Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘மணிவிழா’ Category

>

எழுத்தளாரும், உளவியல் ஆலோசகரும், நடிகரும், இளைப்பாறிய கல்வி அதிகாரியும் இன்னும் ஆற்றல்கள் பல நிறைந்தவருமான திருமதி.கோகிலா மகேந்திரன் அவர்கள் இன்று அகவை 60 இல் கால் பதிக்கிறார். 

எழுத்துலக நண்பர்கள் சார்பிலும், எனதும் எனது குடும்பத்தினரதும் மனம் நிறைந்த வாழ்த்துக்களை அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நீடுழி நிறைவாக வாழ்ந்து கலை இலக்கிய உளவியல் பணிகள் செய்ய வாழ்த்துகிறேன்.

இன்றைய தினக்குரல் பத்திரிகையில் எனது மற்றொரு நண்பரான புலோலியூர் இரத்தினவேலோன் கோகிலா பற்றி எழுதிய கட்டுரையை நன்றியறிதலுடன் இங்கு பிரசுரிக்கிறேன்.

 அகவை அறுபதில் கோகிலா மகேந்திரன்

artical-02எழுபதுகளின் நடுக்கூற்றில் எழுத ஆரம்பித்த ஈழத்து எழுத்தாளர்கள் பலருக்கு”ஈழநாடு’ பத்திரிகையும் “சுதந்திரன்’ பத்திரிகைக் காரியாலயத்திலிருந்து வெளியான “சுடர்’ சஞ்சிகையும் “மல்லிகை’ மாசிகையும் களம் அமைத்துக் கொடுத்ததில் கணிசமான பங்காற்றியிருந்தன. அக்களங்களையே பெரும்பாலும் பயன்படுத்தி இலக்கிய உலகில் இனங்காணப்பட்டவர்களுள் ஒருவராகக் கொள்ளத்தக்க கோகிலோ மகேந்திரன் இன்று தனது அறுபதாவது அகவையைப் பூர்த்தி செய்கின்றார்.
எண்பதுகளின் ஆரம்பத்தில், கணக்கியல் துறை மாணவனாகக் கொழும்பில் நான் பயின்றுகொண்டிருந்த காலகட்டங்களில் சுடரில் வெளியான “குரூர ரசனைகள்’ என்ற அவரது சிறுகதையினைப் படித்ததன் பின்னரே அவரது அறிமுகம் எனக்குக் கிட்டியதாக ஞாபகம். கடித மூலம் அக்கதைக்கு நானெழுதிய விமர்சனமே எம்தோழமையின் முதற்பாலமாக விளங்கிற்று எனலாம். தொடர்ந்து என்கதைக்கு அவரும், அவரது கதைகளுக்கு நானுமாக எழுதிய கடிதங்களே எம் நட்பினை இடைவெளியின்றி நீடித்து வளர்த்தது. ஓர் ஆசிரியையாக நின்று அவர் வழங்கிய அறிவுரைகளும் கருத்துகளும் மாணவனான எனக்கு நம்பிக்கையினை ஏற்படுத்தி நின்றன. தெண்மையைத் தந்தன.
தவறுகளைத் தவறாது சுட்டிக்காட்டி தட்டிக்கொடுக்கும் அவரது தனிப்பட்ட இயல்பு தரமான இலக்கியவாதியாக மிளிர எனை இட்டுச்சென்றதற்கும் அப்பால், இற்றைவரை சுமார் மூன்று தசாப்தகாலங்களாக எம்நட்பு தொடர்வதற்கும் வித்திட்டது என்றால் அது மிகையாகாது.
எங்கள் இலக்கிய நம்பிக்கைகளை உறுதிப்படுத்திக்கொள்ள இன்றும் பரஸ்பரம் ஆக்கங்களை மதிப்பிட்டுக்கொள்ளும் வழக்கம் சுருதி பேதங்களின்றித் தொடர்வதை இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.
நான், கோகிலா மகேந்திரனைச் சந்தித்த காலங்களில் எதையுமே சாதித்தவனல்லன். ஆயினும் “முரண்பாடுகளின் அறுவடை’ எனும் தனது இரண்டாவது சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழாவிற்கு விமர்சகனாக என்னையும் அழைத்திருந்தமை “ஊக்குவித்து நிற்கும்’ அவரது பண்பிற்கு சான்று பகர்வது. தனியாளாக நின்று எனது சிறுகதைகளைத் தொகுத்து நூலாக வெளிக்கொணர முடியாது தத்தளித்து நின்ற அந்த நாட்களில், தனது சிறுகதைகளையும் சேர்த்து “அறிமுக விழா’ எனும் நூலினை அறுவடைசெய்த அவரது துணிச்சல் என்றும் இலக்கிய உலகில் பதிவு செய்யப்படத்தக்கது.
இத்தகு தனிப்பட்ட இயல்புகளைத் தன்னகத்தே கொண்ட கோகிலா மகேந்திரன் தான் எத்தனித்த துறைகளிலெல்லாம் உச்சம் பெற்றமையே அவரை வெளிச்சம் போட்டுக் காட்டுவது எனலாம்.
பன்னாலை சேர் கனகசபை வித்தியாசாலை, தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி ஆகியவற்றில் தன் கல்வி நடவடிக்கைகளை நிறைவு செய்துகொண்டு 1974 இல் பொலிகண்டி இ.த.க.பாடசாலையில் முதன் நியமனம் பெற்றது முதல் 2007 ஆனி மாதத்தில் வலிகாமம் கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக ஓய்வுபெறும் வரையில் அவரது ஒவ்வொரு அடைவானதும் அவரது திட்டமிடுதலையும் கடின உழைப்பையும் விடா முயற்சியினையும் பறைசாற்ற வல்லது.
பணிநிலை வழியாக எய்யப்படும் உச்சமானது பொதுவாக எவருமே விரும்பும் இலக்கெனக் கொண்டால், இலக்கியத்தில் கோகிலா மகேந்திரன் பதித்த தடங்களே மிக முக்கியமானவை.
கவிதை, அறிவியல் கட்டுரை, உருவகம், நடைச்சித்திரம், நூல் திறனாய்வு, உளவியல் கட்டுரை, நாடகம், நாவல், சிறுகதை என இலக்கியத்தின் மூலை முடுக்கெங்கிலும் கோகிலா மகேந்திரனின் எத்தனிப்புகள் மிக விரிவானது. ஆழமானது. வாதங்களும் விளக்கங்களும் கொண்டது. ஈழத்து தமிழ் வாசகர்களின் தரத்தை நீங்காது நினைவில் கொண்டு தன் கருத்துகளை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்ற சிரத்தையுடன் முழுமனதுடன் அவர் இயங்கி உள்ளார்.
எத்துறையிலும் முதல் எத்தனிப்பிலேயே வெகு அனாயாசமாக அவர் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு விடுவதைக் காணலாம். இதுவே அவரது வெற்றியும் எனலாம்.
1972 இல் “குயில்’ சஞ்சிகையில் வெளியான “அன்பிற்கு முன்னால்’ எனும் சிறுகதையினை இவரது முதலாவது சிறுகதையாகக் கொள்வோமாயின் அண்மையில் தகவத்தின் சிறப்புப் பாராட்டினைப் பெற்ற “தாயகம்’ சஞ்சிகையில் வெளியான “கால் ஒப்பம்’ சிறுகதை வரையில் மொத்தம் 76 சிறுகதைகளை இவர் எழுதியுள்ளார். இக்கதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை இவரது ஆறு சிறுகதைத் தொகுதிகளாக அறுவடையாகியுள்ளன. இவற்றுள் “பிரசவங்கள்’, “வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம்’ ஆகிய இரு தொகுதிகளும் தேசிய சாகித்ய விருது பெற்றமை குறிப்பிடற்பாலது. பின்னைய நூல் வடகிழக்கு மாகாண இலக்கிய விருதினையும் வென்றிருந்தது.
ஈழநாடு பத்திரிகையிலும் சுடர் சஞ்சிகையிலுமாக இவர் பல குறுநாவல்கள், நாவல்களை எழுதியிருப்பினும் “துயிலும் ஒருநாள் கலையும்’, “தூவானம் கவனம்’ ஆகிய இரு நாவல்களுமே நூலுருப் பெற்றுள்ளன. நாடகங்களில் குயில்கள், கிரேக்கத்தின் தொல்சீர் அரங்கு, அரங்கக் கலையின் ஐம்பதாண்டு ஆகிய மூன்றும் பனுவல்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. “விஞ்ஞானக் கதைகள்’ எனும் புத்தகமானது இவரது விஞ்ஞானப் புனைகதை ஆற்றலுக்கே சாட்சியாக வல்லது.
தனது தந்தை,தாயாரை நினைவிற்கொண்டு முறையே “விழிசைச் சிவம்’, “விழி முத்து’ ஆகிய இரு நூல்களையும் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி நினைவாக “தங்கத்தலைவி’ எனும் நூலினையும் வெளிக்கொணர்ந்துள்ளார்.
இன்றைய பெண் பிரமாக்களுள் அதிகளவில் கோகிலா மகேந்திரன் வெற்றி பெற்றிருக்கிறார் என்று கூறுமளவிற்கு இவரின் எழுத்துகளில் மேவி நிற்கும் அம்சங்களுள் முதன்மையானதாகச் சீர்மியத்தினைக் கொள்ளலாம். தனது சிறுகதைகள், நாவல்களில் எல்லாம் இத்தகு அம்சங்களினூடாகக் கதையினை நகர்த்துவதற்கும் அப்பால் கட்டுரைகளாகவும் சிறுவர்களுக்குப் போதனையாகவும் கேள்வி பதில் உருவிலும் உளவியலை இவர் வாசகரிடையே அடையச்செய்யும் பாங்கு அவருக்கே உரியது. இவ்வகையிலும் இவரது பத்து நூல்கள் அறுவடை செய்யப்பட்டிருப்பினும் எங்கே நிம்மதி (2000), மனமெனும் தோணி (2008), உள்ளப்பெருங்கோயில் (2009) போன்ற பனுவல்கள் மிகப் பிரசித்தி பெற்றவை.
பூவும் பொட்டும், இசையும் கதையும், நவசக்தி, கலைக்கோலம், இளவேணில் போன்ற வானொலி சார் நிகழ்வுகள் பலவற்றில் இவர் பங்கு பற்றியிருப்பினும் “சைவநற்சிந்தனையில்’ ஒலித்த இவரது குரலே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. விருந்து, பண்புடையாளர் தொடர்பு, அன்பு, இசை, விதி, இறைவன் எங்கே போன்ற தலைப்புகளில் இவர் ஆற்றிய உரைகள் இன்றும் நினைவுகொள்ளத்தக்கவை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தன் முத்திரையினைப் பதிக்க இவர் தவறவில்லை.
கோகிலா மகேந்திரன் தனது ஆளுமையினை நிரூபித்த மற்றுமோர் பரிமாணமாக அவர் நடித்த நாடகங்களைக் கொள்ளலாம். தனது 1652 வயதிற்குட்பட்ட காலப்பகுதிகளில் மொத்தமாகப் பத்து நாடகங்களில் இவர் நடித்துள்ளார். இதில் “கேள்விகளின் முழக்கம்’ எனும் நாடகம் , வட இலங்கைச் சங்கீத சபையின் “நாடக கலாவித்தகர்’ என்ற பட்டத்தினை இவருக்கு ஈட்டிக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது. 
இது தவிர மேலும் 23 நாடகங்களை இவர் எழுதி இயக்கியுள்ளமையினையும் இவ்விடத்தே மனங்கொள்ளல் தகும்.
கோகிலா மகேந்திரனின் இலக்கிய வெற்றிக்கு அவரது மரபணுவும் முக்கிய காரணமாகின்றது. இவரது தந்தையார் சிவசுப்பிரமணியம் நீண்டகாலம் அதிபராகக் கடமையாற்றியவர். பண்ணிசைப் புராண படனத்தில் தேர்ந்தவர். சாகித்ய மண்டலப் பரிசு பெற்ற நகுலகிரிப் புராண உரையை ஆக்கியவர். இவரும் சிறிய தந்தையாராகிய உமாமகேஸ்வரனுமே சிறுவயது முதல் கோகிலாவுக்கு இலக்கிய உணர்வை ஏற்படுத்தியதுடன் நெறிப்படுத்தியவர்களுமாவார்கள். 1982 முதல் இந்த நிமிடம் வரை ஏறத்தாழ 275 உரைகளை கோகிலா மகேந்திரன் ஆற்றிட வித்திட்டவர்களாகவும் இவர்களைக் கொள்ளலாம். மேலும் புலவர் பார்வதி நாதசிவம், சைப்புலவர் செல்லத்துரை, அதிபர் அப்புத்துரை போன்ற பலரின் அருகாமையும் இவரின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றின என்றால் அது மிகையாகாது.
சிறுகதை,குறுநாவல்களில் பரீட்சார்த்த முயற்சியாகச் சிறுகதையின் முதற்பகுதியை அல்லது குறுநாவலொன்றின் முதல் அத்தியாயத்தை ஒருவர் ஆரம்பிக்க, மற்றொருவர் மிகுதியினை எழுதிமுடிக்கும் இணைப்புனைக்கதை முயற்சியில் எண்பதுகளில் தேசியபத்திரிகைகள், மாசிகைகள் ஈடுபட்ட காலகட்டத்தில் கோகிலா மகேந்திரன் அம்முயற்சிகளில் நிறையவே பங்களிப்புச் செய்துள்ளார். அந்த வகையில் “அந்தரங்கம் நினைவுகளில்’, “யுகோதயம்’ போன்ற இவரது முயற்சிகள் கால்நூற்றாண்டு கடந்திருந்தும் நினைவில் கொள்ளத்தக்கவை.
தெல்லிப்பழை கலை இலக்கிய களம் அதன் சொந்த இடத்தில் இயங்கிவந்த காலத்திலும் தற்போது தலைநகரில் தனது நிகழ்வுகளை விரிவுபடுத்தியிருக்கும் வேளையிலும், அது முன்னெடுத்துச் செல்லும் முயற்சிகளுக்கெல்லாம் மூலவிசையாக நின்று கோகிலா மகேந்திரன் ஆற்றிவரும் பணியும் பங்கும் குறிப்பிடத்தக்கது.
தனது மணிவிழாவை முன்னிட்டு “சோலைக் குயில்’ எனும் மலரை தெல்லிப்பழை கலை இலக்கியக் களத்தினூடு கோகிலா மகேந்திரன் வெளிக்கொணர்ந்துள்ளார். இலக்கியம் முதல் சீர்மியம் வரை, அறுபது வருட காலவாழ்வில் தான் நிகழ்த்திய சாதனைகளை அம்மலரில் தினம் தவறாது அச்சொட்டாக அவர் பதிவு செய்துள்ளார். இவரைப் பற்றிய ஆராய்ச்சிக்கு இந்நூல் உ சாத்துணையாக விளங்கும் என்பதற்கும் அப்பால் தனது ஆளுமை மிக்க வாழ்வியலைப் பிறர் கற்றுக்கொள்ளத்தக்க ஒரு பாடநூல் போலவும் வடிவமைத்திருப்பது வாசகரை வியக்க வைக்கிறது.
இந்நாட்களில் பெரும்பாலும் ஒரு சீர்மியராகவே கோகிலா மகேந்திரன் அறியப்படும் சூட்சுமமானது,பரிபூரண மனிதரை இந்நாட்டில் உருவாக்க வேண்டும் எனும் கோகிலா மகேந்திரனின் பெரிய கனவின் வெளிப்பாடகவே அமைகின்றது.
தனது வெற்றி பெற்ற வாழ்வின் உற்ற துணையான, ஓய்வுபெற்ற அதிபர் கி.மகேந்திரராசாவுடனும் புதல்வன் கலாநிதி ம.பீரவீணனுடனும் அவுஸ்திரேலியாவிற்கு அவர் மிகவிரைவில் குடியகலவுள்ளார் எனும் செய்தியினை நிர்ப்பந்தம் கருதி ஏற்றுக்கொள்ள வேண்டியே உள்ளது.
புகலிடம் மாறினும்,மாறாத புகழுடன் அவர் நீடுவாழ வேண்டி “தினக்குரல்’ வாயிலாக நாமும் வாழ்த்துவோமாக!
நன்றி தினக்குரல் :- 
இணைப்பிற்கு

