Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘வாழ்க்கை முறை’ Category

கொலஸ்டரோல் பிரச்சனை என்று அறிந்தாலே எதைச் சாப்பிடுவது எதைக் கைவிடுவது என்ற சந்தேகம் எவருக்கும் கிளம்பிவிடும்.

high-cholesterol-in-seniors

 

உங்களுக்கா, உங்கள் கணவனுக்கா, அம்மா அப்பாவிற்கா? யாருக்கு கொலஸ்டரோல் பிரச்சனை இருக்கிறது?

கொலஸ்டரோல் உணவு முறையில் உங்களுக்குள்ள சந்தேகங்கள் என்ன?

ஆனால் அவருக்கு எந்தச் சந்தேகமும் கிடையாது. எண்ணையைத் தொடக் கூடாது என்பது மட்டுமே அவருக்கு தெரிந்த ஒரே விடயம்.

  • பொரியல், வதக்கல், எதுவுமே கூடாது. வடை, ரோல்ஸ் எதுவும் ஆகாது.
  • தேங்காயில் எண்ணெய் இருக்கிறது என்றபடியால் சம்பல், சொதி, குழம்பு எதுவும் கூடாது.
  • மனைவிக்கு கடும் சட்டம் இட்டார். சட்டம் தொடர்ந்ததில் மனைவியின் எடை குறைந்து எலும்பு தேய்ந்து இடுப்பு உடைந்தது.
  • ஒல்லிக்குச்சியாக மாறிவிட்ட மகனை அவனது காதலி “இவன் அந்த விடயங்களுக்கும் தோதுப்படாது” என்று எண்ணி வேறு ஒருவனை மணந்து கொண்டாள்.

மற்றொருவர் பிரச்சனையை வேறு விதமாகக் கையாண்டார்.

மருத்துவரிடம் போனால்தானே கொலஸ்டரோல் கூடிப்போச்சு அதைக் கைவிடு இதைக் கைவிடு, என்று தன்வாயை அடக்கிவிடுவார் என்பதால் மருத்துவரிடம் போவதையே கைவிட்டுவிட்டார். திடீரென ஏற்பட்ட ஹார்ட் அட்டக்கில் மருத்துவமனையில் அனுமதிக்க நேர்ந்தது.

கொலஸ்டரோலும் உணவு முறைகளும் பற்றிய உங்கள் சில கேள்விகளுக்கான விடைகள் தொடர்கிறது.

கொலஸ்டரோல் பிரச்சனை உள்ளவர்கள் உணவில் எண்ணை கொழுப்பு வகைகளை அடியோடு தவிர்க்க வேண்டுமா?

நிச்சயமாக இல்லை. ஆரோக்கியமான உணவுமுறையில் எண்ணெய் கொழுப்பு வகைகளும் அவசியமானதே. எமது நாளாந்த சக்தி (கலோரி) தேவையில் 30 சதகிவிதமானதை அவற்றிலிருந்தே பெற வேண்டும்.

அமெரிக்கர்கள் பொதுவாக தங்கள் நாளாந்த கலோரி தேவையில் 40 சதகிவிகிதமானதை கொழுப்பு உணவுகளிலிருந்து பெறுகின்றார்கள். அதே நேரம் இலங்கையர்களான நாம் 25 சதகிவிகிதத்தை மட்டுமே பெறுகின்றோம் என்பது நல்ல விடயம். எனவே இலங்கையர்களின் உணவுமுறை பொதுவாக நல்லது எனலாமா? இல்லை. குறைவாவக உண்டாலும் தவறான கொழுப்புகளை உபயோகிப்பதே நாம் செய்யும் பெரும் தவறு ஆகும்.

getty_rf_photo_of_fish_oil_capsule

எனவே உணவில் கொழுப்பு உணவுகளை முற்று முழதாக நிறுத்தாமல் கட்டாயம் ஓரளவு சேர்த்துக் கொள்வதே நல்லது. ஆனால் அதுவும் நல்ல வகையான கொழுப்புகளாக இருக்க வேண்டும்.

உணவில் எண்ணையைக் குறைப்பதால் ஏதாவது பிரச்சனை ஏற்படுமா. 

ஏற்கனவே குறிப்பிட்டது போல சரியான அளவுகளில் உபயோகிக்கும் போது பிரச்சனை ஏற்படாது. கொழுப்பு ஓரளவு சேராவிட்டால் கொழுப்பில் கரையும் விற்றமின்களை உடல் உள்ளுறுஞ்சுவதில் பிரச்சனை ஏற்பதுவதும் உண்டு. அது மாத்திரமல்ல அதிகமாக குறைக்கும் போது உணவின் சுவை குறைந்துவிடலாம். இதைச் சரிசெய்ய சிலர் தம்மை அறியாமலே கூடியளவு இனிப்புகளையும், மாச்சத்துகளையும் உணவில் சேரத்துவிடுவார்கள். இது நீரிழிவு எடை அதிகரிப்பு போன்ற வேண்டாத விளைவுகளைக் கொண்டுவரலாம்.

வீட்டு உணவுகளில் மட்டுமின்றி கொழுப்பு குறைந்ததாகச் சொல்லி அமோக விலைகளில் விற்கப்படும் பைக்கற்றில் கிடைக்கும் உணவுகளிலும் அவ்வாறே மாச்சத்தும் இனிப்பும் அதிகமாக இருக்கக் கூடும். எனவே அவற்றின் லேபளில் கொழுப்பு எவ்வளவு என்பதை மட்டுமின்றி அதிலுள்ள கலோரி வலுவையும் அவதானிக்க வேண்டும்.

எண்ணை வகைகளில் எவ்வளவு கொலஸ்டரோல் இருக்கிறது.

எந்த தாவர எண்ணெயிலும் கொலஸ்டரோல் இல்லை. ஆனால் அதிக எண்ணெய் உணவுகளை உண்ணும்போது அவை உடலில் கொலஸ்டரோலாக மாறுகிறது.

அவ்வாறாயின் உணவுகளில் கொலஸ்டரோல் இல்லையா?

எல்லா மாமிச உணவுகளிலும் இருக்கிறது. முட்டையில் அதிகம் இருக்கிறது இறால், கணவாய் ஆகியவற்றில் அதிகம் இருக்கிறது. மிருகங்களின் ஈரல், மூளை, சிறுநீரகம் போன்றவற்றலும் அதிகம் உண்டு. பாலிலும் இருக்கிறது. உண்மையில் ஒவ்வொரு முட்டையிலும் 300 மிகி கொலஸ்டரோல் இருக்கிறது.

2937573_f520

எமது உடலுக்கான தினசரி கொலஸ்டரோல் தேவை அதே 300 மிகி மாத்திரமே. ஆனால் இருதய நோயுள்ளவர்களுக்கு 300 மிகி க்கு மேற்படக் கூடாது. முட்டையில் கொலஸ்டரோல் அதிகமாக இருப்பதால்தான் பலரும் முட்டை சாப்பிடத் தயங்குகிறார்கள்.

ஆனால் எமது குருதிக் கொலஸ்டரோல் அதிகரிப்பதற்கு உணவில் உள்ள கொலஸ்டரோல் முக்கிய காரணமல்ல. எமது உடலே தனக்குத் தேவையானதை உற்பத்தி செய்து கொள்கிறது. ஆரோக்கியமற்ற கொழுப்பு அதிகமுள்ள உணவு முறைகளும், உடற் பயிற்சி இன்மையும், பரம்பரையில் கொலஸ்டரோல் இருப்பதும் ஒருவரது குருதி கொலஸ்டரோலை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அவ்வாறாயின் ஒருவர் தினசரி ஒவ்வொரு முட்டை உண்ணலாமா?

