Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘வலி நிவாரணிகள்’ Category

>வயதான பலர் மூட்டு வலிக்கிறது எனப் பூச்சு மருந்துகளை முழங்கால், கணுக்கால் என அடிக்கடி பூசிக்கொண்டிருப்பார்கள். “பொழுது போகாதற்கு அதை இதைப் தேச்சுக் கொண்டிருக்கிறதுதான் வேலை” என இளவட்டங்கள் அலட்சியமாகப் பேசும். அல்லது “கண்டதையும் பூசி உடுப்புகளையும் பாழாக்கிறதுதான் மிச்சம்” என நக்கல் அடிக்கும்.

நோ எண்ணெய், இலுப்பெண்ணெய், வேப்பெண்ணய் பூசுவதால் பலன் ஏதும் கிடைக்கிறதா இல்லையா என கருத்துச் சொல்ல எனக்கு அருகதையில்லை. அவை எனது படிப்பு, அனுபவம் ஆகியவற்றிற்கு அப்பாலானவை.

பலன்

ஆனால் வலி நிவாரணி ஜெல் மருந்துகளைப் பூசுவதால் பலன் கிடைக்கும் என்பது உண்மை. ஆனால் பலருக்கும் இவ்வாறு பூசுவதால் பலன் கிடைக்குமா என்பதில் சந்தேகம் இருக்கிறது. பல மருத்துவர்களுக்கே அவ்வாறு பூசுவதன் பயன் பற்றி நம்பிக்கை கிடையாது. எனவே இது பற்றி சில ஆய்வுகள் செய்யப்பட்டன.

நாட்பட்ட முழங்கால் வலி, மற்றும் வயதானவர்களில் ஏற்படும் ஒஸ்ரியோ ஆர்திரைடிஸ் (osteoarthritis) நோயாளார்களில் டைகுளோபெனிக் சோடியம் (Diclofenac sodium) மருந்தை மாத்திரைகளாக கொடுக்கும்போது ஏற்படும் வலிநிவாரணத்திற்கு ஒத்ததாக ஜெல் மருந்தாகப் பூசுவதாலும் நன்மை கிடைத்தது. உட்கொள்ளும் மாத்திரைகளைப் போலவே வலியுள்ள இடத்தில் பூசப்படும் மருந்தும் வலியைத் தணிப்பதில் உதவுகிறது என்பது இதனால் தெளிவாகிறது.


பக்கவிளைவுகள்

வலிநிவாரணிகளை மாத்திரைகளைப் பாவிக்கும்போது ஏற்படும் முக்கிய பக்கவிளைவு குடல் சம்பந்தமானாதாகும். பல நோயாளர்களும் வயிற்று எரிவு, புகைச்சல், இரைப்பைப் புண் ஆகியன ஏற்படுவதாகக் கூறுகிறார்கள். அது உண்மையே. அத்துடன் இவை இரத்த அழுதத்தை அதிகரிக்கவும் செய்கின்றன. இருதய நோய்களைக் கொண்டு வருவதும் அதிகம் என்பதும் அனுபவத்திலும், ஆய்வுகளிலும் தெரிய வந்திருக்கிறது.

ஆனால் அவற்றை பூச்சு மருந்தாகப் பாவிக்கும்போது அத்தகைய பக்கவிளைவுகள் மிகக் குறைவாகவே ஏற்பட்டன. இதற்குக் காரணம் பூச்சு மருந்தாக பாவிக்கும்போத ஒரு சதவிகிதம் மட்டுமே உறிஞ்சப்பட்டு குருதிவழியாக உடலெங்கும் பரவுகிறது. இருந்தபோதும் வலியுள்ள இடத்தில் உறிஞ்சப்படும் மருந்தினால் நோய் தணிகிறது

பக்கவிளைவுகள்

அப்படியானால் பூச்சு மருந்துகளால் பக்கவிளைவுகள் ஏதும் கிடையாதா என்ற கேள்வி எழுகிறது.

  • நீண்ட காலத்திற்கு அதாவது 6 மாதம் ஒரு வருடம் எனத் தொடர்ந்து பூசி வரும்போது தோல் வரட்சி ஏற்படலாம். 
  • அத்துடன் தோலில் அரிப்பு, எரிவு, சிவத்தல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம். 
  • சிலரில் கொப்பளங்கள் போடுவதும், எக்ஸ்சிமா போன்றவை வருவதும் உண்டு.

இத்தகைய பக்கவிளைவுகள் பெரும்பாலும் தொடர்ந்து பூசும் இடத்தில் மட்டுமே வரும். தோல் வரட்சியடைந்தால் சாதாரணமான இதப்படுத்தும் கிறீம் வகைகளை (அழளைவரசளைiபெ ஊசநயஅ) உபயோகிப்பதன் மூலம் தடுத்துவிடலாம்.

எத்தகைய பூச்சு மருந்துகள் உதவும்?

எல்லா வெளிப் பூச்சு மருந்துகளும் உதவுமா?

