  • உடல் உள ரீதியான பாலியல் ஆற்றாமைகள் அதிகரிக்கின்றன,
  • முன்னரைபோல அடிக்கடி ஈடுபட முடிவதில்லை
  • ஆயினும் பாலியல் உணர்வும் ஆர்வமும் குறைவதில்லை.
  • பாலியல் பங்காளி இன்னமும் உயிருடன் இருப்பதுடன், செயற்திறன் குறையாதிருந்தால் பாலியல் செயற்பாடுகள் குறைவதில்லை என்றது.
 Old-couple1
ஆற்றாமைகள் அதிகரிக்கின்றன

இவர்களது பாலியல் செயற்பாட்டு முறைகளாவன ஏனைய வயதினர் செய்வதை ஒத்ததே. பெரும்பாலனவர்கள் வழமையான யோனியுறவு கொண்டார்கள். சிலர் மாறி மாறி வாய் புணர்ச்சி செய்தார்கள். இன்னமும் சிலர் தற்புணர்ச்சி (masturbation) செய்ததும் உண்டு.

செய்ய வேண்டியது என்ன?

எமது சமூகம் இனப்பாகுபாடு இன ஒடுக்குமுறை ஆகியவை பற்றி வாய் கிழியப் பேசுகிறது. ஆனால் முதியவர்களின் பாலியல் உணர்வுகளை மதிப்பதில்லை. ஜடங்கள் போலவே கணிக்கிறார்கள். சருமம் சுருங்கியபோதும் அவர்களது உணர்வுகளும் மனமும் அன்றலர்ந்த மலர்போல மென்மையாகவே இருப்பதை உணர்வதில்லை. அவர்களது பாலியல் உணர்வுகளைப் புரிவதில்லை.

அவர்களது பாலியல் உணர்வுகள் மற்றும் செயற்பாடுகள் ஆகியவற்றிற்கு

  • அங்கீகாரமும் ஆதரவும் வழங்குவதில்லை.
  • அல்லது அவை பற்றி சிந்திக்கவோ பேசவோ முயல்வதில்லை.
  • அதற்கான சந்தர்ப்ப வாய்ப்புகளை அவர்களுக்கு அளிப்பதில்லை. உங்கள் குழந்தையை இரவில் அவர்களுடன் தூங்கவிட்டால் உங்களால் சுகம் காண முடியும். ஆனால் பாட்டன் பாட்டிகளுக்கு பேசவும், தழுவவும் அருகிருக்கவும் தனிமையானது எட்டாக் கனியாகிவிடும்.
 Children_Sleeping_In_Their_Parents_Bed_Royalty_Free_Clipart_Picture_091010-006362-272053

இது தவறான அணுகுமுறை. அவர்களின் உணர்வுகளை மதியுங்கள். அவர்கள் அவ்வாறு ஈடுபடுவதற்கான சூழலானது எமது கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையில் குறைவு. கூட்டுக் குடும்பமாக இல்லாவிடினும், முதிர்ந்த பெற்றோர் பிள்ளைகளது வீட்டில் தங்கியிருப்பதற்கான தேவைகள் அதிகரிக்கின்றன.

  • இத்தகைய நிலையில் அவர்களது தனிப்பட்ட உணர்வுகளுக்கும் செயற்பாட்டிற்கும் உகந்த சூழலை ஏற்படுத்திக் கொடுங்கள்.
  • அவ் விடயத்தில் அவர்களது செயற்பாடுகளை ஏளனமாகப் பார்ப்பதையும், குற்றம் குறை சொல்வதையும் நிறுத்துங்கள்.
  • இது பற்றிய வெளிப்படையான கலந்துரையாடலை சம்பந்தப்பட்டவருடன் தனிப்பட்ட முறையில் ஆரம்பியுங்கள்.
  • அவர்களது வாழ்வில் வசந்தம் மீண்டும் மலரட்டும்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), MCGP (col)
குடும்ப மருத்துவர்
21.012.2013 எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை
0..0..0..0

Read Full Post »

விஞ்ஞானமும் அறிவியலும் வியத்தகு வளர்ச்சி பெற்றுவிட்டன. ஒவ்வொரு துறையிலும் நுணுக்கமான ஆய்வுகள் மேற்கொள்ளப் படுகின்றன. இதன்பேறாக உலகின் ஒரு மூலையில் பெற்ற ஆய்வு முடிவுகளை மறு அந்தத்தில் உள்ள கிராமங்களும் மறுகணம் பெறக்கூடியவாறு தகவல் புரட்சி வழிவகுத்துள்ளது.

அவற்றைப் பெறுவதற்கு ஆங்கில மொழி அறிவின் போதாமை ஒரு தடைக்கல்லாகப் பலருக்கு இருக்கக் கூடும். அத்துடன் எமது நீண்ட வரலாறு கொண்ட பண்பாட்டுப் பின்னணியானது பருவ மாற்றங்களையும், பாலியல் பிர்ச்சினைகளையும் தமது பிள்ளைகளோடு ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகப் பேசுவதற்குத் தடைக்கல்லாக இருப்பதையும் மறுப்பதற்கில்லை.அதேபோல் பாலியல் கல்வி பாடசாலைக் கல்வித்திட்டத்தில் அடங்கியிருந்த போதும் மேற்கூறிய காரணங்களால் ஆசிரியர்களால் போதிக்கப்படாமல் இருப்பதையும் காண்கிறோம்.

இத்தகைய சூழலில் நடனசபாபதியின் இம்மொழிபெயர்ப்பு முயற்சி எமது சமூகத்திற்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும். பருவமானவர்கள் பற்றிய மிக அண்மைக்கால விஞ்ஞான ரீதியான சிந்தனைகளை அது எமக்குத் தருகிறது. 2000 ஆண்டு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட மூலப்பிரதியை இவ்வளவு விரைவாக எமக்கு தமிழில் தரும் நடனசபாபதி எமது நன்றிக்குரியவர்.

இந்நூல் எவை பற்றிப் பேசுகிறது? பருவமடைதல் தொடர்பான அனைத்து விடயங்களையும் பேசுகிறது எனலாம்.நண்பர் நடனசபாபதி உள்ளத்தால் என்றும் இளைஞர். எமது சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எந்நேரமும் துடிப்பவர். விஞ்ஞான உணர்வும் விஞ்ஞான ரீதியான பார்வையும் எமது சமூகத்தில் காலூன்ற வேண்டும் என்று அவாவி நிற்பவர்.

