Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘மனச்சோர்வு’ Category

‘இதிலை இருக்கிற அவ்வளவு வருத்தமும் எனக்கு இருக்கு’ என்றவள் தனது கைப்பையைத் திறந்தாள். நீண்ட தூரம் பயணித்து வந்திருந்த பெண் அவள்.

அவளது கைப் பையிலிருந்து வெளிவந்தது பொக்கிசம் போல பொத்தி வைத்திருந்த ஒரு பொருள்.

வேறொன்றும் இல்லை. சென்ற வார வீரகேசரியின் ஒரு பக்கம். ‘கை கால்களில் விறைப்பு எரிவு வலிகள் வருவது எதனால்;?’ என்ற கட்டுரை அதில் இருந்தது.

‘கைகால்களில் எரிவு, மேல் எரிவு, நெஞ்சு எரிவு, வயிற்றெரிவு எரியாத இடமே இல்லை’ என்றாள். மேலும் விசாரித்தபோது ஏற்கனவே பலரிடம் மருந்து எடுத்திருந்தமை தெரியவந்தது.

தலைக்கான சீரீ ஸ்கான், வயிற்றரை ஸ்கான், இரைப்பையில் குழாய் விட்டுப் பார்க்கும் endoscopy பரிசோதனை தைரொயிட் பரிசோதனை, குருதியில் B12 பரிசோதனை என ஏராளமான பரிசோதனைகள் செய்து பல மருந்துகளும் உட்கொள்கிறாள்.

‘நோய்கள் குறைஞ்சு கூடுகிறதே ஒழிய மாறுகிறபாடாக் காணவில்லை’ எனச் சலித்துக் கொண்டாள் கணவன் இறந்து பிள்ளைகளும் வெளிநாட்டில் வசிக்கத் தனியே வாழும் பெண். ஓன்று போக மற்றொரு பிரச்சனை மாறி மாறிப் பிறந்து கொண்டே இருக்கிறது.

மற்றவர் நடு வயதுக்காரன். மிக மெலிந்த உடலும் சோர்ந்த முகமுமான அவரை மனைவி அழைத்து வந்திருந்தாள். ‘எதுவுமே ஏலுதில்லை என்று வீட்டோடு கிடக்கிறார். கடைக்குப் போறதில்லை. நான்தான் கடையையும் பார்த்து வீட்டு வேலைகளையும் பார்க்க வேண்டிக் கிடக்கு. சீனி டயபட்டிஸ், ரீபி (TB) என்று எந்த ஒரு சீரியசான பிரச்சனையும் கிடையாது என்று டொக்டர் சொன்னவர்’

ஏதாவது கான்சராக இருக்குமோ என்ற சந்தேகம் அவளுக்கு. ஆனால் நல்ல காலம் அவ்வாறு இருக்கவில்லை. ‘ ஒண்டுமே ஏலாமல் கிடக்கு. படுத்துக் கிடக்க வேணும் போலை கிடக்கு. படுத்தாலும் நித்திரை வருகுதில்லை. ஞாபகம் மறதியும் கூடிப்போச்சு’ என அனுங்கினார்.

‘மகளுக்கு கலியாணம் வருகுது. இந்த மனிசன் இடிச்ச புளி மாதிரி மூஞ்சையை நீட்டிக் கொண்டு இருக்குது’ எனக் கணவனை திட்டினாள் மற்றொரு பெண். பிடிக்காத கலியாணம் அல்ல. இவர்களாக மனம் பிடித்து ஏற்பாடு செய்ததுதான். ஆனால் அதிலையும் இவருக்கு சந்தோசத்தைக் காண முடியாதிருக்கிறது. எதுவுமே இவருக்கு மகிழ்ச்சியளிப்பதாக இல்லை.

மனச் சோர்வு

மேற் கூறிய இவை எல்லாமே மனச்சோர்வின் அறிகுறிகள்தான். மருத்துவத்தில் depressive disorder என்பார்கள். ஆண் பெண் இருபாலாரிலும் ஏற்படும். இது மிகவும் பரவலாகக் காணப்படும் ஒரு பிரச்சனை. இருந்தபோதும் பெரும்பாலான நோயாளிகளுக்கு தாம் மனச்சோர்வு நோயினால்தான் பாதிக்கப்பட்டிருக்pறோம் என்பது புரிவதில்லை.

கைகால் உழைவு, மேல் எரிவு, வயிற்று எரிவு, சோர்வு, இயலாமை, தூக்கக் குறைபாடு அல்லது அதிகரித்த தூக்கம், பசியின்மை அல்லது கூடுதலான பசி, முதுகுவலி, உடல் வலிகள், தலைக்கனம், மறதி, என உடலில் பல்வேறு துன்பங்களுடன் மருத்துவர்களிடம் வருவார்கள். தீர விசாரிக்காவிடில் மருத்துவர்களும் ஏமாற நேரிடும்.

முக்கிய அறிகுறிகள் மூன்று

 

பல்வேறு அறிகுறிகள் இருந்தாலும் அடிப்படையான மூன்று முக்கிய விடயங்கள் இருக்கிறதா என மருத்துவர்கள் ஆராய்ந்து பார்ப்பார்கள்.

  1. மனநிலை மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கும். எந்நேரமும் மிகவும் கவலையோடு இருப்பார். உற்சாகம் அறவே இருக்காது. எதிர்காலம் இருண்டு போனதான உணர்வு ஏற்படக் கூடும்.
  2. எதிலும் மகிழ்ச்சி இருக்காது. ஆர்வம் அற்றுவிடும். எவ்வளவு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விடயம் நிகழ்ந்தாலும் அதிலும் மகிழாது விடுபட்டவர் போல இருப்பார். வழமையாக நண்பர்கள் உறவினர்களுடன் மகிழ்ந்திருக்கும் வழக்கமுள்ள அவர் இப்பொழுது அவற்றில் சந்தோசம் அடையமாட்டார். தனிமையை நாட வைக்கும். பாலுறவு பாகற்காயாக் கசந்து ஈடுபடுவது அரிதாகும். இயலாமற் போவதும் உண்டு.
  3. மிகுந்த சோர்வாக இருப்பார். அல்லது களைத்தது போல இருப்பார். உடல் தளர்ந்து இயங்க முடியாதது போல உணர்வார்.

இந்த மூன்றில் குறைந்தது இரண்டு அறிகுறிகள், அதுவும் குறைந்தது இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்து இருந்தால்தான் அதை மனச்சோர்வு என மருத்துவர்கள் கணிப்பார்கள்.

ஏனெனில் திடீரென ஏற்படும் நெருங்கியவரது மரணம், பிரிவு, பொருளாதார இழப்பு போன்ற இழப்புகளும் சோகங்களும் இத்தகைய மனநிலையை ஏற்படுத்தவே செய்யும். ஆயினும் அவை நாளோட்டத்தில் மறந்து மறைந்துவிடும். வாழ்வு பழைய நிலைக்குத் திரும்பிவிடும்.

ஆனால் மனச்சோர்வு அவ்வாறு எளிதில் மாறாது. நீண்ட நாட்களுக்குத் தொடரும்

மேலே கூறிய முக்கிய அறிகுறிகளுக்கு அப்பால் வேறு பல சிறிய அறிகுறிகளும் மனச்சோர்வு நோயாளிகளிடம் ஏற்படலாம்.

ஏனைய அறிகுறிகள்

தூக்கக் குழப்பம் முக்கிய அறிகுறியாகும்.

  • பொதுவாகச் சோர்வாக இருப்பதால் படுக்க வேண்டும் போல இருக்கும்.
  • ஆனால் தொழில் மற்றும் குடும்பக் கடமைகள் காரணமாக அந்நேரம் படுக்க முடியாதிருப்பதால் உற்சாகம் குறையும்.
  • படுத்தாலும் ஆழ்ந்த உறக்கம் கிட்டாது. அதிகாலையில் முழிப்பு வந்துவிடும்.
  • ஆனாலும் எழுந்திருக்க முடியாத சோர்வு படுக்கையில் கிடக்கச் சொல்லும்.
  • சிலர் நித்திரை வராவிட்டால் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். அல்லது எழுந்து நடப்பார்கள். வேறு படுக்கையில் கிடந்து பார்ப்பார்கள்.
  • காலையில் எழுந்திருக்க மனம் வராது. மேலும் படுத்திருக்க வேண்டும் போலவும் இருக்கலாம்.
  • ஆனால் ஒரு சிலருக்கு தூக்கம் அதிகமாவதும் உண்டு.

பொதுவாகச் சிந்தனையை ஒருமுகப்படுத்தவோ எதிலும் கருத்தூன்றிச் செயற்படவோ முடியாதிருக்கலாம். இதனால் திடமான முடிவுகள் எடுக்க முடியாது திணறும் நிலை ஏற்படும். வழமைபோலத் தனது தொழிலில் ஈடுபடுவதைப் பாதிக்கும். வேலை இழப்பு, பொருளாதாரப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும். மறதியும் சேர்ந்து வருவதுண்டு.

தன்னம்பிக்கை குறையும். ஆற்றாமை மிகும். எதுவும் தன்னால் செய்ய முடியாது என்பது போன்ற உணர்வு ஏற்படலாம். உதவியற்று நட்டாற்றில் தான் கைவிடப்பட்டதாகத் தோன்றும்.

மாறாக சிலருக்கு குற்றவுணர்வு எற்படுவதுண்டு, தானே தவறிழைத்தவன், செய்ய வேண்டிய கடமையைச் செய்யாத, செய்ய முடியாத பாவி எனத் தன்னைத்தானே பிழை சொல்லி துன்பப்படுவதும் உண்டு..

உணவு விடயத்தில்; 

  • பொதுவாக நாட்டமின்மை ஏற்படும்.
  • பசிக்காது, பசித்தாலும் உண்ண மனம் வராது.
  • இவை காரணமாக உடல் மெலியும் வலு குறையும்.
  • உளச்சோர்வுடன் உடற் சோர்வும் இணையலாம்.
  • மாறாக ஒரு சிலரில் அதீத பசி எற்படுவதுண்டு.
  • தமது இயலாமையை உடற் பலயீனம் எனக் கருதி அதிகம் உண்பவர்களும் உண்டு.
  • தமது மனஉணர்வைப் புரிந்து கொள்ளாமல் எதையாவது வாயில் அடைய வேண்டும் என்ற உணர்வு ஏற்படுவதுண்டு. இதனால் எடை அதிகரிக்கலாம்.

காரணம் புரியாது நீண்ட நாட்களாகத் தொடரும் உடல் உழைவு, கைகால் பிடிப்பு, தசைக் குறண்டல், தலையிடி போன்ற தெளிவற்ற அறிகுறிகளுடனும் மனச்சோர்வு நோயாளர்கள் மருத்துவரை நாடுவதும் உண்டு.

மிக ஆபத்தானது தற்கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் வருவதாhகும். வாழ்வின் மீதான பற்றின்மையும் குற்றவுணர்வு போன்றவையும் தற்கொலை எண்ணங்களுக்கு வித்திடுவதுண்டு. உடல் எரிவு என்ற பிரச்சனையுடன் வந்த அந்தப் பெண் ‘ நான் ஏன் உயிரோடை இருக்கோணும் என்ற யோசினை வருகுது’ என்று சொன்னவுடன் நான் உசாரானேன். நோயினால் வரும் உணர்வு அது, அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதை அவளுக்கு விளக்கி தீவிரசிகிச்சையை ஆரம்பித்தேன்.

இருந்தபோதும் நேரிடையாகக் கேட்கும்போது தற்கொலை எண்ணங்களை பல நோயாளிகள் மறுத்துவிடுவதுண்டு. அவர்கள் சொல்லும் வார்த்தைகளுக்கு இடையேயான உணர்வுகளை வைத்து மருத்துவர்கள் நோயை இனங்காண நேரும்.

தமது உடல் நோய்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவது போல தங்கள் உணர்வுகளையும் எண்ணங்களையும் மற்றவர்களுடன் பகிரும் வழக்கம் எமது சமூகத்தில் இல்லை என்பதே இதற்குக் காரணம் ஆகும்.

மனதில் ஏற்படுகிற கவலை, துன்பம், ஏக்கம் போன்ற உணர்வுகளை வைத்தியர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலமே தங்களது பிரச்சனைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்,

இறுதியாக

  • மனச்சோர்வு என்பது தலையிடி பிரஸர் நீரிழிவு போல மற்றொரு நோய்தான்.
  • சீனி, கொலஸ்டரோல் உப்பு போன்ற இரசாயனங்களால் எவ்வாறு நோய்கள் ஏற்படுகிறதோ அதே போல மூளையில் உள்ள சில இரசாயன மாற்றங்களால் தோன்றுவதுதான் மனச் சோர்வு நோய்.
  • தானே தேடிக் கொண்டது என வெட்கப்பட வேண்டிய வியாதி அல்ல.

இதற்கான நல்ல சிகிச்சைகள் இருக்கின்றன. சிறப்பான மருந்துகள் உள்ளன. பூரண குணம் கிடைக்கும். 

ஆயினும் 

  • இதற்கான சிகிச்சையை குணம் கண்டவுடன் நிறுத்தக் கூடாது.
  • பொதுவாக குணம் கணட பின்னரும் மூன்று மாதங்கள் வரை தொடர்ந்தால்தான் மீளவும் வராது தடுக்க முடியும்.
  • எனவே தாங்களாக மருந்தை நிறுத்தக் கூடாது.
  • பொதுவாக மருத்துவர்கள் மனச்சோர்விற்கான மருந்துகளைத் திடீரென நிறுத்துவதில்லை. படிப்படியாகக் குறைத்தே நிறுத்துவார்கள்.
  • எனவே மருத்துவர் சொல்லும் வரை தொடர வேண்டும்.

(இலங்கை குடும்ப மருத்துவர்கள் சங்கத்தின் ஆதரவில் ஹோட்டல் ஜானகியில் நோர்ட்டிஸ் நிறுவனத்தின் அனுசரணையில் நடந்த கருத்தரங்கில் களனி பல்கலைக்க கழக விரிவுரையாளரும் மனநல மருத்துவருமான Dr.Shehan Williams ஆற்றிய உரையின் உந்துதலில் எழுதப்பட்ட கட்டுரை இது)

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.0.0.0

Read Full Post »

>மிகவும் துன்புறுத்துகிற நோய் எது என்று கேட்டால் உங்கள் விடை எதுவாக இருக்கும். இவர்கள் கதைகளைக் கேளுங்களேன்.

பணத்தையும், நேரத்தையும் வீணாக்க வைக்கும் நோய்

“இது தான் நான் பாவிக்கிற மருந்துகள். மருந்தைப் போடுறதுதான் மிச்சம். ஒரு சுகமும் இல்லை”.

அவள் நீட்டிய மருந்துச் சிட்டையில் பத்து மருந்துகளுக்குக் குறையாமல் இருந்தன. பெரும்பாலானவை விட்டமின் மருந்துகள், மற்றும் கல்சியம், இரும்புச் சத்து மாத்திரைகள், வலி நிவாரணிகள்.

எல்லாமே விலை உயர்ந்த மருந்துகள்.

காசையும் காலத்தையும் செலவழித்ததுதான் மிச்சம். நோய் தீர்ந்தபாடாக இல்லை.

தெளிவற்ற பற்பல அறிகுறிகள்

என்ன வருத்தம் எனக் கேட்டபோது மருந்துச் சிட்டையில் உள்ள லிஸ்டை விட நீண்ட பட்டியல் போன்று அறிகுறிகளைச் சொல்லத் தொடங்கினார்.

கை கால் உழைவு, கழுத்து நோ, நாரிப்பிடிப்பு, சோம்பல், அலுப்பு, வேலை செய்ய முடியாத களை என ஆதியும் அந்தமுமில்லாப் பரம் பொருள் போலப் பட்டியல் தொடர்ந்தது.

“ஆறு மாசமா வருத்தம். தொடர்ந்து மருந்துதான். ஆனால் நோய் தீர்ந்த பாடாகக் காணவில்லை” எனக் கூட வந்த கணவன் சலித்துக் கொண்டார்.

“இவவின்ரை வருத்தத்தாலை பிள்ளையளின்ரை படிப்பு குழம்புது. நானும் ஒழுங்காக வேலைக்குப் போக முடியவில்லை”.

நோயாளியை மட்டுமின்றி உறவினரையும் குடும்பத்தினரையும் பாதிக்கும்

இன்னொரு பெண். வழமையாக கலகலத்துப் பேசி உற்சாகமாக உரையாடுபவள், அன்று வந்த பொழுது, “இவருக்கு எந்த நாளும் வருத்தம். கொண்டு திரிஞ்சு திரிஞ்சு எனக்கு வாழ்க்கையே சலிச்சுப் போட்டுது” என்றாள் மிகுந்த சோர்வுடன்.

இவர்களுக்கு எல்லாம் என்ன வருத்தம்?

ஏன் வைத்திய
ம் செய்தும் மாறவில்லை?

மிகப் பரவலாகக் காணப்படும் நோய்

மிகவும் பரவலாகக் காணப்படுகின்ற நோய், ஆனால் நோயை நிர்ணயிப்பதற்கும் (Diagnosis) சரியான சிகிச்சையை ஆரம்பிப்பதற்கும் பொதுவாகக் காலதாமதமாகின்றது.

அதே நேரம் நோயாளியையும் உறவினர்களையும் கடுவலாகப் பாதிக்கிற போதும் கவனத்திற்கு ஆளாகாத நோய் இது.

மனச் சோர்வு (Depression)

மனச் சோர்வு (Depression) கறையான் புற்றுப் போல வெளியே தெரியாமல் உள் நின்று அரித்து உடலையையும் மனத்தையும் வெற்றுக் கோதாக்கி விடும் நோய்.

அது மட்டுமல்ல சுற்றி இருக்கும் உறவினர்களையும் சோர்வடையச் செய்து விடும்.

கவனிக்காது விட்டால் தற்கொலைக்கும் இட்டுச் செல்லும் அளவிற்கு ஆபத்தானது.

நல்ல சிகிச்சை முறைகள்

“ஏன் மனச் சோர்வைக் குணப்படுத்த நல்ல மருந்துகள் கிடையாதா?” எனக் கேட்பீர்கள்.

நல்ல மருந்துகள் இருக்கத்தான் செய்கின்றன.

அத்துடன் உளவளத் துணை வழங்கலும் நல்ல பலனைத் தருகிறது.

ஆனால் இதற்கு முதற் படியாக நோயைக் கண்டு பிடிக்க வேண்டுமே!.

ஆய்வு கூட பரிசோதனைகள் மூலம் கண்டு பிடிக்கக் கூடிய நோய்கள் எனில் பட்டென உடனடியாகவே கண்டுபிடித்து விடுவார்கள் வைத்தியர்கள்.

பேசிக் கண்டு பிடிக்க வேண்டிய நோய்

ஆனால் ஆற அமர இருந்து பேசிக் கண்டு பிடிக்க வேண்டிய நோய் இது.

நோயாளி சொல்லும் அறிகுறிகளுக்கிடையே சொல்லாமல் மறைந்து நிற்கும் செய்திகளை இனங் காணும் அனுபவம் தேவை.

அவர்கள் பேச்சுக்களிடையே அகப்படும் ‘சிறு முடிச்சுகளை’ச் சிக்கெனப் பிடித்து அவர்கள் ஆழ் மனத்தில் ஒளிந்திருக்கும் சோகங்களை வெளிக் கொணரும் ஆற்றல் தேவை.

இவை முடியாததால் மனச் சோர்வு நோய் பல வைத்தியர்களுக்குப் பிடிபடாமல் போவதுண்டு.

நோய் பிடிபடாமல் ஒளிந்து நிற்பதற்கு வைத்தியர்கள் மட்டும்தான் காரணம் அல்ல.

வெளிப்படையாகச் சொல்லத் தயங்கல்

மிக முக்கிய காரணம் நோயாளிகள்தான். தங்கள் மன உணர்வுகளை வைத்தியர்களிடம் சொல்லாமல் இருப்பதே அடிப்படையாகும்.

வெளிப்படையாகச் சொல்லாமல் விடுவது மட்டுமல்ல கோடி காட்டவும் தயங்குகிறார்கள்.

நேரடியாகக் கேள்வி கேட்டு அறிய முயன்றால் கூட மறைப்பவர்கள் பலர்.

நோய் என்றால் எங்கள் சமூகத்தினருக்கு உடல் நோய் மட்டும்தான் என்பதே எண்ணம்.

மனதில் ஏற்படுகிற கவலை, துன்பம், ஏக்கம் போன்ற உணர்வுகளை வைத்தியர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும், அவற்றிற்கும் சிகிச்சை பெறலாம் என நினைப்பதே இல்லை.

ஊழ்வினைப் பயன், முந்திச் செய்த பாவத்திற்கு கடவுள் தண்டிக்கிறார் போன்ற நம்பிக்கைகள் காரணமா?

மனச்சோர்வு என்றால் ‘பித்து’, ‘கேவலமான நோய்’, வெளியே அறிந்தால் வெட்கம்’ போன்ற சமூகம் சார்ந்த தவறான கருத்துக்களும் காரணமாகிறது.

ஆனால் மனச்சோர்வு என்பது சாதாரண வியாதி அல்ல.

மிக அதிகமானவர்களைப் பாதிக்கும் நோய்

உலகளாவிய ரீதியில் 30 சதவிகிதமானவர்களைப் பாதிக்கிறது.
நோயாளியை மாத்திரமின்றி முழுக் குடும்பததையுமே பாதிக்கும் ஒரு நோயாகும்.
நோயாளிக்கும் கூட மிகுந்த துன்பத்தையும் இயலாமையையும் தரும் நோயாகும்.

மனிதர்களை மிகவும் துன்புறுத்துகிற நோய் எது என்றால் பலரும் ஆஸ்த்மா, மூட்டு வாதங்கள், இருதய நோய், அல்லது நீரிழிவு என்று கூறக் கூடும்.

ஆனால் இந்த நான்கு நோய்களையும் விட மோசமாக நோயாளர்களைத் தாக்குவது மனச்சோர்வு தான் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆதரவில் 60 நாடுகளில் எல்லா மதத்தினரையும் கொண்டு 18 வயதிற்கு மேற்பட்ட 245,404 பேரை உள்ளடக்கி உலகளாவிய ரீதியில் செய்யப்பட்ட பாரிய ஆய்வு கூறுகிறது.

அதனால் வெளிக்காட்டாத அபகீர்த்தி நோய் ”Silent Scandal’ எனப் பலரும் குறிப்படுவதுண்டு.

போதிய சிகிச்சை கிட்டுவதில்லை

30 சதவிகிதமானவர்களைப் பாதிக்கின்ற போதும் அவர்களில் 30 சதவிகிதமானவர்கள் மட்டுமே சிகிச்சை பெறுகிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதனால் மிகுதி 60-70 சதவிகிதமானவர்கள் போதிய சிகிச்சை இன்றித் துன்பப்படுகிறார்கள்.

ஆனால் ஆஸ்த்மா நோயினர் 90 சதவிகிதமும், மூட்டு வலி நோயினர் 80 சதவிகிதமும் திருப்பதிகரமான சிகிச்சைளைப் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நீரிழிவு நோயைப் பொறுத்த வரையில் 8 சதவிகிதமானவர்கள் மட்டுமே ஒழுங்கான சிகிச்சை இல்லாதிருக்கிறார்கள.

வைத்திய வசதிகளுக்கான நிதி ஒதுக்கீடு மட்டுப்படுத்தப்பட்ட வளர் முக நாடுகளில் மனச்சோர்வு போன்ற நோய்களுக்கான சிகிச்சை போதுமானதாக இல்லை.

இலங்கையில் தமிழர்

போரின் பாதிப்பினால் பரவலாக மனோரீதியான நோய்களுக்கு ஆளாகியிருக்கும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ஒரு கையின் விரல்களின் எண்ணிக்கை அளவு கூட மனநோய் வைத்திய நிபுணர்கள் இல்லை என்பது கவலைக்குரியதே.

ஆயினும் அதை ஒரு தடையாக எடுத்துக் கொள்ள முடியாது. வைத்தியப் பட்டம் பெற்ற எல்லா வைத்தியர்களுக்கும் இத்துறையில் சிகிச்யையளிக்கப் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது என்பதும் நினைவில் கொள்ளத் தக்கது.

எம்.கே.முருகானந்தன்

Read Full Post »