Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘அனுபவம்’

டாக்குத்தரின் தொணதொணப்புகள்

தனியே மருந்தெடுக்க வராதீர்கள்

பொலிந்த முகம், கனத்த மார்பு, உறுதியான கைகள், தடித்த உடல். நல்ல வலுவான உடலுள்ள பெண்தான்.

ஆனால் அவள் எனது அறைக்குள் நுழைந்த போதே முகம் சோர்ந்து நடை தளர்ந்திருப்பதை அவதானிக்க முடிந்தது. விழுந்துவிடக் கூடாது என்ற கவனத்துடன் மெதுமெதுவாகவே நடந்து வந்தாள். இருந்த போதும் அதை மீறிய உள்ளுறிய அவசரமும் அந்தரமும் இருப்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது.

அருகில் வந்தவள் திறப்புக் கோர்வையை வீசி எறிவதைப் போல மேசையில் போட்டுவிட்டு அப்படியே மேசையில் தலையைச் சாய்த்தாள்.

பக்கெனக் மணிக்கட்டைப் பற்றி அவளது நாடித்துடிப்பை கணி;த்தேன். சற்று வேகமாக துடித்துக் கொண்டிருந்தாலும் அதன் பருமானம் தளர்ந்திருக்கவில்லை என்பது திருப்தியளித்தது.

அதற்கிடையில் அவளது முகம் கை கால்களையும் அவதானிக்க முடிந்தது. சற்றுச் சிவந்து திட்டுத் திட்டான வீக்கங்கள் முகத்திலும் உடலிலும் பரந்து கிடந்தன.

‘சரியான சொறிவு. மேலெல்லாம் ஒரே கடி. பொறுக்க முடியவில்லை’ என்றாள். தொடர்ந்து ‘கோயிலுக்கு வந்தனான். கடி பொறுக்கேலாமல்தான் உங்களட்டை ஓடிவந்தனான்’

ஏதோ ஒவ்வாமை என்பது பார்த்த மாத்திரத்திலேயே புரிந்தது. ஆனால் காரணம் என்ன?

‘ஏன் என்ன நடந்தது’ என விசாரித்தேன்.

‘குளவி கடிச்சுப் போட்டுது. முகத்திலையும், முதுகிலையும் கையிலும் கடிச்சுப் போட்டுது’

‘எங்கை கடிச்சது கோயிலிலையோ’

வீட்டிலைதான் கடித்ததாம். அதன் பிறகு வெளிக்கிட்டு கோயிலுக்கு வந்த பிறகுதான் சொறி அரிப்பு தொடங்கியிருக்கிறது.

தலைச்சுத்து, சத்தி, மயக்கம் போல வருதல் போன்ற அறிகுறிகள் ஏதும் இருக்கோ என வினவியபோது அவை எதுவும் இல்லை என்று சொன்னாள். பிரஸரை அளந்து பார்த்தபோது அதுவும் சரியான அளவில் இருந்தது. நாடித்துடிப்பு அளவாக இருந்ததையும் மனதில் கொண்டு பார்த்த போது அவள் அபாய நிலையில் இருப்பதற்கான சாத்தியம் இல்லை. எனவே மருத்துவ மனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை இருக்காது.

அவளது ஒவ்வாமையைத் தணிப்பதற்கான ஊசி மருந்தை ஏற்றி மருந்துகளையும் கொடுத்து அனுப்பிடலாம் எனத் தீர்மானித்தேன்.

அப்பொழுதான் அவள் மேசையில் போட்ட திறப்புகள் ஞாபகம் வந்தது.

‘எப்படி வந்தனீங்கள் யாராவது கூட வந்தவையளா?’ என விசாரித்தேன்.

‘தனியத்தான் வந்தனான். ஸ்கூட்டியிலை’

திறப்பைக் கண்டதும் அதை ஏற்கனவே அனுமானித்திருந்த போதும். தனிய வந்ததின் சிக்கல்கள் மனதில் ஓட ஆரம்பித்தது.

குளவி கடித்தல் என்பது ஆபத்து நிறைந்தது. முகம், உதடு தொண்டை ஆகியன தடித்து வீங்கும். கை கால்கள் உடல் சொறியும். தலைச்சுற்றும் ஏற்படலாம்.

இரத்த அழுத்தம் திடீரெனக் குறைவது, தலை அம்மல் மயக்கம் ஆகியன ஆபத்தான அறிகுறிகளாகும். இவை தோன்றினால் மருத்துவமனையில் அனுமதித்தே சிகிச்சை அளிக்க வேண்டும்.

இவளுக்கு முகம், உதடு தொண்டை வீக்கம், உடற் சொறிவுடன் தலைச்சுற்றும் இருந்ததால்தான் எனது மேசையில் படுத்திருக்கிறாள்.

அந்தத் தலைச்சுற்றுடன் தான் ஸ்கூட்டி ஓட்டி வந்திருக்கிறாள். வரும்போது தலைச்சுற்று மோசமாகியிருந்தால் ஸ்கூட்டி விழுந்து ஆபத்தான நிலையாகியிருக்கும். உயிராபத்து கூட நிகழ்ந்திருக்கலாம்.

மருத்துவத்திற்கு செல்லும் போது தனியாக ஒருபோதும் செல்ல வேண்டாம். குளவி கடித்தல் போன்ற ஆபத்தான விசயங்களுக்குத்தான் இது பொருந்தும் என்றில்லை.

காய்ச்சல், தடிமன், பிரஸர், சீனி வருத்தம் போன்ற எதுவானாலும் உதவிக்கு யாரையாவது அழைத்துப் போவதே புத்திசாலித்தனமானது. அங்கு ஊசி போடக் கூடும், இரத்தம் எடுக்கக் கூடும், அல்லது வேறு பரிசோதனைகள் செய்யக் கூடும். சிலவேளை மருத்துவமனையில் அனுமதிக்கவும் கூடும்.

இத்தகைய நிலைகளை தனியே சமாளிக்க முடியாது. எனவே உதவி தேவை. யாரையாவது அழைத்துச் செல்லுங்கள்.

இந்தப் பெண்ணுக்கு ஊசி போட்டு சற்று நேரம் அவதானிக்க வேண்டி நேர்ந்தது. படுத்திருந்தாள். அவளது வீட்டிக்கு பல முறை போன் போட்டும் யாரும் எடுக்க வில்லை. நீண்ட நேரத்தின் பின்தான் தொடர்பு கிடைத்தது. வந்து அழைத்துச் சென்றார்கள்.

0.00.0

Read Full Post »

ஒரு குட்டிப் பையன் அப்பாவாகிறான்’சிறுகதையை முன்வைத்து
தி.ஞானசேகரன் படைப்பில் குழந்தைகளின் இயல்புகளும் குழந்தை உளவியலும்
எம்.கே.முருகானந்தன்

தி.ஞானசேகரன் ஒரு பன்முக ஆளுமை கொண்ட எழுத்தாளர். சிறுகதையும் நாவலுமே அவருக்கு ஆரம்பம் முதல் புகழ் சேர்த்துக் கொடுத்திருந்த இலக்கிய வடிவங்கள் என்ற போதும் கட்டுரைகள், பயணக் கட்டுரைகள், நூல் அறிமுகங்கள் விமர்சனங்கள் என்று பல்வேறு துறைகளிலும் தனது திறமையை பதித்திருக்கிறார். ஞானம் இதழாசிரியராக அவரது பங்களிப்பு மற்றொரு விதத்தில் விதந்து சொல்லக் கூடியது.

எவ்வாறு இருந்தபோதும் ஞானசேகரன் என்று சொன்னால் நல்ல சிறந்த சிறுகதை ஆசிரியன் என்பதே பலருக்கும் உடனடியாக நினைவில் வரும். கனமான கருவுள்ள படைப்புகள், எடுத்துக் கொண்ட கருவை சிதையவிடாது கதையை நடாத்திச் செல்லும் லாவண்யமும் தெளிவான நடையும் சிறந்த திருப்பங்களும் அவரது சிறுகதைகளின் சிறப்பிற்கு காரணம் எனலாம். நீண்ட காலமாக படைப்புலகில் இயங்கிவந்த போதும் பல்வேறு மாறுபட்ட உத்திகளை தனது படைப்புகளில் கையாண்டு இருப்பதால்தான் நீர்த்துப் போகாத எழுத்தாளராக இன்னமும் படைப்புலகில் வலம்வர முடிகிறது.

ஞானசேகரன் அடிப்படையில் ஒரு மருத்துவர். இருந்தபோதும் தனது படைப்புகளில் தன்னை ஒரு மருத்துவனாக முன்னலைப்படுத்தியது மிகவும் குறைவு என்றே கருதுகிறேன்.

அல்ஷேசனும் ஒரு பூனைக்குட்டியும், கடமை, கருவறை எழுதிய தீர்ப்பு போன்ற ஒரு சில கதைகளில் தன்னை மருத்துவனாக இனம் காட்டும் பாத்திரங்களை படைத்திருப்பதை அவதானிக்க முடிகிறது. இதில் கடமை ஒரு ஆரம்ப காலப் படைப்பு 1965 ல் கலைச்செல்வியில் எழுதியதாக இருக்க அல்ஷேசனும் ஒரு பூனைக்குட்டியும் இடைக்காலப் படைப்பாக 1996ல் வெளியாகி இருக்கிறது. கருவறை எழுதிய தீர்ப்பு 1997ல் தினக்குரல் பத்திரிகையில் பிரசுரமானது.

கணவனின் சுக்கிலத்தில் விந்தணுக்கள் இல்லாத போது முகம் தெரியாத மற்றொரு ஆணின் விந்தணுக்களை பெற்று செயற்கை முறையில் கருத்தரிக்க வைக்கும் சிகிச்சை முறை (Donor IUI) பற்றி கருவறை எழுதிய தீர்ப்பு பேசுகிறது. இக் கதையானது ஒரு மகப் பேற்று நிபுணரின் பார்வையாக இருந்த போதும், அதற்கு அப்பால் இனப் பிரச்சனையையும் அதையும் தாண்டிய நட்புணர்வு பற்றியும் பேசுகிறது. முடிவு எதிர்பாராதது. கதை முடிந்த பின்னரும் வாசகன் மனத்தில் பல கற்பனைகளை கருக்கொள்ள வைக்கும் திருப்பமாக அமைந்திருப்பது இதன் சிறப்பம்சமாகும்.

இருந்தபோதும் தன்னை மருத்துவனாக அடையாளப்படுத்தாமலே, ஒரு மருத்துவன் சமூகத்திற்கு சொல்ல வேண்டிய கருத்துகளை இன்னும் சில சிறுகதைகளில் சொல்லியிருப்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

கட்டறுந்த பசுவும் கன்றுக் குட்டியும் என்ற கதையானது தாய்பாலின் மகிமையை சொல்லாமல் சொல்கிறது. புpரச்சார நெடி சற்றும் அடிக்காமல் உணர்வுபூர்வமான கதையாக நகர்த்தியிருந்தாலும் தாய்பால் ஊட்டுவது பற்றி மேல்தட்டு நாகரீகப் பெண்களிடையே நிலவிவந்த தவறான கருத்துக்களை அழகாக அப்படைப்பில் சுட்டிக் காட்டுகிறார்.

அவருடைய சிறந்த படைப்புகளில் இதுவும் என்று பல விமர்சகர்கள் சுட்டிக் காட்டியிருப்பதை அவதானித்திருக்கிறேன். இக்க கதை சொல்லும் செய்திக்கு அப்பால் சிறந்த நடையுடன் கூடிய படைப்பாகவும் உள்ளது. அத்துடன் இது ஒரு குறியீட்டுப் படைப்பாக அமைவதையும் அவதானிக்க முடிகிறது.

இது போலவே அவரது உன்னத படைப்புகள் எனப் போற்றப்படும் அல்ஷேசனும் ஒரு பூனைக்குட்டியும், காட்டுப் பூனைகளும் பச்சைக் கிளிகளும் ஆகிய இரண்டும் கூட குறியீட்டுப் பாணியின் அமைந்த படைப்புகளே. இந்த இரண்டையும் குறியீட்டுப் பாணியில் எழுத முனைந்தமைக்கு, அரசு மற்றும் இராணுவத்திற்கு எதிரான கருத்துக்கைளச் வெளிப்படையாகச் சொல்ல முடியாத, அன்றைய பயங்கரமான சூழலும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை.

தமிழர் சார்பாக அரச படைகளுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தவர்கள் கொலை செய்யப்படுவதும் காணமால் போவதும் நித்திய கண்டமாக இருந்த நிலையில் தனது நியாயமான கருத்துக்களை பலமாக முன்வைப்பதற்கு குறியீட்டு வடிவத்தைத் தவிர வேறு தேர்வு அவருக்கு இருந்திருக்க முடியாது. ஆனால் கட்டாயத் தேவைக்காக புகுத்தப்பட்ட வடிவமாக இல்லாமல் சிறந்த கலைப் படைப்புகளாக அவை அமைந்திருந்தன. வெளியான நேரத்திலேயே இவற்றை நான் வாசித்து மகிழ்ந்ததுண்டு. இப்பொழுது மீள்வாசிப்பின் போதும் அந்த உணர்வு கெடவில்லை என்பதை மகிழ்ச்சியோடு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

விமர்சகர்களின் பாராட்டை அதிகம் பெறாதபோதும் சிறந்த ஒரு படைப்பாக நான் கருதுவது ‘ஒரு குட்டிப் பையன் அப்பாவாகிறான்’ என்ற சிறுகதை ஆகும். அந்த படைப்பு பற்றியே இந்தக் கட்டுரையில் முக்கியமாகப் பேச இருக்கிறேன்.

இது அவரது ஆரம்ப கால படைப்புகளில் ஒன்று. 1971 ம் ஆண்டு கதம்பம் சஞ்சிகையில் வெளியாகியிருக்கிறது. கூடவே இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் நடாத்திய அகில இலங்கை சிறுகதைப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் தட்டிக் கொண்டது.

முழுக்க முழுக்க சிறுவனின் பார்வையாகவே இக் கதை சொல்லப்படுவது ரசனைக்கு உரியதாக இருக்கிறது. ஞானசேகரன் படைப்புகள் வழமையாகவே நல்ல தமிழில் இருக்கும். இக்கதையும் அவ்வாறே இருக்கிறது. சிறுவனின் பேச்சு மொழியில் அமைந்திருந்தால் மேலும் சுவையாக இருந்திருக்கும்.

இந்தச் சிறுகதை என்னைக் கவர்ந்து கொண்டதற்குக் காரணம் அது ஒரு சின்னப் பையனின் வாழ்க்கை முறையையும், அவன் எதிர் கொள்ளும் உணர்வுச் சிக்கல்களையும், குழந்தை உளவியலையும் மிக அற்புதமாகச் சொல்கிறது. உண்மையில் இது ஒரு அனுபவம் சார்ந்த அற்புதமான பார்வை போலவே இருக்கிறது. சிறுவயதில் தான் பெற்ற அனுபவமாக இருக்கலாம். இருந்தபோதும் அனுபவம் என்பது சொந்த அனுபவமாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. பிறர் அனுபவத்தை தன் அனுபவமாக உணரும் உள்ளொளி படைத்தவனே சிறந்த எழுத்தாளனாக மிளிர முடியும்.

எனவே குழந்தப் பருவ அனுபவங்களுக்கு அப்பால், வளர்ந்த பின் குழந்தைகளுடன் பிழங்கும் போது அவதானித்து தனது கற்பனைக் குதிரையை தட்டிவிட்டதுடன், பிற்பாடு மருத்துவனாக பெற்ற அனுபவங்களும் சங்கமித்ததன் பலனாக பிறந்த படைப்பு எனக் கருத முடியும்.

ஒரு சின்னப் பையனின் நாளாந்த வாழ்க்கை ஒட்டத்தின் சித்தரிப்பாகவே கதை ஆரம்பிக்கிறது. இரவு நேரகாலத்துடன் படுக்கைக்கு செல்வது எல்லாப் பிள்ளைகளும் போலவே அவனது வழக்கமும் கூட. ஆனால் அன்று மட்டும் 9 மணியாகியும் அவனுக்கு தூக்கம் வரவில்லை.

காரணம் என்ன ?

திருமணமாகி கொழும்பு சென்றிருந்த அவனது அன்பிற்குரிய ஒரே அக்கா நீண்ட நாட்களுக்குப் பின்னர் அன்றிரவு ஊருக்கு திரும்பி வர இருக்கிறாள். அவளது வரவை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்பதால்தான் தூக்கம் அவனை அண்டவில்லை. சாதாரணமாக போகிற போக்கில் சொல்லிப் போகிற ஒரு தகவல் போல முதல் வாசிப்பில் தோன்றலாம் ஆயினும் நிதானமாகப் படிக்கும் போது, குழந்தைகளின் ஒரு இயல்பான குணத்தை கதாசிரியர் வெளிப்படுத்துவதை உணர முடிகிறது.

Curiocity என்று சொல்லப்படும் ஆர்வம் என்ற குண இயல்வை அந்தச் சம்பவம் வெளிப்படுத்துகிறது.
புதியவற்றை அல்லது பிறர் விடயங்களை அறிவதில் ஆர்வம் எல்லோருக்கும் இருக்கவே செய்யும். ஆயினும் குழந்தைகளிடத்தில் இந்த ஆர்வம் அதிகமாகவே இருக்கும்.

‘இரவு எட்டு மணியாகிவிட்டால் எனக்கு நித்திரை வந்து விடும். சாப்பிட்டுவிட்டு படுத்துவிடுவேன். …. மணி ஒன்பது அடித்தது. ஏனக்கு நித்திரை வரவில்லை. … யாழ்தேவி ரெயிலில் அக்கா வருவா…. அக்காவைப் பாரக்க எனக்கு ஆசையாக இருக்கிறது..’

எந்தவித ஆலோபனங்களும் இன்றி மிகவும் இயல்பாக பையனின் ஆசையென அவனது ஆர்வத்தை அவனது வார்தைகளிலேயே ஞானசேகரன் சொல்லியிருக்கிறார்.
இந்த சம்பவத்தில் மட்டுமின்றி திருமணமான பின்னர் தன்மீதான அக்கறை குறைந்து புது வரவான அத்தான் மேல் அவளது அக்கறை விழுவதை அந்தச் சிறுபையன் கவலையோடு கூடிய ஆர்வத்துடன் அவதானிக்கிறான்.

அதே போல அக்காவிற்கு குழந்தை பிறந்த பின்னர் அவளது கவனமானது கணவனிலிருந்து குறைந்து குழந்தை மேல் அதிகம் விழுவது போன்ற சம்பவங்களை கதாசிரியர் விபரித்து செல்கையில் அந்தப் பையனின் கவனங்கள் எங்கெங்கு விழுகின்றன என்பதை உணர முடிகிறது. இவை யாவுமே குழந்தைகளின் துருவிப் பார்க்கும் ஆர்வ இயல்பை (Curiocity) வெளிப்படுத்தி இருக்கின்றன.

குழந்தைகளில் அவதானிக்கக் கூடிய மற்றொரு இயல்பு அதிகமான சுயமரியாதை உணர்வு (self esteem) எனலாம். தன்னைப் பற்றி தானே உயர்வாக நினைத்துக் கொள்ளும் இயல்பை பெரும்பாலான குழந்தைகளில் காணலாம். மாறாக தாழ்வுணர்ச்சி உள்ள குழந்தைகளும் இல்லாமல் இல்லை. குழந்தைகளுக்கு மாத்திரமின்றி பெரியவர்களுக்கும் சுயமரியாதை உணர்வு இருக்க வேண்டும். நாளாந்த வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்களுக்கு முகம் கொடுத்து முன்நகர்வதற்கு இது அவசியமாகிறது.

குழந்தைகளிடத்தில் சுயமரியாதை உணர்வை பெற்றோர்கள் வளர்க்க வேண்டியதன் அவசியத்தை நவீன குழந்தை உளவியல் வலியுறுத்துகிறது. ஏனெனில் தங்களது பலங்களையும் பலவீனங்களையும் உணர்ந்து தம்மைப் பற்றிய தெளிவான நல்லப்பிராயத்தை கொண்டிருக்கும் குழந்தைகளால்தான் எதிர்மறை அழுத்தங்களை இலகுவாகக் கையாளவும், முன்னேற்ற பாதையில் நகரவும் முடியும்.

அதே நேரம் அது போலியான வரட்டுத் தற்பெருமையாக மாறக் கூடாது என்பதும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய மற்றொரு விடயமாகும்.
அக்கா தன்னைக் கண்டவுடன் தன்னை அணைத்துக் கொள்வாள், தனக்குத்தான் பரிசுப்பொருட்கள் வாங்கி வருவாள். தனக்கு மட்டுமே பிஸ்கற் தருவாள். தன்னை அணைப்பாள், தன்னோடு கூடப் படுப்பாள் என ஞானசேகரன் விபரித்து செல்கையில் அந்தப் பையன் தன்னைப் பற்றிய உயர் உணர்வை கொண்டிருப்பதை நாம் புரிந்து கொள்கிறோம்.

‘அக்காவுக்கு என்னிடம் நல்ல விருப்பம். கலியாணஞ் செய்யிறதுக்கு முன்னம், அக்கா எனக்கு ஒவ்வொரு நாளும் குளிக்கவாத்துவிடுவா, தலை சீவிவிடுவா. இரவில் பாடமும் சொல்லித் தருவா’ என்ற வசனத்தை உதாரணம் காட்டலாம்.

‘நாளைக்கு அக்கா என்னோடு கதைச்சாலும் நான் அவவோடை கதைக்க மாட்டன். அவவுக்கு இப்ப பெரிய எண்ணம். கலியாணம் முடிச்ச பிறகு கண்கடை தெரியேல்லை. அவ என்னோடை கதைக்காட்டில் எனக்கென்ன? எனக்கொண்டும் குறையமாட்டுது’ என்று கதாசிரியர் சித்தரிக்கையில் அவனது சுயமரியாதை உணர்வு சீற்றமாக வெளிப்படுகிறது.

இருளைப் பற்றிய பயம் (fear of darkness) என்பது பெரும்பாலான குழந்தைகளிடம் இருக்கும் மற்றொரு உணர்வாகும். அவர்களது கற்பனை திறன் வளர்ச்சியடையும் பருவத்திலேயே இது கூடுதலாக ஏற்படுகிறது. பேய்கள் பூதங்கள் போன்ற கற்பனை உலகிற்கும் நிஜ உலகிற்கும் இடையேயான எல்லைக் கோட்டை புரிந்து கொள்ள முடியாத பருவத்து உணர்வு இது எனலாம். இதனால் அரை இருளில் தெரியும் நிழல் கூட மூன்று தலையுள்ள பயங்கர மிருகமாக அவர்களுக்கு தோன்றி பீதியைக் கிளப்பக் கூடும்.

இருள் சூழ்ந்த சூழலில் சிறுவர்களுக்கு கவனச் சிதறல்கள் (distractions) ஏற்படுவதற்கான சந்தர்பங்கள் குறைவாக இருப்பதே இதற்குக் காரணமாகும். ‘கற்பனைகள் தெறிகட்டிப் பாய்வதனால் பகலில் தன்னை தளும்பவிடாது தற்காக்கக் கூடிய குழந்தை கூட இருளில் பாதிக்கப்படக் கூடும்’ என்று Southern Illinois University யில் துணைப் பேராசிரியரான Dr.Dobbins கூறுவதை இவ்விடத்தில் நினைவுபடுத்தலாம்.

‘அம்மா அம்மா அக்கா வந்திட்டா.’ ஏன்று கூவிக்கொண்டு சந்தோசத்துடன் துள்ளிக் குதித்து படலையடிக்கு ஓடுகிறேன். ‘…. மற்ற நாட்களில் இருட்டிவிட்டால் நான் வீட்டுக்கு வெளியே வரவும் மாட்டேன். இருட்டைக் கண்டால் எனக்கு சரியான பயம்’

கதையில் வரும் இந்தச் சிறு பகுதியானது பையனின் இருள் பற்றிய பயத்தைச் சுட்டிக் காட்டுவதுடன் அக்காவின் வருகை பற்றிய அவனது ஆர்வமானது அந்தப் பயத்தையும் தாண்டிச் செல்லும் கவன மாற்றமாக மாறுவதையும் புரிய வைக்கிறது.
குழந்தைகளில் காணும் மற்றொரு இயல்பை பின் வரும் பராவில் உணர முடியும்.

‘அக்கா ஏன் என்னோடு கதைக்கவில்லை. இருட்டில் நான் நிற்பதை கவனிக்கவில்லையோ? அக்காவுக்கு தெரியும்படியாக முன்னுக்கு போகிறேன். அக்கா இப்பவும் என்னோடு கதைக்கவில்லை. …. (அக்கா) கையில் இருக்கும் பார்சலை வாங்கிக் கொள்வதற்காக நான் கையை நீட்டுகிறேன். அக்கா ஒன்றும் பேசாமல் பார்சலைக் கொடுக்கிறா’

கண்ணுக்கு தெரியும் படி முன்னுக்கு போதல், பார்சலை வாங்குதல் ஆகியவை அக்காவின் கவனத்தை தன்மீது திருப்பும் attention seeking behavior  எனலாம். இது போன்ற செயற்பாடுகள் குழந்தைகளில் இயல்பானது தான். இதைத்தான் ஞானசேகரன் தன் சிறுகதையில் எடுத்துக் காட்டியுள்ளார்.

ஆனால் இந்தப் பழக்கமானது ஒரு குழந்தையில் அடிக்கடி அல்லது எப்பொழுதும் நிகழ்ந்தால் அது சுற்றியுள்ளவர்களுக்கு மிகப் பெரிய தொல்லையாகி விடுவதும் உண்டு. அழுது அடம்பிடித்து கவனத்தை இழுப்பது மட்டும் பிரச்சனை அல்ல. மகிழ்ச்சியூட்டும் செய்கைகளாலும் தொடர்ந்து கவனத்தை ஈர்க்க முயல்வது சிக்கலானது.

கண்டுகொள்ளாமல் விடுவதோ கண்டிப்பதோ இதைத் திருத்தும் வழியல்ல. ‘இப்பொழுது நான் வேலையாக இருக்கிறேன். இதை முடித்த பின்னர் உனது வேலைக்கு வருகிறேன்’ எனத் தன்மையாகச் சொல்லி அப்பழக்கத்தை குறைக்க முயல வேண்டும்.
ஞானசேகரனின் கதையில் வரும் இந்தப் பையன் கவனத்தை ஈர்க்க முயன்ற போதும் அதைத் மற்றவர்களுக்கு தொல்லை தரும்படியாக நீடிக்கவில்லை. அவன் தனது மனத்திற்குள் வேதனைப்படுவதாகவே கதையில் வருகிறது.

பொறாமை (jealousy) உணர்வு எல்லா மனிதர்களிலும் காணப்படக் கூடிய ஒரு உணர்வுதான். என்றாலும் குழந்தைகளில் பொதுவாக அதிகம் காணப்படுவதுண்டு. இது பல காரணங்களால் ஏற்படலாம்.

உதாரணத்திற்கு ஒரு புதிய குழந்தை குடும்பத்தில் பிறக்கும்போது குடும்பத்தினர் அனைவரதும் அக்கறை மூத்த பிள்ளையிலிருந்து, குட்டிக் குழந்தை மேல் விழுவது மூத்த பிள்ளையில் பொறாமையை தூண்டி விடலாம். அந்தப் பொறாமையானது கடுமைiயான எதிர் விளைவை ஏற்படுத்தலாம் அல்லது மென்மையான செய்கைகளாலும் வெளிப்படக் கூடும். தனது தங்கை அல்லது தம்பி மேல் மற்றவர்கள் அன்பு பகிரப்படுவதை பொறுக்க முடியாத பிள்ளைகள் தனது சகோதரம் மீது கோபம் கொள்ளவது, பேசுவது, அடிப்பது, நக்கலடிப்பது அல்லது துன்பம் கொடுப்பதை வாழ்க்கையில் நீங்களும் அவதானித்தே இருப்பீர்கள்.

இந்தக் கதையில் பையனின் மீதான அக்காவின் அக்கறை குறைந்து, அவளது கவனம் முழுக்க கணவன் மேலே விழுகிறது.

‘முந்தியெண்டால் அக்கா என்னுடன்தான் படுப்பா …. இண்டைக்கென்றாலும் நான் அக்காவுடன் படுக்கலாமென்று ஆசையோடு இருந்தேன். அக்காவுக்கு நான் ஒருத்தன் இருக்கிறன் என்ற நினைப்பே இல்லைப் போல …’

‘அத்தானின் மேல் எனக்கு கோபங் கோபமாக வருகிறது. அவருக்கு பெரிய நடப்பு..’ என விபரித்து செல்வதானது அந்தச் சிறுவனுக்கு தனது அத்தானில் ஏற்படும் பொறாமை உணர்வை எடுத்துக் காட்டுகிறது.

குழந்தைகளில் ஏற்படும் மனமுறிவுகளையும் கவலைகளையும் கவனத்தில் எடுக்காது விடக் கூடாது. இல்லையேல் அவர்கள் தாங்கள் உதாசீனப்படுத்துவதாக உணர்வர். இது அவர்களது மனவளர்ச்சியையும் எதிர்கால வாழ்வையும் பாதிக்கக் கூடும். பெரியவர்கள் பிள்ளைகளது மனமுறிவுகளை அவதானித்து அவற்றைச் சீர் செய்ய வேண்டும். Rupture and Repair என இதைக் குறிப்பிடுவர்.

‘ஏனடா உனக்கு என்னோடை கோவம்…’
ஏன்னால் பேச முடியவில்லை. அழுமை அழுகையாக வருகிறது. கண்களில் நீர் முட்டி கன்னங்களில் வழிகிறது.

அக்கா என்னை தன்னுடைய மார்போடு அணைக்கிறா. நான் அக்காவுடைய நெஞ்சிலே முகத்தை புதைத்துக்கொண்டு விம்மி விம்மி அழுகிறேன்…’

அந்தச் சிறுவனில் ஏற்பட்ட மனத்தாங்கலை, அவனை அணைத்து வைத்து ஆதரவுடன் பேசுவதன் மூலம் அக்கா சரிசெய்கிறாள். மனமுறிவு ஆற்றுப்படுத்தப்படுகிறது.

உளவியலில் இன்று பேசப்படும் ஆற்றுப்படுத்தல் (counseling) சிகிச்சை முறையை அக்கா அன்றே செயன்முறையில் காட்டிவிட்டமையானது ஞானசேகரனின் உன்னத படைப்பாற்றலின் வெளிப்பாடாகும்.

ஒரு குழந்தையின் உணர்வுகளை மிக நுட்பமாக பதிவு செய்தது மாத்திரமின்றி அதில் ஒளிந்திருக்கும் குழந்தைகளின் உளவியலை மிகச் சிறப்பான முறையில் கலைப்படைப்பாக்கிய ஞானசேகரன் பாராட்டுக்குரியவர்.

இது அவரது முப்பதாவது வயதுப் படைப்பு. இன்று அகவை 75ல் பேரக் குழந்தைகளுடன் கூடிக் குமாளமடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் குழந்தைகள் பற்றிய அவரது பார்வை மேலும் விரிந்திருக்கும். இன்று அவர் குழந்தைகள் பற்றி எழுதினால் எவ்வாறு இருக்கும் எனக் கற்பனை பண்ணிப் பார்ப்பது சுகமாக இருக்கிறது.

எம்.கே.முருகானந்தன்

தி.ஞானசேகரன் அவர்களது 75 பிறந்ததின விழா மலரில் சென்ற வருடம் எழுதிய கட்டுரை

0.00.0

Read Full Post »

ஜீவநதி சஞ்சிகையில் நேர்காணல்

1)    ஈழத்து இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டுள்ளவர் நீங்கள். உங்களின் குடும்பப் பின்னணி, கல்விப் பின்னணி என்பன பற்றிக் கூறுவீர்களா?

DSC00484-001

ஐந்து பேர் கொண்ட குடும்பத்தில் மூத்தவன் நான். அப்பா புகையிரத் திணைக்களத்தில் உதவி அட்சகராக இருந்தவர். அம்மா எல்லா அம்மாக்களையும் போலவே அன்பையும் பாசத்தையும் ஒழுக்கத்தையும் விதைத்தவர். பருத்தித்துறையில் உள்ள வியாபாரமூலை நான் பிறந்த கிராமம். அமைதியான கிராமம். சோலி சுரட்டுக்குப் போகாத ஊரவர்கள்;. அரசாங்க உத்தியோகங்களும் வியாபாரமும் எம்மவர்களது முக்கிய தொழில்களாகும். மனைவியும் அதே ஊர். எனது எல்லா முயற்சிகளிலும் உதவியும் ஒத்தாசையாகவும் இருப்பவர். வளர்ந்த இரு பிள்ளைகள்.

MSV view

ஆரம்பக் கல்வி அங்குள்ள மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாசாலையில். பின்னர் பருத்தித்துறையில் உள்ள ஹாட்லிக் கல்லூரி.

DSC02792

பட்டப் படிப்பு கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம். கொழும்பு மருத்துவ பட்டமேற்படிப்பு நிலையத்தில் குடும்ப மருத்துவத் துறையில் டிப்ளோமா பெற்றேன்.

Faculty - Copy copy

2)    உங்களுக்கு இலக்கியத்தில் எவ்வாறு ஈடுபாடு ஏற்பட்டது?

வாசிப்பில் ஆழ்ந்த ஈடுபாடுள்ள குடும்பப் பின்னணி. பாட்டியின் தகப்பானார் கண்ணாடி அப்பா என்போம். ஐம்பதுகளின் ஆரம்பமான அந்தக் காலத்திலேயே தினமும் வீரகேசரியும் கல்கியும் வாராவாரம் அவர் வீடு தேடி வரும். தொட்டுப் பார்த்து, அழகு பார்த்து, விரித்துப் பார்த்து, எழுத்துக் கூட்டிப் படித்தது எனப் படிமுறை வளர்ச்சியாக எனது வாசிப்புப் பழக்கம் வந்தது.

அப்பா கலைமகள் அமுதசுரபி கொண்டு வருவார். அம்மா தீவிர வாசகி. அப்பா ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வாசிப்பார். பக்கத்து வீடு பண்டிதர் பொன் கிருஷ்ணபிள்ளை. சிறந்த வாசகரும் பேச்சாளரும் ஆவார். அவரது வீடு நிறையப் புத்தகங்களும் சஞ்சிகைகளும் நிறைந்து கிடக்கும். தமிழ் புத்தகங்களுடன் National Geography அறிமுகமானது.

அவருடன் தொத்திக் கொண்டு கூட்டங்களுக்குப் போவதில் கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜா, நா.பா, எமது ஊர் யாழ்ப்பாணன் முதலான பல இலக்கியக்காரர்களை நேரில்; காணவும் பேசவும் அவர்களது சொற்பொழிவுகளைக் கேட்கவும் முடிந்தது.

ஹாட்லியில் அருமையான ஆசிரியர்கள். W.N.S சாமுவெல் Emergengy 1958, Psycholohist போன்ற கனதியான வாசிப்பிற்கான ஆர்வத்தைத் தூண்டிவிட்டார். வித்துவான் கார்த்திகேசு மரபு வழி வாசிப்பிற்கும், வித்துவான் வேலோன் நவீன இலங்கியங்களிலும் ஈடுபாட்டை ஏற்படுத்தினர்.

கனக செந்திநாதனை முதன் முதலில் கேட்க முடிந்தது ஹாட்லியின் இலக்கிய நிகழ்வின்போதுதான். அக்காலத்திலே மல்லிகை, வசந்தம், கலைச்செல்வி போன்றவற்றின் அறிமுகம் ஈழத்து இலக்கியத்திலும் முற்போக்கு இலக்கியத்திலும் ஈடுபாட்டை ஏற்படுத்தின.

மருத்துவ பீடத்தில் மாணவனாக இருந்த காலத்தில் தமிழ்ச்சங்கம் இந்து மன்றம் போன்றவற்றில் நிறைய பங்குபெற முடிந்தது. சஞ்சிகை ஆசிரியராக, தலைவராக, பொருளாளராக எனப் பொறுப்புகளும், கவிதை அரங்கு, மேடைப்பேச்சு, நாடகத்தில் நடிப்பு, நாட்டாரியலில் ஆய்வுக்கட்டுரை, வானொலி சங்கநாதம் நிகழ்ச்சிகளில் பற்கேற்பு என கலை இலக்கியத்தில் பரவலான ஈடுபாடு வளர்ந்தது.

3)    நீங்கள் எழுத்துத் துறையில் காலடி எடுத்து வைப்பதற்கு உந்த சக்தியாக அமைந்த பிரதான காரணியென எதனைக் கருதுகிறீர்கள்?

SDC13998-002

மேற் கூறிய அனைத்துமே அத்திவாரம்தான். 5 வயதில் தினகரன் மாணவர் பகுதியில் கட்டுரை, ஹாட்லிக் கல்லூரி Miscellenyயில் கட்டுரை, பல்கலைக்கழக கால சஞ்சிகைக் கட்டுரைகள் யாவும் மாணவப் பருவத்தின.

பருத்தித்துறையில் தனியார் மருந்துமனையை ஆரம்பித்து ஒரு சில வருடங்கள் கழிந்த பின்னர்தான் தீவிரமாக எழுத ஆரம்பித்தேன்.

DSC07727

மல்லிகை ஜீவா சிரித்திரன் சுந்தர் இருவரது நட்பும் என்னில் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டிய போதும் சிரித்திரனில்தான் எனது முதல் தொடரான ஒரு டொக்டரின் டயறியிலிருந்து தொடங்கியது.

Sirithiran Sunthar

பிறகு மல்லிகையில் விமர்சனங்கள், சிறுகதை என வளர்ந்தது.

‘உந்த சக்தியாக அமைந்த பிரதான காரணி’ எனப் பெரிய வார்த்தைகளைப் போடுகிறீர்கள். ஆனால் எழுதப்புகும் எல்லா எழுத்தார்களையும் போலவே எனது சுயஅடையளத்தை நான் சார்ந்த சமூகத்தில் வைப்பதற்காகவே எனது ஆரம்ப எழுத்துகள் இருந்தன.

ஆனால் மருத்துவன் என்ற முறையில் சமூகம் சார்ந்த கடப்பாடு ஒன்று இருப்பதை படிப்படியாக உணர ஆரம்பித்தேன். மருத்துவர்கள் சொல்வதை நோயாளிகள் சரியாகப் புரிந்து கொள்வதில்லை. அவர்களுடன் செலவிடும் குறுகிய நேரத்திற்குள் தெளிவாகச் சொல்லப்படாதவற்றை தெளிவாகவும் பரவலாக சென்றடையும் வண்ணம் தெரிவிப்பது முக்கிய தேவையாக இருந்தது.

இதற்காக முற்றிலும் வித்தியாசமான இரண்டு வகையான எழுத்து வடிவங்களை நான் பயன்படுத்த வேண்டியிருந்தது. மருத்துவக் கட்டுரைகள் ஒரு புறமாகவும், அனுபவப் பகிர்வுகள், சிறுகதைகள், புகைப்படங்கள், ஒரு சில கவிதைகள் என்பன மறுவிதமாகவும் அமைந்தன. மருத்துவம் சார்ந்த படைப்புகளை நான் தொடர்ந்து எழுத ஆரம்பகாலத்தில் தூண்டியவர்களில் முக்கியமானவர் டொக்டர் சுகுமார் ஆகும். அதேபோல முரசொலி ஆசிரியரான எஸ்.திருச்செல்வத்தையும் குறிப்பிட வேண்டும்.

4)    அறிவியல்- மருத்துவத்துறை சார்ந்த ஈழத்து எழுத்தாளர்களுள் யாருடைய படைப்புகள் உங்களை வெகுவாகப் பாதித்துள்ளன?

இதில் இரண்டு தேர்வுகள் கிடையாது. ஒரே ஒருவர் மட்டும்தான். நந்தி எனப் பரவலாக அறியப்பட்ட பேராசிரியர் சிவஞானசுந்தரம் அவர்களே. அவர் மிகப் பெரிய ஆளுமை. நான் அவரது மாணாக்கனாக இல்லாதது போனது எனது துரதிஸ்டம். அவரது நலவியல் நூலான அன்புள்ள தங்கைக்கு, மற்றும் அவரது நாவலான மலைக்கொழுந்து ஆகியவை என்னை ஆரம்பகாலத்தில் ஆழமாகப் பாதித்தன. என்னுடைய வழிகாட்டியாகவும் மற்றொரு புறத்தில் குடும்ப நண்பராகவும் இருந்தவர்.

5)    உயர் தொழில் (Profession) பார்க்கும் ஒருவர், இலக்கியத்துறையில் அதீத ஈடுபாடு காட்டுவது, அவரின் தொழிலில் பாதிப்பை ஏற்படுத்தாதா?

அவ்வாறு பாதிப்பு ஏற்பட நிச்சயம் வாய்ப்பு உண்டு என்பதை மறுப்பதில்லை. ஆனால் இந்த விடயத்தில் மிகவும் கவனமாக இருக்கிறேன். என்னுடைய மருத்துப் பணிநேரத்தில் எனது முன் உரிமை எனது நோயாளிகளுக்கே. முன்னுரிமை என்று சொல்லக் கூடாது முழுமையான உரிமை அவர்களுக்கே. எனது பணிநேரத்தில் நான் எந்த முக்கியமான இலக்கியக் கூட்டம் விழா நிகழ்வு எதுவானாலும் விட்டுக் கொடுப்புகள் இல்லை.

எனது ஓய்வு நாட்களான ஞாயிறு மாலை மற்றும் வர்த்தக விடுமுறைதினங்களின் மாலை நேரத்தில் மட்டுமே அவற்றில் கலந்து கொள்கிறேன். வருடத்தில் 365 நாட்களும் வேலை செய்கிறேன். மிக அத்தியாவசமான தேவைகளுக்காக மட்டுமே வருடத்தில் 3-4 நாட்களுக்கு லீவு எடுத்திருப்பேன்.

6)    சமுதாய மருத்துவம் (communitymedicine) என்ற துறையின் பிரதான செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும்?

சமுதாய மருத்துவம் என்பது ஒரு கிராமத்தின் பிரதேசத்தின் அல்லது தேசத்தின் நலத்தை ஒட்டுமொத்தமாகக் கவனத்தில் எடுப்பதாகும். ஒரு குறிப்பட்ட சமுதாயத்தில் தோன்றும் நோய்கள் எவை, அவை தோன்றுவதற்கான காரணங்கள் எவை. அவற்றைத் தடுப்பது போன்ற விடயங்களில் கவனம் செலுத்துவதாக இருக்கும். தனி நபரை மட்டும் பார்க்காமல் அந்த நபர் சார்ந்த சமூகத்தின் பின்னணியில் பார்ப்பதாகும். பேராசிரியர் செ.சிவஞானசுந்தரம் (நந்தி) அத்துறை சார்ந்தவர். அத்துறைக்கான கல்வியில் பேராசிரியராகப் பணியாற்றி எண்ணற்ற மருத்துவர்களிடம் சமூக நோக்கை விதைத்தவர் எனச் சொல்லாம்.

எனது துறை குடும்ப மருத்துவமாகும் (Family medicine). . நாங்கள் சமூகத்தின் மத்தியில் இருப்போம். அது கிராமமாகவோ நகரமாகவோ இருக்கலாம். நாங்கள் தனி மனிதர்களை அவர்கள் சார்ந்த குடும்பப் பின்னணியில் அணுகுவோம். நான் குடும்ப மருத்துவனாக நீண்டகாலம் பணியாற்றிய பருத்தித்துறையில் டொக்டர்களான தம்பித்துரை, பத்மநாதன், கணபதிப்பிள்ளை, பாலகிருஷ்ணன், கதிர்காமத்தம்பி போன்றோர் எனது முன்னோடிகளாக அரும்பணி ஆற்றியுள்ளனர்.

அம்மம்மா, அம்மா, மகள், பேத்தி எனப் பலதலைமுறையினருக்கு மருத்துவம் செய்தவர்கள் அவர்கள். இதனால் அவர்களுக்கு தனது நோயாளிகளின் பரம்பரை நோய்கள், உணவு முறைகள், பழக்கவழக்கங்கள், உறவுமுறைகள் என யாவுமே அத்துபடியாகத் தெரிந்திருந்தது. இது தங்கள் நோயாளிகளின் பிரச்சனைகளை அவசியமற்ற ஆய்வுகூடப் பரிசோதனைகள் இன்றி பார்த்த மாத்திரத்திலேயே கண்டறிய முடிந்திருக்கிறது. வாழும் சூழலுக்கு ஏற்ற ஆலோசனைகளை வழங்கி அவர்களை ஆராக்கியமாக வாழ நெறிப்படுத்த முடிந்திருக்கிறது.

இத்துறை மிக அற்புதமாக செயற்படும் நாடாக இங்கிலாந்தைக் கூறலாம். இங்கு இலங்கையில் அரச ஆதரவில்லாத காரணத்தால் இத்துறையின் எதிர்காலம் கேள்விக் குறியாக இருக்கிறது. அரச மருத்துவர்களுக்கு நல்ல சம்பளம் மற்றும் வசதிகள் தரப்படுவதால் இத்துறைக்கு புதிதாக வருபவர்கள் மிகக் குறைவாகவே இருக்கிறது.

7)    ஒரு மருத்துவரின் அநுபவங்களைப் படைப்புகளாகத் தரும்போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளைக் குறிப்பிடுங்கள்?

மருத்துவர் தனது அனுபவங்களை படைப்புகளாகத் தரும்போது அது அவரது நோயாளிகளின் அந்தரங்க விடயங்களை பகிரங்கப்படுத்துவதாக இருக்கக் கூடாது. பெயர், ஊர், உருவ அடையாளங்கள் போன்ற நோயாளியின் தனித்துவமான குறிப்புகள் எதுவும் படைப்பில் இருக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் அந்நோயாளியின் மன உணர்வுகளை மட்டுமின்றி சமூக ரீதியான தாக்கத்தையும் அவருக்கு ஏற்படுத்தலாம்.

ஆனால் இது மருத்துவரின் படைப்புகளுக்கு மட்டும் பொருத்தமானது அல்ல. எல்லாப் படைப்பாளிகளுக்கும் பொருத்தமானது. எந்த ஒரு படைப்பாளியும் ஒரு குறிப்பிட்ட நபரை அடையாளம் காணும் விதத்தில் தனது பாத்திரங்களை அமைக்கக் கூடாது. அவ்வாறு எழுதுவது அவர்களின் தனிநபர் சுதந்திரத்தைப் பறிப்பதாகவே இருக்கும். இருந்தபோதும் பல பிரபல எழுத்தாளர்கள் கூட தமது படைப்புகளில் சில தனிநபர்களை குறிவைத்து அடிப்பதாக எழுவதைக் காணும்போது வேதனையாக இருக்கிறது.

எந்தவொரு நோயாளியையும் இனங்காணும் வகையான குறிப்புகள் எதுவும் எனது படைப்புகளில் இருக்காது. மருத்துவக் கட்டுரையாயினும் சரி அனுபவப் பகிர்வாயினும் சரி சிறுகதை கவிதை போன்ற படைப்பிலக்கியங்களானாலும் சரி அவற்றில் யாரையும் குறிப்பாக எழுதக் கூடாது என்பதில் நான் மிக அவதானமாக இருக்கிறேன். அது எனது தொழில் தார்மீகமும் கூட. பல நோயாளிகளில் பெற்ற அனுபவங்களை ஒன்று சேர்த்து அவற்றை நம்பத்தக்க விதமான உயிரோட்டமுள்ள புதிய பாத்திரங்களாகப் புனைந்து எழுதுகிறேன். அதனால் அவை எந்த ஒருவரையும் குறிப்பிட்டுச் சுட்டுவதாக இருக்காது

பொதுவான சில பிரச்சனைகள் பற்றி எழுதும் போது அது எனக்காகவே எழுதப்பட்டது போல இருந்தது என ஒருவர் அல்ல, பலர் என்னிடம் கூறியிருக்கிறார்கள். ‘பரவலான பிரச்சனை பற்றி எழுதியிருக்கிறேன் அது அவர்களைச் சென்றடைந்திருக்கிறது அவர்களுக்கு மருந்தாக அமைந்தது’ என திருப்தி கொள்ளுவேன்.

8)    மருத்துவக் கருத்துக்களை இலக்கியப் படைப்புகளில் கருப்பொருளாகக் கொள்ளும்போது, அப்படைப்புகளினூடாகச் சொல்ல வேண்டியவற்றைத் தெளிவாகச் சொல்லலாம் எனக் கருதுகிறீர்களா?

நிச்சமாக இல்லை. குறிப்பிட்ட ஒரு விடயம் பற்றிய அருட்டுணர்வை பரந்த வட்டத்தில் ஏற்படுத்துவதே அதன் நோக்கமாகும். தெளிவான மருத்துவக் கருத்துக்களை சொல்வதற்கு நலவியல் கட்டுரைகளே ஏற்றவை. இலக்கியப் படைப்புகள் இலகு வாசிப்பானவை. எந்த ஒரு நோய் பற்றியாவது தெளிவாக அறிய விரும்புவர்கள் அது பற்றிய மருத்துவக் கட்டுரையை வாசிக்க வேண்டும்.

ஆனால் மருத்துவக் கட்டுரைகளை இன்று யார் வேண்டுமானாலும் பத்திரிகைளில் எழுதலாம் என்றாகிவிட்டது. யார் எழுதுகிறார் எழுதுபவரது மருத்துவக் கல்வித் தகமை என்ன போன்றவற்றை கவனத்தில் கொண்டே அவற்றைத் தேர்ந்தெடுத்து வாசிக்க வேண்டியது வாசகர் பொறுப்பாகிவிடுகிறது.

எழுதுபவர் பெயர் இல்லாமல் கூட நலவியல் கட்டுரைகளை வெளியிடுமளவிற்கு பல பத்திரைககள் தமது பத்திரிகா தார்மீகத்தை கைநழுவிவிட்டுள்ளன.

9)    இணையத்தள வலைஅமைப்புகளினூடாக இன்று வெளியிடப்படும் படைப்புகள் வெகுசன மட்டத்தில் சென்றடையக்கூடிய வாய்ப்புகளை எவ்வாறு ஏற்படுத்தலாம்?

இணையதள வாசிப்பு பெருகி வருகிறது. இருந்தபோதும் அச்சு ஊடகம் அளவிற்க்கு வெகுசன மட்டத்தை அவை சென்றடைவதில்லை என்பது உண்மையே. இருந்தபோதும் பத்திரிகைகள் கூட வெகுசனமட்டத்தை அடைவதாகத் தெரியவில்லை. இலங்கையில் வெளியாகும் தமிழ்த் தினசரிப் பத்திரிகைகள் அனைத்தையும் ஒன்று சேர்த்தால் கூட அவற்றின் தினசரி விற்பனை முப்பதாயிரத்தை தாண்டுவதில்லை என அண்மையில் ஒரு தினசரி ஆசிரியர் குறிப்பிட்டது நினைவிற்கு வருகிறது.

ஒரு படைப்பிற்கான எதிர்வினை அதை வெளியிட்ட அடுத்த கணமே கிடைக்கும் என்ற சுயதிருப்திக்காகவே பல எழுத்தாளர்கள் இணையத்தில் எழுதுவதை விரும்புகிறார்கள். ருவிட்டர், பேஸ்புக், லிங்டென், கூகுள் பிளஸ் போன்ற சமூக வலைத் தளங்கள் ஊடாக பரலாக கிடைக்கச் செய்ய நானும் முயல்கிறேன். ஆனால் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் பெரும்பாலானோர் அவற்றை வெறும் திண்ணைப் பேச்சாகவே கொண்டு செல்கின்றனர்.

10)    உங்களின் நலவியல் நூல்கள் பற்றிய சுருக்கமான விபரங்களைக் கூறுங்கள்?

இதுவரை 11 நலவியல் நூல்கள் வெளியாகியுள்ளன.

  1. சிறுவர்களின் கண்களைக் காக்க வாரீர்,
  2. பாலியல் நோய்கள்,
  3. போதையைத் தவிருங்கள்,
  4. தாயாகப் போகும் உங்களுக்கு- இலங்கையில் 1 பதிப்பு, NCBH சென்னை 3 பதிப்புகள்,
  5. எயிட்ஸ்- இலங்கையில் 3 பதிப்புகள், NCBHசென்னை 3 பதிப்புகள்,
  6. வைத்திய கலசம்,
  7. சாயி காட்டிய ஆரோக்கிய வாழ்வு,
  8. நீங்கள் நலமாக- இலங்கையில் 5 பதிப்புகள்,
  9. நீரிழிவுடன் நலமே வாழுங்கள் – 3 பதிப்புகள் ,
  10. கொலஸ்டரோல் கட்டுப்படுத்துவது எப்படி? 2 பதிப்புகள் ,
  11. உயர் இரத்தநோயைப் புரிந்கொள்ளல்.

இவற்றைத் தவிர பத்திரிகைகள் சஞ்சிகைளில் 2007 ஆண்டிற்கு பின்னர் எழுதி வெளியான 400 ற்கு மேற்பட்ட நலவியல் கட்டுரைகள் நூலாக்கப்படாமல் கைவசம் இருக்கின்றன.


11) உங்களது இலக்கியப் படைப்புகளை நூலாக்கம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளீர்களா?

‘மறந்து போகாத சில’ என்ற கட்டுரைத் தொகுப்பு நூலை மீரா பதிப்பகம் ஊடாக பல வருடங்களுக்கு முன் வெளியிட்டேன். நூல் விமர்சனம், சினிமா விமர்சனம், புகைப்படம், சிற்பம் ஓவியம் போன்;ற பல்துறை கலை இலக்கியக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்தது.

ஒரு டொக்டரின் டயறியில் இருந்து மல்லிகைப் பதிப்பக வெளியீடாக வந்தது. இது எனது மருத்துவப் பணியூடாக சுற்றியுள்ள உலகத்தை பார்க்கும் சமூகவிமர்சன அனுபவப் பதிவு நூலாக வந்தது. ஆரம்பத்தில் சிரித்திரனிலும் பின்னர் மல்லிகையிலும் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இவை.

இன்னமும் நிறையக் கட்டுரைகள் உள்ளன. சினிமா விமர்சனங்கள் பல உள்ளன. ஒரு நூலாகப் போடலாம். நிறைய இலக்கியக் கட்டுரைகள் உள்ளன. அண்மைக்காலமாக புகைப்படங்கள் எடுக்கும் ஆர்வம் பிறந்திருக்கிறது. பல கவிதைகளும் எழுதியுள்ளேன். புகைப்படங்களும் கவிதையும் சேர்ந்ததாக ஒரு நூல் போடவேண்டும் என்ற விருப்பும் உண்டு.

Stethஇன் குரல் என்ற தலைப்பில் புதிதாக பல எனது அனுபவப் பகிர்வுகள் ஊடகங்களில் வெளியாகி உள்ளன. இப்பொழுது அறிவியல் களரி என்ற தொடரில் இலகுவாக தமிழில் அறிவியல் கட்டுரைகளை சமகாலம் சஞ்சிகையில் எழுதிவருகிறேன். மிகுந்த தேடலுடன் எழுதும் கட்டுரைகள் இவை. இவற்றைத் தொகுத்தால் சாதாரண மக்களும் இன்றைய அறிவியல் வளர்ச்சியின் சில கோணங்களை புரிந்து கொள்ளக் கூடிய வித்தியாசமான நூலாக அமையும்.

ஆனால் இவை எவற்றையும் நூலாக்கும் முயற்சியில் நான் இறங்கத் தயங்குகிறேன்.

காரணம், இலங்கையில் ஒரு நூலைப் போட்டால் அதன் விற்பனையையும் எழுத்தாளனே பொறுப்பேற்க வேண்டிய இடரான சூழலே இருக்கிறது. அதற்கான நேரமும், விற்பனை இரகசியங்களும் என்னிடம் கிடையாது. அதனால் யாவற்றையும் இணையத்தில் போட்டு பலதரப்பட்ட வாசகர்களையும் அடைய முயற்சிக்கிறேன். அதில் ஓரளவு நிறைவு காண முடிகிறது.

12)    உங்களுக்குக் கிடைத்த விருதுகள் பற்றி..

  • ‘தாயாகப் போகும் உங்களுக்கு’, ‘நீங்கள் நலமாக’ ஆகிய இரண்டும் இலங்கை தேசிய சாஹித்திய விருதுகளைப் பெற்றன.
  • ‘தாயாகப் போகும் உங்களுக்கு’ இலங்கை இலக்கியப் பேரவை விருதையும் பெற்றது.
  • இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கத்தின் ஊடகத்துறை பங்களிப்பிற்கான விருது.
  • கொழும்பு பல்கலைக் கழக தமிழ்ச்சங்கத்தின் சிறந்த வலைப் பதிவாளர் விருது 2011

13) நீங்கள் ஒரு சிறந்த வாசகர் என்பதை நீங்கள் அவ்வப்போது எழுதும் கட்டுரைகள் வெளிபடுத்துகின்றன. உங்களுடைய தொழில் ரீதியான கடமைகளுக்கும் அப்பால், வாசிப்புக்கான நேரத்தை எவ்வாறு ஒதுக்குகிறீர்கள்?

எழுத்து வாசிப்பு யாவும் எனது ஓய்வு நேரத்தில்தான். கிடைக்கும் நேரம் முழுவதையும் இத்தகைய கலை இலக்கிய முயற்சிகளில் செலவழிக்க வழிசமைத்துத் தருவது எனது துணைவியார்தான். எனது எழுத்து முயற்சிகளின் முதல் வாசகர், விமர்சகர் படிதிருத்தம் செய்வது யாவும் அவரே.

சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் ஜீவநதி சஞ்சிகையில் வெளியான நேர்காணல்

 0.0.0.0.0

Read Full Post »

கொதிநீர் பட்டு சருமம் கொப்பளமாகிக் கிடந்தது.
அவசரமாகச் சிகிச்சை செய்ய வேண்டியதாயிற்று.

தாதியிடம் போனைக் கொடுத்து ஒரு புகைப்படம் எடுக்கச் சொன்னார் மருத்துவர்.

er_pho11

சிகிச்சை முடிந்து சில நிமிடங்களுக்குள் உலகளாவிய ரீதியில் பலர் அந்தப் புகைப்படம் சொல்லிய செய்தியைத் தெரிந்து கொண்டனர்

ஆம் தீக்காயங்களுக்கான முதல் உதவி சிகிச்சை பற்றி புகைப்படத்துடன் சொல்லியிருந்தார்.

இன்று இது இல்லாவிட்டால் உலகமே அஸ்த்தமித்து விட்டதாகப்படும்

பேசவும் செய்தி பெறவும் என்றிருந்த சாதனம் காற்றும் உணவிற்கும் அடுத்தபடியாக அத்தியாவசியமாகிவிட்டது.

ஆனால் கடந்து வந்த பாதையும் அனுபவங்களும் எத்தனை

0.0.0.0.0

(இது சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியது)

“இதன் பயன்பாடு அதிகம் தான். எங்கிருந்தாலும் முழு உலகத்தை யும் உள்ளங் கைக்குள் கொண்டு வரக்கூடிய சாதனம் அல்லவா? ஆனால் அதற்கு மேலாக அந்தஸ்தின் அடையாளச் சின்னமாகவும் மாறி விட்டதுபோல தெரிகிறது.

MWC-2008-Sony-Ericsson-W910-Awarded-the-Best-Mobile-Phone-For-2007-3

வாங்கும் போது “ஆக எட்டாயிரம்தானே” என எண்ணத் தூண்டும். “வசதி அதிகம். இணைப்பும் உடனடியாகவே கிடைக்கும். தொழிலுக்கும் உதவியாயிருக்கும்” என எண்ணிப் பூரிக்கும்.

பெரும்பாலானவருக்கு இந்த உற்சாகம் பூரிப்பு எல்லாம் சில மாதங்களுக்கு  நீடிக்கும். பில் வர கண்கள் பிதுங்கும். வாற கோல், போற கோல் எல்லாவற்றிற்கும் காசு. நாள் போகப்போக அழைப்பு எடுக்கவும் மனம் வராது, அழைப்பு வந்தாலும் மனம் கலங்கும். வரப்போகும் பில்லை நினைத்து உடல் சோரும்.

ஆனால் கையில் இருக்கும் மட்டும் ஷோ காட்டாமல் விடவும் மனம் விடாது. இதை எங்கு கொண்டு போகலாம். எங்கு கொண்டு போகக் கூடாது எப்போது கதைப்பது என்பவற்றில் எந்தவித சுயகட்டுப்பாடு களும் கட்டுப் போட்டாலும் வராது.

வேகமாக கார் பறக்கும் போது ஒரு கையில் ஸ்டயிரிங் மறுகையில் செல்லுர் போன் பேசும். பாதசாரியின் உயிர்தான் அம்பேலாகும்.

காதலியுடன் தனிமையில் இருக்கும் போது திரைப்படங்களில் வருவது போன்று “இச்” என்ற சப்தத்துடன் முத்தம் வரும் என காதலி ஆசையுடன் அணைப்பாள்.

இச்சுக்குப் பதில் கிணீர்தான் வரும்.

கோவிலில் அமைதியாகத் தியானம் பண்ணும்போது அருகில் இருப்பவரின் செல் போன் இறைவனுக்காக அருள்பாலிக்கும்!

ஒரு நாள் இப்பிடித்தான், ஒரு நோயாளியின் வேதனைகளுக்கு செவிமடுத்துக் கொண்டிருந்தேன். மணியடித்தது. அந்த நோயாளி சொல்வ தைக் கேட்டுக் கொண்டே ரிசீவரை எடுத்து “ஹலோ” என்றேன்.

மறுமொழி போனுக்குள் இருந்து வரவில்லை!
எதிர்ப்புறத்திலிருந்து வந்தது!

“அது எனக்கு வந்த கோல்” நோயாளியுடன் வந்தவர் பெருமையடித் தார்.

போனைக் கீழே வைத்தேன்.
முகத்திலிருந்து வழிந்த அசடை கைக்குட்டை துடைத்தேன்.

எங்கேயிருக்கிறோம்
என்ன செய்கிறோம்
யார் யாருக்கு இடைஞ்சல் கொடுக்கிறோம்
போன்ற எதுவித யோசனைகள் இல்லாமல் போனுக்குள் அலட்டத் தொடங்கினார்.

மற்றொருநாள்.

சளி காய்ச்சலுடன் ஒரு பெண் நோயாளி வந்திருந் தார்.
நோய் பற்றி விசாரித்து முடிந்தபின், நெஞ்சில் சளி எப்படி இருக்கிறது என அறிவதற்காக குனிந்து ஸ்டெதஸ்கோப்பினால் மார்பைப் பரிசோதித்துக் கொண்டிருந்தேன்.

போன் மணி அடித்தது. சூடு கண்ட பூனையல்லவா?

போனை எடுக்கக் கையை நீட்டுமுன் நிதானித்தேன்.
ஒலித்தது எனது போன் அல்ல.

நோயாளியுடன் கூட வந்திருந்த கணவரினது.
இவர் போனில் வளவளா எனக் கதைத்துக் கொண்டிருந்தால் நான் நோயாளியைப் பரிசோதிப்பது எப்படி என்ற கவலை முளைத்தது.

“ஹலோ|”

அவரது உரத்த குரல்
மனைவியில் முட்டி மோதி
அவளையும் ஊடுருவி,
கடூரம் தணிந்து
ஸ்டெதஸ்கோப் ஊடாக இதமாக காதில் விழுந்தது.

மனிசன் மனேர்ஸ் தெரிந்தவர் போலும். கதையைக் கட் பண்ணிவிட்டார் என அமைதியடைந்தேன்.

திடீரென கடாமுடாவென வெண்கலக் கடைக்குள் யானை புகுந்தது போன்ற சப்தம் …..
ஸ்டெத் குழாயைக் கிழித்துக் கொண்டு வந்து
செவிப்பறை யை உடைத்தது.

பொறுக்கமுடியாமல் பிடுங்கி மேசையில் எறிந்தேன்.

கணவன் தனது போனை மனைவியின் வாய்க்கு நேரே பிடித்துக் கொண்டு நிற்க அவள் தனது சினேகிதியுடன் அரட்டையை ஆரம்பித்து விட்டாள்.

  0.0.0.0.0.0

இது சுமார் 15 வருடங்களுக்கு முன்னர். இன்னுமொரு தொல்லை இப்படி வந்தது!

cellphone-nokia-8250-(2001)

உள்ளே வந்தவரின் குட்மோர்னிங் முகமன்கள் வழமையான விசாரிப்புகள் யாவும் முடிய ஆரம்பித்தார்.

“டொக்டர் நீங்கள் ஒரு முக்கியமான நபர். உங்களோடு தொடர்பு கொள்ள ஒவ்வொரு நிமிடமும் பலர் ஆவலோடு காத்திருப்பார்கள். அவர்களை நீங்கள் ஏமாற்றக் கூடாது…”

‘நான் அவ்வளவு முக்கியமான நபரா?’
கோடை வெயிலில் தலையில் ஐஸ்கட்டியைத் தூக்கி வைத்தது போல இளகினேன்.

ஆனாலும் சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பதும் எனக்குத் தெரியும். வந்தவரைப் பார்வையால் குடைந்தேன்.

வாலிபர், வயது இருபத்தைந்து இருக்கும்.
விலையுயர்ந்த கவர்ச்சியான நீளக்கை சேட் அணிந்திருந்தார்.
அதற்கேற்ற ஆடம்பர டை,
நேர்த்தியான ட்றவுசர்.
பளபளக்கும் சப்பாத்து.
வசீகரமான பேச்சு.

மெடிக்கல் ரெப்!
மருந்துக் கொம்பனிகள் தமது மருந்துகளை வைத்தியர்களுக்கு அறிமுகப்படுத்தி அவற்றை நோயாளிகள் தலையில் கட்டுவதற் காக அனுப்பப்படுபவர்கள்.

எமது வேலை கடுமையாக இருக்கும் நேரங்களில்கூட தமது பிரசாரத்திற்குத் தயங்காதவர்கள்.
பொறுமையைச் சோதிப்பவர்கள்.
ஆனால் பேனை, எழுதும் நோட் புக், சாம்பிள் என ஷலஞ்சம் கொடுத்தாவது வைத்தியர்களை அடக்கிவிடுவதில் வல்லவர்கள்.
“…அவர்களுக்கு உங்கள் தொடர்பு கிடைக்காவிட்டால் மிகுந்த மனக்கஷ்டம். அதே நேரத்தில் உங்களுக்கும் தொழில் ரீதியான இழப்பு. எனவே உங்களுக்கு ஒரு செலுலர் போன் அவசியம்|” விடயத்துக்கு வந்தார் மிக நிதானமாக.

மெடிக்கல் ரெப் அல்ல ரெலிபோன் கொம்பனியிலிருந்து வந்திருக்கிறார்.

தான் பிரதிநிதித்துவம் வகிக்கும் கொம்பனியின் பெருமை,
அவர்களது தொலைபேசிச் சேவையின் சிறப்பம்சங்கள், பாவனையாளர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள்,
வைத்தியர்களுக்கான விசேட விலை கழிப்பு
என அடுக்கிக் கொண்டே போனார்.

கொட்டாவிகளைக் கஷ்டப்பட்டு அடக்கவேண்டியதாயிற்று.

“நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான். ஆனாலும் எனக்கு இப்பொழுது செல்லுலர் போன் தேவையில்லை” என்றேன்.

“நீங்கள் எங்கிருந்தாலும் எவரும் உங்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.

இந்த வசதியைக் குறைந்த விலையில் தருகிறோம்.
கூட்டத்தில், தியேட்டரில், கோயிலில் எங்கிருந்தாலும் நோயாளர்கள் மாத்திரமன்றி ஏனையவர்களும் உங்களை உடனடியாக நாடலாம் அல்லவா?”

“அதே காரணத்தால்தான் எனக்கு வேண்டாம் என்கிறேன்|”.

வீட்டிலும் வைத்தியசாலையிலும் இருக்கிற போன்களால் வருகின்ற தொல்லைகளே போதும். எனக்கென்று சில நிமிடங்களாவது தனிமை தேவை. அமைதி தேவை. சில கணங்களாவது இசையில் மூழ்க வேண்டும். இலக்கியத்தில் அமிழ வெண்டும். சிரித்து மகிழ்ந்து நண்பர்ளோடு அளவளாவ வேண்டும். வெளியே செல்கின்ற சில தருணங்களில் தான் இது எப்போதாவது கிடைக்கிறது. அதை இழக்க நான் தயாராக இல்லை. சொறி சென்று வாருங்கள்”

என விடையளித்தேன்.

“சரி உங்களது பொன்னான நேரத்தை ஒதுக்கியதற்கு நன்றி. இன்னுமொரு சந்தர்ப்பத்தில் முயற்சிக்கிறேன்”
நம்பிக்கையைக் கை விடாமல் ஆனால் தொங்கிய முகத்துடன் வெளியேறினார்.

அடுத்த நோயாளியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதுதான் அது பார்வையில் விழுந்தது. தனது சிறுகைப்பையை அருகிலுள்ள மேசையில் மறந்துபோய் விட்டுவிட்டு அவர் சென்றுவிட்டார்.

பாவம். ஏதாவது முக்கிய ஆவணங்களை கைப்பையில் விட்டுவிட்டு அவசரத்தில் சென்றிருப்பார். இப்பொழுது அவசிய தேவைக்காகத் தேடிக் கொண்டிருக்கக்கூடும் என எண்ணினேன்.

நல்லவேளையாக கைப்பையின் வெளிப்புறத்தே அவரது பெயரும் தொலைபேசி இலக்கமும் கிடைத்தன. தாமதிக்காது அவரது இலக்கத்தை டயல் பண்ணினேன்.

அவரது கைப்பை கிணுகிணுத்தது.

0.0.0.0

Read Full Post »

கேட்ட மாத்திரத்தில் நான் அதிசயித்துப் போனேன். எனது 37வருட மருத்துவத்தில் இப்படி ஒரு பிரச்சனையை நான் கேள்விப்பட்டதே இல்லை.

ஆனால் அடுத்த கணமே இது உண்மையானது அல்ல என்பது புரிந்தது.

செய்தியைப் பகுந்தறிந்த எனது மூளை தெளிவாகக் கூறிவிட்டது.

இருந்தபோதும் அவள் வேண்டும் என்று பொய் சொல்கிறாள் என்று நான் கருதவேயில்லை.

“மலம் போகும் போது அட்டை அட்டையாகப் போகுது…சின்னஞ் சின்னனா கணக்கு வழக்கின்றிப் போய்க்கொண்டே இருக்கு… வருடக் கணக்கில்..”

அட்டை என அவள் கூறியது சாதாரண அட்டைப் பூச்சியை அல்ல.

இரத்தம் குடிக்கும் அட்டையை.

கூறியது உண்மையாக இருந்தால் அவளது உடலிலுள்ள கடைசித் துளிவரை அட்டைகள் உறிஞ்சிக் குடித்திருக்கும். இரத்த சோகையால் உடல் வெளிறிப்போய் நடக்க முடியாது மூச்சிரைக்க வந்திருப்பாள். இவள் உசாராகத்தான் வந்திருந்தாள்.

அவள் ஒரு மலையகப் பெண். பல வருடங்களாக கொழும்பில்தான் வசிக்கிறாள். வயது சரியாக 56 இன்னும் ஒரு மாதத்தில். வசதியானவள் அல்ல. நடுத்தரத்திலும் சற்றுக் குறைவான சமூகத் தராதரம் கொண்டவள்.

நைந்து போன பழைய ஸ்கேட்டும் பிளவுசும் அணிந்திருந்தாள். சற்று அழுக்கான ஆடைகள். குளித்து வரவில்லை. வியர்வை மணம் நாசியை உறுத்தியது. உடை அலங்காரத்தில் அசண்டையீனமும், சுகாதாரம் பேணுவதில் அக்கறையின்மையும் வெளிப்படையாகத் தெரிந்தன.

இந்த அவதானிப்புகள் அவளது நோய் பற்றிய முடிவுக்கு வருவதற்கு எனக்கு அவசியமானவை.

“..எத்தனையோ தரம் அரசாங்க ஆஸ்பத்திரில் மருந்து எடுத்து விட்டேன். அவங்கள் பூச்சிக் குளிசையைத்தான் அள்ளி அள்ளித் தாராங்கள். ஒரு சுகமும் இல்லை”.

அவளைப் போல நானும் அரசாங்க ஆஸ்பத்திரி மருத்துவர்களை குறை சொல்ல முடியாது. அவர்களுக்கு இவள் தமிழில் சொல்லியது புரிந்திருக்காது. இவளுக்கு அவர்களுக்கு புரியும்படி விளக்க முடியாது. நீண்ட கியூ காத்து நிற்கையில் இவள் புழு என்றால் என்ன பூச்சி என்றால் என்ன றழசஅள என்றுதான் அவர்கள் மனத்தில் பதிந்திருக்கும்.

நல்ல காலம் புளுக் காச்சல் என நினைத்து காய்ச்சல். சளிக் குளிசைகளைக் கொடுக்கவில்லையே என்பதை நினைத்து ஆறுதல் கொள்ளலாம்.

‘மலத்தை எடுத்துக் கொடுங்களேன். என்ன பூச்சி என்று பரிசோதித்துப் பார்க்கலாம்.’

இது அவசியமற்ற போதும் அவளது நம்பிக்கையை தவறென்று எடுத்துக் காட்ட உதவும் என்பதால் கேட்டேன்.

அவளுக்கு அதில் விருப்பம் இருப்பதாகத் தெரியவில்லை. ‘அதைப் பிறகு பாப்பம். இப்ப ஏதாவது மருந்து தந்து இந்தப் பிரச்சனையை உடனை தீருங்கோ’ தீர்க்கமாகச் சொல்லிவிட்டாள்.

“மலத்தோடு போனது இப்ப தலையிலையும் வந்திடுத்து. ஊந்து ஊந்து தலையெல்லாம் திரியுது”.

தலையை மூடியிருந்த மொட்டாக்குத் துணியை விலக்கி உச்சந் தலையைச் சுட்டிக் காட்டினா.

மொட்டையாக வெட்டியிருந்த தலையில் கறுப்பும் பளுப்புமாக முளைத்திருக்கும் நரைத்த முடிகளைத் தவிர வேறொன்றும் என் கண்களுக்குப் படவில்லை.

“இஞ்சை இஞ்சை..” அவள் என் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க முயன்றாள்.

தனது வலதுகைப் பெருவிரலையும் சுட்டு விரலையும் சேர்த்து தனது முன்னங்கைகளில் எதையோ பிடிக்க முயன்றாள்.

எனக்கு எதுவும் புலப்படவில்லை!

“அறுபது தாண்டிய பூஞ்சைக் கண்ணுக்கு என்ன தெரியப் போகுது” என நக்கல் அடிக்காதீர்கள்.

அண்மையிலும் கண் மருத்துவரைப் பார்திருந்தேன். தடித்த கண்ணாடிதான். ஆயினும் ‘கற்றரக்ட் இன்னமும் இல்லை. பார்வை நன்றாக இருக்கிறது’ என்று சேர்டிபிகற் கொடுத்துள்ளார்.

இப்படியாக உடலில் பூச்சி ஊர்வதாக சொல்லிக் கொண்டு வருபவர்கள் பலரை எனது கிளினிக்கில் பாரத்திருக்கிறேன். பொதுவாக அவர்கள் அனைவரும் வயதானவர்கள். வயதினால் மூளை நரம்புகள் பாதிப்புற்று ஒரு கலங்கலான மனநிலையில் இருப்பவர்கள்.

மாயத்தோற்றங்கள் (Delusions) ஏற்படுவது அவர்களில் ஏற்படுவது அதிசயமானது அல்ல. புழுக்கள் நெளிவதாகவும், பூச்சிகள் ஊர்வதாகவும், சிலந்திகள் அசைவதாகவும், அட்டைகள் தவழ்வதாகவும், பக்றீரியாக்கள் குடைவதாகவும் அவர்கள் சொல்வதுண்டு.

Man-Bug

ஆனால் இது வயதானவர்களின் நோய் மட்டுமல்ல. ஏனைய வயதினரிடையேயும் தோன்றலாம். தமது உடல் நலத்தைப்பற்றிய தப்பான எண்ணங்களால் பீடிக்கப்பட்டிருப்பவர்கள் அவர்கள்.

மனப் பிறழ்வு நோயுள்ளவர்கள் போல இவர்களுக்கு பல்வேறு விடயங்கள் தொடர்பான மாயத் தோற்றங்கள் எழுவதில்லை. பூச்சி, புளு, வண்டு போன்ற ஏதாவது ஒன்று பற்றிய மாயத் தோற்றமே (Monosymptomatic hypochondrial psychosis) இவர்களுக்கு உண்டாகிறது.

இந்த ஒரு விடயத்தைத் தவிர அவர்கள் சாதாரணமானவர்கள் போலவே இருப்பார்கள். வேறெந்த மன நோய்கள் இருப்பதில்லை. இதனை மருத்துவத்தில் delusions of Parasitosis என அழைப்பார்கள். ஒட்டுண்ணி மருட்சி எனலாமா

இவர்களுள் ஒருத்தி ஒரு சிறிய போத்தலில் தன் மீது ஊரும் பூச்சியைக் கொண்டு வந்திருப்பதாகச் சொன்னாள். தோல் நிறத்தில் ஒரு சிறிய வஸ்து இருந்தது. அது என்னவென்று புரியாததால் நுணுக்குக் காட்டியில் வைத்துப் பரிசோதித்தபோது அது ஒரு சருமத்துகள் என்பது தெரியவந்தது.

சிலர் இவ்வாறு பூச்சிகளைப் பிடிப்பதாகச் சொல்லி சருமத்ததைக் கிள்ளி கிள்ளி புண்ணாக்கிக் கொண்டு வருவதும் உண்டு.

பல மருத்துவர்களிடம் ஒருவர் மாறி மற்றவர் என சென்று கொண்டிருப்பது இவர்கள் வழக்கம். திருப்பதியின்மையே காரணம்.  மருத்துவர்களால் அவர்களது எண்ணத்தை மாற்றுவது சிரமமாக இருப்பதால் அவர்களது பிரச்சனை தீருவதே இல்லை. இதனால் மருத்துவர்களைக் குறை கூறுவதும் புதிய மருத்துவரை நாடுவதுமாக அலைந்து கொண்டிருப்பார்கள்.

இவரை வீட்டில் வைத்துப் பராமரிப்பவர்களுக்கு இவர்களோடு அலைவதும் இவர்கள் பிரச்சனையை தினமும் கேட்டுக் கொண்டிருப்பதும் சலிப்பையும் சினத்தையும் ஏற்படுத்திவிடுவதும் உண்டு.

மருந்துகள் கிடையாதா எனக் கேட்கிறீர்களா? சில psychotic drugs இருக்கவே செய்கின்றன.

வீரகேசரி ஞாயிறு வாரவெளியீட்டில் நான் எழுதிய அனுபவக் கட்டுரை.

0.00.0

Read Full Post »

‘எச்சிலே விழுங்க முடியவில்லை வலி தாங்க முடியவில்லை’ என்று தனது தொண்டையின் இடது புறத்தைப் பிடித்துக் கொண்டு வந்தவள் ஒரு இளம் பெண்.

சாப்பிடும்போது ஏதோ சிக்கிவிட்டதாம்.

 

 

‘வாயைத் திறவுங்கள்’ என்றேன். வெளிச்சத்தில் பார்த்தபோது எச்சில்தான் நிறைந்திருந்தது, வேறு எதையும் காண முடியவில்லை.

எச்சிலை விழுங்கு என்ற போது விழுங்க முடியாது சிரமப்பட்டாள். கொஞ்ச எச்சிலையே விழுங்கினாள் மீதி தொண்டையை மறைத்து நின்றது.

பல முறை முயற்சிக்குப் பின்னர் உட்புறம் தெளிவாகத் தெரிந்தது.

இடது புற டொன்சிலின் மீது ஆடை படர்ந்த மாதிரி ஏதோ சற்று ஆடுவது போலத் தெரிந்தது.

தெளிவாகத் தெரியும் மற்றொரு கணத்திற்காகக் காத்திருந்தேன்.

 



வளைந்த நீண்ட forceps தேவைப்பட்டது .. Nasal forceps பயன்படுத்தினேன்.

துரிதமாக தொண்டைப் பகுதிக்குள் forcrps நுழைத்து எடுத்தபோது ஏதோ வந்தது
மீன் முள்ளுப் போல.

ஆனால் மீன் முள் அல்ல.

 சிக்கன் சாப்பிடும்போது ஒரு சிறிய எலும்புத் துண்டு மாட்டியிருந்தது.

ஒரு கணத்தில் அவளது வலி மறைந்தது

எச்சிலை முழுங்க முடிந்தது.

முகம் மலர்ந்தாள். 

தாயின் முக மலர்ச்சியும் இணைந்து கொண்டது.

இத்தகைய தருணங்கள்தான் மருத்துவப் பணியில் மிகவும் திருப்தியான மனநிறைவைத் தரும் கணங்கள்.

உடனடியாக நோயாளியின் துயர் தீர்ப்பதைவிட வேறு என்ன வெகுமதி மருத்துவனுக்கு கிடைக்கக் கூடும்.

தொண்டையில் அந்நியப் பொருள் சிக்குவது ஒரு மருத்துவ அவசர நிலையாகும். ஏனெனில் அது வழுவி சுவாசக் குழாயினுள் விழுந்துவிட்டால் மூச்சுத் திணறல் ஏற்படும் ஆபத்து உண்டு. 

பொதுவாக குழந்தைகள் பிளாஸடிக் துண்டுகள், சட்டைப் பின்கள், ஸ்டப்ளர் பின், விதைகள், போன்றவற்றை விழுங்கி அவஸ்தைப்படுவார்கள்

பெரியவர்களில் மீன் முள்ளு, எலும்புத் துண்டுகள் சிக்குவதுண்டு.

எதுவானாலும் இருமல் மூச்சுத் திணறல் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கச் செல்ல வேண்டும்.

0.0.0

சில நாட்களுக்குப் பின்னர் வேறெருவர் வந்திருந்தார்.
இவருக்கும் ஏதோ தொண்டையில் சிக்கிவிட்டது. மாத்திரை சாப்பிடும்போது கவலையீனமாக இருந்ததில் மாத்திரை அடைத்து வந்திருந்து foil packல் சிறு துண்டு சிக்கிவிட்டதாம்
எவ்வளவோ தேடிப் பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை.
சாதாரண வெளிநோயார் பிரிவில் வைத்து பார்க்க முடியாது.ENT நிபுணரிடம் அனுப்ப நேர்ந்தது.. சத்திரசிகிச்சை அறையில் வைத்து எடுக்க வேண்டியதாயிற்று

அவதானம் நண்பர்களே.

எதையும் விழுங்கும்போது கவனமான இருங்கள். குத்தக் கூடியவை, ஒட்டக் கூடியவை தொண்டையில் சிக்கினால் சிரமம்தான்.

 0.00.0

 

Read Full Post »

ஒரு கணம் நிலை தளர்ந்துவிட்டேன். இந்த நடு ஜாமத்தில்இ திசை தெரியாக் காட்டிற்குள் என்னவாகுமோ என மனம் திணறியது. நிலை குலைந்தேன்.

Luxury-Bus-FDG6123-
ஆழ்ந்த நித்திரையில் கிடந்த எனது காதில் கொதிக்கும் எண்ணையைக் ஊத்தியது போலிருந்தது அவனது நிர்த்தாட்சண்யமான இறுகிய குரல்

‘பஸ் பிரேக் டவுனாகிப் போட்டுது. எல்லாரும் உங்கடை சாமான்களுடன் இறங்குங்கோ’

‘மற்ற பஸ் கொழும்பு போக ரெடியா நிக்குது’ என்ற அவனது அடுத்த வாசகம் வயிற்றில் பால் கரைத்து ஊற்றிய நிம்மதியைக் கொடுத்தது.

அந்தர அவதிப் பட்டு தாவி இறங்கியபோது ஏற்கனவே பலர் இறங்கியிருந்தார்கள். டிக்கியில் கிடந்த சாமான்கள் பாதை ஓரமாகக் குவிந்து கிடந்தது.

‘உங்கடை உங்கடை சாமான்களை மற்ற பஸ்சில் ஏத்துங்கோ’ என்று அலட்சியமாகச் சொல்லியபடியே அரை மனதுடன் மாற்றி ஏற்றுவதற்கு உதவியும் செய்து கொண்டிருந்தான்.

‘மற்ற ஆக்கள் உங்கடை சாமான்களோடை அங்காலை நிக்கிற பஸ்சிலை ஏறுங்கோ என்றான்’ இன்னொரு உதவியாளன்.

வீதியின் கரையோரமாக இன்னும் கொஞ்சச் சனம் நிற்பது அப்பத்தான் கண்ணில் பட்டது. கனபேர் இல்லை. மிதமிஞ்சினால் 10-12 பேர் இருக்கும்.

அவர்கள் நாங்கள் வந்த ஏசி பஸ்சில் ஏறிக் குசாலாகப் பயணிக்க இருந்தவர்கள்.

‘சீட் நம்பர் போட்டிருப்பாங்களோ. பழைய நம்பர் சீற் கிடைக்குமோ. அல்லது நின்றபடிதான் மிச்சப் பயணமோ’ சொகுசுப் பயணத்திற்கு அல்லாடியது மனம்.

நல்ல வேளை சீட் கிடைத்தது.

உள்ளே போய் உட்கார்ந்து உடல் ஆறிய போது ‘ஏமாத்திப் போட்டாங்கள்’ மனம் சொல்லியது.

இது நாங்கள் வந்தது போன்ற வசதியான பஸ் இல்லை. சாதாரண 600 ரூபா டிக்கற் பஸ். நல்ல சீற்றுகள் இல்லை. அதை அட்ஜஸ்ட் பண்ணி காலைக் கையை நீட்டி நிம்மதியாகத் தூங்க முடியாது. ஏசியும் கிடையாது.

ஜன்னலுக்கால் வீசும் காற்று ஆளை எதிர்ப்பக்க ஜன்னலால் வெளியே தூக்கி எறிந்துவிடும் போலிருந்தது.

‘காலம்பிற வேலைக்குப் போகோணும். வசதியான பஸ் என்றால்தான் கொஞ்சம் கண் அயரலாம். அடுத்த நாள் களைப்பின்றி வேலை செய்யலாம்’ என்று எண்ணி சுளையாக 1300 ரூபா கொடுத்து இரண்டு நாட்களுக்கு முன்பே புக் பண்ணி வைச்சதை நினைக்க பற்றி எரிந்தது.

பஸ்சில் உள்ள இளசுகள் காரசாரமாக விமர்சித்தார்கள்.

‘பிரேக் டவுண் எண்டு போட்டு யாழ்ப்பாண ஆக்களை அதே ஏசி பஸ்சிலை அனுப்புறாங்கள். கள்ளப் பயலுகளை விடக் கூடாது. காசை வாங்க வேணும்.’

எங்கை வாங்கிறது? எப்படி வாங்கிறது? வெறும் சுடுகாட்டு ஞானம்தான். விடிந்தால் மறந்துவிடுவார்கள்

சரி காசு கிடக்கட்டும்.

ஏன் பஸ் மாத்தினாங்கள்?

‘இரகசியப் புலன் விசாரணை’யில் தகவல் கசிந்தது.

மறு நாள் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வருவதற்கு 3 பஸ் அளவிற்கு சனங்கள் இருக்குதாம். ஆனால் அங்கை இரண்டு பஸ்தான் நிற்குதாம்.

பிரேக் டவுண் எண்டு பொய் சொல்லி சனங்களை ஏச்சுப்போட்டு அந்த ஏசி பஸ்சை ஊருக்கு திருப்பி அனுப்பிட்டாங்கள். எப்படியாவது வந்து சேர வேணும் என்ற அவசியத்தில் வாயை மூடிக் கொண்டு இவர்கள் பயணத்தை தொடர வேண்டியதாயிற்று.

நடந்ததற்கு ஒரு ‘சொறி’ அல்லது ‘மன்னிக்கவும்’ என்றாவது சொல்லியிருக்கலாம்.

அது ஒண்டும் கிடையாது. பொய் சொல்லி பையை நிறப்பதான் முன் நிற்கிறாங்கள்

அம்மா தாயே. முத்துமாரி மாதாவே. அன்னையே ஏனம்மா சனங்களைப் பேய்க் காட்டுறாய்.

சனங்கள் பேய்ச் சனங்கள் அல்ல. தெளிவாகவே புரிந்திருக்கிறார்கள்.

0.00.0

Read Full Post »

என் நாடித்துடிப்பு 72ல் இருந்து 100ற்கு திடீரென எகிறிப் பாய்ந்தது.

அவர் சொன்ன வார்த்தைகள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கி நிலைகுலைய வைத்துவிட்டது. உட்கார்ந்திருந்த சுழல் நாற்காலியை தற்பாதுகாப்புக்காக என்னையறியாமலே சற்றுப் பின்னுக்கு தள்ளிவிட்டதை உணர்ந்ததும் சற்று வெட்கமாக இருந்தது.

வெட்கப்பட்டு காலத்தைக் கடத்தக் கூடிய தருணம் அல்ல. தற்பாதுகாப்பைத் தேடி வேண்டிய நேரம்.

அவசர கணம்.

சொன்னவர் ஒல்லிக் குச்சி மனிதன் அல்ல. ஆஜானுபவானான மனிதர். மல்யுத்த வீரன் போல பரந்த மார்பும், விரிந்து தோள்களுமான நல்ல திடகாத்திரமான உடல். பத்துப்போரை ஒரே நேரத்தில் அடித்து விழுத்திவிடுவார் போலிருந்தது.

நமது தனுஸ் பத்துப்பேரை அல்ல நூறு பேரை தனியாளாக அவ்வாறு அடித்து விழுத்தியதைப் பார்த்ததில்லையா என எனது அறியாமையை கிண்டல் பண்ணாதீர்கள். நீங்கள் அவ்வாறு கேள்வி கேட்பது அவரை அசௌகர்யப்படுத்திவிடும்.

உற்றுப் பார்த்தபோது வெறும் கையுடன்தான் வந்திருந்தார். தப்பித்தேன். கையில் ஆபத்தானவை எவையும் இல்லை. பொக்கற்றுக்குள்ளும் இருப்பதாகத் தெரியவில்லை. படபடப்பு அடங்கி நிம்மதி பரவியது.

திரும்ப யோசித்தபோது அவமானமாக இருந்தது. Gun என்றவுடன் நான் ஏன் இப்படி பயங்கொள்ளியாகி ஒடுங்கிபோகிறேன்?

வாழ்ந்த சூழல்தான் என்பதில் சந்தேகம் இல்லை.

துப்பாக்கி தூக்கி எதிரிகளை அழிக்கும் ஆவேசக்காரர்கள் மத்தியில் எனது வாழ்நாளில் சுமார் அரைவாசிக் காலத்தை கழிக்க நேர்ந்திருக்கிறது. அவை களிக்க வைக்கும் நேரங்கள் அல்ல. அவர்கள் விடுதலைக்காகப் போராடுபவர்கள் மற்றும் இராணுவ வீரர்கள். கனவிலும் நினைவிலும் அவ்விரு தரப்பினருமே கொல்லும் வெறியோடுதான் திரிந்தார்கள். எதிரிகளைக் கொல்லும் வெறி. குத்திக் குதறிக் கொல்லும் வெறி.

இடையில் அகப்பட்டால் நாம் அம்போதான்.

ஒரு எதிரியைக் கொல்வதற்காக எத்தனை பொதுமகன் செத்தாலும் பரவாயில்லை என எண்ணும் அதீத கொள்கைப் பிடிப்பாளர்கள். அதுதான் யுத்த தர்மம் என வாதாடுவார்கள்.

இது விதண்டாவதம் என்று சொன்னவன் துரோகியென பட்டை குத்தப்படுவான். துரோகிகளுக்கு அதிக பட்ச தண்டனை வழங்கப்படுவதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது.

இதனால் உண்மைகளை வெளிப்படையாகச் சொல்ல அன்றும் இன்றும் சரி எவருக்கும் விருப்பம் இல்லை. எனக்கும்தான்.

ஆனால் இது எனக்கு மட்டும் நேர்ந்த அவலம் அல்ல. தமிழனத்தின் அவலம். இன்னும் சற்றுப் பரந்த சிந்தனையோடு யோசித்தால் இலங்கைத் தீவின் அனைத்து மக்களினதும் அவலம். இனத்திற்கு இனம் அளவுகளில் சற்று ஏற்றத்தாழ்வு இருக்கலாம். ஆனால் பாதிப்பும் துப்பாக்கி ஏந்தியவர்கள் பற்றிய பயமும் அனைத்து மக்களிடமும் இருந்ததை மறுக்க முடியாது.

இவர் சொன்ன Gun வேறு விடயம்.

இது வேறு விடயம் என்பது ஆரம்பப் பயம் தணிந்ததும்தான் தெளிவாகியது.

உயிரைப் பறிக்கும்; துப்பாக்கியல்ல. உயிர் கொடுக்கும் துப்பாக்கி இவரது.

அவ்வாறு யோசித்தால் பார்த்தால் நானும் துப்பாக்கிக்காரன்தான். அவருடையதை விட என்னுடையது இன்னமும் நல்ல நிலையிலேயே இருக்கிறது எனப் பெரிமிதம் கொள்ளலாம்.

இருந்தபோதும் அவரது பிரச்சனையைப் புரிந்து கொள்ள மேலும் சில விடயங்களைப் பற்றி விசாரிக்க வேண்டியிருந்தது.

“நீரிழிவு நோய் உங்களுக்கு இருக்கா” எனக் கேட்டேன்.

“இல்லை’ என்றார் திடமாக.

சற்று யோசித்த பின்னர் ‘கொஞ்சமாக இருக்கு ஆனால் மருந்து சாப்பிடுவதில்லை’ என்றார்.

சாப்பிடாமல் எடுத்தால் இரத்தத்தில் சீனியின் அளவு 120, 140 என்று தானிருக்குமாம்.

நீரிழிவு இல்லாதவர்களுக்கு இது 110ற்குள் இருக்க வேண்டும்.

சாதரண அளவை விட 10 முதல் 30 மட்டுமே கூட இருப்பதால்

“இது கடுமையான நோய் அல்ல. குறைவாகத்தானே இருக்கு. சாப்பாட்டால் கட்டுப்படுத்தி விடலாம்” 

என எண்ணி அக்கறை எடுக்காமல் விட்டுவிட்டார்.

நீரிழிவு என்பது அறிகுறிகளற்ற நோய். ஆரம்ப நிலைகளில் எந்தவித இடைஞ்சல்களையும் நோயாளிக்குக் கொடுக்க மாட்டாது. ஆனால் உள்ளிருந்து அரித்துக் கொண்டிருக்கும். அறுந்து விழும் நிலையில்தான் நோயாளிக்குக் தெரிய வரும்.

சிறுநீரகப் பாதிப்பு, அது செயலிழத்தல், மாரடைப்பு போன்ற இருதய நோய்கள், பக்கவாதம், கண்பார்வை மங்கல், மாறாத புண்கள், கால்களை அகற்ற நேருதல் எனப் பல. நீரிழிவினால் நுண்ணிய குருதிக் குழாய்கள் பாதிப்புற்று, உறுப்புகளுக்கு போதிய இரத்தம் பாய முடியாத நிலையில் இவை யாவும் தோன்றுகிறன.

இப்படியான பல பிரச்சனைகள் வந்த பின்னர்தான் பலருக்கு தமக்குள்ள நீரழிவின் பாரதூர நிலை தெளிவாகிறது.

அதற்குப் பின் மார்புக் கவசம் அற்ற வில்வீரன் போலத்தான் இவர்கள் நிலை. ஏற்கனவே வீசிய பாசக்கயிற்றை யமன் எந்ந நேரத்திலும் இறுக்க முடியும்.

இவருக்கும் அவ்வாறுதான். ஏற்கனவே உறுப்பின் இரத்த ஓட்டமும் அதற்கான நரம்புகளும் பாதிக்கப்பட்டுவிட்டன.

இதனால் மனத்தில் எவ்வளவுதான் ஆசை இருந்தபோதும் இவரால் முடியவிதில்லை. பேரழகி ஹெலன் இவர் முன் அம்மணமாக வந்து நின்றால் ஆசை மீறும். ஆனால் காற்றில்லாத பலூன் போல உறுப்பு சோர்ந்து கிடக்கும்.

“My Gun is not firing”  என்று சொன்னது அதனால்தான்.

இவர் கற்றுக் கொள்ளாத பாடம் இவருக்கு உலை வைத்துவிட்டது..

Either you have diabetis or no diabetis. There is nothing in between called mild diabetis.  

எனது steth இன் குரல் புளக்கில் 22nd February 2012 வெளியான கட்டுரைசுடாத துப்பாக்கி

வீரகேசரியில் நான் எழுதிய அனுபவப் பகிர்வு

Read Full Post »

வேர்ட் ப்ரஸ் கொம் ஒவ்வொரு புளக்கர்களினதும் பதிவுகளையும் ஆராய்ந்து எந்தப் பதிவு அதிக நபர்களால் பார்வையிடப்பட்டது, யார் அதிகம் கொமன்ட் பண்ணினார்கள் போன்ற தகவல்களைத் தருகிறது.

அவர்கள் எனக்குத் தந்நத ஆச்சரியமான தகவல்தான் 105 நாடுகளிலிருந்து எனது பதிவுகளைப் பார்க்கிறார்கள் என்பது.

உங்களது தரவுகளையும் (stats) பாருங்களேன்.

The WordPress.com stats helper monkeys prepared a 2012 annual report for this blog.

Here’s an excerpt:

4,329 films were submitted to the 2012 Cannes Film Festival. This blog had 49,000 views in 2012. If each view were a film, this blog would power 11 Film Festivals

கீழே கிளிக் பண்ணிப் பாருங்கள்

Click here to see the complete report.

Read Full Post »

‘சோக்கவுட்’ நிசப்தம் (The Silence) எனும் நாத வெள்ளம்
கண்கள் இருந்தும் எம்மைச் சூழவுள்ள உலகைத் தெரிந்து கொள்ளாத மடையர்களாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காதுகள் இருந்தும் எம்மைச் சூழவுள்ள உலகிலிருந்து எழும் உன்னத ஒலிகளின் லயநயத்தை ரசிக்கத் தெரியாத கலைஞானம் அற்றவர்களாக உழன்று கொண்டிருக்கிறோம்.

TheSilence_DVD

இருந்த போதும் காலையில் விழித்து எழும்போது எழுகின்ற பறவைகளின் ஒலியும், தென்றலின் இசையும், பல எழுத்தாளர்களின் மனத்தைத் தொடுவதை படைப்புகளுடாக வாசித்து மகிழ்ந்திருக்கிறோம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிச்சயம் ஒரு கலைஞன் ஒளிந்திருக்கிறான். ஒளிந்திருக்கும் அக் கலைஞனை மீட்டெடுத்து சுருதி கூட்ட வேண்டியது அவரவரால்தான் முடியும்.

வீதியில் ஓடும் வாகன இரைச்சலும், தொலைவில் கூவிச்செல்லும் இரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தில் அராத்தும் ஒலியும் தூக்கத்தைக் கெடுத்து பலரையும் இம்சைப்படுத்துகின்றனவே ஒழிய மனம் உருக வைப்பதில்லை.
அடுத்த வீட்டில் கதவை அடித்து மூடும் ஓசையும், பைப் நீர் விழுந்து வாளி நிறைக்கிற ஒலியையும், அதிலிருந்து நீரை மொண்டு குளிக்கிற ஓசையிலும் ஒரு இனிய லயம் கலந்திருப்பதை எங்களில் யாராவது, எப்பொழுதாவது உணர்ந்திருக்கிறோமா?

நித்திரையைக் குழப்புகின்றன, அமைதியைக் குலைக்கினறன என்று எரிச்சல்படத்தான் பலருக்கும் தெரிகிறது. இச் சத்தங்களும் ஒலிகளும் சூழலை மாசடையச் செய்து எமது காதுகளை மந்தமாக்குகின்றன என்ற குற்றச் சாட்டுகளுக்கும் குறைவில்லை. அதில் விஞ்ஞான ஆதாரம் இருப்பதை மறுக்க முடியாதுதான். ஆனால் ஓசை இல்லாத ஒரு உலகத்தை உங்களால் கற்பனை பண்ண முடிகிறதா? எவ்வளவு மந்தமான உயிர்ப்பற்ற சவக்காலையின் வெறுமைக் கலவையாக இருக்கும்.

கண்களால் காணும் காட்சிகளாவன, காதில் விழுபவற்றை விட வேகமாக எமது மூளையில் உறைப்பதால்தான் ஒலியை விட ஒளியில் மறந்து, ரசிக்கத் தெரியாது வாழ்கிறோம்.

குர்ஸிட் பார்வையற்ற ஒரு சிறுவன். அவன் எங்களைப் போல கலாஞானசூனியனாக இல்லை. அவனைப் பொறுத்த வரையில் அவனைச் சுற்றி எழுகின்ற ஒவ்வொரு ஒலியிலும் ஏதோ ஒரு இசை இருக்கிறது. லயம் இருக்கிறது. மனத்தை ஈர்க்கும் அமானுச சக்தி இருக்கிறது. வாத்திய ஒலிகளும், இன்னிசையும் மட்டும் அவனை ஈரப்பதில்லை. அவனைப் பொறுத்தவரையில் உலகே ரம்யமான ஒலிகளின் கூடம்தான். ஆனால் அதில் நல்லதையும் கெட்டதையும் பிரித்தறிந்து ரசிப்பவன்.

காலையில் இவனது வீட்டுக் கதவை கோபத்தோடு ஓங்கி அறைந்து தட்டும் ஒலியும், தொடர்ந்து அவர்களைத் துயில் எழுப்பி வாடகைப் பணத்தை அறவிடச் சத்தமிடும் வீட்டு சொந்தக்காரனின் கோபக் குரலிலும் கூட ஏதோ ஒரு ஓசை நயத்தை அவனால் ரசித்து மகிழ முடிகிறது.

பும் பும் பூம்… பும் பும் பூம்…

TheSilence_003

இசைக்கு அப்பாலும் அவனது உணர்திறன் விசாலித்திருக்கிறது. வேலைக்குச் செல்லும் வழியில் தாம் சுட்ட பிரட்டுகளை விற்பதற்காகப் பெண்கள் நிற்பார்கள். தனது விரல்களின் தொடு உணர்வுகள் மூலம் அவர்களது பிரட்டின் தரத்தை இவனால் சொல்லிவிட முடிகிறது. ஆனாலும் ஒருவளது பிரட் சற்றுக் காய்ந்ததாக இருந்தபோதும் அவளிடம் வாங்கிச் சாப்பிடுகிறான். காரணம் அவளது குரல் இனிமையானது என்கிறான். அவனைப் பொறுத்தவரை உணவின் சுவையை விட இசை மாண்புடையது.

TheSilence_005

10-12 வயது மதிக்கத்தக்க சிறு பையன் அவன். ஒலிகளின் நயத்தைக் கூர்த்தறியும் அற்புத ஆற்றல்  இயல்பாகவே அவனுக்கு வாய்த்திருந்தது. தனது தாயுடன் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறான். தகப்பனற்றவன் எனச் சொல்ல முடியாது. ஏதோ தேவைக்காக ரசியாவிற்கு சென்ற தகப்பனிடமிருந்து எந்தத் தகவலோ உதவியோ கிடையாது. இதனால் மிகவும் வறுமையிலிருக்கும் அவனது குடும்பத்தின் வயிற்றுப்பாட்டிற்கு அவனது உழைப்பு அவசியமாக இருக்கிறது.

அவனது ஆற்றல் அவனுக்கு ஒரு தொழிலைத் தேடிக் கொடுத்திருந்தது. இசைக் கருவிகள் விற்பனை செய்யும் ஒரு கடையில் அவன் அவற்றிக்கு சுருதி மீட்டிக் கொடுப்பவனாகத் தொழில் பார்க்கிறான். ஆனால் எல்லா முதலாளிகளையும் போலவே இவனது முதலாளியும் காசு ஒன்றே குறியானவன். இவனது திறமையை மதிப்பவனாக இல்லை. யாராவது அவன் விற்ற வாத்தியத்தைக் குறை கூறினால், சுருதி சேர்த்துக் கொடுத்த இவனே குற்றவாளியாக ஏச்சு வாங்க வேண்டியவனாகிறான்.

வேலைக்குச் செல்லும்போது பஸ்சில் பயணிக்க நேருகிறது. போகும் வழியெல்லாம் இவன் சூழலிருந்து எழும் ஒலிகள் கேட்காதவாறு, தனது காதுகளைப் பொத்திக் கொண்டே பயணிக்கிறான். அவனாக விரும்பி இதைச் செய்வதில்லை. நல்ல இசை கேட்டால் இவன் தனது சூழலையும், தன்னைக் காத்திருக்கும் பணிகளையும் மறந்து விடுவான். இவனது கால்கள் தன்னிச்சையாக இசை ஒலியைப் பின் தொடரும். எங்கோ செல்ல வேண்டியவன் அதை மறந்து வேறெங்கோ சென்றுவிடுவான்.

இவனது பயணத்தில் உதவுவது ஒரு குட்டித் தோழி நதீரா. ஆனால் இவனிலும் சற்றுப் பெரியவள். பார்வையற்றவனின் கண்களாக அவள் இயங்குகிறாள். அத்துடன் இவன் வாத்தியங்களைச் சுருதி மீட்டும் போது, அது சரியாக இருக்கிறதா எனச் சரிபார்ப்பதும் அவள்தான். அவன் சுருதி மீட்டும் போது மெல்லியதாக அவளது காது வளையம் ஆட ஆரம்பிக்கும், பின் தலை முடி, முகம், கைகள் எனத் தொடர்ந்து இறுதியில் உடலே தாளலயத்திற்கு ஏற்ப ஆடத் தொடங்கிவிடும். அந்த அழகை ரசித்திக் கொண்டே இருக்கலாம். அற்புதமாக நடிக்கிறாள் அந்தப் பெண்.

அவளது உலகம் குர்ஸிட் மட்டுமே. இவனது கவனம் அங்கும் இங்கும் அலையவிடாது கவனமாகக் கூட்டிச் செல்பவள் அவள்தான். அவளால்தான் அது முடியும். தெருப் பாடகனின் இசையில் மயங்கி அவனது ஓசையைப் பின் தொடர்ந்து செல்வதால், வேலைக்குச் செல்லத் தாமதமாகி ஏச்சு வாங்காஙாகாது காப்பாற்றுவது அவள்தான்.

அவன் எல்லா அழகையும் ஆராதிப்பவன். அவளின் புற அழகை அல்ல. அவளின் உள்ளொளியைப் புரிந்து வைத்திருக்கிறான்.

குர்ஸிட் ஒரு வண்டு போன்றவன். அவற்றின் ஓசை இவனுக்குப் பிடித்தமானது. ஆயினும் சாணியில் மொய்க்கும் வண்டுகளின் ரீங்காரம் அபசுரம் என்பான். ஆனால் மலர்களில் தேன் தேடும் தேனீக்களின் ரீங்காரம் அற்புதமானது என ரசிப்பான். தேனீக்களுடன் பாசம் கொண்டவன். அவற்றோடு பேசுவதும் இவனுக்குப் பிடித்தமானது. அவை பற்றிப் பேசுவதில் மகிழ்வு கொள்பவன்.

ஆனால் அவற்றைப் போலவே இவனும் நெறிப்படுத்தப்படாத தேனீ. பதவி, பணம், அந்தஸ்த்து  போன்றவை இவனது இசை ரசனையைப் பாதிப்பதில்லை. தெருப் பிச்சைக்காரன் எழுப்பும் இசை லயத்துடன் அமைகையில் அதில் ஆழ்ந்துவிடுவான். அந்த கானகக் கானமும் இவனை வாவென அழைக்கும்.

நெரிச்சல் மிகுந்த கடைத் தெருவில் இசையின் வழியே பயணிக்கிறான். இளைஞன் கையிலிருக்கும்; ரேடியோவிலிருந்து அற்புதமான இசை வருகிறது. நெருக்கமான சனங்களிடையே, இசையின் நீக்கல்களின் இடையே நெளிந்து வளைந்து புகுந்து பயணிக்கும் இவன் வழி தவறிவிடுகிறான். கூட வந்த நதீரா இவனைக் காணாது பயந்து தேடுகிறாள். என்னவானானோ என நாமும் கலங்கிவிடுகிறோம்.

ஆனால் அவள் எப்படி இவனைக் கண்டுபிடிக்கிறாள் என்பது அற்புதமான காட்சியாகிறது. அவள் தன் இரு கண்களையும் மூடிக் கொண்டு தேடியலைகிறாள். எங்கோ தொலை தூரத்தில் மங்கலாக இசை ஒலி கேட்கிறது. அதில் தன் மனத்தை ஆழச் செலுத்துகிறாள். கண்களை மூடியபடியே அது வரும் திசையில் தட்டுத் தடுமாறிப் பயணிக்கிறாள். அவள் அடைந்த இடம் ஒரு இசைக் குழு கானம் எழுப்பிக் கொண்டிருக்கும் கடையாகும். அங்கு வெளியே மதிலோரம் இசையில் மயங்கி, சுவரில் சாய்ந்தபடி தன் தனியுலகில் இருக்கிறான் குர்ஸிட்.

படம் முழுவதும் இசை பொங்கி வழிகிறது. காற்றில் பறந்தலையும் கடதாசிச் சுருள் போல நாம் அந்த இசையின் ஓட்டத்தில் அள்ளுண்டு பயணிக்கிறோம். மழை ஓசை இசையாகிறது. நாயின் குரைப்பிலும், குதிரையின் குளம்பொலியிலும், பறவைகளின் சிறகடிப்பிலும், செம்மறி ஆடுகளின் கனைப்பிலும் கூட இசை இருக்கிறது என்பதை உணர்ந்து அதிசயிக்கிறோம். ஒருதடவை வாத்தியத்துடன் சென்று கொண்டிருக்கும்போது மழை ஆரம்பிக்கிறது. அதில் குதித்து விளையாடி ஆனந்திக்கிறான். மழை விடவில்லை. நனைந்து தெப்பமாக குளிர்பிடிக்கிறது. ஓடும்போது தடக்கி விழுகையில் வாத்தியம் கை நழுவித் தூரப் போய் விழுகிறது. எங்கென பார்வையற்றவன் கண்டு கொள்வது எப்படி? மிகுந்த துயரம் ஆட்கொள்கிறது. ஏற்கனவே முதலாளி இவனை வேலையிலிருந்து கலைக்க முற்பட்டிருக்கிறான். இப்பொழுது வாத்தியமும் தொலைந்து விட்டால்?

ஆச்சரியம் காத்திருக்கிறது. வாத்தியத்தின் மேல் விழும் மழைத்துளிகள் ஓசையை எழுப்புகின்றன. அது ஒரு சீரான ஒலிலயத்தில் அவன் காதில் பாய்கிறது. இசைத்துளி பொழிகிறது. அதுவே அவன் மனத்திற்கு ஒளதடமாகிறது. வாத்தியமும் கிடைத்து விடுகிறது.

எமக்கென்று தனிப்பாதை கிடையாது. வானை எட்டும் முகில்களாகப் பறந்தும், ஆழ்கடல் சிறுமீன்களாக நீந்தியும் இசையுடன் இரண்டறக் கலந்து பயணிக்கிறோம். சுட்டெரிக்கும் தீயும் இல்லாத, குத்தி வலிக்க வைக்கும் முற்களும் இல்லாத ஆனந்தப் பெருவெளி. சண்டை, சச்சரவு, குரோதம் ஏதுவும் எம்மைச் சஞ்சலப்படுத்தாத படம்.

அவன் வாழும் வீடு நதியுடன் இணைந்தது. பாலத்தால் வீதிக்கு வர வேண்டும். அவன் வேலையிலிருந்து வரும்போதும் மரங்களின் நிழல் அமைதியான நீரில் பிம்பமாக விழும் தோற்றம் அற்புதமானது. அதிசயிக்க வைக்கிறது. கை தேர்ந்த ஓவியனின் கன்வஸ் ஓவியம் போல கலைநயம் மிக்கது.

அதேபோல Tajikistan நகரின் கடைத் தெருக்களிலும், வீதிகளிலும் எம்மை கைபிடித்து அழைத்துச் செல்கிறது கமரா. மிகச் சிறப்பான படப்பிடிப்பு. அலங்காரமான கடைகள், அழகான முகங்கள், இவை யாவும் வித்தியாசமான கோணங்களில். நாம் காண்பது அவ்வாறாக இருந்தபோதும், அவர்களின் மொழியும், கலாசாரமும் அந்நியமாக தோன்றியபோதும், அந்த மனிதர்களின் அடிப்படை உணர்வுகள் மற்றெல்லா மனிதர்களுடையது போலவே இருப்பதால், அதில் எங்களையும் அடையாளம் காண முடிகிறது. இதனால் படத்துடன் ஒன்றச் செய்கிறது.

மிகவும் மாறுபட்ட பார்வையில்; மனித வாழ்வின் மறக்கவொண்ணா கணங்களையும், மனத்தில் எழும் கவித்துவ உணர்வுகளையும் இசையில் குழைத்து அள்ளிச் சொரிகிறது இப்படம். உள்ளத்தை அள்ளிப்பிடிக்கும் ஓவியம் போன்றிருக்கிறது. உலகம், மனித வாழ்வு, இசை இவற்றை வெறுமனே சித்தரிப்பதற்கு அப்பாலும் பயணிக்கிறது. கனதியில் எம்மனத்தை ஆழ்த்தியபடியே படம் நிறைவுறுகிறது.

mohsen_makhmalbaf

Mohsen Mahmalbaf

ஈரானின் புகழ்பெற்ற Mohsen Mahmalbaf  ன் படைப்பு இது. அவர் திரைப்படத் துறையில் மிகப் பெரிய ஆளுமையாவார். நெறியாளர் மட்டுமல்ல நல்ல கதாசிரியரும் கூட. ஈரானிய சினிமாவில் புதிய அலை இவருடனேயே ஆரம்பிக்கிறது எனலாம். இவரது மிகப் பிரபலமான முதற் சினிமா கந்தஹர் ஆகும்.

Mohsen Makhmalbaf பற்றிய குறிப்பு

இவரது வாழ்க்கை இவருக்கு நிறையவே கற்றுத் தந்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் நாயகனான குர்ஸிட் போலவே மிகச் சிறுவயதிலேயே குடும்பச் சுமையைத் தனது தோளில் ஏந்த வேண்டியதாயிற்று. 8 வயதிலேயே தந்தை இழந்து பல சின்னசின்னத் தொழில்களைச் செய்து, 15 வயதளவில் விடுதலைப் போராளியாகி, துப்பாக்கிச்; சூடுபட்டு சிறைப்பட்டவராவார். 4 ½ வருட தண்டனையில் தன்னைப் புடம்போட்டுக் கொள்கிறார். தீவிர அரசியலில் இருந்து விடுபட்டு இலக்கியத்தில் தன்னை ஆழ்த்திக் கொண்டு படிப்படியாக வளர்ந்தவர் ஆவார். இப்பொழுது பிரான்ஸ்சில் வசிக்கிறார்.

25 சினிமாக்களுக்கு மேல் இயக்கிய இவரது 5 திரைப்படங்கள் அவரது தாய் நாடான ஈரானில் தடைசெய்யப்பட்டுள்ளன. அதில் நிசப்தம் என்ற இந்தத் திரைப்படமும் அடங்கும்.

ஏன் இது தடைசெய்யப்பட்டது என்பதை படத்தை மனத்துள் மீள்வாசிப்பு செய்தேன்.

குர்ஸிட்டும், நதீராவும் பாதை வழி போகையில் அவள் திடீரென நிற்கிறாள். கையைப் பற்றி அவனையும் நிறுத்துகிறாள். அவள் முகம் பயத்தால் உறைந்திருப்தைக் காண்கிறோம். “அந்த வழியில் துவக்கோடு இளைஞன் நிற்கிறான். பெண்கள் முக்காடின்றி வந்தால் தாறுமாறாக ஏசுவான்” போகிற போக்கில் சொல்லிப் போகும் வசனமாக முதலில் தோன்றியது. அவள் வேறுபாதையால் செல்வோம் என்கிறாள். இது போன்ற வேறு ஓரிரு காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

ஆனால் இரை மீட்கையில் மிகவும் முக்கியமான காட்சியாகப்படுகிறது. தீவிரவாதிகளும், மத கலாசார அடிப்படைவாதிகளும் மாற்றுக் கருத்துகளுக்கு இடமளிப்பதில்லை. துப்பாக்கி, பொல், கடும்சொல் போன்ற ஆயுதங்களால் மக்களை பயமுறுத்தி அடிமைப்படுத்துகிறார்கள். தங்கள் கருத்தை ஆயதமுனையில் திணிக்கிறார்கள். இவற்றைப் பொறுத்துக் கொள்ள முடியாத மக்கள் வேறுபாதையைத் தான் நாடமுடியும். நதீரா தெருப்பாதையை மாற்றுவது ஒரு குறியீடாக ஒலிப்பதாகவே நான் கருதுகிறேன். மிக நாசூக்காக தன் கருத்தைத் தெளிவித்திருக்கிறார். இப்படம் ஈரானில் தடை செய்யப்படுவதற்குக் இதுதான் காரணமாக இருந்ததோ தெரியவில்லை.

படம் முழுவதும் இசை அள்ளி அணைக்கிறது. வருடிக் கொடுத்து இதமளிக்கிறது. கிளுகிளுப்பூட்டிச் சிரிக்கவும் வைக்கிறது. மோனத் துயரில் ஆழவும் வைக்கிறது. இறுதிக் காட்சியில் பீத்தோவனின் 5வது சிம்பனி கம்பீரமாக ஒலிக்கிறது. மேற்கத்தைய உலகின் நாதமும், ஈரானிய கலாசாரத்தின் வாழ்வும், இசையாலும் அற்புதமான கமராக் கண்களாலும் இணையும் உன்னதம் அது.

மங்கிய ஒளி, அமைதியான ஆற்று நீர், அதில் மிருதுவான பூவாக மிதக்கும் ஓடம், தொலைவிலிருந்து அது மெதுவாக நகர்ந்து வருகிறது இவனையும் ஏற்றி வேறிடம் செல்ல. தொலைவில் அவர்கள் வாழ்ந்த வீடு அந்நியமாகி எட்டாத தூரத்தில் மறைந்துகொண்டு வருகிறது.

வேலை போய்விட்டது. வீட்டு வாடகை கட்ட முடியாததால் பொருட்களை தூக்கி எறிந்து அவர்களையும் வீட்டிலிருந்து வெளியேற்றி விடுகிறான் சொந்தக்காரன். நிர்க்கதியாகி நிற்கிறார்கள் அவர்கள். ஆனால் வாழ்வு என்றுமே அஸ்தமித்துப் போய்விடுவதில்லை. ஏனெனில் அஸ்தமனங்ளையும் உதயமாக்க வலு கொடுக்கும் இசை அவனது கைவசம் இருக்கிறது. அவனது கைகள் அசைகின்றன. தலை தாளம் போடுகிறது. லயநயத்துடன் உடல் அசைந்தாடுகின்றது. ஒரு இசை ஞானிக்குரிய நுட்பத்துடன் இசையைப் பிறக்க வைக்கின்றன.

அவனது கையசைவிற்கு ஏற்ப கடைத்தெருவே இசை எழுப்புகிறது. பானை, சட்டி, இசை கருவிகள், வாளால் மரமரிதல் என யாவும் வாத்தியங்களாகின்றன. தொழிலாளிகள் தாள லயத்துடன் தட்டி இசையாக எழுப்புகிறார்கள. சந்தை இசைக் கூடமாகிறது.

TheSilence_010

இசையில் மயங்கி மனக்கண் மூடிக் கிடந்த நாம் ஏதோ அருட்டுணர்வில் மடல் திறக்கையில் படம் முடிந்திருக்கிறது.

0.0

நீண்ட நாட்களுக்கு முன் மறந்து போகாத சில புளக்கில் பதிந்த பதிவு.

நிசப்தம் எனும் நாத வெள்ளம்

எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0.0

Read Full Post »

Older Posts »