பருத்தித்துறை ஞானசம்பந்தர் கலாமன்றம், லயன்ஸ் கழகம், இலங்கை விஞ்ஞானச் சங்கம் போன்ற அமைப்புகளூடாகப் பல்வேறு சமூக சேவைகள் ஆற்றியவர். தமிழ்ப் பிரதேசங்களில் விஞ்ஞான அறிவை மாணவர்களிடையேயும் வளர்ந்தவர்கள் இடையேயும் பரப்புவதில் 1975 முதல் இலங்கை விஞ்ஞான சங்கம் ஊடாகப் பெரும் பணியாற்றி வருகிறார்.

ஊற்று, விஞ்ஞான முரசு போன்ற சஞ்சிகைகளில் இவரது பல ஆக்கங்கள் வெளியாகியுள்ளன. விஞ்ஞான முரசின் ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். இலங்கை வானொலி ஊடாகவும் விஞ்ஞான அறிவைப் பரப்புவதில் ஈடுபட்டுள்ளார். யாழ் நீர் பற்றிய இவரது ஆக்கங்கள் பரவலான கணிப்பைப் பெற்றமை இப்பொழுதும் நினைவு கூரத்தக்கதாகவுள்ளது.

மொழிபெயர்ப்பும் இவருக்கு கைவந்த கலை. போர்க்காலச் சிந்தனைகள் என்ற நூல் சில ஆண்டுகளுக்கு முன் தேசிய கலை இலக்கியப் பேரவை ஊடாக வெளிவந்து பெரு வரவேற்பைப் பெற்றது.காலத்தின் தேவையறிந்து அக்கறையோடு செய்யப்பட்ட அவரது இம் முயற்சியைப் பாராட்டுகிறேன். புத்தகங்களோடும், மொழிபெயர்ப்புகளோடும் தமிழ் அறிவியல் இலக்கியத்திற்கு மேலும் வேகத்தோடு அவர் பங்களிக்க வேண்டும் எனவும் வேண்டிக் கொள்கிறேன்.

டாக்டர்.எம்.கே. முருகானந்தன்

22.06.2002.
நன்றி:- pathivukal.com

Read Full Post »

>

பெண்கள் பருவமடையும் வயது குறைந்து வருவதை பெற்றோர்கள் அவதானித்து இருக்கக் கூடும். உதாரணத்திற்கு தாய் 14 வயதில் முதல் மாதவிடாயை (Menarche) அடைந்தால் மகள் இப்பொழுது 10-12 வயதிலேயே அடைந்து விடுகிறாள்.  

முன்னைய பதிவு  ஆண் பருவமடைதல்

கடந்த சில தசாப்தங்களாகவே இம் மாற்றம் படிப்படியாக ஏற்பட்டுக் கொண்டு வருகிறது.

  • 1800ன் நடுப் பகுதிகளில் அமெரிக்கப் பெண் குழந்தைகளில் முதல் மாதவிடாய் 17 வயதளவில் ஏற்பட்டதாகத் தெரிகிறது. 
  • ஆனால் 1960 களில் 12 வயதாகக் குறைந்துவிட்டது.

காரணங்கள்

இதற்குக் காரணம் என்ன? பலரும் பலவாறு ஊகிக்கிறார்கள். அடிப்படைக் காரணம் முற்றும் புதியதான வாழ்க்கை முறைதான் என நம்பப்படுகிறது.

  • போஸாக்கான உணவு தாராளமாகக் அளவு கிடைக்கிறது. 
  • இதனால் அவர்களது உடல் வேகமாகவும் அதிகமாகவும் வளர்ச்சியுறுகிறது. 
  • எடை அதிகரிக்கிறது. 
  • அதீத எடை ஹோர்மோன்களின் அளவுகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. 

பருவமடையும் வயது முன் நகர்வதற்கு இது காரணம் எனலாம்.
இன்றைய வாழ்க்கை முறைகள் காரணமாக முன்னைய சமூகத்தினரை விட இன்றைய பிள்ளைகள் சிறு வயதிலேயே புதியவை பலவற்றைக் கற்றுக் கொள்கிறார்கள். அனுபவிக்கவும் செய்கிறார்கள்.

  • தொலைக்காட்சி மற்றும் கணனி காரணமாக இன்றைய பிள்ளைகளில் அறிவு விருத்தி வேகமாக கிடைக்கிறது. 
  • அதேபோல பாலியல் சம்பந்தமான அறிவும் விரைவில் கிட்டுகிறது. தொலைக்காட்சி, சினிமா ஊடாக இவை பற்றிய உணர்வுகளையும் பெறுகிறார்கள். 

    இவையே பாலியல் ஹோர்மோன்கள் விரைவில் தூண்டப்படுவதற்கு மற்றொரு காரணம் என நம்பப்பட்டது.

    இதைத் தவிர

    • குழந்தைகள் பாலகர்களாயிருக்கும் காலத்தில் சோயா சார்ந்த பால் மாக்களையும் போசாக்கு மாக்களையும் பிரதான உணவாக உட்கொள்வதும் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

    சோயாவில் உள்ள பைற்ஈஸ்ரஜின் (Phytoestrogen) பெண்களின் ஹோர்மோனான ஈஸ்ரஜின்னை ஒத்தது. இது பொதுவாக உடலுக்கு நல்லது என்றே கருதப்படுகிறது. ஆயினும் குழந்தைகளில் சோயா சார்ந்தவை பிரதான உணவாக அமைந்தால் பாதகமாக அமையலாம் எனச் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

    • பரம்பரைக் காரணிகளும் அடங்கும். தாய் குறைந்த வயதில் பருவமடைந்தால் குழந்தைக்கும் அவ்வாறு நேர்வதற்கான வாய்ப்பு அதிகமாகும்.

    புதிய கருத்து

    ஆனால் கலிபோனியாவில் அண்மைய ஆய்வு (Young Girls’ Nutrition, Environment and Transitions -CYGNET) ஒன்றானது இதற்குப் புதிய ஒரு காரணமும் இருக்கலாம் எனச் சொல்கிறது. 

    • பெற்ற தகப்பன் வீட்டில் இல்லாத பெண் குழந்தைகள் இளவயதிலேயே பருவமடைவதாக அது கூறுகிறது. 

