Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

விரைவில் உயிர் நீக்க விருப்பமா

தினமும் இரண்டு கிளாஸ் மென்பானம் அருந்துங்கள்

தினமும் இரண்டு கிளாஸ் மென்பானம் அருந்தினால் விரைவில் மரணம் ஏற்படும் என அண்மையில் பிரசுரமான ஒரு ஆய்வு கூறுகிறது.

மென்பானத்தில் உள்ள இனிப்பானது சீனியாக இருந்தால் மட்டும் இந்த ஆபத்து ஏற்படும் என்றில்லை. செயற்கை இனிப்புகளைப் பயன்படுத்தினாலும் அதே போல மரணம் ஏற்படுமாம்.

452000 பேரைக் கொண்ட இந்த ஆய்வானது டென்மார்க், பிரான்ஸ், ஜேர்மனி,நோர்வேஈ இங்கிலாந்து, சுவீடன், ஸ்பெயின், நெதர்லன்ட, கிறீஸ் ஆகிய நாடுகளில் செய்யப்பட்டது

மாதம் ஒரு முறை மட்டும் மென்பானம் அருந்துபவர்களோடு தினமும் இரண்டு கிளாஸ் இருந்துபவர்களை ஒப்பட்டுப் பார்த்தபோதே இந்து ஆபத்து இருப்பது தெரிய வந்தது.

மாதம் ஒரு முறை மட்டும் மென்பானம் அருந்துபவர்களோடு தினமும் இரண்டு கிளாஸ் இருந்துபவர்களை ஒப்பட்டுப் பார்த்தபோதே இந்து ஆபத்து இருப்பது தெரிய வந்தது. அந்த மரணமானது பல்வேறு நோய்களால் வந்திருந்தது.

தினமும் இரண்டு கிளாஸ் மென்பானம் அருந்துபவர்களது மரணமானது பெரும்பாலும் இரத்தக் குழாய் சாரந்த நோய்களால் ஏற்பட்டிருந்தது. மாரடைப்பு மற்றும் முளையில் இரத்தக் குழாய் வெடித்தல் போன்றவை உதாரணங்களாகும்.

மாறாக தினமும் ஒரு கிளாஸ் மென்பானம் மட்டும் அருந்துபவர்களது மரணமானது பெரும்பாலும் உணவுக் கால்வாய் சார்ந்த நோய்களால் ஏற்hட்டிருந்தததாக அந்த ஆய்வு மேலும் சொல்கிறது.


மென்பானங்களில் உள்ள எந்தப் பொருள் காரணமாக இருக்கிறது என்றோ, என்ன காரணத்தால் அவ்வாறு மரணம் விரைகிறதோ என்பவையிட்டு அந்த ஆய்வு எதையும் கண்டறியவில்லை.


எனவே இந்த ஆய்வானது மென்பானம் அருந்துவதற்கும் முன்கூட்டிய மரணத்திற்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதை  எடுத்துக் காட்டி ஆரோக்கிய உணவுப் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுகிறது எனக் கொள்ளலாம்.


எனவே மென்பானங்களைத் தவிருங்கள். தண்ணீரை அருந்துங்கள். வாழ்வு நீளும்.


இந்த ஆய்வானது Jama Internal Medicine மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது.

0.00.0

புலோலியூர் இரத்தினவேலோனின் புலவொலி

புலோலியூர் இரத்தினவேலோனின் புதிய நூலை அதனை வெளியிட்ட ஜீவநதி ஆசிரியர் பரணீதரனிடமிருந்து பெற்றுக்கொண்டபோது நூலின் அட்டையை என் கண்கள் மேய்ந்தன. பசுமை போர்த்திய வயல் அதன் நடுவே எம் அடையாளமான ஒற்றைப் பனை மரம். நூலின் பெயர் புலோலி என்றிருந்தது. புலோலி தெற்குப் பகுதியில் உள்ள பசும் வயல்களில் ஒன்றின் புகைப்படம் என எண்ணிக் கொண்டேன். சரி புலோலி பற்றிய நூலாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தேன்.

சற்று சந்தேகம் எழ மீண்டும் அட்டையைப் பார்த்தபோது நூலின் பெயரை நான் தவறாக வாசித்துவிட்டதாகத் தெரிந்தது. புலவொலி என்பதே நூலின் பெயராகும். இருந்தபோதும் புலோலி பற்றிய நூல் என நான் எண்ணியதில் தவறில்லை என்பதை புலோலியூர் ஆ.இரத்தினவேலோனனின் என்னுரையில் உள்ள ஒரு வாசகம் உறுதிப்படுத்தியது

‘புலோலியூர் எனும் எங்களுரின் பெயர் ‘புலவொலி என்பதிலிருந்தே திரிபுற்றதென்பர்.’

‘அந்த வகையில் ‘புலோலியுரின் இலக்கிய கர்த்தாக்கள்’ எனும் கட்டுரையைத் தாங்கி வரும் இந்நூலுக்கு ‘புலவொலி’ என்ற மகுடம் பொருத்தமானதே’ என வேலோன் தொடர்ந்து சொல்கிறார்.

பரணீதரனின் ஜீவநதி வெளியீடாக வந்திருக்கும் 120 பக்கங்களைக் கொண்ட இந்த நூலில் 16 கட்டுரைகள் அடங்கியுள்ளன. பெரும்பாலானவை ஞாயிறு தினக்குரலில் வெளியான கட்டுரைகள். ஞானம் மற்றும் மல்லிகை சஞ்சிகைகளில் வெளிவந்தவை ஒரு சில.

நூலின் முதற் கட்டுரையாக அமைந்திருக்கும் ‘புலோலியுரின் இலக்கிய கர்த்தாக்கள்’ இந்த நூலின் மகுடம் என்பேன். தமிழகத்திலும் ஈழத்திலும் தன் மொழி ஆளுயைமால் கோலோச்சிய சதாவதானி நா.கதிரவேற்பிள்ளை முதற்கொண்டு இன்றைய இளம் எழுத்தாளரான கமலசுதர்சன் வரையான அனைத்து புலோலி தந்த இலக்கியவாதிகள் பற்றியும் அவர்களது ஆளுமைகள், அவர்கள் இயற்றிய நூல்கள், பெற்ற விருதுகள் என ஏரளமான தகவல்களை 17 பக்கங்கள் விரியும் கட்டுரைக்குள் அடக்கியுள்ளார்.

இவ்வளவு தகவல்களையும் பெறுவதற்கு அவர் எடுத்திருக்கக் கூடிய முயற்சி ஆச்சரியப்பட வைக்கிறது. எவ்வளவு விடயங்களை தன் நினைவுக் கிடங்குளிலிருந்து மீண்டிருக்க வேண்டும், எவ்வளவு நூல்களையும் கட்டுரைகளையும் தேடிப் படித்து குறிப்புகள் எடுத்திருக்க வேண்டும் என்பது மலைக்க வைக்கிறது. புலோலயூர் சார்ந்தவர்கள் மட்டுமின்றி இலக்கிய ஆர்வலர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் என்றென்றைக்கும் பயன்படக் கூடிய எண்ணற்ற தகவல்களை இந்தக் கட்டுரை கொண்டிருக்கிறது.

அதே போன்ற மற்றொரு முக்கிய கட்டுரை ஈழத்துச் சிறுகதை வளரச்சிக்கு உதவிய ஆரம்பகாலம் முதல் 83 வரையான சஞ்சிகைகள் பற்றியதாகும். ஈழத்தின் புகழ்பெற்ற ஆரம்பகால சஞ்சிகையான மறுமலர்ச்சி முதல் அலை வரையான பல சஞ்சிகைகள் பற்றியும் அவை சிறுகதைத் துறைக்கு ஆற்றிய பங்களிப்புப் பற்றியதும்தான் ‘மறுமலர்ச்சி முதல் மல்லிகை சுடர் அலை வரை சிறுகதை வளர்ச்சிக்கு துணைநி;ன்ற சஞ்சிகைகள்’ என்பதாகும்.

இவற்றைத் தவிர 6 கட்டுரைகள் பத்தி எழுத்துக்களாக தினக்குரல் ஞாயிறு இதழில் வெளிவந்தவை. இவை பெரும்பாலும் நூல் பற்றிய விமர்சனக் கட்டுரைகளாக இருந்தபோதும் அந்தந்த நூலாசிரியர்கள் பற்றிய தகவல்களையும் தருக்கின்றன. தெணியானின் சிதைவுகள் குறுநாவல், தி.ஞானசேகரனின் சரித்திரம் பேசும் சாஹித்ய ரத்னா விருதாளர்கள், கலாமணியின் 5 நூல்கள் பற்றிய பார்வை, சுதாராஜின் காட்டிலிருந்து வந்தவன் சிறுகதைத் தொகுதி, கண.மகேஸ்வரனின் சிறுகதைகள், பரணீதரனின் இவர்களுடன் நான் நேர்காணல் தொகுப்பு நூல் ஆகியவை அடங்கும்.

தனது மனங்கவர்ந்த இலக்கியகர்த்தாக்கள் எண்மர் பற்றி மல்லிகை மற்றும் ஞானம் சஞ்சிகைகளில் எழுதிய கட்டுரைகளும் இந்நூலில் அடங்குகின்றன. அவை எமக்கு அவர்கள் பற்றிய புதிய தரிசனங்களைத் தருக்கின்றன. புலோலியூர் சதாசிவம், தெளிவத்தை ஜோசப், கோகிலா மகேந்திரன், மண்டுர் அசோகா, தாமரைச்செல்வி, ச.முருகானந்தன், எம்.கே.முருகானந்தன் மற்றும் சிதம்பரப்பிள்ளை மாஸ்டர் பற்றியவையே அவை.

எனவே புலவொலி என்ற இந்த நூலில் புலோலி பற்றிய ஒரு முக்கிய விரிவான கட்டுரைiயும் புலோலி சார்ந்த சில இலக்கிய ஆளுமைகள் பற்றிய கட்டுரைகளும் இருந்தாலும் இது புலோலி மட்டும் உள்ளடக்கும் நூல் அல்ல. ஈழத்தின் சமகால இலக்கியம் பற்றியும் இலக்கிய ஆளுமைகள் பற்றியும் மிகவும் காத்திரமான தகவல்களையும் தருக்கின்ற தவகல் களஞ்சியத் தொகுப்பாக அமைகிறது. . நூலசிரியரின் கடும் உழைப்பின் பயனை அறுவடையாக்கி இலக்கியத் தகவல் விருந்தை எமக்கு அளித்த வேலோனுக்கு எனது நன்றிகள்.

வேலோன் எனது இனிய நண்பர். கடுமையான உழைப்பாளி. ஊடக முகாமையாளர் என்ற கடுமையான வேலைப் பளுவான தொழிலில் கடமையாற்றிய போதும் இலக்கியத்திற்கு சம இடம் அளிப்பராக இருக்கிறார். இதனால்தான் இவரால் சிறந்த சிறுகதை ஆசிரியர்களில் ஒருவராகத் திகழ்ந்த அதே நேரம் மீரா பதிப்பகம் ஊடாக 100 ற்கு மேற்பட்ட நூல்களை வெளியிடவும் முடிந்திருக்கிறது. அதில் எனது நீங்கள் நலமாக மற்றும் மறந்து போகாத சில ஆகிய இரண்டும் அடங்குவது பெரு மகிழ்ச்சி.

எந்தப் பணியை எடுத்தாலும் முழுமையான அர்ப்பணிப்புடன் ஈடுபடும் அவரின் முயற்சிக்கு புலவொலி என்ற இந்த நூலும் மற்றொரு சான்றாகும்

அவரது இலக்கிய முயற்சிகள் தொடரந்தும் சிறப்புடன் மலர எனது வாழ்த்துகள்.

எம்.கே.முருகானந்தன்

0.00.0

சொக்லேட், ஐஸ்கிறீம் இனிப்பு போன்ற உணவுகளில் ஆர்வம் அதிகமாக இருக்கின்றது.  கிட்டத்தட்ட இவற்றுக்கு அடிமையாகிவிட்டேன் என்று கூட சொல்லலாம். இதிலிருந்து எப்படி விடுபடுவது டொக்டர்?

வி. சுகி நெல்லியடி

பதில்:- இனிப்பு உணவுகளிலிருந்து விடுபடுவது எப்படி என்று சொல்வதற்கு முன்னர் அதற்கு அடிமையாகிவிட்டேன்  என்று நீங்கள் சொல்வதில் ஏதாவது உண்மை இருக்கிறதா என்பது பற்றி சில வார்த்தைகள் சொல்லியே ஆக வேண்டும்.

இனிப்புக்கு அடிமையாவது என்பது வெறும் பேச்சுச் சொல்ல அல்ல. அது ஒரு நோய் போல பலரைiயும் பீடித்துள்ளது. ஏனெனில் நாம் இனிப்பை உட்கொள்ளும் போது எமது குருதியில் அபின் சார்ந்ததும் டோபமின் போன்றதுமான இரசாயனங்கள் கலக்கின்றன என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

குருதியில் அதிகளவு டோபமின் சேரும்போது எம்மையறியது ஒரு இன்ப உணர்வு ஏற்படுகிறது. அந்த உணர்வை தொடர வேண்டுமாயின் உடலானது இனிப்பை மேலும் உட்கொள்ளத் தூண்டுகிறது. நாட்செல்லச் செல்ல அதே அளவு இன்பத்தைப் பெற கூடியளவிலான இனிப்பை உட்கொள்ள நேர்கிறது. மது மற்றும் போதைப் பொருள்களும் அவ்வாறுதான் அடிமையாக்குகின்றன.

இனிப்பானது கொகேயினை விட அதிகமாக ஒருவரை அடிமைப்படுத்த வல்லது என Cassie Bjork என்ற ஆய்வாளர் கூறுகிறார். அத்துடன் அதிக இனிப்பை உட்கொள்வதால் எடை ஏறுகிறது. இதன் தொடர்ச்சியாக பிரஸர், கொலஸ்டரோல், நீரிழிவு, இருதய நோய்கள் போன்றவை வரும். எனவே நீங்கள் விரும்பியவாறு அதிக இனிப்பிலிருந்து விடுபட வேண்டியது அவசியம்தான்.

இனிப்பு என்பது சீனி சர்க்கரை ஆகியவற்றிலும் அவை சேர்க்;கப்பட்ட உணவுகளிலும் மட்டும்தான் இருக்கிறது என்றில்லை. பழங்களிலும் இருக்கிறது. பழங்களில் உள்ள இனிப்பு தனியாக வருவதில்லை. பழங்களிலுள்ள இனிப்பானது நார்ப்பொருள் மற்றும் ஏனைய போசணைப் பொருட்களுடன் கலந்து வருகிறது. இதனால் அவற்றில் சீனியின் அடர்த்தி குறைவு. எனவே அவற்றை உண்ணும் போது குருதியில் சீனியின் அளவு திடீரென ஏறுவதில்லை என்பதையும் குறிப்பிடலாம். எனவே அவற்றில் அடிமையாகும் நிலை ஏற்படுவதில்லை.

இதிலிருந்து விடுபடுவது எப்படி?

முதல் வேலையாக உங்களது வீட்டிலிருந்து சீனியையும் சீனி சார்ந்த பொருட்களை வீசிவிடுங்கள். அலுமாரிகளிலிருந்து அகற்றுவதுடன் உங்கள் முயற்சி நின்றுவிடக் கூடாது. அவற்றை உண்பதில்லை என திடசங்கற்பம் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஓவ்வொரு நேர உணவையும் சரியான நேரத்தில் போதியளவாகவும் போசாக்கு நிறைந்ததாகவும் உட்கொள்ள வேண்டும். காலை உணவிலிருந்து இதை ஆரம்பிப்பது முக்கியம். இப்பொழுது பலர் வேலை அவசரத்தில் காலை உணவை தவிர்த்துவிட்டு பின்னர் பசி எடுக்கும் போது திடீர் உணவுகளை கடையில் வாங்கித் திணிக்கும் போதே இந்த பிரச்சனை ஆரம்பிக்கிறது. எனவே மாப் பொருள் புரதம் கொழுப்பு போன்ற போசணைகள் சரியான அளவில் உள்ள உணவுகளைத் தேர்ந்தெடுங்கள். ஏதாவது காய்கறி பழவகைகள் சேர்ந்திருப்பது அவசியம்.

போதிய நீர் அருந்துங்கள். தினமும் 6 கிளாஸ் நீர் அருந்துவது நல்லது. அவை இனிப்பூட்டப்பட்ட பானங்களாக இருக்கக் கூடாது.

பசி இருப்பது கூடாது. பசி இருந்தால் இனிப்பு சேர்ந்த உணவுகளுக்கான அவா அதிகரிக்கும். எனவே பிரதான உணவுகளுக்கு இடைப்பட்ட வேளைகளில் சிறு உணவுகள் உட்கொள்ளலாம். ஆனால் கேக் பிஸ்கற், ரோல்ஸ், பற்றிஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை தொடவும் கூடாது. பழங்களாகவோ காய்கறிகள் அதிகம் சேர்ந்தவையாகவும் இருப்பது நல்லது.

மாறாக வறுத்த கடலை, கச்சான் எண்ணெய் சேர்க்காத கரட் வறுவல் போன்ற ஏதாவது ஒரு இனிப்பற்ற போசாக்கு சிற்றுணவை தயாராக வைத்திருங்கள். வீட்டில் இருக்கும் போது மட்டுமல்ல வேலைக்கு போகும் போதோ, வெளியே செல்லும் போதோ பசி எடுக்கும்போது இவற்றை உண்ணுங்கள். கடை நொறுக்குத் தீனிகளை சாப்பிடவே வேண்டாம்.

தினசரி ஏதாவது உடல் உழைப்பில் ஈடுபடுங்கள் அல்லது உடற் பயிற்சி செய்யுங்கள். இது உங்கள் குருதியில் சீனியின் அளவை அதிகரிக்க விடாமல் தடுப்பதால் இனிப்பு மீதான நாட்டத்தையும் குறைக்கும். அத்துடன் மனம் மகிழ்ச்சியாக இருப்பதாலும் வெற்றுப் பொழுதுகள் இல்லாததாலும் இனிப்பை நாட வேண்டிய அவசியம் ஏற்படாது.

மனம் மகி;ழ்சியாக இருப்பது அவசியம். மறை சிந்தனைகளில் மூழ்காதீர்கள். தேவையற்ற உணர்வுச் சிக்கலகளில் மூழ்க வேண்டாம். மகிழ்சிசான பொழுதுபோக்குளில் ஈடுபடுங்கள்.

மனஅழுத்தம் இருந்தால் அதை மறக்க பலர் மதுவை நாடுகிறார்கள். உங்களைப் போன்ற இனிப்பிற்கு அடிமையானவர்கள் இனிப்பையே நாடுவார்கள். எனவே மனஅழுத்தத்தை தூண்டும் விடயங்களில் ஈடுபடாதீர்கள். உடற் பயிற்சி, நடைப் பயிற்சி, தியானம், யோகாசனம், மந்திர உச்சாடனம் போன்ற ஏதாவது செயற்பாட்டில் ஈடுபடுவதும் நன்மை தரும். அதே போல போதிய உறக்கமும் அவசியம்.

இக் கட்டுரையைப் படித்து முடித்துவிட்டு சும்மா இருக்காதீர்கள். உடனடியாக எழுந்து உங்கள் வீட்டிலுள்ள சொக்லேட், ஐஸ்கிறீம் முதற்கொண்டு எல்லா இனிப்புகளையும் குப்பைக் கூடையில் வீசுவதிலிருந்து உங்கள் முயற்சியை ஆரம்பியுங்கள். இனிப்பிலிருந்து விடுதலை நிச்சயம்.

டொக்டர். ஏம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

நிகழ்வாழ்வின் கோலங்களாக விரியும் கவிதைகள்
மணற்கும்பி

அட்டைப்படத்தில் உள்ள மணல் மேட்டையும் மணற்கும்பி என்ற நூலின் தலைப்பையும் பார்த்த உடனேயே நூலைப் படிக்க வேண்டும் என்ற ஆவலை அடக்க முடியவில்லை. ஆயினும் நூலாசிரியர் ரஜிதா இராசரத்தினம் நூலைத் தந்த போது நோயாளி அருகில் காத்திருந்ததால் அட்டைப்படத்தை ஆசையோடு மிருதுவாகத் தடவுவது மட்டுமே சாத்தியமானது.

நானும் வடமராட்சி மண்ணைச் சார்ந்தவன். வல்லிபுர தீர்த்தக் கடற்கரையிலும், மணற்காட்டிலும் நாகர்கோவிலிலும் பரந்து கிடந்த மணல் மேடுகளில் மாணவப் பருவம் முதல் இளைக்க இளைக்க ஓடி ஏறிய அனுபவங்கள் நிறையவே உண்டு. ‘நாசியேறக் கனிந்திருக்கும் நாவற்பழங்களின் சுவையையும்..’ அனுபவித்தவன் நான். ஆனால் அண்மைக் காலங்களில் சென்ற போது 70 வயதிலிலும் மூச்சிளைக்காது அங்கு நடக்க முடிந்தது. மூச்சளைக்காததற்கு காரணம் எனது நல்ல ஆரோக்கியம் அல்ல.

‘அம்மா சொன்ன அந்த
பனையளவு உயர மணல்கும்பி
இப்போது தேடியும்
கிடைக்கவில்லை…’

ஆம் தொலைத்துவிட்டோம் இயற்கை வளங்களை. மிஞ்சி இருப்பவற்றையும் தொடர்ந்தும் சூறையாடி அழித்துக் கொண்டே இருக்கிறோம்.

மணற்கும்பிகளை மட்டுமல்ல.

‘…ஆசையாய் ஊஞ்சல்
கட்டி ஆடிய – அந்த
வயதான வேப்பமரங்களும்
விறக்குக்காய் வெட்டுண்டு
போனதுவே…’

இயற்கையே நேசிப்பதும், ரசிப்பதும், அதில் ஊறித் திளைப்பதும் கவிஞனுக்கு கிடைத்த வரம். அதை அழிப்பது கண்டு கலங்கும் மனமும் அங்கிருக்கும். ரஜிதா இராசரத்தினம் அவர்களிடம் இத்தகைய பண்புகள் நிறையவே இருப்பதை மேற் கூறிய உதாரணங்களில் மட்டுமின்றி இன்னும் பல கவிதைகள் ஊடாக அறிந்து கொள்ள முடிகிறது. தான் ரசித்ததை இனிய வரிகளில் சொல்லி அந்த ரசனையை எங்களுக்கும் தொட்டவைக்கவும் முடிகிறது அவரால்.

இன்னொரு கவிதையில் பொலித்தீன் பாவனை பற்றி இவ்வாறு

‘மிச்ச எலும்போடு
இப்பகூட உக்கியிருக்காத
அந்த லஞ்ச்சீட் பையும்…’

ரசனையோடு நின்றுவிடாது பரம்பரை பரம்பரையாக கடத்தப்பட்டு வரும் மூடப் பழக்கவழகங்களை கண்டித்துத் திருத்தும் அறிவியல் பார்வையையும் இவரது கவிதைகளில் காண முடிந்தது.

‘வடக்காலயோ
கிழக்காலயோ
இல்ல தெற்காலயோ…’
‘அட கோதாரி விழுவாரே
பல்லி தன்ர பசியிலை கத்திது
அதின்ர வாய்
நீங்கள் பாக்காம – உங்கட
சோலிய பாருங்கோ …’

பொதுவாக கவிதை என்பது உணர்வு நிலை சார்ந்தது. சொல் ஆளுமை, கலைத்துவ வெளிப்பாடு ஆகியன கருத்து வெளிப்பாட்டை மேவிநிற்கும். ரஜிதாவின் படைப்புகளில் இரண்டிற்கும் இடையேயான ஒரு சமநிலையை பேணப்படுவதை அவதானிக்க முடிகிறது. ஆம் அவரது கவிதைகளில் வலுவான செய்தி இருக்கிறது. அதே நேரம் அவற்றை கலைநயத்தோடு வெளிப்படுத்த முனையும் கவிதா மொழியையும் காண்கிறோம்.

இந்தத் தேசம் இந்து சமுத்திரத்தில் மிதக்கும் தீவு அல்ல. குருதிக் கடலில் ருசி தேடும் யம தேசம். 79, 83, முள்ளிவாய்க்கால் பேரழிப்பு, ஏப்ரல் 21 தற்கொலைத் தாக்குதல்கள் என முடிவில்லாமல் இரத்ததாகம் கொண்ட நாடு.

ரஜிதாவின் குரலில் இவ்வாறு

‘தீச்சுடர் புசித்த தேசமடி
இரத்தவாடையுடனாய்
மூச்சையற்றோம்…
….. மலங்களோடு மாமிசமானோம்
பிண்டமறுந்த நர ஊன்களு10டாய்
ஏதோவென்றைப் பற்றி
குருதிக் கடலில்
எங்கோ வந்தும் சேர்ந்தோம்,…’

குருதிக்கடல் மட்டுமல்ல தொலைத்த உறவுகளும் ஏராளம். அவர்கள் விடும் கண்ணீர் பதவியில் இருப்போர் கண்களில் படுவதில்லை. தற்செயலாக அவர்கள் காதில் விழுந்தாலும் நிறைவேற்றப்பட்டாத பொய் வாக்குறுதிகள் மட்டுமே கிடைக்கும்.

காணமல் ஆக்கப்பட்ட தந்தையைப் பற்றிய ஒரு பிள்ளையின் நினைவுகள் இவ்வாறு .

‘மூன்று வயதில் பார்த்தது
முகங் கூட நினைவில் இல்லை..
தேடி கண்டு பிடிக்கக் கோரி
பல இடம் கொடுத்த நிழற்படங்கள் ஏராளம்’

ரஜிதாவின் கவிதை மொழி இயல்பானது. வாசகனை கைகோர்த்து கூடவே அழைத்துச் செல்வதாகவே இருக்கிறது. மருள வைக்கும் வெற்றலங்கார சொற் சோடனைகள் கிடையாது. திகைத்து ஒதுங்க வைக்கும் மொழியாடல் கிடையாது. வட்டார வழக்குகள் இயல்பாக கலந்து வருகின்றன.

வடமராட்சி கிழக்கு மண்ணின் பேச்சு வழக்கு கவிதைகளில் கலந்து வருவது யதார்த்த வாழ்வைப் பிரதிபலிப்பதுடன் சுகமான அனுபவமாகவும் இருக்கிறது. அளாப்பி, அப்பேக்க, எழுதேக்க, கோதாரி விழுவாரே, எணை, உண்ணான, பிசகாம,… எடுத்துக் காட்டிக் கொண்டே போகலாம். பக்கம் பக்கமாக நீளும்.

வாழ்க்கை என்பது ஒரு முடிவிலா போராட்டம். சவால்கள் பலவற்றை எதிர்கொள்ள நேரும். துன்பங்களும் இனிய நிகழ்வுகளும் சங்கிலித் தொடராய் முடிவின்றி நீளும். சலிக்காது வாழ்வது மட்டும் போதாது. அதை ரசிக்கவும் வேண்டும்.

ரஜிதா ஒரு இளம் பெண், இது அவரது கன்னி முயற்சி. ஆயினும் அவர் வாழ்வை ரசிக்கிறார். கடந்தவற்றில் திளைக்கிறார். நிகழ்வாழ்வை ரசனையோடு அனுபவிக்கிறார். எதிர்காலத்தை நம்பிக்கையோடு பார்க்கிறார். அவரது படைப்பாளுமையின் கூறுகள் கூடாக நாமும் வாழ்வை ரசிக்க முடிகிறது. மனித வாழ்வின் மறைந்திருந்த கோலங்கள் பற்றிய பரந்த பார்வையை நாவற்பழம் என இனிக்கும் மொழில் நாமும் பெறுகிறோம்.

இது அவரது முதல் நூல். புதிய வீச்சுக்களுடன் இன்னும் பல படைப்புகளை அவர் தர வேண்டும் என வாழ்த்துகிறேன். அதற்கான கீற்றுகளை இப்பொழுதே காண முடிகிறது.

ஜீவநதி ஜீலை 2019 இதழில் வெளியான கட்டுரை

எம்.கே.முருகானந்தன்

0.00.0

உடற்பருமன் அதிகமானவர்கள் ‘பேலியோ டயட்’ (Paleo diet)  மேற்கொண்டால் உடற்பருமன் குறைவதோடு, நீரிழிவு போன்ற நோய்களும் குணமாகும் என்கின்றார்கள் ,உண்மையா?

கே.விதுசன் கிளிநொச்சி

பதில்:- உங்கள் கேள்வியான பேலியோ டயட் டின் பயன்கள் பற்றி கருத்துக்கள் உண்மையா என்பதற்கு வரு முன்னர் ‘பேலியோ டயட்’ என்றால் என்ன என்பது பற்றிய விளக்கத்தை அளிப்பது அவசியம் என நினைக்கிறேன். அதுவே கேள்விக்கான விடையினை பெருமளவு தெளிவுபடுத்திவிடும் எனவும் கருதுகிறேன்.

‘பேலியோ டயட்’ என்பதை நேரடியாக தமிழில் மொழிபெயர்த்தால் பழைய கற்கால உணவு முறை எனலாம். ‘பேலியோ டயட்’ றை வேடுவர்களின் தேடல் உணவு, குகை மாந்தரின் உணவு போன்ற வேறு பெயர்களிலும் அழைக்கிறார்கள்.

அதாவது மனித இனமானது விவாசாயத்தை மேற்கொள்வதற்கு முன்னைய காலத்தில் மிருகங்களைக் கொன்று அதன் தசைகளையும், மீன்களையும், மரம் செடி கொடிகளிலுள்ள காய்களையும் பழங்களையும் விதைகளையும் உண்டது போன்ற உணவு முறை என்பதாகும். குறைந்தது 25 மில்லியன் முதல் 10.000 ஆண்டுகளுக்கு முன்னரான மனிதர்களின் உணவு முறை எனக் கொள்ளலாம். உண்மையில் அவர்கள் என்ன உணவு உட்கொண்டார்கள் என்பது பற்றி எங்களுக்குத் தெளிவாகத் தெரியாது. என்ன உட்கொண்டிருப்பார்கள் என நாம் எமக்குள்ள அறிவு மூலம் நாமே கற்பிதம் கொண்ட முறை எனலாம்.

விவசாயத்தை ஆரம்பிப்பதற்கு முற்பட்ட காலத்து உணவு முறை என்று கொள்ளும் போது அதில் அரிசி கோதுமை குரக்கன் சாமை போன்ற தானித வகைகள் எதுவும் இருக்காது. பால் தயிர் உப்பு சீனி போன்றவையும் இருக்காது. அதே போல எண்ணெய் பொரித்தல் வறுத்தல் போன்ற உணவு தயார்ப்பு முறைகளும் இருக்காது. கொழுப்பு என்பது மிருகங்களின் தசைகளிலிருந்து விதைகளிலிருந்தும் பெற்றதாக மட்டுமே இருந்திருக்கும்.

போசாக்கு ரீதியாகப் பார்க்கும் போது புரத உணவுகள் அதிகமுள்ளதும், மாப்பொருள் உணவுகள் மிகவும் குறைந்த அளவிவானதும், பொரித்தல் வதக்கல் போன்ற பதப்படுத்தல் முறைகள் அற்றதுமான உணவு முறை என்று கொள்ளலாம். கேக், பிஸ்கட், பற்றிஸ், ரோல்ஸ், ஐஸ்கிறீம் போன்ற நவீன கலோரிக் குண்டுகள் எதுவும் இந்த உணவு முறையில் நெருங்காது.

இயற்கையோடு இணைந்த, பதப்படுத்தல் முறைகள் அற்ற, புராதன மனிதனின் உணவு முறையைக் கைக்கொள்வதால் எடை அதிகரிக்காது, நீரிழிவு, கொலஸ்டரோல், இருதய நோய்கள், புற்றுநோய்கள் போன்ற நவீன நோய்களுக்கான சாத்தியம் குறைந்து ஆரோக்கியமாக வாழலாம் என்பதே இந்த உணவுமுறையைக் கைக்கொள்பவர்களின் நோக்கமாகும்.

இந்த உணவுமுறையின் நன்மைகள் என்று சொல்லப்படுவவை எவை?

அரிசி கோதுமை போன்ற மாப்பொருள் உணவுகளும் கொழுப்பு உணவுகள் நொறுக்குத் தீனிகள் தவிர்க்கப்படுவதால் உட்கொள்ளப்படும் கலோரியின் அளவு குறைவடையும். இதனால் எடை அதிகரிப்பது தடுக்கப்படும்.

உட்கொள்ளப்படும் உணவின் அளவு எவ்வளவு அவற்றின் கலோரிப் பெறுமானம் எவ்வளவு என்றெல்லாம் கணக்கிட வேண்டிய தேவை இல்லாததால் சுலபமான முறை. சங்கடங்கள் இன்றி சுலபமாகத் தொடரக் கூடிய முறை எனலாம்.

சொல்வதற்கு சுலபமாக இருந்தபோதும் பல நடைமுறைப் பிரச்சனைகள் இந்த பேலியோ டயட் முறையில் இருக்கின்றன.

முதலாவதாக கற்கால மனிதர்கள் எதைச் சாப்பிட்டார்கள் என்பது பற்றிய தெளிவான உறுதியான தகவல்கள் எதுவும் கிடையாது. எனவே நாம் இப்பொழுது கடைப்பிடிக்கும் இந்த உணவு முறையானது ஊகத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டது.

அடுத்து இதுதான் பேலியோ டயட் என்று உத்தியோகபூர்வமான வரையறுக்கப்பட்ட உணவு முறை எதுவும் கிடையாது. பலரும் தங்கள் கற்பனைக்கு ஏற்றபடி சொலிகிறார்கள்ளூ உட்கொள்கிறார்கள்.

உதாரணத்திற்கு சிலர் பால் தயிர் மற்றும் தானிய உணவுகளை முற்றாக ஒதுக்க வேண்டும் என்கிறார்கள். எனவே அது ஒரு சமபல வலுவுள்ள ஆரோக்கிய உணவாக இருக்குமா என்பது சந்தேகமே.

பொதுவாக இந்த உணவு முறையில் இறைச்சி உட்கொள்வது அதிகமாக இருக்கிறது. ஆனால் கொலஸ்டரோல் போன்ற பிரச்சனைகள் அதிகம் இருப்பதால் இன்றைய காலகட்டத்தில் அவற்றின் உபயோகத்தை அளவோடு வைத்திருக்குமாறே இப்பொழுது அறிவுறுத்தப்படுகிறது.

பண்ணைகளில் வளர்க்கப்படும் கால்நடை இறைச்சிகளைத் தவிர்த்து இச்சையாக மேயும் கால்நடை இறைச்சியையே உண்ண வேண்டும் என பேலியோ டயட் டின் சில தீவிர ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். இது நடைமுறைச் சிக்கலானதும் செலவை அதிகரிக்கச் செய்யும் விடயமாகவும் இருக்கிறது.

இந்த உணவுமுறையானது ஒரே மாதிரியாக இருப்பதாலும் பல்வேறு வகைகளையும் உள்ளடக்குவதில்லை என்பதால் பலருக்கு சிலகாலத்திற்குள்ளேயே சலிப்பை ஏற்படுத்திவிடும் என்பதும் உண்மையே.

நாம் கற்கால மனிதர்கள் போல உறுதியான உடல் உள்ளவர்களாக, நீரிழிவு, கொலஸ்டரோல், இருதயநோய்கள் போன்றவை வராமல் வாழவேண்டுமானால் அந்த  உணவு முறையை மட்டும் கடைப்பிடிப்பது போதுமா?

எங்கள் வாழ்க்கை முறை மாறிவிட்டது. அவர்கள் முழுநேர உடல் உழைப்புடன் வாழ்ந்தவர்கள். மாறாக இன்றைய மனிதர்கள் உடல் உழைப்பின்றி கதிரையே கதி என்று நாள் முழுவதும் கிடப்பவர்கள். போதிய உடல் உழைப்போ உடல் உழைப்போ இன்று கிடையாது.

எனவே அவர்களுக்கு என்று நம்பப்படும் உணவு முறை எமக்கு உதவுமா என்பது சந்தேகமே. அதே நேரம் ஓடியாடித் திரியாத உடல் உழைப்பற்ற இன்றைய வாழ்க்கை முறைக்கு இன்றைய வழமையான உணவு முறைகள் பொருத்தமானவை என்றும் சொல்ல முடியாது. நிச்சமாக மோசமானவையே.

எனவே பேலியோ டயட் முறையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். தீட்டாத தானியங்கள் பால் பாற்பொருட்கள் போன்றவற்றிற்கு இடம் அளிக்க வேண்டும். அத்துடன் தினசரி உடற் பயிற்சி அல்லது உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அத்துடன் சரியாக வரையறுக்கப்பட்ட ஒரேயொரு பேலியோ டயட் முறையை அறிமுகப்படுத்த வேண்டும்.

இறுதியாக ‘பேலியோ டயட்’ (Paleo diet)  மேற்கொண்டால் உடற்பருமன் குறைவதோடு, நீரிழிவு போன்ற நோய்களும் குணமாகும் என்கின்றார்கள் ,உண்மையா? என்ற கேள்விக்கு விடையாக எடை குறையும் என்பது நிச்சயம். நீரிழிவைக் கட்டுப்படுத்தவும் உதவும். ஆனால ஏற்கவே உள்ள நீரிழிவை முற்று முழுதாக குணமாக்குவது என்பது சாத்தியமி;ல்லை.

டொக்டர். ஏம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

0.00.0

கேள்வி- வயது கூடக் கூட உணவில் ஆர்வமில்லாமல் போவது ஏன்?

ச. பொன்னம்பலம், பரந்தன்

பதில்:- பசி குறைவதும், உணவில் நாட்டம் குறைவதும் வயது முதிர்வதின் ஒரு அம்சம் என்றே nhசல்லலாம். உடலியல் காரணங்களும் உளவியல் காரணங்களும் இருக்கலாம். இருந்தபோதும் இது எல்லா முதியவர்களையும் ஒரே விதமாகப் பாதிக்கிறது என்றும் சொல்ல முடியாது.

வயது முதிரும் போது அவர்கள் இளவயதில் இருந்ததுபோல ஓடியாடித் திரிவதில்லை. அவர்களது வேலைகள் குறைகின்றன. வேலைகள் செய்தாலும் அது இளவயதில் இருந்ததுபோல துடியாட்டமாக இருப்பதில்லை. இதனால் அவர்கள் செலவழிக்கும் சக்தியின் (கலோரி) அளவு குறைந்துவிடுகிறது. இதனால் பசி குறைந்துவிடுகிறது. புடிப்படியாக உண்ணும் உணவின் அளவு குறைந்துவிடும்.

முதுமையில் பலருக்கு பற்கள் விழுந்துவிடுகின்றன. இதனால் சப்பிச் சாப்பிட முடியாமல் போகிறது. பல்லுக் கட்டியிருந்தாலும் அவை பெரும்பாலும் உறுதியாக இருப்பதில்லை. இடைஞ்சலாகவே பல முதியவர்களால் பாரக்கப்படுகிறது.  இவற்றினால் உணவை இரசித்துச் சாப்பிட முடியாமல் போவதாலும் பலருக்கும் உணவில் ஆர்வம் கெட்டுவிடுகிறது.

உணவுக் கூறுகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொடுப்பது, மென்மையான உணவுகள், ஈரலிப்பான உணவுகள் போன்ற நடைமுறைகள் பற்பிரச்சனைக்கு தீர்வாக அமைய முடியும்.

வேறு சிலருக்கு வயதாகும் போது உணவு சமிபாடடைவதில் சில பிரச்சனைகள் ஏற்படுகின்றன. உதாரணமாக பாலிலும் பாற்பொருட்களிலுமுள்ள லக்டோஸ் என்ற பொருள் ஒத்துக்கொள்வதில்லை. பால், பால்மா, பால் நேர்ந்த பொருட்களான கேக், ஐஸ்கிறீம், பிஸகட் போன்றவற்றை அவர்களது உணவுக் கால்வாயால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இதனால் வயிற்றோட்டம், வயிற்றுப்; பொருமல் போன்ற அசௌகர்யங்கள் ஏற்படுகின்றன. சிலருக்கு ரொயிலட்றுக்கு போவற்கு முன்னரே மலம் கசிந்துவிடுவதுண்டு. பலருக்கு பிரச்சனைக்கான அடிப்படைக் காரணம் விளங்குவதில்லை. எனவே ‘சாப்பிட்டால் வயிற்றால் போகிறது’ என்று எண்ணி உணவுகளைத் தவிர்க்க முயல்வார்கள்.

‘அம்மா சாப்பிடிறா இல்லை. சத்துமா எழுதித்தாங்கோ என்று கேட்காத பிள்ளைகளே இல்லை. வேவையில்லாமல் சத்து மாக்களை கரைத்துக் கொடுத்தால் அவர்களது பசி மேலும் குறைந்துவிடுறது. ஏடை அதிகரித்து விடுகிறது. இதனால் அதிகரித்த உடையுடன் அவர்களால் அதிகம் நடக்க முடியாது கூடுதலாக உட்கார்ந்து விடுகிறார்கள். இது மேலும் எடையை அதிகரிக்கச் செய்வதுடன் பராமரிப்பவர்களுக்கு அவர்களது அதிகரித்த எடை சிரமத்தைக் கொடுகக்கிறது.

மற்றொரு முக்கிய காரணம் வயதாகும் மணம் சுவை போன்ற உணர்வுகள் மங்கிப் போவதாகும். உண்மையில் நாவில் உள்ள சுவையரும்புகளுக்கும் மணத்தை நுகரும் ஆற்றலுக்கும் நிறையத் தொடர்பிருக்கிறது. இவற்றின் நுகரும் ஆற்றல் வயதாகும் போது குறைவடைவதால் உணவுகளை இரசித்து ருசித்து உண்ண முடியாமல் போகிறது. இதனால் உணவில் நாட்டம் குறைவடைகிறது.

எனவே கூடுதலான மணம் சுவை போன்றவை சேர்த்து உணவு தயார்ப்பது உதவக் கூடும். இருந்த போதும் சுவைக்கென மேலதிக இனிப்பு உப்பு போன்றவற்றைச் சேர்ப்பது நல்லதல்ல. ஏனெனில் இவை அவர்களது வயதில் ஏற்படக் கூடிய பிரஸர், நீரிழிவு எடை அதிகர்ப்பு போன்ற பிரச்சனைகளைத் தீவிரமாக்கலாம். பதிலாக மணமும் சுவையுமுள்ள இவைவகைகள், பழங்கள், போன்றவற்றைச் சேர்க்கலாம், எலுமிச்சம் பழத்தின் புளிப்பு அவர்களுக்கு ஏற்றதாக இருக்கக் கூடும்.இயற்றையான சுவையூட்டிகளான ஏலம், கராம்பு கறுவா போன்றவையும் உதவலாம்.

இவற்றோடு பார்வைக் குறைபாடும் உணவுகளை ரசித்து உண்பதற்கு தடையாகலாம். வயதாகும் கற்றரட், மற்றும் விழித்திரைப் பாதிப்பு ஆகியவற்றால் பல முதியவர்களின் பார்வை தெளிவாக இருப்பதில்லை. இதனாலும் உணவில் ஆர்வம் குறைந்துவிடுகிறது.

முதியவர்கள் பெரும்பாலும் பல் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பர். உதாரணமாக நீரிழிவு, பிரஸர், மூட்டுவாதங்கள், அல்சைமர் நோய், மனச் சோர்வு போன்ற பலவிதமான பாதிப்புகள் இருக்கக் கூடும். இவற்றிற்காக பல மருந்துகளை தினமும் உட்கொள்வார்கள். இவற்றில் சில வாய்க்கசப்பு, ஓங்காளம், வாந்தி, வயிற்றுப்பொருமல், மலச்சிக்கல், வயிற்றோட்டம் போன்ற சிக்கல்கள் இருக்கலாம். இவையும் பசியின்மை, உணவில் ஆர்வமின்மை போன்றவற்றிற்னு காலாகலாம்.

‘ சரியான மலச்சிக்கல். சாப்பிடவே முடியுதில்லை’ என்று என்னிடம் பல முதியவர்கள் முறையிடுவார்கள். உண்மைதான் பல முதியவர்களுக்கு மலச்சிக்கல் இருக்கிறது. மலச்சிக்கலால் வயிறு பொருமலாக இருப்பதால் உண்ண முடிவதில்லை. மலச்சிக்கலுக்குப் பல காரணங்கள் இருக்கலாம். உணவு விரைவில் சமிபாடடையாமல் இருத்தல், போதிய உணவு உட்கொள்ளாமை, உண்ணும் உணவுகளிலும் நார்ப்பொருள் உள்ள உணவுகளைத் தவிர்த்து மென்னையான உணவுகளை நாடுதல், சில மருந்துகளும் காரணமாகலாம். மருந்து காரணமா என்பதையிட்டு மருத்துவருடன்  ஆலோசனை பெறவும்.

உணவு வேளையில் கூட இருந்து கதைத்துப் பேசி உண்பதற்கு யாருமில்லாததும் சிலருக்குப் பிரச்சனையாக இருக்கிறது. குடும்பமாக கூடியிருந்து சாப்பிட்டவருக்கு தனிமையில் இருந்து சாப்பிடுவது சலிப்படைய வைத்துவிடுகிறது. ‘சாப்பிட்டு என்ன..’ என ஆற்றாமை சூழ்ந்துகொள்கிறது. எதைச் சாப்பிட்டோம் எப்படிச் சாப்பிட்டோம் என்ற நினைவின்றி ஏதோ விழுங்கினோம் என்ற நிலை ஏற்படுகிறது சிலருக்கு.

தனிமை சிலருக்கு மனச்சோர்வு நோயை ஏற்படுத்தலாம். இதுவும் பசியை மழுங்கடிக்கும். எனவே கூடியிருந்து உணவு உட்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுப்பதும் உதவக் கூடும்.

பசியைத் தூண்டுவதற்கான சில மருந்துகள் உள்ளன. ஆனாலும் அவற்றை விட மேலே சொன்ன அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து நிவர்த்திப்பதே கூடுதலான பலன் அளிக்கும் என நம்புகிறேன்.

உண்ணும் உணவின் அளவு குறைந்தாலும் அது போசாக்குள்ளதாக இருப்பதில் அக்கறை போதிய கவனம் வேண்டும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

0.00.0

கூன் விழுந்தவர் பாடியவரின் கூன் பிரச்சனைகள்;

‘அரிது அரிது மானிடராதல் அரிது

மானிடராயினும் கூன் குருடு

செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது…’ என்று கூன் விழுந்த பாட்டி ஒளவையார் பாடினார்.

கூன் விழுதல் பொதுவாக முதுமையில் வருவது. ஆனால் ஒளவையார் கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது என்று பாடினார். அதாவது பிறக்கும் போதே கூன் விழுவதைப் பற்றிப் பாடியுள்ளார். பிறப்பிலேயே வரும் நோய் என்று பாடியுள்ளதாக பொருள் கொள்ளலாம். உண்மைதான். பிறப்பிலும் இளவயதிலும் கூட முதுகு வளையலாம். ஆனால் அவ்வாறு வருவது குறைவு. முதுமையில் வருவதே அதிகம்.

முள்ளந்தண்டில் வளைவானது முன்பின்னாகவும் வரலாம். பக்கவாட்டிலும் வரலாம். முன்பின்னாக வருவதை kyphosis என மருத்துவத்தில் சொல்வார்கள்.

அதிலும் முதுவயதில் மேல் முதுகில் வரும் வளைவான கூனை வயது காரணமான Age related Hyperkyphosis    என்பார்கள்.

இவர்களின் மேல் முதுகு முள்ளந்தண்டு எலும்புகள் வழமைக்கு மாறாக அதீதமாக முன்பக்கமாக வளைந்திருப்பதே கூனுக்கு காரணமாகும். மணிக்கணக்காக கணனியின் முன் உட்கார்ந்திருப்பவர்களுக்கும் இத்தகைய கூன் (Hyperkyphosis)  வர வாய்ப்புண்டு.

பக்கவாட்டு வளைவானது சாதாரண கண்களுக்கு கூன் தெரிவதுபோல வெளிப்படையாகத் தெரிவது குறைவு. பக்கவாட்டு வளைவை மருத்துவத்தில் (Scoliosis) என்பார்கள்,

நாளாந்தம் பல கூன் விழுந்த முதியவர்களைக் காண்கிறோம். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். மிகுந்த சிரமத்துடுன் கைத்தடி ஊன்றி அடியெடுத்து நடந்து வருவார்கள்.

உண்மையில் முதியவர்களில் 20 முதல் 40 சதவிகிதமானவர்கள் கூன் விழுதலால் பாதிப்படைகிறார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன. அதிலும் முக்கியமாக பெண்களே பாதிப்படைவது அதிகம். இந்த வளைவிற்கு பாதிப்புற்றவர்களது வழமையான இருக்கும் மற்றும் நிற்கும் நிலைப் போக்குகள் (Posture) காரணமாக இருக்கக் கூடும். பெண்கள் அதிகமாகப் பாதிப்படைவதற்குக் காரணம் மகப்பேறு, பாலுட்டுதல், மற்றும் போதிய கல்சியம் உட்கொள்ளமை காரணமாக இருக்கிறது.

இருந்தபோதும் முக்கிய காரணம் வயதாவதன் காரணமாக அவர்களது முள்ளெலும்பில் ஏற்படும் பாதிப்புகளும் தாக்கங்களும்தான். முக்கியமாக அவர்களது முள்ளெலும்புகளில் ஏற்படும் உடைவுகளும் சேதங்களும்தான். கூனல் விழுந்தவர்களில் மூன்றில் ஒருவருக்கு முள்ளந்தண்டு உடைவு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. வயதாகும் போது முள்ளெலும்பில் ஏற்படும் உடைவுகள் விழுந்து அடிபடுவதால் ஏற்படுவதல்ல.

வயதாகும் போது அவர்களின் எலும்புகளில் உள்ள கல்சியம் சத்தின் அடர்த்தி குறைகிறது. இதனால் முள்ளெலும்புகளின் நலிவடைகின்றன. உடலின் பாரத்தை சுமக்க முடியாமல் அவை நசிந்து உடைகின்றன. இவ்வாறு எலும்பு நலிவடைவதற்கு வயது மட்டும் காரணமல்ல. ஸ்டிரொயிட் வகை மருந்துகளை நீண்ட காலம் தொடர்ந்து உபயோகிப்பதும் காரணமாகிறது.

உதாரணத்திற்கு சொல்வதானால் ஆஸ்த்மாவுக்கு உபயோகிக்கும் சில வகை இன்ஹேலர்களில் ஸ்டிரொயிட் மருந்துகள் இருக்கின்றன. ஆனால் இவை மிகமிகக் குறைந்த அளவில் இருப்பதால் பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால் பலருக்கு இன்ஹேலர்கள் உபயோகிக்க விரும்பமில்லாததால் மாத்திரைகளை உபயோகிக்கிறார்கள். இம் மாத்திரைகளில் உள்ள ஸ்டிரொயிட் மருந்துகளின் அளவு மிக அதிகம். அதனால் எலும்பு சிதைவு மட்டுமின்றி நீரிழிவு உட்பட பல நோய்கள் வரலாம்.

முள்ளந் தண்டுகளை இணைப்பது வட்டமான மென்மையான இடைத்தட்டங்கள் (Intervertebral disc) ஆகும். வயதாகும் இவை ஈரலிப்பை இழந்து சுருங்க ஆரம்பிக்கும். இவையும் கூன் முழுவதை மோசமடையச் செய்யும். இடைத்தட்டம் சுருங்குவதால் உடலைத் திருப்புவது குனிவது, வளைவது போன்ற பல்வேறு செயற்பாடுகளும் சிரமமாக இருக்கும். அவற்றை முழுமையாகச் செய்வது இயலாதிருக்கும்.

பொதுவாக வலிகள் படுத்து ஆறுதல் எடுக்கும் போது தணிந்து விடும். ஆனால் முள்ளந்தண்டு வளைந்திருப்பதால் படுக்கும் போது அவை அழுத்தப்படுவதால் வலி ஏற்படுவது அதிகம்.

மிக அரிதாக ஆனால் முள்ளெலும்புகளில் என்புப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. இதுவும் முள்ளெலும்பை வளையச் செய்யலாம்.

சிறிய கூனல் உடல் ரீதியாக பெரிய பாதிப்புகள் எதையும் ஏற்படுத்துவதில்லை. இருந்தபோதும் கடுமையான கூனலானது பல்வேறு பாதிப்புகளைக் கொண்டுவரும்.

கூனலானது உடல் தோற்றத்தை முற்று முழுதாகப் பாதிப்பதால் உளரீதியாகவும் மனத்தாக்கம் ஏற்படலாம். தனது தோற்றம் பற்றிய தாழ்வுணர்ச்சி, விழுந்துவிடுவோமோ என்ற பாதுகாப்பற்ற உணர்வு, மற்றவர்களில் தங்கியிருக்க வேண்டி இருக்கிறதே கவலை போன்றவை ஏற்படக் கூடும்.  உள வலியுடன் உடல் வலியையும் இணைந்து கொள்ளும்.

அத்துடன் கடுமையான கூனலானது சுவாசப்பையை அழுத்தக் கூடும். அவ்வாறு சுவாசப்பையில் கடும் அழுத்தம் ஏற்படுமாயின் சுவாசித்தலில் சிரமங்களும் ஏற்படக் கூடும்.

அவ்வாறே கடுமையான கூனலானது குடல் மற்றும் உணவுத் தொகுதிகளையும் அழுத்தக் கூடும். அவ்வாறு அழுத்தினால் உணவை விழுங்குவதில் சிரமங்கள் தோன்றக் கூடும். அத்துடன் வயிற்று ஊதல் பொருமல் ஏப்பம், நெஞ்செரிப்பு போன்ற அறிகுறிகளும் தோன்றுவதற்கான சாத்தியங்கள் உண்டு.

கூன் விழுவது முள்ளம்தண்டு எலும்புகளைப் பாதிப்பதுடன் அவற்றை இயங்கவைக்கும் தசைத் தொகுதிகளையும் நலிவடையச் செய்யும். இதனால் நாற்காலியிலிருந்து எழும்புவது சிரமமாக இருக்கும். கைபிடி உள்ள கதிரையாயின் அவற்றை கைகளால் பற்றிக் கொண்டே எழ நேரும்.

அத்துடன் இயல்;பாக நடப்பதிலும் சிரமங்கள் ஏற்படும். நடப்பதில் உள்ள சிரமங்கள் காரணமாக விழுவதற்கான சாத்தியங்கள். இத்தகைய விழுகைகளால் வேறு எலும்பு முறிவுகளையும் ஏற்படுத்துவதற்கான சாத்தியங்கள் மிக மிக அதிகமாகும்.

இவ்வாறான பல்வேறு பாதிப்புகளால் மரணத்திற்கான சாத்தியம் முன்நோக்கி நகர்கிறது.

வயது மூப்பினால் ஏற்படும் கூன் பிரச்சனையைத் தீர்க்க சிகிச்சைகள் ஏதும் பயன்படுமா. அல்லது ‘வயசு போனவர்தானே. இனி வைத்தியம் செய்து என்ன பிரயோசனம். ஏதோ இதோடை சமாளிக்க வேண்டியதுதான்… ‘ என்று சொல்லி கைகழுவிட வேண்டியதுதானா?

கைவிட வேண்டியதில்லை. பல வழிகளில் முயலலாம். பலன் கிடைக்கும்.

சத்திரசிகிச்சைகள் உள்ளன. ஆனால் முதியவர்களில் அதற்கான சத்திரசிகிச்சைகள் சாத்தியமில்லை அத்தகைய சத்திரசிக்சிசைகளைத் தாங்குவதற்கான உடல் வலிமை இருக்காது என்பதுடன் மயக்க மருந்து கொடுப்பதிலும் சிக்கல்கள் இருக்கலாம்.

முள்ளந்தண்டு வளைவுகளை நிமிர்த்துவதற்கான பட்டிகள் (back braces) கிடைக்கின்றன. இவற்றை அணிவதால் ஓரளவு நிவாரணம் கிடைக்கும்.

மிக முக்கியமானது முள்ளந்தண்டுகள் அவற்றை தசைநார்கள் ஆகியவற்றைப் பலப்படுத்துவதற்கான பல பயிற்சிகள் உள்ளன. இவற்றைத் தொடர்ந்து செய்வதன் நல்ல பலன் கிடைக்கும் என்பதை ஆய்வுகளும் உறுதி செய்கின்றன. இத்தகைய பயிற்சிகளை உடற் பயிற்சி மருத்துவம் செய்பவர்களின் அறிவுறுத்தலுடன் செய்வது நல்லது.

சுவாசப் பிரச்சனைகள் இருந்தால் சுவாசப்பையின் ஆற்றலை அதிகரிப்பதற்கான சுவாசப் பயிற்சிகள் தேவைப்படும்.

இவ்வாறான பயிற்சிகள் மூலம் கூன் உள்ளவர்கள் தங்கள் பாதிப்புகளை ஈடு செய்து மகிழ்வோடு வாழ முடியும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

0.00.0

நான் கனவிலும் நினைத்திருக்க முடியாத ஒரு காரியம் சாத்தியமாயிற்று. அவுஸ்திரேலியா, மலேசியா, தமிழ்நாடு, வடஇந்தியா என முற்றிலும் எதிர்பாராத ஒரு குறுகிய பயணம் சில நாட்களுக்குள் நடந்தேறியது. சாதாரண மக்களை மட்டுமின்றி, சில உயர் அதிகாரிகளையும் பிரமுகர்களையும் கூட சந்திக்க முடிந்தமை என் அதிர்ஸ்டம்தான். அதற்குள் சற்று சுவார்சமான விடயமாக வெள்ளைக்காரி போல தோற்றமளித்த ஒரு இளம் பெண்ணின் கறுத்த முலைகளைக் பார்த்து அவள் ஒரு ஜிப்ஸிப் பெண் என்பதை உறுதிப்படுத்தவும் முடிந்தது.

இவை யாவும் நொயல் நடசேனின் உபயத்தில் அவரது கானல் தேசம் நாவல் ஊடாக கிடைத்தது. எமது விடுதலைப் போராட்ட வரலாற்றின் பின்னணியில் எழுந்த பல படைப்புகளைப் படித்திருப்பீர்கள். நானும் நிறையவே படித்திருக்கிறேன். நேரடி அனுபவங்களும் நிறையவே உண்டு.

துப்பாக்கி ரவைகளும் எறிகணைத் தாக்குதல்களும் விமானக் குண்டு வீச்சுகளும் இலக்கின்றித் தாக்கி அப்பாவி உயிர்களை காவு கொண்ட கொடுரமான அனுபவங்கள் மறக்க முடியாதவை. சிகிச்சை அளிக்க நேர்ந்ததும் உண்டு. நோயாளியாகாமல் மயிரிழையில் தப்பியதும் உண்டு. இதுவரை படித்த ஈழத்து விடுதலைப் போராட்டம் சம்பந்தமான இலக்கியங்கள் யாவுமே நாம் அனுபத்தில் அறிந்த விடயங்களையே அழகியல் முலாம் பூசிய இலக்கியப் படைப்புகளாக ரசிக்க நேர்ந்தது.

ஆனால் நடேசனின் படைப்பு முற்றிலும் மாறுபட்டது. அது பேசும் பொருள் புதிது, அதன் நிகழ்புலங்கள் வேறுபட்டவை. அது வரையும் காட்சிகள் அந்நியமானவை. ஆனால் அது சிந்தும் வார்த்தைகளும் உவமைகளும் எமது மண்ணின் மணம் வீசுபவை.

எமது இனவிடுதலைப் போராட்ட காலத்தில் யாழ் மண்ணிலும், பிற்கூற்றை கொழும்பிலுமாக வாழ்ந்தவன் நான். போரின் உள் ரகசியங்களை, திரைக்குப் பின்னாலான செயற்பாடுகளை ஏனைய பொது மக்கள் போலவே நானும் அறிந்தது இல்லை. குடாநாட்டில் வாழ்ந்த போது புலிகள் சொல்வதையும், கொழும்பில் வாழ்ந்தபோது இலங்கை அரசு சொல்வதையுமே உண்மை என நம்ப நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆனால் நடேசனின் கானல் தேசத்தைப் படித்தபோது நான் அறிந்திராத ஒரு புது உலகம் என் முன் விரிந்தது.

இவ்வாறெல்லாம் நடந்ததா? வெளிநாட்டு அரசுகள் எவ்வாறு இப்போரின் பின்நிலையில் இயங்கின. அவர்களது உளவு நிறுவனங்கள் எங்கெல்லாம், எவ்வாறு ஊடுருவி இருந்தன, எமது பொடியளின் சர்வதேச வலையடைப்பு எவ்வாறு இயங்கியது. உள்நாட்டிலும் எங்களுக்கு தெரியாமல் கண்கட்டி வித்தையாக, இப்படியான காரியங்களை எல்லாம் செய்தார்களா என ஆச்சரியப்பட வைத்தது.

பொடியள் விடுதலைப் போருக்கு தேவையான பணத்தில் ஒரு பகுதியை வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடமிருந்து எவ்வாறு திரட்டியனார்கள்,. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்கள் அதற்கு எவ்வாறு உதவின போன்ற விடயங்களையும் இந் நாவல் பேசுகிறது. வெளிநாடுகளில் சேகரிக்கப்பட்ட போது அவ்வாறு பணம் சேகரிப்பதற்கு உதவியவர்களுக்கு கொமிசன், இனாம் போன்றவை வழங்கப்பட்டதை அறிந்தபோது எமது இனப் போரும் ஒரு வர்த்தக சந்தையாக மாறியிருந்தது என்ற கசப்புணர்வே ஏற்பட்டது.

மக்கள் தங்கள் இனத்தின் விடுதலைக்காக என்று அவுஸ்திரேலியாவில் கையளித்த பணத்தில் பெரும் பகுதியை ஒருங்கிணைப்புக் குழுவின் சில சுயநலமிகள் எவ்வாறு தங்கள் தங்கள் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் வைத்து சொந்தத் தொழில் முயற்சிகளை ஆரம்பித்தனர் போன்ற தகவல்களையும் நாவல் பேசுகிறது.

அதே நேரம் அத்தகைய கயவர்களைக் கண்காணிப்பதற்கு விடுதலைப் போராளிகள் இரகசிய கண்காணிப்பாளர்களையும் வைத்திருந்தார்கள். அவர்களைத் தண்டிப்பதற்கு தாங்கள் நேரிடையகத் தலையிட விரும்பவில்லை. வெளிநாட்டு தமிழ் மக்களின் விரோதத்தை அது தூண்டிவிடக் கூடும் என்பதால் அந்த நாட்டு அரசாங்கத்திடமே அவர்களை இரகசியமாக மாட்டிவிடும் கைங்கரியங்கள் நடந்ததை அறிந்தபோது எவ்வளவு சூட்சுமமாக இவை செய்யப்பட்டன என்பதை சுவார்ஸமாக வாசித்தபோதும் எம்மிடையே இத்தகைய கயவர்களும் இருந்திருக்கிறார்களே என்று பெருமூச்சு விடத்தான் முடிந்தது.

எம் இனத்தின் விடுதலைப் போருக்கு உள்நாட்டில் பலவழிகளில் பணம் சேர்த்தை நாம் அறிவோம். உள்ளுரில் கூட்டங்கள் வைத்துச் சேகரிக்கப்பட்டபோது உணர்ச்சி வசப்பட்டு தாம் அணிந்திருந்த நகைகளையே மேடையில் வைத்துக் கழற்றிக் கொடுத்த சில பிரபலங்களின் நகைகள் மேடைக்குப் பின்னே திருப்பிக் கொடுக்கப்பட்டதாம். வேடமணிந்த தியாகங்கள் அவை.

இந்த நூலில் உங்களை கண்ணீரில் நீந்த வைக்கும் பகுதி துணுக்காய் வதை முகாம் ஆகும்.

“மேசையில் நீலம் பச்சையாக இரண்டு வயர்கள் ஒன்றாகப் பின்னப்பட்டு இருந்தன. இதுவே இங்கு பிடித்தமானதும் அதிகம் பாவிக்கப்படுவதுமான ஆயுதம் என அறிந்திருந்தேன். அதைவிட ஒரு கொட்டன் தடி, ஒரு சுத்தியல், மின்சார ஊழியர்கள் பாவிக்கும் ஒரு குறடு என்பனவும் இருந்தன. அவற்றைப் பார்த்ததும் எனது இருதயம் மேளமடித்தபடி வாய்வழியாக வருவதற்கு துடித்தது….

மேசையில் இருந்த பொருட்களைக் காட்டி உனக்கு எது பிடிக்கும். ..” என்ற அந்த நக்கலான ஆரம்ப வரிகள் அந்த முகாமின் நிஜமுகத்தைக் காட்டப் போதுமானவையில்லை என்றே நினைக்கிறேன். நீங்களே வாசிக்க வேண்டியவை அவை.

அங்கு தடுக்கப்பட்ட குற்றவாளிகள் மேலே இரும்புக் கதவால் மூடப்பட்ட கிணறு போன்ற குழிகளுக்குள் இறக்கப்படுவார்கள். 4-5 பேர் ஒரு குழிக்குள். சிலர் நீண்டகாலமாக இருந்ததில் ‘உடை உருவ அமைப்பில் ஆதிகால மனிதர்களைப் பார்ப்பதுபோல் இருந்தது’ மதியத்தில் மலம் கழிக்க கயிற்று ஏணியால் ஏற விடுவார்கள். சலம் கழிக்க சாராயப் போத்தல்கள். அதில் ஒருவருக்கு ‘தலையில் அடித்ததால் சித்தசுவாதீனமடைந்து இருந்தார். சிரங்கு வந்தது. உடையணிவதில்லை. வெளியே மலம் கழிக்க செல்லும்போது மட்டும் உடை அணிவார்.

‘ஒரு நாள் உடையற்று மலம் கழிப்பதற்காக மேலே ஏறிவிட்டார். அங்கிருந்த காவலாளி கன்னத்தில் அறைந்து மீண்டும் உள்ளே தள்ளிவிட்டான் குழிக்குள் விழுந்தவர் சுவரில் ஒட்டிய பல்லியாக கால் கைகளை விரித்தபடி நிலத்தில் முகத்தை புதைத்திருந்தார். நீண்டநேரமாக எழவில்லை. இது நான் பார்க்கும் இரண்டாவது சாவு என நினைத்தேன்…. எனது சாவும் இங்கே நடந்துவிடுமோ?’

உடல் ரீதியாக மட்டுமின்றி உளரீதியாகவும் கொல்லும் சித்திரவதை முகாம் என்றே சொல்ல வேண்டும்.

“நான் என்ன பிழை செய்தேன்? என்ற கேள்வியைக் கேட்டபடி இங்கு ஆயிரக்கணக்கானவர்கள் வந்தார்கள். பல வருடங்கள் இங்கு இருந்தவர்களுக்கு கூட இதற்குப் பதில் தெரியாது. பலர் செய்த தவறு என்ன என்று தெரியாமலே மரணமானர்கள்…”

இப்பொழுது, காணமல் போனவர்கள் எங்கே என்று கேட்டு அரசுடன் போராடிக் கொண்டிருக்கிறோம். அன்று அவ்வாறு காணமல் போனவர்களுக்கு யார் பதில் சொல்வது என்று ஒரு இடக்குக் கேள்வி உங்கள் மனத்தில் எழுந்தால் அதற்கு பதில் சொல்லப் போவது யார்?

இப்படி அடைக்கப்பட்ட ஒருவர் அதிசமாக விடுதலையாகிறார்.

“உங்களது பணம் சரியாக இருக்கிறதா என கணக்குப் பார்த்துக் கொள்ளுங்கள் என எனது பெட்டியைக் கொண்டுவந்து தந்தார்கள். அதில் எனது உடுப்புகள் மட்டுமின்றி பணமும் அப்படியே இருந்தன.”

அடாவடித்தனமாக நடந்தாலும் வலுக்கட்டாயமாக நிதி சேகரித்தாலும் பண விடயத்தில் விடுதலைப் புலிகள் எவ்வளவு நேர்மையாக இருந்தார்கள் என்பதை அவரது வாக்குமூலம் காட்டுகிறது,

இந்த நாவலின் மிக உச்ச கட்டம் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவைத் தாக்கிய கர்ப்பணி;யான தற்கொலைப் பெண் போராளி செல்வி பற்றியது. அவள் உண்மையில் கர்ப்பம் தரித்திருந்தாள் என்று நாவல் சொல்கிறது. இல்லை அது வேடம் மட்டுமே என சிலர் இந்நாவல் பற்றிய விமர்சனத்தில் சொல்கிறார்கள்.

அதை விடுங்கள். அவள் எவ்வாறு கர்ப்பணியானாள் என்ற கதை எமது வரலாற்றின் கரும்புள்ளியாகவே தெரிகிறது. நீங்களே படித்துப் பாருங்கள்.

ஆனால் கரும்புலியாக மாறிய அவளது தியாகம் மகத்தானது. அவளது பெண்மை மலினப்படுத்தப்பட்ட போதும், அவளது கணவன் என்றாகியவனால் உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் துன்பப்படுத்தப்பட்ட போதும் அவள் தான் கொண்ட இலட்சியத்திலிருந்து பின்வாங்கவில்லை. தமிழனத்தின் மீட்சிக்கு என நம்பி அவளும் அவளை ஒத்த பலரும் செய்த உயிர்த் தியாகங்கள் வரலாற்றின் அழிக்க முடியாத சுவடிகள் என்றே சொல்ல வேண்டும்.

அண்மைக் காலத்தில் இணையத்தில் அதிகம் பேசப்பட்ட படைப்புகளில இந்த நாவலும் அடங்குகிறது.  பல்வேறு விமர்சனங்கள் கானல் தேசம் பற்றி முன்வைக்கப்பட்டன. விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்களுக்கு சாத்தானின் நாற்ற வாந்தியாகக் கசந்தது. மாறாக புலிகளுக்கு எதிரானவர்களுக்கு இறைவேதம் போல இனித்தது. என் போன்ற சாதாரண வாசகர்களுக்கு சுவார்ஸ்மான நாவலாக இருந்ததுடன் எமது இனப் போரில் நாம் அறியாத பக்கத்தைக் காட்டும் சாளரமாகவும் இருந்தது.

கானல் தேசம்

காலச்சுவடு பதிப்பக வெளியீடு- டிசம்பர 2018

பக்கங்கள் 399

எம்.கே.முருகானந்தன்

ஞாயிறு தினக்குரலில் வெளியான கட்டுரை

0.00.0

கேள்வி- சத்திரசிகிச்சைக் கூடத்துக்குச் செல்வதற்கு 12 மணித்தியாலத்துக்கு முன் நீர் அருந்தக் கூடாது என மருத்துவர்கள் சொல்கின்றார்களே. இது எதனால்?

எஸ். கயூரன் யாழ்ப்பாணம்

பதில்:- சத்திரசிகிச்சை செய்வதற்கு முன்னர் மயக்க மருந்து கொடுப்பார்கள். சில விதமான சத்திரசிகிச்சைகளுக்கு மயக்க மருந்து கொடுப்பதில்லை. குறிப்பிட்ட பகுதியை மட்டும் மரக்கச் செய்துவிட்டு சத்திரசிகிச்சை மேற்கொள்வார்கள். மயக்க மருந்து கொடுத்தால் அவர் நினைவிழப்பார். தனக்கு என்ன நடக்கிறது என்பதை சற்றேனும் அறிய முடியாத நிலையில் இருப்பார்.

மயக்க மருந்து கொடுத்திருக்கும்போது எமது இச்சை செயற்பாடுகள் மட்டுமின்றி அனிச்சை செயற்பாடுகளும் தற்காலிகமாகச் செயற்படாது.

இதன்காரணமாக இரைப்பையில் உணவு அல்லது நீராகாரம் இருந்தால் அது வாந்தியாக வெளியேறலாம். அல்லது தொண்டைப் பகுதிக்குள் அல்லது களப்பகுதிக்குள் மேலெழுந்து வரக் கூடும். அவ்வாறு மேnலுழுந்து வரும் உணவு அல்லது நீராகாரம் சுவாசப்பையினுள் சிந்திவிடக் கூடும்.

உணவானது அவ்வாறு மேnலுழுந்து வரும்போது, அது சுவாசக் குழாய்களுக்குள் சென்று அவற்றை அடைத்துவிடும் ஆபத்து உண்டு. இதனால் சுவாசம் தடைப்பட்டு மூச்சடைக்கும் ஆபத்து உண்டு. அத்துடன் உணவு அல்லது நீராகாரம் சுவாசப்பையினுள் சென்றுவிட்டால் சுவாசப்பையில் கிருமித்தொற்று ஏற்பட்டு நியூமோனியாவாக மாறக் கூடிய ஆபத்து உண்டு. இவை இரண்டுமே உயிராபத்தைக் கொண்டுவரக் கூடியவை.

இத்தகைய ஆபத்துகள் ஏற்படுவதைத் தடுப்பதற்பாகவே மயக்க மருந்து கொடுக்கும் வேளையில் இரைப்பை வெறுமையாக இருக்க வேண்டும். எனவேதான் வெறும் வயிற்றில் இருக்கவேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கிறார்கள்.

இருந்தபோதும் நவீன மயக்க மருந்து கொடுக்கும் முறைகள் பாதுகாப்பனவை. சுவாசக் குழாய்களுக்குள் உணவு அல்லது திரவம் செல்வதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவேயாகும்.

எவ்வாறாயினும் வெறும்வயிற்றில் இருக்க வேண்டிய தேவை இருக்கவே செய்கிறது. ஆனால் எவ்வளவு நேரத்திற்கு இரைப்பையை வெறுமையாக வைத்திருக்க வேண்டும் என்பதில் வேறுபாடுகள் மட்டுமின்றி மாற்றுக் கருத்துகளும் உண்டு.

நீங்கள் சொல்லியபடி 12 மணிநேரம் எதுவும் உட்கொள்ளக் கூடாது என்று கட்டுப்பாடு விதிப்பது பழைய காலத்தில். இதுவே ஆண்டாண்டு காலமாக நிலவிவந்த முறையாகும். இன்றும் ஒருசிலர் இதைச் சொல்லக் கூடும்.

காலையில் 9 மணியளவில் சத்திரசிகிச்சை நடக்கும் என எதிர்பார்ப்பதால் இரவு உணவு உட்கொண்ட பின்னர் எதுவும் உண்ணவோ குடிக்கவோ வேண்டாம் எனச் சொல்லப்பட்டது.

ஆனால் இப்பொழுது அவ்வளவு நீண்டநேரம் வெறும் வயிற்றில் இருக்க வேண்டியதில்லை என்ற கருத்தே நிலவுகிறது. பொதுவாக 6 மணிநேரம் வெறும் வயிற்றில் இருந்தால் போதும் என்பதே தற்போதைய நடைமுறையாகும்.

குழந்தைகளின் இரைப்பை விரைவாகச் செயற்படுவதால் அவர்களுக்கு 4 மணித்தியாலயங்கள் வெறும் வயிற்றில் இருப்பது போதும் என்ற நடைமுறை உள்ளது.

நீண்ட நேரம் ஆகாரம் இன்றி வெறும் வயிற்றில் இருந்தால் பல பாதிப்புகள் ஏற்படக் கூடிய சாத்தியம் உண்டு. உதாரணமாக மயக்க மருந்தின் வேகம் தணிந்து நினைவு திரும்பும்போது தலையிடி, தலைச்;சுற்று, ஓங்காளம் போன்ற உடல் சற்று அசௌகர்யங்கள் ஏற்படலாம்.

அத்தோடு நீண்ட நேரம் நீராகரமும் அருந்தாமல் இருப்பதால் உடலில் நீரிழப்பு நிலை (Dehydration) ஏற்படக் கூடிய சாத்தியம் உண்டு. இதனால் நாளங்களைக் கண்டுபிடித்து அதனூடாக ஊசி ஏற்றுதல்,  பரிசோதனைகளுக்காக இரத்தத்தை எடுத்தல் போன்ற செயற்பாடுகள் மருத்துவர்களுக்கும் தாதியர்களுக்கும் சிரமமாகலாம்.

இவற்றைக் கருத்தில் கொண்டு அமெரிக்க மயக்க மருந்தூட்டும் மருத்துவ நிபுணர்கள் பல முன்னேற்றமான சிபார்சுகளைச் செய்துள்ளார்கள்.

அதன்படி மயக்க மருந்து கொடுப்பதற்கு இரண்டு மணித்தியாலயங்கள் முதல் வரை நீர், பால் சேர்க்காத வெறும் தேநீர்,பழநார்கள் அற்ற வெறும் பழச்சாறு, மென்பானம் போன்றவற்றை அருந்தலாம் எனச் சிபார்சு செய்கிறார்கள்.

வரட்டிய பாண், பால் தேநீர் போன்ற ஆகாரங்களை சத்திரசிகிச்சைக்கு ஆறு மணிநேரத்திற்கு முன்வரை உட்கொள்ளலாம்.

ஆனால் சற்று கனதியான உணவுகளை சத்திரசிகிச்சைக்கு எட்டு மணிநேரத்திற்கு முன்னரே நிறுத்திவிட வேண்டும். கனதியான உணவு என்னும்போது இறைச்சிரூபவ் பொரித்த வதக்கிய உணவுகள்ரூபவ் எண்ணெய் பட்டர் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

மேற்கூறிய அமெரிக்க மயக்க மருந்தூட்டும் மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டல்கள் எமக்கும் பொருந்தும் என்ற போதும் ஒவ்வொருவரும் அவரவரது மருத்துவர்கள் சொல்லும் கட்டுப்பாடுகளையே கடைப்பிடிப்பது அவசியம். ஒவ்வொரு தனிநோயாளரது தேவைகளை கருத்தில் கொண்டு; அந்து மருத்துவ சூழலுக்கு எற்றவாறே கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள்.

இருந்தபோதும் அவற்றில் ஏதேனும் இடைஞ்சல்கள் அசௌகர்யங்கள் இருக்குமாயின் மருத்துவருடன் கலந்தாலோசித்து மாற்றங்கள் செய்வதும் சாத்தியமே.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

0.00.0

இனமுரண்பாட்டு அரசியல் ஆவணங்களை பின்தள்ள வைக்கும் நாவல்

ஞானசேகரனின் ‘எரிமலை’

‘அந்த இளைஞர்களில் ஒருவன் மதிலால் ஏறி உள்ளே குதித்தான். வெளியே நின்ற இளைஞன் தன் தோளின்மேல் சாய்திருந்தவனைத் தூக்கி மதிலின் மேலால் அவன் உள்ளே இறங்குவதற்கு உதவி செய்துவிட்டு தானும் உள்ளே குதித்தான்.

டொக்டர் மகேசன் பதற்றத்துடன் ‘ஆர் நீங்கள் என …’

டொக்டர் மகேசனில் என்னை நான் இனங் இனங்கண்டு நாவலில் மூழ்கிப் போனேன்.

எத்தனை கெடுபிடியான நாட்கள். பதற்றமும் சஞ்சலமும் பயத்துடன் கூடவே ஆட்கொள்ள கையறு நிலையில் இயங்கிய பொழுதுகள். இயக்கங்கள் பல பன்றிபோல குட்டிபோட்டு தான் தோன்றித்தனமாக நடந்த காலம், துரோகி, காட்டிக்கொடுப்பவன் போன்ற முத்திரைகளுடன் தெருநாய் போல சுடப்பட்ட அப்பாவிகளின் குருதி வீதிகளில் செங்கம்பளம் போர்த்திய காலம். டிரக்குகளில் செல்லும் அரச ராணுவத்தினர் வீதியால் செல்லும் பொதுமக்களை அடித்து குருதி கக்கவைத்த பொழுதுகள். சுற்றிவளைப்புகள் கைதுகள் போன்ற அடாவடித்தனங்கள் மலிந்து கிடந்தன.

வங்கிக் கொள்ளையுடன் தான் கதை ஆரம்பிக்கிறது. எனது மருத்துவமனைக்கு அரை மைல் தூரத்தில் இருந்த புலோலி ப.நோ.கூ.ச வங்கியில் நடந்த கொள்ளை நினைவில் வந்தது. திகில் நிறைந்த பொழுதுகள்.

ஆம். மருத்துவர்கள் அதுவும் தனியார் வைத்தியர்கள் மத்தளம் போல இரு பக்க இடிகளையும் தாங்கிக் கொண்டு பணி செய்ய வேண்டிய ஆபத்தான காலகட்டமாக இருந்தது.

80 களின் நடுப்பகுதியில் யாழ் குடாநாட்டில் நிலவிய பதற்றமான அரசியல், பாதுகாப்புச் சூழலை மையமாக வைத்துப் புனையப்பட்ட நாவல்தான் ஞானசேகரின் எரிமலை. டொக்டர் மகேசன் போராளி ஒருவனின் காயத்திற்கு, இராணுவத்திற்கு தெரியாமல் மறைத்து வைத்து சிகிச்சை அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதும் அது தொடர்பான சம்பவங்களுமே நாவலின் முக்கிய கதைப் பொருளாகும்.

ஆனால் அதற்கு அப்பால் இனப்பிரச்சனையின் அடிமுடி தொடும் விரிந்த நாவல். ‘எரிமலை’ அனல் வீச ஆரம்பித்த வேளை. கதைச் சம்பவங்கள் குடாநாட்டிற்குள் நடப்பவையாயினும் நாடளாவிய அரசியல் பரிமாணம் கொண்ட படைப்பு.

இலக்கிய ஆர்வலர்கள் மட்டுமின்றி, எமது பிரச்சனையில் ஆர்வம் கொண்ட அனைவரும் படிக்க வேண்டிய நூல் என்பதில் ஐயமில்லை.

ஆயினும் இளைய தலைமுறையினர் கட்டாயம் படிக்க வேண்டியது. ஏனெனில் இளைஞர்கள் பலருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணவத்திற்கும் இடையேயான போர் பற்றிய செய்திகளும் அனுபவமும் மட்டுமே உண்டொழிய பிரச்சனையின் ஆணிவேரை கண்டுணரும் வாய்ப்புக் கிட்டியிருக்கவில்லை. இந்த நாவல் அவற்றை வெறும் தகவலாக அன்றி உயிரோட்டமுள்ள பாத்திரங்களாக, நாவலின் பேரங்கமாக, வரலாற்று ஆவணமெனத் தருகிறது. அதே நேரம் விறுவிறுப்பாக நகரவும் செய்கிறது. ஆரவாரமற்ற தெளிவான நடையுடன் சுவையாக வாசிக்கத் தூண்டுகிறது

உண்மையில் அவற்றை வெளிபடுத்தும் வண்ணம் சிருஸ்டிக்கப்பட்ட பல்வேறு பாத்திரங்கள் நாவலாசிரியரின் ஆக்கத் திறனுக்கு சான்றாக அமைகிறது. முக்கியமாக செல்லையா மாஸ்டர், மற்றும் சமூகவியல் பேராசிரியையான திருமதி விமல்சிறி, தொழில் முகாமைத்துவ ஆலோசகர் திரு விமல்சிறி ஆகியேருக்கு இடையேயான உரையாடல் முக்கியமானது. செல்லையா மாஸ்டர் தமிழ் அரசியலில் மிகுந்த ஈடுபாடும், சரித்திர ரீதியான அறிவும், அகிம்சை ரீதியான அணுகுமுறையும் கொண்டவர். தமிழர் விடுதலைக் கூட்டணி அபிமானி. திருமதி விமல்சிறி பேராசிரியர் மட்டுமல்ல. எழுத்தாளரும் கூட.

இந்த உரையாடல்கள் ஊடாக இனப்பிரச்சனையின் சரித்திரம் மட்டும் சொல்லப்படவில்லை. அதுவும் ஒரு பக்க பார்வையாகச் சொல்லப்படவில்லை என்பது நாவலின் பலமாக உள்ளது.. தமிழ் மக்களின் விடுதலை ஆர்வமும் அரசியல் சுதந்திர வேட்கையும் வெளிப்படுத்தப்படும் அதே நேரம் சிங்கள மக்களின் பார்வை எப்படி இருக்கிறது என்பதையும் அறிய முடிகிறது.

48ல் சுதந்திரம் கிடைத்த ஓராண்டுக்குள் கிழக்கு மகாணத்தில் பட்டிப்பளையை கல்லோயா வாக்கி சிங்கள குடியேற்றத்துடன் ஆரம்பித்த தமிழர் மீதான நில ஆக்கிமிப்பு முதல் தனிச்சிங்கள சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் என தொடர்ந்தமை எவ்வாறு தமிழர் மீதான ஒடுக்குமுறையாக விஸ்வருபம் எடுத்தது என்பதை நூலாசிரியர் மாஸ்டர் ஊடாக வரலாற்றுப் பதிவு செய்வது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு புறம், தீவிரவாத சிந்தனைகளை கொண்ட செல்லையா மாஸ்டரின் மகன் ஊடாக விடுதலைப் போராளிகளின் உணர்வுகள் வெளிப்படுத்தப்படுகின்றன.

வெற்றிலை குதப்பிக் கொண்டிருக்கும் ஒரு முதியவள்- கிழவி பாத்திரம்- மனதோடு ஒட்டிக் கொள்கிறாள். இராணுவத்தினரின் அத்துமீறலுக்கு எதிரான அவளது கோபமும், போராளியை மறைப்பதற்கு அவள் காட்டிய சமோசித புத்தியும் மவைக்க வைக்கிறது. அன்றிருந்த சாதாரண மக்களின் மனஉணர்வுகளுக்கு அவளை ஒரு முன்மாதிரியாகவும் சொல்லலாம் போலிருக்கிறது.

யதார்த்தத்தை மீறி உணர்வு பூர்வமாக சிந்திப்பதால் இனமுரண்பாடு விரிவடையுமே அன்றி மக்களுக்கு நன்மை தராது. எனவே கூடிய வகையில் நிதானமாகச் செயற்பட வேண்டும் என்ற நடுநிலைச் சிந்தனை டொக்டர் மகேசன் மற்றும் அவரது மைத்துனரான சந்திரன் ஊடாக வெளிப்படுகிறது.

இன்னொரு விதத்தில் பார்க்கும்போது நாவலின் நாயகனாக சந்திரனை அல்லது டொக்டர் மகேசனையே கொள்ள வேண்டும் என்ற போதும் இனப்பிரச்சனையே நாவலின் பாடுபொருளாக அமைந்துவிடுகிறது.

வாக்கு வேட்டை அரசியல்வாதிகளின் காலத்திற்கு முன்னர் தமிழ் சிங்கள் மக்களிடையே நெருக்கமான உறவு இருந்தது, அந்நிய ஆதிக்கத்திற்கு முற்பட்ட காலத்தில் இனத்துவேசம் இருந்தத்தில்லை. எல்லாளன் துட்டகமுனு போரனது ஆட்சி அதிகாரத்திற்கு ஆனதே ஒழிய இனரீதியானது அல்ல. அதனால்தான் எல்லாளனுக்கு சமாதி அமைத்து மக்களை வணக்கம் செலுத்தச் செய்தான் போன்ற விடயங்களையும் நாவல் உரையாடல் ஊடாக தொட்டுச் செல்கிறது.

தமிழ் சிங்கள் உறவானது திருமண ரீதியாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்ததை பற்றி மிக நுணுக்கமாக நூலாசிரியர் வெளிப்படுத்தியிருந்தார். இரசித்து வாசித்தேன். இலங்கையின் கடைசி மன்னன் விக்ரமராஜசிங்கன் ஒரு தமிழன் என்பது முதல் பல சிங்கள அரசர்களின் பட்டத்து ராணிகளாக தென்னிந்திய தமிழ் ராசகுமார்களே இருந்திருப்பதை நாங்கள் அறிவோம்.

அரச மட்டத்தில் மட்டுமல் சாதாரண மக்களிடையே கூட அத்தகைய மண உறவுகள் இருந்திருக்கின்றன.

‘எனது பாட்டியின் படம் ஒன்று வீட்டில் இருக்கிறது. அதில் அவர் தமிழ் பெண்களைப் போலத்தான் சேலை அணிதிருந்தார். சில நகைகள் கூட தமிழ்ப்பெண்கள் அணியும் நகையை ஒத்திருக்கின்றன…..’

‘ஒரு வேளை உங்கள் பாட்டி ஒரு தமிழ்ப் பெண்ணாகவும் இருந்திருக்கலாம்…’

ஆசிரியர் தன் கருத்தை வாசகர்களிடம் திணிக்காமல் பாத்திரங்களின் உரையாடல் ஊடாக  நாசூக்காக சொல்லியிருப்பதை கருத்தூன்றி வாசித்தால் நீங்களும் இரசிப்பீர்கள்.

அதே போல கதை நடக்கும் காலகட்டத்திலும் ஏன் இன்றும் கூட, சிங்கள் தமிழ் கலப்புத் திருமண உறவுகள் எவ்வளவு பிரச்சனை மிக்கதாக இருக்கிறது என்பதை வேறொரு இடத்தில் மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறார். சந்திரன் அனுலாவை வெளிப்படையாக வைபவரீதியாக திருமணமாகச் செய்யாமல் ரெஜிஸ்டர் ஆபீசில் செய்ய இருப்பதை சொல்வதன் மூலம் அவ்வாறு உணர வைக்கிறார்.

அரசாங்கமும் ஊடகங்களும் ஒரு பக்க பார்வையே கொடுப்பதால் பல சிங்கள் மக்களுக்கு இராணுவத்தினரின் கொடிய முகம் தெரிவதில்லை. கதாநாயர்கள் என்று அவர்களைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். நேரடியாக அனுபவித்தால்தான் அவர்களின் கொடுர முகத்தை திருமதி விமல்சிறி போல உணர்வார்கள்.

‘அவன் (இராணுவ வீரன்) சூட்கேசை அப்படியே போட்டுவிட்டு பக்கத்தில் இருந்த பிளாஸ்டிக் கூடையை கிளறத் தொடங்கினான். அப்போது சுடுதண்ணிப் போத்தல் கூடையிலிருந்து வெளியே நழுவி ரோட்டில் விழுந்து நொருங்கியது. அதனைக் கவனித்த திருமதி விமல்சிறிக்கு கோபம் பொத்திக் கொண்டு வந்தது.

‘இவர்களுக்கு கண் கூடத் தெரியாது போலிருக்கிறது. காட்டுமிண்டித்தனமாக நடக்கிறார்கள்.’ பட்டால்தான் புரிகிறது என்பதை நிகழ்வுகளுடாக சுட்டிக் காட்டுகிறார். நேரடியாகச் தன் கருத்தை வலிந்து புகுத்தவில்லை.

நோயாளிகளில் அக்கறை கொண்ட அவர்களது பிரச்சனைகளை புரிந்து நடக்கும் பாத்திரமாக டொக்டர் மகேசனை படைத்திருக்கும் அதே நேரம் அன்று நிலவிய மருத்துவ முறைகள், அன்று உபயோகிக்கப்பட்ட மருந்துகள் என பதிவு செய்யப்படிருப்பதை பார்க்கும் போது அது அந்த காலகட்டத்து நினைவுகளில் என்னை நீந்தித் திளைக்க வைத்தது.

ஞானசேகரன் ஒரு சிறந்த நாவலாசிரியர் என்பதை அவரது ஆரம்ப நாவலான குருதிமலையிலிருந்து அறிந்திருக்கிறோம். இந்த நாவல் ஒரு சிறந்த படைப்பாக உருவாவதற்கு அவரது எழுத்தாளுமையுடன், மருத்துவனாக பெற்ற அனுபவங்களும் உதவியிருக்கின்றன. ஆனால் அவை எல்லாவற்றிகும் மேலாக அவரது நிகழ்கால அரசியல் அறிவும் வரலாற்று ஈடுபாடும் இந்த நாவல் காலத்தைக் கடந்து நின்று நிலைக்க வைக்கின்றது.

இந்த நாவல் சிங்கள மொழிபெயர்ப்பில் வர இருப்பதாக அறிகிறேன். பக்கம் சாராமல் நடுநிலையோடு எழுதப்பட்டிருப்பதால், இப் பிரச்சனையில் அவர்களுக்கு அன்னியமான பல்வேறு முகங்களையும் அறிந்த கொள்ளவும் அவர்கள் பார்வையை விரிவடையவும் செய்யும் என்பதால் வரவேற்கத்தக்கது. துறைசார்ந்தவர்களை மட்டுமின்றி சாதாரண சிங்கள மக்களின் மனங்களிலும் மாற்றம் ஏற்படுத்தக் கூடிய படைப்பு.

நீங்களும் கட்டாயம் படியுங்கள். சுவையும் பயனும் இணைந்து கிடைக்கும் இத்தகைய படைப்புகள் அத்திபூத்தாற் போலத்தான் படைக்கப்படுகின்றன.

நாவலைப் படைத்த ஞானசேனரன் அவர்களுக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

எம்.கே.முருகானந்தன்

0.00.0