Read Full Post »

>அறுசுவை உணவைத் தயாரிப்பது மிகவும் சிரமமான பணி்யாகும்.  அனுபவமும் பல்வகை உணவுகள் பற்றிய ஆழ்ந்த அறிவும் அதன் தயாரிப்புக்கு அவசியம். ஆனால் அதனிலும் சிரமமான பணி அதனை சுவை கெடாதபடியும், மனம் நிறையுமாறு பரிமாறுவதுமாகும்.

அத்தகைய பணி ஒன்று அண்மையில் மிகவும் அற்புதமாக, அழகாகவும், செய்நேர்த்தியுடனும், மனநிறைவு அளிக்கும் வண்ணம் செய்து முடிக்கப்பட்டதைக் கண்டேன்.

இது ஒரு நூல். சரியாகச் சொல்வதாயின் மிக வித்தியாசமான மணிவிழா மலர் ஒன்றாகும்.

எம்மத்தியில் வாழும் பல்துறை ஆற்றல் நிறைந்த ஒருவரின் 60 ஆண்டு அகவை நிறைவைக் குறிக்குமாறு  அவர்  பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருகின்ற சமூகத்தால் தயாரிக்கப்பட்ட  மலர் அது.

மணிவிழா மலர்கள் என்றால் பொதுவான வாசகர்களைக் கவர்வது அபூர்வம். ஏனெனில் அவை அந்த நபர் பற்றிய மிகை உணர்வுகளையும், உண்மைக்கு மீறிய அவரது சிறந்த செயற்பாடுகளையும் பங்களிப்புகளையும்  அவரது நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் போலியாகப் பாராட்டுவதாகவே இருக்கும்.

தெல்லிப்பழைக் கலை இலக்கியக்கள வெளியீடாக வெளிவந்துள்ள இந்த நூல்  ஏ4 பக்க அளவில் சுமார் 230 பக்கங்களுடைய பெரிய தயாரிப்பாக வந்துள்ளது.

முன் அட்டையில் கோகிலா

இரண்டு பகுதிகளை உள்ளடக்கியுள்ள இந்த நூலின் முதற் பகுதியானது குயிலின் பார்வையில் சோலை. உளநிறைவோடு தான் வாழும் சோலையைப் பார்த்து மகிழும் குயிலான கோகிலா மகேந்திரன், தான் வாழும் சமூகமான சோலையைப் பார்த்து சொக்கி நின்று’ எழுப்பிய  நாத ஒலியின் முக்கிய பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.