    ஆனால் இது எல்லோருக்கும் பொதுவானது அல்ல. அதிக வருமானங்கள் உள்ள குடும்பங்களில் மட்டும்தான் இது அவதானிக்கப்பட்டது.
    6 வயது முதல் 8 வயது வரையான 444 பெண் குழந்தைகளில் 2 வருடங்களாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    பருவமடைதல்

    இந்த ஆய்வானது பருவமடைதல் (Puberty) பற்றியதே அன்றி பூப்படைதல் (Menarche) பற்றியது அல்ல. மார்பகங்கள் பெருப்பதையும், பாலுறுப்புகளை அண்டிய பகுதிகளில் முடி வளர்வதையுமே இந்த ஆய்வில் பருவமடைவதாகக் கொண்டார்கள். 

    பூப்படைதல்

    பூப்படைதல் என்பது முதல் முதலாக பெண்ணுறுப்பிலிருந்து குருதிக் கசிவு ஏற்படுவதாகும். அதாவது முதல் முதலாவது மாதவிடாய் ஏற்படும் நிகழ்வாகும். ஆனால் பருவடைதல் என்பது பூப்படைதலுக்கு முன்னோடியான நிகழ்வு என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

    Puberty, Menarche  ஆகிய சொற்களுக்கு இடையோயன பொருட்களைத் தெளிவுபடுத்தக் கூடிய சரியான தமிழ்ப் பதங்கள்  இருப்பதாகத் தெரியவில்லை. எனவேதான முறையே பருவமடைதல், பூப்படைதல், ஆகிய பதங்களை உபயோகப்படுத்தியுள்ளேன். 

    தகப்பன் வீட்டில் இல்லாது இருப்பதற்கும் மகள் விரைவில் பருவமடைவதற்கும் இடையே என்ன தொடர்பு இருக்க முடியும்? தகப்பன் வீட்டில் இல்லாததால் உண்டாகக் கூடிய சமச்சீர் அற்ற குடுப்பச் சூழல் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

    அப்படியானால் அது ஏன் அதிக வருமானம் உள்ள குடும்பங்களில் மட்டும் நடக்கிறது? குறைந்த வருமானங்களில் பொதுவாக குழந்தைகளைக் கவனிப்பதற்கான ஆதரவு சமூகத்திலிருந்து கிடைக்கிறது. பெற்றோர்களின் தாய் தகப்பன்மார் வீட்டில் இருந்து கவனப்பர். அல்லது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் கை கொடுப்பர்.

    மற்றொரு காரணமும் கருத்தில் கொள்ளப்படுகிறது. மேலை நாடுகளில் வசதியான குடும்பங்கள் பலவற்றில் தாய் தனியாகவே வாழ்பவளாக இருப்பாள். குழந்தைகள் ஒற்றைப் பெற்றோர் குழந்தைகளாக இருப்பர்.

    இதனால் தாய் நீண்ட நேரம் தொழில் செய்பவராக இருக்கக் கூடும் என்பதால் தாயின் ஆதரவு குழந்தைக்குக் கிடைப்பது குறைவாக இருக்கும். தாயுடனான நெருக்கமான உறவு குறைந்த பெண் பிள்ளைகள் விரைவாக பருவடைகிறார்கள் என வேறு ஆய்வுகள் கூறுகின்றன.

    பெற்றோரின் ஆதரவு

    இரு ஆய்வுகளையும் ஒன்றாகக் கருத்தில் கொண்டால் தாயோ, தந்தையோ எவராக இருந்தாலும் பெற்றோருடனான ஆதரவு குறைந்த பிள்ளைகள் விரைவில் பருவமடைகிறார்கள் என்பது புரிகிறது.

    இது எமது சூழலுக்கான ஆய்வு அல்ல என உதறித் தள்ளுவது புத்திசாலித்தனம் அல்ல.

    எமது சூழலிலும் குழந்தைகளுக்கு தாய் தகப்பனுக்கு அப்பால் பேரன் பேத்தி உறவினர்களின் ஆதரவும் அரவணைப்பும் குறைந்து வருகிறது. அதற்கு மேலாக இங்கும் எமது பெண் குழந்தைகள் முன்னைய விட விரைவிலேயே பருவமடைவது அதிகமாகி வருகிறது. எனவே இவ்விடயங்கள் பற்றிய அறிவு அவசியம்.

    பாதகங்கள்

    காலத்திற்கு முந்தி பெண்கள் பருவமடைவது பற்றி ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும். காரணங்கள் இருக்கின்றன.

    • எதிர்காலத்தில் இப் பெண்களுக்கு பாலுறுப்புகள் சம்பந்தமான புற்றுநோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் அதிகமாகும்.
    • ஆஸ்த்மா வருவதற்கான சாத்தியமும் அதிகமாகும்.
    • சமூக ரீதியாக அத்தகைய பெண் பிள்ளைகள் தவறான பாலியல் செயற்பாடுகளில் வயதிற்கு முன்னரே ஈடுபடுவதும், போதை பொருட்கள் பாவனையில் சிக்குவதும் அதிகம் என அறிக்கைகள் சுட்டிக் காட்டியுள்ளன.
    • வகுப்பறை சிநேகிதர்களாலும் வெளி நபர்களாலும் இவர்கள் அதிகளவில் பாலியல் ரீதியான சீண்டல்களுக்கு ஆளாகுகிறார்கள். இதனால் சில குழந்தைகள் உளநெருக்கீடு, மனப்பதற்றம், மனச்சோர்வு போன்ற உளவியல் பாதிப்பிற்கு ஆளாக நேர்வது துர்ப்பாக்கியமே.
    • பருவமடைதலானது மூளை வளர்ச்சி நிறைவுறுவதுடன் தொடர்புடையது. எனவே காலத்திற்கு முந்திப் பருவமடைந்தால் மூளை வளர்ச்சி பூரணமடைவது பாதிப்படையலாம் எனவும் நம்பப்படுகிறது.

    எனவேதான் ஆய்வாளர்கள் இப் பிரச்சனையில் அக்கறை காட்டுகிறார்கள்.

    SOURCE: Journal of Adolescent Health, published online September 23, 2010

    தமிழ் சமூகத்தில் மாதவிடாய்  தொடர்பான நிலவும் நம்பிக்கைகள், தவறான கருத்துக்கள் தொடர்பான எனது மற்றொரு பதிவுக்கு கீழே கிளிக் கண்ணுங்கள்.

    எமது  பாரம்பரியத்தில் நிலவும் மற்றொரு பழக்கம் பற்றிய நகைச்சுவைப் பதிவுக்கு…. இது ஆண்கள் பற்றியது.

    டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
    0.0.0.0.0.0.0.0

    Read Full Post »

    >

    இடதுகைச் பெரு விரலை மறுகையால் பொத்திக் கொண்டு வந்தாள் ரதி என மோகிக்க வைக்கும் அந்த இளம் பெண். வயது பதினெட்டு இருக்கும். ஆனால் அவளுக்கு ஏற்பட்டிருப்பது மோகத்தோடு சற்றும் சம்பந்தப்படாத நோய்.

    கைவிரலில் கட்டிபோல ஒரு சிறு தோல் வளர்ச்சி. தட்டுப்பட்டால் சற்று வலிக்கிறதாம். பார்பதற்கு அவளைப் போல அழகானதாக அந்த வீக்கம் இருக்கவில்லை.

    சொறிப் பிடித்த நாயின் தோல் போல சொரசொரப்பான தோல்த் தடிப்பாக அது அரை சென்ரிமீட்டர் அளவில் மட்டுமே இருந்தது.

    “இது ஏதாவது ஆபத்தான நோயா? புற்றுநோயாக இருக்குமா அல்லது வேறு ஏதாவது கெட்ட நோயா” என்ற கவலை அவளுக்கு. தனது பேரழகைக் குலைக்க வந்த ‘கரும் புள்ளி’ என்ற சீற்றம் வேறு அவளுக்கு.

    இதனை வைரஸ் வோர்ட் (Virus Wart) என அழைப்பார்கள். காரணம் இது ஒரு வைரஸ் நோயாகும். மனித பப்பிலோமா வைரஸ் (Human Papilloma Virus) (HPV) என்ற வைரஸ் கிருமியால் எற்படுகிறது. வைரஸ் கிருமியால் ஏற்படுவது என்பதால் ஒரு தொற்று நோயும் கூட. நெருக்கமாகப் பிழங்குவதாலும், பொதுவான துவாய் பயன்படுத்துவதாலும் ஒருவரிலிருந்து மற்றவருக்குப் பரவலாம்.

    இது உடலின் எந்தப் பகுதியிலும் தோன்றலாம். ஆயினும் அந்தப் பெண்ணுக்கு வந்ததுபோல கைகளிலியே அதிகம் ஏற்படுவதைப் பார்க்கிறோம்.

    பெரும்பாலானோரில் முக்கியமாகக் குழந்தைகளில் எந்தவித சிகிச்சையும் இன்றி தானாகவே ஆறு மாத காலத்தினுள் மறைந்துவிடும். சிலருக்கு ஓரிரு வருடங்கள் கூடச் செல்லலாம்.

    பயப்படுவதற்கு இந்நோயில் எதுவுமில்லை. தட்டுப்பட்டால் வலிக்கலாம், உரசினால் இரத்தம் கசியலாம், இவற்றைத் தவிர வேறு ஆபத்துக்கள் இல்லை. ஆனால் அசிங்கமாக இருக்கிறதே என மனத்திற்குள் மறுகி தாங்களே கவலைப்படுவதுதான் மிகப் பெரிய துன்பமாகும்.

    தானாக மறையாவிட்டால் சாதாரண பூச்சு மருந்துகள் அதனைக் கரைக்க உதவும். உதாரணமாக சலிசிலிக் அமிலக் களிம்பு (Salicylic Ointment) உதவும். பல வாரங்களுக்குத் தொடர்ந்து உபயோகிக்க வேண்டும். குளித்த பின் அல்லது நோயுள்ள இடத்தைக் கழுவி ஈரலிப்பும் மெதுமையும் இருக்கும்போது மருந்தைப் பூசினால் கூடுதலாக உட்புறமாக ஊறி அதிகம் வேலை செய்யும். டுவோபில்ம் (Duofilm) எனும் திரவ மருந்தும் உபயோகிக்கக் கூடியது. ஆயினும் இவற்றை முகம், பாலுறுப்பு போன்ற மென்மையான இடங்களில் உபயோகிக்கக் கூடாது. நீரிழிவு உள்ளவர்களும் அவதானத்துடனேயே உபயோகிக்க வேண்டும். எனவே வைத்தியரின் ஆலோசனை இன்றிப் பாவிக்க வேண்டாம்.

    வைத்தியர்கள் திரவ நைதரசனால் எரிப்பது, மின்சாரத்தால் (Cautery) எரிப்பது போன்ற சிகிச்சை முறைகளையும் கையாளக் கூடும்.

    விறைப்பதற்கு ஊசி மருந்திட்டு வெட்டியும் எடுப்பார்கள். ஆயினும் இச் சிகிச்சைகளின் பின்னரும் அவை சிலவேளைகளில் மீளத் தோன்றக் கூடும் என்பதையும் மறுக்க முடியாது.

    உடலில் ஏற்படுவதுபோலவே சிலருக்கு இத்தகைய நோய் பாதங்களிலும் வரலாம். பாதத்தில் தோன்றுவதை (Planter Wart) என்று சொல்லுவார்கள். இதுவும் பெரும்பாலும் இளவயதினரிடையேதான் தோன்றுகிறது. தோலின் மேற்பகுதியில் ஆரம்பிக்கும் இது நடக்கும்போது ஏற்படும் அழுத்தத்தால் உட்தோல் வரை பரவி வலியையும் உண்டுபண்ணலாம். காலில் ஏற்படும் இத்தகைய வீக்கத்தின் மத்தியில் சற்றுக் கருமையான பள்ளம் போன்ற புள்ளி காணப்படுவது இதனைச் சுலபமாக இனங்காண வைத்தியர்களுக்கு உதவுகிறது.

    உடலில் ஏற்படும் அத்தகைய வோர்ட்சை ஒத்த நோய் பால் உறுப்புகளிலும் ஏற்படுவதுண்டு. ஆண், பெண் ஆகிய இருபாலாரிலும் இது வரலாம். இதனை பாலுறுப்பு வோர்ட்ஸ் (Genital Warts) என்பர். இது ஒரு பாலியல் தொற்று நோய். அதாவது ஒருவனுக்கு ஒருத்தி அல்லது ஒருத்திக்கு ஒருவன் என்ற நெறியை மீறுவதால் என்று சொல்லலாம். இன்று பாதுகாப்பற்ற பாலுறவு (Unprotected Sex) என்ற சொற்தொடரை உபயோகிக்கிறார்கள். நோயுள்ள ஒருவருடன் உடலுறவு வைப்பதால் இது தொற்றுகிறது. கருத்தடை ஆணுறை அணிந்து கொண்டு உடலுறவு கொண்டால் தொற்ற மாட்டாது.

