Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘குதிக்கால் எலும்புத் துருத்தல்’ Category

மூஞ்சையில் இடிக்காதவாறு நீட்டினார் ‘எக்ஸ்ரே’யை

“பாருங்கோ வடிவா! குதிக்காலிலை எலும்பு வளர்ந்திருக்காம். என்ன செய்யிறது? வெட்ட வேணுமே” மூச்சு விட நேரமில்லாமல் பேசினார்.

20140402_110718-001

அவரது குதிக்கால் எலும்பின் கீழ்ப்புறமாக பிசிறுபோல எலும்பு சற்று வளர்ந்திருந்தமை தெரிந்தது.

குதிக்காலில் வலி என ஒரு மருத்துவரிடம் காட்டிய போது அவர் மருந்து மாத்திரைகள் கொடுத்து தசைப் பயிற்சிகளையும் சொல்லிக் கொடுத்துள்ளார். பேச்சோடு பேச்சாக குதிக்கால் எலும்பிலும் சிறுவளர்ச்சி என்று சொன்னதால் வந்த வினை. எக்ஸ்ரே யுடன் மருத்துவர் மருத்துவராக ஓடித் திரிகிறார்.

குதிக்காலின் பிரதான எலும்பு கல்கேனியம் எனப்படுகிறது. உடல் எடையைப் பெருமளவு தாங்கும் எலும்பு என்பதுடன் பாதத்தின் முக்கிய தசைநாரான குதிக்கால் சவ்வு (plantar fascia) இதனுடன் இணைந்துள்ளது. இந்தச் சவ்வு மிகவும் பலமுள்ளதாக இறுக்கமானதாகவும் இருக்கிறது. இச் சவ்வுதான் பாதத்தின் அடிப் பகுதியில் உள்ள வளைவைப் பேண உதவுகிறது. அத்துடன் நடக்கும் போதும் ஓடும்போதும் உடலின் எடையானது பாதத்தில் சமச்சீராக தாங்கப்படுவதற்கும் உதவுகிறது.

இந்த கல்கேனியம் என்ற எலும்பின் கீழ்ப்புறத்தில் கல்சியம் படிவதையே (Heel spurs) குதிக்கால் எலும்புத் துருத்தல் என்பார்கள். அந்த எலும்பின் முற்புறமாக அரை அங்குல நீளம் வரை நீண்டு அது வளர்வதுண்டு.

Heel spur

குதிக்கால் வலியென நோயாளிகள் சொல்லும்போது மருத்துவர்கள் எக்ஸ்ரே படம் எடுத்துப் பார்க்கும் போது இது தெரியவரும். இருந்தபோதும் வேறு காரணங்களுக்காக எக்ஸ்ரே எடுக்கும்போது தான் பெரும்பாலும் இந்த எலும்பு வளர்ச்சி இருப்பது தெரியவருகிறது. இது ஆபத்தான நோயல்ல.

குதிக்கால் எலும்புத் துருத்தலால் அறிகுறிகள் எதுவும் பொதுவாக ஏற்படுவதில்லை. இருந்தபோதும் அவர்களுக்கு குதிக்காலில் வலி இருக்கக் கூடும். நடத்தல், ஓடுதல், துள்ளல் நடை போன்றவற்றின் போது வலி தெரியவரலாம். இருந்தாலும் வலி ஏற்படுவதற்குக் காரணம் குதி எலும்புத் துருத்தல் அல்ல. அருகில் உள்ள குதிக்கால் சவ்வு தசைநாரில் அழற்சி ஏற்படுவதே வலிக்குக் காரணமாக பெரும்பாலும் இருப்பதுண்டு.

காலையில் எழுந்து காலடி வைக்க ஆரம்பிக்கும்போது குதிக்காலில் சுளீரெனக் குத்துவது போல வலிக்கும். அதேபோல சற்று நேரம் ஓய்வாக உட்கார்ந்திருந்துவிட்டு நடக்க ஆரம்பிக்கும்போது அதே விதமாகக் குத்துவது போன்ற வலி ஏற்படும்.

ஆனால் இதே விதமான அறிகுறிகள் குதிக்கால் சவ்வு அழற்சியின் (Planter fascitis) போதும் ஏற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

காலையில் எழுந்திருக்கும் போது குதிக்கால் சவ்வு மிகவும் இறுக்கமாக இருப்பதால் சிறிய அசைவுகள் கூட வேதனையை ஏற்படுத்துகின்றன. ஆயினும் சற்று நடந்த பின்னர் அதன் இறுக்கத்தில் சற்று தளர்ச்சி ஏற்பட ஆரம்பிப்பதால் வேதனை சற்றுக் குறையும். இதனால்தான் காலை எழுந்து நடமாட முன்னர் பாதத்தை தங்கள் கைகளால் மசாஸ் செய்யும்படி குதிக்கால்
வலி உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவர்.

குதிக்கால் சவ்வு அழற்சி மற்றும் குதிக்கால் எலும்புத் துருத்தல் அறிகுறிகள் ஒரேவிதமாக இருப்பதால் பலரும் ஒன்றை ஒன்று குளப்பிக் கொள்வதுண்டு.

இருந்தபோதும் குதிக்கால் சவ்வு அழற்சி உள்ளவர்களில் 70 சதவிகிதமானவர்களுக்கு குதிக்கால் எலும்புத் துருத்தல் இருப்பதைத் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. அதே நேரம் பாதத்தில் எந்த வலிகளும் இல்லாதவர்களில் 70 சத விகிதமானவர்களுக்கு குதிக்கால் எலும்பு துருத்தி இருப்பதும் உண்டு.

குதிக்கால் எலும்புத் துருத்தல் ஏன் ஏற்படுகிறது என்பது தெளிவாகத் தெரியாது. இது திடீரெனத் தோன்றுவதில்லை. படிப்படியாகவே வளர்கிறது. பாதத்தில் உள்ள தசைகளுக்கும் சவ்வுகளுக்கும் வினைப்பளு (Strain) அதிகமாதலால் அவை நீளவாக்கில் இழுபடுகின்றன. இதனால் அவை எலும்பில் பற்றியிருக்கும் மெல்லிய சவ்வுகளில் நுண்ணிய கிழிவுகளை ஏற்படுகிறது.

இவற்றின் தொடர்ச்சியாகவே அவ்விடங்களில் எலும்பு துருத்தி வளர்கிறது என நம்பப் படுகிறது. கடுமையான ஓடுவது துள்ளுவது போன்ற பயிற்சிகளைச் செய்யும் விளையாட்டு வீரர்களில் இதன் காரணமாகவே அதிகளவில் குதி எலும்பு துருத்தல் பிரச்சனை காணப்படுகிறது.

குதி எலும்பு துருத்தி யாரில் அதிகம் ஏற்படுகிறது.
ஏற்கனவே குறிப்பட்டது போன்ற கடுமையான உடற் பயிற்சிகள் செய்பவர்களுக்கு ஏற்பட வாய்ப்புண்டு.
நடையின் இயல்பில் பாதிப்பு உள்ளவர்களுக்கும் அவ்வாறே ஏற்பட வாய்ப்புண்டு. நடையின் இயல்பு என்றால் என்ன? பொதுவாக நாம் நடக்கும்போது இரண்டு பாதங்களிலும் உடற் பாரமானது ஒரே விதமாக விழுமாறு நடக்கிறோம். ஒரு கால் சற்றுக் குட்டையாக அல்லது பாதத்தில் வளைவுகள் சீரற்றோ இருந்தால் ஒரு பாதத்தில் அதிக தாக்கம் ஏற்படும். இது எலும்பு துருத்தலுக்கு காரணமாகலாம்.
அதேபோல ஒரு பக்க முழங்காலில், பாதத்தில், அல்லது தொடையில் வலியிருந்தாலும் நாம் எம்மையறியாது பாரத்தை மற்றக் காலில் அதிகம் பொறுக்க வைப்போம். இதுவும் காரணமாகலாம்.
கடுமையான தரைகளில் ஓடுவது துள்ளல் நடைபோடுவது போன்றவையும் காரணமாகலாம்.
பொருத்தமற்ற காலணிகள் மற்றொரு முக்கிய காரணமாகும். தேய்ந்த காலணிகளும் அவ்வாறு எலும்புத் துருத்தலுக்கு வழிவகுக்கலாம்.
உடல் எடை அதிகமான குண்டு மனிதர்களுக்கும் வாய்ப்பு அதிகமாகும்.
வயது முதிரும்போது குதிக்கால் சவ்வினது நெகிழ்வுத்தன்மை குறைந்து போகிறது. அத்துடன் பாதத்திற்குப் பாதுகாப்பைத் தரும் கொழுப்பின் அளவு குறைந்து போவதும் காரணமாகலாம்.
நீரிழிவு நோயுள்ளவர்களின் பாதத்தின் நரம்புகளும் தசைகளும் பவீனமடைவதாலும் ஏற்பட வாய்ப்புண்டு.
சிலரது பாதங்கள் பிறப்பிலேயே தட்டையாக இருப்பதுண்டு. மாறாக வேறு சிலருக்கு பாதத்தின் வளைவு அதீதமாக இருப்துண்டு. இவர்களுக்கும் குதிக்கால் எலும்புத் துருத்தல் ஏற்படக் கூடும்.

சிகிச்சை

குதிக்கால் சவ்வு அழற்சி மற்றும் குதிக்கால் எலும்பு துருத்தல் இரண்டும் வேறு வேறான நோய்களாக இருந்தபோதும் அவை ஏற்படுவதற்கான காரணங்களும் அவற்றின் அறிகுறிகளும் ஒரே விதமானவைதான்

எனவே சிகிச்சையும் ஒரே மாதிரியானதுதான்.

முக்கியமானது நோய் ஏற்பட்ட பகுதிக்கு சற்று ஓய்வு கொடுப்பதாகும். குதிக்கால் பகுதியில் உள்ள தசைகளுக்கும் சவ்வுகளுக்கும் கடுமையான வேலை கொடுப்பதை சில தினங்களுக்கு தவிர்க்க வேண்டும். இதன் அர்த்தம் படுத்துக் கிடப்பதில்லை. கடுமையான உடற் பயிற்சிகள், அதிக நடை போன்றவற்றைக் குறைக்க வேண்டும்.

வலி அதிகமாக இருந்தால் ஐஸ் பை வைப்பது உதவும்.

அத் தசைநார்களுக்கான சில பயிற்சிகளும் உதவும். இவை பற்றி முன்னர் வீரகேசரியில் வெளிவந்த ஒரு கட்டுரையில் சொல்லியுள்ளேன். ஏற்கனவே

பத்திரிகையில் படிக்காவர்கள் எனது ஹாய் நலமா புளக்கில் காணலாம்.

வலி நிவாரணி மாத்திரைகளும் அழற்சியைத் தணிப்பதன் மூலம் நோயையும் வலியையும் குறைக்கும்.

மிகப் பெரும்பாலனவர்களுக்கு மேற் கூறிய சிசிக்சைகள் மூலம் வலி தணிந்துவிடும்.

மிக அரிதாக குதிக்கால் சவ்வினது இறுகத்தைத் தளர்த்துவதற்கு சிறிய சத்திரசிகிச்சை செய்யப்படுவதுண்டு.

ஆரம்பத்தில் நோயாளி கேட்டது போல துருத்தி வளரும் எலும்பை வெட்டி எறிவது சிகிச்சையின் ஒரு அம்சம் அல்ல.

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

0.0.0

Read Full Post »