Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘முதுமை’ Category

கேள்வி- வயது கூடக் கூட உணவில் ஆர்வமில்லாமல் போவது ஏன்?

ச. பொன்னம்பலம், பரந்தன்

பதில்:- பசி குறைவதும், உணவில் நாட்டம் குறைவதும் வயது முதிர்வதின் ஒரு அம்சம் என்றே nhசல்லலாம். உடலியல் காரணங்களும் உளவியல் காரணங்களும் இருக்கலாம். இருந்தபோதும் இது எல்லா முதியவர்களையும் ஒரே விதமாகப் பாதிக்கிறது என்றும் சொல்ல முடியாது.

வயது முதிரும் போது அவர்கள் இளவயதில் இருந்ததுபோல ஓடியாடித் திரிவதில்லை. அவர்களது வேலைகள் குறைகின்றன. வேலைகள் செய்தாலும் அது இளவயதில் இருந்ததுபோல துடியாட்டமாக இருப்பதில்லை. இதனால் அவர்கள் செலவழிக்கும் சக்தியின் (கலோரி) அளவு குறைந்துவிடுகிறது. இதனால் பசி குறைந்துவிடுகிறது. புடிப்படியாக உண்ணும் உணவின் அளவு குறைந்துவிடும்.

முதுமையில் பலருக்கு பற்கள் விழுந்துவிடுகின்றன. இதனால் சப்பிச் சாப்பிட முடியாமல் போகிறது. பல்லுக் கட்டியிருந்தாலும் அவை பெரும்பாலும் உறுதியாக இருப்பதில்லை. இடைஞ்சலாகவே பல முதியவர்களால் பாரக்கப்படுகிறது.  இவற்றினால் உணவை இரசித்துச் சாப்பிட முடியாமல் போவதாலும் பலருக்கும் உணவில் ஆர்வம் கெட்டுவிடுகிறது.

உணவுக் கூறுகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொடுப்பது, மென்மையான உணவுகள், ஈரலிப்பான உணவுகள் போன்ற நடைமுறைகள் பற்பிரச்சனைக்கு தீர்வாக அமைய முடியும்.

வேறு சிலருக்கு வயதாகும் போது உணவு சமிபாடடைவதில் சில பிரச்சனைகள் ஏற்படுகின்றன. உதாரணமாக பாலிலும் பாற்பொருட்களிலுமுள்ள லக்டோஸ் என்ற பொருள் ஒத்துக்கொள்வதில்லை. பால், பால்மா, பால் நேர்ந்த பொருட்களான கேக், ஐஸ்கிறீம், பிஸகட் போன்றவற்றை அவர்களது உணவுக் கால்வாயால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இதனால் வயிற்றோட்டம், வயிற்றுப்; பொருமல் போன்ற அசௌகர்யங்கள் ஏற்படுகின்றன. சிலருக்கு ரொயிலட்றுக்கு போவற்கு முன்னரே மலம் கசிந்துவிடுவதுண்டு. பலருக்கு பிரச்சனைக்கான அடிப்படைக் காரணம் விளங்குவதில்லை. எனவே ‘சாப்பிட்டால் வயிற்றால் போகிறது’ என்று எண்ணி உணவுகளைத் தவிர்க்க முயல்வார்கள்.

‘அம்மா சாப்பிடிறா இல்லை. சத்துமா எழுதித்தாங்கோ என்று கேட்காத பிள்ளைகளே இல்லை. வேவையில்லாமல் சத்து மாக்களை கரைத்துக் கொடுத்தால் அவர்களது பசி மேலும் குறைந்துவிடுறது. ஏடை அதிகரித்து விடுகிறது. இதனால் அதிகரித்த உடையுடன் அவர்களால் அதிகம் நடக்க முடியாது கூடுதலாக உட்கார்ந்து விடுகிறார்கள். இது மேலும் எடையை அதிகரிக்கச் செய்வதுடன் பராமரிப்பவர்களுக்கு அவர்களது அதிகரித்த எடை சிரமத்தைக் கொடுகக்கிறது.

மற்றொரு முக்கிய காரணம் வயதாகும் மணம் சுவை போன்ற உணர்வுகள் மங்கிப் போவதாகும். உண்மையில் நாவில் உள்ள சுவையரும்புகளுக்கும் மணத்தை நுகரும் ஆற்றலுக்கும் நிறையத் தொடர்பிருக்கிறது. இவற்றின் நுகரும் ஆற்றல் வயதாகும் போது குறைவடைவதால் உணவுகளை இரசித்து ருசித்து உண்ண முடியாமல் போகிறது. இதனால் உணவில் நாட்டம் குறைவடைகிறது.

எனவே கூடுதலான மணம் சுவை போன்றவை சேர்த்து உணவு தயார்ப்பது உதவக் கூடும். இருந்த போதும் சுவைக்கென மேலதிக இனிப்பு உப்பு போன்றவற்றைச் சேர்ப்பது நல்லதல்ல. ஏனெனில் இவை அவர்களது வயதில் ஏற்படக் கூடிய பிரஸர், நீரிழிவு எடை அதிகர்ப்பு போன்ற பிரச்சனைகளைத் தீவிரமாக்கலாம். பதிலாக மணமும் சுவையுமுள்ள இவைவகைகள், பழங்கள், போன்றவற்றைச் சேர்க்கலாம், எலுமிச்சம் பழத்தின் புளிப்பு அவர்களுக்கு ஏற்றதாக இருக்கக் கூடும்.இயற்றையான சுவையூட்டிகளான ஏலம், கராம்பு கறுவா போன்றவையும் உதவலாம்.

இவற்றோடு பார்வைக் குறைபாடும் உணவுகளை ரசித்து உண்பதற்கு தடையாகலாம். வயதாகும் கற்றரட், மற்றும் விழித்திரைப் பாதிப்பு ஆகியவற்றால் பல முதியவர்களின் பார்வை தெளிவாக இருப்பதில்லை. இதனாலும் உணவில் ஆர்வம் குறைந்துவிடுகிறது.

முதியவர்கள் பெரும்பாலும் பல் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பர். உதாரணமாக நீரிழிவு, பிரஸர், மூட்டுவாதங்கள், அல்சைமர் நோய், மனச் சோர்வு போன்ற பலவிதமான பாதிப்புகள் இருக்கக் கூடும். இவற்றிற்காக பல மருந்துகளை தினமும் உட்கொள்வார்கள். இவற்றில் சில வாய்க்கசப்பு, ஓங்காளம், வாந்தி, வயிற்றுப்பொருமல், மலச்சிக்கல், வயிற்றோட்டம் போன்ற சிக்கல்கள் இருக்கலாம். இவையும் பசியின்மை, உணவில் ஆர்வமின்மை போன்றவற்றிற்னு காலாகலாம்.

‘ சரியான மலச்சிக்கல். சாப்பிடவே முடியுதில்லை’ என்று என்னிடம் பல முதியவர்கள் முறையிடுவார்கள். உண்மைதான் பல முதியவர்களுக்கு மலச்சிக்கல் இருக்கிறது. மலச்சிக்கலால் வயிறு பொருமலாக இருப்பதால் உண்ண முடிவதில்லை. மலச்சிக்கலுக்குப் பல காரணங்கள் இருக்கலாம். உணவு விரைவில் சமிபாடடையாமல் இருத்தல், போதிய உணவு உட்கொள்ளாமை, உண்ணும் உணவுகளிலும் நார்ப்பொருள் உள்ள உணவுகளைத் தவிர்த்து மென்னையான உணவுகளை நாடுதல், சில மருந்துகளும் காரணமாகலாம். மருந்து காரணமா என்பதையிட்டு மருத்துவருடன்  ஆலோசனை பெறவும்.

உணவு வேளையில் கூட இருந்து கதைத்துப் பேசி உண்பதற்கு யாருமில்லாததும் சிலருக்குப் பிரச்சனையாக இருக்கிறது. குடும்பமாக கூடியிருந்து சாப்பிட்டவருக்கு தனிமையில் இருந்து சாப்பிடுவது சலிப்படைய வைத்துவிடுகிறது. ‘சாப்பிட்டு என்ன..’ என ஆற்றாமை சூழ்ந்துகொள்கிறது. எதைச் சாப்பிட்டோம் எப்படிச் சாப்பிட்டோம் என்ற நினைவின்றி ஏதோ விழுங்கினோம் என்ற நிலை ஏற்படுகிறது சிலருக்கு.

தனிமை சிலருக்கு மனச்சோர்வு நோயை ஏற்படுத்தலாம். இதுவும் பசியை மழுங்கடிக்கும். எனவே கூடியிருந்து உணவு உட்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுப்பதும் உதவக் கூடும்.

பசியைத் தூண்டுவதற்கான சில மருந்துகள் உள்ளன. ஆனாலும் அவற்றை விட மேலே சொன்ன அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து நிவர்த்திப்பதே கூடுதலான பலன் அளிக்கும் என நம்புகிறேன்.

உண்ணும் உணவின் அளவு குறைந்தாலும் அது போசாக்குள்ளதாக இருப்பதில் அக்கறை போதிய கவனம் வேண்டும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

முதுமையில் நொய்ம்மை (பலவீனம் இயலாமை)

‘பொறு பொறு. நான் எழும்பிறன். நீ பிடியாதை. என்னை சும்மா விடு’

என்னுடனான மருத்துவ ஆலோசனையை முடித்துக் கொண்டு வெளியே செல்வதற்காக கதிரையில் இருந்து எழ முற்பட்ட போது அவரது பேரன் உதவ முன் வந்தார். அப்போதுதான் அவர் அவ்வாறு சொன்னார்.

அவரது வயது 85 தான்.

இந்த வயதிலும் அவரால் மற்றவர் உதவியின்றி கதிரையிலிருந்து எழுந்திருக்கவும் நடக்கவும் முடிகிறது.

மாறாக அதே நாளிலில் என்னிடம் வந்திருந்த மற்றொரு பெண்மணியை அவளது மகன் கைபிடித்து அணைத்து நடத்திக் கொண்டு வந்திருந்தார். உட்காருவதற்கும் எழுந்திருப்பதற்கும் அவளால் முடியவில்லை. முழுக்க முழுக்க மகனிலேயே தங்கியிருக்க நேர்ந்தது. இத்தனைக்கும் அவளது வயது 62 மட்டுமே.

முதுமையில் இயலாமை ஏற்படுவது நாம் எதிர்பார்க்க வேண்டிய ஒன்றுதான். அதே நேரம் முதுமை என்பதை வருடங்களால் மட்டும் கணிக்க முடியாது. அதனால்தான் 85 வயதில் அவரால் சுயமாக இயங்கவும், 65 வயதில் அவள் மற்றவர்களில் தங்கியிருக்கவும் நேர்கிறது.

இருந்த போதும் இதில் ஆண் பெண் என்ற வேறுபாடு கிடையாது. 85 வயதில் பெண் திடகாத்திரமாகவும் 65 வயதில் ஆண் சோர்ந்து கிடக்கவும் நேரலாம்.