    ஆண் உறுப்பில் சிறுதோற் தடிப்பு அல்லது கட்டிபோலவே இதுவும் இருக்கும். பெண்களின் உறுப்பின் தோல் மடிப்புகளில் இது மறைந்திருக்கக் கூடும் என்பதால் நோயிருப்பது பெரும்பாலும் வெளிப்படையாகத் தெரியாது. சில பெண்களுக்கு சற்றுக் கசிவும் அரிப்பும் இருக்கக் கூடும்.

    அரிப்பு, கசிவு, சல எரிவு போன்ற எந்ந அறிகுறி இருந்தாலும் வைத்திய ஆலோசனை பெறுங்கள். வைத்தியரிடம் சொல்ல வெட்கப்பட்டு காரமான சோப்புகளால் கழுவவோ, கண்ட மருந்துகளைப் பூசவோ வேண்டாம்.

    பாலுறுப்பின் சருமம் மிக மிருதுவானது என்பதால் புண்படக் கூடும். வைத்தியரின் ஆலோசனைபடியே சிகிச்சை செய்ய வேண்டும்.

    பாலுறுப்பில் ஏற்படும் அரிப்பு, கசிவு, புண் யாவும் பாலியல் நோயால்தான் ஏற்படும் என்றில்லை, நீரிழிவு, அலர்ஜி, தோல் நோய்கள் போன்றவற்றாலும் ஏற்படலாம். எனவே தயக்கத்தை விட்டு வைத்திய ஆலோசனை பெறுவதுதான் உசிதமானது.

    மோகத்தால் வந்தாலும் சரி, காலில் வந்தாலும் சரி, கையில் வந்தாலும் சரி இத்தகைய வோரட்ஸ் எல்லாமே மனித பப்பிலோமா வைரசால் தான் ஏற்படுகின்றன. வாய்க்குள்ளும், மலவாயிலிலும் கூட வருவதுண்டு.

    ஆயினும் அவை எல்லமே ஒரே வகை வைரஸ் அல்ல. ஐம்பதுக்கு மேற்பட்ட உப இனங்கள் மனித பப்பிலோமா வைரசில் இனங்காணப்பட்டுள்ளன.

    இவற்றில் சில உடலின் வெவ்வேறு பாகங்களில் மாறுபாடான விதத்தில் நோய்களை ஏற்படுத்துகின்றன. அதனால்தான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அந்த இளம் பெண்ணுக்கும் தவறான மோகத்தால் வரும் பாலியல் நோய்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றேன்.

    டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

    Reblog this post [with Zemanta]

    Read Full Post »

