Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘மருத்துவம்’

எனது புதிய மருத்துவ நூல் வெளிவந்திருக்கிறது.

குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் அவர்களுக்கு ஏற்படும் சில பிரச்சினைகள் பற்றியது

“உங்கள் குழந்தையின்

நலமான வளர்ச்சியும் சில பிரச்சினைகளும்”

இது என்னுடைய 14வது நூல்

நீண்ட நாட்களுக்கு பின்னர்தான் இந்த நூல் வெளிவருகிறது.

இந்த இடைவெளியில் நிறைய நலவியல் கட்டுரைகளை பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எழுதியுள்ளேன். ஆனால் அவற்றை நூலக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கவில்லை. இரண்டு காரணங்கள். முதலாவது காரணமானது இன்றைய வாசிப்பு முறைமை மாறிவிட்டது என்ற பொதுவான அபிப்பராயம்தான். இன்று அச்சுப் பிரதிகளை விட கணனியிலும் இணையத்திலுமே பெரும்பாலானவர்கள் படிக்கிறார்கள் என்பதுதான் எனது கணிப்பாக இருந்தது.

இதனால்தான் நீண்டகாலமாக நூல்களை வெளியிடவில்லை. ஆயினும் விரும்பியவர்கள் படித்துப் பயனுறும் வண்ணம் அவற்றை எனது புளக்கில் பதிவு ஏற்றம் செய்கிறேன். பேஸ்புக்கிலும் பதிவு செய்வது வழக்கம்.

ஆயினும் சில காலத்தின் முன் யாழ்ப்பாணத்திலும் பின்னர் கொழும்பிலும் நடந்த புத்தக கண்காட்சிசாலைகளில் முதியவர்கள் மட்டுமின்றி இளைய சமுதாயத்தினரும் நூல்களைத் தேடும் ஆர்வத்தைக் கண்டதும் நானும் மீண்டும் நூல் வெளியிட வேண்டும் என்ற எண்ணம் துளிர்த்தது.

இதை வெளியிட வைப்பதில் எனது நண்பர் S.சற்குணராஜா வின் அக்கறையும் இடைவிடாத நினைவூட்டல்களும் முக்கிய காரணமாகின்றன.

வெளியிடும் ஸ்ரீலங்கா புத்தக நிலையத்தினருக்கும் எனது நன்றிகள்

உள்ளடக்கம்

1. குழந்தையின் வளர்ச்சிப் படிகள்

2. குழந்தையின் வளர்ச்சிப் படிகள் 2ம் வருடம்

3. பாலகர்களின் உணவு

4. பாலகர்களின் உணவு ஒவ்வாமை

5. குழந்தைக்கு குடிக்கக் கொடுப்பது என்ன

6. குழந்தைகளுக்கு கொழுப்பு உணவு

7. போதுமடா அம்மாவின் சாப்பாடு

8. மீன் அறிமுகப்படுத்தல்

9. பசிக்காத குழந்தை

10. பல்லுக் கொழுக்கட்டையும் அழும் பிள்ளையை தேற்றலும்

11. தத்தித் தத்தி நடை பயில்தல்

12. குழந்தை விடாது அழுகிறதா?

13. தொட்டில் மரணம்

14. குழந்தைகளில் பிட்டம் தொடைகளில் அரிப்பு நோய்

15. குழந்தைகளின் வயிற்று வலிகள்

16. அடிக்கடி தலைவலிக்கும் குழந்தைகள்

17. இறங்காத விதைகள்

18. ஜிப்பில் மாட்டுப்படுதல்

19. தூக்கத்தில் சிறுநீர்கழித்தல்

20. ஓடி விளையாடு பாப்பா

21. கொப்பளத் தொற்று நோய்

22. கொப்பளிப்பான்

23. மலாவாயில் அரிப்பு

24. பேன் தொல்லை

25. இளநரை

26. காய்ச்சல் வலிப்பு

27. பேசாத குழந்தை

28. தூங்காத குழந்தை

29. தூங்காத குழந்தையுடன் அல்லாட்டமா

30. கண்களால் பூளை சிந்தும் பாலகன்

31. மூக்கிலிருந்து வடியம் குழந்தை

32. குழந்தைகளி;ன் ஒவ்வாமை மூக்கால் வடிதல்

33. தோற் கிரந்தை

34. பற்சொத்தை

35. நகம் கடித்தல

36. தூக்கத்தில் நடத்தல்

37. வெருட்டப்படும் குழந்தை

38. குழந்தைகளில்இருமல் மருந்து தேவையா

39. குறுநடை போடும் காலத்திலேயே வாசிக்க ஊக்குவியுங்கள்

40. குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன்

விலை 300 ரூபா
லங்கா புத்தகசாலையிலும் எனது மருத்துவ மனையிலும் கிடைக்கும்
1. Lanka Book Depot
Tel 077 3911998, 0112 341942
F.L 1.14,Dias Place
Gunasingapura
Colombo 12
2. Muruganandan Clinic
Maruthaddy
Point Pedro
Tel 076 850 2696

Read Full Post »

விரைவில் உயிர் நீக்க விருப்பமா

தினமும் இரண்டு கிளாஸ் மென்பானம் அருந்துங்கள்

தினமும் இரண்டு கிளாஸ் மென்பானம் அருந்தினால் விரைவில் மரணம் ஏற்படும் என அண்மையில் பிரசுரமான ஒரு ஆய்வு கூறுகிறது.

மென்பானத்தில் உள்ள இனிப்பானது சீனியாக இருந்தால் மட்டும் இந்த ஆபத்து ஏற்படும் என்றில்லை. செயற்கை இனிப்புகளைப் பயன்படுத்தினாலும் அதே போல மரணம் ஏற்படுமாம்.

452000 பேரைக் கொண்ட இந்த ஆய்வானது டென்மார்க், பிரான்ஸ், ஜேர்மனி,நோர்வேஈ இங்கிலாந்து, சுவீடன், ஸ்பெயின், நெதர்லன்ட, கிறீஸ் ஆகிய நாடுகளில் செய்யப்பட்டது

மாதம் ஒரு முறை மட்டும் மென்பானம் அருந்துபவர்களோடு தினமும் இரண்டு கிளாஸ் இருந்துபவர்களை ஒப்பட்டுப் பார்த்தபோதே இந்து ஆபத்து இருப்பது தெரிய வந்தது.

மாதம் ஒரு முறை மட்டும் மென்பானம் அருந்துபவர்களோடு தினமும் இரண்டு கிளாஸ் இருந்துபவர்களை ஒப்பட்டுப் பார்த்தபோதே இந்து ஆபத்து இருப்பது தெரிய வந்தது. அந்த மரணமானது பல்வேறு நோய்களால் வந்திருந்தது.

தினமும் இரண்டு கிளாஸ் மென்பானம் அருந்துபவர்களது மரணமானது பெரும்பாலும் இரத்தக் குழாய் சாரந்த நோய்களால் ஏற்பட்டிருந்தது. மாரடைப்பு மற்றும் முளையில் இரத்தக் குழாய் வெடித்தல் போன்றவை உதாரணங்களாகும்.