கொலஸ்டரோல் மற்றும் இருதய நோய் பிரச்சனை இல்லாதவர்கள்  தினமும் ஒவ்வொரு முட்டை உண்பதில் தவறில்லை. ஆனால் அத்தகைய பிரச்சனை உள்ளவர்கள் வாரத்திற்கு முன்று முட்டைகள் உட்கொள்வதில் பிரச்சனை இல்லை. ஆனால் முட்டையை எவ்வாறு உண்பது என்பதும் முக்கியம். தினமும் முட்டையை பொரித்துச் சாப்பிட்டால் எண்ணெய் காரணமாக கொலஸ்டரோல் அதிகரிக்கும். அவித்துக் கறிசமைத்து உண்பதே விரும்பத்திக்கது.

எண்ணை வகைகளில் எந்த எண்ணெய் நல்லது?

உண்மையில் எந்த எண்ணை ஆயினும் அவற்றில் கலோரிச் சத்து அதிகமாகவே இருக்கிறது. எனவே எந்த எண்ணை என்றாலும் அதை அதிகமாக உட்கொள்ளக் கூடாது. ஏற்கனவே சொல்லப்பட்டது போன்று 30 சதவிகித கலோரிச் சத்து பெறும் அளவிற்கு மட்டும் உட்கொள்ள வேண்டும்.

பொதுவாக நிரம்பாத கொழுப்பு அமிலங்களைக் கொண்ட ஒலிவ் ஓயில், கனோலா எண்ணெய், சூரியகாந்தி, சோளம், நல்வெண்ணெய் போன்றவை நல்லவை எனப்படுகிறது. தேங்காய் எண்ணெய், பாம் எண்ணெய் போன்றவை நிரம்பிய கொழுப்பைக் கொண்டவை என்பதால் நல்லதல்ல என்பார்கள்.

இருந்தபோதும் தேங்காண் எண்ணெயில் உள்ள கொழுப்பு short chain fatty acid  என்பதால் நல்லது என்ற கருத்தும் உள்ளது.

பொரிப்பதற்கு ஏற்ற எண்ணெய் எது

சாதாரண வெப்ப நிலையில் நல்லது என்று சொல்லப்படும் ஒலிவ் ஓயில், கனோலா எண்ணெய், சூரியகாந்தி, சோளம் போன்றவை சூடாக்கும்போது ஆரோக்கியமற்றதாக மாறிவிடுகிறது. எனவே அவை பொரிப்பதற்கு ஏற்றவை அல்ல. ஒரு முறை பொரிக்க உபயோகித்த எண்ணெயில் மீண்டும் பொரிப்பதால் தோன்றும் நச்சுப்பொருட்கள் இருதயக் குழாய்களில் கொழுப்பு படிவதை அதிகமாக்குகிறது. எனவே ஒரு முறை சூடாக்கிய அத்தகைய எண்ணெய்களை வீசிவிட வேண்டும்.

ஆனால் தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் ஆகியன பொரிப்பதற்கு ஏற்றது. ஒரு முறை பாவித்ததை மீண்டும் பொரிப்பதற்கு பாவித்தாலும் அதனால் பாதிப்பு அதிகம் இல்லை.

ஓலிவ் ஓயில் ஏன் நல்லது என்கிறார்கள்?

அதில் அதிகளவு monunsaturated fat  இருப்பதால் நல்லது. அத்துடன் அதில் உள்ள பீனோல் வகைகள் கெட்ட கொல்ஸ்டரோலால் ஒட்சியேற்றப் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கின்றன. இப்பொழுது virgin olive oil, extra virgin olive oil என்றெல்லாம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை பதப்படுத்தப்படாதவை என்பதால் நச்சுப் பொருட்கள் இல்லை.

அரிசித் தவிட்டு எண்ணெய் (Rice bran oil)  என இணையத்திலும் வெளிநாட்டு பத்திரிகைகளிலும் பேசுகிறார்களே. அவை நல்லவையா?

இதில் பல வகை கொழுப்புகளும்(Monunsaturated, Polyunsaturated, Saturated)  சரியான விகிதாசாரத்தில் கலந்திருப்பதால் நல்லது என்கிறார்கள். அத்துடன் இயற்கையான விற்றமின் ஈ, அன்ரி ஒக்கிசிடன்ட்ஸ், பைரோஸ்டெரோல் போன்றவை அதிகம் இருப்பதால் நல்லது. நல்ல கொலஸ்டரோலான HDL லை அதிகரித்து கெட்ட கொலஸ்டரோல்களான ரைகிளிசரைட், LDL ஆகியவற்றைக் குறைக்கும் ஆற்றல் இருப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் இலங்கையில் கிடைப்பதாகத் தெரியவில்லை.

கொலஸ்டரோல் உள்ளவர்களுக்கு மீன் நல்லது என்கிறார்களே?

உண்மைதான். அதில் ஒமேகா 3, 6 ஆகியன இருப்பதால் நல்லது. ஏனெனில் இவை இரத்தக் குழாய்களில் அழற்சியைக் குறைத்து, கொழுப்பு படிவதைத் தடுக்க உதவுகின்றன. இதனால் மாரடைப்பு பக்கவாதம் போன்றை ஏற்படுவதற்கான வாய்ப்புக் குறைகிறது. வாரத்தில் இரண்டு நாட்களுக்காவது 3 முதல் 5 அவுன்ஸ் அளவிற்கு குறையாத மீன் சாப்பிடுவது அவசியம் என அமெரிக்க இருதய சங்கம் கூறியுள்ளது. இருதய நோய் உள்ளவர்கள் மேலும் அதிகமாக உண்ண வேண்டும்.

ஒமேகா 3, 6 ஆகியன இருதய நோய்களைத் தடுப்பதுடன், கொலஸ்டரோல் அளவுகளை நல்ல நிலையில் பேணுவது, நினைவாற்றலை அதிகரிப்பது, ஈரலில் கொழுப்பு படிவதைத் தடுப்பது ஆகிய நல்ல பயன்களைக் கொடுப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.

ஒமேகா 3, 6 ஆகியன மாத்திரைகளாகவும் கிடைக்கின்றன. ஆயினும் நேரடியாக மீன் சாப்பிடுவது போல அவை உதவுவதில்லை. 

மீன் சாப்பிடாதவர்கள் ஒமேகா 3, 6 ஆகியவற்றை எவ்வாறு பெறுவது. 

நல்லெண்ணெயில் 55 சதவிகிதம் ஒமேகா 3 இருக்கிறது. கனலா ஓயில், சோயா ஓயில் ஆகியவற்றிலும் இவை ஓரளவு கிடைக்கின்றன. எனவே அவற்றை உண்ணலாம். ஆனால் அதிலும் ஒரு பிரச்சனை உள்ளது புதிய ஆய்வுகள் ஒமேகா 6, 3 ஆகியவற்றை உட்கொள்வது மட்டும் முக்கியமல்ல. அவை எந்தளவு விகிதாசாரத்தில் உணவில் கலந்துள்ளன என்பதும் முக்கியம் என்கிறார்கள்.  இரண்டிற்கு ஒன்று (2:1) சதவிகிதத்தில் இருந்தால்தான் முழுப் பலன் கிடைக்கும் எனத் தெரிகிறது. இந்த விகிதாசாரம் மீனீலேயே கிடைக்கிறது.

இவை உங்கள் மனத்திலிருந்த சில சந்தேகங்கள் மட்டுமே. இதைப் போன்ற இன்னும் பல கேள்விகள் உங்களிடம் இருக்கக் கூடும். இருந்தால் மற்றொரு முறை பதில் தருவோம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
M.B.B.S(Cey), D.F.M(SL), F.C.G.P(SL)
குடும்ப வைத்திய நிபுணர்

0.0.0.0

Read Full Post »

இன்றைய வாழ்க்கையில் கல்வியானது நூல்களிலிருந்தும் இணையத்திலிருந்தும் கற்பதாக இருக்கிறது. தேடுதல் உள்ள ஒருவன் இதன் மூலம் நிறையவே கற்றுக் கொள்ள முடிகிறது. ஆனால் கல்வியின் மூலம் அறிவை வளர்த்துக் கொள்ள முடியுமே தவிர ஒருவனது ஆளுமையையும் செயற்திறனையும் வளர்த்துக் கொள்ள முடியாது.

