Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘புற்று நோயல்லாத கட்டி’ Category

>

மலம் கழித்துவிட்டுக் கழுவும்போது அதில் ஏதோ கட்டியாகத் தட்டுப்பட்டது.
மூல வருத்தமோ, வேறு ஏதாவது ஆபத்தான கட்டியாக இருக்குமோ எனப் பயந்து வந்தாள் ஒரு நோயாளி.

மலவாயிலில் அரிப்பாக இருக்கிறது என சொன்னார் மற்றொரு ஐயா.
பரிசோதித்துப் பார்த்தபோது அவர்களுக்கு குதத்தை அண்டிய பகுதியில் சிறிய தோல் வளர்த்திகள் தென்பட்டன. (Anal Skin Tags) என ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.

இவற்றின் தோற்றத்தில் பல மாறுபாடுகள் இருக்கக் கூடும். குறிப்பிட்ட ஒரு வடிவமாக இருக்காது. நீளமாக, உருண்டையாக, தட்டையாக, பெயரற்றவை எனப் பல்வேறு வடிவங்களில் இருக்கலாம். சதைக்கட்டி போலவும் இருக்கலாம்.

இவை காண்பதற்கு அரிதானவை அல்ல. பல நோயாளிகளுக்கு இருக்கின்றன. பலருக்கு அவ்வாறு இருப்பது தெரிந்திருப்பதில்லை.

இவை ஆபத்தானவை அல்ல. பொதுவாக எந்தத் துன்பத்தையும் கொடுப்பதில்லை. பேசா மடந்தைகளாக அடங்கிக் கிடக்கும். மிகச் சிலருக்கு அரிப்பு, வலி தோன்றலாம்.

பொதுவாக இவை குதம் சம்பந்தப்பட்ட வேறொரு நோயுடன் தொடர்புடையதாக இருக்கும். அல்லது அதன் தொடர்ச்சியாக அல்லது பின்விளைவாக இருக்கும்.

எவ்வாறு ஏற்படுகிறது?

  • மலம் இறுகும்போதுஇ முக்கிக் கழிக்க நேரிடும். அவ்வேளையில் குதத்தில் சிறு உராய்வுகள் அல்லது காயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இவை காலகதியில் குணமாகும்போது அதில் சிறுதோல் வளர்ச்சியாக மாறும்.
  • அல்லது வெளியே இறங்கிய ‘வெளிமூலம்’(External hemorrhoid)சரியான சிகிச்சையின்றி தானாகக் குணமடையும்போதும் அவ்விடத்தில் சிறு தோல்வளர்ச்சியாக வெளிப்படும்.
  • குதப் பகுதியில் முன்பு செய்யப்பட்ட சத்திரசிகிச்சையின் விளைவாகவும் தோல் வளர்வதுபோலத் தோன்றும்.

வலி வேதனை எவையும் ஏற்படுவதில்லை ஆதலால் நோயாளியின் கவனத்தை ஈர்ப்பதில்லை. தற்செயலாக மலம் கழுவும்போது அது இருப்பதை உணரக் கூடும்.

அவ்வாறான தோற்சிறு கட்டியுடன் வலியிருப்பதாக நோயாளி சொன்னால்; பெரும்பாலும் குதத்துடன் சேர்ந்த மூல வீக்கம், குத வெடிப்பு, போன்ற வேறு ஏதோ நோயும் சேர்ந்திருப்பதாகக் கருதலாம்.

இந்நோயுள்ளவர்கள் குதவாயிலை மிகவும் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். மலம் கழித்துவிட்டுக் கழுவும்போது பெரும்பாலும் ஒரு பக்கமாகவே கழுவுவோம்.

பெரும்பாலானவர்கள் குதத்தின் பின் பக்கத்தில் ஆரம்பித்து முன்னுக்கு வருமாறு தமது விரல்களைத் தேய்த்தே கழுவுவார்கள். இதனால் தோல் வளர்த்தியின் மறுபுறத்தில் மலம் சிறுதுணிக்கைகளாக அடையும் சாத்தியம் உண்டு. கட்டிகள் பல அவ்வாறான இருந்தால் சுத்தத்தைப் பேணுவது மேலும் சிரமமாகும்.