மாறாக தினமும் ஒரு கிளாஸ் மென்பானம் மட்டும் அருந்துபவர்களது மரணமானது பெரும்பாலும் உணவுக் கால்வாய் சார்ந்த நோய்களால் ஏற்hட்டிருந்தததாக அந்த ஆய்வு மேலும் சொல்கிறது.


மென்பானங்களில் உள்ள எந்தப் பொருள் காரணமாக இருக்கிறது என்றோ, என்ன காரணத்தால் அவ்வாறு மரணம் விரைகிறதோ என்பவையிட்டு அந்த ஆய்வு எதையும் கண்டறியவில்லை.


எனவே இந்த ஆய்வானது மென்பானம் அருந்துவதற்கும் முன்கூட்டிய மரணத்திற்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதை  எடுத்துக் காட்டி ஆரோக்கிய உணவுப் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுகிறது எனக் கொள்ளலாம்.


எனவே மென்பானங்களைத் தவிருங்கள். தண்ணீரை அருந்துங்கள். வாழ்வு நீளும்.


இந்த ஆய்வானது Jama Internal Medicine மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது.

0.00.0

Read Full Post »

சொக்லேட், ஐஸ்கிறீம் இனிப்பு போன்ற உணவுகளில் ஆர்வம் அதிகமாக இருக்கின்றது.  கிட்டத்தட்ட இவற்றுக்கு அடிமையாகிவிட்டேன் என்று கூட சொல்லலாம். இதிலிருந்து எப்படி விடுபடுவது டொக்டர்?

வி. சுகி நெல்லியடி

பதில்:- இனிப்பு உணவுகளிலிருந்து விடுபடுவது எப்படி என்று சொல்வதற்கு முன்னர் அதற்கு அடிமையாகிவிட்டேன்  என்று நீங்கள் சொல்வதில் ஏதாவது உண்மை இருக்கிறதா என்பது பற்றி சில வார்த்தைகள் சொல்லியே ஆக வேண்டும்.

இனிப்புக்கு அடிமையாவது என்பது வெறும் பேச்சுச் சொல்ல அல்ல. அது ஒரு நோய் போல பலரைiயும் பீடித்துள்ளது. ஏனெனில் நாம் இனிப்பை உட்கொள்ளும் போது எமது குருதியில் அபின் சார்ந்ததும் டோபமின் போன்றதுமான இரசாயனங்கள் கலக்கின்றன என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

குருதியில் அதிகளவு டோபமின் சேரும்போது எம்மையறியது ஒரு இன்ப உணர்வு ஏற்படுகிறது. அந்த உணர்வை தொடர வேண்டுமாயின் உடலானது இனிப்பை மேலும் உட்கொள்ளத் தூண்டுகிறது. நாட்செல்லச் செல்ல அதே அளவு இன்பத்தைப் பெற கூடியளவிலான இனிப்பை உட்கொள்ள நேர்கிறது. மது மற்றும் போதைப் பொருள்களும் அவ்வாறுதான் அடிமையாக்குகின்றன.

இனிப்பானது கொகேயினை விட அதிகமாக ஒருவரை அடிமைப்படுத்த வல்லது என Cassie Bjork என்ற ஆய்வாளர் கூறுகிறார். அத்துடன் அதிக இனிப்பை உட்கொள்வதால் எடை ஏறுகிறது. இதன் தொடர்ச்சியாக பிரஸர், கொலஸ்டரோல், நீரிழிவு, இருதய நோய்கள் போன்றவை வரும். எனவே நீங்கள் விரும்பியவாறு அதிக இனிப்பிலிருந்து விடுபட வேண்டியது அவசியம்தான்.

இனிப்பு என்பது சீனி சர்க்கரை ஆகியவற்றிலும் அவை சேர்க்;கப்பட்ட உணவுகளிலும் மட்டும்தான் இருக்கிறது என்றில்லை. பழங்களிலும் இருக்கிறது. பழங்களில் உள்ள இனிப்பு தனியாக வருவதில்லை. பழங்களிலுள்ள இனிப்பானது நார்ப்பொருள் மற்றும் ஏனைய போசணைப் பொருட்களுடன் கலந்து வருகிறது. இதனால் அவற்றில் சீனியின் அடர்த்தி குறைவு. எனவே அவற்றை உண்ணும் போது குருதியில் சீனியின் அளவு திடீரென ஏறுவதில்லை என்பதையும் குறிப்பிடலாம். எனவே அவற்றில் அடிமையாகும் நிலை ஏற்படுவதில்லை.

இதிலிருந்து விடுபடுவது எப்படி?

முதல் வேலையாக உங்களது வீட்டிலிருந்து சீனியையும் சீனி சார்ந்த பொருட்களை வீசிவிடுங்கள். அலுமாரிகளிலிருந்து அகற்றுவதுடன் உங்கள் முயற்சி நின்றுவிடக் கூடாது. அவற்றை உண்பதில்லை என திடசங்கற்பம் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஓவ்வொரு நேர உணவையும் சரியான நேரத்தில் போதியளவாகவும் போசாக்கு நிறைந்ததாகவும் உட்கொள்ள வேண்டும். காலை உணவிலிருந்து இதை ஆரம்பிப்பது முக்கியம். இப்பொழுது பலர் வேலை அவசரத்தில் காலை உணவை தவிர்த்துவிட்டு பின்னர் பசி எடுக்கும் போது திடீர் உணவுகளை கடையில் வாங்கித் திணிக்கும் போதே இந்த பிரச்சனை ஆரம்பிக்கிறது. எனவே மாப் பொருள் புரதம் கொழுப்பு போன்ற போசணைகள் சரியான அளவில் உள்ள உணவுகளைத் தேர்ந்தெடுங்கள். ஏதாவது காய்கறி பழவகைகள் சேர்ந்திருப்பது அவசியம்.

போதிய நீர் அருந்துங்கள். தினமும் 6 கிளாஸ் நீர் அருந்துவது நல்லது. அவை இனிப்பூட்டப்பட்ட பானங்களாக இருக்கக் கூடாது.

பசி இருப்பது கூடாது. பசி இருந்தால் இனிப்பு சேர்ந்த உணவுகளுக்கான அவா அதிகரிக்கும். எனவே பிரதான உணவுகளுக்கு இடைப்பட்ட வேளைகளில் சிறு உணவுகள் உட்கொள்ளலாம். ஆனால் கேக் பிஸ்கற், ரோல்ஸ், பற்றிஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை தொடவும் கூடாது. பழங்களாகவோ காய்கறிகள் அதிகம் சேர்ந்தவையாகவும் இருப்பது நல்லது.

