Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘மூட்டுவலி’ Category

மூட்டு வலிகளால் தொல்லையா

வலிகள் என்றுமே துயர் தருவன. விரல்கள், முழங்கால், கழுத்து, இடும்பு, தோள் மூட்டு என எங்கெல்லாம் மூட்டுகள் உள்ளனவோ அங்கெல்லாம் வலி வரலாம். சிலர் ஓரிரு மூட்டு வலிகளுடன் தப்பிவிடுவர்.

எவ்வாறாயினும் நீங்கள் அவற்றில் அக்கறை எடுத்து பராமரித்து வருவதன் மூலம்

  • உங்கள் வேதனைகளைத் தணிக்க முடியும்.
  • அவற்றின் செயலாற்றும் திறன் குன்றாமல் தடுக்கவும் முடியும்.
  • அத்துடன் உங்கள் மருத்துவச் செலவுகளைக் குறைக்கவும் முடியும். செலவைக் குறைப்பது என்பது நீங்களாக மருந்தை நிறுத்துவது என அர்த்தம் அல்ல. மருத்துவ ஆலோசனையுடன் சில மருந்துகளின் அளவைக் குறைக்கவோ மாற்றவோ முடியும் என்பதேயாகும்.

தினமும் ஏதாவது உடல் உழைப்பு அல்லது உடற் பயிற்சி செய்வதன் மூலம் மூட்டுகளின் செயற்பாட்டை குறையவிடாமல் தடுங்கள். தினமும் 30 நிமிடங்கள் செய்வது நல்லது. வாரத்தின் பெரும்பாலான நாட்களில் செய்ய வேண்டும். ஆரம்பத்தில் 30 நிமிடங்கள் இயலாததாயின் 10 நிமிடங்கள் செய்யுங்கள். படிப்படியாக அதிகரியுங்கள்.

உங்கள் எடையை உங்கள் உயரத்திற்கு ஏற்றதாக அளவாக வைத்திருங்கள். உடலுக்கு ஏற்ற எடையை, உடற் திணிவுக் குறியீடு (Body mass Index – BMI)  என்பதாக கணக்கிடுவர். இது பற்றி மேலும் அறிய உங்கள் மருத்துவரையோ இணையத்தையோ நாடுங்கள்.

அதீத உடை மற்றும் உடற் திணிவுக் குறியீடு பற்றி மேலும் வாசிக்க  பானை வயிற்றோர்களின் எலும்பு முறியாமல் காத்தல்

எடை அதிகமாக இருந்தால் அது மூட்டுகளுக்கான வேலைப் பழுவை அதிகரித்து அவற்றை மேலும் சேதமாக்கும். எடைக் குறைப்பிற்கு ஏற்றதாக கொழுப்பு இனிப்பு மாப்பொருள் குறைந்த போசாக்கான உணவு முறையைக் கடைப்பிடியு;கள். உடற் பயிற்சி மூலமும் குறைக்க நடவடிக்கை எடுங்கள்.

உங்களது தொழில் அல்லது நீங்கள் செய்யும் உடற் பயிற்சியானது ஓரு சில மூட்டுகளுக்கு மட்டும் தொடர்ந்து வேலை கொடுப்பதாக இருந்தால் அதற்கு ஊறு ஏற்படலாம்.அவ்வாறின்றி மாற்றி மாற்றி வேலை அல்லது பயிற்சி கொடுப்பது உதவும்.

பெரும்பாலன மூட்டு நோய்களுக்கு தொடர்ச்சியான மருத்துவ ஆலோசனை தேவை. அது மாதம் ஒரு முறையோ ஆறு மாதங்களுக்கு ஓரு தடவையோ என நோய் அறிகுறிகளுக்கு ஏற்ப மாறுபடலாம். மருத்துவர் சொல்லும் காலக்கெடுவில் அவரை தவறாது சந்தியுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை

0.0.0.0.0

Read Full Post »

தோள்மூட்டு, புஜம், கைகளில் ஏற்படும் வலி உளைவு எரிவுகளுக்குக் காரணம் கழுத்து எலும்புத் தேய்வாக இருக்கலாம்

அழுதுவிடுவாள் போலிருந்தது. சில இரவுகளில் ஒழங்கான தூக்கம் இல்லாததால் கண்கள் கரு வளையம் சூழ்ந்திருந்தன. முகம் சோர்ந்தது மாத்திரமின்றிப்  பூசிணிப்பழம்போல ஊதியும் கிடந்தது.

சோர்வுக்குக் காரணம் மனத்துயரம் அல்ல என்பது அவள் பேசத் தொடங்கியதும் புரிந்தது.

வலி!

MINOLTA DIGITAL CAMERA

தாங்க முடியாத வலி. முதுகின் சீப்புப் பகுதியில். உளைவா வலியா என்று பிரிதறிய முடியாத வேதனை. அங்கிருந்த வலி மேலும் நகர்ந்து இடது கை முழுவதும் பரவி உளைந்து கொண்டிருந்தது. நான் துருவித் துருவிக் கேட்ட போது அக் கை நுனியில் சற்று விறைத்து மரத்திருப்தும் தெரியவந்தது.

ஒரிரு மாதங்களாக வலி இருக்கிறதாம். உளைவா, எரிவா, வலியா என்று பிரித்துச் சொல்ல முடியாத ஏதோவொரு கடுமையான வேதனை. ஆரம்பத்தில் ஓரளவாக இருந்தது, வர வர அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கை வைத்தியம், நாட்டு வைத்தியம் எதுவும் சுகம் கொடுக்கவில்லை. அருகிலிருந்த மருத்துவரிடம் காட்டியபோது தசைப்பிடிப்பாக இருக்கும் எனச் சொல்லி அவ்விடத்தில் ஊசி ஏற்றியிருக்கிறார். ஆயினும் அந்த ஊசியிலும் எந்தச் சுகமுமில்லை.

கழுத்து எலும்புத் தேய்வு நோய்

அனுபவப்பட்ட மருத்துவர்களுக்கு அத்தகைய வலிக்கான காரணம் வலிக்கும் அதே இடத்தில் இல்லை. வேறு இடத்திலிள்ள நோய்க்கான வலி இங்கு பிரதிபலிக்கிறது என்பது தெரிந்திருக்கும். பெரும்பாலும் கழுத்து எலும்புடன் சேர்ந்த Cervical spondylosis என ஊகிப்பதில் பிரச்சனை இருக்காது.

நிச்சயப்படுத்த பரிசோதனைகள் தேவைப்படும்.

நோய் ஓரிடத்தில் இருக்க வலி வேறு ஒரு இடத்தில் பிரதிபலிப்பதை தொலைவிட வலி (Referred Pain) என்பார்கள்

  • இதனைக் கழுத்து எலும்புத் தேய்வு நோய் என்று சொல்லலாம். வயதாகும்போது ஏனைய எலும்புகளில் தேய்மானம் ஏற்படுவதுபோலவே கழுத்தின் முண்ணெலும்பிலும் ஏற்படுவதுண்டு. 40 வயதிற்கு மேல் இத்தகைய பிரச்சனை ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகும்.
  • பொதுவாக வலி தொடர்ச்சியாக இருப்பதில்லை. விட்டுவிட்டு வரும்.
  • அத்துடன் கழுத்துத் தசைகள் இறுக்கமாகவும் இருக்கும்.

கழுத்து எலும்புகளின் அமைப்பும் பாதிப்பும்

A00332F06

கழுத்து எலும்புகள் ஏனைய முதுகெலும்புகள் போலவே ஒன்றென்மேல் ஒன்றாக அடுக்கபட்டிருக்கினறன. அவை தம்மிடையேயான அசைவாட்டத்திற்காக வட்டுகள் எனப்படும் Intervertebral disc யால் இணைக்கப்பட்டுள்ளன.