சுகாதாரக் குறைவு காரணமாக அவ்விடத்தில் அழற்சி ஏற்படும். இது அரிப்பை ஏற்படுத்தும். அரிப்பு அடங்கச் சொறியும்போது புண்பட்டால் கிருமித் தொற்றும் ஏற்பட்டு நிலையை மோசமாக்கும்.

சிகிச்சை

எந்தவித பிரச்சனையும் இல்லாவிட்டால் அவ்வாறான தோற்சிறு கட்டிகளுக்கு யாதொரு சிகிச்சையும் அவசியமில்லை. அரிப்பு, வலி, சுகாதாரத்தைப் பேணுவதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் அவற்றை வெட்டி நீக்கிவிடலாம்.

அவ்விடத்தை மரக்கச் செய்ய ஊசி போட்டுவிட்டு சிறு சத்திர சிகிச்சை மூலம் அகற்றலாம். மருத்துவ நிலையத்தில் உள்நோயாளியாக அனுமதிபெற்று நின்று செய்ய வேண்டியதில்லை. பெரும்பாலும் வெளிநோயாளியாகச் செய்துவிட்டு சிறிது நேரத்தில் வீடு திரும்பக் கூடிய சாதாரண சிக்கிச்சையே இது.

வீக்கமடைந்த பப்பிலே (Enlarged Papillae) , வைரஸ் வோர்ட், நீர்க்கட்டி (Polyps), போற்றவையும் குதத்தருகே தோன்றக் கூடும். எனவே மருத்துவரின் ஆலோசனை பெற்று சரியாக நோயை நிர்ணயிப்பது அவசியம்.

குத வெடிப்பு (Anal fissure)

பிஸ்டுலா (fistula) போன்ற கிருமித் தொற்றுள்ள மலக்குடல் சார்ந்த புண்களில்,

Fistula in ano

 அவற்றின் குத ஓரமான முனையை மூடி தோல் வளர்த்தி ஏற்படுவதுண்டு.  இதனை sentinel tag என்பார்கள். சற்று தீவிரமான அந்த அடிப்படை நோய்க்கு முன்னுரிமை கொடுத்து மருத்துவம் செய்வது அவசியமாகும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0

Read Full Post »

>

வாயினுள் கட்டி வளர்ந்தால் எவருக்குமே மனக்கிலேசமாகத்தான் இருக்கும். ஏனெனில் இலங்கையில் வாய்ப் புற்றுநோய் மிக அதிகமாகக் காணப்படும் ஒரு நோய் என்பதால்தான்.

இந்த நோயாளியும் அவ்வாறு திகிலுடன் வந்திருந்தார்.

அவரது வாயின் உட்புறத்தில் வழவழப்பான மேற்பரப்புடன், நீள்வட்ட தோற்றத்தில் ஒரு கட்டி தென்பட்டது.

சற்று மினுமினுப்பாகவும் இருந்தது. பார்த்த மாத்திரத்திலேயே அது புற்றுநோயல்ல என்பது தெளிவாகியது. அது ஒரு நீர்க்கட்டி அதை Mucous Cyst என மருத்துவத்தில் கூறுவார்கள். அவை எச்சில் சுரப்பிகளுடன் சம்பந்தப்பட்டவையாகும்.

எவ்வாறு ஏற்படுகின்றன?

இந்த கட்டிகள் எவ்வாறு தோன்றுகின்றன என்பது நிச்சயமாகத் தெரியாது. ஆயினும் ஏதாவது சிறுகாயம் காரணமாக இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.

கடைவாய்ப் பக்கமாக அதிலும் முக்கியமாக கீழ் உதடுகளை அண்டிய பகுதிகளிலேயே இவை அதிகமாகத் தோன்றுகின்றன என்பது காயங்கள் காரணமாகத் தோன்றலாம் என்ற கருத்திற்கு வலுவூட்டுகின்றன.

வாயினுள் தோன்றும் இத்தகைய நீர்க்கட்டிகள் மிகவும் பரவலாகக் காணப்படுகின்றன. ஆயிரம் பேரில் 2.5 எண்ணிக்கையளவில் தோன்றுவதாக கூறப்படகிறது.

ஆண் பெண் என்ற வேறுபாடின்றி இருபாலாரிடமும் ஒரேவிதமாகத் தோன்றுகிறது. ஆயினும் வெள்ளையர்களில் கறுப்பு இனத்தவரைவிட அதிகமாகத் தோன்றுவதுண்டாம்.

எந்த வயதினரிடையேயும் தோன்றலாம் என்ற போதும் வயதானவர்களை விட இளவயதில் அதிகம் காணப்படுகிறது. பெரும்பாலும் 30 வயதிற்குக் குறைந்தவர்களிடையே அதிகம் காணக் கூடியதாக இருக்கிறது.

இதில் இரண்டு வகைகள் உண்டு.

முதலாவது வகை ஆழமற்று மிகவும் மேலாக இருக்கும். தெளிவான நீருள்ள சிறிய கொப்பளங்கள் போலத் தோன்றித் தானாகவே விரைவில் உடைந்துவிடும். உடையும்போது ஏற்படும் சிறு புண்கள் விரைவில் தானாகவே ஆறிவிடும். அதே இடத்திலோ அருகிலோ மீண்டும் தோன்றலாம். இவை பெரும்பாலும் நோயாளிகளின் கவனத்தை ஈர்ப்பது குறைவு.

வாய்த் தோலின் ஆழமான பகுதியில் தோன்றும் நீர்க்கட்டிகளின் வளர்ச்சி வேகம் மிகக் குறைவானதாகும். தெளிவான ஓரங்களுடன் தொட்டால் வழுகுவது போன்ற இறுக்கமான நீள்வட்ட வடிவானதாக தோற்றமளிக்கும். வலிக்காது. பல செ.மீ வரை வளரக் கூடும் ஆயினும் 75 சதவிகிதமானவை ஒரு செ.மீ வரை மட்டுமே வளரும்.

உற்றுப் பார்த்தால் வெளிர் நீல நிறமாகத் தோன்றலாம். நாட்பட்டால் சற்று சொரசொரப்பாக இருக்கும். கீழ் உதடு, வாயின் அடிப்புறம், கன்னங்களின் உட்புறம், அண்ணம், கடைவாய்ப் பல்லை அண்டிய பகுதி போன்ற இடங்களில் அதிகமாகத் தோன்றும். மேலுதட்டில் தோன்றுவது குறைவு.

சிகிச்சை

வாயில் தோன்றும் நீர்க்கட்டிகளுக்கு பொதுவாகச் சிகிச்சை எதுவும் தேவைப்படாது. தானாகவே உடைந்து மறைந்துவிடும்.

ரனுயுலா (Ranula)

வாயின் அடிப்பகுதியில் நாக்குக் கீழே சற்றுப் பெரிய கட்டிகள் தோன்றுவதுண்டு. 2-3 செ.மீ வரை வளரும் இவை நாக்கிற்குக் கீழ் உள்ள எச்சில் சுரப்பியுடன் தொடர்புடையது.

வெளிர் நீலநிறமுடைய இவை வலியை ஏற்படுத்தாது. நன்கு வளர்ந்தால் சப்புவது, பேசுவது, உண்பது போன்ற செயற்பாடுகளுக்கு இடைஞ்சல் விளைவிக்கலாம். இவை தவளைகளின் தொண்டையில் உள்ள வீக்கம் போலத் தோற்றமளிப்பதாலேயே சயரெடய என அழைப்பார்கள்.

இவை சில வேளைகளில் வளர்ந்து தொண்டைப் பகுதிக்கும் சென்றுவிடுவதுண்டு. அதனைச் சத்திர சிகிச்சை மூலமே அகற்ற முடியும்.

வாயில் தோன்றிய புற்றுநோய்க்கட்டி பற்றிய Stethஇன் குரல் வலைப்பூ பதிவிற்கு…

வயது போனவர்தானே. வைத்தியம் செய்தும் என்னத்தைக் ……

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0

Read Full Post »

>
அந்த அம்மாவின் உடலில் பல கட்டிகள். வயிற்றின் மேற் பகுதியில் இரண்டு பொம்மித் துருத்திக் கொண்டு நின்றன. கையை நீட்டியபோது முன்கையில் ஒன்று தெளிவாகத் தெரிந்தது.

வேறும் இருக்கிறதா எனக் கேட்டபோது இடது முழங்கையின் உட்புறமாக ஒன்று சாடைமாடையாகத் தெரிந்தது. கண்ணில் தெரிந்ததைவிடத் தடவிப் பார்த்தபோது தெளிவாகப் புரிந்தது.

ஏதாவது புற்றுநோய்க் கட்டியாக இருக்குமா எனச் சந்தேகிக்கிறீர்களா? இல்லை. அந்தப் பெண்மணிக்கே புற்றுநோய் என்ற பயம் இருக்கவில்லை. ஏனெனில் பல வருடங்களாக இருக்கின்றன. எந்தப் பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை.

கொழுப்புக் கட்டிகள் – லைப்போமா (lipoma) எனப்படும் இவை ஆபத்தற்றவை. புற்று நோய் என்ற கலக்கத்திற்கு இடமே இல்லை. இவை சருமத்திற்குக் கீழாக வளர்கின்றன. தசை, சவ்வு எலும்புகள் போல ஆழத்தில் இருப்பதில்லை. மேற்புறத்தில் மட்டுமே இருக்கும். ஒன்று முதல் பல கொழுப்புக் கட்டிகள் ஒருவரில் தோன்றக் கூடும்.
 
பொதுவாக கட்டிளம் பருவத்திலேயே ஆரம்பித்தாலும், நடுத்தர வயதில் வெளிப்படையாகத் தெரியும். ஆண்கள் பெண்கள் என வித்தியாசம் இல்லாமல் இருபாலாரிலும் தோன்றும்.

காரணம் உண்டா?

இவை தோன்றுவதற்கான காரணம் தெரியாது. பொதுவாக குடும்பத்தில் ஒருவருக்கு மேற்பட்டவர்களில் அவதானிக்கப்படுவதால் பரம்பரைக் காரணிகள் இருக்கலாம் என நம்பப்படுகிறது. வெளிப்டையான காயங்கள் இல்லாத ஊமைக் காயங்கள் அல்லது கண்டல் காரணங்களால் ஏற்படக் கூடும் எனவும் நம்பப்படுகிறது.

அறிகுறிகள்

திடீரெனத் தோன்றும் நோயல்ல. படிப்படியாக பல வருடங்களின் பின்னர் அதுவும், தொட்டால் தெரியுமளவு வளர்ந்த பின்னரே ஒருவர் அவதானிப்பார். வெளிப்படையாகத் தெரிய மேலும் காலம் எடுக்கும்.

பொதுவாக மென்மையானதாக இருக்கும். குழைத்த மாப் போல அல்லது ரப்பர் போல இருக்கும்.

தோலுக்குள் கீழாக நளுநளுவெனத் தோலுடன் ஒட்டாது நழுவிச் செல்வது போலிருப்பது இதன் முக்கிய அறிகுறியாகும்.

இதன் வடிவம் கும்பிபோல அல்லது முட்டைபோல நீள் வட்டமாக இருக்கும். அளவில் பெரு வேறுபாடுகள் இருக்கலாம். 2-10 செமி வரை வளரலாம். ஆனால் அதனிலும் பெரிதாகவும் நாம் காண்கிறோம்.

தோள், கழுத்து முதுகு, வயிற்றுப் புறம், கை போன்ற இடங்களில் காணப்;படுகிறது. ஆனால் சருமத்தில் கொழுப்பு உள்ள இடமெங்கும் தோன்றுவதற்கு வாய்ப்பு உண்டு.

கண்ணில் படுவதைத் தவிர இந்தக் கொழுப்புக் கட்டிகள் வேறெந்த அறிகுறிகளையும் காண்பிப்பதில்லை.

தொட்டால் கூட வலிப்பதில்லை. ஆயினும் சில மட்டும் இறுக அழுத்தினால் சற்று வலியை ஏற்படுத்தும். அவ்வாறு வலிப்பவை பொதுவாகச் சற்று குருதியோட்டம் அதிகமான கொழுப்புக் கட்டிகளாகும். இவற்றை அஞ்சியோ லைப்போமா என்பார்கள். அவையும் ஆபத்தானவை அல்ல என்பது குறிப்பி;த்தக்கது.

புற்றுநோயாக மாறுமா?

கொழுப்புக் கட்டிகள் உடனடியாக ஆபத்தானவை அல்ல என்றாலும் இவை எதிர்காலத்தில் புற்றுநோயாக மாறுமா என்ற பயம் ஏற்படுவது இயல்பே. ஆனால் அவ்வாறு மாறுவதில்லை.

ஆயினும் லைப்போ சார்க்கோமா என்ற ஒருவகை கொழுப்புப் புற்றுநோய் இருக்கிறது. தோலில் அல்லாது சற்று ஆழத்தில் கண்ணில் படாதவாறு இருக்கும் சில கொழுப்புக் கட்டிகள் திடீரென பருமனடைந்து வலியையும் கொடுக்குமாயின் மருத்துவரிடம் காண்பிப்பது அவசியம். ஊசி மூலம் சிறு துளியை எடுத்து ஆராய்ந்து (biopsy) பார்ப்பார்கள்.
 
சிகிச்சை

பொதுவாக எந்தச் சிகிச்சையும் தேவைப்படாது. ஓரளவு காலத்தின் பின் அது வளர்ச்சியடைவது தானாகவே நின்றுவிடும். ஆயினும் மறையாது. அது இருப்பதால் அருகில் உள்ள தசைகளின் இயக்கத்திற்கு பிரச்சனை இருக்குமாயின் அகற்ற நேரிடும். சத்திர சிகிச்சை மூலம் அன்றி உறிஞ்சி எடுப்பதன் (Liposuction)    மூலம் அகற்றலாம்.

புற்றுநோயல்லாத மற்றொரு கட்டி பற்றிய எனது முன்னைய பதிவு

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0

Read Full Post »

>அவளுக்குப் பயம் பீடித்திருந்தது.

‘இது கான்சராக இருக்குமோ?’

அண்மையில்தான் அவளது நெருங்கிய உறவினர் ஒருவர் மார்புப் புற்றுநோய் எனக் கண்டிறியப்பட்டு சிகிச்சைகளுக்காக அலைந்து கொண்டிருந்தார்.

ஆனால் கட்டிகள் அனைத்தும் புற்றுநோய் அல்ல என்பதும் கட்டிகள் இல்லாமலும் புற்றுநோய்கள் வராலாம் என்பதும் அவளுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை.

இவளுக்கு வலது மணிக்கட்டை அண்டிய இடத்தில் ஒரு கட்டி நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. வலிக்காததாலும், வேறு எந்தத் தொல்லை இல்லாததாலும் அலட்சியம் பண்ணிவிட்டாள். இப்பொழுது உறவினருக்கு புற்றுநோய் என்றதும் கிலி பிடித்து ஓடி வந்திருந்தாள்.

எத்தகைய கட்டி

இத்தகைய கட்டிகளை Ganglion என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். பெரும்பாலும் மணிக்கட்டின் பின்புறத்தில் தோன்றுவதுண்டு. சிலவேளைகளில் முன்புறத்திலும் வரலாம்.


சிலருக்கு கால்களின் மேற்புறத்திலும் உண்டாவதுண்டு. மிக அரிதாக முழங்காலுக்கு அருகிலும், கணுக்காலடியிலும் தோன்றலாம்.

இது எவ்வகையிலும் ஆபத்தான கட்டியல்ல. தோலுக்கு கீழே இருக்கும். தோலுடன் ஒட்டிக் கொண்டிராது வழுகிக் கொண்டிருக்கும். நீர்க்கட்டி (Cyst) போன்றது. அதற்குள்ளே நீரைவிட சற்றுத் தடிப்பான ஜெலி போன்ற திரவம் இருக்கும்.

எப்படி ஏற்படுகிறது?

இத்தகைய திரவம்தான் எமது மூட்டுகளையும், தசைநார்களையும் வரட்சியடையாது வழுவழுப்புடன் வைத்திருந்து சுலபமாக இயங்க வைக்கின்றன. எப்பொழுதாவது அடிபடும் போது மூட்டு அல்லது தசைநாரைச் சுற்றியிருக்கும் இத் திரவம் வெளியேறி ஏதாவது காரணத்தால் ஓரிடத்தில் தடைப்பட்டு கட்டிபோலச் சேருவதாலேயே இது ஏற்படுகிறது.


கீழே உள்ள தசைநாருடன் அல்லது எலும்புடன் ஒட்டிக் கொண்டிருக்கும். ஆனால் இது வேறு இடங்களுக்குப் புற்றுநோய் போலப் பரவாது.

1-2 செ.மி வரை வளரக் கூடும். புற்றுநோய் போன்ற ஆபத்து எதுவும் ஏற்படாது எனச் சொன்ன போதும் சிலர் அதை அகற்ற வேண்டும் என அடம் பிடிப்பதுண்டு. அது அசிங்கமாக தோன்றுவதே காரணம். பொதுவாக வலிப்பதில்லை. ஆயினும் சில தருணங்களில் நரப்புகளுக்கு அருகில் இருந்தால், அது அழுத்தப்பட்டு சிறிது வலி ஏற்படலாம். சிலருக்கு விறைப்பு ஏற்படுவதும் உண்டு.

சிகிச்சை

பொதுவாகச் சிகிச்சை எதுவும் தேவைப்படாது. சிலகாலம் செல்ல எப்படி மறைந்தது என்று தெரியாமலே பலருக்கும் தானாக மறைந்து விடுவதுண்டு.

மருத்துவர்கள் அகன்ற துவாரம் கொண்ட ஊசி மூலம் அத் திரவத்தை அகற்றுவார்கள். ஆயினும் மிகத் தடிப்பான திரவமாதலால் அவ்வாறு ஊசியால் பெரும்பாலும் அகற்ற முடிவதில்லை.

பொதுவாக அவ்வாறு அகற்றிவிட்டு அதனுள் ஸ்டீரொயிட் ஊசி மருந்தை ஏற்றுவார்கள். உடனடியாக மறைந்தாலும் இச் சிகிச்சைகளுக்குப் பின்னரும் மீண்டும் வளர்வதுண்டு.

பைபிள் சிகிச்சை

ஆனால் அதற்கு மேலாக ஒரு பாரம்பரிய சிகிச்சை முறை உண்டு. பேசிக் கொண்டிருக்கும் போதே நோயாளி எதிர்பாராத விதத்தில் மருத்துவர்கள் அருகில் உள்ள தடித்த கனமான புத்தகத்தால் கட்டி மீது ஓங்கி அடிப்பார்களாம். உடனடியாகவே உள்ளே உள்ள கூடு வெடித்து நீர் பரவியதும் கட்டி மறைந்துவிடும்.

அதிர்ச்சி வைத்தியமான போதும் இம்முறையில் ஆபத்து எதுவும் கிடையாது. முன்பு அதற்காக குடும்ப பைபிளைப் பயன்படுத்துவார்களாம். புனிதம் என்பதால் அல்ல. பாரம் கூடியது என்பதால். ஆயினும் வெடித்த மறைந்த கூட்டின் சுவர் சிலவேளைகளில் மீண்டும் வளர்ந்தால் கட்டி மறுபடி தோன்றலாம்.

மேற் கூறியவற்றால் குணமடையாவிட்டால், அல்லது நோயாளிக்கு தொல்லை கொடுத்தால் சிறிய சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்படுவதும் உண்டு. சத்திரசிகிச்சையானது மேற் கூறியவற்றை விட நல்ல பலனைக் கொடுக்கும். இருந்தாலும் மீண்டும் வராது என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.


நோயாளிக்கு வலி, விறைப்பு போன்ற பிரச்சனைகள் எதுவும் கிடையாது எனில் அவதானித்து வந்தால் போதுமானது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »