Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘புகைப்படம்’

எறி குண்டு வீசி
நீசர்களை அழிப்பதில்
ஏன் இன்னும் தயக்கம்
அரச யந்திரத்துடன்
வம்பு ஏனெனத் தயக்கமோ?

ஒடுக்கபட்டுக் கொண்டே
இருப்பவர்களின்
ஈனக் குரல் கேட்கவில்லையா
அன்றி
கேட்காதது போல
பாவனையோ !

சம்பந்தரும் சுந்தரரும்
பாடினர் பதிகம்
சரித்திர நாயகன் இராவணன்
துதித்த தலமும் அதன்
சூழலும்,
கிழக்கு மண்ணும்
கபளீகரமாகிறதே
மாற்று இனத்தவரிடம்..
அரச அனுசரணையுடன்..

மண்ணின் அரசியல்வாதிகளும்
கண் பொத்தி காதடைத்து
வாழா மடந்தையானரே
கடைசி மனிதனும்
ஓரடி நிலமும் பறிபோன பின்தான்
வாய் திறப்பாயோ.

பொறுத்து போதும்
வீசி எறி
கணைகளை
நீசர்களை அழி
மண்ணின் மைந்தர்களை
வாழ வை
தலை நிமிர்ந்து முன் செல்ல
பாதையைத் திற…
நீசர்களை அழித்து…..

( கோணேசர் கோவிலுக்கு செல்லும் வழியில் கோட்டை வாயிலில் எடுத்த படம்.)

எம்.கே.முருகானந்தன்

Read Full Post »

“போகுது வருகுது
போகுது வருகுது
போய்ப் போய் வருகிறது……”

” …எத்தனை மருந்துகளைப்பூசிவிட்டேன்
மறைவது போல ஏய்புக் காட்டி
மீண்டும் மீண்டும் வருகிறது..”

நாற்பதை அண்டிய அவள் தனக்கு சீனி கொலஸ்டரோல் பிரஸர் ஏதாவது வந்துவிட்டதா எனப் பாரக்க வந்திருந்தாள்

ரிப்போட்டுகளைக் காட்டி முடிந்து எழுந்து போக முயன்றவள்
மீண்டும் இருந்தாள்.

இதையும் காட்ட வேணும் என்று நினைச்சனான் மறந்து போனன்
என்று மூக்கைக் காட்டினாள்

கறுத்து சொரப்பாக மூக்கின் மேற்பாகம் அசிங்கமாகக் கிடந்தது.

“ஒரு வகை எக்ஸிமா ஒட்டுக் கிரந்தி” என்றேன்

ஆனால் “மருந்து பூசியும் மாறுதில்லையே” என்றாள்

“கண்ணாடி போடுறனீங்கள்தானே ஒருக்கா போடுங்க பார்ப்பம்” என்றேன்.

நான் நினைத்தது சரி

மூக்கில் அழுத்திக் கொண்டிருக்கும் நோஸ்பாட் (nose pad) கண்ணணாடியால் ஆனது எனவே அது காரணமல்ல

கண்ணாடி பிரேமின் ரிம்தான் காரணம் அது மெட்டலால் ஆனது

அந்த மெட்டலுக்கான ஒவ்வாமையால் அலர்ஜி ஏற்பட்டிருக்கிறது

அதனால்தான் மீண்டும் மீண்டும் வருகிறது

“கண்ணாடியை மாற்றுங்கள் பிளாஸ்டிக் பிரேம் உள்ளதாக இருக்க வேண்டும்” என்றேன்

அடுத்த முறை அவளைக் கண்டபோது மூக்கு அழகாக இருந்தது

சருமத்திற்கு ஒவ்வாத பொருளால் ஒவ்வாமை ஏற்படுவதாக இருந்தால் அதனை தொடர்பு ஒவ்வாமை தோலழற்சி ஒட்டுக் கிரந்தி Allergic contact Dermatitis என்பார்கள்.

இப் பிரச்சனை பற்றி மேலும் அறிய எனது புள்கிற்கு விசிட் அடியுங்கள்

http://hainallama.blogspot.com/2012/04/allergic-contact-dermatitis.html

Read Full Post »

‘பிள்ளை உன்ரை வாயையும் ஒருக்கால் டொக்டருக்கு காட்டு’ என அம்மா மகளுக்கு சொன்னாள்.

ஏற்கனவே மகளின் காலில் உள்ள ஒரு தேமலுக்கு காட்டி மருந்து பற்றிய விளக்கங்னளயும் கேட்டுவிட்டு புறப்படும் தருணத்தில், வந்த இடத்தில் இதையும் முடித்துக் கொண்டு போகும் எண்ணத்தில் அம்மா இவ்வாறு கூறினாள்.

கொவ்வை வாய் திறந்த குட்டி அழகியின் உதட்டின் உட்புறத்தில் வெண்மையாக ஒரு கட்டி.

மற்றொரு இளம் பெண் அலறிப்புடைக்காத குறையாக என்னை நாடி வந்திருந்தாள். அவளது வாயினுள்ளும் இது போன்றதொரு கட்டி இருந்தது. வாயின் மென் சவ்வில் தடிப்பமாக  வட்ட வடிவில் வெண்மை நிறத்தில் இருந்தது. அரை சென்ரி மீட்டர் அளவு இருக்கலாம்.

பொதுவாக வேதனை எதுவும் இல்லையாம். இறுக்கி அழுத்தியபோது சற்ற வேதனை இருந்தது.

இவற்றை நீர் கட்டி என்று சொல்லலாம். மருத்துவத்தில் Mucous cyst  என்பார்கள். சீதச் சுரப்பி என சொல்வது கருத்து ரீதியாக சரியான தமிழ் சொல்லாக இருக்கும்

வெண்மையாக அல்லது வெளிர் நீல நிறத்தில் வாயின் உட்புறமுள்ள மென் சவ்வுகளில் வட்டவடிவாக தோன்றும் கட்டிகள் இவை. சாதாரணமான ஒரு சென்ரி மீற்றருக்கு குறைவான அளவிலேயே இருக்கும். ஆயினும் சில தருணங்களில் 3.5 சென்ரி மீற்றர் வரை பெருக்கக் கூடும்.

இத்தகைய கட்டிகள் எந்த வயதிலும் வர வாய்ப்புண்டு.;. ஆயினும் பொதுவாக 10 முதல் 25 வயதினரிடையேதான் அதிகம் காணக் கூடியதாக இருக்கிறது.

இவை எவ்வாறு தோன்றுகின்றன எனச் சரியாகச் சொல்ல முடியாது.

இருந்தாலும் சொண்டு கடித்தல் சொக்கையை கடித்தல் போன்ற ஊறுகளால் எற்படுவதற்கான வாய்பு அதிகம்.

இதே போன்று வேறு ஏதாவது குத்தியதால் அல்லது காயம் படுதலால் எச்சில் சுரப்பிகளில் காயம் ஏற்படுபட்டும் இவை தோன்றுகின்றன.

எனவே மன அழுத்தங்களால் உதடுகளை கடிப்பவர்களிடையே இவை தோன்றுவது அதிகம்.

சிலரில் இந்த கட்டிகள் மீண்டும் மீண்டும் தோன்றுவதுண்டு.

பல் இடுக்குகளில் காரை (tartar)  படிவதைத் தடுப்பதற்கான பற்பசைகளை உபயோகிப்பவர்களிலும் சிலருக்கு தோன்றுகிறது.

மேற் கூறிய இருவரில் ஒருவர் நீர்க்கட்டி பற்றி பெரிதாக அக்கறைப்படவில்லலை. போகும் போக்கில் சொன்னார். மற்றவர் அலறிப் பிடித்து ஓடி வந்தார்.

எது சரி? உண்மையில் இது உடனடியாக மருத்துவரிடம் காட்ட வேண்டிய பாரதூர நோயா இல்லையா?

இது சாதாரண நோய்தான். பயப்பட வேண்டியதில்லை. தானே ஓரிரு மாதங்களில் குணமாகிவிடும்.

ஆயினும் இது சாதாரண நீர்க்கட்டிதானா இல்லையா என்பதை நீங்களாக தீர்மானிப்பது சாத்தியமல்ல. மருத்துவர் பார்த்துத்தான் நோயை சரியாக நிர்ணயம் செய்ய முடியும். எனவே மருத்துவரிடம் காட்ட வேண்டிய தேவை நிச்சமாக உள்ளது.

மருத்துவர்களால் பார்த்த மாத்திரத்திலேயே இதை இனங் காண முடியும். ஆயினும் ஒரு சில தருணங்களில் நோயை நிச்சயப்படுத்த பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும்.

நீர்க்கட்டியானது நீண்ட காலத்திற்கு குணமாகாது இருந்தால் அல்லது அதன் அளவு 2 சென்ரி மீற்றருக்கு கூடுதலாக இருந்தால், வேகமாக வளர்ந்து வந்தால், அல்லது அதன் தோற்றம் புற்று நோய் போன்ற சந்தேகத்தை கொடுத்தால் மருத்துவர் அதில் ஒரு சிறு துண்டை வெட்டி எடுத்து ஆய்வு கூட பரிசோதனைக்கு அனுப்புவார். புற்றுநோய் போன்ற ஆபத்தான நோயல்ல என்பதை நிச்சயப்படுத்தவே இவ்வாறு செய்வார்கள்.

ஏற்கனவே குறிப்பிட்டது போல வாயின் மென்சவ்வுகளில் வரும் இந்த நீர்க்கட்டிகள் எந்தவித சிகிச்சையும் இன்றி தாமாகவே குணமாகிவிடும்.

நீங்களாக அதைக் குத்தவோ கீறவோ அகற்றவோ முற்பட வேண்டாம். கிருமித்தொற்றுக்கு ஆளாகக் கூடும் என்பதுடன் மீளவும் வரக் கூடும்.

நீண்ட காலம் குணமாகாது இருந்தால் அல்லது வலி இருந்தால் அல்லது உண்ணும் போது இடைஞ்சலாக இருந்தால் அதை அகற்ற முடியும்.

லேசர் சத்திர சிகிச்சை கூலம் அகற்றலாம். சுpல தருணங்களில் அந்த இடத்தில் ஸ்டிரோயிட் ஊசி மருந்து ஏற்றி அறையச் செய்வதுண்டு.

எதுவானாலும் பயப்பட வேண்டிய நோயோ சிகிச்சையோ அல்ல என்பதை புரிந்து கொண்டால் போதுமானது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (Col)

குடும்ப மருத்துவர்

0.0.0

Read Full Post »

இது எனது மற்றொரு நோயாளியினது காலின் போட்டோ.

சின்ன விரலுக்கும் நான்காவது விரலுக்கும் இடையில் தோல் சுருங்கி வெண்மை படர்ந்து அழுக்குப் போலக் காணப்படுகிறது. சற்று அரிப்பு இருக்கும். கெட்ட மணமும் வீசக் கூடும்.

சேற்றுப் புண் எனச் சொல்வார்கள்.

ஆங்கிலத்தில் Athletes Foot எனவும், மருத்துவத்தில் Tinea Pedisஎனவும் வழங்கப்படுகிறது.

இது பங்கஸ் கிருமியால் ஏற்படும் நோயாகும்.

  • ஈரலிப்பும் வெப்பமும் கலந்திருக்கும் சூழலில் இது இலகுவாகத் தொற்றி விடும்.
  • அடிக்கடி கால் கழுவுவதால் ஏற்படலாம். நீச்சலில் நீண்ட நேரம் ஈடுபடுதல்,
  • வெப்பமான காலநிலையில் வியர்க்கும்போது நீண்ட நேரம் காலணி அணிந்திருத்தல்,
  • அதிலும் முக்கியமாக வியர்வையை ஊறிஞ்சாத நைலோன் காலணிகளை அணிதல் ஆகியன பங்கஸ் தொற்றுவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கும்.
  • விரல்களுக்கு இடையேயான இடைவெளிகள் மிக நெருக்கமாக இருப்பதும் காரணமாகலாம்.
  • இதனால் ரூமட்ரொயிட் ஆத்திரைடிஸ், ஒஸ்டியோ ஆத்திரைடிஸ் இருப்பவர்கள் விரல்கள் கோணி இறுக’கமாக இருப்பதால் அதிகம் பாதிப்படைவர்.

Clotrimazole, Imidazole, Miconazole, Econazole, Terbinafine போன்ற கிறீம் வகைகளை உபயோகிப்பதன் மூலம் குணமாக்கலாம்.

மெபைல் கமராவில் எடுத்த மற்றொரு நோயாளியினது காலின் போட்டோ.

அடிக்கடி இத்தொற்று ஏற்படுபவர்கள் கால்கள் நனைந்த பின்னர் ஈரத்தை ஒற்றி உலரவைப்பது அவசியம். இங்கு ஈரத்தைத் துடைப்பதற்கு உபயோகித்த துணியை வெறு இடங்களைத் துடைக்கப் பயன்படுத்த வேண்டாம். இல்லையேல் உடலின் ஏனைய இடங்களிலும் பங்கஸ் தொற்று ஏற்படலாம்.

காலணி அணியும் போது கால்களுக்கடையில் மேற் கூறிய மருந்துகளை பவுடராக போடுவாதன் மூலமும் நோய் தொற்றுவதைக் குறைக்கலாம்.

மூடிய காலணிகளுக்குப் பதில் திறந்த காலணிகளை அணிவதும் உதவலாம்.

இதைக் குணப்படுத்த ஒருவர் தனது கால்களை முக்கியமாகப் பாதங்களை ஈரலிப்பின்றியும் சுத்தமாகவும் வைத்திருப்பது அவசியம்.

செருப்பு சப்பாத்து ஆகியன தோலாலானவையாக இருப்பது நல்லது. ஏனெனில் அவை காற்றோட்டததைத் தடை செய்யமாட்டா.

சண்டலஸ், டெனிஸ் சூ போன்றவற்றை சுடுநீரில் கழுவுவது உதவும்.

சோக்ஸ் அணிபவர்கள் வியர்வையை உறிஞ்சி கால்களை ஈரலிப்பின்றி வைத்திருக்கக் கூடிய பருத்தியிலான சொக்ஸ் அணிய வேண்டும்.

மற்றவர்களின் காலணி, காலுறை போன்றவற்றை ஒருபோதும் அணியக் கூடாது.

மருத்துவ ஆலோசனை இன்றி கண்ட கண்ட சிறீம் மருந்துகளை உபயோகிக்கக் கூடாது. ஸ்டிரோயிட் வகை மருந்துகள் நோயைத் தீவிரமாக்கிவிடும்.

நோயைக் கவனியாது விட்டால் அதில் பக்டீரியா கிருமிகள் தொற்றி இவை மேலே பரவிசெலுலைடிஸ் Cellulitis போன்ற கடுமையான நோய்களைக் கொண்டு வரலாம்.

0.0..0.0.0.

Read Full Post »