Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘வயிற்றோட்டம்’ Category

சுயமருத்துவமா? 

உயிர் ஆபத்தாகலாம். அவதானமாயிருங்கள்

போதையாகும் வயிற்றைக் கட்டுப்படுத்தும் மருந்து

சுயமருத்துவம்

வயிற்றோட்டமா காய்ச்சலா. இருமலா, மூட்டு வலியா எதுவானாலும், எத்தகைய பாரதூரமான நோயானாலும் மருந்துக்கடையில் எவரும் தாமாகவே மருந்து வாங்கி சாப்பிடக் கூடியதாக இருக்கிறது நம் நாட்டில்.

எந்த மருத்துவரின் ஆலோசனையும் தேவையில்லை. அடிப்படை மருத்துவ அறிவு இல்லாத எவரும் கூட தாங்களாகவே தாம் விரும்பிய மருந்துகளை வாங்கிச் சாப்பிடுகிறார்கள். இல்லாவிட்டால் மருந்துக் கடைக்காரர் மருத்துவராக மாறி மருந்துகளைக் தாராளமாக வழங்குகிறார்.

செலவு மிச்சம். மருத்துவரிடம் சென்று காத்திருக்க வேண்டியதில்லை. நேரமும் மிச்சம் என்பதுதான் பலரும் சொல்லும் சாட்டு.

அதனால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றி எவரும் சிந்திப்பதி;லை.

அரசாங்கமானது மருந்து விற்பனை சம்பந்தமாக பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. ஆயினும் அதைப் பற்றி யாருக்குக் கவலை. சட்டங்களைப் புறக்கணித்து மருந்துகள் அமோகமாக விற்பனை ஆகின்றன.

எந்த நகரைப் பார்த்தாலும் சாப்பாட்டு கடைகளுக்கு அடுத்ததாக களை கட்டி நிற்பவை மருந்து கடைகள்தான்.

மேலை நாடுகளில் அவ்வாறில்லை. மருத்துவரின் சிட்டை இன்றி பெரும்பாலான மருந்துகளை வாங்க முடியாது.

ஆனால் அங்கும் கூட ஒளிவு மறைவாக சில மருந்துகளை துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்ற செய்தி எனக்கு ஆச்சரியம் அளித்தது.

வயிற்றோட்டத்தை கட்டுப்படுத்தும் மருந்து

வயிற்றோட்டம் வந்தால் என்ன செய்வீர்கள். பலர் ஓமம் அவித்து குடிப்பார்கள். சிலர் உணவுகளை கட்டுபாடாக உண்பார்கள். சற்று விசயம் தெரிந்தவர்கள் முதல் உதவியாக தயிர் அல்லது யோகட் சாப்பிட்டு பார்ப்பார்கள்.

ஆனால் சற்றுப் படித்த அரை வேக்காடு முட்டாள்கள் என்ன செய்வார்கள்?

மருந்துக் கடைக்கு ஓடிச் சென்று வயிற்றோட்டத்தை கட்டுப்படுத்தும் மருந்தை வாங்கிப் பார்ப்பார்கள். Loperamide என்ற மருந்து மருந்துக் கடைகளில் கிடைக்கிறது. பல வியாபாரப் பெயர்களில் கிடைக்கிறது.

இந்த மருந்து என்ன செய்யும்.

அடிக்கடி வயிற்றால் போவதை உடனடியாகக் கட்டுப்படுத்தும்.

இதை எவ்வாறு செய்கிறது?

உணவுக் கால்வாயின் செயற்பாட்டை- அதன் தொடர் அசைவியக்கத்தை குறைக்கிறது. உணவுக் கால்வாயிலிருந்து அதிகமாக நீரை உறிஞ்சி எடுக்கச் செய்கிறது. இவை காரணமாக மலம் அடிக்கடி கழிவது குறையும். அத்துடன் மேலதிகமாக நீர் உறிஞ்சப்படுபதால் மலம் இறுக்கமாகவும் மாறும்

ஆனால் வயிற்றோட்ட நோய்க்கான அடிப்படைக் காரணத்தை இம் மருந்து குணப்படுத்துவதில்லை. உதாரணமாக உணவு மாசடைதல் காரணமான கிருமித்தொற்றால் வயிற்றோட்டம் ஏற்பட்டிருந்தால் அதை குணப்படுத்தாது.

இருந்தபோதும் பிரயாணம் பண்ணும்போது அல்லது ஏதாவது நிகழ்வுகளில் கலந்து கொள்ளும்போது வயிற்றோட்டம் இடைஞ்சல் கொடுக்காது தற்காலிகமாகத் தடுக்க இம் மருந்துகள் உதவுகின்றன.

வயிற்றோட்டத்தை கட்டுப்படுத்தும் மருந்தால் மரணங்கள்

அமெரிக்காவில் திடீரென இறந்த ஒரு 24 வயது இளைஞனின் குருதியை பரிசீலித்தபோது அதில் லொபரமைட் மருந்தின் அளவானது அதிகமாக இருந்தது. சாதாரணமாக இம் மருந்தை எடுக்கும் போது இருக்கக் கூடிய குருதிச் செறிவை விட 25 மடங்கு அதிகமாக இருந்தது.

அதேபோல 39 வயதான ஒருவர் வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும்போது அவர் மரணித்துவிட்டார். இவரது குருதியிலும் லொபரமைட் மருந்தின் அளவானது அதிகமாக இருந்தமை கண்டறியப்பட்டது.

அவர்கள் இருவருமே போதைப் பொருள் பாவனையாளர்கள். போதைப் பொருளை நிறுத்தும்போது ஏற்படும் பக்கவிளைவுகளை சமாளிக்க இந்த வயிற்றோட்டத்தைக் கட்டுப்படுத்தும் மருந்தை உட்கொண்டார்கள். மிக அதிகமாக உட்கொண்டதால் மரணம் சம்பவித்தது.

லொபரமைட் மருந்தானது Heroin,  morphine போன்ற போதைப் பொருட்களை நிறுத்தும் போது ஏற்படும் உடல் உள உபாதைகளைச் சமாளிப்பதற்கு பயன்படுத்தும் Methadone- buprenorphine மருந்தை ஒத்தது. ஆனால் இதுவும் கூட குறைந்தளவான தாக்கத்தையுடைய போதைப் பொருளையாகும். சுருங்கச் சொன்னால் Methadone, Loperamide  யாவுமே குறைந்த வீச்சினாலான போதைப் பொருற்களே.

இவற்றை துஸ்பிரயோகம் செய்பவர்கள் ஒன்றில் இதைப் போதைப் பொருளாக பயன்படுத்த முயல்வர். அல்லது ஏற்கனவே உபயோகிக்கும் போதைப் பொருளை நிறுத்தும்போது ஏற்படும் அசௌகரியங்களை சமாளிக்க உட்கொள்கிறார்கள். எதற்காக உபயோகித்தாலும் வயிற்றோட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு உபயோகிக்கும் சாதாரண அளவை விட பல மடங்கு உபயோகிக்க நேர்வதால்தான் ஆபத்தாகிறது.

வயிற்றோட்டத்தின் போது இம் மருந்தை ஒரு நாளுக்கு 3 அல்லது 4 மாத்திரைகளுக்கு மேற்பட உபயோகிப்பதில்லை. ஆனால் போதைப் பாவனையாளர்கள் தங்கள் இடைஞ்சல்களைச் சமாளிக்க 100 மாத்திரைகளை உட்கொள்வதும் உண்டு. நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து உயோகிப்பதாலும் அதிகளவு மாத்திரைகளை உட்கொள்வதாலுமேயே பாரதூரமான பின் விளைவுகள் ஏற்படுகின்றன.

சுவாசம் குறைவதும், இருதயத் துடிப்பு ஒழுங்கீனம் அடைவதுமே மரணங்களுக்கு காரணமாயின். அத்துடன் மூளை வீக்கம், சிறுநீர் பிரியாமை, இருதய வீக்கம், கால் நாளங்களில் குருதி உறைதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டதும் அவதானிக்கப்பட்டது.

இவை லொபரமைட் மருந்தை மிக அதிக அளவில் உட்கொண்டதால் ஏற்படும் பக்க விளைவுகளாகும்.

லோபரமைட் மருந்தை துஸ்பிரயோகம் செய்வது பற்றிய அறிக்கைகள் மேலை நாடுகளிலேயே தெரிய வந்துள்ளது. இன்னமும் இலங்கையில் அறியப்படவில்லை.

லோபரமைட் மருந்து மட்டுமல்ல வேறு பல மருந்துகளும் கூட வேண்டாததும் ஆபத்தானதுமான பின்விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

எந்த மருந்தையும் மருத்துவ ஆலோசனையின்றி உட்கொள்ளக் கூடாது.

மருத்துவர் சிபார்சு செய்த மருந்தின் அளவை மீறி அதிகம் போடக் கூடாது. இவற்றை கடைப்பித்தால் ஆபத்து உங்களை நெருங்காது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (Col)

குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. யாரைப் பார்த்தாலும் வருத்தம் என்கிறார்கள். திடீரென ஏற்பட்ட சீதோசன மாற்றங்கள் காரணம் என்பதில் ஐயமில்லை. கடலோடு மீனவர்கள் காணமல் போவது மட்டுமின்றி தரையிலும் பலரையும் படுக்கையில் கிடத்துகிறது. ஒரு சிலர் பாடையில் போகவும் நேராமலிருக்க அவதானமாக இருப்போம்.

images215412_crowded-hospital

இந்த காலநிலை மாற்றங்களால் தற்போது கொழு்ம்பு மற்றும் தென்பகுதிகளில் பரவும் நோய்கள் பல வகைப்படும்

  • தினமும் ஒரு சில மாணவர்களாவது பாடசாலையிலிருந்து வாந்தி காய்ச்சலுடன் நேரடியாக வருகிறார்கள். வயதானவர்களையும் விட்டு வைக்கவில்லை.
  •  வேறு சிலர் கடுமையான காய்ச்சலுடன் தடிமன், இருமல் என வருகிறார்கள்.
  •  103-104 எனக் கடுமையாக ஏறிக் காயும் காய்ச்சலுடன் தாங்க முடியாத உடல் வலியுடன் இன்னமும் சிலர் வருகிறார்கள்.

வாந்தி பேதி போன்றது முதலாவது, சாதாரண தடிமன் காய்ச்சலுடன் இன்புளுவன்சா வகையானது இரண்டாவது. மூன்றாவது மிகவும் கலங்க வைக்கும் டெங்கு.

வாந்தி காய்ச்சல் வயிற்றோட்டம்

திடீரென ஏற்படும் வயிற்றுக் குமைச்சலுடன் வாந்தி பலரையும் அல்லலுற வைக்கிறது. ஒரு சில மணி நேரத்திற்குள் பல தடவைகள் வாந்தி எடுத்துவிடுவார்கள். காய்ச்சல் வரும். வயிற்றோட்டமும் தொடரும். கடும் நாற்றத்துடன் வெறும் நீர்போலப் பீச்சியடிக்கும். வேகமாகத் தொற்றும். ஒரே குடும்பத்தில் ஐந்து பேரும் தொடர்ந்து பாதிக்கப்படட்தை காணக் கூடியதாக இருந்தது.

Vomiting child

வயிற்றோட்டமும் வாந்தியும் கடுமையாக இருந்தால் நாக்கு உலரந்து வரட்சியும் தாகமும் ஏற்படும். ஆயினும் வாந்தியும் ஓங்காளமும் நீராகாரம் அருந்துவதை வேண்டாமென வெறுக்க வைக்;கும். இது தொடர்ந்து நீரிழப்பு நிலை ஏற்பட்டால் நாளம் ஊடாக சேலைன் போன்ற திரவங்களை ஏற்றவும் நேரலாம்.

இக் காச்சலில் முக்கியமாக அவதானிக்க வேண்டியது நோயாளியின் உடலில் நீர்த்தன்மை குறைந்து நீரிழப்பு நிலை ஏற்படுவதைத் தடுப்பதும் போசாக்கு நலிவுறாமல் காப்பதும்தான். வெளியேறும் நீரை மீளக் கொடுக்க வேண்டும்.

எனவே வாந்தியை நிறுத்துவது அவசியம். மாத்திரைகளும் வாந்தியுடன் வெளியேறிவிடலாம் என்பதால் மலவாசலூடாக உட்செலுத்தும் மாத்திரைகளை (Suppository) வைப்பதுண்டு. வாந்தி கடுமையாக இல்லாதவிடத்து மாத்திரைகளாகவும் உட்கொள்ளலாம்.

காய்ச்சலுக்கு பரசிற்றமோல் மருந்தை வயதுக்கு ஏற்ப கொடுக்க வேண்டும். பொதுவாக இது வைரஸ் கிருமிகளால் ஏற்படுவதால் நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் (Antibiotics) தேவைப்படாது. ஆயினும் ஒரு சிலரில் பக்றீரியா தொற்றினால் ஏற்பட்டதென மருத்துவர் கருதினால் அதற்கேற்ற அன்ரிபயோடிக் தரக் கூடும்.

மீளநீருட்டும் பானம் பக்கற்றுகளில் பவுடராக ORS- Oral rehydration solutuin) கிடைக்கிறது. இலங்கையில் ஜீவனி என்பது பெயர் போனது. வேறு வர்த்தகப் பெயர்களிலும் கிடைக்கிறது. அவற்றை வாங்கிக் கரைத்துக் குடிப்பது நல்லது. இளநீர், தோடம்பழச் சாறு, எலுமிச்சைப் பழச் சாறு, கஞ்சி போன்றவற்றையும் அருந்தலாம்.

ORS-Pack

தயிர் அல்லது யோகர்ட் சாப்பிடுவது ஒரு விதத்தில் இது மருந்தாகவும் அமையும். ஏனெனில் இவற்றில் Lactobacillus acidophilus  மற்றும்

Bifidobacterium bifidum ஆகிய கிருமிகள் உள்ளன. இவை வயிற்றோட்டத்தை ஏற்படுத்தும் வைரஸ் கிருமிகளை அழித்து உணவுக் கால்வாயின் இயற்கையான நுண்ணுயிர் சூழலை மீள ஏற்படுத்த உதவும். பொதுவாக வயிற்றோட்டத்தின் போது பால் சிபார்சு செய்யப்படுவதில்லை.

CIC Curd

வாழைப்பழம் நல்ல உணவு. இதற்குக் காரணம் அதிலுள்ள பொட்டாசியச் செறிவும், பெக்டின் மற்றும் இனியுலின் ஆகிய கரையக் கூடிய நார்ப்பொருட்களுமாகும். வயிற்றோட்டத்தின் போது நீர் மட்டுமின்றி பல தாதுப்பொருட்களும் வெளியேறுகின்றன. பொட்டாசியம் உட்பட பல மின் அயனிகள் (electrolytes) வெளியேறுகின்றன.

banana

வாழைப்பழம் சாப்பிடுவதால் இழக்கப்படும் பொட்டாசியம் சத்தை மீளப் பெறலாம். பெக்டின் (pectin) ஆனது கரையக் கூடிய நார்ப்பொருள் ஆதலால் மலத்துடன் வெளியேறும் நீரை உறிஞ்சும். இதனால் மலம் வெறும் நீராக அன்றி சற்று தடிப்பாகவும் சுமுகமாகவும் வெளியேற உதவும்.

இனியுலின் என்பது மற்றொரு கரையக் கூடிய நார்ப்பொருளாகும். அத்துடன் அது ஒரு பிரிபயோடிக் (Prebiotic) ஆகும். அதாவது முன்நிலை நுண்ணுயிர் கொல்லி எனலாம். இதுவும் நோயை ஏற்படுத்தும் கிருமியை மேவி வளர்ந்து உணவுக் கால்வாயில் நல்ல கிருமிகள் வளர உதவுவதன் மூலம் வயிற்றோட்டத்தைக் கட்டுப்படுத்த உதவும்.

அப்பிளிலும் இதே பெக்டின் உள்ளது. ஆயினும் வயிற்றோட்டத்தின் போது முழுமையான பழமாக ஆப்பிளை சாப்பிடும்போது சமிபாடு அடைவதில் சற்று சிரமம் ஏற்படலாம் என்பதால் அவித்துக் கொடுப்பது நல்லது.

வயிற்றோட்டம் இருந்த போதும் சாப்பிட முடிந்தால் வழமைபோல உண்பது நல்லது. கடுமையான எண்ணெய் கலந்த உணவுகளைத் தவிர்த்து வழமைபோல உண்ணலாம். ‘வயிறோட்டம் வந்தால் சாப்பிடக் கூடாது வயிற்றைக் காயப் போட வேண்டும்’ எனப்படும் பாட்டி வைத்தியங்கள் இன்றைய அறிவியல் யுகத்தில் அர்த்தமற்ற செயலாகும்.

ஒரு சிலரில் எந்தவித மருத்துவமும் இன்றித் தானாகவே குறைந்துவிடுவதும் உண்டு.

இன்புளுவன்சா வகைக் காய்ச்சல் (Influenza like Illness- ILI)

சாதாரண தடிமன் காய்ச்சல் பெருமளவு அண்மையில் காணப்படுகிறது. அது ஆபத்தற்றது.

sf_05sneeze

ஆனால் தடிமன் தும்மல் மூக்கால் வடிவது, இருமல் போன்ற அறிகுறிகளுடன் கடும் காய்ச்சல் வரும் மற்றொரு தொற்றுநோய் காணப்படுகிறது. இது ஒரு வகை சுவாசத் தொகுதி தொற்று நோய். இதன் கடுமையான வடிவம் ஒரு சில உயிர்களை முக்கியமாக கர்ப்பணித் தாய்மாரை பலி கொண்டதாக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

sf_07sick

இன்புளுவன்சா ஏ. பீ வகை கிருமிகளால் (influenza A and B)   பரவிய நோய் மே மாதம் அளவில் ஆரம்பித்து, சில மரணங்கள் காரணமாக மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பியது. கடுமையான காச்சலைத் தொடரும் விடாத இருமல் இதன் முக்கிய அறிகுறியாகும். தலைப்பாரம், தொண்டை வலி, உடலுழைவும் இருக்கும். ஓங்காளம், வாந்தி, வயிற்றோட்டம் ஆகியவையும் இருக்கலாம்.

கர்ப்பணிப் பெண்களில் ஆபத்தைக் கொண்டு வந்தது. கர்பணிகளில் மட்டுமின்றி 65 வயதிற்கு மேற்பட்ட வயோதிபர்கள், இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், நோயெதிர்புச் சக்தி குறைந்தவர்களில் ஆபத்தானது. ஆயினும் ஏனைய ஆரோக்கியமானவர்களில் மரணம் போன்ற ஆபத்தான விளைவுகளைக் கொண்டு வருவதில்லை. சென்ற வருடம் பரவிய பன்றிக் காய்ச்சலும்  (H1N1) இதே போன்றது, ஆயினும் அது சற்று ஆபத்தானது.

காய்ச்சல் சளி அறிகுறிகளைக் கண்ட உடனேயே மருத்துமனைகளை நோக்கிப் படையெடுக்க வேண்டியதில்லை. நோயின் தீவிரம் அதிகமாக இருந்தால் அல்லது மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவரைக் காண்பது அவசியம்.

Doctor holding inhaler mask for kid girl breathing

இருந்தபோதும் மூச்சுத் திணறல், இளைப்பு, நெஞ்சு இறுக்கம்,  தலைச் சுற்று, மயக்கம் போன்ற கடுமையான அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை உடனே காண வேண்டும்.

இருமும்போதும் தும்மும் போதும் காற்றில் பறக்கும் எச்சில் துகள்கள் மூலமே மற்றவர்களுக்கு பரவும். தும்மும்போதும், இருமும் போதும் கைக்குட்டை அல்லது ரிசூவினால் மூக்கையும் வாயையும் பொத்திக் கொள்ளுவது அவசியம். உபயோகித்த ரிசூவை உடனடியாகவே குப்பை கூடையில் இட்டு அகற்றவும். கைக் குட்டையை துவைக்கவும்.

மூக்குச் சிந்தினால் அதைத் தொட்ட கையை உடனடியாகக் கழுவ வேண்டும். இல்லையேல் அதே கையால் மேசை, கதிரை, கதவுக் கைபிடி போன்ற எதைத்  தொட்டாலும் அதன் மூலம் மற்றவர்களுக்கும் பரவும்.

சனநெருக்கடியுள்ள இடங்களான பஸ், புகையிரதம், வகுப்பறை, தொழில்கூடம், கடைகள் போன்றவற்றில் நடமாடும் போது அவதானமாக இருங்கள். ஏனெனில் நோயுள்ள ஒருவர் தும்மினால் அந்தக் குறுகிய இடத்தில் உள்ள பலருக்கும் நோய் தொற்றலாம்.

பெரும் ஆபத்தற்றது என்ற போதும், அதிக தாக்கத்திற்கு ஆட்படக் கூடியவர்களான கரப்பணிகள், இரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், 65 வயதிற்கு மேற்பட்ட வயோதிபர்கள் மற்றும் நோயெதிர்புச் சக்தி குறைந்தவர்கள் அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவர்களை அணுகுவது அவசியம்.

டெங்கு

எந்தக் காய்ச்சல் வந்தாலும் பிள்ளைக்கு டெங்குவாக இருக்குமோ என பயந்தடித்து ஓடி வரும் பெற்றோர் அதிகம். அதில் எந்தத் தவறும் இல்லை.

ஏனெனில் எத்தனையோ பிஞ்சுகளை உதிர வைத்துவிட்ட ஆபத்தான நோய்.

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்ன எனப் பலரும் கேட்பதுண்டு. ஏனைய காய்சலைப் போன்றதே. 103-105 எனக் கடுமையாக ஏறிக் காயும் காய்ச்சல் பொறுக்க முடியாத உடல் மற்றும் மூட்டு வலிகளுடன் வந்தால் டெங்கு எனச் சந்தேகப்படலாம். பொதுவாக டெங்கு காய்ச்சலுக்கு தடிமன், இருமல் தும்மல் வயிற்றோட்டம் போன்ற வேறு அறிகுறிகள் சேர்ந்திருப்பதில்லை.

Dengue_Fever_symptoms

ஆயினும் இத்தகைய காய்ச்சல்கள் அனைத்தும் டெங்கு இல்லை. முதல் நாளில் டெங்கு அன்ரிஜென் பரிசோதனை செய்தால் அது பொசிட்டிவாக இருக்கும். ஆனால் அதற்கான வசதி எல்லா இடங்களிலும் இருக்காது.

ஒரு வேளை டெங்கு அன்ரிஜென் பொசிட்டிவாக இருந்தால் கூட அது ஆபத்தாக இருக்க வேண்டும் என்றில்லை.

ஏனெனில் டெங்கு காய்சலில் பல வகைகள் உள்ள.

  • டெங்கு கிருமி தொற்றி காய்ச்சல் வருபவர்களில் 50 சதவிகிதமானவர்களுக்கு அது ஏனைய சாதாரண வைரஸ் காய்ச்சல் போல வந்து எந்தவித சிகிச்சைகளும் இன்றி தானாகவே மாறிவிடும்.
  • மிகுதியில் 40 சதவிகிதமானவர்களுக்கு டெங்குக் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வெளிப்படும்.
  • 10 சதவிகிதமானவர்களுக்கு மட்டுமே டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் வருவதாக தரவுகள் கூறுகின்றன.
  • குருதிப் பெருக்குக் காய்ச்சல் வந்த 10 சதவிகிதமானவர்களில் கூட 98 சதவிகிதமானவர்கள் ஆபத்தான கட்டத்தை அடைய மாட்டார்கள்.  குணமாகிவிடுவார்கள்.
  • மிகுதி 2 சதவிகிதமானவர்கள் மட்டுமே மிக ஆபத்தான அதிர்ச்சி நிலையை அடைவர்.

மிகக் குறைவான இந்த 2 சதவிகிதமானவர்களை ஆரம்ப நிலையிலேயே இனங் காண்பதிலும் அவர்களுக்கு மருத்துவ மனையில் வைத்து மிகக் கவனமான முறையில் சிகிச்சை அளிப்பதன் மூலமே ஆபத்தான டெங்கு நோயாளிகளைக் காப்பாற்றவும் இறப்பு விகிதத்தைக் குறைக்கவும் முடியும். ஆயினும் இது மருத்துவர்களாலேயே முடியும்.

வழமைக்கு மாறான கடுமையான காய்ச்சலாக இருந்தால் முதல் நாளே மருத்துவரிடம் காட்டுங்கள். அவர் சில வேளை இரத்தப் பரிசோதனை செய்யக் கூடும். அயினும் மீண்டும் 4ம் நாள் அளவில் மீண்டும் செய்யக் கூடும்.

டெங்குவாக இருக்கும் என்ற சந்தேகம் இருந்தால் பரசிட்டமோல் தவிர வேறு எந்த மருந்தையும் கொடுக்காதீர்கள்.

இப்பொழுது மழை பெய்கிறது. மழை குறையும் போது தேங்கி நிற்கும் நீர்களிலிருந்து நுளம்பு பெருகி டெங்கு வேகமாகப் பரவக் கூடும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

எனது ஹாய நலமா புளக்கில் ஜீலை 2, 2013ல் வெளியான கட்டுரை

0..0..0

Read Full Post »

வயிற்றோட்டம், வயிற்றுழைவு
நீராகாரமும் உணவு கொடுத்தலும்

நீரிழப்பு நிலையை அடைந்திருந்த குழந்தை அது. கண்கள் குழிவிழுந்திருந்தன. நாக்கு வரண்டிருந்தது. தாகம் அதிகமாக இருந்தாலும் வாந்தியால் நீர் அருந்த முடியாது தவித்தது. நீண்ட காலத்திற்குப் பின்னர் அன்றுதான்; வயிற்றோட்டத்தால் ஒரு குழந்தைக்கு சேலைன் ஏற்ற வேண்டிய நிலை எனக்கு வந்தது. இப்பொழுதெல்லாம் இவ்வாறான நிலையில் குழந்தைகளைக் காண்பது அரிதாகிவிட்டது.

Dedyrated child

நினைவுகளை பின்நோக்கி நகர்த்தியபோது நான் மருத்துவனாகப் பணியாற்ற ஆரம்பித்த காலங்களில் குழந்தைகள் வார்ட்டுகள் யாவும் வயிற்றோட்ட நோயாளிகளால் (Diarrhoea) நிரம்பி வழியும். சில மருத்துவமனைகளில் வயிற்றோட்டத்திற்கு என்றே தனியாக வார்ட்டுகளை விசேடமாக அமைத்திருப்பார்கள்.

dehydration

வயிற்றோட்ட நோய் அந்த அளவிற்கு அக்காலத்தில் பரவலாக இருந்தது. நோயின் தீவிரமும் அதனால் குழந்தைகள் மரணிப்பதும் திகில் ஊட்டும்.
இன்று அவ்வாறான நிலை ஏன் இல்லை. இதற்கு சில காரணங்களைச் சொல்லலாம்.

  • சுத்தமான நீர் கிடைக்கிறது. கிராமப் புறங்களில் கூட மலசல கூடங்கள் வந்துவிட்டன. வெளியிடங்களில் மலங்கழிப்பது குறைந்து விட்டது. இதனால் நீர் மாசடைவது குறைந்து சுத்தமான நீர் குடிக்கக் கிடைக்கிறது. அவ்வாறு இல்லாவிட்டாலும் நீரைக் கட்டாயம் கொதிக்க வைத்துக் குடிக்க வேண்டும் என்பதைப் பெரும்பாலானோர் கடைப்பிடிக்கிறார்கள்.
  • ஜீவனி பரவலாக எங்கும் கிடைக்கிறது. ஜீவனி இல்லாவிட்டாலும் அதை ஒத்த மீள நீரூட்டும் பானம் தயாரிப்பதற்கான (Oral Rehydration Solution ORS) பவுடர்கள் வௌ;வேறு பெயர்களில் குட்டிக் கடைகளிலும் கிடைக்கிறது. வயிற்றோட்ட நோய் வந்தால் குழந்தையை நீரிழப்பு நிலைக்கு விட்டுவிடக் கூடாது. அவற்றைக் கரைத்துக் கொடுக்க வேண்டும் என்ற அறிவு எங்கும் பரந்திருக்கிறது.
  • அன்ரிபயோடிக் மருந்துகளை (Antibiotic) சாதாரண வயிற்றோட்டங்களுக்கு கொடுப்பதேயில்லை. காரணம் இத்தகைய வயிற்றோட்டங்கள் வைரஸ் கிருமிகளாலேயே ஏற்படுகிறது. இவற்றைக் குணப்படுத்த அத்தகைய மருந்துகள் தேவையில்லை. அத்துடன அவசியமற்ற அன்ரிபயோடிக் சாதாரண வயிற்றோட்டத்தை அதிகரிக்கவே செய்யும். இதனை மருத்துவர்கள் நோயாளிகளுக்கு அறிவுறுத்துகிறார்கள்.

இருந்தபோதும் இலங்கையில் வயிற்றோட்ட நோய் இன்னமும் முற்றாக மறைந்துவிடவில்லை. உலகளாவிய ரீதியில் 1.6 மில்லியன் இறப்புகள் இந்நோயால் மட்டும் 2002 ல் நிகழ்ந்திருக்கி;ன்றன. அதே வேளை இரண்டு பில்லியன் பேர் வருடாந்தம் இதனால் பீடிக்கப்படுகிறார்கள். போஷாக்குக் குறைந்த பிள்ளைகள் இதனால் பீடிக்கப்படுவதும் மரணமுறுவதும் அதிகமாக இருக்கிறது.

புதிய மாற்றங்கள்

ஆரம்ப காலத்தில் (1970 களில்) உபயோகித்த மீள நீரூட்டும் பானங்கள் சற்று செறிவு அதிகமாயிருந்து. இதனால் வயிற்றோட்டம் காரணமான நீரிழப்பைத் தடுக்கக் கூடியதாக இருந்தாலும் வாந்தி தொடர்ந்து கொண்டிருந்தது. பல ஆய்வுகளையும் கருத்தில்கொண்டு சற்று செறிவு குறைந்த பானத்தை உலக சுகாதார ஸ்தாபனம் சிபார்சு செய்தது. அதுவே இப்பொழுது பல வருடங்காக பாவனையில் உள்ளது. இது நீரிழப்பைத் தவிர்ப்பது மட்டுமின்றி குழந்தைகளில் வாந்தி ஏற்படுவதையும் குறைக்கிறது.

மீள நீரூட்டும் பானங்கள் பரவலாக உபயோகிக்கப்படுவதால் வயிற்றோட்டம் உள்ள குழந்தைகளை மருத்துவ மனைகளில் அனுமதிக்க வேண்டிய நிலை பெரும்பாலும் ஏற்படுவதில்லை. பெரும்பாலான மருத்துவமனைகளில் குழந்தைகளை வெளிநோயாளர் பிரிவுகளில் வைத்து நீரிழப்பு நிலையைச் சரிசெய்த பின்னர் வேண்டிய அறிவுறுத்தல்களுடன் வீட்டில் வைத்துப் பராமரிக்க விடுகிறார்கள். நீரிழப்பை பெரும்பாலும் மீள நீரூட்டும் பானங்களால் சரிசெய்துவிட முடிகிறது. மிகச் சில தருணங்களிலேயே நாளங்களுடாக சேலைன் ஏற்ற நேர்கிறது.

நாகம் (Zinc Suppliment) கொடுப்பது

வயிற்றோட்டத்தின் போது நாகம் (Zinc Suppliment) கொடுப்பதால் நோயின் தீவிரத்தைத் தணிக்கலாம் என்ற புதிய ஆய்வு முடிவும் மாற்றங்களுக்கான காரணங்களில் ஒன்றாகும்.

Zinc-poster-layers2

Zinc யை மருந்தாக வயிற்றோட்டத்தின் போது கொடுப்பதால் தீவிரம் குறைவது மட்டுமின்றி அது குறைந்த நாட்களிலேயே சுகமாகிவிடும். 14 நாட்களுக்கு தொடர்ந்து கொடுப்பதால் அடுத்த 2 முதல் 3 மாதகாலத்திற்குள் நோய் மீண்டும் வருவதற்கான சாத்தியத்தையும் குறைக்கும் என ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியது. கடைப்பிடித்தாலும் நோயின் தாக்கம் குறைந்தது.

உணவு

போதிய நீராகாரம் கொடுப்பதுடன் நிற்காது உணவுகளையும் தொடர்ந்து கொடுக்க வேண்டும். வாந்தியால் உணவு உண்ண முடியாத தருணங்களில் போதிய நீராகாரம் கொடுக்க வேண்டும். உண்ண முடிந்ததும் வழமையான உணவுகளைக் கொடுக்கலாம். இலகுவில் சமிபாடடையக் கூடிய மோல்ட், கஞ்சி போன்றவற்றுடன் ஆரம்பிக்கலாம்.

dd522

போதிய நீராகாரம் கொடுப்பதுடன் நிற்காது உணவுகளையும் தொடர்ந்து கொடுக்க ஆரம்பித்தார்கள். வயிற்றோட்டம் வந்தால் வயிற்றைக் காயப்போட வேண்டும் என்ற தவறான கருத்திற்கு நிரந்தர விடை கொடுக்கப்பட்டது. வாந்தியால் உணவு உண்ண முடியாத தருணங்களில் போசாக்குள்ள நீராகாரம் கொடுக்கப்பட்டது. உண்ண முடிந்ததும் வழமையான உணவுகளைக் கொடுக்கப்படது. இலகுவில் சமிபாடடையக் கூடிய மோல்ட், கஞ்சி போன்றவற்றைக் கொடுத்தார்கள்.

p076b

இவற்றால் வயிற்றோட்டத்தால் ஏற்பட்ட மரணங்கள் குறைந்தன. இருந்தபோதும் இலங்கையில் வயிற்றோட்ட நோய் இன்னமும் முற்றாக மறைந்துவிடவில்லை. உலகளாவிய ரீதியில் 1.6 மில்லியன் இறப்புகள் இந்நோயால் மட்டும் 2002 ல் நிகழ்ந்திருக்கின்றன. அதே வேளை இரண்டு பில்லியன் பேர் வருடாந்தம் இதனால் பீடிக்கப்படுகிறார்கள். போஷாக்குக் குறைந்த பிள்ளைகள் இதனால் பீடிக்கப்படுவதும் மரணமுறுவதும் அதிகமாக இருக்கிறது.

வயிற்றோட்டம் என்றால் என்ன?

ஒரு நாளுக்கு மூன்று தடவைகளுக்கு மேல் தண்ணீர்போலவோ அல்லது இளக்கமாக மலம் வெளியேறுவதையே வயிற்றோட்டம் என்று மருத்துவத்தில் சொல்கிறார்கள்.

dd038

பக்றீரியா, பங்கஸ், அல்லது ஒட்டுண்ணிக் கிருமிகள் உணவுக் கால்வாயில் தொற்றுவதாலேயே இது ஏற்படுகிறது.

பெரும்பாலும் ரொட்டோ வைரஸ் தொற்றுவதாலேயே ஏற்படுகிறது. குழந்தைகளில் இது அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. இப்பொழுது இதற்கு எதிரான தடுப்பு மருந்து குழந்தைகளுக்குக் கொடுக்கப்படுகிறது. இலங்கையிலும் கிடைக்கிறது.

மாசடைந்த உணவுகள் மூலம் பக்றீரியா மற்றும் ஒட்டுண்ணிக் கிருமிகள் தொற்றுவதாலும் ஏற்படுகிறது.

காலத்திற்கு காலம் இதனால் பாதிக்கப்படாத மனிதர்களே இருக்க முடியாது.

இருந்தபோதும் சிகிச்சையின்றியே குணமாகக் கூடியது. பெரியவர்களில் பொதுவாக 2-4 நாட்களுக்குள் தானாகவே குணமாகிவிடும். குழந்தைகளில் சற்று அதிக காலம் 5-7 நாட்கள் எடுக்கலாம். சற்றுக் காலம் எடுத்தாலும் கவலைப்பட வேண்டிய நோயில்லை. ஆனால் மேற் கூறியதுபோல நீரிழப்பு நிலை ஏற்படாமல் காப்பது அவசியம்.

வேறு வகைகள்

மேற்கூறிய வைரஸ் கிருமியால் ஏற்படும் வழமையான வயிற்றோட்டம் தவிர வேறு பல வயிற்றோட்டங்களும் உள்ளன.

வயிற்றுழைவு சற்று வித்தியாசமானது. இதை dysentery என்பார்கள். இதன்போது மலம் பொதுவாக தண்ணீர்த்தன்மையாக அதிகளவில் வெளியேறுவதில்லை. குறைந்த அளவில் ஆனால் அடிக்கடி வயிற்றை முறுக்கிக் கொண்டு இரத்தம் அல்லது சளி கலந்து போகும். இது பெரும்பாலும்

Escherichia coli (E. coli), salmonella and shigella போன்ற பக்றீரியா கிருமிகளால் தொற்றும்.

இதில் சல்மனா பக்றீரியா தொற்று முக்கியமானது. காய்ச்சல், தலையிடி, ஓங்காளம், வாந்தி, வயிற்று வலி போனற்வற்றுடன் வயிற்றோட்டம் ஏற்படும். கோழியிறைச்சி, முடடை, ஏனைய இறைச்சி வகைகள், சில வேளைகளில் சொக்கலேட் மூலமும் பரவுவதுண்டு.

கொலாரா. ஒரு காலத்தில் கடுமையான பீதியைக் கிழப்பிய கொலாரா இப்பொழுது எமது நாட்டில் காணப்படுவதில்லை. ஆயினும் வேறு நாடுகளில் இன்னமும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

Vibrio cholerae என்ற பக்றீரியாவில் பரவும். வயிற்று வலியுடன் வாந்தியும் கடுமையான வயிற்றோட்டம் இதன் அறிகுறியாகும். மிக வேகமாகப் பரவி சமூகத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். கடுமையான நீரிழப்பு நிலையாலேயே இறப்புகள் அதிகம் ஏற்படும்.

நாட்பட்ட வயிற்றோட்டங்கள்

பெரும்பாலான வயிற்றோட்டங்கள் சில நாட்களில் குணமாகும். என்றாலும் வேறு நோய்களின் அறிகுறியாக வெளிப்படும் வயிற்றோட்டங்கள் நீண்ட நாட்களுக்குத் தொடரும்.

உதாரணமாக எரிச்சலடையும் குடல் irritable bowel syndrome, Crohn’s disease,  lactose intolerance, Ulcerative colitis போன்ற பலவும் அடங்கும்.
இவற்றைத் தவிர நீரிழிவு, உணவுக் கால்வாய் புற்றுநோய்கள் போன்றவையும் வயிற்றோட்டங்களை ஏற்படுத்தலாம்.

இத்தகைய தீவிர நோய்களால் மட்டுமின்றி பதகளிப்பு மனப் பதற்றம் போன்ற உளவியல் காரணங்களாலும் பலருக்கு வயிற்றோட்டம் ஏற்படுவதுண்டு. காலையில் வேலைக்கு அல்லது பாடசாலைக்கு புறப்படத் தயாராகும்போது அடிக்கடி டொயிலட் செல்வர்களும் இதில் அடங்குவர்.

அதீத மதுபானம், அதிகமாக கோப்பி அருந்துவதும் சிலரில் இப்பிரச்சனையைத் தோற்றுவிப்பதுண்டு.

உணவு ஒவ்வாமைகளாலும் food allergy பலருக்கு வயிற்றோட்டம் ஏற்படுவதுண்டு.

புற்று நோய்களுக்கான ரேடியம் சிகிச்சை பலருக்கு வயிற்றோட்டத்தை ஏற்படுத்தும். உணவுக் கால்வாயின் கலங்கள் அம்மருந்துகளால் சேதமடைவதாலேயே இது நிகழும்;. இது தற்காலிகமானது. சில காலத்தில் பழைய ஆரோக்கியம் திரும்பும்.

பலவகை மருந்துகளும் வயிற்றோட்டத்தை ஏற்படுத்துலாம். அன்ரிபயோடிக் மருந்துகள், வலிநிவாரணிகள், வயிற்று எரிவிற்கு உபயோகிக்கும் மக்னீசியம் கலந்த மருந்துகள், புற்றுநோய்கான மருந்துகள், என பலவகையான மருந்துகள் சிலரில் வயிற்றோட்டத்தை ஏற்படுத்தும்.

இத்தகைய நாட்பட்ட வயிற்றோட்டங்களுக்கான அடிப்படைக் காரணத்தை கண்டறிந்து அதனை நீக்க நல்ல குணமாகும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

வயிற்றோட்டம், வயிற்றுழைவு தற்போது என்ன?

0.0.0.0.0.0

Read Full Post »