மருந்தகங்களில் வலிக்காகப் பலவகையான வெளிப் பூச்சு மருந்துகள் விற்பனையாகின்றன. இவை யாவுமே பயனுள்ளவையா எனக் கேட்டால் இல்லையென்றே கூற வேண்டும். Diclofenac, Ibuprofen, Ketoprofen, Piroxicam போன்ற பல வலிநிவாரணி மருந்துகள் ஜெல் மருந்துகளாக பூசுவதற்கு ஏற்ப வருகின்றன. இவை பயனளிக்கும்.
 
அதே நேரம் Methyl salicylate போன்ற சாதாரண வலிநிவாரணி மருந்துகள் Menthol, Camphor, Eucalyptus Oil போன்றவற்றுடன் கலந்து கிடைக்கின்றன. இவை வாசனையையும், பூசுமிடத்தில் சற்று எரிவையும் ஏற்படுத்துவதுடன் நோயாளிக்கு மனதுக்கு இதமான உணர்வையும் கொடுக்கும். 

ஆயினும் அவை வலிநிவாரணிகளாகப் பயன்படுமா என்பது பற்றி நிச்சமாகக் கூறமுடியாது.

காசைக் கரியாக்காதீர்கள்.

எனவே வலிநிவாரணி மருந்துகளாகக் கிடைத்தால் அவற்றை நீங்கள் பயன்படுத்தலாம். அதில் எது உங்களுக்கு ஏற்றது என்பதை உங்கள் மருத்துவருடன் கேட்டுப் பயன்படுத்துங்கள்.

கடையில் கிடைப்பதையெல்லாம் பூசி காசை வீணாக்காதீர்கள்.

மூட்டு வலிகள் சம்பந்தமான எனது ஏனைய பதிவுகள்

  1. மூட்டு வலிகளா? பயிற்சிகள் உதவும்
  2. மூட்டுத் தேய்வு நோயை இனங் காட்டும் ஹெர்படன்ஸ் நோட் (Heberden’s Node)
  3. முதுகு வலிக்கு எக்ஸ் ரே- உங்கள் எதிர்பார்ப்பு என்ன?
  4. நாரிப்பிடிப்பு (முதுகு வலி) வராது தடுத்தல்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

தினக்குரல் தினசரியின் ஹாய்நலமா ? பத்தியில் 15.12.2010 ல் நான் எழுதிய கட்டுரை

Read Full Post »

>வலி நிவாரணிகள் பற்றி நிறையத் தப்பபிப்பிராயங்கள் இருக்கின்றன.

வெளிநாட்டிலிருந்து வந்த நபர் ஒருவர் கடுமையான  இடுப்புவலியால் துன்பப் பட்டுக்கொண்டிருந்தார். ஆனால் தனக்கு Pain Killer மருந்து வேண்டவே வேண்டாம் என அடம்பிடித்தார்.

அதே வேளை முழங்கால் வலியுள்ள ஒரு அம்மா Diclofenac Sodium  என்ற வலிநிவாரணி மாத்திரையை எந்த மருத்துவரின் சிபார்சுமின்றி மாதக்கணக்கில் தானாகவே உபயோகித்துக் கொண்டிருந்தார்.

இருவரும் தவற்றையே செய்கிறார்கள்.

வலிநிவாரணிகள் (Pain Killers)  எனப் பொதுவாக அழைத்தாலும் இவை ஆங்கிலத்தில் Non-steroidal anti-inflammatory drugs  என்றே மருத்துவத்தில் அழைக்கப்படுகிறது.

சுருக்கமாக  NSAID என்பார்கள். ஸ்டிரொயிட் அல்லாத வலிநிவாரணிகள் எனலாம்.

பொதுவாக வலிநிவாரணி என அழைத்தாலும் இவை முக்கியமாக மூன்று வகைகளில் பயன் தருகின்றன.

இவை வாயினால் உட்கொள்ளக் கூடிய மாத்திரைகளாகவும், சிரப் மருந்துகளாகவும், கூட்டுக் குளிசைகளாகவும் (Capsules) கிடைக்கின்றன. அதேவேளை மலவாயிலில் உட்செலுத்தும் மருந்துகளாக (suppository) மற்றும் ஊசி மருந்துகளாகவும் (Injections)  அவசியமானபோது மருத்துவர்களால் உபயோகிக்கப்படுகின்றன.

மருத்துவப் பயன்கள்

இவை பலவகையான மருத்துவப் பிரச்சனைகளுக்கு அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன.

•    வலி – குத்து, வலி, உழைவு, நோ எனப் பலவாறு அழைக்கப்படும் எல்லா வலி சார்ந்த அசௌகரியங்களையும் குறைக்கினறன. தசைப்பிடிப்புகள், தலைவலி, உடல்வலி, மாதவிடாய்க் குத்து, வயிற்று வலி, சிறுநீரகக் குத்து போன்ற அனைத்தையும் நீக்கும் ஆற்றல் இவற்றிற்கு உண்டு.

