>
Thanks:- http://s50.photobucket.com/albums/f336/willmcclain/?action=view¤t=glass-a-day.jpg
அந்தக் குடும்ப மருத்துவர் தனது வைத்தியசாலையிலிருந்து வெளியே வந்தபோது, பாதையில் மூன்று பையன்கள் கைநிறைய நாணயங்களை வைத்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.
“என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்.” என ஆவலோடு வினவினார்.
“எங்களிடையே ஒரு போட்டி. எவன் மிகப் பெரிய பொய்யைச் சொல்கிறானோ அவனுக்கே இந்தப் பணம் அவ்வளவும்” என்றான் ஒரு பையன்.
“மாணவனாக இருந்தபோது நான் பொய்யே பேசுவதில்லை” உதாரணம் சொல்லக் கூடிய நல்ல மாணவனாக தான் முன்பு இருந்ததாக பெருமையடித்துக் கொண்டார் மருத்துவர்.
“சரி ….. நீங்கள் வென்றுவிட்டீர்கள்” என்று சொல்லியபடி பணத்தை அவரிடம் கொடுத்தான் அந்தப் பையன்.
…………………….
“உடம்பு கை கால் எல்லாம் உழையுது. அலுப்பாக இருக்கு” என்றார் நோயாளி.
அவரைப் பரிசோதித்த மருத்துவர், வாயிற்குள் தேர்மாமீட்டரையும் வைத்துப் பார்த்துவிட்டு “உங்களுக்கு காச்சல் 101லை அடிக்கிது” என்றார்.
“சீ எனக்குக் காச்சல் கிடையாது. இப்பத்தான் வெய்யிலுக்காலை வந்தனான்” என்றார்.
“வாயை ஆவென்று திறந்து கொண்டு வெய்யிலில் நடந்து வந்தீர்களா” என்றார் மருத்துவர்.
…………………….
அடங்காத, வாய்த்துடுக்குள்ள மகளை மருத்துவரிடம் அழைத்து வந்திருந்தாள் தாய்.
பாடசாலைக்கு இப்பதான் போகத் தொடங்கியிருக்கிறாளாம். படிப்பில் அக்கறை இல்லை. புத்தி சொல்லும்படி மருத்துவரைக் கேட்டிருந்தாள்.
“பிள்ளை கெட்டிக்காரியல்லோ? நல்லாப் படிப்பாளாம். படிச்சு டொக்டரா வந்து எனக்கு நீங்கள்தான் மருந்து தரவேணும்” என்றார் டொக்டர்.
“நான் படிச்சு டொக்டரா வாறதுக்கு முந்தி நீங்கள் செத்துப் போவீங்களே!” மருத்துவரின் நரைத்த தலைமுடியைப் பார்த்தபடி சொன்னாள் சின்னப் பெண்.
…………………….
இரண்டு பெண் மருத்துவர்கள் சந்தித்துக் கொண்டனர்.
‘எப்படியிருக்கிறார்கள் உன் பிள்ளைகள்’
‘உண்மையைச் சொல்லப்போனால் எனது மகன் கட்டியிருப்பது ஒரு சக்கட்டைச் சோம்பேறிப் பெண்ணை… அவள் காலையில் எழுந்திருக்கப் 11மணியாகும். வேலைவெட்டி கிடையாது நாள் முழுக்கக் கடைத்தெருவெங்கும் சுத்தி அவனது பணத்தை செலவழிப்பாள்…’
‘…அது மட்டுமல்ல, அவன் மாலையில் வேலையால் களைத்து வீடு திரும்பும்போது நல்ல உணவு செய்து கொடுப்பாளா? கிடையாது. பகட்டான ஹொட்டேலுக்கு தன்னை அழைத்துப் போக வைப்பாள்’
‘என்ன வெட்கக் கேடு! சரி விடு. உனது மகள் எப்படி இருக்கிறாள்’
‘அவள் ஒரு அதிர்ஷ்டக்காரி. அவள் மணந்திருப்பது ஒரு குணமான பையனை. அவள் காலையில் எழுந்திருக்கு முன்னரே காலை உணவைத் தயாரித்துவிடுவான். படுக்கையிலேயே காப்பி கொடுத்துவிடுவான். அவள் விரும்பியவற்றை வாங்கப் போதிய பணம் கொடுத்துவிடுவான். இரவில் நவநாகரீகமான ஹொட்டேல்களுக்கு சாப்பாட்டிற்கு கூட்டிச் செல்வான்.’
…………………….