மாறாக வறுத்த கடலை, கச்சான் எண்ணெய் சேர்க்காத கரட் வறுவல் போன்ற ஏதாவது ஒரு இனிப்பற்ற போசாக்கு சிற்றுணவை தயாராக வைத்திருங்கள். வீட்டில் இருக்கும் போது மட்டுமல்ல வேலைக்கு போகும் போதோ, வெளியே செல்லும் போதோ பசி எடுக்கும்போது இவற்றை உண்ணுங்கள். கடை நொறுக்குத் தீனிகளை சாப்பிடவே வேண்டாம்.

தினசரி ஏதாவது உடல் உழைப்பில் ஈடுபடுங்கள் அல்லது உடற் பயிற்சி செய்யுங்கள். இது உங்கள் குருதியில் சீனியின் அளவை அதிகரிக்க விடாமல் தடுப்பதால் இனிப்பு மீதான நாட்டத்தையும் குறைக்கும். அத்துடன் மனம் மகிழ்ச்சியாக இருப்பதாலும் வெற்றுப் பொழுதுகள் இல்லாததாலும் இனிப்பை நாட வேண்டிய அவசியம் ஏற்படாது.

மனம் மகி;ழ்சியாக இருப்பது அவசியம். மறை சிந்தனைகளில் மூழ்காதீர்கள். தேவையற்ற உணர்வுச் சிக்கலகளில் மூழ்க வேண்டாம். மகிழ்சிசான பொழுதுபோக்குளில் ஈடுபடுங்கள்.

மனஅழுத்தம் இருந்தால் அதை மறக்க பலர் மதுவை நாடுகிறார்கள். உங்களைப் போன்ற இனிப்பிற்கு அடிமையானவர்கள் இனிப்பையே நாடுவார்கள். எனவே மனஅழுத்தத்தை தூண்டும் விடயங்களில் ஈடுபடாதீர்கள். உடற் பயிற்சி, நடைப் பயிற்சி, தியானம், யோகாசனம், மந்திர உச்சாடனம் போன்ற ஏதாவது செயற்பாட்டில் ஈடுபடுவதும் நன்மை தரும். அதே போல போதிய உறக்கமும் அவசியம்.

இக் கட்டுரையைப் படித்து முடித்துவிட்டு சும்மா இருக்காதீர்கள். உடனடியாக எழுந்து உங்கள் வீட்டிலுள்ள சொக்லேட், ஐஸ்கிறீம் முதற்கொண்டு எல்லா இனிப்புகளையும் குப்பைக் கூடையில் வீசுவதிலிருந்து உங்கள் முயற்சியை ஆரம்பியுங்கள். இனிப்பிலிருந்து விடுதலை நிச்சயம்.

டொக்டர். ஏம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

Read Full Post »

உடற்பருமன் அதிகமானவர்கள் ‘பேலியோ டயட்’ (Paleo diet)  மேற்கொண்டால் உடற்பருமன் குறைவதோடு, நீரிழிவு போன்ற நோய்களும் குணமாகும் என்கின்றார்கள் ,உண்மையா?

கே.விதுசன் கிளிநொச்சி

பதில்:- உங்கள் கேள்வியான பேலியோ டயட் டின் பயன்கள் பற்றி கருத்துக்கள் உண்மையா என்பதற்கு வரு முன்னர் ‘பேலியோ டயட்’ என்றால் என்ன என்பது பற்றிய விளக்கத்தை அளிப்பது அவசியம் என நினைக்கிறேன். அதுவே கேள்விக்கான விடையினை பெருமளவு தெளிவுபடுத்திவிடும் எனவும் கருதுகிறேன்.

‘பேலியோ டயட்’ என்பதை நேரடியாக தமிழில் மொழிபெயர்த்தால் பழைய கற்கால உணவு முறை எனலாம். ‘பேலியோ டயட்’ றை வேடுவர்களின் தேடல் உணவு, குகை மாந்தரின் உணவு போன்ற வேறு பெயர்களிலும் அழைக்கிறார்கள்.

அதாவது மனித இனமானது விவாசாயத்தை மேற்கொள்வதற்கு முன்னைய காலத்தில் மிருகங்களைக் கொன்று அதன் தசைகளையும், மீன்களையும், மரம் செடி கொடிகளிலுள்ள காய்களையும் பழங்களையும் விதைகளையும் உண்டது போன்ற உணவு முறை என்பதாகும். குறைந்தது 25 மில்லியன் முதல் 10.000 ஆண்டுகளுக்கு முன்னரான மனிதர்களின் உணவு முறை எனக் கொள்ளலாம். உண்மையில் அவர்கள் என்ன உணவு உட்கொண்டார்கள் என்பது பற்றி எங்களுக்குத் தெளிவாகத் தெரியாது. என்ன உட்கொண்டிருப்பார்கள் என நாம் எமக்குள்ள அறிவு மூலம் நாமே கற்பிதம் கொண்ட முறை எனலாம்.

விவசாயத்தை ஆரம்பிப்பதற்கு முற்பட்ட காலத்து உணவு முறை என்று கொள்ளும் போது அதில் அரிசி கோதுமை குரக்கன் சாமை போன்ற தானித வகைகள் எதுவும் இருக்காது. பால் தயிர் உப்பு சீனி போன்றவையும் இருக்காது. அதே போல எண்ணெய் பொரித்தல் வறுத்தல் போன்ற உணவு தயார்ப்பு முறைகளும் இருக்காது. கொழுப்பு என்பது மிருகங்களின் தசைகளிலிருந்து விதைகளிலிருந்தும் பெற்றதாக மட்டுமே இருந்திருக்கும்.

போசாக்கு ரீதியாகப் பார்க்கும் போது புரத உணவுகள் அதிகமுள்ளதும், மாப்பொருள் உணவுகள் மிகவும் குறைந்த அளவிவானதும், பொரித்தல் வதக்கல் போன்ற பதப்படுத்தல் முறைகள் அற்றதுமான உணவு முறை என்று கொள்ளலாம். கேக், பிஸ்கட், பற்றிஸ், ரோல்ஸ், ஐஸ்கிறீம் போன்ற நவீன கலோரிக் குண்டுகள் எதுவும் இந்த உணவு முறையில் நெருங்காது.

இயற்கையோடு இணைந்த, பதப்படுத்தல் முறைகள் அற்ற, புராதன மனிதனின் உணவு முறையைக் கைக்கொள்வதால் எடை அதிகரிக்காது, நீரிழிவு, கொலஸ்டரோல், இருதய நோய்கள், புற்றுநோய்கள் போன்ற நவீன நோய்களுக்கான சாத்தியம் குறைந்து ஆரோக்கியமாக வாழலாம் என்பதே இந்த உணவுமுறையைக் கைக்கொள்பவர்களின் நோக்கமாகும்.

இந்த உணவுமுறையின் நன்மைகள் என்று சொல்லப்படுவவை எவை?

அரிசி கோதுமை போன்ற மாப்பொருள் உணவுகளும் கொழுப்பு உணவுகள் நொறுக்குத் தீனிகள் தவிர்க்கப்படுவதால் உட்கொள்ளப்படும் கலோரியின் அளவு குறைவடையும். இதனால் எடை அதிகரிப்பது தடுக்கப்படும்.

உட்கொள்ளப்படும் உணவின் அளவு எவ்வளவு அவற்றின் கலோரிப் பெறுமானம் எவ்வளவு என்றெல்லாம் கணக்கிட வேண்டிய தேவை இல்லாததால் சுலபமான முறை. சங்கடங்கள் இன்றி சுலபமாகத் தொடரக் கூடிய முறை எனலாம்.

சொல்வதற்கு சுலபமாக இருந்தபோதும் பல நடைமுறைப் பிரச்சனைகள் இந்த பேலியோ டயட் முறையில் இருக்கின்றன.

முதலாவதாக கற்கால மனிதர்கள் எதைச் சாப்பிட்டார்கள் என்பது பற்றிய தெளிவான உறுதியான தகவல்கள் எதுவும் கிடையாது. எனவே நாம் இப்பொழுது கடைப்பிடிக்கும் இந்த உணவு முறையானது ஊகத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டது.

அடுத்து இதுதான் பேலியோ டயட் என்று உத்தியோகபூர்வமான வரையறுக்கப்பட்ட உணவு முறை எதுவும் கிடையாது. பலரும் தங்கள் கற்பனைக்கு ஏற்றபடி சொலிகிறார்கள்ளூ உட்கொள்கிறார்கள்.

உதாரணத்திற்கு சிலர் பால் தயிர் மற்றும் தானிய உணவுகளை முற்றாக ஒதுக்க வேண்டும் என்கிறார்கள். எனவே அது ஒரு சமபல வலுவுள்ள ஆரோக்கிய உணவாக இருக்குமா என்பது சந்தேகமே.

பொதுவாக இந்த உணவு முறையில் இறைச்சி உட்கொள்வது அதிகமாக இருக்கிறது. ஆனால் கொலஸ்டரோல் போன்ற பிரச்சனைகள் அதிகம் இருப்பதால் இன்றைய காலகட்டத்தில் அவற்றின் உபயோகத்தை அளவோடு வைத்திருக்குமாறே இப்பொழுது அறிவுறுத்தப்படுகிறது.

பண்ணைகளில் வளர்க்கப்படும் கால்நடை இறைச்சிகளைத் தவிர்த்து இச்சையாக மேயும் கால்நடை இறைச்சியையே உண்ண வேண்டும் என பேலியோ டயட் டின் சில தீவிர ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். இது நடைமுறைச் சிக்கலானதும் செலவை அதிகரிக்கச் செய்யும் விடயமாகவும் இருக்கிறது.

இந்த உணவுமுறையானது ஒரே மாதிரியாக இருப்பதாலும் பல்வேறு வகைகளையும் உள்ளடக்குவதில்லை என்பதால் பலருக்கு சிலகாலத்திற்குள்ளேயே சலிப்பை ஏற்படுத்திவிடும் என்பதும் உண்மையே.

நாம் கற்கால மனிதர்கள் போல உறுதியான உடல் உள்ளவர்களாக, நீரிழிவு, கொலஸ்டரோல், இருதயநோய்கள் போன்றவை வராமல் வாழவேண்டுமானால் அந்த  உணவு முறையை மட்டும் கடைப்பிடிப்பது போதுமா?

எங்கள் வாழ்க்கை முறை மாறிவிட்டது. அவர்கள் முழுநேர உடல் உழைப்புடன் வாழ்ந்தவர்கள். மாறாக இன்றைய மனிதர்கள் உடல் உழைப்பின்றி கதிரையே கதி என்று நாள் முழுவதும் கிடப்பவர்கள். போதிய உடல் உழைப்போ உடல் உழைப்போ இன்று கிடையாது.

எனவே அவர்களுக்கு என்று நம்பப்படும் உணவு முறை எமக்கு உதவுமா என்பது சந்தேகமே. அதே நேரம் ஓடியாடித் திரியாத உடல் உழைப்பற்ற இன்றைய வாழ்க்கை முறைக்கு இன்றைய வழமையான உணவு முறைகள் பொருத்தமானவை என்றும் சொல்ல முடியாது. நிச்சமாக மோசமானவையே.

எனவே பேலியோ டயட் முறையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். தீட்டாத தானியங்கள் பால் பாற்பொருட்கள் போன்றவற்றிற்கு இடம் அளிக்க வேண்டும். அத்துடன் தினசரி உடற் பயிற்சி அல்லது உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அத்துடன் சரியாக வரையறுக்கப்பட்ட ஒரேயொரு பேலியோ டயட் முறையை அறிமுகப்படுத்த வேண்டும்.

இறுதியாக ‘பேலியோ டயட்’ (Paleo diet)  மேற்கொண்டால் உடற்பருமன் குறைவதோடு, நீரிழிவு போன்ற நோய்களும் குணமாகும் என்கின்றார்கள் ,உண்மையா? என்ற கேள்விக்கு விடையாக எடை குறையும் என்பது நிச்சயம். நீரிழிவைக் கட்டுப்படுத்தவும் உதவும். ஆனால ஏற்கவே உள்ள நீரிழிவை முற்று முழுதாக குணமாக்குவது என்பது சாத்தியமி;ல்லை.

டொக்டர். ஏம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

கேள்வி- வயது கூடக் கூட உணவில் ஆர்வமில்லாமல் போவது ஏன்?

ச. பொன்னம்பலம், பரந்தன்

பதில்:- பசி குறைவதும், உணவில் நாட்டம் குறைவதும் வயது முதிர்வதின் ஒரு அம்சம் என்றே nhசல்லலாம். உடலியல் காரணங்களும் உளவியல் காரணங்களும் இருக்கலாம். இருந்தபோதும் இது எல்லா முதியவர்களையும் ஒரே விதமாகப் பாதிக்கிறது என்றும் சொல்ல முடியாது.

வயது முதிரும் போது அவர்கள் இளவயதில் இருந்ததுபோல ஓடியாடித் திரிவதில்லை. அவர்களது வேலைகள் குறைகின்றன. வேலைகள் செய்தாலும் அது இளவயதில் இருந்ததுபோல துடியாட்டமாக இருப்பதில்லை. இதனால் அவர்கள் செலவழிக்கும் சக்தியின் (கலோரி) அளவு குறைந்துவிடுகிறது. இதனால் பசி குறைந்துவிடுகிறது. புடிப்படியாக உண்ணும் உணவின் அளவு குறைந்துவிடும்.

முதுமையில் பலருக்கு பற்கள் விழுந்துவிடுகின்றன. இதனால் சப்பிச் சாப்பிட முடியாமல் போகிறது. பல்லுக் கட்டியிருந்தாலும் அவை பெரும்பாலும் உறுதியாக இருப்பதில்லை. இடைஞ்சலாகவே பல முதியவர்களால் பாரக்கப்படுகிறது.  இவற்றினால் உணவை இரசித்துச் சாப்பிட முடியாமல் போவதாலும் பலருக்கும் உணவில் ஆர்வம் கெட்டுவிடுகிறது.

