Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘யாழ் காட்சிகள்’ Category

>அண்மையில் யாழ் சென்ற போது சுப்பிரமணியம் பூங்காவிற்கும் செல்ல முடிந்தது.

இந்த வரண்ட பூமியில் இந்த அழகான செழிப்பான பூங்காவா என மூக்கில் விரலை வைக்க வைத்தது அது.
மிக அற்புதமாகப் பராமரிப்புச் செய்கிறார்கள்.

அங்கு ஒரு மூலையில் இந்த மரம் பூ விரித்து சுகந்த மணம் வீச கம்பீரமாக நிற்கிறது. எனது சிறு வயது வியாபாரிமூலை வீட்டில் நான் நீர் ஊற்றி வளர்த்தது இது போன்றதொன்று பெருமரமாக வளர்ந்து நின்றது.

ஆயினும் அது பூத்து மணங்கமழ முன்னர் நாங்கள் குடும்பமாக கொழும்பிற்கு எனது மருத்துவப் படிப்பிற்காக செல்ல நேர்ந்தது.

 பி்ன்னொரு நாளில் வீடு திரும்பிய போது மரம் நின்ற சுவட்டையே காணவில்லை. ஆழ் மனத்தில் ரணவடுவாக இருந்த வலி தீரும் வண்ணம் சில படங்களைக் கிளிக் பண்ணிக் கொண்டேன்

இது நாகலிங்க மரம் (Couroupita guianensis) அல்லது நாகலிங்கப்பூ மரம் என அழைக்கப்படுகிறது. தென்னமெரிக்காவின் வடபகுதி, வெப்பவலய அமெரிக்கா, தென் கரிபியன் பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. இது 30-35 மீட்ட உயரம் வரை வளரக்கூடியது.

நாகலிங்கப்பூ மரம்

இதில் பூக்கள் உருண்டை வடிவில் மொட்டுக்களாக இருக்கும். இந்த மொட்டுக்கள் மலரும் போது பிங்க் நிற இதழ்கள் விரியும்.

உள்ளே நாகப்பாம்புகள் குடை விரித்திருக்க அதனுள்ளே சிவலிங்கம் இருப்பது போன்ற அமைப்பில் அருமையான பூவாக காட்சியளிக்கும்..

நாகலிங்கப்பூ

மொட்டுக்கள் காயாகும் போது பெரிய உருண்டை போல் இருக்கிறது. சித்த மருத்துவத்திலும் பயன்படுகிறது.

சுப்பிரமணியம் பூங்காவின் சிமெந்து இருக்கை பின்புலத்தில்

அம் மரம் பற்றி விக்கிபீடியாவில் மேலும் அறியுங்கள்

நான் இந்தப் படங்களை முகப்புத்தகத்தில் போட்ட போது நண்பர் மார்க் அன்ரனி ஆழமும் விரிவும் கொண்ட நீண்ட கருத்துரைக்கு வழங்கியிருந்தார்.

Mark Antony அளித்த கருத்துரையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கோயில்களும் நந்தவனங்களும் மன அமைதிக்காகவும் அழகுக்காகவும் மட்டுமே ஏற்படுத்தப்பட்டது அல்ல. ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்களுக்கு தோன்றும் நோய்களின் நிலைக்கேற்ப பல கடவுள் உருவங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஒவ்வொரு மூலிகையை வழிபாட்டு மூலிகையாக பயன்படுத்தி, இறைவனின் பெயரால் மக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படாமல் பாதுகாப்பு செய்யப்பட்டன.

இவற்றை மூடநம்பிக்கை என ஒதுக்காமல், மருத்துவ,அறிவியல் ரீதியாக ஆய்வுசெய்தால், முன்னோர்களின் அறிவியல் பூர்வ நம்பிக்கையின் வெளிப்பாடே கோயில்கள் என நிரூபிக்க முடியும். இந்த அபூர்வ மூலிகை இனங்கள் அழியாமல் பாதுகாக்க கோயில்களிலும் வளர்க்கப்பட்டன. அதுபோன்ற மூலிகைகளில் மருத்துவ குணங்களுடன், தோல் நோய், மலேரியா சுரம் போன்றவற்றை கட்டுப்படுத்தி குணப்படுத்தும் ஆற்றலுடையதுடன் அபூர்வமாகவும், கண்ணைக் கவரும் அழகிய பூக்களுடனும் காணப்படும் மூலிகைதான் நாகலிங்கம்.

இம்மரத்தின் உலர்ந்த பழங்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. உள்ளே உட்கொள்ள ஒவ்வாமையை ஏற்படுத்தும். இலை மற்றும் பழங்களிலுள்ள டைஹைட்ரோ டையாக்சின்டோலோ குயினாசோலோன், டிரிப்டான்ரின், இன்டிகோ இன்டுருபின், ஐசாடின் ஆகியன எதிர் உயிரியாக செயல்பட்டு தோல் உடலின் மென்மையான பகுதிகளில் வளரும் பூஞ்சை, பாக்டீரியா கிருமிகளை அழிக்கின்றன.

இதன் பட்டை மலேரியா சுரத்தை நீக்க பயன்படுத்தப்படுகிறது. இதன் உலர்ந்த பழங்கள் கீழே விழுந்து தரையில் பட்டு வெடித்து பெரும் சத்தத்தை ஏற்படுத்தும். ஆகவே கோயில்களில் கொள்ளையர்கள் புகாமல் இருக்க, பாதுகாப்பின் அடையாளமாக நாகலிங்க மரங்கள் கோயில்களில் வளர்க்கப்படுகின்றன.

இதன் இலைகளை மையாக அரைத்து, பூஞ்சை கிருமியால் தோன்றும் சொரி, சிரங்கு, படர்தாமரை, படை உள்ள இடங்களில் தடவ குணமுண்டாகும். இதன் பூவின் லிங்கம் போன்ற பகுதியை அரைத்து புண்களின் மேல் தடவ புண்கள் ஆறும். இதன் இலைகள் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டதால் இவற்றை மென்று சாப்பிட பல் மற்றும் ஈறு இடைவெளியில் தங்கியுள்ள கிருமிகளை வெளியேற்றி பல்வலியை குறைக்கின்றன. பற்கள் சொத்தையாகாமல் தடுக்கின்றன.

Read Full Post »

>

பருத்தித்துறைக் கடற்கரை
அலை மேவி கடல் கடந்து
உலகளந்த கடலோடி
திசை மயங்கப்
புகல் தேடும் கணமதில்
வழி காட்டி மனம் குளிர்விக்கும்.
பருத்தித்துறைக் கடற்கரை மற்றொரு தோற்றம்
காரிருளில் படகேறி
வலைவீசிக் கை ஓய்ந்து
அடிவானம் வெளிக்கு முன்
நிறைபடகு மீன் சுமந்து
கரை ஏகும் மீனவர்
குடில் மீள வழி காட்டும்.
கடற்கரையருகே தேவாலயம்

உவர் மணலில்  குடில் கட்டி
சிறுநண்டின் பொந்தளைந்து
நுரைநீரில் கால் நனைத்து,
மண்ஆழ வேரூன்றும்
அடம்பன் கொடி பற்றி
கரம் சிவந்த காலமதில்..

பருத்தித்துறை வெளிச்சவீடு

விரல் சூப்பி வாயொழுக நின்ற போதில்
முகில் முட்ட நெடு வளர்ந்து
பெருமரமாய் தலை நிமிர்ந்தெம்மை
அசர வைத்த வெளிச்ச வீடு
துயர் சூழச் சிறை போந்து
கம்பி எண்ணும் காலமாயிற்று.

எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>யாழ் மண் கல்விக்கு மட்டுமல்ல விவசாயத்திற்குப் பேர் போனது. அண்மைய யாழ் பயண கிளிக்குகளில் சில

நான் ஹாட்லிக் கல்லூரியில் கற்கச் சென்ற ஆரம்ப காலங்களில் ஒரு வருடமளவிற்கு பொடி நடையில் கல்லூரிக்குப் போவது வழக்கம். திருநாவலூர்ச் சந்தி தாண்டி மணல் வீடு அண்டியதும் பாதையை விட்டுவிலகி தோட்டக் காணிகளில் கால் பதிப்போம்.

தரிசாகக் கிடக்கும் பழைய தோட்டப் பூமி

சீசனுக்கு ஏற்ப மரவெள்ளி, வெங்காயம், மிளகாய், எள்ளு எனப் பலவகையான பயிர்கள் நிறைந்திருக்கும். கத்தரியும், பயிற்றங் கொடியும் ஆங்காங்கே பயிரடப்பட்டிருக்கும்.

ஆனால் இன்று பல நிலங்கள் கட்டாந்தரைகளாகக் கிடப்பதைக் காண வயிறு பற்றி எரிகிறது.

இருந்தபோதும் இன்றும் எமது விவசாயிகள் தோட்டச் செய்கையை முற்றாகக் கைவிடவில்லை என்பதையும் உணர முடிந்தது.

வியாபாரிமூலை பிள்ளையார் கோவிலருகே

தோட்டங்கள் வெங்காயம்,  மிளகாய், பீட்ரூட், வாழை  எனப் பசுமை நிறைந்து கிடக்கின்றன. புகையிலைச் செய்கைக்கும் குறைவில்லை. முந்திரிகைக் கொடியும் பயிரடப்படுகிறது.

எனது ஊர் பிள்ளையார் கோவிலை அண்டிய தோட்டங்களில் வெங்காயச் செய்கை அமோகமாக நடக்கிறது.

எனது ஊரை விட்டுப் பயணித்து, அச்சுவேலி தாண்டி கீரிமலை நோக்கிப் பயணித்த போது கிளிக் செய்த படங்கள் தொடர்ந்து வருகின்றன.

வாழைத்தோட்டம்

வலிகாமச் செம்மண்ணில் பயிர்கள் செழித்து வளரும் காட்சிகளை படங்களில் காணலாம்.

யாழ் மண்ணில் பீற்ரூட்

விவசாயத்தின் அடிப்படை தேவை நிலம் என்றால் அடுத்து முக்கியமானது நன்னீர்க் கிணறுகள்.

பழைய விவாசயக் கிணறு ஒன்று பாழடைந்து கிடக்கிறது. தூலாக் கட்டி நீர் இறைத்துப் பாய்ந்த கல்வாய்க்கால் இடிந்து கிடக்கிறது.

தூலாவைத் தொடரந்து சக்கர யந்திர இறைப்பு பல இடங்களில் இருந்தது. இப்பொழுது அவற்றைக் காணவும் கிடைக்கவில்லை.

இடிந்த வாய்க்காலும் கைவிடப்பட்ட கிணறும்

ஆயினும் வாட்டர் பம் வைத்து நீர் இறைக்கிறார்கள்.  யாழ் மண் தோட்டக் காணிகள் பல செழித்துக் கிடக்கின்றன. நீர் உவர் நீராகிறது என்ற கவலை அறிஞர்கள் மத்தியில் கலங்க வைக்கிறது.

வெங்காயம், வாழை, மிளகாய் எனச் செழித்த மண்

 மாடு இன்றேல் விவசாயம் இல்லாத காலம் ஒன்றிருந்தது.
உழவு மெசின்கள் வந்து விட்ட இன்றைய காலத்தில் காளை மாடுகளின் பயன் வண்டில் இழுப்பதுடன் நின்றுவிட்டது.

ஆயினும் பசுக்களின் தேவைக்கு என்றுமே மவுசு குன்றாது . நாற்புறமும் மரத்தூண் நாட்டி, பனயோலையால் கூரை வேய்ந்த மாடுகளின் வீடு.
அதற்குள் பனை மட்டைகளால் தொட்டி கட்டி மாடுகளுக்கு தீவனம் போடுவார்கள்.

மாடுகள் அருகே வெள்ளாடு ஒன்றும் படத்திருந்து அசை போடுகிறார்

மாடுகள் இல்லாத விவசாயமா?

 மாடு என்றிருந்தால் அவற்றின் உணவுக்கு வைக்கோல் அவசியம்தானே.

வைக்கல் போர்

வைக்கல் போர்கள் ஆங்காங்கே தலை நிமிர்ந்து நிற்கின.றன.

Read Full Post »