•    காய்ச்சலைத் தணிக்வும் இவை பயன்படுத்தப்படுகிறன.
•    அழற்சியைத் தணிக்க உதவும். உதாரணமாக மூட்டு வாதங்களின் (Rhematoid Arthritis)  போது அவை அழற்சியுற்று வீங்கிச், சிவந்து, வலியைக் கொடுக்கும். இந்த அழற்சியைத் (inflammation) தணிக்கும் ஆற்றல் வலிநிவாரணிகளுக்கு உண்டு.
•    மாதவிடாயின் போது கடுமையான குருதிப் பெருக்கு இருந்தால் அதைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் இவைக்கு இருக்கிறது.
எனவே இவை மிகுந்த பயனுள்ள மருந்துகள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆயினும் அவற்றை எழுந்தமானத்திற்கு உபயோகிக்கக் கூடாது. அவற்றிற்கு பல பக்க விளைவுகள் உள்ளன.

அதிகம் ஏற்படும் பக்க விளைவுகள்

•    நெஞ்செரிப்பு
•    இரைப்பைப் புண்

சிலவேளைகளில் ஏற்படும் பக்க விளைவுகளாவன

இரைப்பையில் ஏற்படும் புண்கள் மோசமாகி பின்வரும்  விளைவுகள் ஏற்படலாம்.
•    இரைப்பைப் புண்ணிலிருந்து இரத்தம் கசிதல்
•    இரத்தசோகை – அவ்வாறு தொடர்ந்து இரத்தம் கசிவதால் ஏற்படும்
•    இரைப்பையில் அல்லது உணவுக் கால்வாயில் துவாரம் விழுதல்.
மிகக் குறைவாக ஏற்படும் பக்க விளைவுகளாவன
•    உயர்இரத்த அழுத்தம்
•    இருதய வழுவல் (Heart Failure)
•    மாரடைப்பு

சிறுநீரக வழுவல், ஈரல் பாதிப்பு போன்ற மிக ஆபத்தான விளைவுகளையும் ஏற்படுத்தலாம். ஆனால் மிகக் குறைவாகவே இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. ஏற்கனவே சிறுநீரக அல்லது ஈரல் நோய் இருப்பவர்களே அத்தகைய பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.

எனவே இத்தகைய மருந்துகளை மருத்துவ ஆலொசனை இன்றி உபயோகிப்பது நல்லதல்ல. அவ்வாறு உபயோகிக்கும்போதும் சிபார்சு செய்ததை விட அதிக காலத்திற்கு உபயோகிக்கக் கூடாது.

அவதானம் தேவைப்படுவோர்

கீழ்க்கண்ட பாதிப்புள்ளவர்கள் வலிநிவாரணிகளை உபயோகிப்பதில் மேலதிக அவதானம் தேவை. இல்லையேல் இரப்பை புண் ஏற்படும் ஆபத்து அதிகமாகும்
•    ஏற்கனவே நெஞ்செரிப்பு, புகைச்சல், வயிற்று வலி போன்ற உணவுக் கால்வாய்ப் பிரச்சனை உள்ளவர்கள்
•    நீரிழிவு, உயர்இரத்த அழுத்த நோய், இருதய நோயுள்ளவர்கள்
•    65 வயதிற்கு மேற்பட்டவர்கள்
•    புகைத்தல், அதிக மது பாவனையாளர்கள்
•    அதிக அளவிலும், நீண்ட காலத்திற்கும் வலிநிவாரணி உபயோகிப்பவர்கள்

ஆஸ்த்மா நோயை சில தருணங்களில் தீவிரமாக்கலாம் என்பதால் அவர்கள் வலிநிவாரணிகளை அவதானத்துடன் உபயோகிக்க வேண்டும்.

கர்பமாயிருக்கும்போதும், கர்ப்பம் தரிப்பதை எதிர்நோக்கியிருக்கும் காலங்களிலும், பாலுட்டும் காலத்திலும் மருத்துவ ஆலோசனை இன்றி உபயோகிக்கக் கூடாது.

பல நாடுகளில் பின்வரும் வலிநிவாரணிகள் ibuprofen,  naproxen, and  aspirin.  மருத்துவ ஆலோசனையின்றி நோயாளிகள்  தாங்களே வாங்கி உபயோகிக்க முடியும்.

ஆயினும் diclofenac, indomethacin,  mefenamic acid, meloxicam, celecoxib, nabumetone போன்றவற்றை மருத்துவ ஆலோசனையின்றி உபயோகிக்க முடியாது.

வலிநிவாரணிகளை உபயோகிப்பதில் சிக்கல் உள்ளவர்கள் பரசிட்டமோல் (Paracetamol) மாத்திரைகளை பயமின்றி உபயோகிக்க முடியும்.

நான் எழுதி தினக்குரல் பத்திரிகையின் ஹாய் நலமா பத்தியில் 14.09.2010 வெளியான கட்டுரையின் மீள்பதிவு.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »