Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘Uncategorized’ Category

Dheepanஐந்து வருடங்களுக்கு முன்னர் வந்த பிரான்ஸ் + தமிழ் படம். 

முன்பு பார்க்க முயன்றும் முடியவில்லை.  கொரோனா தந்த கட்டாய ஓய்வில் இப்போது  இணையத்தில் (Netflix) பார்க்க கிடைத்தது. 


எமது எழுத்தாளர் Shoba Sakthi நடித்ததுடன், கதையமைப்பு மற்றும் உரையாடலில் உதவியதால் அதிகம் கவனம் பெற்றது.


அவயங்கள் சிதைந்து இறந்து கிடக்கும் பிணக் குவியல்களுடன் திரைப்படம் ஆரம்பமாகிறது. பனை ஓலைகளால் மூடப்பட்டு அவை எரிக்கப்படுகின்றன.
ஆனால் இது இறுதி யுத்தம் பற்றிய படம் அல்ல. யுத்த இறுதியில் நாட்டில் இருக்க முடியாது சட்ட விரோதமாக புலம் பெயர்பவர்கள் எதிர் கொள்ளும் நாளாந்த பிரச்சினைகள் பற்றியது.


சிவதாசன் ஒரு விடுதலை போராளி. அவன் தீபன் என்ற இறந்து போன ஒரு பிரெஞ்சுப் பிரஜை ஒருவரின் பாஸ்போட்டை பயன்படுத்தி, அதற்கு ஏற்ப சுற்றம் இழந்த ஒரு பெண்ணையும் வேறொரு எட்டு வயது  பெண் குழந்தையையும் தனது மனைவி குழந்தை எனக் காட்டி பிரான்ஸ் போய் சேர்கிறார்கள். 


கணவன், மனைவி, குழந்தை அல்லாத அவர்கள் எவ்வாறு ஒரு குடும்பம் போல போலியாக இயங்குகிறார்கள்,  பொய்யான உறவுகளுடன் மெய்யாக வாழ்ந்து காட்ட வேண்டிய சூழல். தீபன், யாழினி, இளையாள் என்ற பெயர் களோடு இறங்குகிறார்கள்.


குடியுரிமை பெற படும் சிக்கல்கள், சாவிக்கொத்துகளையும், பென்ரோச்சுகளையும் வீதியில் திரிந்து  இரண்டு யூரோ என கத்திக் கத்தி விற்று வயிறு நிறைக்கும் அவலம்.


பிறகு அவனுக்கு வீதி சுத்தம் செய்யும் வேலையும், அவளுக்கு மனநலம் குறைந்த முதியவரை பரிபாரிக்கும் வேலையும் கிடைக்கிறது.


போதைப் பொருள் இரு கோஷ்டிகளிடையே இவர்கள் சிக்கும் நிலை ஏற்பட, அதிலிருந்து தப்பிக்க துப்பாக்கியை மீண்டும் அவன் தூக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.


முன்னாள் போராளியான அவன் தன் அகதி நிலை காரணமாகவும், தான் பராமரிக்க வேண்டிய, பாதுகாக்க வேண்டிய ‘தன் குடும்பத்திற்காக’ கோபப்படாமல் அமைதி காக்கிறான். 


ஆயினும் ‘பொய்யான’ தன் மனைவிக்கு அந்த போதைப் பொருள் கும்பலால் ஆபத்து வந்த போது அவனால் பொறுத்துக் கொள்ள முடியாமையே அவன் மீண்டும் துப்பாக்கி தூக்க வைக்கிறது. 


ஷோபா சக்தி மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். யாழினியாக  கைலேஸ்வரி சிறினிவாசனும், இளையாளாக குளோடின்  வினாசித்தம்பியும் தங்கள் பங்கை சிறப்பாகவே செய்திருந்தார்கள்.


பிரபல இயக்குனர் Jacgues Audiard நெறியாள்கை. Rust and bone, A Prophet போன்ற படங்களை நெறியாள்கை செய்தவர். Cannes ல் Palme d’Or சிறந்த பட விருது பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது. பார்க்க வேண்டிய படம் என்பது நிச்சயம். 


மிக விரிவாக எழுத வேண்டிய படம், ஆயினும் எனது கைபேசியில் எழுதி கை உழைவதால் இவ்வளவு தான் முடிந்தது.

Read Full Post »

இது ஒரு உண்மை கதை. நாவல் வடிவில்.நதியா என்ற பெண், அதுவும் 15 வயது கூட நிரம்பிய அந்த சிறுமி தனது தந்தையாலேயே தங்கள் மாளிகையின் நீச்சல் தடாகத்தில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்படுகிறாள். காரணம் உடலுறவு  அல்லாத பாலியல் செயல்பாட்டில் விளையாட்டு தனமாக ஈடுபட்டுள்ளாள் என்பதற்காக.

கணவனை எதிர்த்தாள் போன்ற குற்றங்களுக்காக பெண்ணை, கல் எறிந்து கொல்லப்படுவதும், வாழ்நாள் முழுவதும் தனிமையில் இருட்டறையில் பூட்டப்படுதும் அந்த சமுதாயத்தின் கேள்விக்கு உட்படுத்தப்படாத நடைமுறைகள், 


சுல்தானா என்ற ஒரு இளவரசி தனது வாழ்விலும் வேறு சவூதி அரேபிய பெண்களுக்கும், பெண்கள் என்ற ரீதியில் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும், சந்தித்த ஓரவஞ்சகங்களையும் சொல்லுவதுடன அதற்கு எதிராக போராட முயல்வதுமே இந்த நூல். 
அதில் தோற்றுளா வென்றாளா என்பதை நூலை வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.  


சுல்தானாவின் சகோதரி பதினாறு வயது மட்டுமே. இத்தாலி சென்று ஓவியம் கற்க வேண்டும் என்றும், திரும்பி வந்து கலைக்கூடம் ஒன்று ஆரம்பிக்க வேண்டும் என்ற கனவோடு இருக்கிறாள். 


திடீரென அவளது தகப்பன் அவளுக்கு திருமணம் நிச்சயம் செய்கிறார்; அவளது எதிர்ப்புக்கு மத்தியில். மணமகனுக்கு வயது 65. ஏற்கனவே இரண்டு மனைவிகள். இவள் மூன்றாவள் ஆகப்போகிறாள். அவளது தகப்பனைவிட மணமகன் முதியவர். 
மகளது எதிர்ப்புகளை மறுத்து அவரை மணமகனாக தேர்ந்தெடுத்தற்கு காரணம் அவர் தனது தொழில் வளர்ச்சிக்கு உதவுவார் என்பதேயாகும்.


மறுத்த அவளுக்கு ஊசி மருந்து ஏற்றி அரை மயக்க நிலையில் வைத்து திருமணம் செய்து வைக்கிறார்.


எட்டு வயதுதான் சிறுபெண்ணை இவளது தமையனும் அவனது நண்பனும் சேர்ந்து குருதி கொட்டக் கொட்ட பாலியல் வன்முறை செய்கிறார்கள். தகப்பனாருக்கு சொல்வோம் என்று இவள் சொல்ல அவர்கள் சிரிக்கிறார்கள். காரணம் தகப்பனார்தான் பணமும் விலாசமும் கொடுத்திருக்கிறார் என்பது தெரியவருகிறது.  


ஆண் பிள்ளைகளை பாசத்துடன் வாரிசாக வளர்ப்பதும், பெண் பிள்ளைகள் வேண்டா வெறுப்பாக   வளர்ப்பதும் அங்கு வழமை.
ஒரு பெண்ணுக்கு முதல் குழந்தை பெண்ணாக இருந்தால் அவளை விவாகரத்து செய்துவிடுவது சாதாரணம்.
பெண்களுக்கு எதிரான, அவர்களை இரண்டாம் தரப்பு பிரஜைகளாகி நடத்துவதை அறியும் போது கோபமும், கவலையும் கொண்ட உணர்வு எழுகிறது இந்த நாவலைப் படிக்கும் போது.

பெண்களுக்கு எதிரான இவ்வளவு கொடுமையும் மதத்தின் பெயரால் செய்யப்படுகிறது. ஆனால் மதம் அவ்வாறு சொல்லவில்லை. தீவிர மதவாதிகளின் பிழையான புரிதல்களே காரணம் என்பதை நூலின் ஊடே புரிந்து கொள்கிறோம்.


1965 ற்கும் 1985 ற்கும் இடைப்பட்ட காலத்தில் சவூதி அரேபியாவின் மன்னராட்சி காலத்தின் உண்மை நிகழ்வுகள் மையமாக வைத்து, பெயர்களை மாற்றி எழுதப்பட்டுள்ளது. 
உண்மையான பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன. இல்லையேல் அவள் கண்டு பிடிக்கப்பட்டு கடுமையான தண்டனைக்கு  ஆளாக்கப்படுவாள்.


 1988 ல் முதல் முதலாக இது எழதப்பட்டது. நான் படித்தது இரவல் புத்தகம்தின். 1995 ல் வெளியான மலிவுப் பதிப்பு

Read Full Post »

Unda உண்ட மலையாளப் படம்

கொரோனா தந்த கட்டாய ஓய்வில் இணையத்தில் பார்த்த மற்றொரு படம் இது.

வட இந்திய சத்தீஸ்கரில் நடக்கும் தேர்தலின் போது மம்முட்டி தலைமையிலான பொலிஸ் குழு ஒன்று பாதுகாப்பு பணிக்காக கேரளாவில் இருந்து அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

மாவோயிஸ்டுகள் ஆதிக்கத்தில் இருக்கும் காட்டுப் பகுதிக் கிராமம் ஒன்றிலுள்ள வாக்களிப்பு நிலையத்தின் பாதுகாப்பிற்கு பொறுப்பாகி, இவர்கள் பணி செய்ய நேர்கிறது.

இவர்களிடம் போதிய ஆயுதங்கள் கிடையாது. மாவோயிஸ்ட் கள் எப்போது தாக்குவார்கள், ஆயுதங்கள் போதிய அளவு இல்லாததால் அதை எதிர்கொள்வது எப்படி என்ற மன உளைச்சல் இவர்களை ஆட்கொள்கிறது.

திருவிழாவில் வெடி வெடித்தால் கூட அதனை மாவோயிஸ்ட் தாக்குதல் என எண்ணிப் பயந்து, உள்ள துப்பாக்கி ரவைகளைக் கூட வீணடித்து விடுகிறார்கள்.

மொழி தெரியாத ஊர், நீருக்குக் கூட தட்டுப்பாடான பகுதி, வறிய மக்கள். அதற்கிடையே இந்த பொலிஸ் குழுவில் உள்ளவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகள், முரண்பாடுகள். இவற்றை எதிர்கொள்ள மம்முட்டி எடுக்கும் முயற்சிகள் என ஒரு விரிந்த பரிமாணத்தை காட்சிப்படுத்து கிறார்கள்.

அவர்களது குடும்ப பிரச்சினை களின் மன உழைச்சல்களால் கடமையில் தாக்கத்தை ஏற்படுத்துவது மற்றொரு புறம்.

தேர்தல் அமைதியாக நடக்கிறது. ஆனால் அது தேர்தலைக் குழப்புவார்களோ என எதிர்பார்த்த மாவோயிஸ்டுகளால் அல்ல என்பது எதிர்பாராத திருப்பம்.

இது ஒரு அக்சன் ்படம் அல்ல. சாகச கதாநாயகனாக இன்றி, சராசரி மனிதனாக மம்முட்டி நடிக்கிறார். ஆரவாரமற்ற அமைதியான நடிப்பு.

கானகக் காட்சிகள், இரயில் பிரயாணம் என அனைத்தும் ரசிக்கும்படி ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. சுஜித் புருஷன் ஒளிப்பதிவும் , பிரசாந்த் பிள்ளையின் இசையும் எங்கிருந்து, எப்போது மாவோயிஸ்ட் கள் தாக்குவார்கள் என்ற பயம் உணர்வை தொடர வைக்க உதவுகின்றன.

காலித் ரஹ்மானின் இயக்கம் சிறப்பாக இருக்கிறது.

காதல், சண்டை, திகில் என்ற வழமையான வாய்ப்பாடுகளில் இருந்து சற்று விலகி நின்று ரசிக்க வைக்கிறது.

Read Full Post »

இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்

நரகாசுரன் வதைபட்டு அழிந்த நாள்
மக்கள் விடுதலை பெற்று மகிழ்ந்த நாள்

ஆனால் இன்று
மீண்டும்
ஒன்றல்ல இரண்டல்ல
ஆயிரமாயிரமாக நரகாசுர்கள்
அரசியல் நாற்காலிகளில்
அரச பீடங்களில்
மக்களை மிதித்தும்
அவர்கள் வாழ்வை நசுக்கியும்
வாய்களை ஒட்டியும்
வீதிகளில் அலைக்கழித்தும்
ஏறியும்
ஏற முயன்றும்
வதைத்து கொண்டிருக்கின்றனர்.

போத்தல்களும்
சாப்பாடு பார்சல்களும்
பணமும்
சலுகைகளும்
பின் கையால்
தரவுகளுமாக..

வேண்டாம்
வேண்டவே வேண்டாம் …

“இன்னொரு கிருஷ்ண பரமாத்மா
வந்தெம்மை காப்பார்”
கனவுகள் வேண்டாம்
தோழர்களே
நரகாசுரனாவான் அவனும்
பதவியில் அமர்ந்ததும்

வீதிகளில் இறங்குவோம்
பத்திரிகைகளில் முழங்குவோம்
இணைய தளங்களில் பதிவோம்
மக்கள் கைகளில்
மலர வேண்டும்
உண்மையான
மக்களாட்சி.

எம்.கே. முருகானந்தன்

Read Full Post »

பகலில் உறங்கினால் உடல் நிறை அதிகரிக்குமா?
சுதன் முல்லைத்தீவு

பதில்:- தூக்கத்திற்கும் எடை அதிகரிப்பிற்கும் நேரிடையான தொடர்பு ஏதும் கிடையாது.

பொதுவாக பகல் தூக்கத்தை நாம் சோம்பேறித்தனத்தின் அடையாளமாகப் பார்க்கிறோம். சோம்பேறியாக இருந்து உடல் உழைப்பில் ஈடுபடாதிருந்தால் உடல் எடை அதிகரிப்பிற்கு வாய்ப்பிருக்கிறது என்பதை மறுப்பதிற்கில்லை.

அதாவது பகலில் தூங்கினாலும் சரி தூங்காவிட்டாலும் சரி உடலுழைப்பற்ற வாழ்க்கையானது எடையை அதிகரிக்கவே செய்யும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

மாறாக கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடுபவர் உடல் அசதி நீங்க, உணவின் பின் சில நிமிடங்கள் தூங்குவதால் எடை அதிகரிக்கப் போவதில்லை. மாறாக அவர் தொடர்ந்தும் கடுமையாக வேலை செய்வதற்கான உந்துசக்தியாக அந்த சிறு தூக்கம் அமையும்.

ஒருவர் குண்டாக இருக்கிறாரா மெல்லியவராக இருக்கிறாரா என்பதற்கு முக்கிய காரணங்களாக இருப்பது அவரது பரம்பரை அம்சமும், அவரது உணவுமுறை மற்றும் உடலுழைப்பு போன்ற வாழ்க்கை நடைமுறைகளேயாகும்.

உண்மையில் நாம் உண்ணும் உணவிலிருந்து பெறப்படும் சக்தியில் பெருமளவிலானது (60 முதல் 75 சதவிகிம் வரையானது) எமது உடலின் செயற்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகிறது. அதாவது மூளை,  இருதயம்,  உணவுக் கால்வாய், அங்கங்கள் உட்பட அனைத்து உறுப்புகளின் செயற்பாட்டிற்கு இது பயன்படுத்ப்படுகிறது. நாம் தூங்கினாலும் தூங்காவிட்டாலும் சரி இவை தொடர்நது செயற்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

10 முதல் 25 சதவிகிதமே நமது நாளாந்த நடவடிக்கைகளான நடப்பது, வேலை செய்வது போன்றவற்றிக்கு பயன்படுதப்படுகிறது.

நாம் தினமும் உண்ணும் உணவின் சக்திப் பெறுமானமானது எமது உடலில் நாளாந்த செயற்பாட்டிற்காக நாம் செலவழிக்கும் சக்தியின் அளவை விட அதிகமாக இருந்தால் அது கொழுப்பாக மாறி எமது உடலில் சேமிக்கப்படும். அது எடையை அதிகரிக்கச் செய்யும்.

இன்று பலரும் நம் பாரம்பரிய உணவுகளான சோறு இடியப்பம் புட்டு போன்றவற்றை கைவிட்டு கலோரிப் பெறுமானம் அதிகமுள்ள ஏனைய உணவுகளை அதிகம் உள்ளெடுகிறார்கள். ரோல்ஸ் பற்றிஸ் போன்ற பொரித்த உணவுகள், தேநீர்,  சோடா ஜீஸ் போன்ற இனிப்புப் பானங்கள்,  சொக்கிளற் ஜஸ்கிறீம் போன்ற யாவுமே அதிக கலோரிப் பெறுமானம் கொண்டவை. இதுவே அவர்களது எடை அதிகரிப்பிறகு காரணமாகிறது. பகல் தூக்கம் அல்ல.

அத்துடன் உடல் உழைப்பின்றி தொலைக்காட்சி பெட்டி முன் வாளாவிருப்பதும் காரணம்தான்.

அண்மையில் செய்யப்பட்ட ஒரு ஆய்வு சுவார்சமானது. உங்கள் கேள்விக்கு எதிர்மாறானது

தூக்கக் குறைபாட்டு பிரச்சனை உள்ளவர்களும் போதியளவு நேரம் தூங்கக் கிடைக்காதவர்களும், போதியளவு நேரம் தூங்குhவர்களை விட அதிக எடை அதிகரிப்பிறகு ஆளாகிறார்களாம். இதற்குக் காரணம் லெப்டின் (Leptin) என்ற
ஹோர்மோன் குறைவாகச் சுரப்பதும் கிறெஹ்லின் (Grehlin) என்ற ஹோர்மோன் அதிகமாகச் சுரப்பதும் ஆகும்.

இதனால் வயிறு நிறையாத உணர்வும் கூடுதலான பசியும் ஏற்படுகிறதாம். அதாவது தூங்காவிட்டால்தான் எடை அதிகரிக்க வாய்ப்பு உண்டு என்று அர்த்தப்படுகிறது.

முடிவாக என்ன ஆலோசனை சொல்லலாம்?

பகல் தூக்கம் என்பது நீண்டதாக இருக்கக் கூடாது. உடலுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்குமளவிற்கு குறுகியதாக இருக்க வேண்டும்.
உணவுகள் போசாக்கானதாக இருக்க வேண்டுமே ஒழிய அதிக கலோரிச் சத்துள்ளதான இருக்க கூடாது.

இவற்றைக் கடைப்பிடித்தால் எடையை சரியான அளவில் பேண முடியும்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

மார்பகப் புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?

கவிதா, பளை

பதில்: மார்பகப் புற்றுநோய்க்கு இதுதான் காரணம் என்று ஒன்றைச் சுட்டிக் காட்டுவது என்பது இயலாத காரியம். மார்பகப் புற்றுநோய்க்கு மட்டுமல்ல ஏனைய புற்று நோய்களுக்கும் அவ்வாறுதான்.

ஆனால் அந்த ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய காரணிகள் எனப் பலவற்றை சொல்லலாம். இத்தகைய ஆபத்தான காரணிகள் உள்ள எல்லோருக்கும் புற்றுநோய் எதிர்காலத்தில் நிச்சயம் புற்றுநோய் வரும் என அர்த்தப்படுத்தக் கூடாது. வுரக் கூடிய ஆபத்து அல்லது சாத்தியம் அதிகம் என்றே கொள்ள வேண்டும்.

முக்கிய காரணியாக பரம்பரை அம்சத்தைக் கூறலாம். பரம்பரையில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் இருந்தால் அவர்களது வழித்தோன்றல்களுக்கு வரக் கூடிய சாத்தியம் அதிகம்.

அத்தகையவர்களுக்கு பரம்பரை அலகு பரிசோதனை மூலம் இது வரக் கூடிய ஆபத்து இருக்கிறதா என்பதை இப்பொழுது கண்டறிய முடியும்.

மார்பகத்தில் புற்றுநோயல்லாத வேறு சில வகை கட்டிகள் ஏற்கனவே வந்தவர்களுக்கும் எதிர்கலத்தில் மார்பகப் புற்றுநோய்க்கான சாத்தியம் அதிகம்.

மிகக் குறைந்த வயதில் (12க்கு முதல்) பெரியவளானவர்களுக்கும், 55 வயதாகியும் மாதவிடாய் முற்றாக நிற்காதவர்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் அதிகமாகும்.

குழந்தைகள் பெறாத பெண்களுக்கும் முதற் குழந்தையை 30 வயதிற்கு பின்னரே பெற்றவர்களுக்கும் இதற்கான ஆபத்து அதிகமாகும்.

அதீத எடை உள்ள பெண்களுக்கும் மார்பக புற்றுநோய் வரக் கூடிய ஆபத்து அதிகம்.

அதேபோல வேறு நோய்களுக்காக மார்பில் ரேடியம் கதிர்சிகிச்சை செய்தவர்களுக்கும் ஆபத்து ஆதிகம் எனப்படுகிறது.

கடந்த பத்து வருட காலத்திற்குள் குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரைகள் உபயோகித்தவர்களுக்கும் மார்பக புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் சற்று அதிகமாகும்.

மாறாக குழந்தைக்கு ஒன்றரை முதல் இரண்டு வருடங்கள் வரை பாலூட்டிய தாய்மாருக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் குறைவாகும். தினசரி உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் அவ்வாறே குறைவாகும்.

மமோகிராம் பரிசோதனையின் போது மார்பக திசுக்களின் அடர்த்தி அதிகமாக இருப்பதாக காணப்பட்டவர்களுக்கும் ஆபத்து ஆதிகம் எனப்படுகிறது.

எனவே இத்தகைய சாத்தியக் கூறுகள் உள்ளவர்கள் செய்ய வேண்டியது என்ன? ஒழுங்கான முறையில் சுய மார்பகப் பரிசோதனை செய்ய வேண்டும்.

சிறிய சந்தேகம் இருந்தாலும் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

நூலும் இலக்கிய ஆளுமையும் – ‘நிழல்கள்’ அ.யேசுராசா
எம்.கே.முருகானந்தன்

41385865_2337750349573977_4098471305257418752_n

ஈழத்தின் மிக முக்கியமான இலக்கிய ஆளுமைகளில் ஒருவரான யேசுராசாவின் புதிய நூலான நிழல்கள் வெளியாகியுள்ளது.
அது அவரின் தற்போதைய முழு ஆர்வத்தையும் வேண்டி நிற்கும் துறையான சினிமா பற்றிய நூல் என்பது கவனத்திற்கு உரியது. சினிமாவுடன் நீண்டகாலம் ஈடுபாடுடையவர் யேசுராசா. எனவே அனுபவத்துடன் கூடிய நூல் என்பதால் நல்ல சினிமாவை நாடுபவர்களுக்கு மிகவும் பயனுள்ள நூலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

யேசுராசா திரைப்படங்கள் பார்க்கும் வேகமும் அவை பற்றிய நுணுக்கங்களை நினைவில் நிறைத்து வைத்திருப்பதும் அதிசயப்பட வைக்கும். அவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் அற்புதமானவை. தினமும் 2-3 திரைப்படங்களை அவரால் பாரக்க முடிகிறது, அவை பற்றிய தேடல்களையும் தொடர்கிறார். இணைய வசதியையும் Youtube பையும் உச்ச அளவில் பயன்படுத்தல்.
எமது வயதொத்த பலருக்கு அந்நியமாக இருக்கும் நேரத்தில் இவர் அதை பயனுறுமுறையில் பயன்படுத்துவது மட்டுமின்றி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் மகிழ்ச்சியானது.

யாழ் நூலக வாசகர் வட்டம் ஒழுங்கு செய்யும் மாதாந்த திரைப்படங்கள் பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களோ தெரியாது. மிக அற்புதமான திரைப்படங்கள் மாதாந்தம் திரையிடப்படுகின்றன. தமிழ் ஆங்கில படங்கள் மட்டுமின்றி
ரஸ்ய இத்தாலிய பிரெசூ;சு சீன போன்ற பல்வேறு மொழிப்படங்களையும் பார்க்கக் கூடிய வாய்ப்பைப் பெறுகிறோம். அவற்றை தேர்ந்தெடுப்பதுடன் அவை பற்றி அவர் கொடுக்கும் சிறிய அறிமுகமும் எங்களுக்கு அந்த
திரைப்படம் பற்றிய புதிய தரிசனங்களைக் கொடுககிறது. ஆர்வத்தோடு அணுவணுவாக இரசித்து பார்க்க வைக்கிறது. நானும் நிறையவே பயன்பெற்றிருக்கிறேன்.

பல பழைய திரைப்படங்கள் பற்றிய தகவல்கள்,  காட்சிப்படுத்தல் நுணுக்கங்கள்,  கூர்மையான வசன அமைப்பு, நெறியாளர்கள்,  அவர்களது ஏனைய படங்கள் போன்ற நிறைய தகவல்களை இந்த திரைப்பட வட்ட படங்கள் மூலமும் யேசுராசாவின் உரைகள் மூலம் பெற்றிருக்கிறேன்.

அங்கு காட்டப்பட்ட சில படங்கள் மற்றும் அவர் பார்த்த ஏனைய திரைப்படங்கள் பற்றிய 10 கட்டுரைகள் இந்த நூலை அலங்கரிக்கின்றன. இவற்றில் பல கட்டுரைகள் ஜீவநதியில் வெளிவந்த போது நான் ஏற்கனவே படித்ததும் உண்டு.

யாழ் மண்ணில் கலை இலக்கிய சினிமா ஈடுபாடுள்ள இளைஞர்கள் நிறையவே இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்களை அந்த இலவச திரைக் காட்சிகளில் காணவும் கிடைப்பதில்லை. குறும்பட தயாரிப்பில் ஈடுபடும் பலருக்கும் கூட இத்திரைப்படங்கள் நிச்சயம் உதவும். ஆனால் அவர்கள் எவரும் இதனைப் பயன்படுத்துவதில்லை என்பது கவலையே..

திரைப்படம் பார்க்கும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். தேர்ந்தெடுத்த படங்களை தேடிப் பார்ப்பவர்கள் ஒரு சிலர் இருக்கிறார்கள். ஆனால் தாம் பார்ப்பது மாத்திரமின்றி மற்றவர்களையும் இரசனையோடு பார்க்க வைக்கும் ஆற்றல் கொண்டவர்கள் ஓரிருவர்தான். அவர்களில் முக்கியமானவர் யேசுராசா. அவற்றை அவருடனான தனிப்படஉரையாடல்கள் மூலம்
பெறமுடிகிறது. பரந்த மட்டத்தில் திரைப்படவட்டங்கள் ஊடான இலவச திரைப்பட காட்சிகள்.மூலமும்,  அவரது கட்டுரைகள் ஊடாகவும்
பயன்பெற முடிகிறது.

எனக்கும் எல்லோரையும் போலவே திரைப்பட ஆவல் இருக்கிறது. சாதாரண பொழுதுபோக்கு திரைப்படங்கள் முதல் – சிவாஜி. கமல். மம்முட்டி எனத் தொடர்கிறது. கலைப்படங்கள்,  ஆங்கில,  சிங்கள மலையாளப் படங்கள் செம்மீன்,  சுயம்வரம், எலிப்பத்தாயம் என ஆரம்பித்தது. ஈழத்து தமிழ் திரைப்படங்களையும் தேடிப் பார்ப்பதுண்டு.

நல்ல திரைப்படங்கள் பற்றிய உணர்வுகளை என்னில் எழுப்பியவர்களில் நண்பர் கே.எஸ்.சிவகுமாரன் மற்றும் யேசுராசா,  கேதாரநாதன் ஆகியோரும் அடங்குவர். கொழுப்பில் பல சர்வதேச படக் காட்சிகளை காணும் வாய்ப்பு
கிடைத்திருக்கிறது. ஆரம்பத்தில் திரைப்பட கூட்டுத்தாபன திரையில்,  BMICH ல் பார்த்திருக்கிறேன். BMICH ல் படம் பார்த்துவிட்டு ஜேசுராசா கேதாரநாதன் போன்றவர்களுடன் அவை பற்றிப் பேசியபடி நடந்து வந்த ஞாபகங்கள் பசுமையாக இருக்கின்றன.

அ. யேசுராசா (1946ரூபவ் டிசம்பர் 30ரூபவ் குருநகர்ரூபவ் யாழ்ப்பாணம்) ஈழத்தின் குறிப்பிடத்தக்க இலக்கிய ஆளுமை ஆவார். பல்துறை ஆற்றல் மிக்கவர். கவிஞர்ரூபவ் சிறுகதையாசிரியர்ரூபவ் விமர்சகர்,  மொழிபெயர்ப்பு,  பத்தி எழுத்து இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் திரைப்பட ஆர்வலர் என பல தளங்களில் இயங்கிவருகிறார்.

1968 முதல் இலக்கிய ஈடுபாடு கொண்டு இயங்கத் தொடங்கிய அவர் கடந்த 50 வருடங்களாக தீவிரமாக இயங்கிவருகின்றமை குறிப்படத்தக்கது. வருகிறார். ஆனால் 80களின் நடுக் கூறுகளிலிருந்தான் அவருடனான அறிமுகமும் நட்பும் எனக்கு ஏற்பட்டது.

ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் இவர் இலக்கிய ஈடுபாடு கொண்டு இயங்கத் தொடங்கிய அந்தக் காலத்திலேயே எனக்கும் நல்ல புத்தகங்கங்கள் சஞ்சிகைகள் நல்ல சினிமா போன்றவற்றில் ஆர்வமும் ஈடுபாடும் இருந்தன. ஆயினும் அந்நேரத்தில் கொழும்பில் இருந்த யேசுராசா,  குப்பிளான் போன்றவர்கள் இணைந்து இயங்கிய கொழும்பு கலை இலக்கிய நண்பர் கழகம் பற்றி அறிந்திருக்கவோ அவர்கள் எவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியதில்லை. காரணம் மருத்துவ மாணவன் என்ற கூண்டுக்குள் அகப்பட்டிருந்ததால் வாசிப்புக்கு அப்பால் இலக்கிய சந்திப்புகள் கூட்டங்கள் எனக்கு எட்டாதவையாகவே இருந்தன.
80 யாழ் வந்த பின்னர்தான் இலக்கிய அறிமுகங்கள் ஏற்பட்டன. அலை வாசகன் ஆனேன். ஈழத்து இலக்கியப் பரப்பில் ஒரு புதிய வாசல் திறந்திருப்பதாக உணர்ந்தேன். அலையையும் யேசுராசாவையும் அறிமுகப்படுத்தி வைத்தது நண்பர் குலசிங்கம் ஆவார். எனது முதல் நூல்களில் ஒன்றான ‘தாயாகப் போகும் உங்களுக்கு’ பதிப்பிக்கப்பட்டது நியூ ஈரா அச்சகத்தில். அதன் வடிவமைப்பு பற்றிய பல ஆலோசனைகள் எனக்கு யேசுராசா தான் வழங்கினார்.அந்த நேரத்தில் திசை அங்கிருந்துதான் வெளியாகியது. அதன் துணை ஆசிரியராக யேசுராசா பணியாற்றிக் கொண்டிருந்தமை நினைவுக்கு
வருகிறது.

41517400_2337764502905895_2716414759992819712_n

தொழில் ரீதியாக ஓய்வுபெற்ற அஞ்சல்துறை அதிகாரியான இவர் காலத்திற்கு முன்பே ஓய்வு பெற்றிருக்கிருந்தார். ஆதன் சூட்சுமம் இப்பொழுதுதான் புரிகிறது. முழுநேர இலக்கியச் செயற்பாட்டளராக வாழ்கிறார். இவ்வாறு தனக்கு பிடித்த வாழ்வைத் தொடரும் வாய்ப்பு பலருக்கும் இருந்தாலும் வேலை வேலை என ஓடித் திரிகிறார்கள். நானும் அவர்களில் ஒருவன். எழுபது வயதாகியும் எனது தொழிலைக் கைவிட முடியவில்லை. எனக்கு ஈடுபாடுள்ள
கலைத் துறைகளில் ஈடுபட முடியவில்லையே என்ற ஏக்கம் நிறைவேறாத கனவாக மாயாஜாலம் காட்டுகிறது.
யாழ் மண் ஏராளமான இலக்கியவாதிகளின் களமாக இருந்து வருகிறது. இவர்களிடேயே யேசுராசா தனித்தன்மை கொண்டவராக
மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவராக இருப்பதாக நான் உணர்கிறேன். பொதுவாக இலக்கிய உலகில் நிலவும் கருத்தும் அதுதான். இலக்கியத்தில் செழுமையும் தரமும் பேணப்பட வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவர். படைப்புகள் அனுபவ வெளிப்பாடாக இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர் முகத்திற்காக பாராட்டுபவர் அல்ல. நல்லனவற்றை நல்லன எனவும் தரமற்றவற்றை தரமற்றவை எனவும் முகத்துக்கு நேரே
சொல்லக் கூடியவர்.

இலக்கியத்துறையில் அவரது முழுமையான பங்களிப்புடன் பல சஞ்சிகைகள் வெளியாகியுள்ளன. ‘அலை’ ஆசிரியராக அவரது பங்களிப்பு  ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. இலக்கியத்தில் தரம் பேணப்படுவதற்கு அலை முக்கிய முன்னுதாரணமாகும். புpன்பு ‘கவிதை’ இதழ், தெரிதல் சஞ்சிகை ஆகியனவும் அவரால் வெளியிடப்பட்டன. ‘திசை’ யின்
துணை ஆசிரியராக பணியாற்றியமையும் முக்கிய பங்களிப்பாகும்.

இதுவரை நிழல்கள் உட்பட 8 நூல்களை வெளியிடுள்ளார்.
தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் சிறுகதைத் தொகுதி – 1975ம் ஆண்டு இலங்கை சாஹித்திய மண்டலத்தின் சிறுகதைக்கான
பரிசினைப் பெற்றது.
அறியப்படாதவர்கள் நினைவாக கவிதைத் தொகுப்பு.
பனிமழை மொழியாக்க கவிதை நூல்.
தூவானம் பத்தி எழுத்து தொகுப்பு 2001
பதிவுகள் பத்தி எழுத்து தொகுப்பு 2003
குறிப்பேட்டிலிருந்து இலக்கிய கட்டுரைகள் 2007
நினைவுக் குறிப்புகள் கட்டுரைகள் 2016
திரையும் அரங்கும் கலைவெளயில் ஒரு பயணம் 2013

இதைத் தவிர பல முக்கிய தொகுப்பு நூல்கள் இவரது இலக்கிய பங்களிப்புக்கு சான்றாக அமைந்திருக்கின்றன. இவற்றின் தொகுப்பாசிரியர்களில் முக்கிய பங்காளியாக இருந்திருக்கிறார்.

‘பதினொரு ரூடவ்ழத்துக் கவிஞர்கள்’, ‘மரணத்துள் வாழ்வோம’, ‘காலம் எழுதிய வரிகள்’ அகிய கவிதைத் தொகுப்புகள்
தேடலும் படைப்புலகமும் ஓவியர் மார்க்கு பற்றிய நூல்

இவ்வாறு பல்வேறு அறுவடைகளையும் பங்களிப்புகளையும் சினிமா கலை இலக்கிய துறையில் ஆற்றிய யேசுராசாவின் புதிய நூல்தான் நிழல்கள் 104 பக்கங்கள் நீளும் இந்த நூலில் 10 சினிமா கட்டுரைகள் உள்ளங்கியுள்ளன.

முதலாவது கட்டுரையாக அமைவது 2015 ம் ஆண்டு கொழும்பில் நடந்த சிங்கள் தமிழ் குறுப்படவிழா விழா பற்றியும் அங்கு காட்டப்பட்ட முக்கிய குறுப்படங்கள் பற்றியதுமான கட்டுரை.

எல்டர் றியஸனோவ் இயக்கிய ரஸ்ய திரைப்படமான ‘இரக்கமற்ற ஒரு காதல் கதை’,

ஜிறி வொயிஸ் இயக்கிய ‘ரோமியோ ஜீலியற் மற்றும் இருள்’, என்ற செக்கோஸ்லோவாக்கிய திரைப்படம்,

‘சொராயவுக்குக் கல்லெறிதல்’ சைரஸ் நொவ்ரஸ்தெஹ் கின் ஈரானியப்படம்,

லூசினோ விஸ்கொன்ரியின் ‘நிலம் நடுங்குகவிறது’ இத்தாலியப்படம்.

கோவிந் நிஹாலினியின் ‘விருந்து’ ஹிந்தி திரைப்படம்,

அந்த்ரேஜ் வாஜ்தா வின் ‘ஒரு தலைமுறை’ போலந்து திரைப்படம்,

எரான் ரிக்லிஸ் சின் ‘எலுமிச்சை மரம்’ இஸ்ரேலிய திரைப்படம்,

பேர்ன்ஹாட் விக்கியின் ‘பாலம்’ ஜேர்மனிய திரைப்படம்,

அம்ஷன்குமாரின் ‘ஒருத்தி’ தமிழ் திரைப்படம் ஆகியன அடங்குகின்றன.

ஒவ்வொரு கட்டுரையும் நல்ல சினிமா பார்த்த உணர்வைக் கொடுக்கிறது. மேலோட்டமான கதையோட்டம் முக்கிய உரையாடல்கள், காட்சி அமைப்பு, கமரா கோணங்கள்ரூபவ் இசை என யாவற்றையும் தொட்டுச் செல்கிறது. ஒவ்வொரு கட்டுரையும் திரைப்படத்தை பார்த்தது போன்ற உணர்வைக் கொடுப்பதுடன், நாங்களும் நேரடியாகப் பார்த்து இரசிக்க வேண்டும் என்ற ஆசையையும் தூண்டுகின்றன. பல படங்களை நானும் பார்க்க முடிந்ததல் இரசித்து வாசிக்க முடிந்தது.

இதில் பல கட்ரைகளை நூல் உருப்பெறு முன்னரே சஞ்சிகைகளில் படித்ததை ஏற்கனவே குறிபிட்டிருந்தேன். படிக்கப்படிக்க தெவிடாத கட்டுகைள், ஊறித் திளைக்க வைக்கின்றன. திரைப்பட ரசனையும் ஆர்வமும் உள்ளவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.

அவரது தேடல்களும் படைப்பு மற்றும் பதிப்பாக்க முயற்சிகளும் தொடர வாழ்த்துகிறேன்

நூல் வெளியீட்டு விழாவில் நான் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்

0.00.0

Read Full Post »

கேள்வி:- நான்  45 வயதான பெண். எனக்குத் தொடர்ச்சியாக வெள்ளை படுகிறது. இதனால் மிகவும் அசௌகரியமாக உள்ளது. இதற்குத் தீர்வு என்ன?
ஜெ.ஜெயலட்சுமி
மல்லாகம்

பதில்:- வெள்ளை படுவது என்பது ஒரு இயற்கையான உடலியல் செயற்பாடு. உண்மையில் அது ஒரு சுகாதாரப் பணியையும் செய்கிறது. பாலுறுப்பான யோனியின் உட்புறம் மற்றும் கருப்பை கழுத்தில் உள்ள சுரப்பிகளிலிருந்து வரும் திரவமானது அங்கிருக்கும் இறந்த கலங்களையும் கிருமிகளையும் கழுவிச் செல்லும் பணியைச் செய்கிறது.

உடலுறவு நேரத்தில் உராய்வு வலி போன்றவை ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.

மாதவிடாய் சக்கரத்தின் எந்த நேரம் என்பதைப் பொறுத்து வெள்ளைபடுதலின் அளவு நிறம் மணம் ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. அதோபோல பாலூட்டும் காலங்களிலும் கர்ப்ப காலத்திலும் மாற்றங்கள் ஏற்படலாம்.

மாறாக கடுமையான துர்நாற்றம், கடும் மஞ்சள் பச்சை சிகப்பு போன்ற நிறமாற்றங்கள் இருந்தால் அல்லது அங்கு எரிவு அரிப்பு போன்ற உபாதைகள் இருந்தால் அது நோய் காரணமாக இருக்கலாம். பாலியல் தொற்று நோய்களான  Chlamydia, gonorrhea  போன்றவை. அதேபோல  Tricomonas   கிருமியாலும் அவ்வாறு ஏற்படலாம்.

சிலர் தமது பாலுறுப்பை சுத்தம் செய்வதாக நினைத்து சோப், டெட்டோல், ஸ்பிரிட் போன்றவற்றால் அடிக்கடி கழுவுகின்றனர். இவை பாலுறுப்பின் கலங்களை உறுத்தி அதிக வெள்ளைபடச் செய்யலாம். நீங்கள் அவ்வாறு செய்தால் அவற்றைத் தவிர்க்கவும்.

குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரைகள் உபயோகிப்பவர்களுக்கும் அதிகமாக வெள்ளைபடலாம். ஆனால் அதற்கான சாத்தியம் உங்கள் வயதில் இருக்கும் எனத் தோன்றவில்லை.

நீரிழிவு நோயும் மற்றொரு காரணமாகும். நீரிழிவு நோயாளருக்கு பங்கஸ் தொற்று காரணமாக அரிப்பும் தடிப்பான ஆடை போன்ற வெள்ளைபடுதல் ஏற்படுவதுண்டு. பங்கஸ் தொற்று இல்லாவிட்டால் கூட நீரிழிவு நோயாளரின் பாலுறுப்பில் உள்ள இயல்பான கிருமிகளில் மாற்றங்களினாலும் வெள்ளை கூடுதலாகப் படுவதுண்டு.
அன்ரிபயோடிக் மருந்துகள் மற்றும் ஸ்டிரொயிட் மருந்துகள் எதாவது உபயோகிக்கிறீர்களா. அவையும் வெள்ளைபடுதலை அதிகரிப்பதுண்டு. இதைக் கவனத்தில் எடுங்கள்.

கருப்பை கழுத்துப் புற்றுநோய் வெள்ளைபடுதலுக்கு ஒரு பாரதூரமான காரணமாகும். மருத்துவர்கள் பாலுறுப்பின் ஊடாக உபகரணங்களை செலுத்திப் பரிசோதிப்பதன் மூலமே இதைக் கண்டறிய முடியும்.

இதற்கான தீர்வு என்ன என்பதுதான் உங்கள் கேள்வியின் முக்கிய பகுதியாகும். வெள்ளை படுதலுக்கு பல காரணங்கள் இருப்பதால் மருத்துவரின் ஆலோசனையை நேரில் சென்று பெறுவதே சரியான முறையாகும்.

அதே வேளை உங்கள் பங்களிப்பாக உங்கள் பாலுறுப்பை சுத்தமாக வைத்திருங்கள். இளம் சுட்டு வெந்நீரால் கழுவலாம். கடுமையான சோப் வகைளை உபயோகிக்க வேண்டாம். வாசனை ஊட்டப்பட்ட சோப் வகைகளை தவிர்க்கவும். கீருமிநாசிகள் கலந்த சோப் வகைகளும் நல்லதல்ல.

கழுவிய பின்னர் சுத்தமான துணியினல் ஈரத்தைத் துடைத்து விடுங்கள். ஈரலிப்பாக இருப்பது பல கிருமித் தொற்றுகளைக் கொண்டுவரும்.
சுத்தப்படுத்தும்போதும் ஈரலிப்பை அகற்றும்போது முன்னிருந்து பின்புறம் நோக்கி செய்யவும். அதாவது கழுவுவது துடைப்பது போன்றவற்றை பாலுறுப்பு பக்கமிருந்து மலவாயில் பக்கம் நோக்கி செய்ய வேண்டும். மாறிச் செய்தால் மலவாயிலில் உள்ள கிருமிகள் பாலுறுப்பினுள் புகுந்து நோய்களை ஏற்படுத்தலாம்.
பருத்தித் துணிகளிலான உள்ளடைகளையே உபயோகியுங்கள். அது ஈரத்தை உறிஞ்சி ஈரலிப்பை அகற்றிவிடும். அத்துடன் மிக இறுக்கமான உள்ளாடைகளையும் தவிருங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

Read Full Post »

அடிக்கடி மறதி ஏற்படுகிறது? இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்?

பிரபா , யாழ்ப்பாணம்

பதில்:-
உங்கள் வயதில் ஞாபக மறதி என்றால் பெரும்பாலும் அசிரத்தை, வேலை நெருக்கடிகள், பல விடயங்களில் ஒரே நேரத்தில் ஈடுபடுதல், ஈடுபாடின்மை, தூக்கக் குறைபாடு போன்றவையே காரணமாக இருக்கும்.
ஒருவரின் பெயரையோ போன் நம்பரையோ, செய்ய வேண்டிய பல வேலைகளில் ஒரு சிலவற்றையோ மறப்பது எவருக்குமே இயல்பானதுதான். ஆனால் தனது கைபேசியை எப்படி இயக்குவது என்பதையே மறப்பதாக இருந்தால் அது சற்று தீவிரமானதாகக் கொள்ள வேண்டும்.
மறதி பற்றி பலரது பயங்களுக்கு முக்கிய காரணம் அது ஏதாவது தீவிர நோயின் அறிகுறியாக இருக்குமோ என்பதுதான். அல்சைமர் நோயாக இருக்குமோ அல்லது  மூளைச்சிதைவினால் (Alzheimer’s disease and dementia) ) ஏற்படும் மறதியோ என்ற பயம் பலருக்கு இருக்கிறது. அத்தகைய எதிர்மறைச் சிந்தனையே பலருக்கு மறதியைக் கொண்டுவந்துவிடுகிறது.
மது மற்றும் போதைப் பொருள் பாவனையாளர்களுக்கும் மறதி அதிகம். மனப் பதற்றம், பதகளிப்பு, மனச்சோர்வு போன்ற உளவியல் தாக்கங்களாலும் மறதி ஏற்படுகிறது. தைரொயிட் சுரப்பி குறைபாடு விட்டமின் B 12 குறைபாடு போன்றவற்றையும் சொல்லலாம். ஒரு சில வேளைகளில் வேறு நோய்களுக்காக உட்கொள்ளும் சில மருந்துகளும் காரணமாகலாம். கொழுப்பும் இனிப்பும் கூடிய ஆரோக்கியமற்ற உணவு முறையும் காரணம் என நம்பப்படுகிறது.
மறதியைக் குணமாக்குவதற்கு அதிசய மருந்து மாத்திரைகள் எதுவும் கிடையாது.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டும். போதிய தூக்கம், போசாக்கான உணவு முறை, தினசரி உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்பு, போதிய ஓய்வு ஆகியவை அவசியம். நண்பர்களுடன் உரையாடவும் பொழுதுபோக்குகளுக்கும் நேரம் ஒதுக்குங்கள்;. உற்சாகமாக இருங்கள். சிரியுங்கள். இவை யாவுமே உங்கள் மனதை அமைதியாக்கி நினைவுகளை மறக்காமல் இருக்கச் செய்யும்.
பல வேலைகளை ஒரே நேரத்தில் தூக்கிப் பிடிக்காமல் ஒவ்வொன்றாக உங்கள் ஆற்றலுக்கும் நேரத்திற்கும் ஏற்றவாறு பணிகளை நிதானமாகச் செய்யவும்.

மூளைக்கு வேலை கெடுக்கக் கூடிய செஸ், எண்களுடன் அல்லது எழுத்துக்களுடன் கூடிய விளையாட்டுகள், அதே போன்ற கணனி விளையாட்டுகள் மூளையின் செயற்பாட்டைக் கூர்மையடைச் செய்யலாம்.

நீண்ட நாட்களாக ஒரே விதமான மறதி எனில் அதை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. மாறாக திடீரென ஏற்பட்டு தீவிரமாக அதிகரித்துச் செல்கிறதெனில் மருத்துவ ஆலோசனை அவசியம் பெற வேண்டும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

 

குடும்ப மருத்துவர்

Read Full Post »

கலைஞரே

சென்று வா என்று உங்களை வழி அனுப்ப முடியாது.

பகுத்தறிவு பாதையில் பயணித்தவர் நீங்கள்.
மறு பிறப்பிற்கு இடம் ஏது அந்த பாதையில் .

மாணவப் பருவத்திலேயே எனக்கும் என் போன்ற ஆயிரமாயிரம் இள உள்ளங்களில் பகுத்தறிவு ஒளியை ஏற்றி வைத்த பெருமையானது பெரியார், அண்ணாவுடன் உங்களையே சாரும். இன்றுவரை அந்த உணர்வு அணையாத தீபமாக ஒளிர்கிறது.

தமிழ் உங்கள் மூச்சோடு கலந்தது. பேச்சு எழுத்து திரையுலகு என எங்கும் நிறைந்திருக்கிறது.

உங்களுக்கு நான் விடை கொடுக்க மாட்டேன்.

ஏனெனில் கவிதை, கதை, கட்டுரை, நாடகம், நாவல், கடிதம், திரைக்கதை வசனம், உரை என எந்நேரமும் என்னோடும் எல்லோரோடும் தமிழோடும் கூடவே இருக்கிறீர்களே.

தினம் தினம் சந்திப்போம் கலைஞரே.

Read Full Post »

Older Posts »