>மனப்பதற்றமும் மாரடைப்பும்
அவருக்கு சென்ற ஒரு வருடத்திற்குள் எத்தனை தடவை ஈ.சீ.ஜி. எடுக்க நேர்ந்திருக்குமோ தெரியாது. கடவுளுக்குத்தான் வெளிச்சம்! சற்று நெஞ்சு வலி இருந்தால் உடனடியாக வைத்தியரிடம் ஓடுவார்.மாரடைப்பா என அறிய; ஈ.சீ.ஜி. எடுத்துப் பார்ப்பார்.
எதுவும் இருக்காது .
நெஞ்சு வலி இருக்க வேண்டும் என்று கூட இல்லை நெஞ்சு நோவாக இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தால் கூட வைத்தியரிடம் ஓடுவார்.
மாறிமாறி வெவ்வேறு டாக்டர்களிடம் ஓடுவார். அவ்வளவு மனப் பதற்றம்! தனக்கு மாரடைப்பாக இருக்குமோ என்று சதா சஞ்சலம்.
இத்தகைய கடுமையான மனப்பதற்றம் (Anxiety) உள்ள நோயாளிகளுக்கு , மாரடைப்பு வருவதற்கு அல்லது அதனால் மரணமடைவதற்கான சாத்தியம் ஏனையவர்களைவிட இரண்டு மடங்கு அதிகம் என அண்மைய ஆய்வு ஒன்று கூறுகின்றது.
இது பற்றிய விபரம் American College of Cardiology யின் மே 22, 2007 இதழில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இருதய நோயுள்ள 516 பேரிடையே மூன்று வருடங்களுக்கு மேல் செய்யப்பட்ட ஆய்வின் முடிவு அது.
இன்னுமொரு முக்கிய விடயமும் இந்த ஆய்வில் தெரிய வந்தது. ஆரம்பத்தில் எந்தளவு மனப்பதற்றம் இருக்கிறது என்பது மட்டுமல்ல, காலப்போக்கில் எந்தளவு கூடுகிறது அல்லது குறைகிறது என்பதும் முக்கியமானது.
ஆரம்பத்தை விட காலப் போக்கில் மனப் பதற்றம் அதிகமானால் மாரடைப்பு வருவதற்கான சாத்தியம் பத்து சதவீதத்தினால் அதிகரிக்கிறது.
மாறாக மனப்பதற்றம் குறைந்தால் மாரடைப்பிற்கான சாத்தியப்பாடு குறைகிறது.
நீங்கள் மனப்பதற்றம் உள்ள இருதய நோயாளி எனில் செய்ய வேண்டியது என்ன?
மாரடைப்பைக் கொண்டுவரக் கூடிய ஏனைய பிரச்சினைகளான புகைத்தல், பிரஸர் , நீரிழிவு, கொலஸ்ட்ரோல் போன்றவை இருந்தால் அவற்றைக் கட்டுப்படுத்துங்கள்.
அத்துடன் மன அமைதியைக் கொண்டுவரக் கூடிய உடற்பயிற்சி, தியானம், யோகாசனம், இறைவழிபாடு போன்றவற்றில் மனதார ஈடுபடுங்கள்.
உங்களுடன் ஆதரவாகவும் புரிந்துணர்வுடனும் பேசக்கூடிய இருதய வைத்திய நிபுணருடன் உங்கள் நோய் பற்றியும் அதனால் ஆபத்துகள் வராமலிருக்க நீங்கள் செய்யக்கூடிய நாளாந்த நடைமுறைகள் பற்றியும் தெளிவாக கலந்துரையாடுங்கள்.
இது நோய் பற்றிய உங்களது தேவையற்ற பயத்தை நீக்கி மன அமைதியை உண்டாக்கி உங்கள் வாழ்க்கையை நீடிக்கும்.
நோய் பற்றிய வீண் பீதியைக் கிளறிவிடும் நண்பர்களையும் உறவினர்களையும் தவிருங்கள்.
” திறமையான கவனிப்புக்கு உள்ளாகும் இருதய நோயாளிகள் மகிழ்வுடன் நீடுழிவாழ முடியும்” என இந்த ஆய்வில் ஈடுபட்ட டாக்டர் சார்ள்ஸ் பிளட் கூறியது உங்களையும் சேர்த்துத்தான். அவர் ஹவாட் மருத்துவக் கல்லூரியின் இருதய நோய் ஆராய்ச்சிப் பிரிவின் தலைவரும் பேராசிரியரும் ஆவார்.
மன அழுத்தத்திற்கும் (Stress) மாரடைப்பிற்கும் தொடர்பு இருப்பதாக அண்மைய ஆய்வுகள் சுட்டுகின்றன. பிரித்தானிய சுகாதார சேவைகளின் NHS இணைய தளத்தில் இந்த வருட ஆரம்பத்தில் வந்த தகவலை படியுங்கள்.
மன அழுததத்தின் போது அதற்கான ஹோர்மோனான கோர்ட்டிசோல் (Cortisol) இரத்தக் குழாய்களில் கொலஸ்டரோல் படிவதை அதிகரிப்பதால் இது நடக்கிறது எனச் சொல்கிறார்கள்.
கடுமையான மன அழுத்தத்தின்போது இருதயத்திற்கு குருதியை வழங்கும் Coronary artery களில் திடீரென தற்காலிக இறுக்கம் ஏற்படுவதால் இரத்த ஓட்டம் தடைப்பட்டு மாரடைப்பு ஏற்படுவதாகக் கருதுவோரும் உண்டு