    >

    ஆண்மைக் குறைபாடு என்றால் என்ன?
    இதில் பல வகைகள் இருந்த போதும் ‘ஆண்குறி விறைப்படைதல்’ குறைபாடு மிக முக்கியமானதாகும்.
    உடலுறவின்போது ஆண் உறுப்பு போதியளவு விறைப்படைந்து நிற்காதலால் உடலுறவு திருப்தியைக் கொடுக்காத நிலை எனச் சொல்லலாம். இது ஓரிரு முறை ஏற்பட்டால் அதனை பெரிய குறைபாடாகக் கூறமுடியாது. இளைஞர்களில் ஏற்படுவது பெரும்பாலும் உளம் சார்ந்ததே.
    ஆயினும் தொடர்ச்சியாக இது நிகழ்ந்தால் அதனை Erectile Dysfunction எனக் கூறுவர். வயது அதிகரிக்க அதிகரிக்க இது ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகும். இது மிகவும் பரவலாகக் காணப்படும் ஒரு பிரச்சனை ஆகும். ஆண்களில் கிட்டத்தட்ட பத்தில் ஒருவருக்கு இது ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. சிலருக்கு லேசாகவும் சிலருக்கு மிகக் கடுமையாகவும் என இது பல்வேறு நிலைகளில் ஏற்படக் கூடும்.
    இருந்தபோதும் முக்கியமான அம்சம் என்னவென்றால் 90 சதவிகிதமானவர்கள் அதனை வெளிவிடாமல் மனதில் வைத்துக் கொண்டு துன்புறுகிறார்களே ஒழிய வைத்திய ஆலோசனை பெறுவதில்லை.
    காரணம் என்ன?
    1) பலருக்கு (80%) இது ஒரு உடல் சார்ந்த நோயாகும். பெரும்பாலும் வேறு நோய்களின் வெளிப்பாடாக இருக்கலாம்.
    a.முக்கியமாக இது இரத்தக் குழாய்கள் (நாடி) சார்ந்த நோயாகும். பக்கவாதம், மாரடைப்பு போன்றவையும் அவ்வாறே இரத்தக் குழாய் நோய்கள்தான்.
    b.நீரிழிவு ஒரு முக்கிய காரணியாகும். உண்மையில் 35 சதவிகிதமான நீரிழிவு நோயளர்களை இப் பிரச்சனை பாதிப்பதாக தரவுகள் கூறுகின்றன.
    c.புரஸ்ரேட் நோய் முள்ளந் தண்டு நோய் ஆகியவற்றிற்கான சத்திரசிகிச்சையின் பின்விளைவாகவும் இது ஏற்படலாம்.
    d.போதைப் பொருள் பாவனை மற்றொரு முக்கிய காரணமாகும். புகைத்தல், மதுபாவனை, ஏனைய போதைப் பொருள் பாவனைகள் இதனைக் கொண்டுவரும்.
    e.ஆண் ஹோர்மோனான டெஸ்டஸ்ரரோன் குறைபாடு மற்றொரு காரணமாகும்.
    2) சிலரில் இது மன உணர்வுகளோடு தொடர்புள்ள பிரச்சனையாகும். உளநெருக்கீடு, மனச்சோர்வு போன்ற உளநோய்கள் உள்ளவர்களுக்கு இது ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும். பாலுறவு பற்றிய பதற்றம் (Performance Anxiety), பாலுறவு கொள்ளப் போகும் பெண்ணுடனான உறவில் உள்ள உரசல் (realationship Failure), Fear of intimacy போன்றவையும் காரணமாகலாம்.
    3) வேறு நோய்களுக்கு உபயோகிக்கும் மருந்துகளின் பக்கவிளைவாகவும் இக் குறைபாடு ஏற்படலாம். பிரஸருக்கு உபயோகிக்கும் தயசைட் மாத்திரை, மனச் சோர்வுக்கு உபயோகிக்கும் மருந்துகள், தூக்க மருந்துகள், குடலில் அமிலம் சுரப்பதைக் குறைப்பதற்காக உபயோகிக்கும் சிமிரிடீன் மாத்திரை போன்றவை சில மருந்துகளாகும்.
    மருந்து காரணம் எனக் கருதினால் உடனடியாக அதனை நிறுத்தி ஏற்கனவே உள்ள நோயை அதிகரிக்கச் செய்து விட வேண்டாம். மருத்துவருடன் கலந்து ஆலோசித்து அதற்கான மாற்று மருந்தை உபயோகிக்க வேண்டும்.
    உளம் சார்ந்ததா உடல் சார்ந்ததா?
    பலருக்கு இது உடல் சார்ந்ததாகவும், சிலருக்கு உளம் சார்ந்ததாகவும் இருக்கிறது என்றோம். இதனை வேறுபடுத்தி அறிவது எப்படி?
    உளம் சார்ந்ததின் அறிகுறிகள்
    a.திடீரெனத் தோன்றுவது,
    b.சில நாட்களில் விறைப்பு ஏற்படுவும் வேறு சில நாட்களில் விறைப்பு ஏற்பட மறுப்பதும்,
    c.பொதுவாக 60க்கு உட்பட்ட வயதுகளிலும் பொதுவாக உளம் சாரந்த ஆண்மைக் குறைபாடு எனலாம்.
    d.காலையில் நித்திரை விட்டெழும்போது எவருக்கும் தானாக உறுப்பு விறைப்படையும். இது இயல்பானது. சிலருக்கு தினமும் இல்லாமல் சில வேளைகளில் மட்டும் அதிகாலை விறைப்பு ஏற்படுகிறதெனில் அது உளம் சார்ந்ததே.
    e.வழமை போல உறவில் ஆர்வமற்றுப் போவதும் அத்தகையதே
    உடல் சார்ந்ததின் அறிகுறிகள்
    a.ஆண்மைக் குறைபாடு படிப்படியாக தோன்றி வரவர மோசமாகும்.
    b.எப்பொழுதுமே விறைப்பு ஏற்படாதிருத்தல்.
    c.பொதுவாக 60க்கு மேற்பட்ட வயது.
    d.அதிகாலையில் தானாக ஆணுறுப்பு விறைப்படைதல் முற்றாக அற்றுப் போதல்.
    e.உடலுறவில் ஆர்வம் இருந்தபோதும் ஆணுறுப்பு ஒத்துழைக்க மறுத்தல்.
    மருத்துவ ஆலோசனை
    மேற் கூறிய அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.
    பிரச்சனை உள்ளவருக்கு டெஸ்டஸ்ரரோன் குறைபாடு இருக்கிறதா என அறிய மருத்துவர் அவரின் ஆண்குறியின் வளர்ச்சி, மார்பின் அளவு, முக ரோமங்களின் வளரச்சி வேகம் ஆகியவற்றை கேட்டும் பரிசோதித்தும் அறிவார்.
    குருதியில் ஆண் ஹோர்மோன் ஆன டெஸ்டஸ்ரரோன் அளவை பரிசோதிக்கவும் கூடும்.
    நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் ஆகியன இருக்கின்றனவா என சோதித்து அறிவார்.
    சிகிச்சை
    நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் இருந்தால் அவற்றைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது அவசியம்.
    புகைத்தல், மது பாவனை ஆகியவற்றின் பாவனையை நன்றாகக் குறைக்க வேண்டும். அல்லது முற்றாக நிறுத்துவது சாலச் சிறந்தது.
    உளவளத் துணை பலருக்கு உதவி செய்யும்.
    மருந்துகளைப் பொறுத்த வரையில் phospho diesterase type 5 inhibitors (PDE5 inhibitors) என்ற வகை மருந்துகள் ஆண்குறி விறைப்படைதல் குறைபாட்டிற்கான சிகிச்சையைப் பொறுத்த வரையில் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளன.
    70சதவிகிதமானவர்களுக்கு இவை நல்ல பலனைக் கொடுக்கின்றன.
    ஆயினும் அண்மையில் பக்க வாதம், மாரடைப்பு ஆகியன வந்தவர்கள் இவற்றைத் தவிர்ப்பது நல்லது.
    அல்லது மாரடைப்பு வருவதற்கான நிலையில் உள்ள இருதய நோயாளர்கள் (Unstable Angina) தவிர்க்க வேண்டும்.
    நெஞ்சு வலிக்கு ரைனைற்றேட் (Trinitrate) உபயோகிப்பவர்கள் அதனுடன் சேர்த்து உபயோகிக்கக் கூடாது.
    நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களும் உபயோகிக்கலாம்.
    இவற்றில் மூன்று வகையான மாத்திரைகள் இப்பொழுது கிடைக்கின்றன.
    அவையாவன
    1.Sildenafil
    2.Vardenafil
    3.Tadalafil
    இவை பொதுவாக உடலுறவிற்கு சற்று நேரம் முன்பாக எடுக்க வேண்டிய மாத்திரைகளாகும். வேறுபட்ட நேரத்திற்கு பயன் தரும்.
    சில்டெனபில் என்பது வயக்ரா என்ற பெயரில் முதல் முதலாக அறிமுகமாகி மிகவும் பெயர் பெற்றதாகும்.
    ஏனையவை அதற்கு பிந்திய மருந்துகள்.
    சில்டெனபில்
    உடலுறவிற்கு 60 நிமிடங்கள் முன்பதாக உட்கொள்ள வேண்டியது.
    சுமார் நான்கு மணி நேரத்திற்கு வேலை செய்யக் கூடியது.
    வார்டெனபில்
    இது உடலுறவிற்கு சுமார் 25 முதல் 45 நிமிடங்கள் முன்பதாக உட்கொள்ள வேண்டியது.
    சுமார் ஆறு மணி நேரத்திற்கு வேலை செய்யக் கூடியது.
    ரடலபில்
    இது உடலுறவிற்கு சுமார் 30 நிமிடங்கள் முதல் 12 மணிநேரம் முன்பதாக உட்கொள்ள வேண்டியது.
    சுமார் முப்பத்தாறு மணி நேரத்திற்கு வேலை செய்யக் கூடியது. எனவே வாரத்திற்கு இரண்டு எடுத்தாலே நாள் முழுவதும் வேலை செய்யும் எனலாம்.
    பக்க விளைவுகள்
    இம் மருந்துகள் சிலருக்கு நெஞ்செரிப்பு, வயிற்றுப் பிரட்டு, வாந்தி, தலையிடி, தலைப்பாரம், தசைப்பிடிப்பு, மூக்கடைப்பு போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.
    இவை சற்று நேரத்தில் மறைந்துவிடக் கூடியன.
    ஏனைய சிகிச்சைகள்
    டெஸ்டஸ்ரரோன் குறைபாடு உள்ளவர்களுக்கு அதனை மாத்திரைகளாகவோ, ஊசியாகவோ கொடுப்பதுண்டு.
    வேறு சில மாத்திரைகள், உபகரணங்கள் போன்றவையும் உதவக் கூடும்.
    இவை எதனையும் மருத்துவ ஆலோசனையுடன் மாத்திரமே உபயோகிக்க வேண்டும்.
    டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
    குடும்ப வைத்தியர்
    நன்றி:- வீரகேசரி 07.12.2008

    Read Full Post »


    அந்தப் பையனுக்கு அடுத்த வாரம் திருமணமாக இருந்தது.

    ஆயினும் முகத்தில் அதற்கான பூரிப்பைக் காண முடியவில்லை. ஏதேதோ சில்லறைப் பிரச்சனைகள், நோய்கள் பற்றியே பேசிக்கொண்டிருந்தான். இவன் மனத்தின் உள்ளே ஏதோ அரித்துக்கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.

    திருமணமாக இருப்பதால் ஏதாவது பாலியல் பிரச்சனையா? அதனால்தான் சொல்ல வெட்கப்படுகிறானா? நேரிடையாகவே கேட்டேன்.

    ‘நான் சின்ன வயசிலை கெட்ட பழக்கம் பழகியிட்டன. இப்ப கைவிட்டிட்டன். அதான் அது அது …’ எனத் திணறினான்.

    ‘அது என்ன கெட்ட பழக்கம்?’

    ‘நான் என்ரை கையாலேயே …’ மீண்டும் திக்கினான்.

    ‘சுய இன்பமா?’ வினவினேன்.. தான் நினைத்ததை நான் சொல்லிவிட்டேன் என்பதில் அவன் முகம் மலர்ந்தது.

    இவனைப்போல சுயஇன்பம் செய்ததையிட்டு குற்ற உணர்வூடன் வருபவர்கள் பலர். இரவில் தானாகவே ஸ்கல்தமாவதால் தனது ஆண்மை பாதிப்படையுமா என பயந்து வரும் இளைஞர்கள் தொகையும் அதிகம்.

    உண்மையில் இவை எவையுமே பிற்காலத்தில் பாலியல் உறவில் பிரச்சனைகளை உண்டாக்கும் கெட்ட செயல்களல்ல. ஆபத்தான நோய்களுமல்ல. தன்னைத்தானே நொந்து கழிவிரக்கம் கொள்ள வேண்டிய ஈனச் செயல்களுமல்ல.

    பதின்ம வயதுகளில் பையன்களின் ஆண் உறுப்பு வளர்ச்சியடைகிறது. விந்து உற்பத்தியும் தொடங்குகிறது. அது வெளியேற வேண்டும்தானே? பானை நிறைந்தால் நீர் வெளியே சிந்தும். இதுபோல உற்பத்தியாவது ஏதாவது வழியில் வெளியேறவே செய்யும்.

    எனவே தூக்கத்தில் ஸ்கல்தமாவது என்பது இயற்கையான செயல்தான். அவ்வாறு வெளியேறும்போது ஒரு வகை இன்பத்தையும் உணர்கிறான். சற்று ஆராய்ச்சி மனமுள்ள பையன் தனது கையால் அதை வெளியேற்றிப் பார்க்கிறான். அதில் மேலும் ஆனந்தமடைகிறான்.

    இதேபோல பெண்பிள்ளைகளும் தமது உறுப்புகளின் வளர்ச்சியை அவதானிக்கிறார்கள் தொட்டுப் பார்க்கிறார்கள். உறுப்பின் மொட்டை வருடுவதால் சுயஇன்பம் பெறுவதுண்டு.

    இவை இயற்கையானவை, ஆபத்தற்றவை. எதிர்பாலத்தில் கணவன் மனைவி இடையேயான உடலுறவைப் பாதிக்கப் போவதில்லை.

    மாறாக ஓரினப் பாலுறவு சர்ச்சைக்குரியது.

    பலரும் தமது பதின்ம வயதுகளில் இதையும் பரீட்சித்துப் பார்த்திருக்கிறார்கள். இதுவும் இயல்பானதுதான்.

    ஆனால் ஆபத்தற்றது என்று சொல்ல முடியாது.

    காரணம் ஓரினச் சேர்க்கையோ ஈரினச் சேர்க்கையோ அங்கு ஒருவரிலிருந்து மற்றவருக்கு நோய் தொற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது. அதாவது ஹேர்பீஸ், கொனரியா, சிபிலிஸ் முதல் எயிட்ஸ்வரை எதுவுமே தொற்றக் கூடும். இது ஒரு சாத்தியம் மட்டுமே.

    ஆயினும் எனக்கும் தொற்றியிருக்குமோ என மனத்துக்குள் மறுகி துன்பப்பட்டுக் கொண்டிருக்காது வைத்திய ஆலோசனை பெறுவது அவசியமாகும். இவற்றில் பலவற்றிற்கு நல்ல சிகிச்சைகள் கிடைக்கின்றன. வைத்தியரிடம் எதையும் சொல்ல தயங்கவோ, வெட்கப்படவோ, பயப்படவோ வேண்டியதில்லை. அவர்கள் இரகசியம் காப்பவர்கள்.

    வெளிப்டையாகப் பேசி ஆலோசனை பெறாது மனத்துக்குள் அடக்கி வைப்பதால்தான் பலர் திருமணத்தின் பின் குற்ற உணர்வுக்கு ஆளாகி பீதி, பதகளிப்பு, மனச்சோர்வு, உடலுறவில் சிக்கல் போன்ற நோய்களுக்கு ஆளாகி தமது திருமண வாழ்வின் மகிழ்ச்சியையே தொலைத்து விடுகிறார்கள்.

    பாலியல் பற்றி வெளிப்படையாகப் பேசாத எமது சமூகச் சூழலில் திருமணத்திற்கு முன்னான ஆற்றுப்படுத்தல் (Premarital Councilling) செய்வது ஆரோக்கியமான செயற்பாடாக இருக்கும் என எண்ணத் தோன்றுகிறது.