 

உதாரணத்திற்கு ஆசிரிய சேவையை எடுத்துக் கொள்வோம். அப் பணிக்கு வருபவர் பட்டப் படிப்பு பெற்றிருப்பார். இதனால் அவருக்குத் தேவையான கல்வி அறிவு கிட்டியிருக்கும். அத்துடன் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் அல்லது கல்வியற் கல்லூரியில் பெற்ற பயிற்சியால் ஆசிரியப் பணிக்கான பிரத்தியேக அறிவும் அவரிடம் வளர்த்திருக்கும். ஆனால் அவ்வாறு கற்ற யாவரும் சிறந்த ஆசிரியராக வருவதில்லையே! இது ஏன்?

ஆனால் அந்த நபரானவர் தனக்கு நன்கு அறிமுகமான ஆசிரியர் ஒருவரது குண இயல்புகளையும், கற்பிக்கும் முறைமைகளையும், மாணவர்களுடன் உரையாடும் பாணியையும்; முன்னுதாரணமாகக் கொண்டு அவரைப் போலத் தன்னையும் வளர்த்தெடுக்க முயற்சி எடுப்பாராயின் அவர் சிறந்த ஆசிரியராகப் பரிணமிக்க முடியும். அதற்கு மேலாக அவரிடம் தனது சந்தேகங்களை நிவர்த்திக்க முடியுமாயின் மேலும் உதவியிருக்கும்.

அர்ச்சுனன் துராணாச்சாரியிடமிருந்து வில்வித்தையைக் கற்றான். ஆனால் வில்வித்தையை மாத்திரமின்றி தனது ஆளுமையையும் அவனால் வளர்த்துக் கொள்ள முடிந்தது. துரியோதனனும் அவரிடமே கற்றான். ஆனால் அவனால் அவனது குண இயல்புகளும் பண்புகளும் சொல்லும்படியாக அமையவில்லை. அது குருகுலக் கல்வி முறை.

சரியான முறையில் அதைப் பயன்படுத்தினால் அது ஒரு அற்புதமான முறை.
drona_ekalyva

ஆனால் ஏகலைவன், துரோணாசாரியரிடம் நேரடியாகக் கற்று கொள்ளாமலே அர்சுணனை ஒத்த சிறந்த வில் வீரனாக மாறினான். இங்கு சிஸ்யர்கள் தங்கள் குருவின் வழிகாட்டலை வௌ;வேறு விதங்களில் பெற்றிருக்கிறார்கள்.

வழிப்படுத்தல் Mentoring

இன்று புதிதாக Mentoring பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கான சரியான தமிழ்ப்பதம் எதுவென்று தெரியவில்லை. வழிப்படுத்தல் எனக் கொள்வோம். அதிக அனுபவமும் knowledge உள்ள ஒருவர் தன்னிலும் அனுபவமும் அறிவும் குறைந்த ஒருவரை சரியான வழியில் நெறிப்படுத்துவது எனச் சொல்லலாம். மாறாக அவரைப் பார்த்து, அவரிடம் கேட்டு, அவரிடமிருந்து தன்னைத்தானே நெறிப்படுத்துவதாகவும் இது அமையும். இது இன்றைய வகுப்பறைக் கல்வி போலவோ ரியூசன் போன்றதோ அல்ல.

mentor

இதில் அறிவும் ஆற்றலும் அனுபவமும் மற்றொருவருக்கு ஊட்டப்படுவதில்லை. மாறாக அவர் அதைத் தானாகப் பெற்றுக் கொள்ளுமாறு வழிப்படுத்தப்படுகிறார். சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படுகிறது. கற்றல் உரையாடலுக்கு அப்பால், சவால்களை எதிர்கொள்வதையும் உள்ளடக்குகிறது.

வழிப்படுத்தல் என்பது பொதுவாக வழிநடத்துனர் Mentor மற்றும் mentee வழிப்படுபவர் ஆகிய இருவருக்கிடையேயான ஒருவகை உறவு எனலாம். ஒரு நாள் அல்லது குறிப்பிட்ட நாள் வரைக்கான உறவு அல்ல. தொடரும் உறவு, தங்கள் எதிர்பார்ப்பு நிறைவுறும் வரை தொடரும். ஆனால் இந்த இருவரில் எவராவது ஒருவருக்கு திருப்தி அளிக்கவில்லை எனில் எந்தவித மனக்கிலேசமும் இன்றி இடை நடுவில் கைவிடுவதும் சாத்தியமே.

வழிப்படுத்தலில் உள்ளடங்கும் இருவரும் பொதுவாக ஒரே துறையைச் சார்ந்தவர்களாகவே இருப்பர். மருத்துவர்கள், ஆசிரியர்கள், முகாமைத்துவம் சார்ந்தவர்கள், தொழில் நுட்பவியலாளர்கள், வாணிபம் செய்பவர்கள் என எத்துறை சாரந்தவர்களுக்கும் இது பயன்படலாம்.

இது வழமையான ஒரு கல்வி முறையல்ல என்பதைக் கண்டோம். முறைசாரது அறிவைக் கடத்துவது இதுவாகும். பொதுவாக அறிவை மாத்திரமின்றி அவரது தொழிற் திறனை விருத்தி செய்வதாகவும் அமைகிறது.

cogs

தங்களிடம் மறைந்திருக்கும் ஆற்றலை விருத்தி செய்து, திறன்களை மெருகூட்டி, வினைத்திறனை அதிகரித்து சிறந்த முறையில் தொழில் ஆற்றலைப் பெறுவதற்கு வழிப்படுத்தல் நன்கு பயன்படும். தங்கள் துறையில் தமது விருப்பிற்கு உரிய ஒருவரைப் போல தங்களைத் தானே வளர்த்தெடுப்பதற்கான முயற்சியாகவும் காணலாம்.

வழிப்படுத்தலில் அவதானிக்க வேண்டியவை

வழிநடத்துனரும், வழிப்படுபவரும் ஒரே தொழிலைச் செய்பவர்களாகவே இருப்பார்கள். ஆனால் ஒரே இடத்தில் வேலை வேலை செய்வது விரும்பத்தக்கதல்ல. ஏனெனில் அவை தொழில் முறைப் போட்டி பொறாமைகள், சொந்த நலன்களை முன்னிலைப்படுத்தல் போன்றவற்றிக்கு இட்டுச் செல்லக் கூடுமாதலால் வௌ;வேறு இடத்தைச் சேர்ந்தவர்களே விரும்பத்தக்கது.
இரகசியம் பேணுதலும் நம்பிக்கையாக நடத்தலும் மிக முக்கியமாகும். வழிநடத்துனரும், வழிப்படுபவரும் சந்தர்பத்தை பயன்படுத்தி மற்றவரது வாய்ப்பு, வசதி, உழைப்பு போன்றவற்றை தனக்கு சாதகமாகப் பயன்படுத்த முனையக் கூடாது.

வழிநடத்துனரும், வழிப்படுபவரும் பொதுவாக சுறுசுறுப்பாக பணியாற்றுபவர்களாக இருப்பார்கள். நேரம் அவர்களுக்கு பொன்னானது. எனவே மற்றவர் செய்வார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்காது வழிப்படுபவர் முன்முயற்சி எடுத்து பயன்பெற முனைய வேண்டும்.

