Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘அறிவியல்’

முரண்படும் தார்மீகமும் அறிவியலும்
மரபணுக்களில் கட் அன்ட் பேஸ்ட்

கட் அன்ட் பேஸ்ட், வெட்டி ஒட்டுதல் பற்றி எழுத்துலகில் நன்கு தெரியும். அங்கொன்று இங்கொன்றாக வேறுவேறு கட்டுரைகளில் வாக்கியங்களை வெட்டி அவற்றை தமக்கு ஏற்றவாறு ஒட்டி ஓரு புதுக் கட்டுரையை உருவாக்கிவிடுவார்கள் சில கில்லாடிகள்.

அதைத் தங்கள் சொந்த ஆக்கமாக வெளிக்காட்டிப் பந்தா காட்டுவார்கள். இலக்கிய விஞ்ஞான மருத்துவக் கட்டுரைகளிலும் இவை தாரளாமாக நடக்கிறது. குறுக்கு வழியில் புகழ் தேடும் மலினப் பிரகிதிகள் அவர்கள்.

cut and paste A4 sml
இப்பொழுது விஞ்ஞானிகள் ஒரு புதுவிதமான கட் அன்ட் பேஸ்ட் செய்திருக்கிறார்கள். இந்தச் செய்தி வெளியானதும் அவர்களுக்கு சமூகத்தில் அவமானம் ஏற்படவில்லை. மாறாக அறிவியல் உலகில் பெயரும் புகழும் கிடைத்திருக்கிறது.

ஆனால் அவர்கள் வெட்டி ஒட்டியது சாதாரணமானவர்களது கை எழுத்துகளை அல்ல. இறைவனின் கையெழுத்தை. அல்லது இயற்கையின் கையெழுத்தை என்போமா?

தெளிவாகச் சொன்னால் மற்றவர்கள் தலை எழுத்தை நிர்ணயிக்கும் மரபணுக்களை (ஜீன்களை) ஆகும்.

மரபணு எடிட்டிங்

மரபணுபை வெட்டி ஒட்டியது மனிதர்களில் அல்ல. விலங்குகளான மந்திகளில் (macaques) ஆகும். அவ்வாறு செய்யப்பட்டதற்குக் காரணம் என்ன? சில நோய்களை, முக்கியமாக மனித இனத்தை அல்லற்படுத்திக் கொண்டிருக்கும் சில நோய்களை அந்த விலங்குளில் இந்தக் கட் அன்ட் பேஸ்ட் முறையில் செயற்கையாக உண்டு பண்ணுவதற்காகவே.

Transposagen_GeneEditing2449961190

 

 

உதாரணமாக பார்க்கின்சன் நோய், அல்சைமர் நோய் போன்றவை இன்று சரியான மருத்துவம் இல்லாததால் பல மனிதர்களின் மூத்த வயது வாழ்வை நரகமாக்குகின்றன. பராமரிப்பர்கள் கையறு நிலையில் திணறுகிறார்கள்.

இத்தகைய நோய்களை மனிதர்களை ஒத்த விலங்குகளில் வரச் செய்வது அந்நோய் பற்றிய நுணுக்கமான அறிவைப் பெறுவதற்காக ஆகும். நோயுற்ற அம் மிருகங்களை அவதானிப்பதும், அவற்றால் ஏற்படும் பாதிப்புகளை நவீன ஆய்வு உபகரணங்கள் மூலம் தெளிவாக கண்டறியவும் முடியும்.

இதன் நீட்சியாக அந்நோய்களைக் குணமாக்கக் கூடிய நவீன புதிய திறமையான சிகிச்சை முறைகளை பரீட்சிக்கவும் முடியும் என நம்புகிறார்கள்.
ஆச்சரியகரமான இந்த அதிநவீன மருத்துவ ஆய்வு நடாத்தப்பட்டது அமெரிக்காவிலோ இங்கிலாந்திலோ அல்ல. சீனாவில் என்பது ஆச்சரியப்பட வைக்கிறது. மிருக ஆய்வு பற்றிய இறுக்கமான சட்ட திட்டங்கள் சீனாவில் இல்லாதது காரணம் என்று சொல்கிறார்கள். இருந்தபோதும் இது வரவேற்கத்தக்க விஞ்ஞானப் பாய்ச்சல் என்பதில் சந்தேகம் இல்லை.

Macaque-monkey-twins-Mito-001

கருவுற்ற குரங்கு முட்டைகளில் இரண்டு மரபணுக்களை மரபணு எடிட்டிங் முறையில் (genome editing ) மாற்றி வைத்தார்கள். பின்னர் இவற்றை வாடகைத் தாய்மார்களின் கருப்பையில் வைத்தார்கள். இதன் பயனாக இருண்டு வால் நீ;ண்ட குரங்குக் குட்டிகள் பிறந்துள்ளன. ஆனால் 5 வாடகைத் தாய்மாரின் கருப்பையில் வைத்தவை சிதைந்துவிட்டன. இன்னும் நான்கு வாடகைத் தாய்மார் கருப்பையில் வளர்கின்றனவாம்.
இந்த மரபணு எடிட்டிங் செயன்முறையை Crispr/Cas9 என்கிறார்கள். Nanjing Medical University செய்யப்பட்ட இந்த ஆய்வு பற்றிய தகவலானது Cell என்ற விஞ்ஞான சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

பயன்பாடுகள்

இந்த ஆய்வானது மரபணு விஞ்ஞானிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. முக்கிய காரணம் என்னவென்றால் இந்த முறையின் போது ஒரு மிருகத்தில் உள்ள தவறான அல்லது நோயை உண்டாக்கக் கூடிய மரபணுவை கலங்களிலிருந்து துல்லியமாக அகற்றி அதற்கும் பதிலாக நல்ல மரபணுவை மாற்ற முடிகிறது.

CAS9-Genome-Editing

இரண்டாவது காரணம் இது வரை நோய்கள் பற்றிய ஆய்வுகளுக்கு சுண்டெலிகளையே பயன்படுத்தினர். ஆனால் சுண்டெலிகளின் மூளையானது மனித மூளையிலிருந்து மிகவும் வேறுபட்டது என்பதால் மூளை பற்றிய ஆய்வுகளுக்கு பொருத்தமானது அல்ல. ஆனால் குரங்கு மூளை பெருமளவு பொருந்தி வரக் கூடியதாகும் என்பதாலாகும்.
புதிய மரபணு சிகிச்சை முறைகளை மனிதர்களுக்கு அளிப்பதற்கு முன்னர் பரீட்சித்துப் பார்ப்பதற்கு எலிகளையும் சுண்டெலிகளையும் விட குரங்குகள் மிகவும் சிறந்ததென விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

உதாரணமாக ஸ்டெம் சிகிச்சை முறையின் போது கலங்களை மூளைக்குள் ஒட்ட வைத்து அவை எவ்வாறு செயற்படுகின்றன என்பதை அறிய சுண்டெலிகளை விட குரங்கு மூளைகள் பொருத்தமாக இருக்கும். இந்த Crispr முறையானது மற்றெந்த மரபணு சிகிச்சை முறைகளையும் விட நுணுக்கமான மரபணு மாற்றங்களைச் செய்ய உதவுகிறது என நம்புகிறார்கள்.

எதிர்க் குரல்கள்

விஞ்ஞான ரீதியான ஆதரவு மிகுந்துள்ள போதும் சமூக ரீதியாக பலர் எதிர்க் குரல் எழுப்புகிறார்கள். மிருக வதை எதிர்ப்புக் குழவினர், விலங்குகளில் பரிசோதனைகளுக்கு எதிர்ப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பல தரப்பினரும் தமது அதிர்ப்தியை வெளியிட்டுள்ளனர்.

அறிவு மிக்கதும், உணர்ச்சிகள் நிறைந்ததுமான மிருகங்களை இவ்வாறு ஆய்வுகளுக்குப் பயன்படுத்தி நோயுள்ள மிருகங்களை உருவாக்குவது தார்மீக ரீதியாகத் தவறானாது என அவர்கள் வாதிடுகிறார்கள்.

  • உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் ஏற்படும் துன்பங்கள் அவற்றை மிகவும் பாதிக்கும்.
  • மரபணு மாற்றம் பெற்று துன்பப்படும் இந்த விலங்குகள், அவ்வாறு மாற்றம் பெறாத தமது சகாக்களைக் காணும் போதும் அவற்றிடையே வாழ நிர்ப்பந்திக்கபடும்போதும் எதிர்கொள்ள வேண்டிய உளவியல் தாக்கங்கள் அபரிதமாக இருக்கும்.

இவ்வாறு நோயுற்ற மிருகங்களை உருவாக்குவதற்கு விஞ்ஞானிகளுக்கு கொடுக்கப்படும் அதிகாரமானது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு கிடைப்பது போல எல்லையற்றது. தடைகள் இல்லாதது. சொந்த நலன்களுக்காக ஏனைய உயிரனங்களைப் பலியிடுவதற்கு ஒப்பானது.

ஊனமுற்றதும் பேரழிவை ஏற்படுத்தக் கூடிய மிருகங்கள் உருவாதற்கும் வழிவகுக்கும். அவை வேண்டும் என்று செய்யப்படாவிட்டாலும் கூட மரபணு மாறு;றுச் சிகிச்சையின் போது எதிர்பாராமல் நிகழலாம் என்பதை மறுப்பதற்கில்லை.

மனிதர்களில் நோயைத் தீர்க்க முனைபவர்கள் வேண்டும் என்றே விலங்குகளில் நோயை உண்டாக்குவது எந்த வழியில் நியாயமாகும என்ற கேள்வியும் எழுகிறது அல்லவா?.

மாற்று வழிகள் உண்டா?

குரங்குகள் மனிதர்களை ஒத்தவை என்ற போதும், நோயுறுவதும், அதனால் ஏற்படும் பாதிப்புகளும், அதற்கான சிகிச்சைகளும் முற்று முழுதாக மனிதர்களை ஒத்ததாகவோ அவர்களுக்கு பொருத்தமானதாகவோ இருக்கப் போவதில்லை.

எனவே மிருகங்களைப் பயன்படுத்தாமலே இத்தகைய மரபணு எடிட்டிங் ஆய்வுகளை முன்னெடுக்க முடியுமா? மனிதர்களிலேயே செய்ய முடியுமா?
இல்லை. அது தார்மீக ரீதியாகவோ சட்ட ரீதியாவோ செய்ய முடியாதது.
ஆனால் சில மனித உறுப்புகளை மட்டும் இந்த மரபணு எடிட்டிங் முறையில் உருவாக்கி ஆய்வுகளையும் சிகிச்சைகளையும் முன்னெடுக்க முடியும் என்கிறார் ஹார்வட் பல்கலைக் கழக மரபணுத் துறைப் பேராசிரியரான George Church அவர்கள்.

இந்த முறையில் ஏற்கனவே ஒரு ஆய்வு வெற்றியளித்துள்ளமை குறிப்படத்தக்கது. HIV கிருமித் தாக்கமானது ஒரு மிக பெரிய சவாலாக இருப்பதை அறிவோம். ஆனால் HIV கிருமி மனித உடலின் நோயெதிர்புக் கலங்களிற்குள் நுழைவதற்கு CCR5 என்ன மரபணு மனித உடலில் இருக்க வேண்டியது அவசியமாகும். இந்த மரபணுவை அகற்றுவதை பரீட்சார்தத் ரீதியாக செய்துள்ளமை குறிப்படத்தக்கது. இதன் மூலம் HIV தொற்றும் ஆபத்தற்ற மனிதர்களைப் பிறக்கச் செய்ய முடியும்.

fsccr5a
“இனி என்பாடு வாசிதான்”  என பாதுகாப்பற்ற பாலுறவுகளில் ஈடுபட முனையாதீர்கள். இது செயன் முறைக்கு வர பல வருடங்கள் பிடிக்கலாம்.
அண்மையில் (பெப்ருவரி 2014ல்) மனித சுவாசப்பையை செயற்கை முறையில் விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளார்கள் என்ற செய்தியை CNN வெளியிட்டிருந்ததை நீங்கள் படித்திருப்பீர்கள். ஆனால் அது மரபணு எடிட்டிங் முறையிலானது அல்ல.
எவ்வான போதும் மனித திசுக்கள் மற்றும் கலங்களைக் கொண்ட மாதிரி உறுப்புக்களை (model systems based on human tissues and cells )உருவாக்கி ஆய்வுகளைத் தொடர்வதே தார்மீக ரீதியாகவும் உயிரியல் ரீதியாகவும் இயற்கையுடன் முரண்படாது அறிவியலை முன்னகர்ந்த உகந்ததாக இருக்கும் என நம்புகிறேன்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

0.0.0.0.0

Read Full Post »

இன்று காலை நான் ஒரு கனவு கண்டேன். தொடர்கதை போல நடந்து கொண்டிருந்தது. அது மிகவும் வியப்பூட்டும் கனவாக இருந்தது. நான் கனவுதான் காண்கிறேன் என்பதை உணரக் கூடியதாக இருந்தது.

Pino-daydream

அதைப் பதிவு செய்து வைக்க வேண்டும் என அக்கணத்தில் நினைத்தேன்.

இப்பொழுது இந்தக் கட்டுரையை சமகாலத்திற்காக எழுத ஆரம்பித்தபோது அது பற்றி எழுதவும் எண்ணினேன். ஆனால் எத்தனை முயன்றும் அது என்ன கனவு என்பது ஞாபகத்தில் வரவேயில்லை.

கனவுகள் அற்புதமானவை. அதில்தான் எத்தனை வகைகள்

விழித்திருக்கும் போது கனவுகனில் மிதப்போம். பகற்கனவு என்று அதனை எள்ளலும் செய்வோம். ஆழ் தூக்கத்தில் கனவுகள் காண்போம். அவற்றைக் கண்டது பற்றிய நினைவு கூட நித்திரைவிட்டு எழும்பியதும் இருக்காது. ஆனால் பல கனவுகள் எங்கள் துக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கும்.

உண்மையில் நாங்கள் ஆழ் தூக்கத்தில் மூழ்கியிருக்கும்போது நினைவுடன் இருப்பதில்லை. நடப்பது எதுவும் தெரியாது. மயக்கத்திற்கு அண்மிய நிலை அது. ஆனால் அதிலிருந்து மீண்டு நினைவுலகிற்கு வந்ததும் வாழ்வின் நாளாந்த சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும்.

இரண்டிற்கும் இடைப்பட்ட நிலை ஒன்று இருக்கிறது. நினைவு திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில், ஆழ்ந்த தூக்கமுமற்ற முழு நினைவுமற்ற நிலை இருக்கிறது. அவ்வேளையில்தான் கனவுகள் காண்கிறோம். அவ்வாறு காணும் கனவுகளின் போதுதான் கனவு காண்பதாக உணர்கிறோம். அதுதான் எனக்கும் நடந்தது.

உண்மையில் இதுதான் எமது நினைவுலகின் மிகவும் மர்மமானதும் வியப்பிற்குரியதும், தெளிவற்றதுமான தருணமாக இருக்கிறது.

உளவியலாளர்களுக்கு இத்தகைய நேரம் ஆய்விற்குரிய முக்கிய கணமாக இருக்கிறது. எமது வாழ்வின் சாயல் அதில் படுவது எவ்வாறு என ஆராய விரும்புகிறார்கள். ஆனால் நினைவிருந்து மறைந்துவிட்ட அவற்றை கனவு காண்டவர்களில் கேட்டு அறிவதும் முடியாதிருக்கிறது. மூளையின் அந்நேர செயற்பாடுகளை கருவிகளின் மூலம் அறிவதன் மூலம் விடை காண முயல்வது மட்டுமே இற்றைவரை சாத்தியமாக இருந்தது.

ஆனால் கனவுலகில் ஆழ்ந்திருக்கும் அவ்வேளையிலேயே அவருடன் தொடர்பு கொள்ளும் ஒரு முற்றிலும் புதுமையான செயன்முறை கண்டறியப்பட்டுள்ளது. இது விஞ்ஞானிகளுக்கு ஆர்வம் ஊட்டுவதாக இருக்கிறது.

ஆனால் கனவில் இருப்பருடன் தொடர்ப்பு கொள்ளவது எவ்வாறு? தட்டி எழுப்பிக் கேள்விகள் கேட்டால் அவரது கனவு கலைந்துவிடும் அல்லவா?

இந்த நிலையில் தெளிவான கனவுகள் (lucid dream)  ஆய்வுகளுக்கு உதவும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அது என்ன தெளிவான கனவு என்கிறீர்களா?

lucid-dream-flying

இத்தகைய கனவின் போது ஒருவர் கனவு காண்கிறார். தான் கனவு காண்பதாகவும் உணர்கிறார். அது மாத்திரமல்ல தாங்கள் ஆழ்ந்திருக்கும் அந்த உலகில் தாம் அடுத்து செய்ய வேண்டியது எது என்பதையும் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கிறது.

பெரும்பாலானவர்கள் தமது வாழ்வில் ஒரிரு தடவைகளாவது அத்தகைய தெளிவான கனவுகளைக் கண்டிருப்பார்கள். ஆனால் அத்தகைய அனுபவங்கள் பரவலானவை அல்ல என்பதையும் சொல்ல வேண்டும்.

இருந்தபோதும் ஒரு சிலரால் அத்தகைய தெளிவான கனவுகளை தாமாகவே வரவழைக்க முடிகிறது என்று சொல்கிறார்கள். அத்தகைய ஆற்றல் உள்ள நபர்களே கனவுகளின் உள்ளே புகுந்து விளையாடும் ஆய்வுகளுக்கு கை கொடுக்கிறார்கள்.

ஒருவரது நடத்தை அல்லது அனுபவம் பற்றி ஆராய முற்படும் அறிவாற்றல் சார்பான விஞ்ஞானிகள் ஒருவர் ஏற்கனவே விபரித்த அனுபவங்களை சொல்லளவில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். செயற்பாட்டு பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தி விளங்க முற்படுபர். குறிப்பிட்ட விடயத்தில் அவர்களது செயற்பாடு எவ்வாறானது, எதை எதை நினைவில் கொள்கிறார்கள், எவ்வாறு காரணப்படுத்துகிறார்கள் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் கனவுகள் பற்றிய ஆய்வுகளில் இது மிகவும் கடினமானதாகும்.

ஏனெனில் கண் விழித்து நினைவு திரும்பும் வரை அவர்களால் பெரிதளவில் எதையும் சொல்ல முடியாது. கனவுலகில் அவர்கள் செயற்படும் விதத்தை அவர்களது பங்களிப்புடன் பரிசோதனையாகச் செய்து பார்க்கவும் முடியாது.; பக்கவாத்தின் போது அங்கங்கள் செயலற்றுப் போவது போல தூக்கத்தில் உறுப்புகள் தற்காலிகமாக இயங்க முடியாதிருப்பதே (sleep-induced paralysis) இதற்குக் காரணமாகும்.

அங்கங்களை இயங்க வைப்பதற்கான தகவல்கள் மூளையிலிருந்து வரவேண்டும். மூளையின் கலங்களிலிருந்து முண்நாண் வழியாக தசைத் தொகுதிகளுக்கு தவகல்கள் அனுப்பப்படுகிறது. ஆனால் தூக்கத்தின் போது அவ்வாறு அனுப்பப்படும் சமிக்கைகள் மூளையின் குறிப்பிட்ட பகுதி நரம்புக் கலங்களால் தடுக்கப்படுகின்றன. இதனால்தான் கனவுகளின் போது நாம் எமது அங்கங்களை அசைத்து நாம் செயப்பட முடியாது போகிறது

இவ்வாறு தடுக்கப்படுவது தூக்கத்தின் துரித கண் இயக்க நிலையின் போது ஆகும்.

இந்த இடத்தில் தூக்கம் பற்றி சற்று அறிந்து கொள்வது நல்லது. தூக்கதில் பல நிலைகள் உண்டு. அதில் துரித கண் இயக்க நிலை(Rapid Eye Movement or REM)  என்பதும் ஒன்று. இந்ந நிலையில் முளையின் செயற்பாடானது உச்ச நிலையில் இருக்கும். அதாவது நினைவு நிலையின்போது மூளையின் செயற்பாடு எவ்வாறு இருக்குமோ அதை ஒத்ததாக இயங்கிக் கொண்டு இருக்கும். அந்நேரம் தூக்கம் காரணமாக அவர் செயற்படாது கிடப்பார். ஆனால் அவரது கண்கள் மட்டும் தொடர்ச்சியாக அப்பொழுதும் இயங்கிக் கொண்டே இருக்கும்.

ஆனால் மேலே கூறிப்பட்டது போல அங்கங்கள் இயக்கமின்றிக் கிடக்கும். அந்த நேரத்தில் தோன்றும் தெளிவான கனவானது ஓடுவது துள்ளுவது அடிப்பது போன்ற கடுமையான உடல் அசைவுகளுடன் கூடியதாக இருந்தாலும் நிசத்தில் உடலால் அசைய முடியாது. ஆக மிஞ்சியது சிறு நடுக்கம் போல இருக்கலாம். இது ஏன் என்பது பற்றிய காரணம் பின்னர் தெளிவாகும்.

அது அவ்வாறிருக்க, இப்பொழுது கனவின் காரிருள் குகைகளுக்குள் வெளிச்சம் பாய்ச்சும் ஆய்வுகள் பற்றி சற்று பாரப்போம்.

முன்னரே பரஸ்பரம் ஏற்றுக்கொளள்ளப்பட்ட கண்அசைவுககளை சமிக்கைகளாக தெரிவிப்பதன் மூலம் தாங்கள் தெளிவான கனவு காணத் தொடங்குவதை கனவு காண்பவர்கள் ஆய்வாளர்களுக்கு தெரிவிக்க முடியும். அதாவது தனது கண்களை இயல்பான ஒரு குறிப்பிட்ட விதத்தில் கனவு காண்பவர் அசைப்பார். அதனைக் கொண்டு அவர் கனவுலக்கில் இறங்குவதை ஆய்வாளர் புரிந்துகொள்வார். மூளையின் செயற்பாடுகளை கனவின் போது பதிவு செய்யும் கருவிகளை உடனடியாகவே ஆய்வாளர் இயக்குவார்

கண் குழியைச் சுற்றி வைக்கப்பட்ட மின்வாய்கள்(electrodes)  மூலம் அவற்றை பதிவு செய்யவும் உறுதி செய்ய அக் கருவிகளால் முடியும். இந்தச் செயன் முறையானது Stephen LaBerge  என்ற தூக்கம் பற்றிய ஆய்வுகளைச் செய்பவரால் முதன் முதலில் கண்டறிந்து பயன்படுத்தி சரியானது என உறுதிப்படு;த்தப்படதாகும்.

கனவுலகின் இயல்புகளையும் அவை எவ்வாறு மூளையின் செயற்பாடாக பிரதிபலிக்கிறது என்பதையும் எளிமையானதும் தனித்துவம் வாய்ந்ததுமான இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பரிசோதிக்க முடிந்தது.

pic78

ஆனால், தெளிவான கனவுகள் காண்பவர்களாக சொல்லப்பட்டு இத்தகைய ஆய்வுகளில் உட்படுத்தப்பட்டவர்கள்; உண்மையில் தூங்கவில்லை கனவு காணவில்லை, வெறுமனே தளர்ந்திருந்தார்கள் என அல்லது அவர்கள் கனவு காண்பதாக ஏமாற்றினார்கள் என ஆரம்ப கட்டங்களில், வேறு அறிஞர்கள் குற்றம் சாட்டினார்கள்.  மின்வாய்கள் மூலம் மூளையின் செயற்பாட்டை துல்லியமாகக் கண்டறிய முடிந்ததில் இதன் உண்மைத் தன்மை நிரூபணமானது.

அது எத்தகைய உண்மை.

தெளிவான கனவு காணும் தருணத்தின் மூளையின் செயற்பாடானது துரித கண் இயக்க நிலையின் அம்சங்களையே கொண்டிருந்தது என்பது நரம்பியல் உளவியல் நிபுணர்களான Ursula Voss,  Martin Dresler   செய்த ஆய்வுகளின் மூலம் அறியப்பட்டது.

அது மாத்திரமல்ல தெளிவான கனவுகளின் போதான மூளையின் செயற்பாடானது தனித்துவமானது. அது சாதாரண தூக்கம், ஏனைய கனவுகள், மற்றும் நனவு நிலை ஆகியவற்றின் போதான மூளையின் செயற்பாட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதை கண்டறிய முடிந்தது. தமது விருப்பங்களுக்கு ஏற்றவாறு முடிவுகளை விளங்கிக் கொள்ளும் wishful thinking  அல்ல இது.

கனவுகள் பற்றிய வேறு சில ஆய்வுகள் சுவாரஸ்சமானவை. முன் ஏற்பாடு செய்யப்பட்ட சில செயல்களை துரித கனவுகள் காணும் வேளையில் செய்வித்து, அதே செயற்பாட்டை விழிப்பு நிலையில் செய்ய வைத்து ஒப்பீடு செய்து பார்த்தனர். உதாரணமாக ஒன்று இரண்டு மூன்று என எண்களை எண்ணும் செயற்பாடானது கனவு நிலையிலும் நினைவு நிலையிலும் ஒரே வேகத்தில் நடைபெறுவதை அறிய முடிந்தது. எண்ணுவது என்பது மனத்தின் செயற்பாடு மட்டுமே அதில் உடலின் செயற்பாடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் படி ஏறுவது, நடப்பது, எளிமையான உடற் பயிற்சிகளைச் செய்வது போன்ற உடலின் செயற்பாடுகள் கனவு நிலையின் போது நீண்ட நேரம் எடுத்தன.

இதற்குக் காரணம் என்ன? உணர்திறன் சார்ந்த பின்னூட்டு (sensory feedback) வழமைபோல் இல்லாததே என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

demonstrator

உணர்திறன்  சார்ந்த பின்னூட்டு என்றால் என்ன’.

உதாரணம் சொல்லலாம். நாம் நடக்கும்போது அது பற்றி சிந்திப்பதில்லை. ஆனால் நாம் கால் வைக்கும் தரையானது வழமையானதா வழுவழுப்பானதா ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததா, பாதங்களைக் குத்தக் கூடிய கல் முள் போன்றவை உள்ளதா போன்ற பல விடயங்களை எமது பாதங்களின் சருமம் பகுத்துணர்ந்து அதை மூளைக்கு செய்தியாக அனுப்புகிறது. நடக்கும் தரை ஆபத்தனது அல்ல என்ற செய்தி கிடைத்ததும் கால்கள் வேகமாக நடக்கும்.

நினைவு நிலையில் உணர்திறன் சீர்மையுடன் செயற்படுகிறது. ஆனால் கனவு நிலையில் இத்தகைய உணர்திறன் வழமைபோல இல்லாததாலேயே கனவு நிலையில் உடற் செயற்பாடுகள் வேகங் குறைகின்றன. இதனால்தான் தெளிவான கனவு நிலையின் போதும் மனிதர்களால் நினைவு நிலை போல இயங்;க முடிவதில்லை.

அது சரி கனவுகள் பற்றிய ஆய்வுகளால் பயன் என்ன? நினைவுலகின் ஏனைய தளங்களில் சஞ்சரிப்பதற்கு கனவுகள் பற்றிய ஆய்வின் தொழில்நுட்பங்களை பயன்படுத்துதில் New Age movement  போன்ற இயக்கத்தினர் ஆர்வம் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஆன்மீக உலகில் நவீன விஞ்ஞான அறிவின் தாக்கம் எவ்வாறு அமையும் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டியதே.

தெளிவான கனவுலகில் நீந்துவதை ஊக்குவிபப்பதற்கு மருந்துகளை உபயோகிக்கும் ஆபத்தான செயலில் இறங்குபவர்களும் இருக்கிறார்கள். பார்க்கின்சன் நோய்க்கு பயன்படுத்தும் சில மருந்துகள் பகற் கனவுகளில் ஆழ்த்தும் பக்கவிளைவு கொண்டதால் அதனை பயன்படுத்த முனைகிறார்கள்.

தூக்கத்தில் உளறுபவர்கள் விடயத்தில் என்ன நடக்கிறது?

sleeptalking21

அதுவும் பெரும்பாலும் கனவுலகின் செயற்பாடுதான். மேற் கூறிய தெளிவான கனவுகளின் போது வரலாம். ஆனால் மன அழுத்தம், மனச்சோர்வு, நித்திரைக் குறைபாடு போன்ற பிரச்சனைகளிலும்; ஏற்படலாம். கடுமையான காய்ச்சல் மதுப் பாவனையின் பின்னரும் தூக்கத்தில் சிலர் உளறுவார்கள்.

காலைக் கனவு பலிக்கும் என்று நம்புவோர் இன்னமும் பலர் எம்மிடையே இருக்கிறார்கள்.

787630-bigthumbnail

காலைக் கனவுகள் முற்கூறிய தெளிவான தூக்கத்தில் தோன்றுவதாலாயே நினைவில் நிற்கிறது. ஆனால் அது பலிக்கும் என நம்புவது அர்த்தமற்ற நம்பிக்கையே.

எனது ஹாய் நலமா புளக்கில் (27.09.2014) வெளியான கட்டுரை

எம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

0.0.0.0.0.0

Read Full Post »

ஒரு இலட்சம் வருடங்களுக்குப் பின்னர்

எப்படி இருப்பார்கள் உங்கள் வழித்தோன்றல்கள்?

உங்களுக்கு உங்கள் பாட்டனின் முகம் ஞாபகமிருக்கும், ஆனால் கொள்ளுப் பாட்டனது பாட்டியின் முகம் தெரிந்திருக்க நியாயமில்லை.

1

போட்டோ கலை வந்தே 200 வருடங்கள்தான் ஆகிறதே.

அதேபோல மறக்க முடியாமல் பதிந்திருப்பவை பிள்ளைகள் பேரப் பிள்ளைகளின் முகங்களாக இருக்கலாம். ஆனால் நான்கு தலைமுறைக்குப் பின்னர் உங்களது வழித்தோன்றல்களின் முகம் எப்படியிருக்கும் என்பதை நிச்சயம் சொல்ல முடியாது அல்லவா? கற்பனையில்தான் பார்க்க வேண்டும்.

விஞ்ஞானிகள் மகா கற்பனைவாதிகள். ஒரு இலட்சம் வருடங்களுக்குப் பின்னர் மனித முகம் எப்படி இருக்கும் எனக் கற்பனை பண்ணிப் பார்த்து எங்களுக்கும் சொல்லியிருக்கிறார்கள்.

Nickolay Lamm  என்பவர் ஒரு வழியில் விஞ்ஞானி மற்றொரு வழியில் வடிவமைப்பாளர். சில காலத்திற்கு முன்னர் இவர் வடிவமைத்த மனித முகங்கள் மேலைத்தேய ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பைக் கிளப்பின.

பத்துத் தலை இராவணன், ஆனை முகத்துப் பிள்ளையார், ஆறுமுகத்தான், குதிரை முகத்தாள் கோரமுகக் காளி என எமது முன்னோர்கள் புராதன காலத்திலேயே தங்கள் கைவரிசைகளைத் திறமையாகக் காட்டியிருக்கிறார்கள்.

Australopithecus africanus 2.5 million years ago

நிலவு காயும் இரவில் புற்தரையில் தென்றல் தழுவக் கிடந்தபடி நீலவானில்; விழி மேய்கையிலும், சாய்வு நாற்காலியில் கண் மூடி உடலாறக் கிடந்து கற்பனைக் குதிரையின் வாலை முறுக்கும் செயல்கள் அவை.

ஆனால் Nickolay Lamm  யின் வடிவமைப்புகள் அந்த ரகத்தைச் சேர்ந்தவை அல்ல. Washington University  யைச் சார்ந்த கணனி மரபியில் நிபுணரான Dr.Alan Kwan  அவர்களுடன் கலந்துரையாடி இந்த மாதிரிகளை அமைத்துள்ளார். அவ்வாறு வடிவமைப்பதற்கு முன்னர் மூன்று முக்கிய விடயங்களை கவனத்தில் எடுக்க வேண்டியிருந்தது.

  1. கடந்த காலத்தில் மனிதர்களதும், மனித முன்னோடிகளினதும் உடலும் முகங்களும் தங்கள் சூழலின் சவால்களுக்கு ஏற்ப எவ்வாறு மாற்றமடைந்துள்ளன என்பதை தெளிவாக அறிய வேண்டும். இதற்கு புதைவடிவ மனித எச்சங்களை காலரீதியாக ஆய்வதன் மூலம் கூர்ப்பில் ஏற்பட்ட மாற்றங்களை அறிந்து கொள்ள முடியும். அகழ்வாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையன புதைவடிவ மனித எச்சம் ஆர்டி Ardi (Ardipithecus kadabba)  என்ற பெண்ணினது. இவ் மனித மூதாதைகள் 4.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் எதியோப்பியாவில் வாழ்ந்தவர்களாகும்.
  2. இன்றும் எதிர்காலத்திலும் எமது வளிமண்ணடலத்திலும் பூமியின் ஒளியமைப்பிலும், கதிர்வீச்சுகளாலும் எற்படக் கூடிய சூழல் மாற்றங்கள் எவை என்பதை விஞ்ஞான ரீதியாக ஊகித்து அறிய வேண்டும். அவற்றிக்கு மனிதன் எவ்வாறு முகம் கொடுத்து மாற்றமடைவான் என்பதை கணிக்க வேண்டும்.
  3. மனிதனின் இற்றைவரையான மாற்றங்கள் சுயமாக கூர்ப்பில் நடந்தன. ஆனால் இப்பொழுது மனித அறிவானது மரபணுக்களில் தம் விருப்பிற்கு ஏற்றவாறு மாற்றங்களைச் செய்யுமளவு வளர்ந்துள்ளது. இது எதிர்காலத்தில் மேலும் கூர்மையடைந்து மனித உருக்களில் மாற்றங்களை எற்படுத்தக் கூடியனவாக அமையும். இதையும் அவர்கள் கருத்தில் கொண்டார்கள்.

இவை யாவற்றையும் கவனத்தில் எடுக்கையில் சுமார் 1000 முதல் 60,000 ஆண்டுகளில் மனிதர்களின் தோற்ற மாற்றம் பற்றிய கணிப்பீடுகள் விவாதத்திற்குரியன என்பதில் ஐயமில்லை.

ஆனால் விஞ்ஞானிகள் ஏன் ஒரு இலட்சம் வருடங்கள் முதல் 5 இலட்சம் வருடங்களுக்கு பின்னர் மனித இனத்தின் உருவில் ஏற்படக் கூடிய மாற்றங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். 1000, 2000, 10000 எனக் குறுகிய கால மாற்றங்கள் பற்றிய எதிர்வுகளைக் கூறிவில்லை.

20,000 வருடங்களில்

“மனிதன் மாறவில்லை” என கண்ணதாசன் வேறு காரியத்திற்காக கூறியது நினைவில் வருகிறது. ஆம் மனிதன் விரைவில் மாறுவதில்லை. உருவ மாற்றங்களுக்கு நீண்ட காலம் பிடிக்கும்.

உயிரினக் கூர்ப்பில் குறைந்த தரத்திலான நத்தை இனங்களின் சோர்வான வளர்ச்சி வேகத்தோடு ஒப்பிடுகையில் மனித மாற்றங்கள் சோடை போகவில்லைத்தான். இருந்தபோதும் பழைய கற்கால மனிதனுக்கும் இன்றைய புதுயுக மனிதனுக்கும் இடையேயான நீண்ட பயணத்தில் மனித உருவில் பெரிய வேறுபாடுகள் தெரிவதில்லை.

யுகயுகமாக மாற்றங்கள்

உயர் விலங்கினத்தில் ஒன்றானவன் மனிதன். அவனில் ஏற்பட்ட முக்கிய மாற்றமானது நாலு காலில் தவண்டு திரிந்தவன்  ‘நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையுமாக’  இரட்டைக் காலில் நடக்கத் தொடங்கியதுதான். ஆனால் அதற்கு முன்னரே நாலு கால்களையும் நடப்பதற்காகவே உபயோகிப்பதைக் கைவிட்டு, முன்னங் கால்களால் பற்றிப் பிடிக்கப் பழகிக்கொண்டான். அவை கைகள் ஆகின. பின்னர் நிமிர்ந்து நிற்கவும் நடக்கவும் முடிந்தது.

ஒரு வரியில் நான் இதைச் சொல்லிவிட்டாலும் இது ஒரு பாரிய மாற்றம். அதற்கேற்ப அவனது எலும்புத் தொகுதி மாற நேர்ந்தது. இரண்டு கால்களால் மட்டும் திடமாக நடக்க நேர்ந்ததால் உடலின் முழுப் பாரத்தையும் தாங்குமளவிற்கு அடிவயிற்று எலும்பானது (Pelvis) வலுவுள்ளதாக மாறியது. அதே நேரம் நெஞ்சுப் பகுதியானது முற்புறம் தள்ளியிருப்பதைத் துறந்து தட்டையாக மாறியது. அதற்கும் அப்பால் உள்ளுறுப்புகளான இதயம், சுவாசப்பை, ஈரல், குடல், சிறுநீரகம் போன்றவை கிடை அச்சைக் கைவிட்டு நீள்வச அச்சில் (longitudinal axis)    தொங்குவதற்கு ஏற்றவாறு மாற நேர்ந்தது.

மண்டை ஓடும் மூளையும்

மற்றொரு முக்கிய மாற்றம் மண்டை ஓட்டிலும் மூளையிலும் ஆகும். மனிதன் அறிவாற்றல் வளர்கின்ற வேகத்தைப் பார்க்கும்போது பெரும்பாலனார்கள் இவற்றின் கனஅளவு வேகமாக அதிகரிக்கும் என்றே எண்ணுகிறார்கள். ஆனால் 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ரொடேசிய மற்றும் நெதண்டதால் மனிதர்களது மண்டை ஓட்டின் அளவானது இன்றைய மனிதனின் மண்டை ஓட்டின் அளவை ஒத்ததாககவே இருப்பதை நோக்கும்போது பாரிய மாற்றம் ஏற்படாது என்றே தோன்றுகிறது.

60,000 வருடங்களில்

ஆனால் சுமார் ஒரு கோடி வருடங்களுக்கு முன் வாழ்ந்த phylogenetic சின் மண்டை ஓட்டின் உட்புறக் கன அளவு 900 cc ஆக இருக்க, இன்றைய மனிதனது சுமார் 1450 cc யாகப் பருமன் அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே 500,000 வருடங்களில் இது 1750 cc ஆக உயரலாம் என்பது சாத்தியமே.

அவ்வாறு மாறும்போது மண்டை ஒட்டின் வடிவமானது தற்போதுள்ளது போன்ற நீள்வட்ட வடிவிலிருந்து சற்று மாறி கூடியளவு வட்ட வடிவத்தை நோக்கி நகரக் கூடும் என்கிறார்கள். மண்டை ஒட்டின் நீளத்தைவிட அகலம் அதிகரிக்கும் தன்மையை brachycephaly என்பார்கள். இவ்வாறான மாற்றத்தை தெற்கு ஜேர்மனி, பிரித்தானியாவின் சில பகுதிகளிலும் இப்பொழுதே அவதானிக்க முடிவதாக கூறுகிறார்கள்.

Homo heidelbergensis 50000 Years ago

மண்டை ஓட்டில் ஏற்படக் கூடிய மற்றொரு மாற்றமானது பெண்களை மகிழ்வடைச் செய்யக் கூடியது. ‘உங்களை விட நாங்கள் கூர்ப்பில் 500000 வருடங்கள் முன் நிற்கிறோம்’ என ஆண்களைப் பார்த்து பெருமை பேசக் கூடியது.

ஆதிகாலத்தில் மண்டை ஓடானது சற்றுக் கரடு முரடானதாகவும், வளைவுகளில் கூர் முனைப்பானவையாகவும் இருந்தன. ஆனால் கால ஓட்டத்தில் மென்மை கூடியதாகவும் அதிக வழுவழுப்பைத்தன்மை கொண்டதாகவும் மாறிவருகிறது. சாதாரண கண்களுக்கு வெளிப்படையாகத் தெரிவது கண்களுக்கு மேல் புருவப் பகுதியில் உள்ள எலும்பு முனைவரம்பு ஆகும்.

பெண்களில் இந்தப் புருவ வரம்பானது வழவழப்பாவும் வளைவுகள் குறைந்து செங்குத்துத்தன்மை கொண்டதாகவும் இருக்கிறது. ஆண்களில் புருவ வளைவுகள் முனைப்பு கொண்டதாக இருக்கிறது. இதைச் சுட்ட கூர்ப்பில் தாங்கள் முன்னோடிகள் எனப் பெண்கள் பெருமை கொள்ளலாம்.

ஆண்களுக்கு அவ் வளைவுகள் மறைய மேலும் 500000 ஆண்டுகள் ஆகலாம்.

இவை விஞ்ஞான ஆய்வுகளும் அதன் நீட்சியான ஊகிப்புகளும் ஆகும்.

முகமாற்றம்

இவற்றின் அடிப்படையில் மனித முகம் எவ்வாறு மாறும்?

ஏற்கனவே சொல்லப்பட்டது போலவே நாம் தலை கனத்தவர்களாக இருப்போம். இரு விதங்களில். தலையினதும் மூளையினதும் அளவு 500,000 ஆண்டுகளின் பின் நிச்சயம் அதிகரித்திருக்கும். அதே வேளை அவற்றின் தரத்திலும் செயற்பாட்டு திறனிலும் பெருமளவு முன்னேற்றம் எற்பட்டிருக்கும்

இருந்த போதும் மூளையின் அளவில் அதிகரிப்பு ஏற்படுவதை விட அதன் தரத்திலேயே பெருமளவு மாற்றம் எற்படும் என வேறு பல விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

விழிகள் கார்ட்டுன் படங்களில் வருவதுபோல பெரியதாகவும் முழிப்பாகவும் தெரியும் என்கிறார்கள். சில இலட்ச வருடங்களின் பின் பூமியில் மட்டுமின்றி வேறு கிரகங்களிலும் மனிதன் வாழ நேரிடும். அவற்றில் பலவற்றில் ஒளி குறைவாக இருக்கக் கூடியவை. எனவே குறைந்த ஒளியிலும் கூர்மையாகப் பார்ப்பதற்கு உதவியாக கண்கள் பெரு மாற்றம் அடையும் எனப்படுகிறது.

100,000 வருடங்களில்

பிரபஞ்சத்தில் உலவுவதாலும் வேறு கிரகங்களில் வாழ நேருவதாலும் அதிகளவு UV radiation  னுக்கு எதிர்கால மனிதன் முகம் கொடுக்க நேரிடும் அல்லவா? அதிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சருமத்தின் நிறம் கூடுதலாக கருமையடைவதற்கான சாத்தியங்கள் உண்டு.

அச்சில் வார்த்த குழந்தைகள் போல

“வாற வருஷம் நாங்கள் பெறப்போற பிள்ளைக்கு என்ரை மூக்கும் உன்ரை பல்வரிசையும்தான் இருக்க வேணும் என்று எங்கடை டொக்டறட்டை சொல்லிப் போடு” என்றான் கணவன். 

பிள்ளைக்கு என்ன பெயர் வைக்க வேணும் என்று இப்ப நாங்கள் விவாதிப்பதில்லையா? அதைப் போல எதிர்கால விவாதங்கள் இருக்கலாம்.

எதிர்காலக் குழந்தைகள் அச்சில் வார்த்ததுபோல நேர்த்தியாக இருப்பார்கள். முகத்தின் இரு பக்கங்களுக்கும் இடையே சிறிய வேறுபாடுகளும் இன்றி சரியான சமச்சீரானதாக இருக்கும். இது கூர்ப்பினால் ஏற்படப் போவதல்ல. தங்கள் குழந்தைகளின் முகம் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக

அவற்றின் DNA  க்களில் மருத்துவ ரீதியாகக் குறுக்கீடு செய்ய அந்நேரத்தில் முடியும் என்பதால் பிறக்கும் குழந்தைகளின் நிறம் மூக்கின் நீளம் உடல் உயரம் போன்ற யாவற்றையும் பெற்றோர்களே தீர்மானித்து விடுவார்கள்.

எல்லாம் சரி! ஒரு இலட்சம் வருடங்களுக்கு பின் உலகம் இருக்குமா? அணுகுண்டு இயற்கையைச் சூறையாடல் போன்றவற்றை எல்லாம் தாண்டும் வல்லமை அதற்கு உண்டா எனக் கேட்காதீர்கள்.

ஒரு வேளை உலகம் தப்பிப் பிழைத்தாலும் மனிதன் அக்காலத்தில் பூமியில் இருப்பானோ என்பதே சந்தேகம். ஒருவேளை இருந்தாலும் அவன் மனிதனாக இருப்பானோ அல்லது வேறு ஒரு உயிரினமாக மாறியிருப்பானோ என்பதும் நிச்சயமில்லை.

இதை எல்லாம் யோசித்து ஏன் கற்பனைச் சுகங்களை இழக்க வேண்டும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.0.0.0

Read Full Post »

கவர்ச்சியானவற்றில் செல்லச் சீண்டல்கள்

கவர்ச்சியான எதைக் கண்டாலும் அது எம்மில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும். உருண்டு திரண்ட முகம், சூட்டிகையான கண்கள், வனப்பான கன்னங்கள். கிள்ள வேண்டும் போலத் தோன்றவே செய்யும் அல்லவா?

Artistic-Cute-Wallpaper-Background-1920x1200-7551

அத்துடன் முந்திரிப் பழம்போல மூக்கு, நேர்த்தியான வளைவுகளுடன் கூடிய குளிர்ச்சியான உதடுகள். கட்டியணைத்து கொஞ்ச வேண்டும் போலத் தோன்றாதா?

Baby-Cute-Eyes-HD

நான் இங்கு சொல்ல வருவது காமக் கண்களுடன் பெண்களை நோக்கும் ஆண்களின் வக்கிரப் பார்வையை அல்ல. அழகான குழந்தை மீது, பட்டுப் போல மிருதுவான பூனை மீது, கொழுகொழுவென கண்களால் சிரிக்கும் நாய்க் குட்டிகள் மீதான ஆத்மார்த்தமான ஈர்ப்பு பற்றியது. அது எந்த உயிராகவும் இருக்கலாம். அவற்றின் மது எமக்கு ஏற்படும் கவர்ச்சி, ஆனந்தம், உளச் சிலிர்ப்பு போன்றவை பற்றியே ஆகும்.

Cute-Cat-Pic-8

ஆனால் இந்த ஈர்ப்பானது உயிர் அற்றனவற்றின் மீதும் ஏற்படலாம். அதாவது புகைப்படங்கள் ஓவியங்கள் சிற்பங்கள் போன்றவை. உதாரணமாக ரீவி பார்க்கும்போது மலர்போல விரிந்த கண்களும் குட்டி மூக்கும் அழகான வாயும் கொண்ட எலி பூனை கரடி ஓநாய் போன்றவற்றின் கார்ட்டுன் படங்கள் எம்மை ஈர்ப்பதில்லையா?

Too-Cute-to-be-Scary-Statue-with-Bradford-Exchange

உயிருள்ள உயிரற்ற எந்த உண்மையான அழகையும் கவர்ச்சியையும் கண்டாலும் மனத்தில் ஒரு குதாகலம் ஏற்படும். ஆனந்தம் பொங்கும். மனம் நிறையும். ஏதோ ஒரு சுகம் நம்மை அணைத்துக் கொள்ளும்.

நளினத்தின் மீதான ஈர்ப்பு உலகளாவியது. எந்த இனத்திற்கு மதத்திற்கு மொழிக்கோ தேசத்திற்கோ மட்டுப்பட்டதல்ல.

ஆனால் அவ்வளவு மட்டும்தானா?

கொஞ்சவேண்டும் அள்ளி அணைக்க வேண்டும் என்ற ஆசைகளுடன் நின்றுவிடுமா?

20140901_063731_Richtone(HDR)-001

அதற்கு அப்பாலும் செல்கிறது. ஒரு வகை வன்முறைச் சீண்டல் அல்லது ஆக்கிரமிப்பிற்கும் (aggression)  இட்டுச் செல்கிறது என்கிறது அண்மைய ஆய்வு ஒன்று.

‘கடித்துத் தின்ன வேண்டும் போலிருக்கிறது’ என ஆப்பிள் திரண்ட மொழுமொழுவென இருக்கும் குழந்தையின் கன்னத்தைப் பார்த்து விளையாட்டுப் போலச் சொல்வதில்லையா? ‘அப்படியே சப்பிச் சாப்பிட வேண்டும் போலிருக்கிறது’ எனத் திராட்சை போல செந்நிறமான உதடுகளைப் பார்த்து நீங்கள் கூட எப்பொழுதாவது சொல்லியது ஞாபகம் வருகிறதா?

காய்சலுடன் ஒரு குழந்தை காய்ச்சலோடு மருத்துவரிடம் வந்தது. அதன் பிரச்சனைகளை அனுதாபத்தோடு கேட்டு, அதனை பரிவோடு சோதித்து அதற்கான சிகிச்சையை வழங்கினார் அந்த மருத்துவர். பின்னர் அது புறப்படும்போது ‘எல்லாம் சுகமாகிப் போடும். வீட்டை போய் ரெஸ்ட் எடுங்கோ. கொஞ்சம் விiயாடுங்கோ’ என்று சொல்லும் போது அதன் கன்னங்களை செல்லமாகக் கிள்ளினார்.

Screenshot-128

இது ஒரு ஒரு உதாரணம். எதனை உணர்த்துகிறது. களிளுவதானது அவரது உள்ளத்தில் மறைந்திருக்கும் வன்மத்தின் வெளிப்பாடா? இல்லை! அழகான அந்தக் குழந்தையில் அவருக்கு அன்பு இருக்கிறது. பரிவோடு பார்க்கிறார். அதற்கு உதவ முன்வருகிறார். அதன் வேதனையைதை; தீர்க்க வேண்டும் என எண்ணுகிறார். ஆனால் அதே நேரம் அதைக் கிள்ளவும் செய்கிறார்.

அன்பு ஆதரவு பட்சாபிதம் போன்ற நேர்மறையான எண்ணங்குளம் இருக்கின்றன. அதே வேளை கிள்ளுவது போன்ற அடாத்துச் செயலும் இருக்கிறது. இது எதிர்மறையான செயற்பாடு அல்லவா? இவை இரண்டும் ஒன்றுக்கு ஓன்று முரணான உணர்வுகள் அல்லவா? இது ஏன்?

குழந்தைகள் பொம்மைகளுடன் ஆசையோடு விளையாடுவார்கள், கொஞ்சுவார்கள, தாலாட்டுவார்கள். ஆராரோ பாடி தூக்க வைப்பது போலவும் செய்வார்கள். ஆனால் சில நேரத்தில் அவற்றை இறுக அழுத்துவதும் உண்டு. அவற்றின் கண்களைக் குத்துவதும் உண்டு. இவையும் ஒன்றுக்கு ஒன்று முரணான செயல்கள் அல்லவா? அழகியவற்றைக் காணும்போது ஏன் அத்தகைய ஒன்றுக்கு ஒன்று முரணான உணர்வுகள் ஏற்படுகின்றன.

DSC_0102 (1)

காரணம் சரியாகத் தெரியவில்லை. ஆனால் பல விளக்கங்களை தருகிறார்கள் அறிஞர்கள்.

ஒரு விளக்கம் அது ஒரு ஏமாற்றத்தின் அல்லது ஏக்கத்தின் (Frustration)  வெளிப்பாடாக இருக்கலாம் என்கிறார்கள. ‘அது தன்னது அல்ல. அதைத் தான் தொடர்ந்து வைத்திருக்க முடியாது’ என்பதால் எற்பட்டதாக இருக்கலாம்.

இருந்தபோதும் இது சரியான விளக்கமாகத் தெரியவில்லை.

மற்றொரு விளக்கம் ஏற்புடையதாகத் தெரிகிறது. தீவிரமான உணர்வு எழுச்சிகள் வெடித்துக் கிளம்பும்போது மூளை நரம்புகளின் வினையாற்றல் திரிவு படலாம் என்பதாகும். அதாவது தீவிரமான நேர்மறை உணர்வுகள் எழுந்து அது செயற்பாடாக மாறும்போது நேர்மறையானது போன்ற தோற்றத்தைக் கொடுக்கலாமாம்.

அண்மையில் ஒரு விழா நடந்தது. மகனுக்கு ஒரு விருது வழங்கப்பட்டது. தந்தையும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். விருது வழங்கப்பட்டபோது மகிழ்ச்சியால் கைதட்டி மகிழ்ந்தார். நிகழ்ச்சியாளர்கள் அவரை மேடைக்கு அழைத்து ‘உங்கள் மகனுக்கு விருது கிடைப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்’ எனக் கேட்டார்கள்.

அவரால் எதுவும் பேச முடியவில்லை. வாய் கொன்னித்தது. சொற்கள் சிதறி புரியாதவாறு வெளிப்பட்டன. கண்களிலிருந்து நீர் வெளிப்பட்டது. தேம்பித் தேம்பி அழுதார்.

மகன் பரிசு பொற்றதில் அவருக்கு ஆனந்தமா கவலையா? ஆனந்தம்தான்

ஆனால் அவரது மூளையால் அந்த தீவிர உணர்ச்சி வெளிபப்hட்டிற்கு சரியான முறையில் வினையாற்ற முடியவில்லை. சிரிப்பதற்கு பதில் அழுகை வந்தது.

‘ஆனந்தக் கண்ணீர்’ எங்களுக்குத் தெரியாததா என்பீர்கள்.

Viduthalai.1.-5BYAMS-DVD-5D.avi_snapshot_00.24.36_[2011.08.07_17.22.43]

நாம் ஆண்டாண்டு காலமாக உணர்ந்ததை புரிந்ததை இப்பொழுது புது விளக்கமாக் கொடுக்கிறார்கள் என்பீர்கள். உண்மைதான் ஆனால் அறிவியல் மொழிகளில். ஆம் எமது வாழ்வில் அனுபவங்கள் கற்றுக் கொடுத்தவற்றை ஆய்வாளர்கள் புது ஆய்வுகளாகத் தருகிறார்கள். புது விளக்கங்களும் தருகிறார்கள்.

இதை நாம் ஏளனம் செய்ய வேண்டியதில்லை. அனுபவங்களுக்கான விஞ்ஞான விளக்கங்கள் ஆய்வுகள் மூலம் கிடைப்பதையிட்டு மகிழ்வு கொள்ளலாம்.

மீண்டும் செல்லச் சீண்டல்களுக்கு வருவோம். இதனால் கிடைப்பது ஆனந்தம் மட்டும்தானா?

அதனால் எமக்கு நன்மைகளும் ஏற்படுகிறது என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

  • நளினத்தின் மீதான ஈர்ப்பானது ஒருவரது நுணுக்கமான கைவினைத்திறனின் மீதான கட்டுப்பாட்டை அதிகரிக்கிறதாம்.
  • ஏதாவது ஓன்றின் மீது அக்கறை வைத்திருக்கும் கால அளவை அதிகரிக்கிறதாம்.
  • உற்பத்தித் திறனையும் அதிகரிக்கிறதாம்

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.000.0

Read Full Post »

தலையைப் பொத்திக் கொண்டு வருவார்கள். ‘தலை விண் விண் என்று கிடக்கு’ என்பார்கள். ‘நிறைய வேலையள் கிடக்கு ஒண்டும் செய்ய முடியவில்லை. தலையிடியும் அம்மலும் பொறுக்க முடியாது’ எனவும் சொல்வார்கள்.

hangover 3

அதைத் தடுக்க ஆலோசனை கூறினால், ‘நாளை முதல் குடிக்க மாட்டேன். இது சத்தியமடி தங்கம்..’ எனத் தலைமேல் கை வைக்காத குறையாகச் சொல்வார்கள். ஆனால் மீண்டும் பழைய குருடி கதவைத் திறவடி கதைத்தான்.

பிரச்சனை ஏற்படும் போது தலையில் கை வைத்து கம்மென்றிருப்பார்கள். போத்தலைக் கண்டுவிட்டால் …

hangover 4

“..குடித்து குடலழுகி ரெண்டு நாளில்
செத்துப் போவாய் என்று சொன்ன மருத்துவன்
நேற்றே இறந்து போனான்
சாவுக்கு பயமில்லை, சாத்திரங்கள் ஏதுமில்லை
இன்றிருப்போர் நாளையில்லை என்றே குடிக்கிறோம்”

என்று ஒரு கவிஞர் இணையத்தில் சொன்னது போலப் பாடி, நல்லது சொன்னவனைiயே கிண்டலடிப்பார்கள். மறுநாள் மீண்டும் தலைப்பாரம், தலையிடிப் பிரச்சனைதான்.

மதுவின் தொக்கிய விளைவுகள்

ஆனால் மதுபானத்தின் இந்த தொக்கிய விளைவுப் பிரச்சனையானது முடாக் குடியர்களுக்கானது மட்டுமல்ல. நண்பர்களின் ஒன்று கூடல், பிறந்தநாள் விழா, கிருஸ்மஸ் கொண்டாட்டம் போன்றவற்றில் மது அருந்தியவர்களுக்கும் ஏற்படுவதுண்டு.

போதையில் மிதந்ததற்கு மறுநாள் ஏற்படும் இத்தகைய வேண்டாத விளைவுகள் ஆளுக்காள் மாறுபடும்.

  • பொதுவாக களைப்பு,
  • தாகம்,
  • தலையிடி,
  • தசைப்பிடிப்பு,
  • ஓங்காளம்,
  • வாந்தி,
  • வயிற்று வலி,
  • தலைப்பாரம்,
  • தலைச்சுற்று,
  • போன்றவையாகலாம்.
  • அல்லது வெளிச்சம், சத்தம் ஆகியவறைப் பார்க்கும்போதும் கேட்கும்போதும் எரிச்சலுறலாம்.
  • இருதயம் வேகமாகத் துடிப்பது,
  • கண் சிவத்தல்,
  • தடுமாற்றம்,
  • மனத்தை ஒருமுகப்படுத்துதலில் சிரமம், போன்ற அறிகுறிகளாகவும் இருக்கலாம்.
  • இவற்றால் மனப்பதற்றம், எரிச்லுறதல், சினம் போன்றவை தோன்றும்.

தொக்கிய விளைவுகள் ஏன் ஏற்படுகின்றன.

Hangover

பல காரணங்கள் உள்ளன.

  • மது சேதனமுறும்போது உடலில் தோன்றும் acetaldehyde என்ற நச்சுப்பொருள் ஒரு காரணமாகும்.
  • நோயெதிர்புத் தொகுதில் ஏற்படும் மாற்றங்கள்,
  • குளுக்கோஸ் சேதனமடைவதில் பிரச்சனை,
  • உடலில் நீர் வரட்சி,
  • புரஸ்ரோகிளன்டின் தொகுக்கப்படுதில் சிக்கல்,
  • இருதயத்தின் அதிகரித்த செயற்பாடு,
  • தூக்கக் குழப்பங்கள்,
  • குருதிக் குழாய்கள் விரிவடைதல்,
  • ஊட்டச்சத்துக் குறைபாடு எனப் பலவாகும்.

இவ் அறிகுறிகள் போதை தணியும் போதே வெளிப்படும். பொதுவாக அதிக மது அருந்தி போதையில் மிதந்ததற்கு மறுநாள் காலையில் தோன்றும்.

மதுபானத்தின் தொக்கிய விளைவுகளானவை பாதிப்புற்றவருக்கு எரிச்சல் அளிப்பதாக இருந்தாலும், பார்த்திருப்பவர்களுக்கு கிண்டலடிப்பதற்கும் நகைத்து மகிழ்வதற்கும் ஏற்ற சுவார்ஸமான சம்பவங்களையும் கொண்டிருக்கும்.

Hang over என்ற ஆங்கிலப்படம் மிகவும் விரும்பிப் பார்க்கப்பட்டதனால் Hang over 1, Hang over 2 என குட்டிகளை ஈன்று கொண்டிருக்கிறது.

தமிழில் மதுபானக் கடை வந்தது. அது தொக்கிய விளைவை விட மதுபானக் கடையில் நிதம் நடக்கும் சம்பவங்களையே சொன்னது.

மதுபானம் அதை அருந்திப் பழகியவர்களுக்கு இனியது. சுகம் கொடுப்பது. கவலைகளை மறக்கச் செய்து தடையற்ற மனவெளியில் சிறகடிக்கச் செய்வதாக இருக்கிறது. முக்கிய பிரச்சனையாக இருப்பது அதைத் தொடரும் இத்தகைய தொக்கிய விளைவுகள்தாம்.

அவ்வாறான தொக்கிய விளைவற்ற மதுபானம் ஒன்று கண்டு பிடிகப்பட்டால் அது குடியர்களுக்கு கண்கண்ட தெய்வமாகிவிடும். அதிலேயே பூரண சரணாகதி அடையவும் கூடும்.

முக்தி விரைவில் சாத்தியமாகும்!

புகையற்ற ஈ சிகரட் கதை ஞாபகம்தானே. தம் அடிப்போம் ‘ஈ’ தம் அடிப்போம்- ஈ சிகரெட் பாதுகாப்பானதா?

hangover 2

மதுவின் பின் விளைவுகள்

 

மதுபானம் என்பது ஒரு பானமாக இருந்த போதும் அது ஒரு மருந்து (Drug) எனலாம். சற்று மனதைத் தளரச் செய்யும் ஆற்றலும் இருப்பதால் போதை மருந்து என்றே சொல்ல வேண்டும். மதுவானது பல்வேறு ஆபத்தான பின்விளைவுகளை கொடுப்பதை அறிவீர்கள். வருடாந்தம் 2.5 மில்லியன் இறப்புகளுக்கு மதுப்பாவனை காரணமாக இருக்கிறது.

மதுவானது காலாதிகாலமாக உபயோகிக்கப்பட்டு வருகின்ற பொருளாக இருக்கிறது. அதன் காரணமாகவே இன்றும் புழக்கத்தில் இருக்க முடிகிறது. இதுவே இன்று புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட மருந்தாக இருந்தால் எந்த அரசும் இதற்கு அங்கீகாரம் அளித்திருக்கவே மாட்டாது. அந்தளவிற்கு ஈரல், மூளை, இருதயம் என உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் சிதைத்து பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றது.

ஆனால் மிகப் பாரிய பிரச்சனை மதுவை உபயோகிக்க ஆரம்பிப்பவர்களில் 10 சதவிகிதமானவர்கள் அதற்கு ஆட்படுவதுதான். குடியில் மூழ்கிவிட்டால் அதை விட்டொழிப்பது கஸ்டாமாகும், புகைத்தல் போதைப் பொருட்கள் மற்றும் மதுவானது காதலை விட நெருக்கமானது. விடுப்பிரிய இடம் அளிக்காது. தன்னோடு ஒட்டி இணைத்துவிடும்.

ஆனால் முடிவு கோரமானது. அழிக்கவே செய்யம்.

மதுவின் மற்றொரு பிரச்சனை போதையில் கிளம்பும் வன்முறைதான். பறக்கும் விமானத்தின் கதவைத் திறக்க முயலும் அளவிற்கு அப்பன் பிள்ளை என்று தொடரும் பரம்பரைப் போதையாளர்களும் உண்டு.

மதுப் பாவனையை தவிர்பதற்கு அல்லது குறைப்பதற்கு வழி என்ன?

குடிக்க ஆரம்பிக்காமல் தவிர்ப்பதும், ஏற்கனவே ஆரம்பித்துவிட்டால் அதைக் கைவிடுவதும்தான். மஹாத்மா காந்தி மது ஒழிப்பு பிரசாரங்கள் செய்தார். ஆனால் அவர் வழிகாட்டிய காங்கிரஸ் கட்சி பதவிக்கு வந்தபோதும் அதை ஒழிக்க முடியவில்லை.

மதுப்பாவனையை குறைப்பதற்கு ஏதாவது செய்கிறோம் எனச் சொல்லும் அரசுகள் யாவும் கஜானாப் பைகளை நிரப்பிக் கொண்டு பரமயோக்கியர் போன்று வெளிப் பாவனையைக் காட்டுகின்றன.

எனவே போதைப் பிரியர்களுக்கான மாற்று வழி என்ன?

பாதுகாப்பான மதுபானம்

பாதுகாப்பான மதுபான வகை ஒன்றைக் கண்டுபிடிப்பதுதான்.
மதுவின் தாக்கமானது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துவதாகும். நரம்புக் கலங்கள் தமக்கிடையே செய்திகளை அனுப்புவதற்கும் தொடர்பாடலுக்குமாக நரம்பியல் கடத்திகளைப் (neurotransmitter) பயன்படுத்துகின்றன. பலவித நரம்பியல் கடத்திகள் உடலில் உள்ளன.

இவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றை அமைதிப்படுத்தும் சரியான மருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலம் மனிதனுக்கு மது கொடுக்கக் கூடிய அமைதியையும், சந்தோசத்தையும் கொடுக்கலாம். அவ்வாறு அமைதிப்படுத்தும் ஒரு இரசாயனம்; Gamma aminobutyric acid (Gaba) என்பதாகும்.

இது மூளையில் உற்பத்தியாகிறது. மருந்தாகவும் கிடைக்கிறது.
இவ்வாறான இரசாயனங்களின் கலவைகளை மதுவிற்கு பதிலாக உபயோகிக்கலாம். இவற்றில் மதுவின் தொக்கிய விளைவு இருக்காது என்கிறார் David Nutt என்பவர். மற்றவர்களுடன் மனம்விட்டுப் பேசி நல்லுறவை வளர்க்க முடியும். மதுவினால் எற்படும் வன்முறை போன்ற பின்விளைவுகளும் இருக்காது என்று மேலும் சொல்கிறார்.

தான் அவ்வாறான ஐந்து பொருட்களை இனம் கண்டுள்ளதாகவும் அவற்றை சரியான அளவுகளில் கலந்து பரீட்சித்திருப்பதாக Guardian ல் எழுதிய ஒரு கட்டுரையில் தெரிவித்தார். அதை மது போன்ற திரவ வடிவில் தயாரிக்க வேண்டும். பாவனையாளர்களின் தேர்வுகளுக்கும் ஏற்ப பல்வேறு நிறங்களிலும் சுவைகளில் கொடுக்க வேண்டும் என்பதே தன் முன் உள்ள சவால் என்கிறார்.

சரி இதற்கான ஆதாரங்கள் என்ன? எங்கே பரீட்சித்துப் பார்த்திருக்கிறார்.

தானே தனக்குப் பரீட்சித்துப் பார்த்ததாகக் கூறினார். தான் அதை உட்கொண்ட போது தனக்கு பதற்றங்கள் ஏதும் இன்றி மனம் ஆறுதலாக இருந்தத்தகவும், சுகமான தூக்கம் வந்ததாகவும் சொல்கிறார். பின்னர் அதற்கான மாற்று மருந்ததைச் (antidote ) சாப்பிட்டதும் சில நிமிடங்களில் சகசமான நிலைக்கு வந்துவிட்டதாகவும், ஒரு விரிவுரையையும் நடாத்த முடிந்ததாகவும் சொல்கிறார்.

இந்த ஆய்வு பற்றி சில மதுபானத் தயரிப்பாளர்களிடம் வினவியபோது அவர்களுக்கும் இதில் இத்தகைய தொக்கிய விளைவற்ற மதுவைத் தயாரிப்பதில் ஆர்வம் இருப்பதாகத் தெரிகிறது. பணம் கொட்டும் இடத்தைத் தம் கையினுள் அடக்குவதில் அவர்கள் கில்லாடிகள் அல்லவா?

பாதுகாப்பானதுதானா?

கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. போதை கொடுக்கும் மதுபோன்ற பானம். ஆனால் மது போன்ற பக்கவிளைவுகள் அற்றது. அதிலிருந்து உடனடியாக விடுபட்டு வேறு வேலைகளில் ஈடுபட வேண்டுமாயின் அதன் தாக்கத்திலிருந்து உடனடியாக மீள்வதற்கு மாற்று மருந்துகளும் உண்டு.

ஆகா அற்பதமான ஐடியா.

பார்க்கில் பார்ட்டியில் அல்லது வேறு எங்காவது அதை மசுக்கிடாமல் அடித்து சந்தேசமாக இருக்கலாம், வீடு போக முன்னர் மாற்று மருந்தை வாயில் போட்டுவிட்டு மனைவி முன் ஒன்றும் தெரியாத அப்பாவியாக பாவனை காட்டலாம்.

பள்ளிக்குப் போக முன் ஒரு டோஸ் அடித்துவிட்டு பள்ளி போகலாம். ஆசிரியர் வருவதற்கு முனனர்; மாற்று மருந்து அடித்துவிட்டு நல் மாணவனாக கலர் காட்டலாம்.

மொத்தத்தில் எல்லாமே ஏமாற்றுக் காரி;யங்கள்தாம். இவை எதுவுமே மனித மனத்தில் உண்மையான மகிழ்ச்சியை வளர்ப்பதற்கானவை அல்ல. அவற்றை மறக்கச் செய்து போலியான ஆனந்தத்தில் மூழ்க வைப்பவைதான். ஏற்கனவே இதை ஒத்த மருந்துகள் பாவனைiயில் இருக்கவே செய்கின்றன.

Benzodiazepine வகை மருந்துகள் அத்தகவையன. இவை மனப்பதற்றத்தை தவிர்த்து அமைதிப்படுத்தக் கூடியவை. வழமையாக வலிப்பு, மதுவில் இருந்து விடுபதற்காக, தசைப்பிடிப்பு, தூக்கத்திற்கு என்று பல காரணங்களுக்காக உபயோகிக்கப்படுகின்றன.

Diazepam, Chlordiazepoxideபோன்ற பலவற்றை உதாரணமாகச் சொல்லலாம். வலியம், லிபிரியம் போன்ற பெயர்கள் பலருக்கும்  பரிச்சயமானவை. இவை போன்ற மருந்துகள் பல உள்ளன.

ஆனால் தன்விருப்பின் பேரில் வாங்கும் சுய பாவிப்பானவை அல்ல மருந்துவர்கள் நோயாளிகளுக்கு தமது கண்காணிப்பின் கீழ் மட்டுமே இத்தகைய மருந்துகளை உபயோகிக்கிறார்கள். குறிப்பட்ட காலத்திற்கு குறிபட்பிட்ட அளவுகளில் கட்டுப்பாடுகளுடன் மட்டும். ஏனெனில் அவற்றிக்கும் ஆட்பட்டு விடுபட முடியாத (addiction) நிலை ஏற்படும். அதனால்தான் பிரிஸ்கிரிப்பசன் இன்றி வாங்க முடியாது.

இப்பொழுது தொக்கற்ற மது என்ற பெயரில் அவற்றை அல்லது அதை ஒத்தவைகளை வர்த்தக மயமாக்கப் பார்க்கிறார்கள். திறந்த பொருளாதாரம் போல திறந்த போதைப் பாவனை.
ஒரு குழியிலிருந்து எடுத்து மற்றொரு படுகுழியில் வீழ்த்தும் விளையாட்டுத்தான்.

மற்றொரு விடயத்தையும் கவனிக்க வேண்டும். மதுவிற்கு மாற்றாகத் தான் தேர்ந்தெடுத்த மருந்துகள் எவை என்பது பற்றி அவர் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. அது மட்டுமல்ல அவை பரந்த மட்டத்தில் ஆய்வு செய்யப்படவும் இல்லை. சுய அனுபவம் பற்றியே பேசியிருக்கிறார்.

எனவே ‘நம்பத் தகுந்தது அல்ல. கவைக்கு உதாவது’ என்று தட்டிக் கழித்துவிடலாமா?

மனித மனங்களில் கவலையும் அதிருப்தியும் தன்னம்பிக்கை இன்மையும் இல்லாது ஒழியும் வரை மாய உலகில் தன்னை மூழ்க வைத்து தற்காலிக சுகம் தேடும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

“யேசு வந்தார் பின்பு காந்தி வந்தார். மனிதன் மாறவில்லை.” எனப் பாடினார்கள்

அவன் மாறப் போவதுமில்லை. மது மருந்து மாத்திரைகள் என மனித மனத்தை மாய உலகில் பறக்க வைப்பதற்கான முயற்சிகள் தொடரவே செய்யும்.

“எம்மையும் எம் சந்ததிகளையும் நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.” எஸ்.ஜே.வி ஞாபகம் வந்தால் நான் அதற்குப் பொறுப்பில்லை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

00.0.0.00

Read Full Post »

மனித வாழ்வில் ஓற்றைத் துணை வாழ்வு

‘அன்றிலும் பேடும் போல’ இணையாக வாழ்ந்தார்கள் என்கிறோம். சீதைக்கு இராமன், நளனும் தமயந்தியும், சிவனும் உமையும் எனக் கொண்டாடுகின்றோம். ஒருவனுக்கு ஒருத்தி என்பதை மனித இனத்தின் மாண்பு என எண்ணுகிறோம்.

TN_154755000000

ஆனால் கோவலனுக்கு கண்ணகியும் மாதவியும் இருக்கவே செய்தார்கள். பாஞ்சாலிக்கு ஐந்து கணவர்கள். குந்தவி சூரியனுடன் இணங்கிய பின் பாண்டுவிற்கும் குழந்தைகள் பெற்றெடுத்தாள். அங்காங்கே பிறழ்வுகள் இருந்தபோதும் மனித இனத்தில் ஒருவனுக்கு ஒருத்தி அவர்களது பிள்ளைகள் எனக் குடும்பமாக வாழ்வது வழக்கமாகிவிட்டது.

ஒருதார மணம், ஒருதாரக் குடும்பம், ஒற்றை மணவாழ்வு, ஒற்றைத் துணை வாழ்வு என்றெல்லாம் பலவாறு சொல்கிறார்கள். ஆங்கிலத்தில் Monogamy என்கிறார்கள். இது எவ்வாறு வழக்கமாயிற்று. மனித வாழ்வின் கூர்ப்பில் வளர்ச்சியில் எப்பொழுது இது ஆரம்பித்தது என்பது பற்றி தெளிவான தரவுகள் கிடையாது.

monogamy-myth

ஏனைய உயிரினங்களைப் பொறுத்தவரையில் பறவைகள் பெருமளவு சோடிகளாகவே வாழ்கின்றன. 90% பறவைகள் சோடிகளாக வாழ்கின்றன எனச் சொல்கிறார்கள். ஆனால் மிருகங்களில் குறைவே பாலூட்டிகளைப் பொறுத்தவரையில் மிகக் குறைவான 3% வீதம் மட்டுமே சோடிகளாக வாழ்கின்றன.

மனித இனம் தோன்றிய காலம் முதல் ஒற்றை மண வாழ்வு இருந்திருப்பதற்கான சாத்தியமில்லை. மனித இனத்தின் பரிணாம வளரச்சியின் போது ஒரு சில காரணங்களினால் இது வந்திருக்கும் என நம்பலாம். அவை என்ன காரணங்களாக இருக்கலாம் என்பதையிட்டு விஞ்ஞானிகள் சில விளக்கங்களை சொல்லுகிறார்கள்.

introslide_7

  1. மனிதக் குழந்தைகள், சில மிருகக் குட்டிகளின் ஆரம்ப காலங்களில் அவற்றின் தேவைகள் அதிகம். அவற்றால் நடக்க முடியாது. தாமாக உணவு தேட முடியாது. தம்மைத்தாமே பாதுகாத்துக்;கொள்ள முடியாது. இவற்றின் காரணமாக ஒற்றைப் பெற்றோரால் அதன் தேவைகள் முழுவதையும் பூர்த்தி செய்ய வளர்த்தெடுப்பது முடியாத காரியம். ஆதனால் சோடியாக வாழ்வது அவசியமாயிற்று.
  2. இரண்டாவதாக அவர்கள் கூறும் காரணம் துணையைப் பாதுகாத்தல் (mate guarding) என்பதாகும். வேறு ஆண்கள் ஆண் மிருகங்கள் வந்து தனது துணையை கவர்ந்து செல்லாமல் இருப்பதைத் தடுப்பதற்காக சேர்ந்து வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
  3. தனது வாரிசைப் பாதுகாப்பதற்காகவும் துணையாக வாழ நேர்ந்தது என்கிறார்கள். ஒரு பெண்ணின் குழந்தையைக் கொன்றுவிட்டால் அவளது உடல் மற்றொரு குழந்தையைச் சுமப்பதற்கு தயாராகிவிடும் என்பதால் வேறு ஆண்கள் குழந்தையைக் கொன்று விடுமாம். கடுவன் பூனையிடமிருந்து தனது குட்டியைப் பாதுகாப்பதற்காக தனது குட்டிகளை தூக்கிக் கொண்டு ஓடும் தாய்ப் பூனைகள் ஞாபகத்திற்கு வரவில்லையா?

தங்கள் கருத்துகள் சரியானவையா என ஆராய்வதற்காக Christopher Opie தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் 230 வகையான மிருகங்களின் குடும்ப வாழ்வு சம்பந்தமான தரவுகளைத் தேடிப் பெற்று ஆய்வு செய்தனர். அவர்களது ஆய்வானது bushbabies, monkeys, apes and modern humans முதலான மிருகங்களின் புணர்வுப் பழக்கங்கள், வாழ்க்கை முறை, குட்டிகளின் இறப்பு விகிதம், பெற்றோரின் துணை போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தது.

தங்களது ஆய்வுகளை 75 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த காலம் முதல் இற்றைவரை simulated evolution பண்ணினர். பல மிருகங்களில் பரிணாம வளர்ச்சியில் ஒற்றைத் துணை வாழ்வானது சில காலங்களி;ல் ஏற்றமும் தாழ்வும் கண்டதை அவ் ஆய்வுகள் ஊடாக உணர முடிந்ததாம்.

சிசுக்கொலையும் வாரிசுகளைப் பாதுகாத்தலும்

பல்லாயிரம் தடவைகள் தமது ஆய்வை மீள ஆய்ந்தபோது மிருகங்களின் ஒற்றைத் துணை வாழ்க்கைக்கு காரணம் ஒன்றே ஒன்றாத்தான் இருந்ததாம். ஆண்கள் தமது குட்டிகளைக் கொல்லும் பழக்கமான சிசுக்கொலையே அது எனத் தெரிய வந்தது.

‘சிசுக் கொலை ஏற்கனவே இல்லாமல் ஒற்றைத் துணை வாழ்வு வர வாய்ப்பு இல்லை. அதேபோல ஒற்றைத் துணை வாழ்வு இல்லாமல் பெற்றோரின் பாதுகாப்பு சிசுவிற்கு கிடைக்காது’ என்ற முடிவிற்கு தலைமை ஆய்வாளரான Christopher Opie வந்தார்

பரிணாம வளர்ச்சியில் மிருகங்களின் மூளையின் அளவு பருமனடைந்தமை, கூட்டங்களாக வாழத் தலைப்பட்டமை போன்றவை தனது கருத்திற்கு வலுச் சேர்ப்பதாக அவர் கருதுகிறார். மூளை பருமனடையும்போது குழந்தைகள் தங்குவதற்கான இடைவெளி நீண்டு செல்கிறது. குட்டிக்குப் பாலூட்டும் காலத்தில் தாயின் சூலகத்திலிருந்து முட்டை வெளியேறுவதில்லை. இதனால் அக்காலத்தில் அவளது கருப்பையானது மற்றொரு கருவைச் சுமக்க ஆயத்தமாவதில்லை. எனவே அவளை மீண்டும் கருவலுவுள்ளவளாக வேண்டுமாயின் சிசுக்கொலை ஆண்மிருகங்களுக்கு அவசியமாக இருந்தது என்கிறார். ஆனால் சோடியாக வாழும்போது சிசுக்கொலை நடப்பதில்லை.

சிசுக்கொலையைத் தடுப்பதற்கு சோடியாக வாழ்வதை விட வேறு வழிகள் ஏதும் கிடையாதா என நீங்கள் கேட்கக் கூடும்.

சிம்பன்சிக் குரங்குகள் இதற்கு ஒரு அற்புதமான வழியைக் கண்டன. புணரும் காலத்தில் பெண் சிம்பன்சிகள் தமது குழுவில் உள்ள அனைத்து ஆண்களுடனும் புணருமாம். இதனால் ஆண் சிம்பன்சிகளுக்கு இதன் தந்தை யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டு அவை சிசுக்கொலை செய்வதில்லையாம்.

001688-SB1

பறவைகளில் அது அதிகம் காணப்படுவதும் தேவையின் நிமித்தமே. பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்கு கூடு கட்ட வேண்டும். குஞ்சு பொரித்த பின் அவற்றிக்கு இரை தேடவும், காவலிருக்கவும் தாயும் தகப்பனுமாக இருவரும் அவசியம். அதனால் பறவைகளுக்கு ஒற்றைத் துணை வாழ்வு அதிதியாவசியமானது எனக் கொள்ளலாம்.

ஓற்றைத் துணை விடயமானது மனித இனத்தின் மூதாதையரில் பழக்கத்திற்கு வந்து  ஒரு லட்சம் வரைதான் இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

மாற்றுக் கருத்துக்கள்

owls-2_1903597i

வேறு சில விஞ்ஞானிகள் இந்த ஆய்வு முடிவுகளை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. ‘ஒற்றைத் துணை எனச் சொல்லி ஆய்விற்கு எடுக்கப்பட்ட சில மிருகங்கள் வனங்களில் வாழ்பவையாக இல்லை. ஆந்தைக் குரங்குகள் வருடத்திற்கு ஒரு முறையே குட்டி போடுபவை. எனவே அவை தனது குட்டியை இழந்தாலும் அடுத்து புணர்வுக் காலத்திற்கு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். ஏனைய பல இனக் குரங்குகள் ஆய்வில் சொல்லப்பட்ட அளவிற்கு ஒற்றைத் துணை மிருகங்கள் அல்ல’ என பல்வேறு காரணங்களைச் சொல்கிறார் Dr Maren Huck. இவர் டேர்பி பல்கலைக்க கழத்தில் மிருகங்களின் வாழ்க்கை முறை பற்றி ஆய்வு செய்பவராவார்.

மற்றொரு கட்டுரையாளரான Meg Barker மனிதர்களின் ஒற்றைத் துணை வாழ்க்கை முறைக்கு மிருகங்களில் ஆதாரம் தேடுவது அபத்தமானது எனக் கருதுகிறார். முழுமையாகத் தெளிவில்லாத நரம்பியல் விஞ்ஞானத்திலும் (neuroscience) பரிணாம வளர்ச்சி உயிரியலிலும் (evolutionary biology) ஆதாரங்களைத் தேடுவதை விடுத்து மனிதனது சமூக விஞ்ஞானத்திலும் மெய்யியலிலும் தேடுவதே பொருத்தமானது என வாதாடுகிறார்.

பரிணாம வளரச்சியின் போது மனித மூளையானது துரித வளரச்சி அடைவதும் அதனால் கருத் தங்குவதற்கான கால இடைவெளி அதிகரிப்பதும் காரணமாகலாம், அதேபோல உடலில் ஏற்பட்ட பரிணாம மாற்றங்களுக்கும் பங்கு இருக்கலாம். ஆனால் அவற்றைவிட மனிதக் குழுக்களின் வாழ்க்கை முறைகள், சமூக ஊடாட்டங்கள், உளவியல் தாக்கங்கள் போன்ற அனைத்துமே ஒற்றைத் துணையா, பல துணையா, தேவைக்கு ஏற்ப துணையா என்பதைத் தீர்மானிக்கினறன எனலாம். biopsychosocial approach தேவை என்கிறார்கள்.

நாளாந்த வாழ்வில் துணையுடனான உறவுகளில் எத்தனை வித பிரச்சனைகளும் சஞ்சலங்களும் ஏற்படுகின்றன என்பதை ஒவ்வொருவரும் தனது உள் மன வேட்கைகளை திறந்த மனத்தோடு ஆராய்தால் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கக் கூடும். அதுவும் ஆண்களும் பெண்களும் வேலைக்குச் செல்லும் காலகட்டதில் நிரந்தரத் துணைகளுக்கு அப்பால் தற்காலிகத் துணைகளும் யதேச்சமான துணைகளுக்குமான சாத்தியங்களுக்கு குறைவில்லை.

ஒருவருடன் உறவில் இருக்கும் அதே நேரத்தில் தனது பாலியல் சுதந்திரத்தை எவ்வாறு காப்பாற்ற முடியும் என்பதையிட்டு பலர் சஞ்சலப்படுகிறார்கள். மேலை நாடுகளில் இது பற்றிய ஆலோசனைகளுக்காக மருத்துவர்களை நாடுவதையும் அறிய முடிகிறது. வெளி உறவுகள் சுகத்தைக் கொடுக்கும் அதே நேரம் அது ஏற்படுத்தும் உள்ளார்ந்த வலி பலரைக் குற்ற உணர்வுக்கு ஆளாக்குகிறது.

உறவுக்கு நாட்டமிருக்கிறது. ஆனால் ஆண் குறி விறைப்படைவதில்லை என்ற சிக்கலோடு பல ஆண்கள் வருகிறார்கள்.

erectile-dysfunction-faucet

உறவு கொள்ளும் போது தாங்க முடியாத வலி பெண் உறுப்பில் ஏற்படுகிறது என்கிறார்கள் சில பெண்கள். நிதானமாக ஆராயும் போது திருமண உறவுக்கு அப்பாலான பால் உறவுகளால் ஏற்படும் குற்ற உணர்வு நோயாகப் பரிணமிப்பது தெரிய வருகிறது.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டுச் சூழலிலும், சமூக ரீதியான நிரப்பந்தங்களிலும் வாழும் எமது சமூகத்தில் இது ஆழமான மனத் தாக்கதை ஏற்படுத்துவது ஆச்சரியமல்ல.

ஆனால் எல்லாச் சமூகங்களும் ஒற்றைத் துணை வாழ்வை தமது பண்பாடாகக் கொள்வதில்லை. பலதார மணங்கள் உலகின் பல்வேறு சமூகங்களில் வழமையானதாக இருக்கின்றன. வெளிப்படையாக ஒருதார மண வழக்கமுள்ள சமூகங்களிலும் மறைமுகமாகவும் இரகசியமாகவும் பல துணைகள் இருக்கவே செய்கின்றன. கணவனை அல்லது மனைவியை தள்ளி வைத்துவிட்டு புது ஒற்றைத் துணையைத் தேடுவதை எதில் அடக்குவது?.

தசரதனுக்கு ஆயிரம் மனைவி என்றனர். எல்லோருடனும் அவன் உறவு கொள்பவனாக இருக்கிறான் என்றாலும், ஒரு நாளில் அவன் மூன்று பெண்களுக்கு மேல் உறவு கொள்வது சாத்தியமில்லை. இன்று ஒருத்தியுடன் உறவு கொண்டால் அடுத்த தடவை அவளுடன் சேர குறைந்தது ஒரு வருடமாகும் எனக் கணக்கிடலாம்.

 

இதைப் பெண்ணின் இடத்தில் வைத்துச் சிந்தித்துப் பாருங்கள். அவளுக்கு வருடம் ஒரு முறைதான் பாலியில் இன்பம் கிட்டும். எவ்வளவு பரிதாபம்! தசரதனின் வாள் துடித்து எழாவிட்டால், வாயில் காவலர்களுடனும் மந்திரிகளுடனும் அவர்கள் சுகித்திருப்பார்கள் என்பது நிச்சயம். இங்கு வெளிப்படையாக அவளுக்கு ஒற்றைத் துணை, அவனுக்கோ பல துணைகள். மணவாழ்வு பற்றிய மாற்றுக் கோணங்கள் இவை.

உண்மையில் மனித வாழ்வைப் பொறுத்த வரையில் ஆரம்ப காலங்களில் ஒற்றைத் துணை என்பது பாதுகாப்பு காரணங்களுக்காக இருந்திருக்கலாம். கால ஓட்டத்தில் அது பண்பாட்டு அம்சமாகவும் பொருளாதார தேவைகளின் நிமித்தமும் இருந்தது. ‘சொத்து வெளியே போகக் கூடாது என்பதற்காக நெருங்கிய உறவினரைத் திருமணம் செய்வது எமது சமூகத்தில் வழக்கமாக இருக்கவில்லையா?

ஆனால் இன்று பாதுகாப்பு பெருமளவு பிரச்சனையாக இல்லை. ஆண்களும் பெண்களும் சரிசமமாக உழைப்பதால் பொருளாதார ரீதியாக மற்றவரில் தங்கியிருக்க வேண்டிய அவசியமும் நீர்த்துப் போகின்றது. இதனால் இன்று துணை என்பது பெரும்பாலனவர்களுக்கு, காதலுக்கும் பாலியல் கிளர்ச்சிக்கும் மட்டுமே ஆனதாக மாறி வருகிறது. இவற்றின் காரணமாக பலர் இன்று துணையின்றி தனியாக வாழவும் நேர்கிறது. ஒற்றைப் பெற்றோராக குழந்தையுடன் வாழ்வதும் தொடர்கிறது.

மூத்த தலைமுறையினருக்கு அதிர்ச்சி அளிப்பது போல, ஒருபால் திருமணமும், சேர்ந்து வாழ்வதும் மறைவாக நிகழ்ந்த காலம் போய் சட்ட ரீதியான அங்கீகாரத்தை பல நாடுகள் வழங்க முன் வந்திருக்கினறன.

ஒரு சில நூற்றாண்டுகளுக்கிடையே மனித வாழ்வின் திருமண உறவிலும், பண்பாட்டு முறைகளிலும், பாலியல் சிந்தனைகளிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இவை யாவுமே பெரும்பாலும் சமூக பொருளாதார காரணிகளாலும், தனிமனித சுதந்திரம் வலுப் பெற்றுள்ளதாலும் வந்தவை எனப் புரிந்து கொள்வது சிரமமானது அல்ல.

எனவே இத்தகைய ஆய்வுகளை ஆய்வு கூட பரிசோதனைக் குழாய்கள், நுணுக்குக் காட்டி, கணனி ஆகியவற்றிற்குள் மட்டும் முடக்கிவிடாது, சமூதாய மாற்றங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது முக்கியமானதாகப்படுகிறது.

எனது ஹாய் நலமா (30 Nov 2013) புளக்கில் வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

0.0.0.0.0

Read Full Post »

நுண்ணிய நரம்புக் கலங்கள் முதல் செயற்கை மூளை வரை
காதலின் சின்னமாக மூளை

‘குற்றம் செய்தவர் மீண்டும் குற்றம் செய்வாரா?’, ஒருவரது அரசியல் சாய்வு எந்தப் பக்கம் இருக்கக் கூடும்’ ‘ஓரு குறிப்பிட்ட விடயத்தில் ஒருவர் எவ்வாறு முடிவு எடுப்பார்’

இவை பற்றி யாரால் என்ன சொல்ல முடியும். மற்றவர் மனதில் உள்ளதை எம்மால் எவ்வாறு கண்டறிய முடியும். அவராகச் சொன்னல்தான் உண்டு. அல்லது கேட்டு அறிய வேண்டும்

mind-reading-120131-676450-

கள ரீதியாக இல்லாமல் விஞ்ஞான பூர்வமாக இந்த விடயங்கள் பற்றி அண்மையில் ஆய்வுகளாக செய்யப்பட்டிருந்தன. அவர்களது சமூக மற்றும் தனி நபர் செயற்பாடுகள் அடிப்படையாகக் கொண்டு அல்ல. அவர்களது மூளைகளின் செயற்பாடுகளை நுணுக்கமாக ஆராய்ந்து செய்யப்பட்டவை. அறிய ஆச்சரியமாக இருக்கிறதா?

உணர்வோடு சம்பந்தப்பட்ட விடயங்களை பௌதீகமான மூளைக்குள் ஆய்வது பற்றி சாதாரண மனிதர்கள் மட்டுமின்றி பல அறிஞர்கள் மற்றும் விஞ்ஞானிகளும் ஐயங்களை எழுப்ப்pனர்.

மனசும் மூளையும்

அட்டக் கத்தி திரைப்படம் வந்திருக்கிறது.. அற்புதமானது என்று சொல்ல முடியாது. ஆனால் மிக வித்தியாசமானது. ‘காதல் தெய்வீகமானது. உண்மையான காதல் ஒரு முறைதான் வரும், காதல் இல்லையேல் சாவு’ போன்ற பிம்பங்களை உடைத்துக் கொண்டு வந்திருக்கும் சினிமா அது.

heart-love-wallpaper-images

நாயகன் ஒவ்வொரு முறை காதல் வயப்படும்போதும் அவனது காதலின் அடையாளமாக இருதயத்தை தாங்கிய அம்பு காதலியை நோக்கி சிட்டெனப் பாயும்.

காதல் என்றால் உணர்வுடன் தொடர்புடையது. ஆனால் காதலின் சின்னமாக ஏன் இருதயத்தை வைத்திருக்கிறோம். காதலில் நாம் இழப்பது, பெறுவது, அனுபவிப்பது எல்லாமே உணர்வுகளுடன் தொடர்புடைய மூளையால்தானே.

love_and_mind-t1
தர்க்க ரீதியாகச் சிந்தித்தால் மூளைதான் காதலின் சின்னமாக அமைய வேண்டும்.

இந்தச் சிந்தனை முரணுக்குக் காரணம் எம்மிடையே ஆழப் பதிந்திருக்கும் ஒரு எண்ணம்தான்.

ஒரு உதாரணம் பார்க்கலாம். வழமையான தமிழ்த் திரைப்படங்களின் கதைதான். ஒரு அழகான பெண். மிகவும் வசதியுள்ளவள். ஆனால் அவள் காதலிப்பதோ ஒரு விளிம்பு நிலை வாலிபனை. ‘தனது மூளை அவனை மறக்கச் சொல்கிறது, மனசோ அவனோடுதான் உறவாடுகிறது’ என்பாள். ஆம் மூளை வேறு மனசு வேறு என்ற எண்ணம் பலரிடையே ஆழ வேரூன்றிவிட்டது.

ஆனால் மனசு மூளைக்குள்தான் இருப்பது விஞ்ஞான பூர்வாகத் தெளிவாகப் புரிந்து நீண்ட காலமாகிவிட்டது.

விஞ்ஞான ஆய்வுகள்

heart-transplantation

இருதயத்தையும், சிறுநீரகத்தையும், ஈரலை மாற்றீடு செய்யும் சத்திரசிகிச்சைகள் சர்வ சாதாரணமாகிவிட்டன. ஆனால் இன்னமும் மூளையில் கை வைக்க முடியவில்லை. இதனாலோ என்னவோ! உடல் உறுப்புகள் பற்றிய நுண்ணிய ஆய்வுகள் இப்பொழுது மூளையின் பக்கம் திரும்பியிருப்பதை அவதானிக்க முடிகிறது.

ஐன்சைடினின் மூளையின் அளவும் அவரது அறிவாற்றலும் பற்றிய ஆய்வுகள் சில காலத்திற்கு முன் ஊடகங்களில் அடிபட்டது. அது பற்றிய சர்ச்சைகளும் எழுந்தன. சமகாலத்திலும் எழுதப்பட்டது. மூளையின் அளைவை மட்டும் வைத்துக் கொண்டு அதன் ஆற்றலை புரிந்து கொள்ள முடியாது என்றார்கள். ‘கண்ணாடிக் குடுவைக்குள் உள்ள மூளையை ஆய்வதன் மூலம் மூளையின் செயற்பாட்டை கண்டறிய முடியாது’ என்ற வாதமும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே.

உண்மைதான். மூளையானது தனியாக இயங்கும் உறுப்பு அல்ல. அது உடலின் ஒரு அங்கம். உடலுடன் கூடவே நடமாடும் அந்த மூளையானது பல்வேறு அனுபவங்களைப் பெறுகிறது. புதிய மனிதர்களைக் காண்கிறது, புதிய சூழல்களில் இயங்குகிறது.

பிரச்சனைகளை எதிர் நோக்குகிறது, ஆபத்துக்களை எதிர் கொள்கிறது. அதே நேரம் சிரிக்க வைக்கிறது, அழ வைக்கிறது, கோபப்பட்டு ஆக்கிரோஸமாக தன்னைச் சுமக்கும் உடலை எதிர்வினையாற்றவும் வைக்கிறது.

அதன் ஆற்றலை அதன் செயற்பாட்டைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் இன்னும் ஆழமாகச் செல்ல வேண்டும். மூளையின் அடிப்படையான நரம்புக் கலங்களை ஆராய வேண்டும். மூளையில் தகவல்கள் எவ்வாறு பரிமாறப்படுகின்றன என்பது பற்றி அறிய வேண்டும். நினைவுகள் எப்படிச் சேமிக்கப்படுகின்றன என்பது தெளிவாக வேண்டும்.

இவற்றையெல்லாம் தனியாக மூளையை வெளியே அகற்றி போர்மலின் போட்டுப் பாதுகாத்து அதை ஆராய்வதில் பயனில்லை. மூளையானது வௌ;வேறு வித்தியாசமான சூழல்களைச் சந்திக்கும் போது பெறும் மாற்றங்களை ஆராய வேண்டும். மூளையை அவ்வாறு ஆராய்வதை நரம்பியல் விஞ்ஞானம் (Neuroscience) என்கிறார்கள்.

இவை மூளையில் பதிவாகின்றன. ஒவ்வொரு உணர்வும் அனுபவமும் கற்கையும் அங்கு பதிவாகின்றன. இதற்குக் காரணம் அது மிகவும் நுணுக்கமான ஒரு உறுப்பு. ‘ஆழ்ந்தகன்ற நுண்ணியனே.. ‘ என சிவனைப் பாடினார் மாணிக்கவாசகர். அது போல நுண்ணியதில் நுண்ணியது.

ஆவ்வாறே அனுபவங்களின்; பதிவுகள் மூளையின் கண்ணுக்கு எட்டா ஏதோ ஒரு பகுதியில் சில மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அங்கு பேணப்படுகின்றன. பின்னொரு நாளில் நினைவு மீட்கும்போது அவை அச்சடித்த காகிதம்போல தகவலை மீளத் தருகின்றன.
 

நவீன ஆய்வுகள்

இவற்றை ஆராய்வதற்கான வசதிகள் எங்களிடம் உள்ளனவா?
இது சாத்தியமா?

‘இருக்கு.. ஆனால் இல்லை..’ என்ற பாணியில்தான் மழுப்பலாக பதில் சொல்ல வேண்டியுள்ளதா?

நரம்பியல் விஞ்ஞானம் இப்பொழுதான் குறுநடை போட ஆரம்பித்திருக்கிறது.

MRI பற்றி எல்லோருக்கும் தெரியும். எமது மூளைக்குள் இருக்கும் கட்டிகள், குருதிக் கண்டல்கள், பழுதடைந்த மூளையின் பகுதிகள் போன்றவற்றை புகைப்படம்போல எடுத்துக் காட்டுபவை அவை.
ஆனால் இவை போதுமானதல்ல என்பதை எல்லோரும் அறிவர்.
மூளையின் கனபரிமாணத்திற்கு அப்பால் அதன் செயற்பாட்டை ஆராயும்

fMRI Functional magnetic resonance imagingபாவனைக்கு 1990 களில் வந்துவிட்டது. ஒரு பகுதி நரம்புகளின் செயற்பாடுகளுக்கும் அதற்கான குருதி ஓட்ட அளவிற்கும் தொடர்பு உள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு படம் எடுக்கிறது இது. அதாவது செயற்படும் மூளையின் குறிப்பிட்ட பகுதிக்கு அதிகளவு இரத்தம் செல்வதைக் கொண்டு இயங்குவது.

இவை ஆரோக்கியமான சாதாரண மனிதர்களின் மூளையை ஆராய்வதில் புரட்சிகரமான முன்னேற்றத்தைக் கொண்டு வந்தது. உணரும்போதும் செயற்படும்போதும் மூளையின் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை பதிவு செய்ய முடிந்தது. எம் நினைவுகளையும், சிந்தனையையும், முடிவு எடுத்தலையும், அறிவாற்றலையும் மட்டுமின்றி கனவுகளையும் கூட உணர்த்தக் கூடியதாகும்.

இது ஒரு ஆரம்ப நிலை உபகரணமாகும்.. புதிய புதிய கருவிகள்  வந்துள்ளன. மூளையின் ஆழத்தில் புதைந்திருக்கும் சில நரம்புக் கலங்களை மிகுந்த துலக்கத்துடன் தூண்டும் வல்லமை கொண்ட ஒளித்துகள்  கருவிகளை (optogenetics) இப்பொழுது நரம்பியல் விஞ்ஞானிகள் பயன்படுத்துகின்றனர். நனொ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மிக நுணுக்கமான அளவுகளை மூளையின் செயற்பாட்டின்போது எடுப்பது விரைவில் சாத்தியமாகும் எனவும் தெரிகிறது.

அடிப்படை அலகுகள்

மூளையின் செயற்பாடுகள் அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பது மூளையின் மூலக் கலங்களான நியூரோன் (neuron) எனப்படுவதாகும். இவற்றில் எழும் நுண்ணிய மின்அலைகள் கலத்திலிருந்து ஏனைய கலங்களுக்கு பரவுவதன் மூலமே மூளை செயற்படுவதாகக் கருதப்பட்டது.

neuroglia_of_CNS

இவற்றை ஒன்றோடு ஒன்று இணைப்பதாக கிளையல் கலங்கள் (glial cells) இருக்கின்றன. இவற்றில் மூன்று வகைகள் உண்டு.  astrocytes, microglia, and oligodendrocytes   எனப்படுகின்றன. நியூரோன்கள் மட்டுமே மூளையின் செயற்பாட்டையும் முழுமையாகக் கட்டுப்படுத்துவதாக ஆரம்பத்தில் கருதப்பட்டது.

இந்த கிளையல் கலங்கள் நியூரோன்களை பாதுகாப்பதற்கும்,  கலங்களின் இடையேயான தொடர்புகளைக் கடத்துவதற்கும் போசாக்குகளைக் கடத்துவதற்கும் மட்டுமே என்றே முன்னர் நம்பினார்கள். ஆனால் ஆஸ்ரோசைட்ஸ் மற்றும் மைக்ரோகிளயா (astrocytes, microglia) ஆகியவை தகவல்களை பதப்படுத்துவதற்கும் உதவுகின்றன என அண்மைய ஆய்வுகள் கூறுகின்றன.

பல்வேறு நட்சத்திர வடிவம் கொண்ட ஆஸ்ரோசைட்சானது நியூரோன் போலவே இணைப்புகளை ஏற்படுத்தி சமிக்கைகளை தமக்கிடையேயும், நியூரோன்களுக்கும் அனுப்பும் ஆற்றல் கொண்டவை. ஆயினும் தானாகவே மின் சமிக்கைகளை உற்பத்தியாக்க கூடியவை அல்ல.

எலிகளில் செய்யப்பட்ட ஆய்வின் படி ஒவ்வொரு ஆஸ்ரோசைட்சும் பல்லாயிரக் கணக்கான இணைப்புகளுடாக தகவல் பரிமாற்றத்தை ஒழுங்கு பண்ணக் கூடியவையாகும். அத்துடன் மயிர்த்துழைக் குழாய்கள் (capillaries) ஊடான இரத்த ஓட்டத்தையும் கட்டுப்படுத்தக் கூடியவையாகும்.

ஆனால் மனித ஆஸ்ரோசைட்ஸ்கள் எலியினுடையதை விட அளவில் சற்றுப் பெரியவையாக இருக்கின்றன. இவற்றை எலியின் மூளையில் மாற்றீடு செய்தபோது எலிகளின் நினைவாற்றலானது பல்மடங்கு பெருகியது. மனித ஆஸ்ரோசைட்ஸ்கள் மேலும் பல செயற்பாடுகளைச் செய்யும் ஆற்றல் கொண்டவை என்ற முடிவுக்கு இவ் ஆய்வு அறிக்கை மூலம் நாம் வர முடியும்..

இதேபோல மைக்ரோகிளியாவும் பல்வேறு செயலாற்றல் கொண்டவை என கடந்த 10 வருடங்களுக்குள் செய்யப்பட்ட ஆய்வுகள் உணர்த்துகின்றன. அவை மூளையின் எதிர்ப்பாற்றல் சக்தியுடன் தொடர்புடையவை. இறந்த கலங்களை துடைத்தெடுக்கின்றன. நுண்ணியதாக நீளும் விரல் போன்ற அலகுகளால் சூழலைக் கண்காணிக்கின்றன. அத்துடன் தேவையற்ற இணைப்புகளை அழித்து புதியவை உருவாக இடம் அளிக்கின்றன.

இவ்வாறான ஒரு சில ஆய்வுகள் மனிதரில் மேற்கொள்ளப்பட்ட போதும் பெரும்பாலானவை எலி போன்ற மிருகங்களிலேயே செய்யப்படுகின்றன. மேலும் நுணுக்கமான ஆய்வுகளை மனிதரில் செய்வதற்கான நவீன கருவிகளின் வரவு தேவையாக உள்ளது.
நரம்பியல் விஞ்ஞான ஆய்வுகளாவன மூளையின் கனபரிமாணம் மற்றும் வடிவுகளைத் தாண்டி அதன் உட்பாகங்களுக்கும் சென்றுள்ளதைப புரியக் கூடியதாக உள்ளது. மூளையின் கலங்களையும் அதன் மூலப் பகுதிகளையும் நோக்கிய துல்லியமான ஆய்வுகள்; சாத்தியமாகின்றன.

செயற்கை மூளை

இதற்கிடையில் ஒஸ்ரிய விஞ்ஞானிகளால் மறு உருவாக்க நுட்பங்களைப் பயன்படுத்தி மனித மூளையின் சிறிய வடிவத்தை ஆய்வு கூடத்தில் உருவாக்க முடிந்திருக்கிறது. இது பற்றிய செய்திகளை பத்திரிகைளில் படித்திருப்பீர்கள். மூளையின் பல பகுதிகளான cerebral cortex, retina, meninges, choroid plexus போன்றவற்றின் ஆரம்ப கட்ட வளர்ச்சியை 2 மாதத்தில் ஆய்வு கூடத்தில் எட்ட முடிந்தாலும் அதற்கு மேல் வளர்ச்p அடையவில்லை.

Artificial brain

போதிய குருதி ஓட்டம் மற்றும் ஒட்சியன் இல்லாமையால் வளர்ச்சி தடைப்பட்டது என்று அவர்கள் சொன்னார்கள். இருந்த போதும் மனித உடலில் பயன்படுத்தக் கூடிய மூளையை உருவாக்குவது அண்மைக்காலத்தில் சாத்தியமில்லை என்றே படுகிறது.

இருந்தபோதும் இந்த ஆய்வை தட்டிக் கழிக்க வேண்டியதில்லை. மூளையின் செயற்பாடுகள் அதன் நோய்கள் பற்றிய பல புதிய செயதிகளையும் தருவதோடு ஆய்வுக்கான புதிய கதவுகளையும் அது திறந்து விட்டிருக்கிறது.

முடிவாக

இன்னும் பல்லாயிரம் படிகள் எங்கள் முன் காத்திருக்கினறன. தகவல்கள் மின்அலைகளாக எவ்வாறு உருவாகின்றன. அவை ஒன்றிலிருந்து மற்றது எவ்வாறு வேறுபடுகிறது போன்ற பலவற்றையும் கண்டறிய வேண்டியுள்ளது.

காதலின் சின்னமாக மூளையின் கலங்களான நியூரோன் மற்றும் ஆஸ்ரோசைட்ஸ, மைக்ரோகிளயா போன்றவற்றைக் குறியீடாக சினிமாவில் காட்டும் விஞ்ஞான அறிவியல் தெளிவு எமது நெறியாளர்களுக்கு கிட்டும் காலம் வருமா?

வரும் என நம்பலாம். அதேபோல திரைப்பட ஆர்வலர்களும் அக் குறியீடுகளை தெளிவாகப் புரிந்து கொள்ளும் அறிவியல் வளர்ச்சி தொலை தூரத்தில் இல்லை.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

பொய்யறியும் சாதனங்களின் மறைமுகங்கள்
பாலியல் குற்றவாளிகள் மறைத்த சங்கதிகளை வெளிவர வைக்குமா?

‘பொய் சொல்லக் கூடாது பாப்பா..’

பாப்பாவாக நாம் கற்றுக் கொண்ட பாடங்கள் வெறும் பாடங்களாக மனதின் ஓரங்களில் ஒழிந்து கிடக்க நிதமும் பொய்மைப் பூக்களை உதிர்த்துக் கொண்டேயிருக்கிறோம். இவற்றில் பல பொய்கள் தீவிரமானவையல்ல. மற்றவர்களுக்கு எந்தவித தீங்குகளையும் செய்யாதவை.

ஆனால் எல்லாப் பொய்களும் அவ்வாறில்லை. மற்றவர்களை ஏமாற்றுவதற்காக சொல்லப்படுபவையும் இதில் அடங்கும். தாம் செய்த குற்றங்களுக்கான தண்டனைகளிலிருந்து தப்புவதற்காhகச் சொல்லப்படுபவை இன்னமும் பல.

இந்தப் பொய்களை மற்றவர்களால் கண்டறிய முடியுமா? அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதுபோல பொய் சொல்பவர்களின் அகத்தின் அழுக்கும் முகத்தில் தெரியவே செய்யும். நுண்ணுணர்வுள்ளவர்; அதைச் சுலபமாக உணர்ந்து அறிந்து கொள்வார்கள்.

morality-of-lying1
ஆனால் மனப் பதிவுகள் ஊடாக அடையப்படும் முடிவுகள் சரியானவை என உறுதியாகச் சொல்லக் கூடியவை அல்லவே.

அவை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கக் கூடியவையும் அல்ல.
பொய்களை அல்லது பொய் பேசுகிறார்கள் என்பதைக் கண்டறிய விஞ்ஞான ரீதியான பரிசோதனைகள் உள்ளனவா? இருந்தால், சமகாலச் சம்பவங்கள் அவற்றிக்கான தேவையை அதிகரிக்கவே செய்கின்றன.

பாலியல் பலாத்காரங்கள்

5 வயதேயான பச்சிளங் குழந்தைகள் முதல் 70 வயதான பாட்டிகள் மீதான  பாலியல் குற்றங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. இந்த வருடத்தின் முதல் 6 காலத்திற்குள் மாத்திரம் 900 பாலியல் வல்வுறவுகள் நிகழ்ந்திருப்பதாகவும் அதில் 600 குழந்தைகள் மீதானவை எனவும் இலங்கைப் பொலிஸ் திணைக்களமே அறிவித்திருக்கிறது. அரசியல்வாதிகள், பாடசாலை அதிபர்கள், மதகுருமார்கள், நெருங்கிய உறவினர்கள் எனச் சமூகத்தில் மதிப்புடைய பலரும் கூட இத்தகைய குற்றச்செய்கைகளில் ஈடுபடுவதை ஊடகங்கள் மூலம் அறிகிறோம்.

I-can-t-STOP-IT-stop-child-abuse-31299494-500-440

இவர்களில் பலர் சத்தமின்றித் தப்பிவிடுகிறார்கள். அகப்பட்டவர்கள் குற்றம் சாட்டப்படுகிறார்கள், அவர்களிலும் பலர் போதிய சாட்சியங்கள் இன்றி; விடுதலை ஆகிறார்கள். தண்டிக்கப்பட்டவர்களும் சற்றுக் காலத்தின் பின் விடுதலையாகி சமூகத்தில் இணைகிறார்கள். இவர்கள் மீண்டும் தப்புச் செய்யமாட்டார்கள் என்பது நிச்சயமில்லையே.

பொலிகிராவ் டெஸ்ட்

இந்த விடயத்தில் பொலிகிராவ் டெஸ்ட் polygraph test பற்றி மேலை நாடுகளில் விவாதிக்கப்படுகிறது.

‘பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பொய்யர்கள்..’ அரசில்வாதிகளாவும் சட்டம் இயற்றுபவர்களாகவும் இருக்கும் எம்மைப் போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இது பற்றிய மூச்சே எழவில்லை. தங்களது கபட வாழ்விற்கு குழிபறிக்க இவர்கள் இடம் தருவார்களா?

polygraph-004
உண்மைகளை வெளிக்கொணர பொலிகிராவ் டெஸ்ட் என்ற இப் பரிசோதனை உதவும் என நம்பப்படுகிறது.

பாலியல் வல்லுறவு, பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்படும் தருணத்தில் அவர்களுக்கு இந்தப் பரிசோதனையை கட்டாயமாக்கச் செய்யப்பட வேண்டும் என்ற ஆலோசனை பிரித்தானிய அரசால் தீவிரமாகப் பரிசீலிக்கப்படுகிறது.

இதன் உதவியுடன் உண்மைகள் வெளிப்பட்டால் குற்றவாளிகள்; மீண்டும் பாலியல் குற்றங்களைச் செய்யும் விகிதம் குறையும், அதன் மூலம் அப்பாவிப் பொதுமக்களுக்கு கூடிய பாதுகாப்பு கிடைக்கும் என நம்புகிறார்கள்.

நம்பிக்கை தரும் ஆய்வுகள்

இதற்கு அடிப்படையாக இருப்பது East and West Midlands  ல் செய்யப்பட்ட ஒரு ஆய்வு ஆகும். பொலிகிராவ் டெஸ்ட் செய்யப்பட்ட குற்றவாளிகள் அவ்வாறு செய்யப்படாதவர்களை விட இரு மடங்கு அதிகமாக மருத்துவ ரீதியாக கணக்கில் எடுக்கக்கூடிய மறைவெளியீடுகளைத் (clinically significant disclosures – CSD ) தந்தார்கள் என அறியப்பட்டது.
அவ்வாறு மறைவெளியீடுகளால் கிடைக்கும் புதிய தகவல்கள் அவர்களை

  • எவ்வாறு நிர்வகிக்க வேண்டும்,
  • சமூகத்தில் அவர்களை கண்காணிப்பது எப்படி?,
  • அவர்களால் எதிர்காலத்தில் வரக்கூடிய ஆபத்துகளை மதிப்பீடு செய்வது,
  • அல்லது அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளில் எவ்வாறான மாற்றங்களைச் செய்ய வேண்டும்

போன்ற விடயங்களைத் தீர்மானிப்பதற்கு நிறைய உதவும்.

உதாரணத்திற்கு வேறு பாலியல் குற்றவாளிகளுடன் உள்ள தொடர்புகள், குழந்தைகளை அணுகுவதற்கு அவர்களுக்கு உள்ள வாய்ப்புகள் போன்ற தகவல்கள் புதிய குற்றங்கள் இழைக்கப்படுவதைத் தடுக்க உதவும்.

பொய்யறியும் சாதனமா?

இவ்வாறு மறைத்த தகவல்களை வெளிக்கொணர்வதற்கு பொலிகிராவ்

டெஸ்ட் எவ்வாறு உதவுகிறது?

ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது இவர் பொய் சொல்கிறார் என்பதைத் கண்டுபிடிக்கும் திறன் இப் பரிசோதனைக்கு உள்ளது என்பதைவிட, தான் சொல்லும் பொய்களை இது கண்டறிந்துவிடும் என்ற குற்றவாளியின் நம்பிக்கையே கண்டறியப்படுவதற்குக் காரணமாகிறது.

இருந்தபோதும், பொய்யறியும் சாதனங்கள்; (lie detectors)என்ற பதம் பொலிகிராவ் டெஸ்ட்ற்கு வழங்கப்படுவது தவறு எனலாம்.
அப்படியானால் இப் பரிசோதனை எதைச் செய்கிறது?
உள உடலியல் ரீதியாகத் தூண்டப்படுதல், சருமத்தில் கடத்தப்படுதல், சுவாசம், இரத்த அழுத்தம் போன்ற உடல் உளவியல் குறியீடுகளை (Psychophysiological indices)அளவிடுகிறது. அவ்வளவேதான்.

அப்படியானால் தீர்மானத்திற்கு வருவது எப்படி?

நாம் பொய் சொல்லும்போது உணர்வு ரீதியாக அதிகம் தூண்டப்படுகிறோம் என நம்பப்படுகிறது. உணர்வு ரீதியாகச் தூண்டப்படும்போது (arousal) வெளிப்படும் அறிகுறிகளை கண்டறியும் ஆற்றல் உள்ள பொலிகிராவ் டெஸ்ட் இயக்குனர்கள், அதனை அடிப்படையாகக் கொண்டு ஒருவர் பொய் சொல்கிறாரா இல்லையா எனத் தீர்மானிக்கிறார்கள்.

எனவே இதுவும் மனப்பதிவில் தங்கியுள்ள தீர்மானம்தான். அதாவது டெஸ்ட் இயக்குனர்களினது.

பல மாறுபாடான நடைமுறைகளைக் கையாள்கிறார்கள். குற்றத்தின் தொடர்புடைய விடயம் பற்றிய கேள்விகளுக்கு விடையளிக்கும்போது தான் கண்டுபிடிக்கப்படலாம் என்ற பயத்தில் அதிகளவு அதிகம் தூண்டப்படுகிறார். ஆனால் அது சம்பந்தமில்லாத பொதுப்படையான கேள்விகளால் பாதிப்படைவது குறைவு. இக் கருத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கிறது.
85% மான குற்றவாளிகளை பொலிகிராவ் டெஸ்ட் சரியாக அடையாளம் காணுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முதற்பார்வையில் இந்த முடிவுகள் மிகவும் நம்பிக்கையான எண்ணத்தையே ஏற்படுத்தும்.

மறை முடிவுகள்

இப்பரிசோதனையின் மற்றொரு பக்கம் அவநம்பிக்கையளிக்கிறது. 12% முதல் 47% வரையான குற்றமற்றவர்களையும் இப் பரிசோதனையானது பொய்யர்கள் என முடிவுகட்டியது. இது ஏற்றுக் கொள்ளவே முடியாதது. அநீதியானது.
குற்றமற்றவர்கள் தூண்டுதலுக்கு ஆளாகி பொய்யர்கள் என முடிவு கட்டப்பட்டது ஏன்;. இதற்கும் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். தொடர்புடைய கேள்விகளால் குற்றமற்றவர்கள் சலனமடைவது ஏன்?
•    உதாரணமாக குற்றம் நடந்த தருணத்தில், அவர் வேறு நடவடிக்கைகளுக்காக அவ்விடத்தில் இருந்திருக்கலாம். அது சட்ட ரீதியாக பிரச்சனையற்றது என்ற போதும் அதனால் வெட்கப்பட்டிருக்கலாம்.
•    எதுவித பிரச்சனையும் இல்லாத ஒரு அப்பாவி என்ற போதும் தன்னை இவர்கள் நம்பப் போவதில்லை என்ற பயமும் காரணமாயிருக்கலாம்.
இவற்றிலிருந்து தெரிவது என்ன? தான் பொய் சொல்வதைக் பொலிகிராவ் டெஸ்ட் கண்டுபிடித்துவிடும் என்ற அடிப்படை நம்பிக்கையே அவர்களைச் சலனப்படுத்துகிறது.
இதில் மற்றொரு ஆச்சரியமான விடயம் என்னவென்றால், பரிசோதனைக்கு செய்வதற்கு முதல் அது பற்றிய விடயங்களை விளக்கும் நேரத்திலேயே மறைத்து வைத்த பல உண்மைகள் வெளிவந்தன என்பதேயாகும்.

பொய்யான சாதனம்

சூட்டிகையான ஆய்வாளர் மற்றொரு பரிசோதனையும் செய்தார். பொலிகிராவ் டெஸ்ட்ற்கான மெஷின் போன்ற போலியான உபகரணத்தைப் பொருத்திவிட்டு கேள்விகளைத் தொடுத்தார். மறைத்து வைத்த உண்மைகள் கிடுகிடுவென வெளிவந்தன. உண்மையான மெஷினைத் தொடுத்தவர்களைவிட அதிகமாக உண்மைகளை வெளியிட்டனராம்.

இணையத்தில் இவை பற்றிய தகவல்கள் ஏற்கனவே நிறைய இருக்கின்றன. பாலியல் குற்றவாளிகளுக்கு பொலிகிராவ் டெஸ்ட் கட்டாயமாக்கப்பட்டால் இன்னும் பல தகவல்கள் வெளியாகும். குற்றவாளிகள் இணையத்திற்குள் நுழைந்தால்போதும், இப் பரிசோதனை எத்தகையது, அதன் போதாமைகள் என்ன என்பது போன்றவை வெட்ட வெளிச்சமாகிவிடும். அந்த டெஸ்ட் பற்றிய பீதி மறைந்துவிடும். துணிவோடு டெஸ்ட்ற்குச் செல்வார்கள். பயமின்றிப் பொய் சொல்லும் துணிவு வந்துவிடும். அகப்பட மாட்டார்கள்.

ஓரம்போ

இந்த டெஸ்டை ஓரங்கட்டி வெல்வதற்கான வழிமுறைகளும் உண்டு. இப் பரீட்சை எந்த அடிப்படையில் செய்யப்படுகிறது என்பதைப் புரிந்த கில்லாடிகள் பரீட்சித்துப் பார்த்து வெற்றி கண்டிருக்கிறார்கள்.

தொடர்புடைய விடயம் பற்றிய கேள்விகளுக்கு விடையளிக்கும்போது தமது உள உடலியல் பிரதிபலிப்புகளை அடக்கி வாசிக்கவும், பொதுப்படையான கேள்விகளுக்கு மிகைப்படுத்தியும் காட்டவும் தமக்குப் பயிற்சியளித்துத் தயார்ப்படுத்தலாம்.
•    தனக்குத்தானே ஏற்படுத்தக் கூடிய உடல் உள வலிகள் மிகைப்படுத்த உதவும்.
•    அதே நேரம் தியானம் யோகாசனம் போன்ற பயிற்சிகள் அமைதிகாக்க உதவலாம்.

ஆன்மீக வழிமுறைகள் என நாம் நம்பும் தியானம் யோகாசனம் போன்றவை குற்றவாளிகள் தங்களைத்தாமே காப்பாற்ற உதவுகிறது என்பது பலருக்கும் ஜீரணிக்க முடியாத உண்மையான போதும், அதுதான் யதார்த்தத்தில் நடக்கிறது. குற்றவாளிகள் பொலீஸ்காரனிடம் நல்ல பெயர் வாங்க அவற்றைச் செய்கிறார்கள். ஆன்மீகவாதிகள்  இறைவனிடம் நல்ல பெயர் வாங்கச் செய்கிறார்கள். அவ்வளவுதான்!

ஆனால் உளஅமைதிக்கும், மனநோய்கள் தீரவும் அவை உதவுகின்றன என்பதையும் இங்கு சுட்டிக் காட்டுவது அவசியமாகிறது.

ஒரு உதாரணம். Floyd என்பவர் பொலிகிராவ் டெஸ்டின் அடிப்படையில் தவறுதலாகக் குற்றவாளியாகக் காணப்பட்டார். இதனால் சினமடைந்த அவர் சிறையில் இருந்த நேரத்தில் தன்னால் முடிந்தளவிற்கு இப்பரிசோதனை பற்றிய தகவல்களை தேடிக் கண்டுபிடித்து, தான் பெற்ற அறிவின் அடிப்படையில் அதை வெல்ல முயன்றார். தன்னோடு இருந்த பல கைதிகளுக்கு அந்த அறிவைக் கொண்டு பயிற்சியளித்தார். வெறும் 15 நிமிடநேர பயிற்சி மட்டுமே கொடுத்தபோதும் 23 பேரால் அப்பரீட்சையில் வெல்ல முடிந்தது. 4 பேரால் மட்டுமே முடியவில்லை.

இத்தகைய அறிவைப் பயன்படுத்தி குற்றவாளிகளும், பாலியல் வன்முறையில் ஈடுபடுவோரும் பரிசோதனையில் தப்பி அப்பாவி முகம் பூண்டு மறைவில் குற்றமிழைக்க முடியும். இதனால்தான் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.

‘பொய்களைக் கண்டு பிடிக்கும்’; என நம்பப்படும் இந்தப் பரிசோதனை எதிர்காலத்தில் ‘அகப்படாமல் பொய் சொல்லக் கற்றுக் கொள்ளவும் உதவலாம்’ என்பதையிட்டு கவனம் எடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.

‘பொய் சொல்லப் போறேன். பொய் சொல்லப் போறேன்….’

அவ்வாறு சிரித்துப் பாடி சந்தேகம் எழாதபடி திட்டமிட்டுப் பொய் சொல்பவர்களைக் கண்டு பிடிக்கும் சாதனங்கள் ஏதாவது புதிதாக வரும்வரை காத்திருப்போம்.

எனது ஹாய் நலமா புளக்கில்  (1st February 2013) வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), MCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.0.0.0.0

Read Full Post »

அந்தக் குழந்தைக்கு சில நாட்களாகப் பசியில்லை, உற்சாகமில்லை, விளையாடுவதில்லை. எதையோ பறிகொடுத்ததான சோகத்தில் மாய்ந்து கிடந்தது.

இரவில் கண்விழித்தெழுந்து ‘ரெமி ரெமி’ கத்துகிறது. பெற்றோர்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. எவ்வாறு தமது குழந்தையை அமைதிப்படுத்துவது, தூங்க வைப்பது எப்படி, உண்ண வைப்பது எவ்வாறு எனப் புரியாது அல்லலுறுகிறார்கள்.

 skd256383sdc

ஆம் ரெமி அவர்களது வளர்ப்பு நாய். நாய் என்று சொன்னால் கோபிப்பார்கள். தமது இரண்டாவது குழந்தை போல வளர்த்தார்கள். திடீரென நோய்வாய்ப்பட்டது. மிருக வைத்திய நிபுணர் வந்து ஊசி போட்டு, சேலைன் ஏற்றி முழு முயற்சி செய்தார். முடியவில்லை. அவர்களது இரண்டாவது குழந்தையும், அந்தப் பிள்ளையின் சகோதரமும் ஆன ரெமி இப்பொழுது இல்லை.

பிரிவுத் துயரில் மூழ்கிக் கிடக்கும் அந்தக் குழந்தைக்கு அதே ரெமியை மீண்டெடுத்துக் கொடுக்க முடியுமா?

ஒரு இலட்சம் அமெரிக்க டொலரைத் தாருங்கள் (சுமார் 66,000 பவுண்ட்ஸ்) தாருங்கள். நாய்குட்டியைத் தருகிறேன் என்கிறார் Insung Hwang  என்பவர். நாய் மரணிப்பதற்கு ஓரிரு நாட்கள் முன்பாகக் கொடுக்க வேண்டும்.

யார் இவர்? தென் கொரியாவைச் சார்ந்த ஒரு விஞ்ஞானி. அங்குள்ள Sooam Foundation  என்ற நிறுவனத்தில் வேலை செய்கிறார். இந்த நிறுவனம் மற்றொரு விஞ்ஞானியான Hwang Woo-Suk  என்பவரால் நடாத்தப்படுகிறது. 2006ம் ஆண்டின் மனித குளோனிங் பிரச்சனையோடு தொடர்புடையவர்.

 Cloned Pups

ஒரு கோடி ரூபாய் என்பது எங்களில் பலருக்கு மிகப் பெரிய தொகை. விஜய் ரிவீயின் வெல்லுங்கள் ஒரு கோடி நிகழ்ச்சியில் மட்டும் அந்தத் தொகையைக் காணக் கிடைத்திருக்கும்.

ஆனால் கோடிகளில் தவளும் பல அமெரிக்கர்களுக்கு அது சுளுவான காசு. சென்ற வருடம் அதாவது 2012ல் 12 நாய்க் குட்டிகளை இவரது அமெரிக்க நிறுவனமான Insung Hwang’s laboratory  தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. இவை யாவும் இறக்கவிருந்;த அவர்களது நாய்களின் திசுக்களைக் கொண்டு குளோனிங் முறையில் பிறந்த நாய்க் குட்டிகளாகும்.

ஜல்லிக் கட்டு நாம் எல்லோரும் அறிந்த விளையாட்டு. காளைச் சண்டையில் பிரசித்தமான மற்றொரு நாடு ஸ்பெயின் ஆகும். அங்குள்ள 16 வயதான Alcalde என்ற காளை பல காளைகளை வென்று பெரும் புகழ் பெற்றதாகும். அதன் உரிமையாளரான Victoriano del Río  சுமார் 400 காளைகளை தனது பண்ணையில் வளர்த்து போட்டிக்கு விடுபவர். இருந்தபோதும் Alcalde யின் ஆற்றலில் அவருக்கு அபார நம்பிக்கை உள்ளது. வயதாகும் அதன் ஆற்றலை என்றென்றைக்கும் பேணுவதற்காக குளோனிங் செயன்முறையை இப்பொழுது நாடியுள்ளார்.

 Alcalde

ஆம் பண்பாடு, ஆன்மிகம், தொழில் நெறி போன்றவற்றின் அடிப்படையிலான சர்ச்சைகள் அவ்வப்போது எழுந்தபோதும் மிருகங்களை குளோனிங் முறை மூலம் உருவாக்கம் செய்கின்ற விஞ்ஞான தொழில் முறை ஆர்ப்பாட்டமில்லாமல் எமது வாழ்வில் நுழைந்துவிட்டது.

குளோனிங்

குளோனிங் என்பது என்னவென அறியாதவர்கள் இப்பொழுது இருக்க முடியாது. டொலி என்ற ஸ்கொட்லன்ட் ஆட்டுக் குட்டியின் வரவிற்குப் பின்னர் அது உலகளாவிய ரீதியில் பிரபலமாகிவிட்டது.

ஆனால் குளோனிங் என்பது ஒரு மிருகத்தின் அல்லது உயிரனத்தின் அச்சுப் போன்ற பிரதியை உருவாக்குகிற உயிரியல் விஞ்ஞான தொழில் நுட்பம் என்றே பலரும் கருதுகிறார்கள். அதாவது மரபியில் ரீதியாக மூல உயிரினத்தின் பிரதிமையை ஏற்படுத்துவதாகும்.

சற்று விரிவான தளத்தில் குளோனிங் என்பதை உயிரியல் நகலெடுத்தல் எனச் சொல்லலாம். இதில் மூன்று முக்கிய வகைகள் உண்டு.

Cloning_diagram_english

  • மரபணு குளோனிங் – ஒரு உயிரினத்தின் ஒரு மரபணுவை மட்டும் அல்லது டிஎன்ஏ(DNA) யின் ஒரு பகுதியை மட்டும் பிரதிகள் எடுப்பதாகும்.
  • இனப் பெருக்கத்திற்கான குளோனிங் இது பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். ஒரு மிருகத்தை அல்லது வேறு உயிரினத்தின் முழுமையான பிரதிமையை உருவாக்கல்.
  • சிகிச்சை முறையான குளோனிங் – இது உடலிலுள்ள மூலக் கலங்களான ஸ்டெம் செல்ஸ் மூலம் ஒருவரது உடலிலுள்ள பழுதடைந்த கலங்களுக்குப் பதிலாக அதேபோன்ற அச்சொட்டான ஆரோக்கியமான கலங்களை உருவாக்குவதாகும். உதாரணமாக நீரிழிவு நோயாளரில் பீட்டா செல்சை உருவாக்கும் முயற்சியைச் சொல்லலாம்.

இனப் பெருக்கத்திற்கான குளோனிங் 

இது எவ்வாறு செய்யப்படுகிறது?

குறிப்பிட்ட நாய் இறப்பதற்கு முன்னரான 5 நாட்களுக்குள் அந்த நாயிலிருந்து திசு மாதிரிகளை எடுத்து உறைய வைக்கிறார்கள். ஆய்வுகூட சேமிப்பறையில் ஏற்கனவே இருக்கும் இதனோடு எந்தவித தொடர்புமற்ற வேறொரு பெண் நாயிடமிருந்து பெறப்பட்ட முட்டையில் இணைக்கிறார்கள்.

அதனது டிஎன்ஏ யை முழுமையாக அப்புறப்படுத்திய பின்னர் வளர்ப்பு நாயின் டிஎன்ஏ யை மாற்றீடு செய்கின்றனர். இவ்வாறு பெறப்பட்ட கருமுளையை பின்னர் ஒரு வாடகை நாய்த் தாயின் கருப்பையில் வைத்து இயற்கையாக வளரச் செய்வார்கள். காலகதியில்  நாய்க்குட்டி பிறக்கும். ஒரு மாதமாகும் வரை குட்டியானது வாடகைத் தாயின் பாலைக் குடித்து வளரும்.

குளோனிங் செய்யப்பட்ட கருவைச் சுமக்கும் தாய் நாயானது அதே இனத்தைச் சார்ந்ததாக இருக்க வேண்டியது அவசியமல்ல. இருந்தபோதும் ஒத்த அளவுள்ள இனங்களிலிருந்து தேர்வு செய்தார்கள். பொதுவாக ஒரு குட்டி கிடைக்கும். ஆனால் சில தருணங்களில் அதே மாதிரியான  இரண்டு மூன்று குட்டிகள் கிடைப்பதுண்டு. அவ்வாறு கிடைத்தால் ஓடர் கொடுத்த வாடிக்கையாளர் அவை அனைத்தையும் மகிழ்ச்சியோடு எடுத்துச் சென்று விடுவார்கள் என ஐளெரபெ ர்றயபெ மகிழ்வோடு சொல்கிறார்.

குளோனிங் சவால்கள்

“..பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார்
அதை பிள்ளைக்கு மேல் கண்களை போல்
காத்து வளர்த்தார்..”

எனப் படிக்காத மேதையில் ஒரு பாடல் வருகிறது. ஆம் பலர் தமது பிள்ளையை விடத் தமது வளர்ப்பு மிருகத்திலேயே அதிக பாசம் வைத்திருப்பார்கள். வளர்ப்பு மிருகங்கள் அவற்றை வளர்ப்போரின் உணர்வோடு ஒன்றியவை.

தமயந்தியின் அன்னம், சீதையின் மான் போன்ற ஒரு சில குறிப்புகள் தவிர தமிழ் இலக்கியத்தில் மனிதனுக்கும் மிருகங்களுக்கும் இடையேயான உறவு பற்றி அதிகம் பேசப்பட்டதாக தெரியவில்லை.

ஆனால் மேலை நாட்டு இலக்கியங்களில் குதிரைக்கும் மனிதனுக்கும் இடையேயான உறவு பற்றிய அருமையான படைப்புகள் உள்ளன. ஐத்மதேவ் குல்சாரியில் மிக அற்புதமாக அந்த உறவின் ஆழத்தைச் சொல்லியிருக்கிறார். மகனுடன் இருக்கப் பிரியப்படாது தனது கிராமத்திற்கு தனது குதிரையுடன் பயணப்படுகிறார் ஒரு வயோதிபர். வழியில் அது நோய்வாய்ப்படுகிறது. இறந்துவிடுமோ என்ற அச்சத்தில் ஏங்குகிறார். அதற்கும் தனக்கும் இடையேயான உறவின் நினைவுகளில் மூழ்குகிறார்.

இன்று மேலை நாடுகளில் நாய் பூனை போன்றவற்றிக்கு அப்பால் முதலை ஈறான மிருகங்களையும் நேசத்தோடு வளர்க்கிறார்கள். குடும்ப உறவுகள் முறிந்து தனிமையில் வாழும் அவர்களுக்கு அதற்கான தேவை எம்மைவிட அதிகமாகவே இருக்கிறது எனத் தோன்றுகிறது. அவற்றில் அதீத பாசம் வைத்திருக்கிறார்கள்.

அவ்வாறு பாசம் வைத்திருப்பவர்களிடம் தமது பாசத்திற்கு உரிய மிருகம் மரணத்தை நெருங்கும்போது குளோனிங் குட்டியை நாட முடியும். போதிய பண வசதி இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

அவர்களது எதிர்பார்புகள் எவ்வாறு இருக்கும்?

குளோனிங் முறையில் கிடைப்பது தமது ஒரிஜினல் வளர்ப்பு மிருகம் போலவே நிறத்திலும் பார்வையிலும் இருக்க வேண்டும் என விரும்புவார்கள். உணவு விருப்பங்கள், தங்களுடனான உறவு நெருக்கம் போன்ற அதனுடைய பழக்க வழங்கங்களும் அசலானதைப் போலவே இருக்க வேண்டும் என அவாவுவார்கள். அத்தோடு அதைப் போன்ற குணநலங்களும் உள்ளதாக இருப்பதையே நாடுவார்கள்.

ஒத்த இரட்டையர் போன்றது

குளோனிங் குட்டி முற்று முழுதாக அசலை ஒத்ததாகவே இருக்குமா?

 Identical twins
  • “அது ஒருபோதும் உங்களது அசலான வளர்ப்பு மிருகமாகவோ அதன் அச்சொட்டாக இருக்க முடியாது. 100% அவ்வாறு இருப்பது சாத்தியமல்ல. குளோனிங்கில் கிடைப்பது ஒத்த இரட்டையர் போலவே இருக்கும்” என்கிறார் Hwang.  ஆனால் வெள்ளையில் கரும் புள்ளிகள் உள்ள டல்மேசியன் இனத்தில் புள்ளிகள் அச்சொட்டாக இருப்பதை எதிர்பார்க்க முடியாது. ஆனால் அத்தகைய தெளிவான அடையாளங்கள் இல்லாத ஏனைய இனங்களில் வேறுபாடுகளை இனங் காண்பது சிரமம் என்கிறார்.

‘வாடிக்கையாளர்களும் அவ்வாறான தூய இனங்களை விட கலப்பு இன நாய்களில் குளோனிங் இனங்களையே வேண்டுகிறார்கள்’ என்றார். காரணம் தெளிவாகவில்லை.

  • “அவற்றின் இயல்பான பண்பு உளப் பாங்கு அசலானது போல இருக்காது” என்பதையும் ஒத்துக் கொள்கிறார். ஆனால் சில வாடிக்கையாளர்கள் அவை ஒத்த குணமுள்ளதாக இருந்ததாகச் சொல்லி மகிழ்ந்தார்களாம். உதாரணமான உணவைக் கோப்பையில் போட்டால் அவை இரண்டுமே உணவை கோப்பையிலிருந்து எடுத்துச் சென்று சில மீற்றர் தூரத்தில் வைத்தே உண்டதாகச் சொன்னார்களாம்.

வெற்றி விகிதம்

தாங்கள் 2005ல் இந்த குளோனிங்  முறையை ஆரம்பித்தபோது 2 சதவிகித வெற்றி மட்டுமே கிடைத்ததாம். இப்பொழுது அது 30 சதவிகிதமளவற்கு அதிகரித்துள்ளதாம். இற்றை வரை IVU (டெஸ் டியூப் குழந்தை) முறையில் குழந்தை பெறுவதில் கூட இந்தளவு வெற்றி இல்லையே என ஆச்சரியப்பட்டேன்.

அவர்களது அறிக்கையை நுணுகி ஆய்ந்தபோது விடை கிட்டியது. இவர் சொன்ன வெற்றி வீதம் என்பது குட்டிகள் கிடைப்பது பற்றியது அல்ல. அது கர்ப்ப விகிதம் (pregnancy rate)  அதாவது கருமுளையத்தை கருப்பையில் வைத்தபோது அது கர்ப்பமாக உருவெடுத்தமை பற்றியது. கருவான பின் எத்தனை கருச் சிதைவுகள் ஏற்பட்டன. காலத்திற்கு முந்திப் பிறந்து அழிந்தவை எத்தனை. நோயோடு பிறந்து இறந்தவை எத்தனை போன்றவை பற்றி அவை பேசவில்லை.

உலகளாவிய ரீதியில் குளோனிங் முறையின் வெற்றிவிகிதம் 0.1 முதல் 3 சதவிகிதம் மட்டுமே இருப்பதாக பரவலான அறிக்கைகள் கூறுகின்றன. இதை சற்றுத் தெளிவாக இவ்வாறு கூறலாம். ஆயிரம் தடவைகள் முயற்சி செய்தால் 1 முதல் 30 குளோனிங் குட்டி உருவாகவாம். மீதி 970 முதல் 999 வரை அழிந்து போகின்றன.

தோல்வி விகிதம் ஏன் அதிகம்

தோல்வி விகிதம் குளோனிங்கில் இவ்வாறு அதிகமாக இருப்பதற்கு பல காரணங்களைச் சொல்லலாம்.

  • இச் சிகிச்சை முறையின் முதற்படியானது சேமிப்பிலிருந்து முட்டையின் டிஎன்ஏ யை முழுமையாக அப்புறப்படுத்தி மரணிக்க இருக்கும் மிருகத்தின் டிஎன்ஏ யை வைப்பதாகும். இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று ஏற்புடையதாக இல்லாதவிடத்து அது முட்டைக் கலத்தால் நிராகரிகப்பட்டு அழிந்து விடும். புதிதாக மாற்றப்பட்ட கருவானது ஏற்புடையதாக இருந்தாலும் அம் முட்டை பிரிந்து பல கலங்களாக வளர்வதில் சிக்கல் ஏற்பட்டு அழிந்து போகலாம்.
  • அதை மீறி வளர்ந்தாலும் கருமுளையை வாடகைத் தாயின் கருப்பையில் வைக்கும்போது அது பொருந்தி வளர மறுத்துச் சிதைந்துவிடலாம்.
  • இவை யாவும் சரியானாலும் தெரியாத காரணங்களால் கர்ப்பம் சிதையலாம்.

பிறந்த பின்னும் பிரச்சனைகள்

  • பிறந்தாலும் சில தருணங்களிள் குட்டிகள் வழமையை விட மிக பெரிய அளவில் பிறக்கின்றன. இதை விஞ்ஞானிகள் Large Offspring Syndrome  என்பார்கள்.
  • உருவத்தில மாத்திரமின்றி உள்ளுறுப்புகளும் பெரிய அளவில் இருக்கலாம்.
  • இதனால் அவற்றிற்கு சுவாசப் பிரச்சனை, குருதி ஓட்டத்தில் பிரச்சைனை போன்றவை ஏற்பட்டு இறந்து போகின்றன.
  • வேறு சிலவற்றிக்கு மூளை, சிறுநீரகம் போன்றவற்றில் குறைபாடு இருப்பதுண்டு. இன்னும் சிலவற்றிற்கு நோயெதிர்பு வலு குறைவாக இருந்து வாழ முடியாது இறந்து போகின்றன.

இக் காரணங்களால்தான் குளோனிங் முறையை இன்னமும் விவசாயத் துறையிலோ மிருக வளர்ப்புத் துறையிலோ பெரிய அளவில் செயற்படுத்த முடியவில்லை.

மேற் கூறிய தனியார் நிறுவனம் போன்ற அமைப்புகள் இறந்த வளர்ப்பு மிருகங்களை ஒத்த குளோனிங் குட்டிகளை பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் உள்ளதே பெரிதாகப் பேசப்படுகிறது.

குளோனிங்கின் எதிர்காலம்

உண்மையில் குளோனிங் என்பது ஒரு பெரிய அற்புதமான விஞ்ஞான முன்னேற்றமாகவே தெரிகிறது இருந்தாலும், அதை நடைமுறை வாழ்வில் பயன்படுத்த தெளிவான வெற்றிகரமான நடைமுறைகள் இன்னமும் தென்பட இல்லை.

குளோனிங் முறையில் முழு விலங்குகளை உற்பத்தி செய்வது அதீத விளம்பரங்களையும் புகழையும் திடீரெனக் கொண்டுவரலாம், ஆனால் அதுவும் 100 விகிதம் சாத்தியமல்லை என்பதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். ஒரிரு வெற்றிகள் பேசப்படும்போது ஆயிரக்கணக்கான அழிவுகள் கண்டு கொள்ளப்படுவதில்லை.

ஆனால் மற்றொரு கிளை வழியில் அது பெரு வெற்றி தரக் கூடும். இப்போது, ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் நம்பிக்கைக் கூறுகள் தென்படுகின்றன. குளோனிங் முறையில் நோயால் சிதைந்த உடல் பாகங்களுக்கு பதிலாக புதிதானவற்றை  ஸ்டெம் செல் ஊடாக உருவாக்குவதில் அக்கறை காண்பிக்கப்படுகிறது.

குளோனிங் அறிவியலானது இப்போது ஸ்டெம் செல் ஆய்வுகள் நோக்கி விரைவது அதன் செயலாற்றலை மேம்படுத்தி மானிடத்தின் செழுமைக்கு கைகொடுக்கும் என நம்பலாம்.

சமகாலம் சஞ்சிகையில் வெளியான எனது கட்டுரை

எனது ஹாய் நலமா புளக்கில் (18th July 2013 ) வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

Read Full Post »

பழனி மலை ஏறியும், திருப்பதியில் மொட்டை அடித்தும், இராமேஸ்வரத்தில் தீர்த்தமாடியும் பலர் தங்கள் வேண்டுதல் நிறைவேறவில்லை என்ற ஏக்கத்தில் இருக்கிறார்கள். இறைவன் அருளாத பாக்கியத்தை அந்தத் தம்பதியினருக்கு மருத்துவர்கள் ‘அருளி’ வைத்திருக்கிறார்கள்.

 Tirumalatemple

கடவுளர்களுக்கு காணிக்கை கொடுத்தும், உடலை வருத்தி விரதமிருந்தும் பெற முடியாததை சிறப்பு மருத்துவ மனைகளில் பல லட்சம் செலவில் அத் தம்பதிகளால் பெற முடிந்திருக்கிறது.

 baby20boy20baby20girl1

ஆண் குழந்தை வேண்டும் என, அல்லது பெண் குழந்தை தமக்கு வேண்டும் என காத்திருக்கும் பல தம்பதிகளினரின் பெருவிருப்பை மருத்துவர்கள் ஆய்வுகூட கருக்கட்டல் (IVF)   முறை மூலம் தீர்த்து வைக்கிறார்கள்.

 original_11141690

‘குழந்தை ஆணாக இருக்க வேண்டுமா பெண்ணாக இருக்க வேண்டுமா என்ற பாலினத் தேர்வை இச் சிகிச்சை மூலம் கோரக் கூடாது, செய்யக் கூடாது. அவ்வாறு செய்வது தவறு’ என இந்தியச் சட்டம் தெளிவாகச் சொல்லியிருக்கின்ற போதும் மூடிய மருத்துவ மனைகளின் கதவுகளுக்கு பின்னால் இது நடை பெறுகிறது என்பது ரகசியமல்ல.

பெறப் போகும் குழந்தையில் பாலினத் தேர்வு செய்வது சட்டரீதியாக மட்டும் குற்றம் என்பது மட்டுமல்ல அது சமூக ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது. ஏனெனில் இது வெறுமனே பாலினத்; தேர்வு என்பதுடன் நின்றுவிடவில்லை.

அதற்குள் ஒரு அழிப்பு நடவடிக்கையும் மறைந்து இருக்கிறது.

இனஅழிப்பு (Geneocide) பற்றி நாம் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறோம். பாலினத் தேர்வு எனப்படுவது உண்மையில் பாலின அழிப்பு (Gendercide) என்றே பலரும் கருதுகிறார்கள். ஆம். இங்கு பெரும்பாலும் பெண் கரு முளைகள் களையப்படுகின்றன. ஆண் கருமுளைகள் ஓம்பப்படுகின்றன.

 6-1-12Gendercide2

இதனால்தான் குழந்தையில் பாலினத் தேர்வு செய்வது ஆகாது எனப் பலரும் கூக்குரலிடுகிறார்கள். மாறாக அவ்வாறு செய்வதைத் தடுப்பதால் பெற்றோர்களது மன உணர்வுகள் பாதிக்கப்படும். அது அவர்களது சுதந்திரத்தில் கை வைப்பதாகும் என மாற்றுக் கருத்துகள் சொல்வோரும் உளர்.

குழந்தையில் பாலியல் தேர்வு

ஆஸ்திக்கு ஒரு ஆணும் ஆசைக்கு ஒரு பெண்ணும் என இரு குழந்தைகளும் வேண்டும் என்று பொதுவாகச் சொன்னாலும் ஒவ்வொரு பெற்றோருக்கும் தமக்கு எந்தக் குழந்தை வேண்டும் என்பது பற்றிய தனிப்பட்ட உள்ளார்ந்த விருப்புகள் இருக்கவே செய்யும்.

இருந்தபோதும் இந்தியாவைப் பொறுத்த வரையில் ஆண் குழந்தைகளே பெரிதும் விரும்பப்படுகின்றன. ‘எனக்கொரு மகன் பிறப்பான். அவன் என்னைப் போலவே இருப்பான்..’ எனக் கவிஞர் பாடுவது வெறுமனே அக் கவிஞனின் வார்த்தைகள் அல்ல. அது அந்தச் சமூகத்தின் பிரதிபலிப்பு என்றே சொல்ல வேண்டும்.

 CFF-60-700x400-

பிறப்பில்  ஆண்கள் அதிகமாக உள்ள நாடுகளில் ஆர்மேனியா, ஆர்ஜன்ரைனா, சீனா, இந்தியா, ஜோர்ஜியா போன்றவை முன்னணியில் நிற்கின்றன.

தங்கள் முதல் குழந்தை ஆணாகவே இருக்க வேண்டும் என்ற விருப்பு ஜேர்மனி உட்பட்டதான சில ஐரோப்பிய நாடுகளிலும் இருப்பதாக உலக சுகாதார அறிக்கை ஒன்று கூறுகிறது.

பெண் குழந்தைகள் விரும்பப்படாமைக்கு பெண்கள் மீதான அடக்கு முறைகளும், பாலியல் பலாத்காரங்களும் முக்கிய காரணமாக இருக்கலாம். சீதனம் கொடுக்க வேண்டிய பிரச்சனையும் மறைமுகக் காரணம்தான். இது பொதுவாக கீழை நாடுகளின் நிலை. குடும்பத்தில் ஆண் பெண் சமநிலை வேண்டும் என்பதற்காக பாலினத் தேர்வு மேலைநாடுகளில் விரும்பப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

பாலினத் தேர்வானது இன்று நவீன அறிவியல் ரீதியான ஒன்றாக இருக்கிறது.
ஆயினும் தங்கள் குழந்தையின் பாலினத்தைத் தேர்வது பற்றிய ஆர்வமும் அதற்கான முயற்சிகளும் நீண்ட காலமாக இருந்திருக்கின்றன.

சீனர்களின் பாலினத் தேர்வு கலண்டர் (Chinese Gender Calendar)> பாலினத் தேர்விற்கான உணவு முறை எனப் பல முயலப்பட்டுள்ளன. இவை யாவும் இயற்கையானவை.

Chinese Gender Predictor

ஓரளவு விஞ்ஞான அறிவையும் கலந்து Shettles Method என்பதை உருவாக்கினார்கள்.

விந்துத் தேர்வு (Sperm selection) முறை ஒன்றும் இருக்கிறது. ஆனால் இவை எதுவுமே பூரணமான பலன் தரும் முறைகள் அல்ல. விரும்பிய தேர்வை நிச்சயம் தரும் என நம்ப முடியாது.

Methods of Gender Selection

எவ்வாறு செய்யப்படுகிறது

இப்பொழுது ‘ரெஸ்ட் ரியூப்’ முறையில் குழந்தை பெறும்போது பெற்றோர்களால் தங்கள் குழந்தையின் பாலினத்தைத் தேர்வது முடியும்.

ஆய்வுகூட கருக்கட்டலின் போது ஆய்வுகூடக் கோப்பையில் முட்டையையும் விந்துவையும் இணைப்பார்கள். அது கருவாக வளர்வதற்கான ஆரம்ப நிகழ்வாகும். ஒரு கலமான அது அங்கே பல கலங்களாகப் பிரிந்து வளரும். எட்டுக் கலங்களேயான பிளாஸ்டோசைட் (டிடயளவழஉலளவ) ஆகி மேலும் வளரும்.

இதன் பின்னரே அதை பெண்ணின் கருப்பையில் வைப்பார்கள். பொதுவாக 3 முதல் 5 நாட்களில் வைப்பார்கள். அவ்வாறு வைப்பதற்கு முன்னர் நுணுக்கமான ஒரு மரபணுப் பரிசோதனை செய்வதுண்டு. நுண்ணிய ஊசி மூலம் அதிலிருந்து ஒரே ஒரு கலத்தை மட்டும் எடுத்து மரபணுப் பரிசோதனை (Preimplantation genetic diagnosis (PGD) செய்வார்கள். ஏதாவது கடுமையான பரம்பரை நோய்கள் இருக்கிறதா என்பதை அறிவதற்கான பரிசோதனை இது. அவ்வாறு தேர்ந்தெடுத்து நோய்கள் அற்ற கருமுளையைத்தான் பெண்ணின் கருப்பையில் வைப்பார்கள்.

Preimplantation Genetic Diagnosis

இது மருத்துவக் காரணங்களுக்கான தேவைகளுக்காகச் செய்யப்படும் பரிசோதனை.

இதே பரிசோதனை மூலம் அந்தக் கருமுளையானது ஆணா பெண்ணா என்பதையும் கண்டறிய முடியும். மருத்துவக் காரணங்களுக்கானது அல்ல என்பதால் வழமையாகச் செய்யப்படுவதில்லை. பெற்றோரின் விருப்பத்திற்காக மட்டுமே மிகுந்த செலவில் செய்யப்படுகிறது. பாலினத் தேர்வுடன் ரெஸ்ட் ரியூப் பேபிக்கான மிகக் குறைந்த செலவானது 20,000 அமெரிக்க டொலர்கள் வரை இருக்கும் எனத் தெரிகிறது. விந்து, முட்டை ஆகியன தேவைப்பட்டால் இது மேலும் அதிகரிக்கலாம். செலவு அதிகமானாலும் இம் முறையானது 99 சதவிகிதம் வெற்றியளிக்கும் என்கிறார்கள்.

 designer-children-pgd

கருவில் வளரும் குழந்தையானது ஆணா பெண்ணா என்பதை சாதாரண ஸ்கான் பரிசோதனைகள் (Ultra Sound Scan) மூலமும் கண்டறிய முடியும். ஆனால் அதற்கு சற்று காலதாமதம் ஆகும். கருமுளையானது தாயின் கருப்பையில் 12 முதல் 20 வாரங்கள் வளர்ந்த பின்னர் ஏற்படும் அங்க வேறுபாடுகள் மூலமே தெளிவாகக் கண்டறிய முடியும்.

பால்வழித் தேர்வும் அழிப்பும்

அவ்வாறு கண்டறியும்போது அது வேண்டாத பாலினக் கருவெனில் சிலர் அதைக் கலைக்க முனைவார்கள். கருக் கலைப்பு சட்டவிரோதமானது என்ற காரணத்தால் அவ்வாறு குழந்தை ஆணா பெண்ணா எனக் கண்டறியும் ஸ்கான் பரிசோதனை செய்வதை இலங்கை உட்பட பல நாடுகளில் தடை செய்துள்ளார்கள்.

இதே காரணங்களுக்காகத்தான் ஆய்வுகூட கருக்கட்டலின் பின்னரான பாலினம் அறியும் பரிசோதனை நிறுத்தப்பட வேண்டும் என்பது ‘பால்வழி அழிப்பு’ என்பவர்களின் வாதமாகும்.

ஆனால் இது பால்வழி அழிப்பு அல்ல, தேர்வு மட்டுமே என ஆதரிப்பவர்கள் சொல்கிறார்கள். அவ்வாறு சொல்வதன் காரணம் என்ன?

ரெஸ்ட் ரியூப் முறை என்படும் இத்தகைய ஆய்வுகூட கருக்கட்டலின் போது ஒரு பெண்ணுக்காக பல முட்டைகள் கருக்கட்டப்படுகின்றன.

தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை உறை குளிரில் வைத்துப் பாதுகாப்பார்கள். தானகவே கருச் சிதைந்துவிட்டால் மீண்டும் வைப்பதற்கு அது உதவும். அல்லது அடுத்த மகப்பேற்றை நாடும் போது உதவலாம் என்பதற்காகவே ஆகும். மாறாக குழந்தை இல்லாத வேறொரு பெற்றோருக்கு சேமிப்பிலிருந்து தானமாகவும் வழங்கவும் முடியும்.

ஆனால் அதை அழிக்கவும் முடியும். பெரும்பாலும் அதுவே நடக்கிறது என்பதை மறுக்க முடியாது.

இந்தியாவில் பாலியல் தேர்வு 1994ம் ஆண்டு முதல் தடைசெய்யப்ட்டுள்ளது. இருந்தபோதும் கடுமையாக அமுல்படுத்தப்படாததால் சனத்தொகையில் பெண்களின் வீதாசாரம் குறைந்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்துள்ளன. அண்மையில் டெல்லியில் ஒரு கும்பல் பெண்ணை கூட்டு வன்புணர்வு செய்யதற்கு சமூகத்தில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தமையே மறைமுகக் காரணம் என்கிறார்கள். ஏனெனில் மொத்த சனத்தொகையில்  50 சதவிகிதத்திற்கு அதிகமாக இருப்பது 25 வயதிற்கு உட்பட்ட வயதினரே ஆகும். வாலிபப் பையன்களின்  இயல்பான பாலியல் தேவைகளுக்கு ஏற்றளவு அவர்கள் வயதொத்த பெண்களின் எண்ணிக்கை போதாமலிருக்கிறது. இதுவே வன்புணர்வுகளுக்கு காரணம் என்கிறார்கள்.

இப்பொழுது பிரித்தானியாவிலும் பாலியல் தேர்வுகளுக்கு தடையிருக்கிறது. ஆயினும் அங்குள்ள மருத்துவ அறிவியல் (medical ethicists)    குழுவானது அத் தடைக்கான தேவை எதுவும் இல்லை என்கிறது. ஆனால் அது சரியான கருத்தா? பெற்றோர்களின் உளவியல் தாக்கங்கள் மற்றும் குடும்ப சமநிலைக்காக பாலியல் தேர்விற்கு தடை விதிக்கக் கூடாது என்பது அவர்களது வாதம். அது ஓரளவு உண்மை என்ற போதும், தடையை நீக்குவதால் சமூக ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் உலகளாவிய ரீதியிலும் ஏற்படக் கூடிய பாதிப்புகளை மனம் கொள்ள வேண்டும்.

பிரச்சனைகள்

குழந்தை ஆணாகவா பெண்ணாகவா இருக்க வேண்டும் என்ற தேர்வு இதுவரை இயற்கையிடமே இருந்திருக்கிறது. இந் நிகழ்வை பெற்றோர்கள் தீர்மானிக்க வழிவிட்டால் அது மருத்துவ ரீதியான வணிகமயப்படுத்தலுக்கு வழிவகுக்கும். அந்நிலையில் பாரிய பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது போய்விடும்.

மருத்துவரும் பெற்றோரும் தனிப்பட்ட ரீதியில் எடுக்கும் முடிவுகள்  பாலினத் தேர்வுடன் மட்டும் நின்றுவிடப் போவதில்லை. Origins of Love, என்ற தனது நாவலில் Kishwar Desai அவர்கள் இது பாலினத் தேர்வுக்கு அப்பாலும் மருத்துவ வணிக மயமாதலுக்கு சென்றுவிடலாம் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

 GetImage

குழந்தையின் சரும நிறம் எதுவாக இருக்க வேண்டும், அதனுடைய அறிவாற்றல் எவ்வளவு இருக்க வேண்டும், குழந்தையின் தலைமுடி எவ்வாறு இருக்க வேண்டும் என்றெல்லாம் பெற்றோர்கள் கோரக் கூடும். அதற்கான ஆதரவாக மருத்துவர்கள் குரல் எழுப்புவார்கள் என்கிறார்;.

 Kishwar Desai at the Oxford literary festival, 2010.

ஆயினும் இவற்றிற்கு ‘ஆம்’ சொன்னாலும் அவர்களுக்கு பூரண திருப்தி ஏற்படப்போவதில்லை. மனித மனம் என்றுமே பூரண திருப்தி அடைவதில்லை. ஒன்று கிடைத்தால் கிடைக்காத வேறு ஒன்றைப் பற்றி ஏங்கிக்கொண்டே இருக்கும். ஆண் குழந்தை அதுவும் எலுமிச்சை நிறக் குழந்தை வேண்டும் எனக் கேட்பார்கள். அது கிடைத்துவிட்டால் அத்தோடு ஆசை அடங்கிவிடாது. அதன் கண்ணின் நிறம் கருமை போதாது என மனம் குற்றம் காணக் கூடும். தனக்கு விருப்பிற்கு ஏற்றவிதத்தில் மற்றொரு ஆய்வுகூட குழந்தையைப் பெறவும் அவர்கள் முனையக் கூடும்.

விரும்பியபடியே குழந்தை கிடைத்துவிட்டால் புதிய வடிவில் பிரச்சனைகள் தலை தூக்கும்.

ஏற்கனவே உள்ள குழந்தைகளுக்கும் இப் புதிய குழந்தைக்கும் இடையே பெற்றோர்கள் சிறிது பாரபட்சம் காட்டுவார்கள் என்பது நிச்சயம். அறிவுள்ள பெற்றோர் அவ்வாறு பாரபட்சம் காட்டக் கூடாது என மனதார எண்ணினாலும் கூட அவர்கள் அறியாமலே அது நுணுக்கமாக செயற்பாடுகள் ஊடாக வெளிப்படும்.

பாதிக்கப்பட்ட குழந்தையானது தான் வேண்டாத பிள்ளை என உணர நேரும்போது உறவுகளில் சிக்கல்கள் உருவாகும்.

கதைகளிலும் திரைப்படங்களிலும் நாம் எதிர்பாராத திருப்பங்களை விரும்புகிறோம். ஏன் நிஜ வாழ்வில் மட்டும் அதற்கு இடமில்லை. ஆணா பெண்ணா எனக் காத்திருப்பதில் ஒரு திரில் இருக்கிறது. சுகமும் இருக்கிறது.

புதிய வரவு எதுவாக இருப்பினும் அது எங்களது, எங்களுக்கே ஆனது, எங்கள் வாரிசு என்பதில் மனம் நிறையவே செய்யும்.

இயற்கையுடன் முரண்படாது அதன் தேர்விற்காகக் காத்திருப்பது நல்லதா அல்லது  விஞ்ஞானத்தின் நவீன முன்னகர்வுகளுடன் இணைந்து கொள்வதா?

குழந்தையின் பாலினத் தேர்வில் நீதியின் தராசு எந்தப் பக்கம் சரிய வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?“ஆண் குழந்தையா பெண் குழந்தையா?

பாலினத் தேர்வு யாரிடம் இருக்க வேண்டும்?”  சமகாலம் சஞ்சிகையில் நான் எழுதிய கட்டுரை
ஹாய் நலமா புளக்கில் வெளியான எனது கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

0.0.0.0.0.0

Read Full Post »

Older Posts »