அதே நேரம் வயது காரணமில்லை என்பதையும் முற் கூறிய உதாரணத்திலிருந்து புரிந்து கொள்ள முடியும்

வயது என்பது வாழ்கின்ற காலத்தை வருடங்களில் கணிக்கிற ஒரு முறை மட்டுமே. ஆனால் முதுமையும் நொய்மைமையும் வயதினால் மட்டும் ஏற்படுகின்றவை அல்ல.

முதுமையில் ஏற்படும் அத்தகைய தளர்சியை, ஒரு நோய்க் குறியாக இப்பொழுது மருத்துவத்தில் அடையாளம் காண்கிறார்கள். முதுமையில் ஏற்படும் இத் தளர்ச்சியை பலவீனம், இயலாமை, நொய்ம்மை என பல்வேறு பதங்களால் அழைக்க முடியும் ஆங்கிலத்தில் குசயடைவல என்கிறார்கள்.

ஒருவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர் நொய்ம்மை அடைந்துள்ளார் என்பதை எவராலும் சொல்ல முடியும். ஒருவர் எவ்வாறு நடந்து வருகிறார். திடமாக நடக்கிறாரா. மெதுவாக அடியெடுத்து வருகிறாரா, தள்ளாட்டம் இருக்கறதா. மிக மெதுவாக நடக்கிறாரா, கத்pரையில் எவ்வாறு இருக்கிறார், இருக்கவும் எழுந்திருக்கவும் சிரமம் படுகிறாரா. பேச்சு எவ்வாறு இருக்கிறது போன்ற பலவற்றை வைத்து எம்தை அறியாமலே ஒருவரது நிலமையை கணித்துக் கொள்கிறோம்.

ஆயினும் மருத்துவத்தில் அவ்வாறு எழுந்தமாட்டில் சொல்ல முடியாது. சில சுட்டிகளை வைத்தே கணித்தறிந்து தெளிவாகச் சொல்ல முடியும்.

கைகளால் ஒன்றைப் பற்றும் போது உள்ள உறுதித்தன்மை தளர்தல், எல்லா விதச் செயற்பாடுகளிலும் ஆற்றல் குறைதல், நடையின் வேகம் குறைந்து போதல், உடற் செயற்பாடுகள் குறைந்து போதல், காரணமின்றி எடை குறைதல் ஆகியவற்றை நொய்மைக்கான சுட்டிகளாகக் குறிப்பிடலாம்.

நொய்ம்மையால் பாதிக்கபட்டவர்களது கை கால் அசைவியக்கம் விரைவானதாக இருக்காது. மிக மெதுவாகவே கை கால்களை அசைக்கவும் செயற்படுத்தவும் முடியும். அனிச்சையான செயற்பாடுகள் மிகவும் மந்த கதியிலேயே இயங்கும்.

உதாரணமாக ஒரு சிறு கல் தடக்கினால் கூட அவரால் தன்னைச் சமநிலைப்படுத்த முடியாது போகலாம். ஏதிர்பாராமல விழுந்து தலையையோ இடுப்பு எலும்பையோ உடைத்து விடக் கூடும். முழங்கால் வலி அல்லது கணுக்கால் வலி போன்ற மூட்டு நோய்கள் இல்லாமலே இந்த நிலை ஏற்படுகிறது.

இவ்வாறு உடல் உறுதி குறைவது மட்டுமின்றி அவர்களால் துன்பத்தை பொறுக்க முடியாத மனநிலையும் ஏற்படுகிறது.

இவை காரணமாக அவர்களால் தன்னிச்சையாக இயங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே மற்றவர்களில் தங்கியிருக்க வேண்டிய நிலை விரைவில் ஏற்படுகிறது. இதன் காரணமாக குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் சுமையாக மாறிவிடுகிறார்கள்.

மிகவும் கவலைக்குரிய விடயம் என்னவெனில் அவர்களது ஆயுற் காலத்தையும் நொய்ம்மை குறைவடையச் செய்வதாகும்.

நொய்ம்மைக்கு வயது காரணமல்ல என ஏற்கனவே பார்த்தோம். அவ்வாறெனில் இந்த நொய்ம்மை ஏற்படுவதற்கு காரணங்கள் எவை. அவற்றை தடுப்பது அல்லது எதிர்கொள்ளக் கூடிய வழி வகைகள் என்ன என்பதை பார்க்கலாம்.

மரபியல் காரணங்கள், உடல் உழைப்பற்ற ஆரோக்கியமற்ற வாழ்க்கை நடைமுறைகள், நீரிழிவு மூட்டுவாதம் போன்ற வேறு நோய்களின் தாக்கம் இருப்பது, சூழல் போன்றவை இவ்வாறு தளர்ச்சி அடைவதற்குக் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

எங்கள் உடலில் நோய்களுக்கு எதிராகப் போராடும் அமைப்பு (Immune system) இருக்கிறது. எந்நேரமும் செயற்பட்டுக் கொண்டே இருந்து எமது உடலில் கிருமிகள் தொற்றுவதைத் தடுக்க முயல்கிறது. அவ்வாறு செயற்படும் போது இருதயம், தசைகள், எலும்பு போன்ற பல்வேறு உடற்தொகுதிகளிலும் அழற்சியும் வீக்கமும் ஏற்பட்டு அவை நாளடைவில் நொய்ம்மையாக மாறக் கூடும்.

மற்றொரு காரணம் வயசாகும் போது எமது தசைத் தொகுதியானது நலிவடைவதாகும். 18 வயதில் இருந்ததுபோல வயசாகும் போது தோள் மூட்டு, புஜங்கள், தொடை போன்றவற்றில் உள்ள தசைகள் உறுதியாக இருப்பதில்லை. நலிவடைந்து அளவில் குறைந்து தொய்ந்து விடுகின்றன. இதனால்தான் பல முதியவர்கள் மிகவும் மெலிவடைந்த தோற்றத்தைக் கொண்டு இருக்கிறார்கள். தசைகளின் அளவு குறைவடைவதால் அங்கங்களின் செயற்பாடுகள் தளர்ந்துவிடுகின்றன.

மற்றொரு முக்கிய காரணம் முதுமையடையும்போது பாலியல் ஹோர்மோன்களின் அளவு உடலில் குறைந்து போவதாகும். பெண்களில் ஈஸ்ரோஜனின் அளவும் ஆண்களில் டெஸ்டஸ்டரோனின் அளவும் வயதாகும் போகும் போது திடீரெனக் குறைகின்றன. இதுவும் உடல் நலிவடைவதற்கு மற்றொரு காரணமாகும்.

நொய்ம்மைக்கு மருத்துவ ரீதியாக செய்யக் கூடியவை எவை.

நொய்ம்மை ஏற்படுவதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் அதற்கான அடிப்படைக் காரணங்களை அறிந்து அது மோசமடையாமல் தடுக்கலாம்.

உதாரணமாக தசைத் தொகுதியானது நலிவடையத் தொடங்கியிருந்தால் அதைத் தடுப்பதற்கான சுலபமான சில பயிற்சிகளை செய்வது நன்மை பயக்கும். தசைகளை நீட்டி மடக்கும் சிறிய சிறிய பயிற்சிகளைச் செய்வதன் மூலம் தசைகளை வலுப்படுத்தலாம்.

எலும்புகள் பலவீனம் அடைந்திருந்தால் அவற்றைத் தடுப்பதற்கான விற்றமின் டி, கல்சியம் போன்ற மருந்துகள் உதவக் கூடும். அத்துடன் மேற் கூறியவாறு பயிற்சிகள் செய்வதும் அவசியமாகும். ரூமட்ரொயிட் ஆத்திரைடிஸ் போன்ற மூட்டு வாத நோய்கள் இருந்தால் அவற்றிக்கான சிகிச்சைகளை சரியான முறையில் தொடர வேண்டும்.

இவற்றைத் தவிர நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்டரோல், இரத்த சோகை, இருதய நோய்கள், சுவாச நோய்கள் போன்றவையும் நொய்ம்மைக்கு காரணமாகலாம். சில சாதாரண பரிசோதனைகள் மூலம் அவற்றைக் கண்டறிய முடியும். அவற்றிற்கான சிகிச்சைகளை உரிய மருத்துவரின் கண்காணிப்பின் கீழ் ஒழுங்காக செய்ய வேண்டும்.

இருந்த போதும் பல நோயாளிகளை அவர்கள் தீவிரமான நொய்ம்மை நிலைக்கு சென்ற பின்னரே காண முடிகிறது. அந்த நிலைக்கு சென்றவர்களுக்கு சடுதியான ஆபத்துகள் ஏற்படாமல் காப்பதே முக்கியமானது. முக்கியமாக அவர்கள் விழுந்து விடுவதைத் தடுக்க வேண்டும்.

‘முடியாமல் கிடக்கிற இவர் பேசாமல் கிடவாமல் அங்கினை இங்கினை தட்டுத் தடுமாறி நடந்து திரிஞ்சு விழுகிறார். சும்மா கிடவுங்கோ என்றால் கேக்கிறாரே’ என்பதுதான் பல பிள்ளைகளின் குற்றச் சாட்டாக இருக்கிறது.

பேசாமல் கிடந்தால் நொய்ம்மை இன்னும் தீவிரமடையவே செய்யும். செயற்பட்டுக் கொண்டே இருப்பதுதான் உடலை நலிவடையாமல் காப்பாற்றும். நடமாடுவதும் மற்றவர்களுடன் ஊடாடுவதும் அவர்களது மன மற்றும் உடல் நிலைகள் மேலும் மோசமடையமல் தடுத்து உற்சாகமாக இயங்க வைக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே அவர்கள் விழாமல் நடப்பதற்கு உதவியான உபகரணங்களை அவர்களுக்கு வழங்க வேண்டும். கைத் தடிகள், வோக்கேர்ஸ் போன்றவை நிறையவே உதவும்.

இவை எல்லாவற்றையும் விட வருமுன் காப்பதே சிறப்பாகதாகும். நொட்டு நொறுக்கு உணவுகளைத் தவிர்த்து போசாக்கான உணவுகளை உண்பதும், நாளாந்தம் உடற் பயிற்சிகளில் ஈடுபடுவதும் பெரும்பாலான நோய்களிலிருந்து எம்மைக் காப்பதுடன் முதுமையில் நொய்ம்மை ஆட்படாமல் ஆரோக்கியமாக இயங்கவும் வழி செய்யும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

M.B.B.S (Cey); D.F.M (Col), F.C.G.P (Col)

குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

‘இவ்வளவு நாளும் ஓடி ஓடி உழைச்சாச்சு. போதும் என்று ஆகிவிட்டது. இனி வீட்டோடை கிடக்கப் போறன். இதுவரை பார்க்காத ரீவி சீரியலுகளைப் பார்த்து நெட்டிலும் உலாவுவன். கட்டிலும் கதிரையும் எண்டு சந்தோசமாக இனி இருக்கப் போறன்.’

agia-efimia-old-people (1)

மனைவியும் ஒத்துப் பாடினா ‘ஓம் பாவம் அவர். வேலை வேலை என்று ஓடித் திரிஞ்சார். பிள்ளைகளையும் கரை சேர்த்தாச்சு. இனியாவது பேசாமல் ஓய்வா வீட்டை இருக்கட்டும்’ என்றாள்.

அவர் ஒரு முதியவர். ஆனால் தளர் வயசு அல்ல.  வயசு 65 தான் ஆகிறது.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள். அவருக்கு இனி முழு ஓய்வு தேவையா? வீட்டோடு பேசாது கிடந்தால் மகிழ்ச்சியும் நலமான வாழ்வும் கிட்டுமா?

“இல்லை” என்கிறார்கள் சுவீடிஸ் தேசத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள்.

ஆண் பெண் என 3800 பேரை 12 வருடங்களாக அவதானித்த ஆய்வு இது. Swedish School of Sport and Health Sciences ;  the Karolinska Institute, in Stockholm இணைந்து செய்த ஆய்வு இது. அவர்கள் அனைவரும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள். 1937, 1938 ம் ஆண்டுகளில் பிறந்தவர்கள்.

அந்த வயதினருக்கும் உடற் பயிற்சி அவசியம். பக்கவாதம், மாரடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்க வேண்டுமாயின் அவர்கள் வாழாதிருக்கக் கூடாது. வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்வது, தரையை மொப் பண்ணுவது கூட்டுவது போன்ற ஏதாவது உடலுழைப்புடன் கூடிய வீட்டு வேலைகளில் தினமும் கட்டாயம் ஈடுபட வேண்டும்.

Three seniors doing tai chi on the beach

அவ்வாறு உற்சாகமாக சுறுசுறுப்புடன் சிறு சிறு வேலைகள் என்று செயற்பட்டுக் கொண்டே இருக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு

  • எதுவும் செய்யாது வாழாதிருப்பவர்களை விட பக்கவாதம், மாரடைப்பு போன்றவை வருவதற்கான வாய்ப்பு 27 சதவிகிதம் குறைவாகும்.
  • அத்துடன் அவர்கள் எந்தக் காரணத்திலாவது மரணமடைவதற்கான சாத்தியம் 30 சதவிகிதம் குறைவாகும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

செயற்பட்டுக் கொண்டே இருப்பதானது சும்மா இருக்கும் நேரத்தைக் குறைக்கிறது. சும்மா இருத்தல் என்று சொல்லும்போது கதிரையில் உட்கார்ந்திருப்பதையே குறிப்பிடுகிறேன். பல வயதானவர்கள் வீட்டோடு முடங்கிவிடுகிறார்கள்.

நகர்ப்புற வாழ்க்கை முறையும் காரணம் என்பது உண்மையே. சிறிய வீடுகள். அதற்குள்ளேயே சமையல் குளியல், சாப்பாடு, பொழுதுபோக்கு என எல்லாமே அடங்கிவிடுகிறது.

டெலிபோனில் ஓடர் கொடுத்தால் பத்திரிகை முதல், மளிகைப் பொருட்கள், தேவையானால் உணவு என எல்லாமே டெலிவரி ஆகிவிடுகிறது. கடைக்குப் போக வேண்டியதும் இல்லை. பத்திரிகை படிக்க வாசிகசாலை செல்ல வேண்டியதில்லை. டெலிபோன் லைட் பில்லுகளை ஒன் லைனிலேயே செட்டில் பண்ணிவிடலாம்.

எனவே பொழுது போக்கு என்பது ரீவி பார்ப்பது, அல்லது கணனியில் மூழ்குவது என்றாகிவிட்டது. அதுவும் இல்லையானால் போனில் அலட்ட வேண்டியது. ரீவி சனலை ரிமோட்டிலேயே மாற்றிவிடலாம். டெலிபோன் பேச எழுந்து செல்ல வேண்டியதில்லை கைபேசிகள் கைவசம் உண்டு.

அவ்வாறு சும்மா இருந்தால் சுகமாக இருப்பது போலத் தோன்றும். ஆனால் உள்ளுற நோய் பெருகி மரணம் நெருங்கி வரும். அதைத் தடுப்பதற்காகவே தாத்தாக்களும் பாட்டிகளும் சோர்ந்துவிடலாகாது.

caregiver-brusing-teeth

இவ்வாறு சோர்ந்து விடாது செயற்பட்டுக் கொண்டே இருப்பதானல் கிட்டும் நன்மைகளாவன, அவர்களது வயதைப் பொறுத்த வரையில் முறையான உடற் பயிற்சிகள் செய்வதற்கு எந்த விதத்திலும் குறைந்தது அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதன் அர்த்தம் உடற் பயிற்சிகள் அவசியமில்லை, சும்மா இருக்காது செயற்பட்டுக் கொண்டிருப்பது மட்டுமே போதும் என்பதாக அர்த்தப்படுமா?. இல்லை.

“எமது ஆய்வின் பிரகாரம் தினசரி உடற்பயிற்சிகள் செய்வதுடன், சுறுசுறுப்பாக ஏதாவது செய்து கொண்டிருப்பவர்களுக்கு பக்கவாதம் மாரடைப்பு போன்றவை வரக் கூடிய சாத்தியங்கள் மேலும் குறைவாகும்” என்கிறார் ஆய்வாளரான Ekblom-Bak.

தினசரி உடற் பயிற்சியானது எவருக்கும் அவசியமானதே. வேகநடை, யோகாசனம், சைக்கிள் ஓடுதல், நீச்சல், போன்ற பலவும் நல்லவையே. ஆனால் அவற்றில் நாம் 30 நிமிடங்கள் முதல் 1 மணித்தியாலயம் போன்ற குறுகிய நேரம் மட்டுமே செலவழிக்கிறோம். மிகுதி நேரம் சும்மா இருப்பதை விட ஏதாவது வேலைகளில் ஈடுபட வேண்டும். இதனால் உடல் உறுப்புகள் அனைத்துமே இயங்கிக் கொண்டிருக்கும்.

உண்மையில் மனித உடலானது சும்மா இருப்பதற்காக வடிவமைக்கப்பட்டது அல்ல. அது தொடர்ந்து செயற்படுவதற்கவே உருவமைக்கப்பட்டது. எனவே அதை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் முதுகுவலி, முழங்கால் தேய்வு, தசைகள் சுருங்குதல் போன்ற இன்னும் பல இயற்கைத் தேய்மானப் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.

பொதுவாக வயதாகும்போது உடலின் செயற்பாடுகள் சற்று குறையவே செய்யும். நடையின் வேகம் குறையும். வேறு வேலைகளும் துரிதமாக நடக்காது. ஆனால் அதற்காக சோர்ந்து முடங்கிவிடக் கூடாது.

“இவவுக்கு வேலை ஒன்றும் கிடையாது. சும்மா சமைக்கிறது, வீடு துப்பரவு பண்ணுவதும் உடுப்புத் தோய்ப்பதும்தான்” என ஒரு கணவன் குறை கூறினார். உண்மையில் காரில் ஏறி வேலைக்குப் போய் அங்கை கதிரையில் இருப்பதைவிட இவரது மனைவி கூடுதலாக வேலை செய்கிறாள்.

“கதிரையில் பொதி போல உட்காரந்திருப்பதை விட வீடு துப்பரவு செய்யும் வேலையின் போது ஆறு மடங்கு அதிகமான கலோரி செலவாகிறது” என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இந்த ஆய்வுக் கட்டுரையானது British Journal of Sports Medicine  சஞ்சிகையின் அக்டோபர் 28 இதழில் வெளியாகியுள்ளது.

எத்தகைய நாளாந்த செய்ற்பாடுகள் உதவும் என்பதைப் பற்றியும் அக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

  • டெலிபோன் பேசுவதற்கு எழுந்து சென்று ரிசீவரை எடுப்பது
  • ரீவி பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் இடையில் எழுந்து அங்கும் இங்கும் நடப்பது நல்லது. நிகழ்ச்சிகளின் போது இல்லாவிட்டாலும் விளம்பர இடைவேளைகளை இதற்குப் பயன்படுத்தலாம்.
  • மணித்தியாலயத்திற்கு ஒரு தடவையாவது இருக்கையை விட்டு எழுந்து ஐந்து நிமிட நேரத்திற்கு குறையாது, நின்ற நிலையில் துள்ளிக் குதிப்பது, முழங்காலை மடித்து கீழே இருந்து எழும்புவது போன்ற சிறு பயிற்சிகளைச் செய்யலாம்.
  • இரண்டு மூன்று மணிநேரத்திற்கு ஒரு தடவையாவது ஒரு மாடிக்கு ஏறி இறங்குவது
  • வீட்டைக் கூட்டுவது, தரையை மொப் பண்ணுவது

போன்றவற்றைக் குறிப்பிட்டுள்ளார்கள். இவை இங்குள்ளவர்களுக்கும் பொருந்தும். இவை தவிர ஒவ்வொருவரும் தங்கள் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ற ஏதாவது வேலைகளைச் செய்து தங்கள் உடலை உறுதியாக வைத்திருக்க வேண்டும்.

“இவை எல்லாம் எனக்கு எதற்கு வீடு போ போ, காடு வா வா என்கிற வயது” என்று சொல்லாதீர்கள். அவ்வாறு எண்ணவும் கூடாது. எந்த வயதானாலும் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். அதுவும் மற்றவர் உதவியை எதிர்பாராது தனது காலில் தங்கியிருப்பதைப் போல வருமா? 

சுதந்திரமும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் நிறைந்த முதுமை வாழ்வு வேண்டுமானால் சோர்ந்துவிடல் ஆகாது தாத்தா பாட்டிகளே.

பிள்ளைகளுக்கும் ஒரு வார்த்தை.

“சும்மா இருக்கக் கூடாது என்று டொக்டர் சொல்லிப்போட்டார். வீட்டைக் கூட்டுங்கோ. பானையைக் கழுவுங்கோ. மேசையைத் துடையுங்கோ” என்று எல்லா வேலைகளையும் அவர்கள் தலையில் சுமத்தி விடாதீர்கள். 

சும்மா இருப்பது இள வயதினருக்கு நல்லது எந்த ஆய்வும் சொல்லவில்லை. உற்சாகமும் சுறுசுறுப்பும் என இயங்கிக் கொண்டே இருப்பது எந்த வயதினருக்கும் அவசியமானதே.

எனது ஹாய் நலமா புளக்கில் (06.02.204) வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

விழுகைகளைத் தவிர்ப்பது எவருக்கும் முக்கியமானது.

ஆனால் சுலபமாக எலும்புகள் உடைந்துவிடக் கூடிய முது வயதில் மிக மிக முக்கியமானதாகும்.

விழுகைகளைத் தடுக்க வேண்டுமெனில் முக்கியாக உங்கள் சமநிலை தழும்பாது பாதுகாத்துக் கொள்வது அவசியம்.

  • எங்கு எப்பொழுது நடமாடினாலும் ஒரு கையிலாவது பொருட்கள் எதையும் பற்றியிராது வெற்றாக வைத்திருங்கள். தற்செயலாக நிலை தழும்பினால், விழாமல் இருப்பதற்காக எதையாவது பற்றிப் பிடிக்க வசதியாக இருக்கும்.
  • நடக்கும்போது வேறு எதிலும் கவனத்தைச் செலுத்;தாதீர்கள். பத்திரிகை படிப்பது, மற்றவர்களுடன் பேசி கொண்டு நடப்பது, கடைத்தெருவைப் பிராக்குப் பார்த்து நடப்பது போன்றவற்றால் சமநிலை தவறி விழுந்துவிடக் கூடும்.
  • நடக்கும்போது கைகளை முன் பின்னாக வீசி நடப்பதன் மூலம் உடலின் சமநிலையைப் பேண முடியும்.
  • தரையில் காலை இழுத்து இழுத்து நடக்காதீர்கள். பாதங்களை தரையியிருந்து தூக்கி திடமாக வைத்து நடவுங்கள்
  • போகும் பாதையில் ஒரிடத்தில் திரும்பி நடக்க வேண்டுமாயின் சடீரெனத் திரும்பாதீர்கள். வட்டமடிப்பது போல வளைந்து சென்று திரும்புங்கள்.
  • படுக்கையிலிருந்து அல்லது இருக்கையிருந்து எழுந்து நடக்க வேண்டுமாயின் அவசரப்பட்டு எழுந்து உடனடியாக நடக்காதீர்கள்.
  • படுக்கையிலிருந்து எழுந்து, உட்கார்ந்து, சற்று நின்று பார்த்து நிலை தழும்பவில்லை எனில் பின்பு நிதானமாக நடவுங்கள்.
  • ஓரிடத்தில் சற்று நேரம் நிற்க வேண்டிய தேவை ஏற்பட்டால் பாதங்களை நெருக்கி வைக்காதீர்கள். உங்கள் தோள் பட்டையின் அகலத்திற்கு பாதங்களைப் பரப்பி வைத்தால் சமநிலை தழும்பாது.
  • செருப்புகள் தேய்ந்திருந்தாலும் வழுக்கக் கூடும்.

IMG_0003_NEW-001

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

Read Full Post »

இடுப்பு எலும்பு முறிவு (Hip Fracture) என்பது ஒரு பாரதூரமான பிரச்சனை. இது பொதுவாக வயதானவர்களிடையேதான் அதிகம் காணப்படுகிறது.

பொதுவாக 65 வயது முதல் 80 வயது வரையானவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

elderly-falling

அதிலும் பெண்கள் பாதிப்படைவது அதிகம்.

விழுகைகளே அத்தகைய எலும்பு உடைவுகளுக்கு பெரும்பாலும்  காரணமாகிறன.

18026_4736_5

இடுப்பு எலும்பு உடைவு எனப் பொதுவாகச் சொன்னாலும் உண்மையில் உடைவது தொடை எலும்பின் மேற் பகுதிதான்.  இடுப்பு மூட்டுப் பகுதிக்குள் இருக்கும் எலும்பின் பகுதியே அதிகம் உடைவதுண்டு.

முதியவர்களில் இது அதிகம் வருவதற்குக் காரணம் அவர்களது எலும்புகள் நலிவடைந்திருப்பதே. அவ்வாறு எலும்பு நலிவடைவதை ஒஸ்டியோபொரோசிஸ் osteoporosis என்பார்கள்.

ஒஸ்டியோபொரோசிஸ் பற்றிய எனது முன்னைய பதிவைப் பார்க்க

பானை வயிற்றோர்களின் எலும்பு முறியாமல் காத்தல்

falls_elderly_prevention

முதுமையில் விழுகைகள் அதிகமாவதற்கு காரணங்கள் என்ன?

  • பலவிதமான மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்,
  • முதுமையின் பார்வைக் குறைபாடு,
  • அவர்கள் சமநிலையைப் பேணுவதில் படும் சிரமம்

ஆகியனவே அவர்களது விழுகைகளுக்கு காரணமாகின்றன.

fallcouple

கடுமையான வலி ஏற்படுவதும் அவர்களது நடமாட்டத்தை மட்டுப்படுத்துவதுமே இடுப்பு எலும்பு முறிவின் முக்கிய பாதிப்புகளாகும்.

எத்தகைய அறிகுறிகள் இருந்தால் நீங்கள் அதை இடுப்பு எலும்பு உடைவு எனச் சந்தேகப்பட முடியும்.

  • இடுப்புபு் பகுதியில் வீக்கமும் கண்டலும் தோன்றலாம்
  • இடுப்பின் அந்தப் பகுதியால் உங்கள் உடற் பாரத்தை சுமக்க முடியாததால் எழுந்து நிற்க முடியாது போய்விடும்.
  • நடக்க முடியாது போகும்
  • இடுப்பில் மட்டுமின்றி அந்தப் பக்க காலிலும் வலி பரவலாம்.
  • ஒருங்கே வைத்துப் பார்த்தால் அந்தக் கால் மற்றக் காலை விடக் கட்டையானது போலத் தோற்றமிளிக்கும்.

உடைவினால் படுக்கையில் கிடக்க நேர்ந்தால் படுக்கைப் புண்கள் ஏற்பட வாய்ப்புண்டு. சிறுநீர்த் தொற்று நோய், நியூமோனியா போன்ற பிரச்சனைகள் தொடரலாம்.

மிக ஆபத்தானது குருதி நாளங்களில் இரத்தம் (Deep Vein thrombosis) கட்டிபடுவதாகும்.

சிகிச்சையாக பெரும்பாலும் சத்திரசிகிச்சையே தேவைப்படும் என்பதால் விழுந்து விடாமல் தங்களைப் பாதுகாக்க முதியவர்கள் அதிக கவனம் எடுக்க வேண்டும்.

படத்தின் மீது கிளிக் பண்ணி பெரிதாக இப்படத்தைப் பார்க்கவும்.

Falls_Prevention_Infographic (1)

விழாமல் பாதுகாப்பாக இருப்பது பற்றி மேலும் அறிய எனது முன்னைய பதிவைப் பார்க்கவும்

வயதானவர்களின் விழுகை!

மேலதிக கல்சியம் ஆண்களுக்கும் தேவையா?

0.0.0.0.0.0

Read Full Post »

பாலியல், பாலுறவு, பாலியல் உணர்வுகள், பாலியல் செயற்பாடுகளில் திருப்தி மற்றும் திருப்தியின்மை போன்றவை எமது சமூகத்தில் வெளிப்படையாகப் பேசப்படுவதில்லை. நாலு பேர் மத்தியில் பேசுவதற்கு அசூசைப்படுகிறோம். தூஸணை வார்த்தைகள் போல  உச்சரிக்க சங்கோசப்படுகிறோம்.

 03-Old Age

பாலுணர்வானது உயிரினங்களின் வாழ்வின் தொடர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் இன்றிமையாத அம்சமாக விளங்குகிறது. இருந்தபோதும் அவற்றைப் பேசா மொழிகளால் மறுதலிக்கிறோம்.

அதிலும் முக்கியமாக வயது முதிர்ந்தவர்களின் பாலியல் உணர்வு பற்றிய எண்ணமே எமது சமூகத்தில் அறவே கிடையாது எனலாம். பாட்டா பாட்டியுடன் நெருங்கிப் பேசினால் கிழட்டு வயதில் செல்லம் கொஞ்சிறார் என நக்கல் அடிக்கிறோம்.

 Old-Age-Sex-White-Hair-Couple

அம்மப்பாவிற்கு தலையிடி என்பதால் ஆதூரத்துடன் நெற்றியைத் வருடிவிடும் அம்மம்மாவின் செயல் பிள்ளைகளுக்குச் சினமாக இருக்கிறது.

‘தேவார திருவாசகம் ஓதிக் கொண்டு அல்லது வேதமொழிகளைப் படித்துக் கொண்டு மூலையில் கிடக்க வேண்டிய ஜன்மங்கள் அவர்கள்’ போன்ற எண்ணமே மேலோங்கியிருக்கிறது.

ஆனால் மேலை நாடுகளில் முதியவர்களின் பாலியல் உணர்வுகள், ஈடுபாடுகள் பற்றிய ஆரோக்கியமான ஆய்வுகளும் விவாதங்களும் நடைபெறவே செய்கின்றன.

அப்படியான ஒரு ஆய்வு The University of California, San Diego School of Medicine and Veterans Affairs ல் நடைபெற்றது.

 cutekissloveoldromancefavimcom119034large_1

பாலியல் ரீதியான திருப்தியை அவர்களில் கண்டறிவதற்கானது இந்த ஆய்வு 806 வயோதிபப் பெண்களின் 40 வருட மருத்துவப் பதிவேடுகளை ஆதாரமாகக் கொண்டு செய்யப்பட்டது. அவர்களுடைய சராசரி வயது 67 ஆக இருந்தது. 63 சதவிகிதமானவர்களுக்கு மாதவிடாய் நின்று விட்டது.

ஆச்சரியப்பட வைக்கும் சில முடிவுகள்

அந்தக் கிழங்களில் பாலியல் பற்றிய ஆய்வா எனக் கேட்பவர்கள் மூக்கில் விரலை வைத்து ஆச்சரியப்படும்படியாக சில முடிவுகள் இருந்தன.

  • கணவன் பாலியல் ரீதியான ஆர்வமும்; செயற்திறனும் உள்ளவராயின், அவர்களில் 50 சதவிகிதமானவர்கள் கடந்த 4 வாரங்களிடையே உடலுறவு வைத்ததாகக் கூறினர்.
  • அவர்களில் 67 சதவிகிதமானவர்கள் உடலுறவின் உச்ச கட்டத்தை எட்டியதுடன் அதில் திருப்தியும் அடைந்தனர். கணவனின் விந்து வெளியேற்றம் தங்களது உச்சகட்டத்திற்கு முதலே நிகழ்ந்துவிடுகிறது என பெரும்பாலான இளம் பெண்கள் கவலைப்படும் இன்றைய நிலையில் 67 சதவிகிதமான முதிய பெண்கள் திருப்தியடைந்தமை ஆச்சரியப்பட வைத்தது.
  • அவ்வாறு திருப்தியடைபவர்கள் பலர் இருந்தபோதும் 40 சதவிகிதமான பெண்கள் தங்களுக்கு ஒருபோதும் பாலியல் ஆர்வம் இருக்கவில்லை என எதிர்மாறாகக் கூறினார்கள். மேலும் 20 சதவிகிதமான பெண்கள் தங்களுக்கு மிகக் குறைந்தளவே ஆர்வம் இருந்தது என்றார்கள்.
  • 80 வயதிற்கு மேற்பட்ட பெண்களில் 50 சதவிகிதமானவர்கள்; தங்களுக்கும் கூட அடிக்கடி பாலியல் உந்தல், உறுப்பில் ஈரலிப்புத்தன்மை,  உச்சகட்ட உணர்வு ஏற்பட்டதாகக் கூறினர். இருந்தபோதும் பாலியல் ஆர்வம் குறைவாகவே இருந்ததாகக் கூறினர்.

ஆனால் சாதாரண பெண்களில் பாலியல் ஆர்வமே உடலுறவிற்கு இட்டுச் செல்கிறது என்பதை நாம் அறிவோம். ஆர்வம் இல்லாதபோதும் இவர்கள் உடலுறவு கொள்வதற்கு காரணம் என்ன?

தனது கணவன் அல்லது பாலியல் பங்காளியுடனான உறவை உறுதிப்படுத்தவும் தொடருவதற்காகவுமே அவ்வாறு ஆர்வம் இல்லாதபோதும் கூட உறவு கொள்கிறார்கள் என ஆய்வாளர்கள் எண்ணினார்கள்.

  • பொதுவாக வயது முதிரும்போது பாலியல் திருப்தி ஏற்படுவது குறைவு என்றே நம்பப்படுகிறது. ஆனால் இந்த ஆய்வானது வயது முதிர முதிர பாலியல் திருப்தி அதிகம் ஏற்படுவதாகக் கூறுகிறது. அதிலும் 80 வயதிற்கு மேட்பட்டவர்களில் கிட்டதட்ட எப்பொழுதும் ஏற்படுவதாகக் கூறுகிறது.
  • மிக முக்கியமான விடயம் பாலியல் திருப்தியடைவதற்கு புணர்ச்சி எப்பொழுதும் அவசியமாக இருந்திருக்கவில்லை. தொடுகை, அன்பாகத் தட்டிக்கொடுத்தல், சரசலீலை, போன்ற எல்லாவித உள்ளார்ந்த நெருக்க நிலைகளும் திருப்தியை அவர்களுக்குக் கொடுத்தன.

இதிலிருந்து தெரிவதென்ன? உணர்வுரீதியான மற்றும் உடல் ரீதியான நெருக்கமானது பாலுறவின் உச்சநிலையை அனுபவிப்பதை விட முக்கியமானதாக இருக்கலாம்.

எனவே பெண்களின் பாலியல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில் அவர்கள் பாலியல் செயல்பாட்டில் ஈடுபடுகிறார்களா, செயற்பாட்டில் குறைபாடுகள் இருக்கின்றனவா போன்றவற்றை ஆராயும் அணுகுமுறைக்குப் பதிலாக அவர்களின் உளத் திருப்தி மையமாக கொண்ட அணுகுமுறையே அதிக நன்மை பயப்பதாக இருக்கலாம்.

மற்றொரு ஆய்வு

2007ல் செய்யப்பட்ட மற்றொரு ஆய்வும் வயதானவர்களின் பாலியல் செயற்பாடுகள் தொடர்வதை உறுதிப்படுத்தியது. 57 வயதிற்கும் 85 வயதிற்கும் இடைப்பட்ட 3000 வயோதிப அமெரிக்கப் பெண்களில் ¾ பங்கினர் ஏதாவது ஒரு வகை பாலியல் செயற்பாட்டில் ஈடுபட்டதை உறுதிப்படுத்தியது.

பெண்களில் மட்டுமின்றி ஆண்களும் முதிரும்போது

  • உடல் உள ரீதியான பாலியல் ஆற்றாமைகள் அதிகரிக்கின்றன,
  • முன்னரைபோல அடிக்கடி ஈடுபட முடிவதில்லை
  • ஆயினும் பாலியல் உணர்வும் ஆர்வமும் குறைவதில்லை.
  • பாலியல் பங்காளி இன்னமும் உயிருடன் இருப்பதுடன், செயற்திறன் குறையாதிருந்தால் பாலியல் செயற்பாடுகள் குறைவதில்லை என்றது.
 Old-couple1
ஆற்றாமைகள் அதிகரிக்கின்றன

இவர்களது பாலியல் செயற்பாட்டு முறைகளாவன ஏனைய வயதினர் செய்வதை ஒத்ததே. பெரும்பாலனவர்கள் வழமையான யோனியுறவு கொண்டார்கள். சிலர் மாறி மாறி வாய் புணர்ச்சி செய்தார்கள். இன்னமும் சிலர் தற்புணர்ச்சி (masturbation) செய்ததும் உண்டு.

செய்ய வேண்டியது என்ன?

எமது சமூகம் இனப்பாகுபாடு இன ஒடுக்குமுறை ஆகியவை பற்றி வாய் கிழியப் பேசுகிறது. ஆனால் முதியவர்களின் பாலியல் உணர்வுகளை மதிப்பதில்லை. ஜடங்கள் போலவே கணிக்கிறார்கள். சருமம் சுருங்கியபோதும் அவர்களது உணர்வுகளும் மனமும் அன்றலர்ந்த மலர்போல மென்மையாகவே இருப்பதை உணர்வதில்லை. அவர்களது பாலியல் உணர்வுகளைப் புரிவதில்லை.

அவர்களது பாலியல் உணர்வுகள் மற்றும் செயற்பாடுகள் ஆகியவற்றிற்கு

  • அங்கீகாரமும் ஆதரவும் வழங்குவதில்லை.
  • அல்லது அவை பற்றி சிந்திக்கவோ பேசவோ முயல்வதில்லை.
  • அதற்கான சந்தர்ப்ப வாய்ப்புகளை அவர்களுக்கு அளிப்பதில்லை. உங்கள் குழந்தையை இரவில் அவர்களுடன் தூங்கவிட்டால் உங்களால் சுகம் காண முடியும். ஆனால் பாட்டன் பாட்டிகளுக்கு பேசவும், தழுவவும் அருகிருக்கவும் தனிமையானது எட்டாக் கனியாகிவிடும்.
 Children_Sleeping_In_Their_Parents_Bed_Royalty_Free_Clipart_Picture_091010-006362-272053

இது தவறான அணுகுமுறை. அவர்களின் உணர்வுகளை மதியுங்கள். அவர்கள் அவ்வாறு ஈடுபடுவதற்கான சூழலானது எமது கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையில் குறைவு. கூட்டுக் குடும்பமாக இல்லாவிடினும், முதிர்ந்த பெற்றோர் பிள்ளைகளது வீட்டில் தங்கியிருப்பதற்கான தேவைகள் அதிகரிக்கின்றன.

  • இத்தகைய நிலையில் அவர்களது தனிப்பட்ட உணர்வுகளுக்கும் செயற்பாட்டிற்கும் உகந்த சூழலை ஏற்படுத்திக் கொடுங்கள்.
  • அவ் விடயத்தில் அவர்களது செயற்பாடுகளை ஏளனமாகப் பார்ப்பதையும், குற்றம் குறை சொல்வதையும் நிறுத்துங்கள்.
  • இது பற்றிய வெளிப்படையான கலந்துரையாடலை சம்பந்தப்பட்டவருடன் தனிப்பட்ட முறையில் ஆரம்பியுங்கள்.
  • அவர்களது வாழ்வில் வசந்தம் மீண்டும் மலரட்டும்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), MCGP (col)
குடும்ப மருத்துவர்
21.012.2013 எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை
0..0..0..0

Read Full Post »

அந்த மூதாட்டியைப் பார்த்ததும் மனம் கனத்தது. வாழ்க்கைச் சக்கரத்தின ஆரம்கட்டமான கருப்பையில் இருந்ததுபோல அவளது உடல் சுருண்டு கிடந்தது. முதுகு கூனிக் குறுகியிருந்தது.

old-age-2

கால்கள் குந்தியிருக்கும்போது மடிந்திருப்பதுபோல மடிந்திருந்தன. அவற்றை நீட்ட முடியவில்லை. அவளால் செய்ய முடியாதது மட்டுமல்ல நான் முயன்றும் முடியவில்லை. முழங்கால் மூட்டுக்கள் இறுகிக் கிடந்தன. அவளால் நடக்க முடியாது. பம்போரிஸ் கட்டித்தான் அவளது மலம் கழிவதைச் சமாளிக்கிறார்கள்.

100_1818-1

ஆனால் அவளால் சாப்பிட முடிகிறது. நீராகாரம் அருந்த முடிகிறது. மாறாட்டம் சற்று இருந்தாலும் நினைவு நல்ல நிலையில் இருந்தது. அவளது வயது 91 மட்டுமே.

‘வயசாகிபோய் உடம்பு தளர்ந்து போச்சு’ என்றாள் தட்டுத் தடுமாறி வந்தவள். 70 வயதுகளை அண்டிக் கொண்டிருக்கும் அவளது மகள் இவள்.

வயதானவர்களின் துன்பங்கள் பற்றிய ஒரு அனுபவப் பதிவு ‘எனக்குச் சாக ஏதும் மருந்துதாங்கோ’ துயரக் குரல் பின் கதவில் கேட்கிறது.

மூப்படைதல்

முதுமையாவதின் பிரச்சனைகளை எமது நாட்டிலும் இப்பொழுது பரவலாகக் காணக் கிடைக்கிறது. மிகவும் முதுமையடைந்த பெற்றோர்களை பராமரிக்க முடியாது முதுமையின் ஆரம்பப் படியிலிருக்கும் பிள்ளைகள் சிரமப்படுகிறார்கள். மேல்நாடுகளைப் போல இங்கும் அரச ரீதியான ஆதரவும் பராமரப்பும் தேவையென்பதை உணர முடிகிறது.

மூப்படைவது உடலைத் தளரச் செய்கிறது என்கிறார்கள். எலும்புகள் மூட்டுகள், தசைகள் எனப் பலவும் வயது அதிகரிப்பின்போது பாதிப்படையவே செய்கின்றன. மூட்டு எலும்புகளின் தேய்வு (Osteoarthritis),தேய்வடையும் எலும்புகள் (Osteoporosis) , ரூமட்ரோயிட் மூட்டுவாதம் போன்ற பல நோய்களும் வயதானவர்களைப் பாதிப்பது அதிகமானாலும் மேற்கூறிய எலும்புகள் மூட்டுகள், தசைகள் ஆகியவற்றின் பாதிப்பிற்கு அவை மட்டுமே காரணமல்ல.

arthritis-hand

வயதாகும் போது சருமம் சுருங்குவதுபோல, தலைமுடி நரைப்பதுபோல, தசைகள் வலுவிழக்கும், எலும்புகள் கோதாகும் மூட்டுக்கள் பாதிப்புற்று மடங்க முனையும். இவை தவிர்க்க முடியாதது என்றே பலரும் எண்ணுகிறார்கள். அவ்வாறே நீண்டகாலம் மருத்துவர்களும் எண்ணினார்கள்.  வயது காரணமல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அப்படியானால் காரணம் என்ன? செயற்பாட்டின்மை என்கிறார்கள். மூப்படையும்போது இயலாமை ஆட்கொள்கிறது. நாளாந்த செயற்பாடுகள் குறைகின்றன. நடமாட்டமும் குறைகிறது. இதனால்தான் அவ்வாறு நிகழ்கிறது எனக் கருதுகிறார்கள்.

தசைகளில் ஏற்படும் மாற்றஙகள்

வயதாகும்போது உருண்டு திரண்டு வலுவுடன் இருந்த தசைகள் தளர்ந்து சுருங்குகின்றன. இதனால் இலகுவில் களைப்படைகின்றன. வழமைபோல இயங்க முடியாது சோர்வுற வைக்கின்றன. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.

  • முக்கியமானது தசை நார்களின் எண்ணிக்கையும் திண்ம அளவும் குறைகிறது.
  • அவ்வாறு குறையும் இடத்தை அவற்றின் இடத்தை நிரப்புபவைfibrous tissueஆகும். இவை tough,கடினமானவை, நெகிழ்சி குறைந்தவை. அதனால் சுரங்கி விரிந்து செயற்படுவது சிரமம்.
  • நரம்பு மண்ணடலத்தில் ஏற்படும் மாற்றங்கள் காரணமான அவற்றின்tone குறையும். இதனால் சுருங்கும் (contract) ஆற்றல் குறையும்.

எலும்புகளில் ஏற்படும் மாற்றஙகள்

எலும்புகள் கல்லுகள் போலத் தோன்றினாலும் அவையும் உயிருள்ள இழையங்களே. வயதாகும் போது அவற்றின் கட்டமைப்பில் (Structure of bone) மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவற்றின் திண்மம் குறைகிறது. வலுவிழக்கின்றன. எலும்புகள் சிறிய தாக்கத்தினாலும் உடைகின்றன.

17285

இவற்றிற்கான காரணங்கள் என்ன?

  • செயலூக்கமற்ற வாழ்க்கை முறை.
  • ஹோர்மோன் அளவுகளில் வீழ்ச்சி ஏற்படுதல் – முக்கியமாகப் பெண்களில் மாதவிடாய் முற்றாக நின்ற பின்னர் எலும்புகளின் அடர்த்தி நலிவடையத் தொடங்கி ஒஸ்டியோபொரொசிஸ் நோயைக் கொண்டு வருகிகறது. அதேபோல ஆண்களில் இம் மாற்றம் படிப்படியாக ஏற்படுகிறது.
  • எலும்புகளிலுள்ள கல்சியம் ஏனைய தாதுப் பொருட்கள் வீழ்ச்சியடைகின்றன. ஆதனால் அவை நலிவடைகின்றன.

மூட்டுகளில் ஏற்படும் மாற்றஙகள்

எமது உடலில் முழங்கால் மணிக்கட்டு, இடுப்பு, தோள் மூட்டு எனப் பல்வேறு மூட்டுகள் இருக்கின்றன. இவற்றில் எலும்புகள் ஒன்றோடு ஒன்று முட்டி உரசுவதில்லை. குருத்தெலும்புகள் (cartilage) அவற்றை மூடி மூட்டுக்குரிய சவ்வுகள் (synovial membranes)> அவை உராசிதிருக்க மூட்டுக்குரிய திரவம் (synovial fluid) என வழுவழுப்புடன் உராய்வின்றி, நழுவி இயங்குமாறு பொறியலாளருக்கான நிபுணத்துவத்துடன் படைக்கப்பட்டுள்ளன.

வயதாகும்போது மூட்டுக்குரிய திரவம் குறைவடைகிறது, குருத்தெலும்புகள் தேய்கின்றன. இதனால்தான் அவை இறுகி அதன் அசைவுகளில் நெகிழ்சித்தன்மை குறைகிறது. மூட்டுகளை இணைக்கும் சவ்வுகள் குறுகுகின்றன. ஆவற்றால்தான் வயதானவர்கள் தமது மூட்டுகளை அசைப்பது சிரமமாக இருக்கிறது.

ஆனால் இவற்றில் பெரும்பாலனவற்றிற்கு வயது மட்டும் காரணமல்ல. போதிய பயிற்சி இல்லாமை காரணமாகும். இயங்கிக் கொண்டிருக்கும்போது மூட்டுக்குரிய திரவம் சுரந்து பரவிக் கொண்டிருக்கும். செயலற்றிருக்கும்போது திரம் சுரப்பது குறைந்து குருத்தெலும்புகள் தேய்ந்து மூட்டு இறுகிவிடுகிறது.

தடுக்கும் வழி என்ன?

ஒரே வழி தொடர்ந்து இயங்குவதும் மூட்டுகளுக்கு பயிற்சிகள் கொடுப்பதும் மட்டுமே. இதை பல மருத்துவ ஆய்வுகள் உறுதிப்படுதியுமுள்ளன.

OldCoupleWalking

  • பயிற்சிகள் எலுத்புகளை வலுவுடையதாக்கும். எலும்புத் தேய்வு ஏற்படுவது குறைவடையும்.
  • தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளை வயதாகும்போது தொடர்ந்து செய்வது அவசியம்.
  • உடலின் சமநிலையைப் பேணுவதற்கும் அவற்றின் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்குமான பயிற்சிகளும் அவசிமாகும்.
  • முடியுமானவர்கள் நீந்துவதும் நல்லது. இது அவர்களது தசைகள் தேயாதிருக்க உதவும்.
  • தசைகளை நீட்டி மடக்கும் பயிற்சிகளும் மூட்டுகள் இயங்குவதற்கு உதவும்.
  • ஓய்ந்து சோம்பிப் படுத்துக் கிடக்காது தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பது எலும்புகள் தேய்வுற்று ஒஸ்டியோபொரோசிஸ் ஏற்பாது தடுக்க உதவும்.

எனவே முதியவர்களே நீங்கள் எதிர்காலத்தில் அடங்கி முடங்கிப் படுக்கையில் கிடக்க வேண்டிய நிலை ஏற்படாதிருக்க வேண்டுமெனில் இயங்குங்கள், இயங்குங்கள், இயங்கிக் கொண்டேயிருங்கள்.

விட்டிலுள்ள ஏனையவர்களே உங்கள் வீட்டில் உள்ள முதியவர்களுக்காக சில மணித்துளிகளை ஒதுக்குங்கள். அவர்கள் படுக்கையில் வீழ்ந்துவிடாதிருக்க வேண்டுமாயின் உங்கள் ஒத்தாசையும் ஊக்குவிப்பும் அவசியம்.அவர்களை விட்டிற்கு வெளியே அழைத்துச் செல்லுங்கள். நடக்கவும் பயிற்சிகள் செய்யவும் உதவுங்கள். இல்லையேல் படுக்கையில் வைத்துப் பராமரித்து அல்லாடப் போவது நீங்கள்தான்.

மற்றொரு வயோதிபரின் பரிதாபமான பாடுகள் வயது போனவர்தானே. வைத்தியம் செய்தும் என்னத்தைக் ….

A young hand touches and holds an old wrinkled hand

அதுமட்டுமல்ல நீங்களும் ஒருநாள் முதுமையிடைவீர்கள் என்பதை நினைவில் வைத்திருங்கள். அவர்களுக்கு உதவுவதுடன் நின்றுவிடாது எதிர்காலத்தில் நீங்கள் துன்புறாதிருக்க உற்சாகமாக இருங்கள். சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைக் கடைப்பிடியுங்கள். பயிற்சிகளை இப்பொழுதிருந்தே ஆரம்பியுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன். 

MBBS(Cey), DFM (Col), MCGP (col)

குடும்ப மருத்துவர்

எனது ஹாய் நலமா புளக்கில் ஏற்கனவே வெளியான கட்டுரை கூனிக் குறுகி வலுவிழப்பது மூப்படைவதின் நியதியா?

0.0.0.0.0.0.0

Read Full Post »

உடல் தளர்ந்து, கண்கள் மூடியும், திறவாமலும் சோர்ந்திருந்ததன. அவரது முக்கிய பிரச்சனை ‘நித்திரை வருகுதில்லை’ என்பதுதான்.

உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்த்மா போன்ற நோய்களும் அவருக்குத் தொல்லை கொடுக்கின்றன.

“பகல் முழுதும் கதிரையில் இருந்து தூங்குவார். இரவும் எட்டு மணிக்கே படுத்திடுவார். ஆனால் எப்பவும் நித்திரை இல்லை எண்டுதான் சொல்லூர்” என்று அலட்சியமாகக் கூறினாள் கூட்டிக் கொண்டு வந்த மகள்.

இது அவருடைய பிரச்சனை மட்டுமல்ல. பெரும்பாலான வயதானவர்களைப் பாதிக்கும் பொதுவான பிரச்சனைதான்.

  • பகலெல்லாம் தூங்கி விழுவது,
  • நேர காலத்துடன் இரவு 7-8 மணிக்கே படுத்துத் தூங்குவதும்,
  • அதிகாலை 3-4 மணிக்கெல்லாம் தூக்கம் கலைந்து எழுந்து சிரமப்படுவதும்

பல வயதானவர்ளைப் பாதிக்கும் பிரச்சனைகள் தான்.

இதற்குக் காரணம் வயதாகும் போது எமது உடலியக்கத்தின் ஒழுங்கு லயத்தில் ஏற்படும் குழப்பங்களே ஆகும். இதனை முன்நகர்ந்த நித்திரை (Advanced Sleep Phace) என்பார்கள்.

அதாவது தூக்க நேரம் முன்னகர்கிறது. உண்மையில் இது தூக்கக் குழப்பமே அன்றித் தூக்கக் குறைபாடு அல்ல. அத்தோடு தூக்கக் குறைபாடும் இருக்கக் கூடும் என்பதை மறுப்பதற்கில்லை.

முன்நகர்ந்த நித்திரை

பொதுவாக மனிதர்களுக்கு 6 முதல் 7 மணிநேர நித்திரை தினசரி தேவை.அவ்வாறு தூங்கினால்தான் உடலில் புத்துணர்ச்சி ஏற்படும். தூக்கம் குறைந்தால் அல்லது குழப்பமான தூக்கமாக இருந்தால் உடல் சோர்வடையும், மனத்தை ஒருமுகப்படுத்த முடியாது. சிந்தனைத் திறனும் குறையும்.

மேற் கூறிய முன்நகர்ந்த நித்திரையைத் தவிர வேறு பல காரணங்களாலும் வயதானவர்களின் தூக்கம் குறையலாம்.

நோய்கள் காரணமாகலாம்

  • மூட்டு வாதம்,
  • பார்க்கின்சன் நோய்,
  • ஆஸ்த்மா,
  • இருதய நோய்கள்,
  • உணவுக் கால்வாய் நோய்கள்,
  • பக்கவாதம்,
  • மனச் சோர்வு

போன்ற இன்னும் பல்வேறு மூப்புக் கால நோய்களும் அவர்களது தூக்கததைக் குறைக்கும்.

மருந்துகளும் காரணமாகலாம்

வயதாகும் போது பல்வேறு நோய்கள் உடலைத் தாக்கக் கூடும் அல்லவா? ஆஸ்தமா, பிரஜர், தைரொயிட் சுரப்பி நோய்கள், மனச் சஞசலம் போன்ற பல்வேறு நோய்களுக்கு தினசரி உபயோகிக்கும் மருந்துகளும் தூக்கக் குழப்பத்திற்குக் காரணமாகிறது.

எனவே தூக்கக் குழப்பம் உங்களைத் துன்பப்படுத்துகிறதாயின் உங்கள் வைத்தியருடன் வெளிப்படையாகக் கதையுங்கள்.

  • அவரது ஆலோசனைகள் உங்கள் பிரச்சனைக்கான காரணத்தைக் கண்டு பிடிக்கவும்,
  • பிரச்சனையைத் தீர்ப்பதற்கும் உதவும்.
  • வேறு நோய்களுக்கு எடுக்கும் மருந்துகள்தான் காரணம் என அவர் கருதினால் அம் மருந்துகள் உட்கொள்ளும் நேரத்தை மாற்றக் கூடும் அல்லது மருந்தையே மாற்றவும் கூடும்.