அத்துடன் எழுதுவதிலும் ஏடுகளை பேணுவதிலும், நேரடியாகச் சந்திப்பதிலும் நேரத்தை செலவழிக்காது, டெலிபோன் உரையாடல், ஈ மெயில், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களையும் பயன்படுத்தி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்வது சாத்தியமே.

தொழிற்துறைகளில் வழிநடத்தல்

வழிநடத்துதல் என்ற பெயர் இல்லாவிட்டால் கூட பெரும்பாலான தொழில்களில் இது ஏற்கனவே செயற்படுகின்றது. தங்கள் தொழில் சார்ந்த கல்வித் தேர்ச்சி அல்லது பட்டப் படிப்புற்குப் பின்னர் தங்கள் தொழிலில் அனுபவமும் கல்வித் தேர்ச்சியும் பெற்றவரிடம் பயிலுனராக இருக்க வேண்டிய கட்டாயம் சில தொழில்களில் உள்ளது. சட்டத்தரணிகள், கணக்கியலாளர்கள் போன்றவர்கள் உதாரணங்களாகும். இவர்கள் அவ்வாறு பயிற்சி பெறாது தொழில் செய்ய முடியாது.

இத்தகைய பெரும் தொழில்களில் மட்டுமின்றி சாதாரண மேசன், தச்சுத் தொழில் போன்றவற்றில் கூட தகுதியானவரின் கீழ் தொழில் பயிலுனராக பயிற்சி பெற வேண்டியது கட்டாயம் அல்லாது போனாலும் அவசியமாகவே உள்ளது.

மருத்துவத்துறையைப் பொறுத்தவரையில் பட்டம் பெற்ற அனைத்து மருத்துவர்களும் உள்ளக பயிற்சி (Internship) பெற்ற பின்னரே வைத்தியர்களாக அங்கீகரிக்கப்படுகின்றனர்.

அதற்கு அப்பால் சத்திரசிகிச்சை, பொது மருத்துவம், சருமநோய், மகப்பேற்று மருத்துவம், புற்றுநோய், போன்ற எந்த விசேட மருத்துவத் துறையையாவது தேர்ந்தெடுக்கும்போது அதற்கான விசேட பட்ட மேற்படிப்பு (Post graduate course) கற்கை நெறிகளுடன், அத்துறை சார்ந்த நிபுணரின் கீழ் பயிற்சி பெற வேண்டியதும் கட்டாயமாகும். ஆனால் முற்று முழுதாக வழிநடத்தல் என்று கொள்ள முடியாது. பாட நெறியோடு இணைந்தது.

குடும்ப மருத்துவத் துறையில் வழிநடத்தல்

பெரும்பாலான மக்கள் நோயுறும்போது முதலில் அணுகுவது தங்கள் குடும்ப மருத்துவரைத்தான். தங்களையும் தங்களது குடும்பத்தினரையும் நீண்ட காலமாக நெருக்கமாக அறிந்திருப்பதால் அவர் தங்களை அக்கறையோடு பார்ப்பார் என்ற நம்பிக்கையோடு நோயாளர்கள் அவர்களை நம்பிக்கையோடு அணுகுகிறார்கள்.

ஆனால் குடும்ப மருத்துவர்களாகப் பணியாற்றும் மருத்துவர்கள் அனைவருக்கும் அத்தகைய பயிற்சிகள் கிடைக்pன்றனவா?
கசப்பான உண்மை இல்லை என்பதேயாகும். பட்டப் படிப்பை முடித்து மருத்துவராக வெளியேறிய மறுநாளே குடும்ப மருத்துவம் என்ற துறையை எந்த மருத்துவரும் இலங்கையில் தேர்ந்தெடுக்க முடிகிறது. விரும்பிய இடத்தில் தனியாக கிளினிக் ஆரம்பிக்க முடியும். ஆனால் மேலை நாடுகளில் இது முடியாது. குடும்ப மருத்துவர்களுக்கான விசேட பயிற்சி பெற்ற பின்னரே குடும்ப மருத்துவராக பணியாற்ற முடியும்.

இலங்கையிலும் குடும்ப மருத்துவர்களுக்கான விசேட பட்ட மேற்படிப்புகளும், டிப்ளோமாக்களும் உண்டு. MD(Family medicine), DFM (Diploma in family medicine), MCGP (Member of college of general practioners)போன்றவை இங்கு உண்டு. இவற்றில் முதல் இரண்டும் மருத்துவ பட்ட மேற்படிப்பு நிறுவனத்தால் நடாத்தப்படுகிறது. மூன்றாவதான MCGP குடும்ப மருத்துவ கழகத்தினால் நடாத்தப்படுகின்றன. இவை யாவும் அங்கீகாரம் பெற்ற கற்கை நெறிகளாகும். இவை குடும்ப மருத்துவர்களுக்கான பாட நெறிகளாகும். ஆனால் இவை இல்லாமலும் குடும்ப மருத்துவராக பணியாற்ற முடியும்.

image002

இப்பொழுது இலங்கை குடும்ப மருத்துவர் சங்கம் தாங்கள் நடத்தும் MCCP பயிற்சியின் அங்கமாக வழிநடத்தலை கட்டாயம் ஆக்கியுள்ளார்கள். இலங்கையில் மருத்துவ கற்கை நெறிகளில் Mentoring எனப்படும் வழிநடத்தல் முதல்முதலாக இங்குதான் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய வழிநடாத்தலில் உருவாகும் புதிய குடும்ப மருத்துவர்கள் தாங்கள் தொழிலை ஆரம்பிக்கும் நாள் முதலே நோயாளிகளை அன்புடனும் அர்ப்பணிப்புடனும், புரிந்துணர்வுடனும் நடத்துவர்கள், அவர்களது எதிர்பார்புகளை பூர்த்தி செய்வார்கள் என  எதிர்பார்க்கலாம்.
மருத்துவத்தின் ஏனைய துறைகளிலும் வழிநாடாத்தல் முக்கிய அங்கமாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை

குழந்தைகளில் வழிநடத்தல்

இது தொழிற்துறை வழிகாட்டல் போன்றதல்ல.
குழந்தைகளை வழிநடத்துவது பெற்றோர்களினதும் குடும்ப மூத்தோர்களின் ஆசிரியர்களினதும் பணியாக காலாகாலமாக இருந்து வருகிறது. வழிநடத்தல் என்ற பெயரை உபயோகிக்காமலே நாம் இதைச் செய்து வருக்கினறோம்.

ஆனால் சில குழந்தைகளுக்கு விசேட வழிநடத்தல் தேவைப்படுகிறது. சண்டை சச்சரவு குழப்பம் உள்ள குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகள், பாடசாலையில் பின்தங்கிய பிள்ளைகள், சமூக ஊடாடலில் பின்தங்கியிருக்கும் குழந்தைகள் போன்றோருக்கு இவை அவசியம். உணர்வு பண்பாட்டியல் ரீதியான வழிநடத்தல் அக் குழந்தைகளுக்கு தேவைப்படும். சில மேலை நாடுகளில் இது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

அப்பழுக்கற்ற மனதுடைய அக் குழந்தைகள், வழிநடத்துனரை தங்களது இலட்சிய புருஷனாகக் கருதி மதிப்பும் மரியாதையும் கொடுப்பர். அவர் பாதையில் தாங்களும் தொடர முனைவர். எனவே வழிநடத்தினராக இருப்பவர் நற்பண்பு நற்குணம் உடையவராக, தன்னலம் கருதாதவராக, சமூக உணர்வுள்ளவராக இருக்க வேண்டும். இதைத் தொழிலாகக் கருதாது தொண்டாகக் கருதி குழந்தைகளை வழி நடத்த வேண்டும்.

போதகர் மாணவன் என்ற நிலை போலன்றி நட்புணர்வுடன் அவர்களுடன் பழகும் போது அவர்கள் மனம் திறந்து பேசுவதுடன் .தங்களிடம் மறைந்துள்ள ஆற்றலை வெளிக் கொணரவும் முடியும்.
நீங்கள் ஒவ்வொருவருமே உங்கள் தேவைக்கு ஏற்ப வழிநடத்துனர் ஆநவெழச அல்லது அநவெநந வழிப்படுபவர் ஆக உங்களை அறியாது ஏற்கனவே செயற்பட்டிருக்கக் கூடும். வழிப்படுத்தல் பற்றிய புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதால் அதை மேலும் கச்சிதமாகச் செய்ய முடியும் என நம்புகிறேன்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.0.0.0

Read Full Post »

‘இவ்வளவு நாளும் ஓடி ஓடி உழைச்சாச்சு. போதும் என்று ஆகிவிட்டது. இனி வீட்டோடை கிடக்கப் போறன். இதுவரை பார்க்காத ரீவி சீரியலுகளைப் பார்த்து நெட்டிலும் உலாவுவன். கட்டிலும் கதிரையும் எண்டு சந்தோசமாக இனி இருக்கப் போறன்.’

agia-efimia-old-people (1)

மனைவியும் ஒத்துப் பாடினா ‘ஓம் பாவம் அவர். வேலை வேலை என்று ஓடித் திரிஞ்சார். பிள்ளைகளையும் கரை சேர்த்தாச்சு. இனியாவது பேசாமல் ஓய்வா வீட்டை இருக்கட்டும்’ என்றாள்.

அவர் ஒரு முதியவர். ஆனால் தளர் வயசு அல்ல.  வயசு 65 தான் ஆகிறது.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள். அவருக்கு இனி முழு ஓய்வு தேவையா? வீட்டோடு பேசாது கிடந்தால் மகிழ்ச்சியும் நலமான வாழ்வும் கிட்டுமா?

“இல்லை” என்கிறார்கள் சுவீடிஸ் தேசத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள்.

ஆண் பெண் என 3800 பேரை 12 வருடங்களாக அவதானித்த ஆய்வு இது. Swedish School of Sport and Health Sciences ;  the Karolinska Institute, in Stockholm இணைந்து செய்த ஆய்வு இது. அவர்கள் அனைவரும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள். 1937, 1938 ம் ஆண்டுகளில் பிறந்தவர்கள்.

அந்த வயதினருக்கும் உடற் பயிற்சி அவசியம். பக்கவாதம், மாரடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்க வேண்டுமாயின் அவர்கள் வாழாதிருக்கக் கூடாது. வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்வது, தரையை மொப் பண்ணுவது கூட்டுவது போன்ற ஏதாவது உடலுழைப்புடன் கூடிய வீட்டு வேலைகளில் தினமும் கட்டாயம் ஈடுபட வேண்டும்.

Three seniors doing tai chi on the beach

அவ்வாறு உற்சாகமாக சுறுசுறுப்புடன் சிறு சிறு வேலைகள் என்று செயற்பட்டுக் கொண்டே இருக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு

  • எதுவும் செய்யாது வாழாதிருப்பவர்களை விட பக்கவாதம், மாரடைப்பு போன்றவை வருவதற்கான வாய்ப்பு 27 சதவிகிதம் குறைவாகும்.
  • அத்துடன் அவர்கள் எந்தக் காரணத்திலாவது மரணமடைவதற்கான சாத்தியம் 30 சதவிகிதம் குறைவாகும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

செயற்பட்டுக் கொண்டே இருப்பதானது சும்மா இருக்கும் நேரத்தைக் குறைக்கிறது. சும்மா இருத்தல் என்று சொல்லும்போது கதிரையில் உட்கார்ந்திருப்பதையே குறிப்பிடுகிறேன். பல வயதானவர்கள் வீட்டோடு முடங்கிவிடுகிறார்கள்.

நகர்ப்புற வாழ்க்கை முறையும் காரணம் என்பது உண்மையே. சிறிய வீடுகள். அதற்குள்ளேயே சமையல் குளியல், சாப்பாடு, பொழுதுபோக்கு என எல்லாமே அடங்கிவிடுகிறது.

டெலிபோனில் ஓடர் கொடுத்தால் பத்திரிகை முதல், மளிகைப் பொருட்கள், தேவையானால் உணவு என எல்லாமே டெலிவரி ஆகிவிடுகிறது. கடைக்குப் போக வேண்டியதும் இல்லை. பத்திரிகை படிக்க வாசிகசாலை செல்ல வேண்டியதில்லை. டெலிபோன் லைட் பில்லுகளை ஒன் லைனிலேயே செட்டில் பண்ணிவிடலாம்.

எனவே பொழுது போக்கு என்பது ரீவி பார்ப்பது, அல்லது கணனியில் மூழ்குவது என்றாகிவிட்டது. அதுவும் இல்லையானால் போனில் அலட்ட வேண்டியது. ரீவி சனலை ரிமோட்டிலேயே மாற்றிவிடலாம். டெலிபோன் பேச எழுந்து செல்ல வேண்டியதில்லை கைபேசிகள் கைவசம் உண்டு.

அவ்வாறு சும்மா இருந்தால் சுகமாக இருப்பது போலத் தோன்றும். ஆனால் உள்ளுற நோய் பெருகி மரணம் நெருங்கி வரும். அதைத் தடுப்பதற்காகவே தாத்தாக்களும் பாட்டிகளும் சோர்ந்துவிடலாகாது.

caregiver-brusing-teeth

இவ்வாறு சோர்ந்து விடாது செயற்பட்டுக் கொண்டே இருப்பதானல் கிட்டும் நன்மைகளாவன, அவர்களது வயதைப் பொறுத்த வரையில் முறையான உடற் பயிற்சிகள் செய்வதற்கு எந்த விதத்திலும் குறைந்தது அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதன் அர்த்தம் உடற் பயிற்சிகள் அவசியமில்லை, சும்மா இருக்காது செயற்பட்டுக் கொண்டிருப்பது மட்டுமே போதும் என்பதாக அர்த்தப்படுமா?. இல்லை.

“எமது ஆய்வின் பிரகாரம் தினசரி உடற்பயிற்சிகள் செய்வதுடன், சுறுசுறுப்பாக ஏதாவது செய்து கொண்டிருப்பவர்களுக்கு பக்கவாதம் மாரடைப்பு போன்றவை வரக் கூடிய சாத்தியங்கள் மேலும் குறைவாகும்” என்கிறார் ஆய்வாளரான Ekblom-Bak.

தினசரி உடற் பயிற்சியானது எவருக்கும் அவசியமானதே. வேகநடை, யோகாசனம், சைக்கிள் ஓடுதல், நீச்சல், போன்ற பலவும் நல்லவையே. ஆனால் அவற்றில் நாம் 30 நிமிடங்கள் முதல் 1 மணித்தியாலயம் போன்ற குறுகிய நேரம் மட்டுமே செலவழிக்கிறோம். மிகுதி நேரம் சும்மா இருப்பதை விட ஏதாவது வேலைகளில் ஈடுபட வேண்டும். இதனால் உடல் உறுப்புகள் அனைத்துமே இயங்கிக் கொண்டிருக்கும்.

உண்மையில் மனித உடலானது சும்மா இருப்பதற்காக வடிவமைக்கப்பட்டது அல்ல. அது தொடர்ந்து செயற்படுவதற்கவே உருவமைக்கப்பட்டது. எனவே அதை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் முதுகுவலி, முழங்கால் தேய்வு, தசைகள் சுருங்குதல் போன்ற இன்னும் பல இயற்கைத் தேய்மானப் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.

பொதுவாக வயதாகும்போது உடலின் செயற்பாடுகள் சற்று குறையவே செய்யும். நடையின் வேகம் குறையும். வேறு வேலைகளும் துரிதமாக நடக்காது. ஆனால் அதற்காக சோர்ந்து முடங்கிவிடக் கூடாது.

“இவவுக்கு வேலை ஒன்றும் கிடையாது. சும்மா சமைக்கிறது, வீடு துப்பரவு பண்ணுவதும் உடுப்புத் தோய்ப்பதும்தான்” என ஒரு கணவன் குறை கூறினார். உண்மையில் காரில் ஏறி வேலைக்குப் போய் அங்கை கதிரையில் இருப்பதைவிட இவரது மனைவி கூடுதலாக வேலை செய்கிறாள்.

“கதிரையில் பொதி போல உட்காரந்திருப்பதை விட வீடு துப்பரவு செய்யும் வேலையின் போது ஆறு மடங்கு அதிகமான கலோரி செலவாகிறது” என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இந்த ஆய்வுக் கட்டுரையானது British Journal of Sports Medicine  சஞ்சிகையின் அக்டோபர் 28 இதழில் வெளியாகியுள்ளது.

எத்தகைய நாளாந்த செய்ற்பாடுகள் உதவும் என்பதைப் பற்றியும் அக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

  • டெலிபோன் பேசுவதற்கு எழுந்து சென்று ரிசீவரை எடுப்பது
  • ரீவி பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் இடையில் எழுந்து அங்கும் இங்கும் நடப்பது நல்லது. நிகழ்ச்சிகளின் போது இல்லாவிட்டாலும் விளம்பர இடைவேளைகளை இதற்குப் பயன்படுத்தலாம்.
  • மணித்தியாலயத்திற்கு ஒரு தடவையாவது இருக்கையை விட்டு எழுந்து ஐந்து நிமிட நேரத்திற்கு குறையாது, நின்ற நிலையில் துள்ளிக் குதிப்பது, முழங்காலை மடித்து கீழே இருந்து எழும்புவது போன்ற சிறு பயிற்சிகளைச் செய்யலாம்.
  • இரண்டு மூன்று மணிநேரத்திற்கு ஒரு தடவையாவது ஒரு மாடிக்கு ஏறி இறங்குவது
  • வீட்டைக் கூட்டுவது, தரையை மொப் பண்ணுவது

போன்றவற்றைக் குறிப்பிட்டுள்ளார்கள். இவை இங்குள்ளவர்களுக்கும் பொருந்தும். இவை தவிர ஒவ்வொருவரும் தங்கள் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ற ஏதாவது வேலைகளைச் செய்து தங்கள் உடலை உறுதியாக வைத்திருக்க வேண்டும்.

“இவை எல்லாம் எனக்கு எதற்கு வீடு போ போ, காடு வா வா என்கிற வயது” என்று சொல்லாதீர்கள். அவ்வாறு எண்ணவும் கூடாது. எந்த வயதானாலும் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். அதுவும் மற்றவர் உதவியை எதிர்பாராது தனது காலில் தங்கியிருப்பதைப் போல வருமா? 

சுதந்திரமும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் நிறைந்த முதுமை வாழ்வு வேண்டுமானால் சோர்ந்துவிடல் ஆகாது தாத்தா பாட்டிகளே.

பிள்ளைகளுக்கும் ஒரு வார்த்தை.

“சும்மா இருக்கக் கூடாது என்று டொக்டர் சொல்லிப்போட்டார். வீட்டைக் கூட்டுங்கோ. பானையைக் கழுவுங்கோ. மேசையைத் துடையுங்கோ” என்று எல்லா வேலைகளையும் அவர்கள் தலையில் சுமத்தி விடாதீர்கள். 

சும்மா இருப்பது இள வயதினருக்கு நல்லது எந்த ஆய்வும் சொல்லவில்லை. உற்சாகமும் சுறுசுறுப்பும் என இயங்கிக் கொண்டே இருப்பது எந்த வயதினருக்கும் அவசியமானதே.

எனது ஹாய் நலமா புளக்கில் (06.02.204) வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

“இந்த வலிகளோடு வாழ்வது சரியான கஸ்டம். காலையில் கால்களைக் கீழே வைத்து எழும்ப முடியாது. கை கால்களை நீட்டி மடக்கி அசைத்து பயிற்சி கொடுத்தால்தான் ஒருமாதிரி எழும்பி, அன்றாட வீட்டு வேலைகளைச் செய்ய முடியுது………. இந்த மனிசனுக்கும் பிள்ளைகளுக்கும் அது புரியுதே. விடிஞ்சால் பொழுதுபட்டால் வருத்தப் பாட்டுத்தான் பாடுறன் என நக்கல் அடிக்குதுகள்”

இவ்வாறு சொல்பவர்கள் அநேகம். ஏனெனில் மூட்டு நோய்கள் (Arthiritis) மிகவும் பரவலாகக் காணப்படும் நோயாகும்.

வாழ்க்கைத் தரம்

மூட்டு வலிகளுடன் வாழ்வது துன்பமானது என்பது எல்லோருக்கும் தெரியும். மூட்டு வலி என்றெல்ல உடலுக்கு உபாதை கொடுக்கும் எல்லா நோய்களும் துன்பமானதுதான்.

அவை உடலை மட்டுமின்றி மனத்தையும் சோரச் செய்கின்றன. இதனால் அவர்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கச் செய்கின்றன. ஆனால் அதே நேரம் மற்றவர்கள் அவர்களது வலியைப் புரிந்து கொள்வது குறைவு.

ஒரு மில்லியன் அமெரிக்க பிரஜைகளின் மருத்துவ அறிவிக்கைகளை ஆராய்ந்த பொழுது இது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்போது கிடைத்த சில முடிவுகள் மூலம் நீங்களும் அதை உணர்வீர்கள். Arthritis Care & Research சஞ்சிகையின் ஏப்ரல் 18, 2011 இதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

பாதிப்புகள் அதிகம்

  • சாதாரண பிரஜைகளில் 12 சதவிகிதத்தினரே தங்கள் ஆரோக்கியம் நல்ல நிலையில் இல்லை எனக் கருதியபோது மூட்டு நோய்களால் பாதிக்கப்பட்டோரில் 27 சதவிகிதத்தினர் தமது ஆரோக்கியம் நல்ல நிலையில் இல்லை என்றனர்.
  • மாதத்தில் மூன்று நாட்கள் மட்டும் உடல் ரீதியாகச் சுகயீனமுற்று இருந்ததாக சாதாரண மனிதர்கள்  கூறியபோது மூட்டு நோய்களினால் பாதிக்கப்பட்டோர் மாதத்தில் ஏழு நாட்கள் ஆரோக்கியம் கெட்டிருந்ததாககக் கூறினர்.
  • மாதத்தில் மூன்று நாட்கள் மட்டும் மன அமைதியற்று இருந்ததாக சாதாரண மனிதர்கள்  கூறியபோது மூட்டு நோய்களினால் பாதிக்கப்பட்டோர் மாதத்தில் ஐற்து நாட்கள் பாதிப்புற்று இருந்தனர்.
  • ஆரோக்கியம் முழுமையாக கெட்ட நாட்கள் சாதாரணமானவர்களுக்கு மாதத்தில் 5 ஆன இருக்க மூட்டு நோயாளருக்கு 10 ஆக இருந்தது.
  • நாளாந்த பணிகள் கெட்டதாக நாலுக்கு ஒன்று என்ற விகிதத்தில் இருந்தது.
சமூக ரீதியாக 

சமூக ரீதியில் பார்க்கும்போது மூட்டு நோயாளிகள்

  • கல்வி ரீதியாகி,
  • தொழில் ரீதியாக,
  • மற்றும் வருமான ரீதியாகவும்

மற்றவர்களை விட அதிகம் பாதிப்புற்று இருந்தது அவதானிக்கப்பட்டது.
அத்துடன் அவர்களிடம் மற்றவர்களை விட புகைத்தல், மது, போதை போன்ற தவறான பழக்கங்களும், உடல் உழைப்பு குறைந்த, உடற் பயிற்சி அற்ற சோம்பேறித்தனமான வாழ்க்கை முறைகளும் அதிகமிருந்தன.
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், அதீத எடை போன்ற நோய்கள் அவர்களிடையே அதிகம் காணப்படது.

செலவு காரணமாகவும், சிகிச்சைக்காகச் சென்று வருவதில் உள்ள சிரமங்கள் காரணமாகவும் மருத்து உதவி போதியளவு கிட்டவில்லை என்பதும் தெரிய வந்தது.

பொருளாதார ரீதியாக

  • வேலை செய்ய முடியாமை,
  • போதிய வருமானமின்மை,
  • மருத்துவத்திற்கு போதிய செலவழிக்க முடியாத நிலை,
  • அத்துடன் நீரிழிவு நோய் அதிகமாக ஏற்படுதல் போன்றவற்றால்

அவர்களது ஆரோக்கியம் மேலும் பாதிப்படைகிறது.  இதனால் அவர்களது இந்த வாழ்க்கைத் தரம் தாழ்ச்சியடைகிறது. இவற்றால் உள நலமும் குறைகிறது. இதுதான் அந்த ஆய்வின் முடிவு.

ஆனால் மூட்டு வருத்தங்கள் இருந்தபோதும், சோர்ந்து கிடக்காது உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இயங்குபவர்களிடையே இத்தகைய பாதிப்புகள் ஏற்படுவது குறைவு.

செய்ய வேண்டியவை

எனவே மூட்டு நோயுள்ளவர்கள் பாதிக்கப்படாது இருக்கச் செய்ய வேண்டியது என்ன?

  • “என்னால் எதுவும் முடியவில்லை” என மூட்டு வலியைக் காட்டி வாழாதிருக்கக் கூடாது. முடிந்தளவு உற்சாகமான சுறுசுறுப்பான வாழ்வைக் கடைப்பிடிக்க முயல வேண்டும்.
  • தினசரி தோட்டவேலை, வீட்டு வேலைகள், நடைப் பயிற்சி, உடற் பயிற்சி என ஈடுபட்டு தமது உடலைச் சோரவிடக் கூடாது. இது மனச் சோர்வையும், மனவிரக்தியையும் அண்ட விடாது.
  • நீரிழிவு, பிரசர், போன்ற வேறு நோய்கள் இருந்தால் அவற்றிக்கு அவசியமான மருத்துவத்தை செய்து தமது பொதுவான ஆரோக்கியத்தைப் பேண வேண்டும்.
  • அவர்களைக் குற்றம் கூறி மேலும் வேதனையில் ஆழ்த்தாது சூழ இருப்பவர்கள் அவர்களை உற்சாகப்படுத்தி,  மனப் பாதிப்பிற்கு ஆளாகாமல் தடுக்க வேண்டும்.

அமெரிக்காவில் மாத்திரம் 50 மில்லியன் மக்கள் மூட்டு நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் நோய் நிர்ணயம் செய்திருக்கிறார்கள். இலங்கையில் எவ்வளவு என்பது கணக்கிடப்படவில்லை. இவர்கள் எல்லோருக்கும் உடல் வலியும் மன உபாதையும் அற்ற வாழ்வை அமைக்க உதவுவற்கு இந்த ஆய்வின் ஊடாக நாம் படிப்பினை பெறலாம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

தினக்குரல் பத்திரிகையின் ஹாய் நலமா பத்தியில் நான் எழுதிய கட்டுரை.
ஹாய் நலமா புள்க்கில்Saturday, September 17, 2011ல்  மூட்டு நோய்களோடு வாழ்தல்
0.0.0.0.0.0.0

Read Full Post »

உங்கள் மனைவி சந்தோஷமாக இருக்கிறாரா?
இல்லையென்றால் அவரை மகிழ்வுறுத்துவதற்கு வழி என்ன?
சிந்திப்போம்!

அந்த ஜயா மிகவும் வசதியானவர்.
மனைவியில் மிகுந்த அன்பு கொண்டவர். அவவிற்கு சிறிய வருத்தம் என்றால் கூட அலட்சியம் பண்ண மாட்டார்.
உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துப் போவார்.
தேவையான பரிசோதனைகளையெல்லாம் அலுக்காமல் செய்வார். மருந்துகள், சத்து மருந்துகள் எல்லாம் வாங்கிக் கொடுப்பார்.

ஆயினும், மனைவியின் முகத்தில் சந்தோஷத்தைக் காண முடிவதில்லை.

மற்றவர் அவ்வளவு வசதியானவர் அல்ல.

ஆயினும், தனது மனைவியின் சௌகர்யத்திற்காக தனது தகுதிக்கு மேல் போய் எல்லாம் வாங்கிக் கொடுப்பார். ரி.வி., பிரிட்ச், மைக்ரோ அவன், வோஷிங் மெசின், பிரஸர் குக்கர் என எது தேவையென்றாலும் கஷ்டப்பட்டு வாங்கிக் கொடுப்பார். ஆயினும், அவராலும் மனைவியின் மனதைக் கவர முடியவில்லை. வேறு என்ன செய்வது என அங்கலாய்க்கிறார்.

இன்னுமொருவர், மனைவியின் திருப்தியின்மைக்குக் காரணம் அவளது தனிமையும் பொழுதுபோக்கின்மையும்தான் என நம்பி நீண்ட லீவு போட்டுவிட்டு கோயில், குளம், சுற்றுலா, வெளிநாட்டுப் பயணம் என பலதும் முயன்றுவிட்டார். ஆயினும் எதுவித முன்னேற்றமும் இல்லை.

இப்பெண்கள் எல்லாம் எதிலும் திருப்தியடையாத தாழ்ந்த மனம் கொண்டவர்களா? இல்லை!

கணவர்களின் அணுகு முறையில்தான் ஏதோ தவறு இருக்க வேண்டும்.

லெபனானின் பெய்ரூடடில் செய்யப்பட்ட ஆய்வு உங்களுக்கு உதவலாம். 1,650 திருமணமான தம்பதியர்களிடையே செய்யப்பட்ட ஆய்வு அது.

  • வீடு கூட்டுதல்,
  • தூசி தட்டுதல்,
  • உடுப்பு தோய்த்தல்,
  • சமையல், தேனீர் தயாரித்தல்,
  • படுக்கையை சுத்தம் செய்தல்,
  • பாத்திரம் கழுவுதல்

போன்ற இருபத்தைந்து நாளாந்த வீட்டு வேலைகளைத் தேர்ந்தெடுத்தார்கள்.

வீட்டு வேலைகளில் கணவன் எந்த அளவுக்கு உதவுகிறான் என்பதையும் மனைவியின் மன நிலை, குடும்ப வாழ்வில் அவளது திருப்தி அல்லது திருப்தியின்மை, அவளது கவலை போன்றவற்றோடு அதைத் தொடர்புபடுத்திப் பார்த்தார்கள்.

வீட்டு வேலைகளில் மிகக் குறைந்தளவே பங்களித்த கணவன்மாரின் மனைவிகள் கூடுதலாகப் பங்களித்தவர்களின் மனைவிகளைவிட,

  • 1.6 விகிதம் உள நெருக்கடியில் இருந்தார்கள்.
  • 2.96 விகிதம் கணவனோடுடனான உறவில் அசௌகரியப்படுவதாக உணர்ந்தார்கள்,
  • 2.69 விகிதம் கூடுதலான கவலையோடு இருந்தார்கள்.

“வீட்டு வேலைகளில் கணவன் ஈடுபடுவதற்கும்,
மனைவியின் மன ஆரோக்கியத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதை
இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது”

என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

தும்புத்தடியில் ஆரம்பியுங்கள்.

வீடு கூட்டுவதில் ஆரம்பித்து
ஏனைய வீட்டு வேலைகளிலும்
பங்கு பற்றுங்களேன்,
மனைவி மகிழ்வார்.

வீட்டில் என்றும் வசந்தம்தான்!

தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்து எனது ஹாய் நலமா வலைப்பூவில் 4 வருடங்களுக்கு முன் பதிவேற்றிய கட்டுரை.

Read Full Post »

>

பத்மாசனம் தெரியாதவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஆனால் குந்தியிருப்பது என்றாலே தெரியாத தலைமுறை வந்துவிட்டது. எமது இயற்கையான பழக்கங்களைக் கைவிடுவதால் எமது உடலுக்கு ஏற்படக் கூடிய பாதகங்களை அறிந்திருக்கிறோமா?

இதுவும் அத்தகையாதுதான். இயற்கையோடு வாழாததால் இழந்தது.

மிகவும் துன்பப்படுத்தும் நோய் அது. எழுந்து நடப்பதா, மசாஸ் பண்ணுவதா, யாரையாவது பிடித்துவிடச் சொல்வதா, அல்லது எதுவும் செய்யாது அசையாமல் படுத்துக்கிடப்பதா எனத் புரியாது திகைக்க வைக்கும்.

வலி தாங்க முடியவில்லை. கெண்டை பிடிக்கிறது.

பலருக்கு நட்டநடு நிசியில் வருவதால் துணைக்கு யாரும் இன்றிப் பயமாகவும் இருக்கும். ஆனால் பார்த்துக் கொண்டிருப்பவருக்கு என்ன இந்தச் சின்ன விசயத்திற்கு இத்தனை ஆர்ப்பாட்டம் செய்கிறார் எனச் சிரிப்பாக இருக்கும்.

ஆம் கிறாம்ஸ் (Cramps) எனப்படும் தசைக் குறட்டல் நோய் ஆபத்தற்றது. குறுகிய நேரம் மட்டுமே நீடித்தாலும் மிகவும் துன்பபப்படுத்துகிற நோயாகவும் இருக்கிறது.

இது ஏன் ஏற்படுகிறது? இதற்கு எந்த மருந்து மிகவும் உதவக் கூடியது போன்ற விடயங்களில் இன்னமும் தெளிவு இல்லை என்றே கூறவேண்டும்.

கடுமையான உடல் உழைப்பு அல்லது உடற் பயிற்சியும் அதனுடன் தொடர்ந்து வரும் நீரிழப்பு நிலையும்தான் காரணம் என்பது பரவலான நம்பிக்கையாகும். கடுமையான நீரிழப்பு ஏற்பட்டிருந்தபோதும், அதனுடன் உடல் உப்புகள் பெருமளவு வெளியேறியபோதும் குறண்டல் வரவில்லை என்கிறது ஒரு ஆய்வு. (Ref:- Med Sci Sports Exerc. 2010 Nov;42(11):2056-63.)

யாருக்கு வருகிறது

எவருக்கும் குறட்டல் நோய் வரக் கூடுமாயினும் சில வகை மனிதர்களை, சில சூழ்நிலையில் அதிகமாகப் பாதிக்கிறது.

  • கர்ப்பிணிகள் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு ஆய்வின்போது கர்பமாயிருக்கும் பெண்களில் சுமார் அரைவாசிப் பெண்களுக்கு குறட்டல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
  •  வயதானவர்களில் 1ஃ3 பேர் பாதிக்கப்படுவதாக அறிய முடிந்தது. இவர்களில் பலர் 10வருடங்களுக்கு மேலாகத் துன்பப்பட்டிருந்தாலும் மருத்துவ உதவியை நாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • பல குழந்தைகளுக்கும் வருவதுண்டு
  •  இரவில் வரும் குறட்டல் அதிகமாகும்
  • கடுமையான வெய்யிலில் உடல் உழைப்பில் அல்லது பயிற்சியில் ஈடுபட்டால் வருவதற்கான சாத்தியம் அதிகம்.
  • ஈரல் நோயுள்ளவர்கள், அதீத மது பாவனையாளர்கள், டயலிசிஸ் செய்யப்படும் சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் எனப் பல்வேறு தரத்தினரும் பாதிப்படைகிறார்கள்.

எவ்வாறு ஏற்படுகிறது

குறட்டல் எவ்வாறு ஏற்படுகிறது என்பதற்கு பல விளக்கங்கள் கூறுப்படுகின்றன.

  • தெரியாத காரணங்களால் குறிப்பிட்ட பகுதியில் நரம்புகள் தூண்டப்படுவது காரணமாக இருக்கலாம் என எண்ணப்படுகிறது.
  • ஏற்கனவே முழுமையாகச் சுருங்கியுள்ள தசை இழையங்கள் திரும்பவும் தூண்டப்படுவதும் மற்றொரு காரணமாம்.
  • குறிப்பிட்ட பகுதியிலுள்ள தசை இழையங்களுக்கு போதிய இரத்த ஓட்டம் இல்லாத போதும் நேரலாம். இது மாரடைப்பை ஒத்தது. மாரடைப்பின்போது இருதயத்தின் தசைநார்களுக்கு இரத்தம் செல்வது குறைவதால் அல்லது முற்றாகத் தடைப்படுவதால் மாரடைப்பு நெஞ்சுவலியாக வெளிப்படுகிறது.
  • தசைகளுக்கு நீட்டி மடக்குவது போன்ற பயிற்சிகள் குறைவாக இருப்பதாலும் ஏற்படலாம். 

உதாரணமாக முன்பு நிலத்தில் உட்கார்ந்த மனிதன் இப்பொழுது நாற்காலியில் உட்காருகிறான். மலசலம் கழிப்பதற்கு குந்தியிருந்தவன் இப்பொழுது கொமோட்டில் உட்காருகிறான்.

இவற்றினால் அவனது கால் தசைகளுக்கு பயிற்சி அற்றுப் போய்விட்டது இதுவே குறட்டல் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகமாக்கிவிட்டதாகக் கருதுகிறார்கள்.

மருத்துவம்.

ஒரு குறிப்பிட்ட சிகிச்சை அனைவருக்கும் பயன்படும் என்று சொல்ல முடியாது. ஓவ்வொருவருக்கும் அவர்களது நோய்கான காரணம் எதுவென பகுத்தறிந்து செய்ய வேண்டியுள்ளது.

பொதுவாக குயினின் என்ற மருந்து இதனைத் தடுப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

ஆயினும் உணவு சார்ந்த முறைகளில் இப்பொழுது ஆர்வம் திரும்பியிருக்கிறது. தசைகளின் செயற்பாட்டிற்கும் நரம்புகளின் தூண்டலுக்கும் பல மூலகங்கள் அடிப்படையாக இருப்பதே காரணமாகும். உதாரணமாக Potassium, Magnesium, Sodium and Calcium போன்றவை முக்கிய பங்களிக்கின்றன. 

உப்புக் கரைத்துக் கொடுப்பது, இளநீர் அருந்துவது போன்றவை சிபார்சு செய்யப்படுவதற்கு இதுவே காரணம். ஆயினும் இவற்றை மேலதிகமாகக் கொடுப்பதால் கெண்டைப் பிடிப்பைத் தடுக்கலாம் என்பதை ஆய்வுகள் உறுதி செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல விட்டமின் சீ, ஈ (Vitamin C, Vitamin E) போன்றவையும் உதவலாம். ஆயினும் இவை பற்றியும் தெளிவான ஆய்வு முடிவுகள் இல்லை.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0

Read Full Post »