உணவுக் கூறுகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொடுப்பது, மென்மையான உணவுகள், ஈரலிப்பான உணவுகள் போன்ற நடைமுறைகள் பற்பிரச்சனைக்கு தீர்வாக அமைய முடியும்.

வேறு சிலருக்கு வயதாகும் போது உணவு சமிபாடடைவதில் சில பிரச்சனைகள் ஏற்படுகின்றன. உதாரணமாக பாலிலும் பாற்பொருட்களிலுமுள்ள லக்டோஸ் என்ற பொருள் ஒத்துக்கொள்வதில்லை. பால், பால்மா, பால் நேர்ந்த பொருட்களான கேக், ஐஸ்கிறீம், பிஸகட் போன்றவற்றை அவர்களது உணவுக் கால்வாயால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இதனால் வயிற்றோட்டம், வயிற்றுப்; பொருமல் போன்ற அசௌகர்யங்கள் ஏற்படுகின்றன. சிலருக்கு ரொயிலட்றுக்கு போவற்கு முன்னரே மலம் கசிந்துவிடுவதுண்டு. பலருக்கு பிரச்சனைக்கான அடிப்படைக் காரணம் விளங்குவதில்லை. எனவே ‘சாப்பிட்டால் வயிற்றால் போகிறது’ என்று எண்ணி உணவுகளைத் தவிர்க்க முயல்வார்கள்.

‘அம்மா சாப்பிடிறா இல்லை. சத்துமா எழுதித்தாங்கோ என்று கேட்காத பிள்ளைகளே இல்லை. வேவையில்லாமல் சத்து மாக்களை கரைத்துக் கொடுத்தால் அவர்களது பசி மேலும் குறைந்துவிடுறது. ஏடை அதிகரித்து விடுகிறது. இதனால் அதிகரித்த உடையுடன் அவர்களால் அதிகம் நடக்க முடியாது கூடுதலாக உட்கார்ந்து விடுகிறார்கள். இது மேலும் எடையை அதிகரிக்கச் செய்வதுடன் பராமரிப்பவர்களுக்கு அவர்களது அதிகரித்த எடை சிரமத்தைக் கொடுகக்கிறது.

மற்றொரு முக்கிய காரணம் வயதாகும் மணம் சுவை போன்ற உணர்வுகள் மங்கிப் போவதாகும். உண்மையில் நாவில் உள்ள சுவையரும்புகளுக்கும் மணத்தை நுகரும் ஆற்றலுக்கும் நிறையத் தொடர்பிருக்கிறது. இவற்றின் நுகரும் ஆற்றல் வயதாகும் போது குறைவடைவதால் உணவுகளை இரசித்து ருசித்து உண்ண முடியாமல் போகிறது. இதனால் உணவில் நாட்டம் குறைவடைகிறது.

எனவே கூடுதலான மணம் சுவை போன்றவை சேர்த்து உணவு தயார்ப்பது உதவக் கூடும். இருந்த போதும் சுவைக்கென மேலதிக இனிப்பு உப்பு போன்றவற்றைச் சேர்ப்பது நல்லதல்ல. ஏனெனில் இவை அவர்களது வயதில் ஏற்படக் கூடிய பிரஸர், நீரிழிவு எடை அதிகர்ப்பு போன்ற பிரச்சனைகளைத் தீவிரமாக்கலாம். பதிலாக மணமும் சுவையுமுள்ள இவைவகைகள், பழங்கள், போன்றவற்றைச் சேர்க்கலாம், எலுமிச்சம் பழத்தின் புளிப்பு அவர்களுக்கு ஏற்றதாக இருக்கக் கூடும்.இயற்றையான சுவையூட்டிகளான ஏலம், கராம்பு கறுவா போன்றவையும் உதவலாம்.

இவற்றோடு பார்வைக் குறைபாடும் உணவுகளை ரசித்து உண்பதற்கு தடையாகலாம். வயதாகும் கற்றரட், மற்றும் விழித்திரைப் பாதிப்பு ஆகியவற்றால் பல முதியவர்களின் பார்வை தெளிவாக இருப்பதில்லை. இதனாலும் உணவில் ஆர்வம் குறைந்துவிடுகிறது.

முதியவர்கள் பெரும்பாலும் பல் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பர். உதாரணமாக நீரிழிவு, பிரஸர், மூட்டுவாதங்கள், அல்சைமர் நோய், மனச் சோர்வு போன்ற பலவிதமான பாதிப்புகள் இருக்கக் கூடும். இவற்றிற்காக பல மருந்துகளை தினமும் உட்கொள்வார்கள். இவற்றில் சில வாய்க்கசப்பு, ஓங்காளம், வாந்தி, வயிற்றுப்பொருமல், மலச்சிக்கல், வயிற்றோட்டம் போன்ற சிக்கல்கள் இருக்கலாம். இவையும் பசியின்மை, உணவில் ஆர்வமின்மை போன்றவற்றிற்னு காலாகலாம்.

‘ சரியான மலச்சிக்கல். சாப்பிடவே முடியுதில்லை’ என்று என்னிடம் பல முதியவர்கள் முறையிடுவார்கள். உண்மைதான் பல முதியவர்களுக்கு மலச்சிக்கல் இருக்கிறது. மலச்சிக்கலால் வயிறு பொருமலாக இருப்பதால் உண்ண முடிவதில்லை. மலச்சிக்கலுக்குப் பல காரணங்கள் இருக்கலாம். உணவு விரைவில் சமிபாடடையாமல் இருத்தல், போதிய உணவு உட்கொள்ளாமை, உண்ணும் உணவுகளிலும் நார்ப்பொருள் உள்ள உணவுகளைத் தவிர்த்து மென்னையான உணவுகளை நாடுதல், சில மருந்துகளும் காரணமாகலாம். மருந்து காரணமா என்பதையிட்டு மருத்துவருடன்  ஆலோசனை பெறவும்.

உணவு வேளையில் கூட இருந்து கதைத்துப் பேசி உண்பதற்கு யாருமில்லாததும் சிலருக்குப் பிரச்சனையாக இருக்கிறது. குடும்பமாக கூடியிருந்து சாப்பிட்டவருக்கு தனிமையில் இருந்து சாப்பிடுவது சலிப்படைய வைத்துவிடுகிறது. ‘சாப்பிட்டு என்ன..’ என ஆற்றாமை சூழ்ந்துகொள்கிறது. எதைச் சாப்பிட்டோம் எப்படிச் சாப்பிட்டோம் என்ற நினைவின்றி ஏதோ விழுங்கினோம் என்ற நிலை ஏற்படுகிறது சிலருக்கு.

தனிமை சிலருக்கு மனச்சோர்வு நோயை ஏற்படுத்தலாம். இதுவும் பசியை மழுங்கடிக்கும். எனவே கூடியிருந்து உணவு உட்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுப்பதும் உதவக் கூடும்.

பசியைத் தூண்டுவதற்கான சில மருந்துகள் உள்ளன. ஆனாலும் அவற்றை விட மேலே சொன்ன அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து நிவர்த்திப்பதே கூடுதலான பலன் அளிக்கும் என நம்புகிறேன்.

உண்ணும் உணவின் அளவு குறைந்தாலும் அது போசாக்குள்ளதாக இருப்பதில் அக்கறை போதிய கவனம் வேண்டும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

கூன் விழுந்தவர் பாடியவரின் கூன் பிரச்சனைகள்;

‘அரிது அரிது மானிடராதல் அரிது

மானிடராயினும் கூன் குருடு

செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது…’ என்று கூன் விழுந்த பாட்டி ஒளவையார் பாடினார்.

கூன் விழுதல் பொதுவாக முதுமையில் வருவது. ஆனால் ஒளவையார் கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது என்று பாடினார். அதாவது பிறக்கும் போதே கூன் விழுவதைப் பற்றிப் பாடியுள்ளார். பிறப்பிலேயே வரும் நோய் என்று பாடியுள்ளதாக பொருள் கொள்ளலாம். உண்மைதான். பிறப்பிலும் இளவயதிலும் கூட முதுகு வளையலாம். ஆனால் அவ்வாறு வருவது குறைவு. முதுமையில் வருவதே அதிகம்.

முள்ளந்தண்டில் வளைவானது முன்பின்னாகவும் வரலாம். பக்கவாட்டிலும் வரலாம். முன்பின்னாக வருவதை kyphosis என மருத்துவத்தில் சொல்வார்கள்.

அதிலும் முதுவயதில் மேல் முதுகில் வரும் வளைவான கூனை வயது காரணமான Age related Hyperkyphosis    என்பார்கள்.

இவர்களின் மேல் முதுகு முள்ளந்தண்டு எலும்புகள் வழமைக்கு மாறாக அதீதமாக முன்பக்கமாக வளைந்திருப்பதே கூனுக்கு காரணமாகும். மணிக்கணக்காக கணனியின் முன் உட்கார்ந்திருப்பவர்களுக்கும் இத்தகைய கூன் (Hyperkyphosis)  வர வாய்ப்புண்டு.

பக்கவாட்டு வளைவானது சாதாரண கண்களுக்கு கூன் தெரிவதுபோல வெளிப்படையாகத் தெரிவது குறைவு. பக்கவாட்டு வளைவை மருத்துவத்தில் (Scoliosis) என்பார்கள்,

நாளாந்தம் பல கூன் விழுந்த முதியவர்களைக் காண்கிறோம். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். மிகுந்த சிரமத்துடுன் கைத்தடி ஊன்றி அடியெடுத்து நடந்து வருவார்கள்.

உண்மையில் முதியவர்களில் 20 முதல் 40 சதவிகிதமானவர்கள் கூன் விழுதலால் பாதிப்படைகிறார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன. அதிலும் முக்கியமாக பெண்களே பாதிப்படைவது அதிகம். இந்த வளைவிற்கு பாதிப்புற்றவர்களது வழமையான இருக்கும் மற்றும் நிற்கும் நிலைப் போக்குகள் (Posture) காரணமாக இருக்கக் கூடும். பெண்கள் அதிகமாகப் பாதிப்படைவதற்குக் காரணம் மகப்பேறு, பாலுட்டுதல், மற்றும் போதிய கல்சியம் உட்கொள்ளமை காரணமாக இருக்கிறது.

இருந்தபோதும் முக்கிய காரணம் வயதாவதன் காரணமாக அவர்களது முள்ளெலும்பில் ஏற்படும் பாதிப்புகளும் தாக்கங்களும்தான். முக்கியமாக அவர்களது முள்ளெலும்புகளில் ஏற்படும் உடைவுகளும் சேதங்களும்தான். கூனல் விழுந்தவர்களில் மூன்றில் ஒருவருக்கு முள்ளந்தண்டு உடைவு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. வயதாகும் போது முள்ளெலும்பில் ஏற்படும் உடைவுகள் விழுந்து அடிபடுவதால் ஏற்படுவதல்ல.

வயதாகும் போது அவர்களின் எலும்புகளில் உள்ள கல்சியம் சத்தின் அடர்த்தி குறைகிறது. இதனால் முள்ளெலும்புகளின் நலிவடைகின்றன. உடலின் பாரத்தை சுமக்க முடியாமல் அவை நசிந்து உடைகின்றன. இவ்வாறு எலும்பு நலிவடைவதற்கு வயது மட்டும் காரணமல்ல. ஸ்டிரொயிட் வகை மருந்துகளை நீண்ட காலம் தொடர்ந்து உபயோகிப்பதும் காரணமாகிறது.

உதாரணத்திற்கு சொல்வதானால் ஆஸ்த்மாவுக்கு உபயோகிக்கும் சில வகை இன்ஹேலர்களில் ஸ்டிரொயிட் மருந்துகள் இருக்கின்றன. ஆனால் இவை மிகமிகக் குறைந்த அளவில் இருப்பதால் பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால் பலருக்கு இன்ஹேலர்கள் உபயோகிக்க விரும்பமில்லாததால் மாத்திரைகளை உபயோகிக்கிறார்கள். இம் மாத்திரைகளில் உள்ள ஸ்டிரொயிட் மருந்துகளின் அளவு மிக அதிகம். அதனால் எலும்பு சிதைவு மட்டுமின்றி நீரிழிவு உட்பட பல நோய்கள் வரலாம்.

முள்ளந் தண்டுகளை இணைப்பது வட்டமான மென்மையான இடைத்தட்டங்கள் (Intervertebral disc) ஆகும். வயதாகும் இவை ஈரலிப்பை இழந்து சுருங்க ஆரம்பிக்கும். இவையும் கூன் முழுவதை மோசமடையச் செய்யும். இடைத்தட்டம் சுருங்குவதால் உடலைத் திருப்புவது குனிவது, வளைவது போன்ற பல்வேறு செயற்பாடுகளும் சிரமமாக இருக்கும். அவற்றை முழுமையாகச் செய்வது இயலாதிருக்கும்.

பொதுவாக வலிகள் படுத்து ஆறுதல் எடுக்கும் போது தணிந்து விடும். ஆனால் முள்ளந்தண்டு வளைந்திருப்பதால் படுக்கும் போது அவை அழுத்தப்படுவதால் வலி ஏற்படுவது அதிகம்.

மிக அரிதாக ஆனால் முள்ளெலும்புகளில் என்புப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. இதுவும் முள்ளெலும்பை வளையச் செய்யலாம்.

சிறிய கூனல் உடல் ரீதியாக பெரிய பாதிப்புகள் எதையும் ஏற்படுத்துவதில்லை. இருந்தபோதும் கடுமையான கூனலானது பல்வேறு பாதிப்புகளைக் கொண்டுவரும்.

கூனலானது உடல் தோற்றத்தை முற்று முழுதாகப் பாதிப்பதால் உளரீதியாகவும் மனத்தாக்கம் ஏற்படலாம். தனது தோற்றம் பற்றிய தாழ்வுணர்ச்சி, விழுந்துவிடுவோமோ என்ற பாதுகாப்பற்ற உணர்வு, மற்றவர்களில் தங்கியிருக்க வேண்டி இருக்கிறதே கவலை போன்றவை ஏற்படக் கூடும்.  உள வலியுடன் உடல் வலியையும் இணைந்து கொள்ளும்.

அத்துடன் கடுமையான கூனலானது சுவாசப்பையை அழுத்தக் கூடும். அவ்வாறு சுவாசப்பையில் கடும் அழுத்தம் ஏற்படுமாயின் சுவாசித்தலில் சிரமங்களும் ஏற்படக் கூடும்.

அவ்வாறே கடுமையான கூனலானது குடல் மற்றும் உணவுத் தொகுதிகளையும் அழுத்தக் கூடும். அவ்வாறு அழுத்தினால் உணவை விழுங்குவதில் சிரமங்கள் தோன்றக் கூடும். அத்துடன் வயிற்று ஊதல் பொருமல் ஏப்பம், நெஞ்செரிப்பு போன்ற அறிகுறிகளும் தோன்றுவதற்கான சாத்தியங்கள் உண்டு.

கூன் விழுவது முள்ளம்தண்டு எலும்புகளைப் பாதிப்பதுடன் அவற்றை இயங்கவைக்கும் தசைத் தொகுதிகளையும் நலிவடையச் செய்யும். இதனால் நாற்காலியிலிருந்து எழும்புவது சிரமமாக இருக்கும். கைபிடி உள்ள கதிரையாயின் அவற்றை கைகளால் பற்றிக் கொண்டே எழ நேரும்.

அத்துடன் இயல்;பாக நடப்பதிலும் சிரமங்கள் ஏற்படும். நடப்பதில் உள்ள சிரமங்கள் காரணமாக விழுவதற்கான சாத்தியங்கள். இத்தகைய விழுகைகளால் வேறு எலும்பு முறிவுகளையும் ஏற்படுத்துவதற்கான சாத்தியங்கள் மிக மிக அதிகமாகும்.

இவ்வாறான பல்வேறு பாதிப்புகளால் மரணத்திற்கான சாத்தியம் முன்நோக்கி நகர்கிறது.

வயது மூப்பினால் ஏற்படும் கூன் பிரச்சனையைத் தீர்க்க சிகிச்சைகள் ஏதும் பயன்படுமா. அல்லது ‘வயசு போனவர்தானே. இனி வைத்தியம் செய்து என்ன பிரயோசனம். ஏதோ இதோடை சமாளிக்க வேண்டியதுதான்… ‘ என்று சொல்லி கைகழுவிட வேண்டியதுதானா?

கைவிட வேண்டியதில்லை. பல வழிகளில் முயலலாம். பலன் கிடைக்கும்.

சத்திரசிகிச்சைகள் உள்ளன. ஆனால் முதியவர்களில் அதற்கான சத்திரசிகிச்சைகள் சாத்தியமில்லை அத்தகைய சத்திரசிக்சிசைகளைத் தாங்குவதற்கான உடல் வலிமை இருக்காது என்பதுடன் மயக்க மருந்து கொடுப்பதிலும் சிக்கல்கள் இருக்கலாம்.

முள்ளந்தண்டு வளைவுகளை நிமிர்த்துவதற்கான பட்டிகள் (back braces) கிடைக்கின்றன. இவற்றை அணிவதால் ஓரளவு நிவாரணம் கிடைக்கும்.

மிக முக்கியமானது முள்ளந்தண்டுகள் அவற்றை தசைநார்கள் ஆகியவற்றைப் பலப்படுத்துவதற்கான பல பயிற்சிகள் உள்ளன. இவற்றைத் தொடர்ந்து செய்வதன் நல்ல பலன் கிடைக்கும் என்பதை ஆய்வுகளும் உறுதி செய்கின்றன. இத்தகைய பயிற்சிகளை உடற் பயிற்சி மருத்துவம் செய்பவர்களின் அறிவுறுத்தலுடன் செய்வது நல்லது.

சுவாசப் பிரச்சனைகள் இருந்தால் சுவாசப்பையின் ஆற்றலை அதிகரிப்பதற்கான சுவாசப் பயிற்சிகள் தேவைப்படும்.

இவ்வாறான பயிற்சிகள் மூலம் கூன் உள்ளவர்கள் தங்கள் பாதிப்புகளை ஈடு செய்து மகிழ்வோடு வாழ முடியும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

கேள்வி- சத்திரசிகிச்சைக் கூடத்துக்குச் செல்வதற்கு 12 மணித்தியாலத்துக்கு முன் நீர் அருந்தக் கூடாது என மருத்துவர்கள் சொல்கின்றார்களே. இது எதனால்?

எஸ். கயூரன் யாழ்ப்பாணம்

பதில்:- சத்திரசிகிச்சை செய்வதற்கு முன்னர் மயக்க மருந்து கொடுப்பார்கள். சில விதமான சத்திரசிகிச்சைகளுக்கு மயக்க மருந்து கொடுப்பதில்லை. குறிப்பிட்ட பகுதியை மட்டும் மரக்கச் செய்துவிட்டு சத்திரசிகிச்சை மேற்கொள்வார்கள். மயக்க மருந்து கொடுத்தால் அவர் நினைவிழப்பார். தனக்கு என்ன நடக்கிறது என்பதை சற்றேனும் அறிய முடியாத நிலையில் இருப்பார்.

மயக்க மருந்து கொடுத்திருக்கும்போது எமது இச்சை செயற்பாடுகள் மட்டுமின்றி அனிச்சை செயற்பாடுகளும் தற்காலிகமாகச் செயற்படாது.

இதன்காரணமாக இரைப்பையில் உணவு அல்லது நீராகாரம் இருந்தால் அது வாந்தியாக வெளியேறலாம். அல்லது தொண்டைப் பகுதிக்குள் அல்லது களப்பகுதிக்குள் மேலெழுந்து வரக் கூடும். அவ்வாறு மேnலுழுந்து வரும் உணவு அல்லது நீராகாரம் சுவாசப்பையினுள் சிந்திவிடக் கூடும்.

உணவானது அவ்வாறு மேnலுழுந்து வரும்போது, அது சுவாசக் குழாய்களுக்குள் சென்று அவற்றை அடைத்துவிடும் ஆபத்து உண்டு. இதனால் சுவாசம் தடைப்பட்டு மூச்சடைக்கும் ஆபத்து உண்டு. அத்துடன் உணவு அல்லது நீராகாரம் சுவாசப்பையினுள் சென்றுவிட்டால் சுவாசப்பையில் கிருமித்தொற்று ஏற்பட்டு நியூமோனியாவாக மாறக் கூடிய ஆபத்து உண்டு. இவை இரண்டுமே உயிராபத்தைக் கொண்டுவரக் கூடியவை.