5566157_orig

  • முள்ளெலும்புகள் தேய்வதாலும்,
  • தேய்ந்த எலும்புகள் இடையேயுள்ள வட்டுகளை அழுத்துவதாலும்,
  • சிறு எலும்புத் துணிக்கைகள் வளர்வதாலும்,
  • முண்ணான், அதிலிருந்து வெளியேறும் நரம்புகள் அழுத்தப்படுதாலும்தான்

வலி, வேதனை நரம்புப் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

நரம்புகள் அழுத்துண்டால்

  • ஆனால் இது மோசமாகி, அவற்றிடையே உள்ள இடைவெளி சுருங்கி அதனூடாக வெளிவரும் நரம்புகளை அழுத்துவதால் வலி ஆதிகமாகும். இதன் அறிகுறிகளாக பின்வருவனவற்றைக் கூறலாம்.கழுத்தில் வலியும், அதன் தசைகளில் இறுக்கமும் பிடிப்பும்.
  • இவ் வலியானது தோள் மூட்டு, புஜம், நெஞ்சு போன்ற இடங்களுக்குப் பரவக் கூடும்.
  • புஜங்கள், கை, கால்கள், பாதம் போன்ற இடங்களில் ஊசியால் குத்துவது போன்ற வலி, உளைவு, எரிவு போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.
  • கைகள், விரல்கள், பாதம் போன்ற இடங்கள் மரத்தது போன்ற உணர்வு ஏற்படலாம். சிலவேளை அங்குள்ள தசைகள் பலமிழப்பதுமுண்டு. விரல்களால் பற்றுவது சிரமமாக இருக்கலாம்.
  • நடப்பதில் சிரமம் ஏற்படக் கூடும். நிலைதளரக் கூடும்.
  • மலம், சிறுநீர் கழிப்பதில் உள்ள கட்டுப்பாடு குறைந்து, தன்னுணர்வின்றி அவை வெளியேறக் கூடும். இது சற்றுத் தீவிரமான நிலையில் தோன்றும்.

நோயை எப்படிக் கண்டறிவது?

r7_cervicalspondylosis

  • ஆரம்ப நிலையில் கழுத்தினது அசைவு, வலியுள்ள இடங்கள் ஆகியவற்றைப் பரிசோதிப்பதுடன், நரம்புப் பாதிப்புகள் இருக்கிறதா என மருத்துவர் உடற்பரிசோதனை செய்வதுடன் நோயைக் கண்டறிவார்.
  • X Ray பரிசேதனை செய்வதன் மூலம் கழுத்து எலும்புகளின் நிலை பற்றி அறிந்து கொள்ள முடியும்.
  • தேவை ஏற்படின் CT scan, MRI போன்ற பரிசோதனைகள் செய்வார்.
  •     நரம்புகள் எந்தளவு வேகமாகவும், திறமையாகவும் செய்லாற்றுகின்றன என அறிய Nerve conduction study பரிசோதனையும் உதவலாம்.

சிகிச்சை

  1. சாதரண வலிகளுக்கு சுடுநீர் ஒத்தடம் கொடுப்பது, வலி நிவாரணி ஜெல் பூசுதல், தசைகளைப் பிடித்துவிடுதல், மெதுமையான மசாஜ் போன்றவை உதவும்.
  2. சற்றுக் கடுமையான வலியெனில் வலிநிவாரணி மாத்திரைகள் தேவைப்படும்.
  3. கழுத்திற்கு கொலர் (Cervical Collar) அணிவது உதவும்.
  4. கடுமையெனில் சத்திரசிகிச்சையும் தேவைப்படலாம்

நீங்கள் செய்யக் கூடிய ஏனையவை

  • தலையக் குனிந்து செய்யும் வேலைகளைக் குறையுங்கள். புத்தம் படிப்பது, சமையல் வேலை போன்றவற்றின்போது கவனம் எடுக்கவும்.
  • குறைந்த தடிப்பமுள்ள தலையணையை மாத்திரம் உபயோகியுங்கள்.
  •     கழுத்தை ஒரே பக்கமாக நீண்ட நேரம் திருப்பி வைத்திருப்பதைத் தவிருங்கள்.
  • நடுவில் பள்ளமுள்ள விசேட தலையணைகள் நல்லது.
  • முகம் குப்புறப்படுக்க வேண்டாம்.

•    தலையில் பாரங்கள் சுமக்க வேண்டாம்.

bart2-BB

முண்ணான் எலும்புகள், அவற்றை இணைக்கின்ற வட்டுகள் ஆகியவற்றின் அமைப்புயும்பையும் அவற்றில் ஏற்படுகின்ற சில நோய்களையும் மேலே உள்ள படம் காட்டுகிறது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

ஹாய் நலமா புளக்கில் 2012 ஆகஸ்ட் மாதம் வெளியான கட்டுரை

0.0.0.0.0.0.0

Read Full Post »

வாழ்க்கைத் துணைவரின் அணுகுமுறையால்
நாட்பட்ட வலிகள் பாதிப்புறலாம்
வலிகள் என்றாலே வேதனையும் துன்பமும்தான். அதை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் அதன் தீவிரம் புரியும். அதிலும் முக்கியமாக நீண்டகாலமாகத் தொடரும் நாட்பட்ட வலிகள் (Chronic Pain) வேதனை அளிப்பது மிக மிக அதிகம். உடல் ரீதியாக மட்டுமின்றி, உளரீதியாகவும் கூட.

chronic-joint-pain11

குடும்பத்தில் ஒருவருக்கு வலி

வலிகளின் தீவிரத்தைப் பற்றி சிந்திப்போமா?

உங்களை ஒரு பெண் என வைத்துக் கொள்வோம். உங்களுக்கு சில காலமாகவே இடுப்பு வலி தொடர்ந்து வருகிறது. அதனோடு கூட்டவும், துப்பரவு செய்யவும், சமைக்கவும் சிரமமப்படுகிறீர்கள். சிரமப்பட்டேனும் உங்கள் நாளாந்த வேலைகளைச் செய்து வருவதைத் தவிர்க்கவில்லை.

household-chores

இருந்தபோதும் நீங்கள் உங்கள் வலியைப் பற்றி எப்பொழுது பிரஸ்தாபித்தாலும் கணவர் அதை அக்கறையோடு செவிமடுப்பதில்லை என வைத்துக் கொள்வோம்.

images

அவர் அலட்சியமாக பனடோலைப் போட வேண்டியதுதானே என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார். அக்கணத்தில் உங்கள் மன நிலை எப்படி இருக்கும். கோபம் வரலாம், எரிச்சல் ஏற்படலாம், கவலையும் அழுகையும் கைகோத்து வரலாம்.

இவை எதுவும் இல்லையேல் ‘இந்த மனிசனுக்குச் சொல்லிப் பிரயோசனம் இல்லை’ என்ற வெறுப்பில் அவரோடு மனம்விட்டுப் பேசும் எண்ணமே விட்டுப் போய்விடலாம்.
இது அனுபவத்தில் நாம் நிதம் காண்பதுதானே! ஆனால் அண்மையில் இதனை ஒரு ஆய்வாகச் செய்திருக்கிறார்கள்.

நாட்பட்ட வலியானது தம்பதிகளிடையே தொடர்பாடலை குறைக்கிறது. கலந்துரையாடுவது விட்டுப் போகிறது. இதனால் அவர்களிடையே புரிந்துணர்வு குறைந்து போகிறது. இவற்றின் பலனாக பாதிக்கப்பட்டவரின் வலியைச் சமாளிக்கும் திறன் குறைந்து போகிறது என்பது இந்த ஆய்வில் தெரிந்தது.

முன்னைய ஆய்வுகள்

குடும்ப உறவில் ஒருவர் மற்றவரது உணர்வுளைப் புரிந்து, அதற்கு மதிப்பளித்து, ஆறுதலிப்பதானது நன்மை பயக்கும் என முன்னைய ஆய்வுகள் உறுதி செய்திருந்தன். இதனால் அவர்களிடையே நெருக்கம் அதிகரிக்கிறது. நம்பிக்கை இறுக்கமாகிறது. உணர்வுகள் தம்மை அலைக்களிக்க விடாது அவற்றை அடக்கியாளும் வல்லமையைக் கொடுக்கிறது.

மாறாக துணைவர் மற்றவர்களின் உணர்வுகளைக் கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்தி, உதாசீனப்படுத்தினால் அல்லது சினங்கொண்டு விரோதமாக நோக்குனால் அவர்களின் குடும்ப உணர்வில் விரிசலை ஏற்படுத்திவிடுகிறது. விட்டுக் கொடுப்புகள் குறைந்து குடும்ப உறவைப் பாதிக்கும். மன விரக்தியும் ஏற்படலாம் என்பதும் முன்னைய ஆய்வுகளில் தெளிவாகியிருந்தது.

இந்த ஆய்வு

நாரி உழைவு, இடுப்பு வலி, தசைப்பிடிப்புகள் பல்வேறு வலிகளால் பாதிக்கப்பட்டவர்களிடையே செய்யப்பட்ட இந்த ஆய்வில் வெளிவந்த விடயம் ஆய்வாளர்களை மட்டுமல்ல உங்களுக்கும் ஆச்சரியமாக இருக்கும். சிறிய ஆய்வுதான் 58 பெண்களையும் 20ஆண்களையும் கொண்டது.

உணர்வு ரீதியாக அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான் என்பது பொதுவான நம்பிக்கையாகும். இந்த ஆய்வின் பிரகாரம் வலியால் துன்பப்படும் ஆண்கள் தங்கள் மனைவிமாரின் எதிர்மiறாயன உணர்வுப் பிரதிலிப்பால் அதிகமான பாதிப்பிற்கு உள்ளானதாக தெரிந்தது. வலி இருந்தால் மட்டுமின்றி ஏனைய பொழுதுகளிலும் மனைவியின் பாராமுகம் கணவர்களின் மனத்தை அதிகமாகச் சஞ்சலப்படுத்தியிருந்தது.

indian-lady

பெண்கள் மென்மையானவர்கள். அவர்கள் மனது பூப்போன்றது. அவர்கள் வலி, வேதனை, இடர் ஆகியவற்றால் பாதிக்கப்படுவது அதிகம். எனவே வலிகளை மோசமாக உணர்வர், பாராமுகத்தால் வாடுவர்  என்பன நம்பிக்கை. மாறாக, வலிமையுள்ளவர்கள் என நம்பப்படும் ஆண்கள் தாம் இவ் ஆய்வில் வலிகளால் பாதிப்புற்றது ஏன்?

‘பாரம்பரிய எண்ணங்களின் அடிப்படையில் ஆண்கள் தங்கள் குடும்பத்திற்காக உழைப்பவர்கள் என்ற பாத்திரத்தை வகிக்கிறார்கள். ஆனால் வலியானது அதனைச் சரியான முறையில் ஆற்ற முடியாத நிலையைத் தோற்றுவிக்கிறது என ஆண்கள் கருவதால் இந் நிலை ஏற்பட்டிருக்கலாம்’ என இந்த ஆய்வைச் செய்த Wayne State University in Detroit and the Norwegian Center for Addiction Research   குழுவினர் சார்பில் Laura Leong  கருத்து கூறியுள்ளார்.

உங்களுக்கான செய்தி என்ன?

இந்த ஆய்வு முடிவுகள் உங்களுக்கு எப்படிப் பயன்படும். நீங்களா உங்கள் துணைவரா அதிக அக்கறை காட்டுபவர் எனக் கண்டு பிடித்து மகிழவா, அல்லது யார் உதாசீனப்படுத்துகிறார் எனக் கண்டு பிடித்து குற்றம் சாட்டி வாழ்க்கையை மேலும் நரகமாக்கவா?

நிச்சமாக இல்லை. மற்றவரின் வலியை மதித்து அதனால் அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை அனுதாபத்துடன் நோக்க வேண்டும். பரிவு காட்ட வேண்டும். ஆறுதல் சொல்ல வேண்டும். ஒத்தாசை செய்ய வேண்டும்.

hospicejpg

அது மட்டுமல்ல! தொடர்ச்சியாக வலிப் பிரச்சனைக்காக மருத்துவரிடம் போகும் கணவன் மனைவியாக இருவரும் சேர்ந்து செல்லுங்கள்.

இது நோயைக் கணிக்க மட்டுமல்ல வேறு விதத்திலும் மருத்துவருக்கு உதவும். மருந்துகளும் ஆலோசனைகளும் ஒருவருக்கு மட்டும் போதுமானதா அல்லது மற்றவருக்கும் ஏதாவது தேவைப்படுமா எனத் தீர்மானிக்கவும் உதவும்.

SOURCE: American Pain Society, news release, December 2011

எனது ‘ஹாய் நலமா’ புளக்கில் சென்ற வருடம் வெளியான கட்டுரையின் மீள் இணையேற்றம்

நாட்பட்ட வலிகள் அணுகுவது எப்படி?

Read Full Post »

வலிகளுக்கும் மூட்டுகளுக்குமான உறவு அண்ணன் தம்பி போல மிக நெருக்கமானவை. விட்டுப்பிரியாதவை. வலியைத் தணிக்க நாளாந்தம் மருந்து சாப்பிட்டு பலருக்கு அலுத்துவிடுகிறது.

இத்தகைய மூட்டு நோய்களைக் குணமாக்க உணவுமுறையில் மாற்றங்கள் செய்வது உதவுமா என்ற தேடல் ஏற்படும்.

இதன் காரணமாக மூட்டுவலிகளினால் துன்பப்படுவோர் அவற்றிலிருந்து விடுபடுவதற்கான மார்க்கங்கள் எதைப் பற்றிக் கேள்விப்படாலும் அதனைப் பரீட்சித்துப் பார்க்காது விடமாட்டார்கள். வேறும் ஏதாவது இருக்கிறதா எனத் தேடியலைவார்கள்.

மூட்டுகளுக்கான எளிமையான பயிற்சிகள் மூட்டு நோய்கள் உள்ளவர்களுக்கும் மிக மிக அவசியமானதாகும்.
மூட்டு வலிகளா? பயிற்சிகள் உதவும்

மூட்டு நோய்கள் என நாம் பொதுவாகச் சொன்னாலும் அது தனி ஒரு நேயால்ல. மூட்டுகளில் வலி, வீக்கம், அழற்சி ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடிய பல நோய்கள் யாவற்றையும் (Arthritis) என்றுதான் சொல்லுவார்கள். சுமார் 100க்கு மேற்பட்ட அத்தகைய நோய்கள் இருக்கின்றன.

அத்தகைய நோய்களைக் குணப்படுத்த உணவுப் பத்தியம் உதவுமா என்று கேட்டால்

  • நிச்சயமாக இல்லை.
  • ஆயினும் மூட்டு நோயுள்ளவர்களது பொதுவான உடல்நலத்தைப் பேணுவதற்கு சமச்சீர் வலுவுள்ள ஆரோக்கிய உணவுமுறை உதவும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
சமச்சீரான உணவு உதவும்
எவ்வாறான உணவுமுறை உதவும்
  • சமச்சீரான உணவு. உங்கள் பொதுவான உடல் ஆரோக்கியத்தைப் பேணவும், உடலுக்கு ஏற்ப எடையை சரியான அளவில் பேணவும் உதவும். பொதுவான உடல் நிலை நல்ல நிலையில் இருந்து எடையும் சரியான அளவில் பேணப்பட்டால் மூட்டு நோய்களின் தாக்கம் குறைவடையும்.
  • எடையைச் சரியான அளவில் பேணுவது மிக முக்கியமாகும். எடை அதிகரித்தால் முழங்கால். இடுப்பு போன்ற எடை தாங்கும் மூட்டுகளுக்கு சுமை அதிகமாகி நோய் தீவிரமடையும்.
  • எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காகத் திடீரென கடுமையாக உணவுகளைக் குறைப்பதும் பட்டினி கிடப்பதும் நோயின் தீவிரத்தை அதிகரிக்குமே அன்றிக் குறைக்காது.
  • தாராளமாக நீராகாரம் எடுங்கள். ஆனால் மதுபானம் கூடாது. இனிப்பு அதிகமுள்ள மென்பானங்களையும் அதிகம் உட்கொள்ளக் கூடாது.
  • கல்சியம் செறிவுள்ள உணவுகள் அவசியம் தேவை. பால், யோகொட், தயிர், கீரை வகைகள், சிறுமீன்கள், பயறின உணவுகளில் கல்சியம் அதிகம் உண்டு.
தவிர்க்க வேண்டியவை உள்ளனவா?

‘மூட்டு நோயெனற்றால் வாதம்தானே?

  • அப்படியென்றால் தயிர், வெண்டைக்காய், தக்காளி போன்ற குளிர்ச்சாப்பாடுகள் கூடாதுதானே’ என்று பலர் கேட்பார்கள்.
  • வேறு சிலர் ‘தேசிப்பழம், உருளைக்கிழங்கு கூடாது என்பர்.

இவை தவறான நம்பிக்கைகள். உண்மை கிடையாது. மாறாக இவற்றில் பல நல்ல போசாக்குப் பொருட்கள் உள்ளன. எனவே அவற்றை உணவில் சேர்க்க வேண்டும்.

ஒரு சில நோய்களில்

கவுட் (Gout)
ஆயினும் கவுட் (Gout) என ஒரு மூட்டு வருத்தம் உண்டு. இது இலங்கையில் காணப்படுவது குறைவு. இந்நோய்க்கும் குருதியில் யூரிக் அமிலம் (Uric Acid) அதிகரிப்பதற்கும் தொடர்புண்டு.

இந்நோயுள்ளவர்கள் இறைச்சியில் ஈரல், மூளை, சிறுநீரகம் போன்றவற்றையும், நண்டு போன்ற கடலுணவுகளையும், ஈஸ்ட் அதிகமுள்ள மாமைட், பியர் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

ஆனால் ஏனைய மூட்டுவலிக்காரருக்கு அவற்றைத் தவிர்ப்பதால் பயன் ஏதும் இல்லை.

ரூமரெடியிட் ஆத்திரைடிஸ்

ரூமரெடியிட் ஆத்திரைடிஸ் என்பது இங்கும் பரவலாக உள்ளது.

இவர்களுக்கு ஒமேகா 3 கொழுப்பு உதவலாம் எனத் தெரிகிறது. வலிநிவாரணிகள் போல நல்ல சுகத்தைக் கொடுக்காது என்ற போதிலும் பக்கவிளைவுகள் இல்லாதததால் உட்கொள்வதில் பயமில்லை.

ஒமேகா 3 கொழுப்பானது கொலஸ்டரோல் குறைப்பிற்கும், இருதய நோய் சிலவற்றைத் தடுப்பதற்கும் உதவும். சல்மன், சார்டீன் போன்ற மீன்களிலும் எள்ளிலும் இருக்கிறது. மாத்திரைகளாகவும் கிடைக்கிறது.

தவறான கருத்து

உங்களது நோயை ஏதாவது ஒரு உணவு அதிகரிக்கிறது என நீங்கள் கருதினால் உடனடியாக அதை நிறுத்திவிடாதீர்கள்.

  • தினமும் உண்ணும் உணவு பற்றிய நாட்குறிப்பை ஒரு மாதத்திற்கு குறித்து வாருங்கள்.
  • உங்கள் நோயின் நிலை, குறித்த உணவு ஆகியவை பற்றி உங்கள் மருத்துவருடன் கலந்துரையாடுங்கள்.
  • நீங்களாக நிறுத்த வேண்டாம்.

ஏனெனில் பொதுவாக மூட்டு வலிகள் காலத்திற்குக் காலம் காரணம் எதுவுமின்றி தீவிரமாவதும் தானாகவே மறைவதும் உண்டு. எனவே நீங்கள் அது திரும்ப வருதற்குக் காரணம் ஒரு உணவு அல்லது ஒரு உணவு வகை என நம்புவது காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதையாகவும் இருக்கலாம்.

ஏனெனில், எந்த ஒரு உணவையும் தவிர்ப்பதன் மூலம் எந்தவொரு மூட்டு நோயையும் தணிக்கலாம் என்பதற்கு விஞ்ஞான பூர்வமான ஆதாரம் இதுவரை கிடையாது. (ஏற்கனவே குறிப்பட்ட கவுட் தவிர).

  • குறிஞ்சா இலை,
  • முடக்கொத்தான்

எனப் பல பயன்படுகின்றனவே என்கிறீர்களா.

இவற்றை எந்த அளவில் எத்தனை நாட்களுக்கு உபயோகிக்க வேண்டும் என்பது பற்றி யாராவது தெளிவாகச் சொல்லவார்களா? பக்க விளைவுகள் எவை என்பது பற்றி தெளிவான ஆய்வுகள் உள்ளனவா. சரியாகத் தெரியாத பொழுது இதனை எமது உடலுக்குக் கொடுத்து எமது உடலைப் பரீட்சைப் பொருளாக்குவதா??

உணவாக உட்கொள்வதில் பெரிய பிரச்சனை ஏதும் இருக்காது. ஏனெனில் அது சிறிய அளவிலேயே உடலில் சேர்கிறது. ஆனால் மருந்தாக அவித்துக் குடிக்கும்போது பாதிப்புகள் இருக்கலாம் என்பதால் அவதானமாக இருக்க வேண்டும்.

இவை பற்றி ஆய்வுகள் நடந்ததாக அறியவில்லை. அத்துடன் வேறெந்த மருந்தும் பயன்படுத்தாமல் இவற்றை மட்டும் பயன்படுத்தி குணமடைந்தவர்கள் இருக்கிறார்களா?

இருந்தால் அது பற்றி விஞ்ஞானபூர்வ ஆய்வுகள் தேவை.

வலிநிவாரணி வெளிப் பூச்சு மருந்துகள் உதவலாம்

எனவே

  • குளிர், சூடு, பித்தம் எனச் சொல்லி எந்த ஒரு உணவையும் தள்ளி வைக்க வேண்டாம்.
  • சமசீர் வலுவுள்ள (Balanaced Diet) நல்ல உணவாக உண்டு உங்கள் உடல் நலத்தைப் பேணுங்கள்.

இவற்றைக் கடைப்பிடித்தால் மூட்டு நோய்களோடு வாழ்தல்  சிரமமானது அல்ல

எனது ஹாய் நலமா புளக்கில் 29th October 2011ல் வெளியான கட்டுரை

தினக்குரலின் ஹாய் நலமா? பத்தியில் நான் எழுதியது.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

Read Full Post »

“இந்த வலிகளோடு வாழ்வது சரியான கஸ்டம். காலையில் கால்களைக் கீழே வைத்து எழும்ப முடியாது. கை கால்களை நீட்டி மடக்கி அசைத்து பயிற்சி கொடுத்தால்தான் ஒருமாதிரி எழும்பி, அன்றாட வீட்டு வேலைகளைச் செய்ய முடியுது………. இந்த மனிசனுக்கும் பிள்ளைகளுக்கும் அது புரியுதே. விடிஞ்சால் பொழுதுபட்டால் வருத்தப் பாட்டுத்தான் பாடுறன் என நக்கல் அடிக்குதுகள்”

இவ்வாறு சொல்பவர்கள் அநேகம். ஏனெனில் மூட்டு நோய்கள் (Arthiritis) மிகவும் பரவலாகக் காணப்படும் நோயாகும்.

வாழ்க்கைத் தரம்

மூட்டு வலிகளுடன் வாழ்வது துன்பமானது என்பது எல்லோருக்கும் தெரியும். மூட்டு வலி என்றெல்ல உடலுக்கு உபாதை கொடுக்கும் எல்லா நோய்களும் துன்பமானதுதான்.

அவை உடலை மட்டுமின்றி மனத்தையும் சோரச் செய்கின்றன. இதனால் அவர்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கச் செய்கின்றன. ஆனால் அதே நேரம் மற்றவர்கள் அவர்களது வலியைப் புரிந்து கொள்வது குறைவு.

ஒரு மில்லியன் அமெரிக்க பிரஜைகளின் மருத்துவ அறிவிக்கைகளை ஆராய்ந்த பொழுது இது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்போது கிடைத்த சில முடிவுகள் மூலம் நீங்களும் அதை உணர்வீர்கள். Arthritis Care & Research சஞ்சிகையின் ஏப்ரல் 18, 2011 இதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

பாதிப்புகள் அதிகம்

  • சாதாரண பிரஜைகளில் 12 சதவிகிதத்தினரே தங்கள் ஆரோக்கியம் நல்ல நிலையில் இல்லை எனக் கருதியபோது மூட்டு நோய்களால் பாதிக்கப்பட்டோரில் 27 சதவிகிதத்தினர் தமது ஆரோக்கியம் நல்ல நிலையில் இல்லை என்றனர்.
  • மாதத்தில் மூன்று நாட்கள் மட்டும் உடல் ரீதியாகச் சுகயீனமுற்று இருந்ததாக சாதாரண மனிதர்கள்  கூறியபோது மூட்டு நோய்களினால் பாதிக்கப்பட்டோர் மாதத்தில் ஏழு நாட்கள் ஆரோக்கியம் கெட்டிருந்ததாககக் கூறினர்.
  • மாதத்தில் மூன்று நாட்கள் மட்டும் மன அமைதியற்று இருந்ததாக சாதாரண மனிதர்கள்  கூறியபோது மூட்டு நோய்களினால் பாதிக்கப்பட்டோர் மாதத்தில் ஐற்து நாட்கள் பாதிப்புற்று இருந்தனர்.
  • ஆரோக்கியம் முழுமையாக கெட்ட நாட்கள் சாதாரணமானவர்களுக்கு மாதத்தில் 5 ஆன இருக்க மூட்டு நோயாளருக்கு 10 ஆக இருந்தது.
  • நாளாந்த பணிகள் கெட்டதாக நாலுக்கு ஒன்று என்ற விகிதத்தில் இருந்தது.
சமூக ரீதியாக 

சமூக ரீதியில் பார்க்கும்போது மூட்டு நோயாளிகள்

  • கல்வி ரீதியாகி,
  • தொழில் ரீதியாக,
  • மற்றும் வருமான ரீதியாகவும்

மற்றவர்களை விட அதிகம் பாதிப்புற்று இருந்தது அவதானிக்கப்பட்டது.
அத்துடன் அவர்களிடம் மற்றவர்களை விட புகைத்தல், மது, போதை போன்ற தவறான பழக்கங்களும், உடல் உழைப்பு குறைந்த, உடற் பயிற்சி அற்ற சோம்பேறித்தனமான வாழ்க்கை முறைகளும் அதிகமிருந்தன.
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், அதீத எடை போன்ற நோய்கள் அவர்களிடையே அதிகம் காணப்படது.

செலவு காரணமாகவும், சிகிச்சைக்காகச் சென்று வருவதில் உள்ள சிரமங்கள் காரணமாகவும் மருத்து உதவி போதியளவு கிட்டவில்லை என்பதும் தெரிய வந்தது.

பொருளாதார ரீதியாக

  • வேலை செய்ய முடியாமை,
  • போதிய வருமானமின்மை,
  • மருத்துவத்திற்கு போதிய செலவழிக்க முடியாத நிலை,
  • அத்துடன் நீரிழிவு நோய் அதிகமாக ஏற்படுதல் போன்றவற்றால்

அவர்களது ஆரோக்கியம் மேலும் பாதிப்படைகிறது.  இதனால் அவர்களது இந்த வாழ்க்கைத் தரம் தாழ்ச்சியடைகிறது. இவற்றால் உள நலமும் குறைகிறது. இதுதான் அந்த ஆய்வின் முடிவு.

ஆனால் மூட்டு வருத்தங்கள் இருந்தபோதும், சோர்ந்து கிடக்காது உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இயங்குபவர்களிடையே இத்தகைய பாதிப்புகள் ஏற்படுவது குறைவு.

செய்ய வேண்டியவை

எனவே மூட்டு நோயுள்ளவர்கள் பாதிக்கப்படாது இருக்கச் செய்ய வேண்டியது என்ன?

  • “என்னால் எதுவும் முடியவில்லை” என மூட்டு வலியைக் காட்டி வாழாதிருக்கக் கூடாது. முடிந்தளவு உற்சாகமான சுறுசுறுப்பான வாழ்வைக் கடைப்பிடிக்க முயல வேண்டும்.
  • தினசரி தோட்டவேலை, வீட்டு வேலைகள், நடைப் பயிற்சி, உடற் பயிற்சி என ஈடுபட்டு தமது உடலைச் சோரவிடக் கூடாது. இது மனச் சோர்வையும், மனவிரக்தியையும் அண்ட விடாது.
  • நீரிழிவு, பிரசர், போன்ற வேறு நோய்கள் இருந்தால் அவற்றிக்கு அவசியமான மருத்துவத்தை செய்து தமது பொதுவான ஆரோக்கியத்தைப் பேண வேண்டும்.
  • அவர்களைக் குற்றம் கூறி மேலும் வேதனையில் ஆழ்த்தாது சூழ இருப்பவர்கள் அவர்களை உற்சாகப்படுத்தி,  மனப் பாதிப்பிற்கு ஆளாகாமல் தடுக்க வேண்டும்.

அமெரிக்காவில் மாத்திரம் 50 மில்லியன் மக்கள் மூட்டு நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் நோய் நிர்ணயம் செய்திருக்கிறார்கள். இலங்கையில் எவ்வளவு என்பது கணக்கிடப்படவில்லை. இவர்கள் எல்லோருக்கும் உடல் வலியும் மன உபாதையும் அற்ற வாழ்வை அமைக்க உதவுவற்கு இந்த ஆய்வின் ஊடாக நாம் படிப்பினை பெறலாம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

தினக்குரல் பத்திரிகையின் ஹாய் நலமா பத்தியில் நான் எழுதிய கட்டுரை.
ஹாய் நலமா புள்க்கில்Saturday, September 17, 2011ல்  மூட்டு நோய்களோடு வாழ்தல்
0.0.0.0.0.0.0

Read Full Post »

>வயதான பலர் மூட்டு வலிக்கிறது எனப் பூச்சு மருந்துகளை முழங்கால், கணுக்கால் என அடிக்கடி பூசிக்கொண்டிருப்பார்கள். “பொழுது போகாதற்கு அதை இதைப் தேச்சுக் கொண்டிருக்கிறதுதான் வேலை” என இளவட்டங்கள் அலட்சியமாகப் பேசும். அல்லது “கண்டதையும் பூசி உடுப்புகளையும் பாழாக்கிறதுதான் மிச்சம்” என நக்கல் அடிக்கும்.

நோ எண்ணெய், இலுப்பெண்ணெய், வேப்பெண்ணய் பூசுவதால் பலன் ஏதும் கிடைக்கிறதா இல்லையா என கருத்துச் சொல்ல எனக்கு அருகதையில்லை. அவை எனது படிப்பு, அனுபவம் ஆகியவற்றிற்கு அப்பாலானவை.

பலன்

ஆனால் வலி நிவாரணி ஜெல் மருந்துகளைப் பூசுவதால் பலன் கிடைக்கும் என்பது உண்மை. ஆனால் பலருக்கும் இவ்வாறு பூசுவதால் பலன் கிடைக்குமா என்பதில் சந்தேகம் இருக்கிறது. பல மருத்துவர்களுக்கே அவ்வாறு பூசுவதன் பயன் பற்றி நம்பிக்கை கிடையாது. எனவே இது பற்றி சில ஆய்வுகள் செய்யப்பட்டன.

நாட்பட்ட முழங்கால் வலி, மற்றும் வயதானவர்களில் ஏற்படும் ஒஸ்ரியோ ஆர்திரைடிஸ் (osteoarthritis) நோயாளார்களில் டைகுளோபெனிக் சோடியம் (Diclofenac sodium) மருந்தை மாத்திரைகளாக கொடுக்கும்போது ஏற்படும் வலிநிவாரணத்திற்கு ஒத்ததாக ஜெல் மருந்தாகப் பூசுவதாலும் நன்மை கிடைத்தது. உட்கொள்ளும் மாத்திரைகளைப் போலவே வலியுள்ள இடத்தில் பூசப்படும் மருந்தும் வலியைத் தணிப்பதில் உதவுகிறது என்பது இதனால் தெளிவாகிறது.


பக்கவிளைவுகள்

வலிநிவாரணிகளை மாத்திரைகளைப் பாவிக்கும்போது ஏற்படும் முக்கிய பக்கவிளைவு குடல் சம்பந்தமானாதாகும். பல நோயாளர்களும் வயிற்று எரிவு, புகைச்சல், இரைப்பைப் புண் ஆகியன ஏற்படுவதாகக் கூறுகிறார்கள். அது உண்மையே. அத்துடன் இவை இரத்த அழுதத்தை அதிகரிக்கவும் செய்கின்றன. இருதய நோய்களைக் கொண்டு வருவதும் அதிகம் என்பதும் அனுபவத்திலும், ஆய்வுகளிலும் தெரிய வந்திருக்கிறது.

ஆனால் அவற்றை பூச்சு மருந்தாகப் பாவிக்கும்போது அத்தகைய பக்கவிளைவுகள் மிகக் குறைவாகவே ஏற்பட்டன. இதற்குக் காரணம் பூச்சு மருந்தாக பாவிக்கும்போத ஒரு சதவிகிதம் மட்டுமே உறிஞ்சப்பட்டு குருதிவழியாக உடலெங்கும் பரவுகிறது. இருந்தபோதும் வலியுள்ள இடத்தில் உறிஞ்சப்படும் மருந்தினால் நோய் தணிகிறது

பக்கவிளைவுகள்

அப்படியானால் பூச்சு மருந்துகளால் பக்கவிளைவுகள் ஏதும் கிடையாதா என்ற கேள்வி எழுகிறது.

  • நீண்ட காலத்திற்கு அதாவது 6 மாதம் ஒரு வருடம் எனத் தொடர்ந்து பூசி வரும்போது தோல் வரட்சி ஏற்படலாம். 
  • அத்துடன் தோலில் அரிப்பு, எரிவு, சிவத்தல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம். 
  • சிலரில் கொப்பளங்கள் போடுவதும், எக்ஸ்சிமா போன்றவை வருவதும் உண்டு.

இத்தகைய பக்கவிளைவுகள் பெரும்பாலும் தொடர்ந்து பூசும் இடத்தில் மட்டுமே வரும். தோல் வரட்சியடைந்தால் சாதாரணமான இதப்படுத்தும் கிறீம் வகைகளை (அழளைவரசளைiபெ ஊசநயஅ) உபயோகிப்பதன் மூலம் தடுத்துவிடலாம்.

எத்தகைய பூச்சு மருந்துகள் உதவும்?

எல்லா வெளிப் பூச்சு மருந்துகளும் உதவுமா?

மருந்தகங்களில் வலிக்காகப் பலவகையான வெளிப் பூச்சு மருந்துகள் விற்பனையாகின்றன. இவை யாவுமே பயனுள்ளவையா எனக் கேட்டால் இல்லையென்றே கூற வேண்டும். Diclofenac, Ibuprofen, Ketoprofen, Piroxicam போன்ற பல வலிநிவாரணி மருந்துகள் ஜெல் மருந்துகளாக பூசுவதற்கு ஏற்ப வருகின்றன. இவை பயனளிக்கும்.
 
அதே நேரம் Methyl salicylate போன்ற சாதாரண வலிநிவாரணி மருந்துகள் Menthol, Camphor, Eucalyptus Oil போன்றவற்றுடன் கலந்து கிடைக்கின்றன. இவை வாசனையையும், பூசுமிடத்தில் சற்று எரிவையும் ஏற்படுத்துவதுடன் நோயாளிக்கு மனதுக்கு இதமான உணர்வையும் கொடுக்கும். 

ஆயினும் அவை வலிநிவாரணிகளாகப் பயன்படுமா என்பது பற்றி நிச்சமாகக் கூறமுடியாது.

காசைக் கரியாக்காதீர்கள்.

எனவே வலிநிவாரணி மருந்துகளாகக் கிடைத்தால் அவற்றை நீங்கள் பயன்படுத்தலாம். அதில் எது உங்களுக்கு ஏற்றது என்பதை உங்கள் மருத்துவருடன் கேட்டுப் பயன்படுத்துங்கள்.

கடையில் கிடைப்பதையெல்லாம் பூசி காசை வீணாக்காதீர்கள்.

மூட்டு வலிகள் சம்பந்தமான எனது ஏனைய பதிவுகள்

  1. மூட்டு வலிகளா? பயிற்சிகள் உதவும்
  2. மூட்டுத் தேய்வு நோயை இனங் காட்டும் ஹெர்படன்ஸ் நோட் (Heberden’s Node)
  3. முதுகு வலிக்கு எக்ஸ் ரே- உங்கள் எதிர்பார்ப்பு என்ன?
  4. நாரிப்பிடிப்பு (முதுகு வலி) வராது தடுத்தல்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

தினக்குரல் தினசரியின் ஹாய்நலமா ? பத்தியில் 15.12.2010 ல் நான் எழுதிய கட்டுரை

Read Full Post »

>

இந்தப் பெண்ணின் கையின் விரலின் நகத்திற்கு அண்டிய மொளியில் கட்டி போன்ற இறுக்கமான ஒரு வீக்கம் தென்படுகிறது. இதனை மருத்துவத்தில் ஹெர்படன்ஸ் நோட் Herbedens Node என்பர்.

எமது பெரு விரல் தவிர்ந்த கை விரல்கள் ஒவ்வொன்றிலும் இரண்டு மூட்டுக்கள் (மொளிகள்) உள்ளன. இவை அசைவதின் மூலமே எமது விரல்களை மடக்கவும் விரிக்கவும் முடிகிறது. பொருட்களைப் பற்றிப் பிடிக்க இவை அவசியமானவையாகும்.

இவற்றை Inter Phalangeal Joints என்பர். 

இதில் கடைசியாக உள்ள Distal Phalangeal Joints(DIP) மூட்டு எனப்படும். 
இந்த மூட்டில் ஏற்படும் வீக்கம் காரணமாகவே ஹெர்படன்ஸ் நோட் தோன்றுகிறது.

ஹெர்படன்ஸ் நோட் ஒருவருக்கு இருந்தால் அவரது பிள்ளைகளிலும் வரக் கூடிய சாத்தியம் உண்டு.

பொதுவாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே அதிகம் காணப்படுகிறது. அதிலும் ஆண்களை விட பெண்களில் அதிகம்.

ஹெர்படன்ஸ் நோட் என்பது ஒஸ்டியோஆர்த்திரைடிஸ் (Osteoarthritis) என்ற ஒரு வகை மூட்டு நோயின் அறிகுறியாகும்.

ஒஸ்டியோஆர்த்திரைடிஸ்  வயதாகும்போது மூட்டுகளின் தேய்மானத்தால் ஏற்படும் நோய் இதுவெனப் பல காலம் கருதப்பட்டது.

அது உண்மைதான். ஆயினும் அதற்கு மேலாக எலும்பை மாத்திரமின்றி, அதைச் சுற்றியிருக்கும் குருத்தெலும்பு, சைனோவியம் எனப்படும் சவ்வு, சுற்றியிருக்கும் தசைநார்கள் என பலவற்றையும் தாக்கும் ஒரு நோயாக இருக்கிறது.

ஒஸ்டியோஆர்த்திரைடிஸ் சில அறிகுறிகள்

ஒஸ்டியோஆர்த்திரைடிஸ் உள்ளவர்களில் விரல்கள் பாதிக்கப்பட்டாலும், அது முக்கியமாக இடுப்பு எலும்பு, முழங்கால், பெருவில் ஆகியவற்றையே அதிகம் தாக்குகிறது.

  • மூட்டுகளில் வலி, வீக்கம், இறுக்கம் போன்ற அறிகுறிகள் ஆரம்பத்தில் தோன்றும். 
  • அவற்றின் உள்ளே நீர் சுரக்கக் கூடும். நாட் செல்ல, 
  • அவற்றை ஆட்டும்போது மூட்டுகளினுள்ளே கொ கொர எனச் சத்தம் எழுவதுண்டு.

எடை அதிகரிக்கும்போது முக்கியமாக முழங்கால், இடுப்பு மூட்டுகளில் நோயின் தாக்கம் அதிகரிக்கும்.
மாறாக நோயுள்ளவர்கள் தமது எடையைக் குறைத்தால் நோயின் தாக்கம் குறையும்.

நடப்பதற்கு சிரமம் உள்ளவர்கள் நோயுள்ள பக்கத்திற்கு எதிர்ப்புறத்தில் கைத்தடி பிடித்து நடப்பது நோய் மேலும் தீவிரம் அடைவதைக் குறைக்கும்.

முழங்காலில் ஒஸ்டியோஆர்த்திரைடிஸ் இருப்பவர்கள் நடப்பதும், இடுப்பெலும்பு, அடி முதுகு ஆகியவற்றில் இருப்பவர்கள் நீந்துவதும் நல்ல பயிற்சியாகும்.

ஆயினும் கழுத்தெலும்பு வலி உள்ளவர்களுக்கு நீச்சல் நோயை அதிகரிக்கலாம்.

மருத்துவம்

  • நோயினால் மூட்டுகளில் ஏற்படும் வலியைத் தணிக்க சாதாரண பரசிட்டமோல் மாத்திரைகள் போதுமானதாகும். 
  • கடுமையான வலிநிவாரணிகள் தேவைப்படாது. 
  • வலிநிவாரணி ஜெல் மருந்துகளை நோயுள்ள மூட்டுகளின் மேல் பூசுவது வலியைத் தணிக்க உதவும். பூச்சு மருந்தாக வெளியே பூசுவதால் வயிற்று எரிவு, பிரஸர் அதிகரித்தல் போன்ற பக்க விளைவுகளைத் தவிர்க்கலாம்.
நான் எழுதி வார வீரகேசரியில் 17.10.2010 வெளிவந்த கட்டுரையின் மீள் பிரசுரம். 

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0

Read Full Post »

>‘அம்மா நீங்கள் நாளந்தம் கொஞ்சம் நடக்க வேண்டும், மூட்டுகளுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும்’ என்றேன்.

‘இந்தக் காலோடை எப்படி நடக்கிறது?’

அவளது கேள்வி நியாயம் போலத் தோன்றினாலும் சரியானது அல்ல.

அந்த அம்மா நடந்து வந்த முறையை அவதானித்திருந்தேன். நடக்க முடியாமல் அரங்கி அரங்கி நடந்து வந்திருந்தாள். முழங்கால் வலி, வீக்கம், கொழுத்த உடம்பு வாகை இவை யாவையும் நான் அறிந்ததே. அப்படி இருந்தபோதும் சற்று நடக்க வேண்டும் எனச் சொன்னேன்.

ஏனெனில் பயிற்சி என்பது மூட்டு நோய்கள் உள்ளவர்களுக்கும் மிக மிக அவசியமானதாகும். அது மூட்டுகளைப் பலமுடையதாக ஆக்கும், அவற்றின் மடங்கி நிமிரும் ஆற்றலையும் நெகிழ்வுத் தன்மையையும் அதிகரிக்கும்.

ஆனால் மூட்டுகள் சிவந்து, வீங்கி வலி தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் நடக்க வேண்டும் என்ற எண்ணமே உங்கள் வலியை மேலும் அதிகரிப்பது போலத் தோன்றுகிறது அல்லவா? அந்த எண்ணத்தைத் தவிர்க்க முடியாது. ஆனால் இவற்றோடு நீங்கள் பந்தயத்தில் ஓடப் போவதோ, விளையாட்டு வீரர்கள் போல பயிற்சி செய்யப் போவதோ இல்லையே. சிறிய சிறிய பயிற்சிகளே போதுமானது.

அவை வலியைத் தணிக்கவும், மூட்டுகளை இலகுவாக இயக்குவதற்கும் நிச்சயம் உதவும். மூட்டு வலிகள் ஒருவரைப் பாதித்து நடக்கவோ, இயங்கவோ முடியாது தடுத்து, படுக்கையில் கிடத்த முனையும் போது, பயிற்சிகள் மட்டுமே ஒருவரை இயங்க வைக்கும்.

உடற் பயிற்சிகள் ஏன் அவசியம்

பயிற்சிகள் ஒருவரது மூட்டுகளைப் பாதிக்காத அதே நேரம், பொதுவான உடல் நலத்தை மேம்படுத்துவதுடன் செயலாற்றல் திறனையும் அதிகரிக்கும். மூட்டு நோய்களுக்கான மருத்துவத்தைத் தொடர்வதுடன் பயிற்சிகளைச் செய்வதன மூலம் நீங்கள் கீழ்காணும் நன்மைகளையும் பெறுவீர்கள்.

1. மூட்டுகளைச் சுற்றியுள்ள தசைகளைப் பலப்படுத்தும்.

2. எலும்புகளின் உறுதி கெடாமல் பாதுகாக்கும்.

3. நாளாந்த வேலைகளுக்கான பலத்தையும் சக்தியையும் கொடுக்கும்


4. இரவில் உடல் உழைவற்ற நிம்மிதியான தூக்கம் கிடைக்க உதவும்.


5. உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும்.


6. உங்கள் உடல் நலம் பற்றிய நம்பிக்கையூட்டும் உணர்வை வளர்க்க உதவும்.

பயிற்சி செய்வது மூட்டு வலியை அதிகரித்து, மூட்டுகளை மேலும் இறுக்கமடையச் செய்து இயங்கவிடாமல் தடுக்கும் எனப் பலரும் எண்ணுகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. பயிற்சிகள் செய்யாது மூட்டுகளை ஆட அசையாது வைத்திருப்பதுதான் உண்மையில் மூட்டுகளின் வலியை அதிகரித்து இறுக்கமடைய வைக்கின்றன.

இதற்குக் காரணம் என்னவென்றால் மூட்டுகளும் எலும்புகளும் திடமாக இருப்பதற்கு சுற்றியுள்ள தசைகள் பலமாக இருப்பது அவசியம். அவை திடமாக இருந்து போதிய ஆதரவையும் பக்கபலத்தையும் கொடுக்கவில்லை எனில் மூட்டுகள் சிதைவடைவதற்கும் எலும்புகள் உடைவதற்குமான சாத்தியம் அதிகமாகும்.

மருத்துவ ஆலோசனையுடன் ஆரம்பியுங்கள்

உங்களது மூட்டு வருத்தம் எத்தகையது, அதற்கான சிகிச்சை என்ன, அதற்கு எத்தகைய பயிற்சிகள் சிறந்தவை என்பதை உங்கள் மருத்துரின் ஆலோசனையுடனே ஆரம்பிக்க வேண்டும். அல்லது அதற்கென பயிற்சி பெற்ற பயிற்சியாளர் (Physiotherapist) ஆலோசனையுடன் தொடங்கலாம். உங்களது மூட்டுவலி எத்தகையது, அது எந்தெந்த மூட்டுகளைப் பாதித்துள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு அதிக பலனைக் கொடுக்கும் அதே நேரம் வலியை அதிகரிக்காத பயிற்ச்சி எது என்பதைத் தீர்மானிப்பார்.

பயிற்சி வகைகள்

மூட்டுகளின் செயற்பாட்டு எல்லைகளை அதிகரிப்பதற்கான பயிற்சி

ஓவ்வொரு மூட்டிற்கும் அதன் செயற்பாட்டிற்கான பரப்பு (Range) இருக்கிறது. மூட்டு நோய்கள் ஏற்படும்போது அது பொதுவாக குறைந்துவிடும். உதாரணத்திற்கு வழமையாக உங்கள் கைகளை நேராக தலைக்கு மேல் உயர்த்த முடியும். ஆனால் இறுகிய தோள் மூட்டு (Frozen Shoulder) போன்ற நோய்களின் போது அவ்வாறு முழுமையாக உயர்த்த முடியாதிருக்கும்.

இந் நிலையில் உங்கள் உள்ளங்கைகளை சுவரில் வைத்து அழுத்தியவாறு, படிப்படியாக உயர்த்திக் கொண்டு செல்லுங்கள். இதனை தினமும் பயிற்சியாகச் செய்து வரலாம். இதே போல உங்கள் கைகளை முன்பக்கம், பக்கவாடு, பிற்பக்கம் என திருப்பி உயர்த்தலாம்.

மணிக்கட்டு வலிக்கு படத்தில் காட்டியபடி செய்யலாம்.

இதே போல நோயுள்ள எல்லா மூட்டுகளினதும் செயற்பாட்டு எல்லையை அதிகரிக்க பயிற்சிகள் செய்வது அவசியம்.

தசைகளைப் பலப்படுத்துவதற்கான பயிற்சிகள்

இந்தப் பயிற்சிகள் நோயுற்ற மூட்டைச் சுற்றியுள்ள தசைகளைப் பலப்படுத்தி அதன் மூலம் அவற்றிக்கு பாதுகாப்பளிக்கும். ஒவ்வொரு மூட்டைச் சுற்றியுள்ள தசைகளுக்கும் இவ்வாறு செய்யலாம். உதாரணமாக உங்கள் முழங்காலுக்கு பலம் கொடுக்க வேண்டுமாயின் அதன் கீழ் ஒரு டவலை சுருட்டி வைத்து அதனை முழங்காலால் அழுத்துங்கள். 5 செகண்ட் ரிலக்ஸ் பண்ணிவிட்டு மீண்டும் செய்யுங்கள் இவ்வாறு தினமும் 50 தடவைகள் ஒவ்வொரு முழங்காலுக்கும் செய்யவேண்டும். வலி கடுமையாக இருந்தால் ஒரு நாள் ஓய்வு கொடுத்துச் செய்யுங்கள்.

மற்றொரு பயிற்சி. கதிரை அல்லது கட்டிலின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு உங்களது குதிக்கால் நிலத்தில் படுமாறு வைத்துக் கொண்டு, இடது காலை நீட்டுங்கள். நிமிர்ந்து உட்காரந்திருந்த நீங்கள் இப்பொழுது சற்று முற்புறமாகக் குனியுங்கள். ஆதன்போது உங்கள் காலின் பின்பறம் இறுகுவதை உணரலாம். 20-30 செகண்டுகள் அவ்வாறு இறுகப் பிடித்தபின் சற்று ஆறிய, வலது காலுக்கும் அவ்வாறு செய்யுங்கள்.

பொதுவான உடல் ஆரோக்கியத்திற்கான பயிற்சிகள்

மேலே கூறியவை குறிப்பிட்ட மூட்டுகளுக்கான பயிற்சிகள். ஆயினும் உங்கள் முழு உடலும் ஆரோக்கியமாக இருப்பதும் மிக முக்கியமாகும். இதற்கு தினசரி பயிற்சிகள் செய்ய வேண்டும். இத்தகைய பயிற்சிகள் உங்கள் இருதயத்தை திடமாக்கும், சுவாசத்தை இலகுவாக்கும், எடையைப் பேண உதவும். உடலுக்கு மேலதிக சக்தியைக் கொடுக்கும்.



விரைவு நடை, நீந்துதல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவை அத்தகையவையாகும். 20முதல் 30 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.

வாரத்தில் 3-4 நாட்களுக்காவது செய்வது அவசியமாகும். ஒரே தடவையில் செய்ய முடியவில்லை எனில், 2 அல்லது 3 தடவைகளாகப் பிரித்துச் செய்யுங்கள்.



மூட்டு வலிக்கு உதவக்கூடிய ஏனைய முயற்சிகள்

மூட்டு வலிகள் இருந்தால் அவற்றின் வலியைத் தணிக்கவும், செயற்பாட்டு எல்லைகளை அதிகரிக்கவும் செய்ய வேண்டிய பயிற்சிகள் பற்றி சென்ற கட்டுரையில் பார்த்தோம். நீங்கள் செய்ய வேண்டிய ஏனைய முயற்சிகள் இதோ.

ஏனைய முயற்சிகள்

இவற்றைத் தவிர உங்கள் உடலுக்கு அசைவியகத்தை கொடுக்கக் கூடிய எந்த வேலையையும் செய்யத் தயங்காதீர்கள். அது சிறிய பணியாக இருந்தால் கூட நிச்சயம் உதவும். யோகா போன்ற பயிற்சிகள் கூட நல்லதுதான். சந்தேகம் இருந்தால் மருத்துவரின் ஆலோசனையுடன் ஆரம்பியுங்கள்.

ஏனைய உதவிக் குறிப்புகள்

பயிற்சிகளை ஆரம்பிக்கும் போது படிப்படியாக ஆரம்பியுங்கள். அதிலும் முக்கியமாக சிலகாலம் பயிற்சிகள் இல்லாதிருந்துவிட்டு ஆரம்பிக்கும் போது திடீரென முழு வீச்சில் செய்யக் கூடாது. திடீரென கடுமையாகச் செய்தால் வலி குறைவதற்குப் பதிலாக அதிகரிக்கக் கூடும். எனவே Slow and Steady யாகச் செய்யுங்கள்.

பயிற்சிக்கு முன்னர் நீங்கள் பயிற்சி கொடுக்க இருக்கும் மூட்டுகளுக்கு சற்று வெப்பம் கொடுப்பது நல்லது. சுடுநீரில் நனைத்த துணியால் ஒத்தணம் கொடுங்கள், அல்லது Hot water bag னால் சூடு காட்டுங்கள்

அல்லது Infra Red Light பிடியுங்கள். அவ்வாறு 15-20 நிமிடங்களுக்குச் செய்ய வேண்டும். சூடு மூட்டுகளையும் தசைகளையும் சற்றுத் தளரச் செய்து நீங்கள் பயிற்சியை ஆரம்பிக்க முன்னரே வலியைச் சற்றுத் தணிக்கும்.

வெப்பமான நீரில் குளிப்பதும் உதவக் கூடும். மிதமான வெப்பமாக இருக்க வேண்டுமே ஒழிய கடும் சூடாக இருக்கக் கூடாது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.



தினமும் பயிற்சிகளை ஆரம்பிக்கும்போது உங்கள் மூட்டுகளை மெதுவாக அசைத்து, அவற்றிற்கான எளிய சுலபமான இதமான பயிற்சிகளை முதலில் செய்யுங்கள்.

இவ்வாறு 10 நிமிடங்கள் செய்த பின் தசைகளைப் பலப்படுத்துவதற்கான பயிற்சிகளைச் செய்யுங்கள்.

அதன்பின்தான் வேகநடை, நீச்சல் போன்ற கடுமையான பயிற்சிகளுக்குப் போக வேண்டும்.

பயிற்சிகளைச் செய்யும்போது வலி எடுத்தால் சற்று ஓய்வு கொடுங்கள்.

சுருக்கென தாக்கும் கடும் வலி எடுத்தால் பயிற்சியை நிறுத்தி அடுத்த நாளுக்கு ஒத்தி வையுங்கள். பயிற்சியின் போது மூட்டுக்கள் சிவந்து வீங்கினாலும் அவ்வாறே நிறுத்துங்கள்.

பயிற்சியின் போது வீங்கி வலித்த மூட்டுகளுக்கு பயிற்சி முடிந்தபின் ஐஸ் வைப்பது உதவும். 10-15 நிமிடங்களுக்கு வையுங்கள்.

பயிற்சிகளின் போது உங்கள் உள்ளுணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். உங்கள் மூட்டுகளால் தாங்க முடியாத கடும் பயிற்சிகளை அதற்குக் கொடுக்காதீர்கள். ஆரம்பத்தில் சொன்னதுபோல படிப்படியாக பயிற்சியை அதிகரியுங்கள், அதன் வேகத்தையும், செய்யும் நேரத்தையும்.

சற்றுக் காலம் நீங்கள் இயங்காதிருந்தால், அல்லது பயிற்சிகளை நிறுத்தியிருந்தால், மீண்டும் ஆரம்பிக்கும் போது மூட்டுகளில் சற்று வலி எடுக்கலாம்.

ஆயினும் அவ்வலி ஒரு மணிநேரத்திற்கு மேலாகவும் நீடித்தால் பயிற்சி சற்று அதிகமாகிவிட்டதாகக் கொள்ளலாம். எதற்கும் உங்கள் மருத்துவருடன் அவ்வலி இயல்பானதுதானா அல்லது நோயின் காரணமாகவா எனக் கலந்தாலோசிக்கலாம்.

எதற்கும் பயிற்சிகளை முற்றாக நிறுத்திவிடாதீர்கள். தொடர்ந்து செய்யுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

குடும்ப வைத்தியர்

Read Full Post »