    திருமணமாக இருக்கும் ஆண் பெண் இருபாலாருக்கும் இது அவசியம். ஆனால் இருவரையும் சேர்த்து வைத்து ஆற்றுப்படுத்துவதற்கு எமது சமுதாயம் தயாராகாத நிலையில் தனித்தனியாகவும் செய்யலாம்.

    பாலியல் பிரச்சனைகளுக்கு மட்டுமே இது அவசியம் என்பதில்லை. வாழ்க்கைப் பயணத்தில் எத்தனையோ விதம் விதமான பிரச்சனைகளை, சவால்களை இருவரும் எதிர்நோக்க நேரிடும். அவற்றை திடமாக எதிர்கொள்ள ஆற்றுப்படுத்தல் உதவும்.

    வைத்தியர்தான் இதைச் செய்ய வேண்டும் என்றில்லை. மத நிறுவனங்கள் மேலும் பொருத்தமாக இருக்கலாம். மதகுருமார்களுக்கு அதில் சிறு பயிற்சி அளித்தால் போதுமானது.

    டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

    Read Full Post »

    >அறுபது வயதைத் தாண்டிய முது இளைஞர் அவர். ‘சலம் போகும் போது எரிகிறது. சலவாயிலிருந்து சற்றுக் கசிவும் இருக்கிறது’ என்று பயந்து கொண்டே கூறினார். கையுறை அணிந்து அவரது உறுப்பைப் பரிசோதித்த போது எதுவும் வெளிப்படையாகத் தெரியவில்லை. ‘கறந்து’ பார்த்தபோது கசிவு இருந்தது. ஆய்வுகூடப் பரிசோதனையில் அது கொனரியா என்ற பாலியல் நோய் என்பது தெளிவாகியது.

    நல்ல காலம் எயிட்ஸ் இல்லை என்று கூறியதும் மலர்ந்தார். நான் கேட்காமலே அவர் நீண்ட வியாக்கியானம் தந்தார். தனது மனைவி சுகவீனமாக இருப்பதாகவும், அதனால் அவருடன் உடலுறவு கொள்ள முடிவதில்லை எனவும் இதனால் தான் வேறு இடங்களில்தான் பாலுறவு வைத்துக் கொள்வதாகவும் … இன்னும் பல பல. தான் அவ்வாறு செய்ததற்கான சாட்டுகள் தாம் அவை. வைத்தியர்களுக்கு அதற்கான காரணம் முக்கியமல்ல. ஆணுறைப் பாதுகாப்பு இல்லாமல் உறவு வைத்த தவறை எடுத்துக் கூறி ஆன சிகிச்சை அளித்தேன்.

    இன்னொருவர் வெளிநாட்டவர். எது வித தயக்கமுமின்றித் தான் வெளியிடத்தில் உறவு வைத்த பின் சலவாயிலிருற்து கசிவும் கடுமையாக எரிவும் இருப்பதாகக் கூறினார். பார்த்தபோது கொனரியா என்பது தெரிந்தது. சொன்னனேன். ‘அப்படித்தான் தெரிகிறது. எதற்கும் முழமையாகப் பரிசோதித்து வேறு நோய்கள் இல்லை என்பதையும் நிச்சயப்படுத்துங்கள்’ என்று நீண்ட அனுபவப்பட்டவர் போலக் கேட்டுக் கொண்டார்.

    இருவருமே ஆணுறை அணிந்தே உறவு வைத்ததாகக் கூறியபோதும் அவர்களின் கூற்றில் உறுதியிருக்கவில்லை. ‘கண்ட கண்டவர்களுடன் போகவில்லை.’ என்ற அர்த்தம் தொனிக்கப் பேசினார்கள். முதலாமவர் ‘பச்சை நோட்டுக்கள் பல கொடுத்த’ நல்ல இடம் என்றார். இரண்டாமவர் கீழைத்தேய நாடு ஒன்றின் பெயரைக் கூறி அந்நாட்டின் அழகான உயர் ரகப் பெண் என்றார்.அதிக பணம் கொடுத்தாலோ, உயர் ரகப் பெண் என எண்ணிப் போவதோ பாதுகாப்பு என எண்ணுவது தவறானது.

    வெளி உறவுகள் எப்பொழுதுமே ஆபத்தானவை என்பதே உண்மை. அத்துடன் பெண்களுக்கு பெரும்பாலும் பாலியல் நோய்களின் அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரிவதில்லை. அதனால் தங்களுக்கு நோய் இருப்பது தெரியாமலே தன்னோடு கூடுபவருக்குப் பரப்பிவிடுவார்கள். சில ஆண்களுக்கும் கூட கடுமையான அறிகுறிகள் இருப்பதில்லை. அவர்களும் பரப்புவார்கள். எனவே பாதுகாப்பற்ற உறவு என்பது ஆண் பெண் என எவருக்குமே ஆபத்தானது என்பதே உண்மை.

    சிகிச்சை என்பது நோயுற்றவருக்கு மட்டுமல்ல, உறவு கொண்ட பங்காளிக்கும் சேர்த்தேயாகும். அவ்வாறு அளிக்கும்போதே மீண்டும் தொற்றுவதைத் தடுக்கலாம். அத்துடன் மற்றவர்களுக்கும் பரவக்கூடாது என்ற சமூக நோக்கும் இதில் அடங்குகிறது.

    மேலே குறிப்பிட்டவர்களுக்கு வந்த நோயான கொனரியா சுலபமாகக் குணப்படுத்தக் கூடியது. ஆனால் எயிட்ஸ், சிபிலிஸ், கிளமிடியா, ஜெனிடல் வோரட்ஸ் என பலவகையான பாலியல் நோய்கள் உண்டு என்பதை மறக்க வேண்டாம். இவற்றில் சில கட்டுப்படுத்தக் கூடியவையே அன்றி முழுமையாகக் குணப்படுத்த முடியாதவை.

    இவை எதுவுமே இன்று உயிர் கொல்லி நோய்கள் அல்ல, எயிட்ஸ் உட்பட. ஏனெனில் எயிட்சை முற்று முழுதாகக் குணமாக்க முடியாது என்பது உண்மையான போதும் அதன் தாக்கத்தை இன்று கட்டுப்படுத்த முடியும். கோடிக்கணக்கில் பணம் இருந்தால் எயிட்ஸ் நோயுடன் கூட நீண்ட காலம் வாழ முடிகிறது. இவ்வாறு சொல்வது தகாத உறவுகளுக்கான பாஸ்போட் அல்ல.

    டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

    Read Full Post »

    Older Posts »