இப்பகுதியில் அவரது சிறுகதை, அவர் மனதுக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரான மு.வரதசனார் பற்றி 1987 ல் எழுதிய கட்டுரை, விஞ்ஞானக் கதை, மாணவருக்கான விஞ்ஞானக் கட்டுரை, உளவியல் கட்டுரை, சீர்மியக் கட்டுரை, குழந்தைக் கவிதை, உருவகம், பேரா.சு.வித்தியானந்தன் இறந்தபோது கண்ணீர் அஞ்சலி, கலாநிதி.நா.சுப்பிரமணியம் பற்றிய மல்லிகை அட்டைப்படக் கட்டுரை,தெருக் கூத்து விமர்சனம், சமயக் கட்டுரை எனப் பல இடம் பெறுகின்றன.

இவ்வாறான சுமார் 41 கட்டுரைகள் இடம் பெறுகின்றன. கோகிலாவின் இலக்கிய பங்களிப்பின் ஆரம்ப காலம் முதல் இற்றைவரை அவர் தனது சமூகத்தையும், அவர்களது படைப்புகளையும், வாழ்வின் கோலங்களையும் ரசித்து அனுபவித்து வெளிப்படுத்திய ஆவணங்களின் கோலம் எனலாம்.

இரண்டாம் பகுதி சோலையின் பார்வையில் குயில் என்பதாகும். எமது சமூகத்தில் பல்துறைகளில் மதிப்பு மிக்க 38 பேர் அவர் பற்றியும் அவரது படைப்புகள் மற்றும் பல்துறை ஆற்றல் பற்றி அவ்வப்போது எழுதி பத்திரிகை மற்றும் நூல்களில் எழுதிய கட்டுரைகளில் தேர்ந்து எடுக்கப்பட்டவையாகும். நூல் முன்னுரையும் இடம் பெற்றுள்ளது.

உதாரணத்திற்கு சில பெயர்களைக் குறிப்பிடலாம். பேரா.தயா.சோமசுந்தரம், பேரா.சிவலிங்கராஜா, முரசொலி.சிவராஜா, பேரா.அ.சண்முகதாஸ், பேரா.சபா.ஜெயராசா, கே.எஸ்.சிவகுமாரன், செங்கை ஆழியான், உளநல மருத்துவர்.எஸ்.சிவதாஸ், புலோலியூர்.இரத்தினவேலோன், கவிஞர்.சோ.பா. போன்ற பலரது கட்டுரைகள் இடம் பெறுகின்றன.

கட்டுரைகள் முடிந்தவுடன் அப்பக்கத்தில் மீதமாகும் வெளியை நிரப்புவதற்காக இவர் பெற்ற கல்வித் தகமைகள், தொழில் தகமைகள், தொழில் அனுபவங்கள், படைப்புகள், பெற்ற பரிசுகள், விருதுகள், பாராட்டுகள், இவர் ஆற்றிய பேச்சுகள், நிகழ்த்திய கலை நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

எழுத்தாளர், சீர்மியர், இலக்கிய கலாவித்தகர், நாடக கலாவித்தகர்,கலைச்சுடர் எனப் பலவாறு போற்றப்படும் திருமதி.கோகிலா மகேந்திரன் சமூகப் பங்களிப்பை முழுமையாக ஆவணப்படுத்தும் சிறந்த ஆவணமாக இந் நூல் அமைகிறது எனலாம்.

திரு.திருமதி.மகேந்திரன். மகன் பிரவீனன்

இதைத் தயாரித்து வெளியிட்ட தெல்லிப்பழைக் கலை இலக்கியக்களத்திற்கு பாராட்டுக்கள் உரியன.

 திருமதி.கோகிலா மகேந்திரன் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு கலை இலக்கிய சமூகப் பணி செய்து இனிது வாழ வாழ்த்துகிறேன்.

எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>

மணிவிழாக் கண்ட முருகானந்தன் மணிவிழாக் காணும் முருகானந்தனுக்கு வாழ்த்து

எம்.கே.முருகானந்தன்

காலம் எவ்வளவு வேகமாக ஓடிவிடுகிறது. ஓளியை விட வேகமாகச் செல்லக் கூடியது மனம் என்கிறார்கள்.
ஆயினும் அந்த மனத்தின் வேகத்தைக் கூட காலம் வேகமாக கடந்துவிடுகிறது.

நேற்றுப் போலிருக்கிறது முருகானந்தனும் முருகானந்தனும் கல்கிஸ்சவிலிருந்து புஞ்சிபொரளையருகில் இருந்த மருத்துவக் கல்லூரிக்கு ஒரே இரட்டைத் தட்டு பஸ்சில் 1970 களின் முற்கூறில் பயணம் செய்தமை.

அந்நேரத்தில் நாம் பயணித்தது வெவ்வேறு பாடநெறிகளுக்காகத்தான். ஆயினும் 80களில் என்று நினைக்கிறேன். நான் பருத்தித்துறையில் தனியார் மருத்துமனை நடாத்திக் கொண்ட காலத்தில் அவர் உதவி மருத்துவப் பயிற்சி முடித்து மருத்துவராகிவிட்டார்.

ஒரே பெயரில் இரு மருத்துவர்கள்.

பருத்தித்துறையில் நோயாளிகளுக்கு முருகானந்தன் என்றால் அது நான் மட்டுமே.

அவ்வாறே அக்கராயனிலும் வன்னேரிக் குளத்திலும் நோயாளிகளுக்கு முருகானந்தன் என்றால் அவர் மட்டுமே.

இருவருமே மருத்துவத்திற்கு அப்பால் இலக்கிய உலகிலும் பயணிப்பவர்கள்.

ஆழ்ந்த மொழிப்பற்றும், தனித் தமிழில் ஆர்வம் கொண்டவருமான அவர் ச.முருகானந்தனாகப் பயணித்தார்.

பள்ளி மாணவப் பருவம் முதலே காரணம் தெரியாமலே இரட்டை இனிசலில் ஆர்வம் கொண்ட நான் தொடர்ந்தும் எம்.கே.முருகானந்தனாகப் பயணிக்கிறேன்.

சிலநேரங்களில் வன்னேரிஐயா, பிரகலத ஆனந்தன் போன்ற பெயர்களில் அவர் மாறுவேடத்தில் இலக்கிய உலகில் உலா வருவார்.

முறுவன், அழகு சந்தோஸ், எம்.கே.எம், மருதடியான் என நான் ஒழிந்து கொள்வேன்.

அந்த அதே ச.மு வும் எம்.கே.எம் மும் இன்றும் நண்பர்கள். என்றுமே நண்பர்கள்தான்.

1950ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் திகதி தைத்திருநாளன்று பிறந்த ச.மு க்கு இது மணிவிழா ஆண்டாகும்.

ஆழ்ந்த சமூக நேசிப்பாளி

 ‘ச.முருகானந்தன் என்ற படைப்பாளி பற்றிப் பேசும் போது அவருடைய சமூக நேசிப்பின் தன்மை பற்றியும் பேச வேண்டிய தேவை ஏற்படுகிறது. போர் சூழ்ந்திருந்த வன்னிப் பிரதேசத்தில் அதுவும் பின்தங்கிய ஒரு காட்டுக் கிராமத்தில் மருத்துவராக கால் நூற்றாண்டு காலம் பணிபுரிவதென்பது சாதாரண விடயமல்ல.’
என இவரது சமூக அக்கறையை விதந்து சொல்கிறார் தாமரைச்செல்வி மல்லிகைக் கட்டுரை ஒன்றில்.

வன்னிப் பிரதேச மக்களின் வாழ்வையும் உணர்வுகளையும் அற்புதமாகக் கையாண்ட, அப் பிரதேசத்தில் நீண்ட காலம் வாழ்ந்த அற்புத எழுத்தாளரான தாமரைச்செல்வி அவ்வாறு சொல்வதிலிருந்து ச.மு எத்துணை அர்ப்பணிப்போடு மருத்துவப் பணியாற்றியிருக்கிறார் என்பது புரிகிறது.

‘மூச்சுவிட நேரமில்லாத மருத்துவப் பணியின் மத்தியிலும் தனது எழுத்துப் பணியை ஒரு தவம் போல மேற்கொள்பவர்’ என்று கூறும் தாமரைச்செல்வி, ‘அவருடைய எழுத்துப் பணியை விட அவர் செய்துவரும் மருத்துவப் பணி உயர்வானது என்பேன்’ என உயிரபாயம் உள்ள சூழலிலும் அவர் வன்னியில் ஆற்றிய மகத்தான பணியை, பாராட்டியமையும் குறிப்பிடத்தக்கது.

செ.கதிர்காமநாதன் பிறந்த மண்ணில் பிறந்த ச.மு இயல்பாகவே சிறுகதைத் துறையில் மூழ்கினார். இன்று ஈழத்தின் முக்கியமாகச் சிறுகதை எழுத்தாளர்களில் இவரும் ஒருவர்.

இலங்கையில் அவர் சிறுகதை எழுதாத பத்திரிகை சஞ்சிகை எதுவுமே இருக்காது. அசுர சிறுகதைப் படைப்பாளி. சுமார் 200க்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். அவர் தொடாத கருவும் இருக்காது. அனுபவித்தது, அனுபவிக்காதது, கேள்விப்பட்டது யாவுமே காலத்தின் தேவை கருதியும், சமூக அக்கறை காரணமாகவும் இலக்கியப் படைப்புகளாக வாசகர்களை சென்றடைகின்றன. அவர்களுக்கு ஏதாவது சொல்ல முயல்கின்றன. இவ்வாறு அதிகம் எழுதினாலும் ஒவ்வொரு படைப்பும் காத்திரமான சமூகப் பிரச்ஞை உள்ள நல்ல படைப்புகளாகும்.

இவரது பெரும்பாலான படைப்புகளை நான் படித்திருக்கிறேன். அவற்றில் வேட்டை, இந்த மண், அப்பாவும் நானும் ஆகியவை எனக்கு மிகவும் பிடித்தன.

நூல்கள்

ஆறு சிறுகதைத் தொகுதிகள் இதுவரை வெளியாகியுள்ளன.
•    மீன்குஞ்சுகள்
•    தரைமீன்கள்
•    இது எங்கள் தேசம்
•    இனி வானம் வசப்படும்
•    ஒரு மணமகளைத் தெடி
•    நாம் பிறந்த மண்
ஆகியனவாகும்.

பிரதானமாக சிறுகதை எழுத்தாளரான போதும் இவரை ஒரு பல்துறை எழுத்தாளராகவே கொள்ள வேண்டும்.
•    சிறுகதை
•    கவிதை
•    குறுநாவல்
•    மருத்துவம்
•    விமர்சனம்
•    அறிவியல் கட்டுரைகள்
என இவரது எழுத்துப் பரப்பு விரிந்தது.

சுமார் 150 கவிதைகள், கட்டுரைகள் 100, குறுநாவல்கள் 10 என எழுதிக் குவித்துள்ளார்.
மேற் கூறிய 6 சிறுகதைத்தொகுப்புகள் உட்பட ஏலவே 12 நூல்களை வெளியிட்டுள்ளார். குறுநாவல் தொகுதிகள் 2, கவிதை 2, மருத்துவம் 1, அறிவியல் 1 என்பனவாகும். ‘நீ நடந்த பாதையிலே’, ‘துளித்தெழும் புதுச்செடிகள்’ கவிதைத் தொகுதிகள். ‘அது ஒரு அழகிய நிலாக்காலம்’, நெருப்பாற’ ஆகியன குறுநாவல் தொகுதிகளாகும்.

பரிசுகளின் மன்னன்

மல்லிகைப் பந்தல் வெளியீடாக வந்த சிறுகதைத் தொகுதியான ‘தரைமீன்கள்’ க்கு சாகித்தியப் பரிசு வாங்கியது முதல் விருதுகள் போட்டிப் பரிசுகள் இவரைத் தேடி வந்துகொண்டிருக்கின்றன. இதுவரை சுமார் 33க்கு பரிசுகள் வாங்கியிருப்பதாகத் தெரிகிறது.

அவற்றிற்கு மகுடம் சேர்ப்பது போன்றது ‘சென்னை இலக்கிய சிந்தனை விருது’ ஆகும். இவரது முதல் சிறுகதைத்தொகுப்பான ‘மீன்குஞ்சுகள்’ தான் அந்தப் பெருமைக்குரிய பரிசைப் பெற்றது. அதேபோல எமது நாட்டின் பெருமைக்குரிய தகவம் பரிசினையும் தனது சிறுகதைக்குப் பெற்றிருக்கிறார்.

மீரா பதிப்பக வெளியீடான ‘எயிட்ஸ் இல்லாத உலகம்’ என்ற இவரது மருத்துவ நூல் வடமாகாண விருது பெற்றது. சுடர், ஜீவநதி, மல்லிகை, ஞானம் போன்ற பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் நடாத்திய சிறுகதைப் போட்டிகளிலும் பரிசுகள் தட்டிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. அமரர் கனக செந்திநாதன் ஞபகார்த்தப் போட்டியில் இவரது குறுநாவல் ஒன்றும் பரிசைத் தட்டிக் கொண்டது.

முதலில் குறிப்பிட்ட 33 பரிசுகளில் 30 சிறுகதைகளுக்காக என்பது குறிப்பிடத்தக்கது. ஏனைய 3ம் கவிதைகளுக்காகும்.

‘உங்களுக்குக் கிடைத்த பரிசுகளில் பெரும்பாலானவை உங்கள் சிறுகதைகளுக்காகவே இருக்கிறன. அதுதான் உங்களுக்கு மிகவும் லாகவமான படைப்புத்துறை போல் இருக்கிறது. வாசகர்களும், சஞ்சிகை ஆசிரியர்களும் போட்டி நடுவர்களும் கூட அதைத்தான் உங்கள் முக்கிய படைப்புத்துறையாகக் கொள்கிறார்கள் எனத் தெரிகிறது. மற்றவர்கள் கருத்துக்கு மேலாக நீங்கள் உங்களது சிறுகதைகளில் எவற்றை உங்களது சிறந்த படைப்புகளாகக் கொள்கிறீர்கள்’ எனக் கேட்டேன்.

‘ஒவ்வொரு படைப்பையும் என்னளவில் ரசித்தே எழுதுகிறேன். ஆனாலும் கூட ‘அலியன் யானை’, ‘இந்த மண்’, ‘நான் சாகமாட்டேன்’, ‘அன்னை’, ‘வேட்டை’, ‘தாத்தா சுட்ட மண், ‘சுடலை ஞானம்’ ஆகியன எனக்கு மிகவும் பிடித்த சிறுகதைகள்’ என்றார்.

முதலடியும் தடமும்

சென்ற தைப்பொங்கல் தித்தன்று 60வது வயதை எட்டி மணிவிழா ஆண்டில் நிற்கும் நண்பர் ச.மு 1976ல் அதாவது தனது 26வது வயதில் ‘கண்களின் வார்த்தைகள் தெரியாதோ’ என்ற சிறுகதையுடன் தினகரன் ஊடாக எழுத்துலகில் கால்வைக்கிறார்.

மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவை தனது மானசிக இலக்கியக் குருவாகக் கொள்ளும் இவர் இலங்கையில் உள்ள எல்லாப் பத்திரிகளும் சஞ்சிகைகளும் தனது படைப்புகளுக்கு வரவேற்பு அளித்துள்ளதை மனநிறைவுடன் நினைவு கூறுகிறார். அதற்கு மேலான தீபம், கணையாழி, தாமரை, எரிமலை, செம்மலர் உட்பட பல இந்திய சஞ்சிகைகளிலும் தனது படைப்புகள் வெளிவந்ததை மகிழ்வோடு நினைவு கூர்கிறார்.

மல்லிகைக்கும் இவருக்கும் நிறையத் தொடர்புண்டு. அதனால்தான் இவரது முதல் தொகுதியான மீன்குஞ்சுகள் மல்லிகைப் பந்தல் வெளியீடாகப் பிரசுரமாயிற்று. மீண்டும் 2003ல் தரைமீன்கள் மல்லிகைப் பந்தல் ஊடாக வந்தது.

கருப்பொருள்

இவரது படைப்புகள் பெரும்பாலும் எமது நாளாந்த வாழ்வின் அனுபவங்களைப் பேசுகின்றன. சம்பவக் கோர்வைகள் அழகாகப் பின்னப்பட்டிருக்கும். உணர்வுகளின் பிசைவுகள் ஊடாக வாழ்வை தரிசிப்பதற்கு மேலாக அர்த்த புஸ்டியான நிகழ்வுகள் மனித வாழ்வின் மாறுபட்ட கோணங்களை எம் முன் நிறுத்தும்.

தனது எழுத்துலகின் ஆரம்ப கட்டங்களில் பெரும்பாலும் வர்க்க முரண்பாடுகள், சாதீயம், சீதனம், பெண்ணியம் போன்ற சமூகப் பிரச்சனைகளைத் தனது படைப்புகளின் கருப்பொருளாகக் கொண்டிருந்தார்.

இருந்தபோதும் இனப் பிரச்சனை தீவிரம் அடைந்து போர் முனைப்புப் பெற்ற போது போர்க்காலச் சிறுகதைகள் பலவற்றை மிகவும் யதாரத்த பூர்வமாகப் படைத்துள்ளார்.

போரினால் மிகவும் பாதிப்படைந்த மக்களிடையே வன்னிப் பகுதியில் மருத்துவராக நீண்டகாலம் உணர்வுபூர்வமாகப் பணியாற்றியதால் இவருக்குக் கிட்டிய களநிலை அனுபவங்கள் இவரது படைப்புகளுக்கு உண்மைத் தன்மையைக் கொடுத்துள்ளன.

களங்கள்

வன்னி பிரதேச மக்களது வாழ்வின் ஊறுகள் இவற்றின் படைப்புகள் பலவற்றின் அடிநாதமா அமைகின்றன. அதே போல தான் பிறந்த வடமராட்சி பிரதேசத்தின் மண்வாசனை பிற பல படைப்புகளில் அற்புதமாக விழுந்துள்ளன. சிறு வயதில் தான் விளையாடித் திரிந்த கரணவாய் கிழக்குப் பிரதேசம், நீந்தி விளையாடிய உச்சிலா கோயில் குளம் ஆகியன ‘இந்த மண்’ சிறுகதையில் அழகிய சித்திரமாக வார்க்கப்பட்டுள்ளன. அவை எம்மையும் எமது இளமைக்காலத்தில் மூழ்க்க வைக்கும் வல்லமை கொண்டவை.

அதேபோல மலையகத்தில் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. அவரது முதல் சிறுகதை இவர் கம்பளை வைத்தியசாலையில் பணியாற்றிய போது எழுதியுள்ளார். அதன் பின்னரும் அவ்வப்போது மலையகப் பிரச்சனைகள் பற்றி இடையிடையே படைப்புகளைச் செய்துள்ளார். மறுபடியும் மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் குறுகிய காலம் மலையக கொட்டகலையில் பணியாற்றிய போது அந்த மக்களின் பிரச்சனைகளை கூர்ந்து அவதானித்துள்ளார். அனுபவபூர்வமாக உணர்ந்தவற்றை படைப்பாக்கம் செய்துள்ளார்.

இப்பொழுது மலையக பெருந்தோட்ட மக்களின்  வாழ்வைச் சித்தரிக்கும் சிறுகதைகள் அடங்கிய நூல் வெளியாகியுள்ளது. மலையகத்தைச் சாராத ஞானசேகரன், மறைந்த நண்பர் புலோலியூர் சதாசிவம் ஆகியோரைத் தொடர்ந்து அப்பிரதேச வாழ்வை இலக்கியமாக்கியவர்களில் இவரும் முக்கியமானவராகிறார்.


சினிமா

இவருக்கு சினிமாவும் மிகவும் ஆர்வமுள்ள மற்றொரு துறையாகும். முக்கியமாக தமிழ் சினிமாவின் வரலாறு தெரிந்தவர். பல விடயங்களை நுணுக்கமாக நினைவில் வைத்திருப்பவர். அவற்றின் இன்றைய போக்குகளும் புரிந்தவர். நான் மிகக் குறைவாகவே அதுவும் தேர்ந்தெடுத்த சில படங்களையே பார்ப்பவன். இதனால் இவர் எழுதும் சினிமா விமர்சனங்களை நான் ஆர்வத்தோடு படிப்பதுண்டு.

மணிவிழாக் காணும் நண்பர் முருகானந்தனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் சிறந்த மருத்துவப் பணியுடனும் இலக்கியப் பங்களிப்புடனும் நிடூழி வாழ வாழ்த்துகிறேன்.

இவரது மனைவி சந்திரகாந்தா முருகானந்தனும் இப்பொழுது படைப்புலகில் அதிகம் பேசப்படுகிறார். அவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

வீரகேசரி வார வெளியீட்டிலும், பதிவுகள் இணைய சஞ்சிகையிலும் வெளியான எனது கட்டுரையின் மீள்பதிவு.

Read Full Post »

>
Gleanings:

Lankan literary activities in Thamil
K.S. Sivakumaran

Literary activities in Thamil also constitute Lankan Culture. Non-Thamilian historians, particularly historians of literature, conveniently skip this aspect with an apology that they could not read or write or speak Thamil, which is one of the recognised world languages.

Hence yours truly write about these matters as well, as he would write about activities in English and Sinhala. This state of affairs is both funny and ironical.

Let me report on some of the very recent activities based in Colombo. First, I want to write briefly about an author, columnist and a doctor of medicine. He is Dr M. K. Muruganandan. Like Emeritus Professor Carlo Fonseka who writes in English and Sinhala. MKM too writes about matters of art and literature in the Thamil medium.

MKM has authored many books in Thamil, most of them on Health. In fact he was the first one the world to write Thamil on AIDS.

His other books are on various branches of medicine and treatment and elucidative on relevant problems pertaining to health and child birth. As an MBBS medicine man he had practised in various parts of the country including his native place in Vyapaari Moolai in Paruthi Thurai (Pt. Pedro), at present he heads private clinic in Wellawatte. Kind, affable and patient he treats his patients with a psychological approach which is rewarding.

Basically a humanist with a progressive stance, he is also spiritual in his outlook. His creative abilities lie in his writing fiction. He is also one of the balanced literary critics locally and a literary columnist. His columns are available on the Internet. He has a Bog too.

One of his very interesting books is called “From A Doctor’s Diary” where he writes about literature, personalities, cinema and other matters.

MKM is a fine moderator in conducting symposiums, book launches and discussions. His hallmark is an ability to transfer knowledge in a scientific manner and focus on the right things. He doesn’t go astray as many speakers who are writers in Thamil do.

While he was in Yalpaanam (Jaffna) he had published seven books and one of them about Hints for pregnant Ladies won the Sahithya Award. This book and the one on AIDS had seen more than five impressions.

They were very popular because of the simple and clear style and also productive. His book Neengal Nalamaaha also won a Sahithya Award and an award from Yaal Ilakkiya Vattam. Yet another book of his is Maranthupoahatha Sila. When his mother died he brought out a publication in her memory called Amma. This included contributions by others on the theme of ‘Mother’. His books are researched by University students for their theses. So far he has written 11 books.

His articles and columns appear frequently in Yaalpaanam and Colombo based newspapers and journals.

We learn that in the north he used to convene literary get together and discuss literature and arts in his home. In the late 1990s, he regularly appeared over the Rupavahini answering questions by the presenters and listeners on vital diseases.

The Sri Lanka Institute for the Advancement of Science recognised his services with an Award itself are a pointer.

Dr MKM also writes under the pen name “Alagu Santhosh”. He had been interviewed and featured in the Thamil press. The literary magazine Mallikai published his picture in its front cover and featured him. An unassuming human dynamo, MKM is a proud product of the Yaalpaanam soil.

sivakumaranks@yahoo.com

Daily News 30.04.2008

Read Full Post »

>நல்லதொரு மருத்துவனாக சிறந்ததோர் இலக்கியவாதியாக டாக்டர் முருகானந்தன்

-மா.பா.சி. –

முற்போக்குச் சிந்தனையாளரும்; கலை, இலக்கியவாதியும் பிரபல வைத்திய கலாநிதியுமான டாக்டர் எம்.கே. முருகானந்தனின் 60 ஆவது அகவையையிட்டு; கொழும்பு-கலை, இலக்கிய நண்பர்கள் ஏற்பாட்டில் வெள்ளவத்தை பெண்கள் கல்வி ஆய்வு கூடத்தில்; 06.04.2008 ஆம் திகதி விழாவொன்று நடைபெற்றது.

விழாவில் தலைமையுரை ஆற்றிய எழுத்தாளர் புலோலியூர் ஆ. இரத்தினவேலோன் தெரிவித்ததாவது.

தேவையானவர்களது தொலைபேசி இலக்கங்களைப் பதியும் பொழுது நான் அவர்களது பிறந்த தினத்தையும் பதிவதுண்டு. அப்பதிவின் மூலமாகவே வைத்தியகலாநிதி எம்.கே. முருகானந்தனின் பிறந்த திகதி 27.3.1948 என்பதை அறிந்து கொண்டேன். அவர் அறுபதாவது அகவையை எட்டுவதும் தெரிய வந்தது. எனது மாமனார் பிரபல எழுத்தாளர். அமரர் தென்புலோலியூர் சதாசிவம் இருந்திருந்தால் இந்நிகழ்வுக்கு அவரே தலைமை தாங்கி இருப்பார். டாக்டருக்கு அவரோடு நெருங்கிய தொடர்புகள் இருந்தன. தலைமை வகிக்கவிருந்த பேராசிரியர் .எஸ். சிவயோகம் முக்கிய அலுவலாக லண்டன் சென்றுள்ளார். எனவே தான் நான் தலைமை வகிக்க வேண்டி ஏற்பட்டது. இம்மண்டபத்தில் தான் கூட்டம் நடைபெறும் எனச் சொன்ன பொழுது; அம்மண்டபம் கொள்ளுமா? என நண்பரொருவர்கேட்டார். அதன் தாற்பரியத்தை இப்பொழுது உணர்கிறேன். இம்மண்டபம் முழுவதும் டாக்டரின் அபிமானிகள் நிறைந்திருக்கின்றனர்.

டாக்டர் முருகானந்தன் பருத்தித்துறை வியாபாரிமூலையில் பிறந்தார். ஆரம்பக்கல்வியை மேலப் புலோலிப் பாடசாலையில் பெற்றார் ஹாட்லிக் கல்லூரியில் இடைத்தரக் கல்வியைப் பெற்றுக் கொண்டு கொழும்பு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பட்டத்தைப் பெற்று வைத்திய கலாநிதியானார். அரச ஆஸ்பத்திரிகளில் கடமை புரிந்து பின்னர் பருத்தித்துறை மருதடியில் தனியார் மருத்துவ நிலையத்தை அமைத்து வைத்திய சேவை புரிந்தார். 1997 இல் கொழும்புக்கு இடம் பெயர்ந்தார்.

புத்தக அறிமுக விழா ஒன்றிற்கு அழைக்கச் சென்றேடாக்டரை முதன் முதலில் சந்தித்தேன். இது 25 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றது. அன்று கண்ட பண்புகளோடேயே இன்றும் காணப்படுகிறார். இத் தன்மைதான் அவரையொரு சாதனையாளராக்கியது.

வைத்தியப்பாணியில் அவர்கடைப்பிடிப்பது உளவியல் அணுகு முறை. நோயாளிகளோடு பேசும் வார்த்தையில் பாதி நோய் சுகமாகிவிடும். இத்தன்மையே அவரைக் கொழும்பிலும் அதிக செல்வாக்கைப் பெற வைத்தது. “எயிட்ஸ்” குறித்து டாக்டர் முருகானந்தன் எழுதிய நூலே அவ்விடயத்தில் வெளிவந்த முதல் நூல். மருத்துவத் துறை சார்ந்த கல்விமான்கள் இலக்கியத்தில் பிரகாசிப்பது அரிது. இவர் புரியத்தக்க வகையில் எழுதுகிறார். எனவேதான் எல்லோராலும் வாசிக்க முடிகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகிய “முரசொலி”என்ற பத்திரிகையில் “வைத்திய கவசம்” என்ற பத்தியை எழுதினார். நலவியல் சார்ந்த தொடர். 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதினார். “சாயி மார்க்கம்” எனும் சஞ்சிகையின் ஆசிரியர் அசாதாரணத் துணிவோடு “அறிவோர் கூடல்” என்ற அரங்கைத் தனது இல்லத்தில் நடத்தினார். இலங்கை சாஹித்திய பரிசைப் பெற்ற இவரது “நீங்கள் நலமா” என்ற நூல் 5 பதிப்புகளைக்கொண்டது. ஹாய் நலமா? என்ற பத்தி மற்றும் “ஜீவநதி” சஞ்சிகையில் எழுதும் கட்டுரைகள் புதிய பரிமாணத்தோடு வருகின்றன. தனது நூல்களின் வெளியீட்டை மிகவும் எளிமையாகவே நடத்துவார். முதல் பிரதியைப் பெற வர்த்தகர்களை அழைக்கமாட்டார். பெற்றோர் அல்லது அவரது ஆசான்களே பெறுவர். இதுவரை பதினொரு நூல்களை வெளியிட்டிருக்கிறார். அவைகளுள் இரண்டுக்குச் சாஹித்திய மண்டலப் பரிசும் கிடைத்துள்ளது.

நடிப்பிலும் கூட ஆர்வம் காட்டியிருக்கிறார். தனது இலக்கிய முயற்சிகளை அச்சில் மட்டுமன்றி இலத்திரனியல் ஊடகங்களிலும் வெளிப்படுத்தி இருக்கிறார். இலங்கை வானொலி, சக்தி தொலைக்காட்சி என்பன நிகழ்ச்சிகளைக் கொடுத்திருக்கின்றன. டாக்டரின் படத்தை அட்டையில் பொறித்து மல்லிகை சஞ்சிகை டாக்டரைக் கௌரவித்திருக்கின்றது. செல்வி ஷ்ரீதரன் என்ற மாணவி தனது பட்டப் படிப்புக்கு டாக்டரின் நலவியல் நூல்களை ஆய்வுக்கு உட்படுத்தி கட்டுரை சமர்ப்பிக்கவிருக்கிறார். இது நலவியல் துறையில் முருகானந்தனுக்கு கிடைத்த வெற்றியை உறுதிப்படுத்துகிறது. டாக்டரின் மணிவிழா குறித்த மலரொன்றை வெளியிட ஆயத்தங்கள் நடக்கின்றன. அவரது நண்பர்களிடமும் அபிமானிகளிடமுமிருந்து கட்டுரைகள் கோரப்படுகின்றன .

மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா

டாக்டர் முருகானந்தன் மருத்துவக் கல்லூரி மாணவனாக இருந்த காலத்திலிருந்தே எனக்கு அவரைத் தெரியும். யாழ்ப்பாணத்தில் எல்லா இலக்கியக் கூட்டங்களிலும் டாக்டரைக் காணலாம். இங்கு எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றவர்கள் இலக்கியவாதிகளாக இருக்கின்றனர். அமரர் டாக்டர் நந்தி மற்றவர் எம்.கே.எம். முருகானந்தன்.

டாக்டரின் அறுபதாவது அகவை விழாவை மல்லிகைப் பந்தலால் நடத்தத் திட்டமிட்டோம். ஹற்றனில் நடத்தப் போவதாகக் கூறி அந்தனி ஜீவா தடுத்தார்.எழுத்தாளனுக்குப் பிரச்சினையாகில் எழுபது எண்பதுகளில் இலக்கியவாதிகள் துடிப்போம். எங்களோடு சேர்ந்து வராமல் எமது நிகழ்வுகளில் பங்குகொள்ளாத எந்தக் கொம்பனையும் மதிக்க மாட்டோம். எமக்கு இலக்கியமும் உழைப்புமே முக்கியம். இந்த கூட்டத்துக்கு ஏன் நான் அல்லது நீர்வை பொன்னையன் தலைமை தாங்கக் கூடாது? முருகானந்தனின் எழுத்தை விட யாழ்ப்பாணத்தில் அவரது ஏற்பாட்டில் நடைபெற்ற அறிவோர் கூடல் பிரமாதமானது.

மாலைகொண்டு வந்தேன் இங்கு பொன்னாடை வேண்டாம், பூமாலை வேண்டாம் என்கின்றனர். அப்போ எப்பொழுது இலக்கியவாதிகளை வாழ்த்தப் போகின்றீர்கள்? டாக்டரின் உழைப்புக்குப் பின்னால் அவரது மனைவி இருக்கிறார். வழி காட்டுகிறார். அறிவுத் தளத்தை விரிவுபடுத்த உதவுகிறார்.

உளவள நிபுணர் புனைகதைப்படைப்பாளி கோகிலா மகேந்திரன் :-

யார் சிறந்தவர்? யார் ஆளுமைமிக்கவர்? என்ற தேடல் எனக் குண்டு. எம்.கே.முருகானந்தத்தை எனக்கு இருபத்தைந்து ஆண்டுகளாகத் தெரியும். 1995 ஆம் ஆண்டிலிருந்து எங்கள் குடும்ப வைத்தியர். இலக்கியக்காரர்கள் மத்தியில் வித்தியாசமானவர் விடயங்களை உள்வாங்கும் பொழுது விஞ்ஞானத் தன்மையோடு உள்வாங்குவார். அவரிடம் தெளிவு இருக்கிறது. தன்னை யாரென்று? அவருக்குத் தெரியும். நிறையச் செய்து விட்டுப் புகழைத் தேடாதவர். இவர்களைச் சரியென நான் சொல்ல மாட்டேன். எதைச் சரியெனத் தான் நினைக்கிறாறோ அதையே எம்.கே.எம்.செய்வார். எவரது வலைகளிலும் விழ மாட்டார். இன்னொருவரைப் போல் தான் இருக்க வேண்டுமென விரும்பாதவர். அழகுசந்தோஷ் என்பதும் அவரது புனைப் பெயர். உடல் நலம், சமூக நலம், ஆன்மீகம் என்ற சமன்பாடுகளோடு வாழ்கிறார்.அவருக்கு கோபம் வந்தது எனக்கு நினைவில்லை பார்வையில் நேர்மை உண்டு. அவரது முதுமை ஆரோக்கியமாகவே இருக்கும். அவரது தொழிலின் மூலப் பொருள் தொடர்பாடல். அடுத்தவரைப் புரிந்திருக்கத் தெரிந்திருக்க வேண்டும். எம்.கே.எம்மைப்பற்றி எவருமே குறை சொன்னதை நான் கேட்டதில்லை. நிபுணர்களால் கை விடப்பட்டவர்கள் எம்.கே. எம்மிடம் சுகம் பெற்றிருக்கின்றனர். ஒன்றும் தெரியாதவர்களே நிறையக் கதைப்பார்கள். அமைதியானவர்கள்.

பிரபல எழுத்தாளர், ஆய்வாளர் தெளிவத்தை ஜோசப்:-

நான் டாக்டர் முருகானந்தத்திடம் ஒரு போதும் மருந்துக்குச் சென்றதில்லை. நான் சிறிது சுகவீனமுற்று இருந்த பொழுது அடிக்கடி என்னை வந்து பார்த்தார். எழுத்தாளனைப்பார்க்க வரும் பண்போடு வந்தார். எம்.கே.எம்.மின் புத்தகங்கள் மருத்துவத்தை இலகுபடுத்துபவை. அவரது புத்தகங்களிலொன்று டாக்டரின் டயறிக் குறிப்பிலிருந்து என்ற அநுபவக் குறிப்புகள் அநுபவத்தை அநுபவமாகவே குறிப்பிடும் பொழுது ஒரு எழுத்தாளன், கலைஞன் எப்படி உருவாகிறான் என்பது புரிகின்றது. சிறந்த படைப்பாளிக்குரிய நடை. அவரது ஆளுமையைக் கணிக்கவைக்கிறது இந்நூல். மனிதரை, இலக்கியவாதியை , எழுத்தாளரைக் கௌரவித்து மதிக்கத் தெரிந்தவர். மல்லிகையின் 25 ஆவது ஆண்டு விழாவுக்குத் தலைமைவகிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டியது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. எழுத்தாளர் சம்பந்தனைச் சந்தித்தேன். டாக்டர் முருகானந்தன் என்னைத் தன் வீட்டிற்குச் கூட்டிச் சென்றார். நலவியல் புத்தகங்களில் டயறிக் குறிப்புகள் டாக்டரைக் கலைஞனாக இலக்கியவாதியாக அத்தாட்சிப்படுத்துகிறது. எம்.கே.எம் வாசகரைச் சிந்திக்கவைத்தவர்.

Read Full Post »

>கனிவான பேச்சு, பரிவான பார்வை, அக்கறையான விசாரிப்பு, சிறப்பான மருத்துவம் இத்தனையும் கொண்ட மனிதாபிமான மனிதர் எங்கள் குடும்ப வைத்தியர் டாக்டர்.எம்.கே.முருகானந்தன் அவர்களது மணிவிழா ஆண்டில் அவரை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். பருத்தித்துறையில் பணியாற்றிய போதும் சரி, வெள்ளவத்தையில் பணியாற்றிய போதும் சரி, அவரது மருத்துவமனையில் எப்போதும் கூட்டம் அலை மோதும். அத்தனை வேலைப்பளு மத்தியிலும் அன்பாக நேர்த்தியான ஆலோசனைகளுடன் அவர் வழங்கும் சிகிச்சை அனைவரின் மனத்தையும் நிறைவு கொள்ளச் வைக்கும்.

ஒரு மருத்துவர் என்பதற்கு அப்பால் அவர் ஒரு சிறந்த இலக்கிய கலாரசிகர், படைப்பாளி என்ற வகையில் பரந்துபட்ட நண்பர் வட்டத்தைக் கொண்டுள்ளார். எழுத்துத் துறையில் மருத்துவ இலக்கியமும், இரசனை விமர்சனமும், பத்தி எழுத்தும் அவரது முக்கிய துறைகள். ஏனைய துறைகளில் உதிரியாக ஈடுபட்டுள்ளார். மருத்துவ இலக்கியம் படைப்பதிலும், வானொலி, தொலைக்காட்சி கலந்துரையாடல் மூலம் மருத்துவ விடயங்களை இலகுவாக கொண்டு செல்வதிலும் இவருக்கு அசாத்திய திறமை உண்டு.

‘தாயாகப் போகும் உங்களுக்கு’ என்ற கர்ப்பிணிகளுக்கான மருத்துவ ஆலோசனை நூல் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் சாகித்திய விருதினையும் பெற்றது. தமிழ் மக்களுக்கு எயிட்ஸ் நோய் பற்றிய அறிமுகத்தை தனது நூல் மூலம் வைத்த முதலாவது மருத்துவர் இவர்தான். போஷாக்கு, நீரிழிவு, இதய நோய் போன்றவற்றைப் பற்றிய நூல்களும் வெளியிட்டுள்ளார். மல்லிகைப் பந்தல் வெளியீடாக வந்த ‘ஒரு டொக்டரின் டயறியிலிருந்து’ பலராலும் விரும்பி வாசிக்கப்பட்ட பத்தி எழுத்து நூலாகும்.

எனது கணவருடன் ஒன்றாக உயர்தர வகுப்பில் பயின்ற இவருக்கும் எனது கணவருக்கும் முருகானந்தன் என்ற ஒரே பெயரும், மருத்துவர் பதவியும், எழுத்துத் துறையும் இருப்பதால் பல சமயங்களில் வாசகர் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தியதுண்டு. இருவர் வீடுகளிலும் நடந்த மரணச் சடங்குகளிட்கு ஆள் மாறி அனுதாபச் செய்திகள் தெரிவித்த சம்பவங்களும் உள்ளன.

இலங்கையின் ஆக்க இலக்கியத்துறையில் முருகானந்தன் என்ற பெயர் பிரசித்தமானது. மறுமலர்ச்சிகால எழுத்தாளர் அ.செ. முருகானந்தனுக்குப் பின்னர் ஒரே காலத்தில் இலக்கிய உலகில் புகுந்த டாக்டர்.எம்.கே.முருகானந்தன், டாக்டர்.ச.முருகானந்தன் இருவரும் இலக்கிய உலகில் தமக்கென ஓரிடத்தை தக்க வைத்துக்கொண்டவர்கள் ஆவர். இப்பொழுது மிகவும் இளையவரான க. முருகானந்தன் என்ற எழுத்தாளரும் கவிதை உலகில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

மணிவிழா நாயகன் டாக்டர்.எம்.கே.முருகானந்தன் அவர்களை இலக்கியவாதிகள் சார்பில் வாழ்த்துவதில் உவகை கொள்கிறேன்.

சந்திரகாந்தா முருகானந்தன்

நன்றி:- ஞானம் ஏப்பிரல் 2008.

Read Full Post »

>இன்றைய ஒப்சேவர் பத்திரிகையில் வெளிவந்த செய்தி.
Dr. M. K. Murugananthan, a prolific writer, Tamil scholar and a medical practitioner who turned 60 years to be felicitated by the literary circle at a function to be held at the Women’s Educational Research Centre, Dharmarama, Road, Wellawatte, Colombo 6 today, April 6 at 4.30 p.m., presided over by Prof. S. Sivayogan.

Dr. Murugananthan who hails from Viyaparimoolai, in Point Pedro, received his education at Point Pedro Hartley College and entered the Medical Faculty of Colombo and passed out and practised at Badulla and Manthikai Base Hospital, Point Pedro, before going in for private practice. Dr. Murugananthan is an author of 11 books on medicine in Tamil language and literature.

(Maniccs)

Sunday Observer 06.04.2008

Read Full Post »

>
மனிதன் ஒரு சமூக விலங்கு. தனது தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து, தான் தனியாக வாழ்தல் என்பது முடியாத ஒன்று. பிறைடே (Friday) பாத்திரம் சேர்ந்திராவிட்டால் கற்பனைக் கதையில் கூட ரொபின்சன் குரூசோ போன்ற மனிதன் சோபித்திருக்க முடியாது.

ஆகவே தன்னைச் சுற்றி வாழும் மனிதர்களோடு நல்ல உறவைக் கொள்ளுதல் என்பது மிக முக்கிய வாழ்வுக் கூறு ஆகிறது. மற்றைய உயிரினங்களோடு நல்ல உறவைக் கொள்ள முடியாதவர்களுக்கு இப் பூமியில் உள்ள பகற்காலங்களும் இருளாகவே இருக்கும். ஏனெனில் உறவுதான் மனித மனங்களுக்கு ஒளியைத் தந்து இதமூட்டுகிறது. மனிதர்களுக்கிடையிலான தொடர்பாடல் உறவாடல் இவை எல்லாம் கலைகள் என்று சொல்லப்பட்டாலும் கூட அவை கற்றுக்கொள்ளக் கூடிய கலைகளும்தான்.

நூல்களில் இவற்றைக் கற்கலாம். அதைவிட இலகுவாக எமக்குள் வாழும் ஆளுமையில் சிறந்த மனிதர்களிடம் இருந்தும் கற்கலாம். இம்மாதம் 27ம் திகதி தனது 60அகவையை நிறைவு செய்யும் எழுத்தாளர், விமர்சகர், வைத்தியர் எம்.கே.முருகானந்தனிடம் இருந்து நிறையவே கற்கலாம்.

தொடர்பாடல் திறன்
வளர்ச்சியைத் தூண்டும் உறவுகளில் மனிதத் தொடர்பாடல் மிக முக்கியமானது. ஓவ்வொரு மனித நடத்தையின் அடியிலும் ஒரு பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவை இருக்கும். இதனை விளங்கிக் கொண்டு, அந்தத் தேவையை ஏற்றுக் கொண்டு, தொடர்புகளை மேற்கொள்ள முனையும்போது அது இலகுவில் வெற்றி பெறும் என்ற உண்மையைத் தெரிந்து அதன்படி அநாயாசமாக வாழும் மனிதர் எம்.கே.எம் அவர்கள்.

வெளித் தோற்றத்தில் ஒரு சிறிய உருவம். எந்நேரமும் மலர்ந்து சிரித்த முகம். அம் முகத்திற்கு மேலும் சோபை தருவன அந்தக் கண்களும் கண்ணாடியும்.

மிகப் பெரிய மருத்துவமனைகளில், மிகப் புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்களிடம் காட்டி மாறாத நோயாளிகள் பலரும் டொக்டர் எம்.கே.எம்மிடம் காட்டிய பின் நோய்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் சொல்கிறார்கள். இது எப்படிச் சாத்தியமாகிறது?

நோயாளியின் உள்ளத்தோடு வேலை செய்யும் தனித்திறனால் இது சாத்தியமாகிறது என்றே நான் நம்புகிறேன்.

தான் தரம் 3 அல்லது 4 படித்தபோது நிகழ்ந்த சம்பவம் ஒன்றை எம்.கே.எம் இப்படி நினைவு கூருகிறார். “எனது வருத்தத்திற்காக ஒரு சிவப்பு மருந்து கொடுக்கப்பட்டிருந்தது. நான் அந்தக் கலர் மருந்து வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். எனது உறவினர் ஒருவர் அதைத் திரும்ப எடுத்துச் சென்று பச்சைக் கலர் மருந்து வாங்கி வந்தார்.”

எம்.கே.எம் பாக்கியசாலி. அவரது இளமைக் கால அனுபவம் ஒன்று- அல்லது பல- இப்படி நேராய் அமைந்ததால் மருந்து குடிப்பதில் நோயாளியின் விருப்பமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்தோடு உடன்படும் ஒரு வைத்தியராக இன்றுவரை பணியாற்றுகிறார்.
கடந்த பத்து வருட காலத்தில் ஏறத்தாள ஐம்பதாயிரம் நோயாளர்களைத் தனது கணினி பதிவு செய்திருக்கிறது என்று சொல்லும் எம்.கே.எம்மிடம் அவ்வளவு பேர் அள்ளுப்பட்டு வருவதற்கு அவரது தொடர்பாடல் திறன் முக்கிய காரணி என்பதை யாரும் மறுக்க முடியாது.

உற்றுக் கேட்டல் திறன்
நோய் நொடி வரும் சந்தர்ப்பங்களில் எமது குடும்பத்தினரும் எம்.கே.எம் அவர்களிடமே செல்வோம்.எமது குடும்ப வைத்தியர் என்ற வகையில் அவரது உற்றுக் கேட்டல் திறனைப் பல சந்தப்பர்ப்பங்களில் நான் அவதானித்து வியந்துள்ளேன்.

உயர்ந்த பதவிகளில் இருக்கும் பலர் பகுதியான கேட்டல் செய்பவர்களாகவே இருப்பதை நான் அவதானித்துள்ளேன். தொலைபேசியில் உரையாடிப் கொண்டே தனக்கு முன்னால் இருக்கும் ஊழியருக்குப் பதில் சொல்லும் அதிகார்கள் எமக்கு நல்ல பரிச்சயம். கையெழுத்துக்களைப் போட்டுக் கொண்டும், காதில் ஒட்டிக் கொண்ட தொலைபேசியைக் கழுத்தைச் சரித்து அணைத்தபடி உரையாடிக் கொண்டும் முன்னால் அமர்ந்திருக்கும் வாடிக்கையாளரின் பிரச்சனையைக் கேட்கும் வங்கி அதிகாரிகளை எமக்கு நன்கு தெரியும். அது ஒரு சிறப்பான தகமை (ஒரு நேரத்தில் மூன்று வேலை) என்றும்தான் பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். எமது மூளை ஒரு கணத்தில் ஒரு விடயத்தை மட்டுமே கிரகிக்கும் என்ற உண்மை அவர்களுக்குத் தெரியுமோ இல்லையோ என்று எனக்குத் தெரியாது.

தனக்கு முன்னால் இருக்கும் நோயாளியின் முறைப்பாட்டை அவர் எவ்வளவு நேரம் எடுத்துச் சொன்னாலும், உடலும் மனமும் முழுமையாக ஈடுபட்ட நிலையில் கேட்கும் வைத்தியர் நோயாளியின் மனத்தை வென்றவர் ஆகிவிடுகிறார் அதற்கான மிகச் சிறந்த உதாரணம்தான் எம்.கே.எம் அவர்கள்.

நோயாளியின் கேள்விகளுக்குப் பொருத்தமான பதில்களைத் தருவதில் அவர் என்றுமே தயக்கம் காட்டியதில்லை. “நலவியல் சம்பந்தமாக எழுதுகிறவர்கள் பொதுவாக நோயாளிகளுக்கு விளக்கம் தருவதில் விருப்பம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்” என்று தான் எங்கோ வாசித்ததை நினைவு கூருகிறார் எம்.கே.எம். ஆக, இவர் ஒரு நல்ல எழுத்தாளராக இருப்பதும், வெற்றி பெற்ற வைத்தியராக இருப்பதும் எப்படி ஒன்றுடன் ஒன்று பொருந்தி, ஒன்றை ஒன்று அணைதுச் செல்கிறது என்பதைப் பார்க்கிற போது வியப்பாகவும் மகிழ்வாகவும் இருக்கிறது.

ஒத்துணர்வுத்திறன்
ஒரு மொழியில் வன்மையான சொற்களும், இனிமையான சொற்களும் கலந்தே காணப்படும். ஆயினும் மனித உறவுகளை மேம்படுத்த விருப்புவோரும், கற்றறிந்தோரும், சான்றோர்களும், நல்ல விழுமியங்களை உடையோரும் இனிமையான சொற்களைத் தேர்ந்தெடுத்துக் கதைப்பர் என்பது தொன்று தொட்டு நிலவி வரும் கருத்து.

“யாவர்க்குமாம் பிறர்க் கின்னுரை தானே”

“இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று”

போன்ற பழம் பாடல்கள் இதை உணர்த்தும்.

இனிமையாகப் பேசுவது என்பது ஒரு கொடைதான் ஆயினும் அக அமைதியும் உளச்சமநிலையும் உடையோர்க்கு மட்டுமே அது சாத்தியப்படும். இனிமையாகப் பேசுபவர்களிடம் ஏனைய மனிதர்கள் யாவரும் ஈர்க்கப்படுவது இயல்பு.

டொக்டர் எம்.கே.எம் அவர்கள் நோயாளிகளுடன் ஒத்துணர்வுடன் கதைப்பதைப் பல சந்தர்ப்பங்களில் நான் அவதானித்துள்ளேன். தனது மருத்துவ அநுபவத்தில் ஏறத்தாள ஒன்றரை இலட்சம் நோயாளர்களைச் சந்தித்திருக்கக் கூடிய ஒருவர், தான் அவர்கள் யார் மீதும் கோபப்பட்டதாகப் பெரும்பாலும் நினைக்கவில்லை என்று கூறுகிறார். இதுவே அவரது அகச் சமநிலைக்குச் சிறந்த சான்றாகும்.

இனிமையாகப் பேசுதல் என்ற பெரும் பரப்பினுள்ளே ஒத்துணர்வுடன் பேசுதல் என்பது வரையறுக்கப்பட்ட ஒரு விசேட திறன் ஆகும். ஒருவருடைய உணர்வை இன்னொருவர் புரிந்து கொள்வது அல்லது விளங்கிக் கொள்வது கடினமானது. அதிலும் குறிப்பாக ஒருவர் தனது மறை உணர்வுகளை வெளிப்படுத்தும் சந்தர்ப்பத்தில் அதனைப் புரிந்து கொள்வதற்குப் பதிலாக அவரது உணர்வுகளை அடக்கி விடவே நாம் பொதுவாக முயல்வதுண்டு.

ஆராச்சியாளர்களை மிகவும் ஈர்த்துள்ள விடயமாக இருக்கும் ஒத்துணர்வு டொக்டர் எம்.கே.எம் இடம் இயல்பாக அமைந்து விட்ட ஒரு பண்பாக இருக்கிறது. நோயாளியின் தனிப்பட்ட உலகினுள் புகுந்து அதனைத் தனக்குப் பழக்கமான இடமாக்கிக் கொள்ளும் ஒத்துணர்வே அவரை நோக்கி இலட்சக்கணக்கான மக்களை ஈர்த்துள்ளது.

உடனிருத்தல் திறன்
நோயாளியோடு உடனிருப்பது கடினமான விடயம். பெரும்பாலும் அவர்களது உடல் நோய் காரணமாகப் பல்வேறு மறை உணர்வுகளோடு வந்திருப்பர். அது மனிதர் என்ற வகையில் மருத்துவரையும் தொற்றிக்கொள்ளக் கூடும். அதனால்தான் பலர் களைப்படைந்து, சக்தி தீய்ந்து எல்லோரிடமும் கோபித்துக் கொள்வதுண்டு. தற்கொலை நூற்றுவீதம் கூட மருத்துவத் தொழில் செய்பவர்களில் ஒப்பீட்டளவில் அதிகம்.

“பல நோயாளிகளுடன் இருந்து அவர்கள் சொல்லும் மறை உணர்வு நிறைந்த கதைகளை எல்லாம் கேட்கிறபோது உங்களுக்கு சக்தி தீய்தல் உணர்வு ஏற்படுவதில்லையா?” என்று எம்.கே.எம் மிடம் கேட்டபோது, “எனக்கு நோயாளிகளை அட்டெண்ட் (Attend) பண்ணுவதில் ஒரு மகிழ்வு இருக்கிறது. சில வேளை காலையில் வைத்தியசாலைக்கு வரும்போது ஒரு சிறிய தலையிடி இருந்தாலும், நோயாளிகளைப் பார்க்கத் தொடங்க அது போய்விடும்” என்கிறார். பாருங்கள்! ஒருவர் தனது தொழிலில் இருந்து எப்படி மகிழ்வைப் பெற்றுக் கொள்கிறார் என்று. தான் செய்யும் தொழிலில் இருந்து சம்பளத்தை மட்டும் பெறுபவர்கள் போன்ற பரிதாபத்திற்குரியவர்கள் யாரும் இருக்க முடியாது.

மனம் திறந்து பேசும் திறன்.

We talked with open heart and tongue
Affectinate and true

என்பது Words Worth இன் ஒரு கவிதை வரி. நானோ அல்லது எனது குடும்ப அங்கத்தினர் யாருமோ நோயாளி என்ற நிலையில் டொக்டர் எம்.கே.எம் அவர்களைச் சந்தித்துத் திரும்பும்போது மேலே சொன்ன வரி எனக்கு நினைவு வருவதுண்டு. நோயாளி என்ற நிலையில் வருபவரோடு கூட மனம் திறந்து உண்மையாகப் பேசும், உண்மையாக நடந்து கொள்ளும் மருத்துவர்கள் குறைவு. அந்த ஒரு சிலரில் எம்.கே.எம் முக்கியமானவர். வைத்தியம் கூட வியாபாரமாகிவிட்ட இன்றைய நவீன உலகில் இவர் ஒர வைரம். இவர் ஒரு முத்து.
ஆக எம்.கே.எம் அவர்கள் ஒரு நல்ல எழுத்தாளராக இருப்பதால் சிறந்த விமர்சகராக இருக்கிறார். சிறந்த விமர்சகராக இருப்பதால் நல்ல வைத்தியராக இருக்கிறார். நல்ல வைத்தியராக இருப்பதால் உன்னத எழுத்தாளராக இருக்கிறார். மொத்தத்தில் உன்னத ஆளுமை வாய்க்கப் பெற்ற ஒரு மனித மாணிக்கமாக விளங்குகிறார்.

மணிவிழாக் காணும் எம்.கே.எம் அவர்கள் இன்னும் பல நூல்களை எழுத வேண்டும். இன்னும் பல லட்சம் மனிதர்களுக்கு வைத்திய உதவி செய்து அவர்களின் வாழ்வுக் காலத்தை அதிகரிப்பதோடு தானும் நீடு வாழ்ந்து நூற்றாண்டு விழாப் பொலிவு காண வேண்டும்.

-கோகிலா மகேந்திரன்

நன்றி:- தினக்குரல்- 27.03.2008

Read Full Post »