நீங்களும் முயற்சியுங்கள்

உங்கள் தூக்கக் குழப்பத்தை தீர்க்க நீங்களும் சில முயற்சிகள் செய்யலாம்.

  • உங்களுக்கு உற்சாகத்தை ஊட்டும், உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டும் அல்லது பரபரப்பை ஏற்படுத்தும் எந்தச் செய்கையிலும் படுக்கைக்குப் போவதற்கு முன்னரான ஒரு மணி நேரத்திற்குள் ஈடுபட வேண்டாம்.
  • உதாரணமாக விறுவிறுப்பான தொடர் நாடகங்களை ரீவியில் பார்ப்பது, ஆர்வமூட்டும் நூல்களைப் படிப்பது, சுவார்ஸமான விவாதங்களில் ஈடுபடுவது, உணர்ச்சி மயப்படுவது போன்ற செய்கைகளை படுக்கைக்குச் செல்லும் தருணங்களில் நீங்கள் தவிர்க்க வேண்டும்.
  • கடுமையான வெளிச்சமும், இரைச்சலான சூழலும் உங்களைத் தூங்கவிடாது. எனவே ஆரவரமற்ற, ஒளி குறைந்த சூழலில் படுக்கைக்குப் போவதற்கு முந்திய சில நிமிடங்களைக் கழியுங்கள்.
  • படுக்குமிடமும் அத்தகையதாக இருக்க வேண்டும் என்பது சொல்லாமலே தெரியும்தானே.

  • நரம்புகளைத் தூண்டும் பானங்களான கோப்பி, மது, கோக் போன்றவற்றை மதியத்திற்குப் பின் அருந்த வேண்டாம்.
  • மதியத்திற்குப் பின் அதிக நீராகாரம் அருந்த வேண்டாம். அடிக்கடி சிறுநீர் கழிக்க எழ நேர்ந்தால் தூக்கம் குழம்பும் அல்லவா?
  • தூங்கப் போவதற்கான நேரத்தை ஒழுங்காகக் கடைப்பிடியுங்கள். உதாரணமாக இரவு 10 மணிக்குப் படுத்து காலை 5 மணிக்கு எழுவது போன்ற உங்களுக்கு உகந்த ஏதாவது ஒரு ஒழுங்கான நேர அட்டவணையை தினசரி தவறாமல் கடைப்பிடியுங்கள்.
  • மதிய உணவிற்குப் பின் தினசரி தூங்குபவராயின் அதனை 15 முதல் 30 நிமிடங்களாக மட்டுப்படுத்துங்கள்.
  • மாலை நேரத்தில் சற்று உலாவச் செல்லுங்கள். தினசரி கை கால்களைச சற்று நீட்டி மடக்கி சிறிது உடற் பயிற்சி செய்யுங்கள்.

இவற்கைக் கடைப்பிடித்துப் பாருங்கள் உங்கள் தூக்கத் தொல்லை தீரும்.

ஹாய் நலமா வலைப்பூவில் எழுதிய கட்டுரையின் மீள் பதிவு

0.0.0.0.0.0.0

Read Full Post »

>

இல்லம் கழிவறை போலாவதைத் தடுக்கும் சிறுநீர் அகற்றும் குழாய்

ஒரு வீட்டினுள் நுழைகிறீர்கள். கழிவறை போல நாற்றம் விரட்ட முனைகிறது. உங்களையறியாது கை மூக்கைப் பொத்துகிறது. “ஐயாவிற்கு (அல்லது அம்மாவிற்கு) பாத்ரூம் போவதற்கிடையில் சிந்திவிடுகிறது. கொன்ரோல் இல்லை” என்கிறார் வீட்டுக்காரர் மிகுந்த சங்கோசத்துடன். அவமானம் மட்டுமல்ல சுகாதரக் கேடும் கூட.

இதற்கான தீர்வு சிறுநீர் அகற்றும் குழாய்தான் என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை. மாறாக தெளிவாகப் புரிந்து, சரியாகப் பயன்படுத்தி மற்றவர் மதிக்கும் வண்ணம் உயர் தொழிலைத் தொடரும் வெற்றியாளர்களும் இருக்கவே செய்கிறார்கள். ஆம்! சிறுநீர் அகற்றும் குழாய் இன்று பல முதியவர்களுக்கு இன்றியமையாத அங்கமாக இருக்கிறது. அவர்களின் உற்ற துணையாக வாழ்வின் பங்காளியாகி விட்டது.

கழிப்பதின் சுகமும் அதைக் கெடுப்பவர்களும் பற்றி  கழிப்பறையில் அழைப்பு

இரண்டு உதாரணங்கள்.

நான் வேலையாக இருந்தபோது திடீரெனக் கழிவறை நாற்றம் பொறுக்க முடியாதளவு வீச ஆரம்பித்தது. மருத்துமனையின் பின்புறத்தில்தான் கழிவறை. எப்பொழுதும் சுத்தமாக வைத்திருப்பார்கள். இன்று ஏன் இத்தனை நாற்றம் என எண்ணிக் கொண்டிருக்கையில் ‘நிறுத்து உன் சிந்தனையை’ எனச் சொல்வது போல நுழைந்தார் அந்த முதியவர். நாற்றம் அவரது ஆடைகளிலிருந்துதான்  அபரித விளைச்சல் கொண்டிருந்தது.

அவரால் சிறுநீர் வெளியேறுவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மருந்துகள் கொடுத்தும் முடியவில்லை. உடைகள், படுக்கை, உற்காரும் நாற்காலி யாவும் புனித நீராபிசேகம் பெற்றதால் சிறுநீர் அகற்றும் குழாய் போட வேண்டியதாயிற்று.

மற்றவரும் முதியவர்தான். “மூத்திரம் சரியாகப் போகுதில்லை” என்ற இவர் சொன்ன பிரச்சனையைச் சரியாகப் புரியாத சுதேச மருத்துவர் தனது கல்வி சாராத மருந்தைக் கொடுத்த போது பிரச்சனை மோசமாகியது.

சிறுநீரை அதிகம் உற்பத்தி செய்யும் (Lasix) மருந்து அது. உள்ளே உள்ளதே வெளியேற முடியாதிருக்கையில் மேலும் சிறுநீரை உற்பத்தியாக்கும் மருந்தைக் குடித்ததால் வயிறு முட்டி வேதனை மோசமடைந்தது. எந்நேரமும் சிறுநீர்கழிக்க வேண்டும் போன்ற உணர்வு. ஆனால் சிறுநீர் ஒரு சில சொட்டுகள் தவிர முழுமையாக வெளியேற மறுத்தது.

பரிசோதனைக்காகப் படுக்கையில் போடு முன்னரே அவரது அறிகுறிகளிருந்து அவருக்குள்ளது புரஸ்ரேட் பிரச்சனை என்பது தெளிவாகத் தெரிந்தது. அவருக்கும் சிறுநீர் அகற்றும் குழாய் ஒன்றே தீர்வாயிற்று.

இது சிறுநீர்த் துவராம் ஊடாகச் செலுத்தப்படும் ஒரு குழாயாகும். அதன் ஒரு முனை சிறு நீர்ப்பையினுள் செலுத்தப்பட்டு இருக்கும். வெளியே உள்ள முனை ஒரு பிளாஸ்டிக் பையுடன் இணைந்திருக்கும். சலப்பையினுள் உள்ள சிறுநீரை தொடர்ச்சியாக அகற்றி, வெளியிலுள்ள அப் பையினுள் சேர வைக்கிறது.

சேரும் சிறுநீரை பை நிறைந்ததும் அகற்ற வேண்டும். பிளாஸ்டிக் பையி;ன் மறுமுனையில் உள்ள மூடியைத் திறந்து அகற்ற வேண்டும். குழாயைக் கதீட்டர் (Catheter) என்பார்கள். தொடர்ந்து அணிந்திருப்பதால் உள்ளுறையும் Indwelling Catheter என்பர்.

சிறுநீர் அகற்றும் குழாய் போடுவதற்கான காரணங்கள் அவை இரண்டும்தான்.

  • கட்டுப்பாடின்றி சிறுநீர் வெளியேறல்
  • சிறுநீர் தானாக வெளியேற முடியாமல் தடைப்படுதல்

இவை பெரும்பாலும் வயதானவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைதான். அத்தகைய நோயாளிகள் வீட்டிலேயே இருக்க நேர்வதால் அதனைச் சரியான முறையில் கையாள வீட்டில் உள்ளவர்களுக்கு தெளிவு தேவை. நடமாடக் கூடிய நோயாளர்கள் எனில் நோயாளிகளே அக்கறை எடுக்க வேண்டும்.

  • குழாய் சரியான முறையில் செற்;பட்டு சிறுநீர் ஒழுங்காக வெனியேறுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.
  • அந்தக் குழாயும் அதனைச் சுற்றியுள்ள சருமமும் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையேல் குழாய் ஊடாக கிருமிகள் சிறுநீர்ப்பைக்குள் சென்றுவிடக் கூடிய ஆபத்து உண்டு. அத்துடன் சருமத்தில் அழற்சி ஏற்படாமலும் தடுக்கும்.

குழாய் பராபரிப்பு

குழாய் எப்பொழும் உங்கள் இடுப்புப் பகுதிக்கு கீழே இருப்பதை உறுதிப்படுத்துங்கள். உயரத்திலிருந்து பதிவான இடத்தை நோக்கி சிறுநீர் இலகுவாக வெளியேறும். குழாயில் மடிப்புகள் சுருக்கங்கள் இல்லாதிருப்பதும் சிறுநீர் சுலபமாக வெளியேறுவதை உறுதி செய்யும். போதியளவு நீராகாரம் அருந்துவது அவசியம்.

வெளியேறும் சிறுநீரில் படிவுகள் இருக்கிறதா, இரத்தம் கலந்திருக்கிறதா, அதன் மணம் மற்றும் நிறத்தில் மாற்றம் இருக்கிறதா போன்றவற்றை அவதானிக்க வேண்டும்.

சருமத்தை சுத்தம் செய்தல்

சிறுநீர்க் குழாயை அண்டியுள்ள சருமம் சுத்தமாக இருக்க வேண்டும்.
அதைச் சுத்தப்படுத்துவதற்கு முதல் உங்கள் கைகள் சுத்தமாக இருக்க வேண்டும். இல்லையேல் கையிலுள்ள கிருமி அங்கு பரவிவிடும்.

முதலில் உங்கள் கைகளுக்கு சோப் போட்டு சுத்தமான நீரினால் கழுவ வேண்டும். முக்கியமாக விரல் இடுக்கள், நகக் கண்கள் ஆகியவற்றை அக்கறை எடுத்து நன்கு கழுவவேண்டும். நகக்கண் சூடுள்ள நீர் நல்லது.

சுத்தமான துணியை எடுத்து நீரில் நனைத்து அதில் சோப்பை போடுங்கள். குழாய் உங்கள் சிறுநீர்த் துவாரத்திற்குள் புகும் இடத்தை சுற்றிவர அத்துணியால் துடையுங்கள். ஆண்கள் ஆண்குறி நுனியிலிருந்து பின்புறமாகத் துடைக்க வேண்டும். பெண்கள் சலவாயில் பக்கமாக ஆரம்பித்து பிற்புறமாகத் மலவாயிலை நோக்கித் துடைக்க வேண்டும்.

அடுத்து துணியில் உள்ள சோப்பை நிறைய நீரினால் கழுவி சோப்பை அகற்றுங்கள். மீண்டும் புதிதாகச் சோப் இட்டு உங்கள் தொடைகளையும் குண்டிப் பகுதியையும் அதனால் சுத்தப்படுத்துங்கள். மீண்டும் துணியில் உள்ள சோப்பை நன்கு கழுவி அகற்றிய பின் அதனைப் பிழிந்து நீரையும் அகற்றுங்கள். அத்துணியால் ஈரங்களை ஒற்றி எடுங்கள். குழாயைச் சுற்றியுள்ள இடத்திற்கு கிறீம், பவுடர், ஸ்பிரோ போன்றவற்றைப் பாவிப்பது நல்லதல்ல.

இவ்வாறு தினமும் ஒரு தடவையாவது செய்ய வேண்டும். தேவை ஏற்படின் திரும்பவும் செய்யலாம்.

குழாயைச் சுத்தம் செய்தல்

சருமத்தைப் பேணுவது போல அல்லது அதைவிட அதிக கவனத்துடன் இதனைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எனவே தினமும் இரண்டு தடவைகளாவது இதனைச் சுத்தம் செய்வது நல்லது. முதலில் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல உங்கள் கைகளுக்கு சோப் போட்டு சுத்தமான நீரினால் கழுவ வேண்டும்.

வேறொரு துணியை எடுத்து அதை வெந்நீரில் நனைத்து சோப் போடுங்கள். உங்கள் சிறுநீர்த் துவாரத்தை அண்டிய பகுதியிலிருந்து கீழ் நோக்கி சிறுநீர் அகற்றும் குழாயை இத் துணியால் சுத்தப்படுத்துங்கள். அவசரப்பட்டு வேகமாக குழாயை இழுப்பது போலச் சுத்தம் செய்யலாகாது. உங்கள் சிறுநீர்த் துவாரத்தையோ அல்லது சிறுநீர்ப் பையையோ உறுத்தாதவாறு மென்மையாகச் சுத்தம் செய்ய வேண்டும்.

மேலிருந்து கீழ் நோக்கிச் சுத்தம் செய்ய வேண்டும்.

ஒருபோதும் கீழிருந்து மேலாக அதாவது சிறுநீர்த் துவாரத்தை நோக்கி சுத்தம் செய்யக் கூடாது. மற்றொரு துணியால் குழாயின் மேல் படர்ந்துள்ள ஈரத்தை துடைத்துவிடுவதுடன் இப்பணி நிறைவு பெறும்.

வேறு ஆலோசனைகள்

புதிதாகக் குழாய் போட்டால் அல்லது பழையதை அகற்றிப் புதுக் குழாய் பொருத்தினால் கடுமையான வேலைகளில் ஈடுபடுவதை 10 நாட்களுக்காவது தவிருங்கள்.

சற்றுக் கூடுதலாக நீர் அருந்துவது குழாய் தடையின்றி நன்கு செயற்பட உதவும். தினமும் 8-10 கிளாஸ் தண்ணீராவது அருந்துவது நல்லது.

குழாய் உங்கள் உறுப்பில் பொருந்தும் இடத்தில் வலி ஏற்பட்டால், அல்லது குழாயிலிருந்து அல்லது உறுப்பிலிருந்து சிறுநீர் சிந்தினால், அல்லது சிறுநீர் சரியான  முறையில் குழாயூடாக வெளியேறவில்லை என்றால் மருத்துவரை நாடுவது அவசியம்.

வெளியேறும் சிறுநீரில் இரத்தம் கலந்திருந்தாலும் மருத்துவருடன் கலந்தாலோசியுங்கள். பெரும்பாலும் குழாய் பொருத்திய ஆரம்ப நாட்களில் இது நேரலாம்.

சிறுநீரின் நிறம் மங்கலாதல், படிவுகள் ஏற்படல், சிறுநீர் கடுமையாக மணத்தல் போன்றவை சிறுநீரில் கிருமித்தொற்று ஏற்பட்டதால் இருக்கலாம். குளிர் நடுக்கத்துடன் காய்ச்சல் ஏற்பட்டாலும் அதே காரணமாயிருக்கலாம். கட்டாயம் மருத்துவ ஆலோசனை அவசியம்.

இவற்றைக் கவனம் எடுத்தால் சிறுநீர்த் தடை மற்றும் கட்டுப்பாடின்றிக் கழிதல் ஆகியவற்றால் நோயாளி தனக்கும் மற்றவர்களுக்கும் இடைஞ்சலின்றி வாழ முடியும்.

பிரச்சனைகளைக் கண்டு மனம் சோராமல் அவற்றை உறுதியோடு வெற்றி கொள்ளும் மனநிலையை வளர்த்துக் கொண்டால் மகிழ்ச்சி என்றும் அவர் பக்கமே.

நான் வீரகேசரி ஞாயிறு வெளியீட்டில் எழுதிய கட்டுரை 

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
0.0.0.0.0.0

Read Full Post »

>

“உள்ளை வாங்கோ டாக்டர்”

அவரது மகன் மரியாதையுடன் அழைத்தார்.

ஆடம்பர மார்பிள் பதித்த நீண்ட விசாலமான தரை, அலங்கார ஷோபாக்கள், உயர்ந்த பரந்த ஷோகேஸ்கள், அதி அலங்கார மின்சார லையிட்டுக்கள், வீடியோ, ஓடியோ நிறைந்த வரவேற்பறையைத் தாண்டி ஆடம்பர அறைகளைத் தாண்டி, நவீன சமையலறை, ஸ்ரோர்ஸ் அறைகளையும் தாண்டிப் போய்க் கொண்டே இருந்தோம்.

கடைசியாக வீட்டின் பிற்பகுதியை அடைந்தோம்.

விசாலமான வீட்டின், ஒதுக்குப் புறமான பின் வராந்தையை அரைச் சுவராலும், இரும்புக்கம்பி வலைகளாலும் அவசரமாக அடைத்துத் தயாராக்கிய அறை அது.

நாயை அடைத்து வைக்கும் அறைக்கு என்னை அழைத்து வருகிறாரா?

மூத்திர நாற்றம், மூக்கினைத் தாக்க தயங்கியே அடியெடுத்து வைத்தேன்.

அது முதியவர் அறை!!

பழைய பலகைக் கட்டிலில் குறண்டியபடி கிடந்தார் அவர்.

தலையணையைத் தவிர படுக்கை விரிப்புகளோ மெத்தையோ எதுவும் இல்லை. கட்டிலின் கீழே ஊறித் தெப்பிக் கிடந்த சாக்கு,மூத்திர நாற்றத்தை வஞ்சகமின்றிப் திசையெங்கும் பரப்பிக் கொண்டிருந்தது!

அறை நிறைய இலையான்கள். அவரையும், கீழே கிடந்த சாக்கையும் மாறி மாறிச் சுவைத்து, மகிழ்ந்து பறந்து திரிந்தன.

கொசுக்கள் உற்சாகமாகக் கலைந்து கலைந்து மொய்த்தன!

அறைக்குள் நுழையவே கால்கூசியது!

மனம் தயங்கியது.

ஆயினும் கடமை உணர்வுடன் அவரருகில் சென்றேன்.

நோயின் வேதனையிலும் பறக்கணிப்பின் மனத் துயரிலும் மூழ்கிக் கிடந்த முகத்தில், என்னைக் கண்டதும் சோகம் கலந்த புன்னகை!

“கோடி கோடியாகச் சம்பாதித்த நான், இப்போ ஒதுக்கித் தள்ளப்பட்டுக் கிடக்கும் நிலையைப் பாருங்கள்” என்று சொல்வது போலிருந்தது. அந்த முன்னைய நாள் மதிப்புக்குரிய பெரிய மனிதர்!

கனத்த மனதுடன் அவரைப் பரிசோதித்து மருந்துகைளக் கொடுத்து, ஆறுதல் கூறிவிட்டுப் புறப்பட்ட நான், மகனிடம் அவரை ஒதுக்குப்புறமாக, ஒதுக்கி விட்டதற்கான காரணத்தை விசாரித்தேன்.

“ஐயாவுக்கு சலம், மலம் போறது தெரியாது.
பெரிய மனிசர் வந்து பிழங்கிற இடத்திலை அவரை எப்படி வைச்சிருக்கிறது. வெக்கந்தானே.

பின் விறாந்தை என்டால் ஆக்களின்ரை கண்ணிலை படாது. சலம் மலம் போனாலும் அப்படியே வெளியிலை கழுவி விட்டிடலாம்” என்றார்.

பெத்து வளத்து ஆளாக்கி, உயர்ந்த நிலையில் உங்களை வைச்சிருக்கிற ஐயாவை வீட்டுக்கை வைச்சிருக்கிறது வெக்கமோ?|எனக் கேட்க வேண்டும் போலிருந்தது.

தமிழர்களாகிய நாம் நீண்ட கலாச்சார பாரம்பரியத்தில் வந்தவர்கள். பெற்றோரையும், முதியவர்களையும் மதிப்பும் மரியாதையும் கொடுத்து, அவர்களை அன்புடன் பேணிப் பாதுகாப்பவர்கள் என்று பெருமைப்படுகிறோம்.

காசியப்பனைப் போல் பெற்ற தந்தையையே சுயலாபத்திற்காக, சுற்றவரச் சுவர் எழுப்பி, உயிரோடு மூடிக் கட்டி மூச்சடைக்கக் கொன்றவர்கள் எமது பரம்பரையில் கிடையாது என்று சரித்திரச் சான்றுகளில் சமாதானம் அடைகிறோம்.

ஆனால் பெற்றோர்களைச் சரியாகப் பேணிப் பாதுகாக்காமல் விடுவதாலோ, அல்லது உரிய காலத்தில் உரிய வைத்திய வசதிகளைக் கொடுக்காமல் விடுவதாலோ, அநியாயமாகச் சாகவிடுபவர்களை பற்றி என்ன சொவ்வது?
 

Geoffrey Madan  ஒரு கருத்துச் சொன்னார்.
“ஆம் அவர் உயிருடன் இருக்கிறார். அவரைச் சட்டபூர்வமாகப் புதைக்க முடியாது என்ற அளவில் மாத்திரம்”.
இத்தகைய மனநிலையோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா?

கனவாகிப் போன வாழ்வு
 80களில் சிரித்திரனில் எழுதி 90 களில் மல்லிகை வெளியீடாக வந்த ‘டொக்டரின் டயறி’ என்ற எனது நூலில் வெளியான கட்டுரையிலிருந்து ஒரு பகுதி

Read Full Post »

Older Posts »