ஜெர்ரி ஒரு காரிலுள்ள எஜ்ஜின் வால்வுகளைக் கழற்றிக் கொண்டிருந்தபோது, சேவைத்தள மனேஜருக்காகக் காத்துக் கொண்டிருந்த பிரபல இருதய சத்திரசிகிச்சை நிபுணரான டொக்டர் சாமுவல் கெஸ்சரை இனங் கண்டான்.
வாய்த்துடுக்குள்ள ஜெர்ரி “ஹாய் கெஸ்சர், சற்று இப்படி வாங்களேன்” எனச் சத்தமிட்டு அழைத்தான். சற்று ஆச்சரியமடைந்த போதும் பிரபல சர்ஜன், ஜெர்ரி காரில் வேலை செய்து கொண்டிருந்த இடத்திற்குச் சென்றார்.
ஜெர்ரி எல்லோருக்கும் கேட்டுக்கும்படியாக “டொக்டர். எனது வேலையயைப் பாரும். நானும் வால்வுகளைக் கழற்றுகிறேன். அவற்றை திருத்துகிறேன். புதிய பாகங்களையும் பொருத்துகிறேன். முடிந்ததும் கார் பூனைக் குட்டிபோல சத்தமிடாமல் அனுங்காமல் நகர்கிறது. ஏறத்தாள இதே போன்ற வேலையைத்தான் செய்யும் உங்களுக்கு மட்டும் ஏன் அவ்வளவு பெரிய சம்பளம்” என விவாதத்திற்கு இழுப்பது போலச் சத்தமிட்டுப் பேசினான்.
மிகவும் சங்கடப்படார் டொக்டர் கெஸ்சர்.
“எஜ்ஜின் ஓடிக் கொண்டிருக்கும் போது உனது வேலையைச் செய் பார்ப்போம்” என்றார் மெல்லிய குரலில்.
…………………….
“ஆம் இதற்கு முன் நீர் ஒரு மனநல மருத்துவருடன் வேலை பார்த்ததாக அறிகிறேன். ஏன் அதனை விட்டு விலகி இங்கு வந்தீர்?” என வேலை கேட்டு வந்த இளம் பெண்ணை நேர்முக விசாரணையின் போது கேட்டார் குடும்ப மருத்துவர்.
” என்னால் அங்கு தாக்குப் பிடிக்க முடியவில்லை…”
“….வேலைக்கு நேரங்கடந்து சென்றால் எதிர்ப்புணர்பு கொண்டவள் என்கிறார்கள். நேரத்திற்கு முன்பே சென்றால் மனப்பதற்றம் என்கிறார்கள். சரியான நேரத்திற்கு சென்றாலும் விடாப்பிடியாளன் என்கிறார்கள். சைக்கியாரிஸ்டை சமாளிக்க முடியவில்லை” என்றாள்.
…………………….
ஒரு குறுக்கு விசாரணை
சட்டத்தரணி:- டொக்டர். பிரேத பரிசோதனையை ஆரம்பிக்கும் முன்னர் நாடித்துடிப்பைப் பார்த்தீர்களா?
சாட்சி:- இல்லை
சட்டத்தரணி:- பிரசரை அளந்து பார்த்தீர்களா?
சாட்சி:- இல்லை
சட்டத்தரணி:- சுவாசம் இருக்கிறதா எனப் பாரத்தீர்களா?
சாட்சி:- இல்லை
சட்டத்தரணி:- எனவே நீங்கள் பிரேத பரிசோதனையை ஆரம்பித்தபோது நோயாளி உயிருடன் இருந்திருப்பது சாத்தியமல்லவா?
சாட்சி:- இல்லை
சட்டத்தரணி:- எப்படி நீங்கள் நிச்சயமாகச் சொல்ல முடியும்?
சாட்சி:- ஏனெனில் அவரது மூளை எனது மேசையில் இருந்த சாடிக்குள் இருந்தது.
சட்டத்தரணி:- அப்படியா? இருந்தபோதும் நோயாளி அப்பொழுதும் உயிருடன் இருந்திருக்கலாம் அல்லவா?
சாட்சி:- ஆம். உயிருடன் இருந்திருப்பது சாத்தியம்தான்… சட்டத் தொழிலும் செய்து கொண்டிருந்தால்..
…………………….
இவற்றில் சில நான் அனுபவித்தவை. பல மருத்துவ நண்பர்களால் ஈ மெயில் செய்யப்பட்டவை.
படித்துவிட்டீர்களா?
சிரிப்பு வராவிடால் நான் பொறுப்பில்லை.
எம்.கே.முருகானந்தன்.
Read Full Post »