இத்தகைய ஆபத்துகள் ஏற்படுவதைத் தடுப்பதற்பாகவே மயக்க மருந்து கொடுக்கும் வேளையில் இரைப்பை வெறுமையாக இருக்க வேண்டும். எனவேதான் வெறும் வயிற்றில் இருக்கவேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கிறார்கள்.

இருந்தபோதும் நவீன மயக்க மருந்து கொடுக்கும் முறைகள் பாதுகாப்பனவை. சுவாசக் குழாய்களுக்குள் உணவு அல்லது திரவம் செல்வதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவேயாகும்.

எவ்வாறாயினும் வெறும்வயிற்றில் இருக்க வேண்டிய தேவை இருக்கவே செய்கிறது. ஆனால் எவ்வளவு நேரத்திற்கு இரைப்பையை வெறுமையாக வைத்திருக்க வேண்டும் என்பதில் வேறுபாடுகள் மட்டுமின்றி மாற்றுக் கருத்துகளும் உண்டு.

நீங்கள் சொல்லியபடி 12 மணிநேரம் எதுவும் உட்கொள்ளக் கூடாது என்று கட்டுப்பாடு விதிப்பது பழைய காலத்தில். இதுவே ஆண்டாண்டு காலமாக நிலவிவந்த முறையாகும். இன்றும் ஒருசிலர் இதைச் சொல்லக் கூடும்.

காலையில் 9 மணியளவில் சத்திரசிகிச்சை நடக்கும் என எதிர்பார்ப்பதால் இரவு உணவு உட்கொண்ட பின்னர் எதுவும் உண்ணவோ குடிக்கவோ வேண்டாம் எனச் சொல்லப்பட்டது.

ஆனால் இப்பொழுது அவ்வளவு நீண்டநேரம் வெறும் வயிற்றில் இருக்க வேண்டியதில்லை என்ற கருத்தே நிலவுகிறது. பொதுவாக 6 மணிநேரம் வெறும் வயிற்றில் இருந்தால் போதும் என்பதே தற்போதைய நடைமுறையாகும்.

குழந்தைகளின் இரைப்பை விரைவாகச் செயற்படுவதால் அவர்களுக்கு 4 மணித்தியாலயங்கள் வெறும் வயிற்றில் இருப்பது போதும் என்ற நடைமுறை உள்ளது.

நீண்ட நேரம் ஆகாரம் இன்றி வெறும் வயிற்றில் இருந்தால் பல பாதிப்புகள் ஏற்படக் கூடிய சாத்தியம் உண்டு. உதாரணமாக மயக்க மருந்தின் வேகம் தணிந்து நினைவு திரும்பும்போது தலையிடி, தலைச்;சுற்று, ஓங்காளம் போன்ற உடல் சற்று அசௌகர்யங்கள் ஏற்படலாம்.

அத்தோடு நீண்ட நேரம் நீராகரமும் அருந்தாமல் இருப்பதால் உடலில் நீரிழப்பு நிலை (Dehydration) ஏற்படக் கூடிய சாத்தியம் உண்டு. இதனால் நாளங்களைக் கண்டுபிடித்து அதனூடாக ஊசி ஏற்றுதல்,  பரிசோதனைகளுக்காக இரத்தத்தை எடுத்தல் போன்ற செயற்பாடுகள் மருத்துவர்களுக்கும் தாதியர்களுக்கும் சிரமமாகலாம்.

இவற்றைக் கருத்தில் கொண்டு அமெரிக்க மயக்க மருந்தூட்டும் மருத்துவ நிபுணர்கள் பல முன்னேற்றமான சிபார்சுகளைச் செய்துள்ளார்கள்.

அதன்படி மயக்க மருந்து கொடுப்பதற்கு இரண்டு மணித்தியாலயங்கள் முதல் வரை நீர், பால் சேர்க்காத வெறும் தேநீர்,பழநார்கள் அற்ற வெறும் பழச்சாறு, மென்பானம் போன்றவற்றை அருந்தலாம் எனச் சிபார்சு செய்கிறார்கள்.

வரட்டிய பாண், பால் தேநீர் போன்ற ஆகாரங்களை சத்திரசிகிச்சைக்கு ஆறு மணிநேரத்திற்கு முன்வரை உட்கொள்ளலாம்.

ஆனால் சற்று கனதியான உணவுகளை சத்திரசிகிச்சைக்கு எட்டு மணிநேரத்திற்கு முன்னரே நிறுத்திவிட வேண்டும். கனதியான உணவு என்னும்போது இறைச்சிரூபவ் பொரித்த வதக்கிய உணவுகள்ரூபவ் எண்ணெய் பட்டர் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

மேற்கூறிய அமெரிக்க மயக்க மருந்தூட்டும் மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டல்கள் எமக்கும் பொருந்தும் என்ற போதும் ஒவ்வொருவரும் அவரவரது மருத்துவர்கள் சொல்லும் கட்டுப்பாடுகளையே கடைப்பிடிப்பது அவசியம். ஒவ்வொரு தனிநோயாளரது தேவைகளை கருத்தில் கொண்டு; அந்து மருத்துவ சூழலுக்கு எற்றவாறே கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள்.

இருந்தபோதும் அவற்றில் ஏதேனும் இடைஞ்சல்கள் அசௌகர்யங்கள் இருக்குமாயின் மருத்துவருடன் கலந்தாலோசித்து மாற்றங்கள் செய்வதும் சாத்தியமே.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

எனக்கு 30 வயது. புகைப்பிடிக்கும் பழக்கதுக்கு அடிமையாகிவிட்டேன். அதிலிருந்து மீள எவ்வளவு முயற்சித்தாலும் முடியவில்லை. இதற்கு என்ன செய்யலாம்?

கே. கவின் நெல்லியடி

புதில்:- உங்கள் கேள்வியில் உள்ள இரண்டு விடயங்கள் முயற்சி நீங்கள் வெற்றி பெறும் என்பதற்கு சான்றாக இருப்பதாக நான் நினைக்கிறேன்.

முதலாவது புகைத்தலுக்கு அடிமையாகிவிட்டதாக நீங்களே உணர்ந்து அதிலிருந்து மீள வேண்டும் என தீர்மானித்ததாகும். புகைத்தலைக் கைவிடமுடியுமா என்ற அவநம்பிக்கையுடன் பலர் தயங்கிக் கொண்டிருக்கும் போது விடுபட வேண்டும் என்ற தீர்மானமானமானது நிச்சயம் நம்பிக்கை ஊட்டுவதாகும். உங்கள் பாதிப்பிலிருந்து விடுபடுவதற்கான முதல் வெற்றி அதிலேயே நிச்சயமாகிவிட்டது.

புகைத்தலிருந்து விடுபட வேண்டும் என்ற தீர்மானாமானது மீள்வதற்கான முதற்படி மட்டுமல்ல உங்கள் உடல் நலத்தை மேம்படுத்துவதை நோக்கிய முக்கிய அடி எனலாம். நீங்கள் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் வருடாந்தம் ஒரு மில்லியனுக்கு மேலானவர்கள் அத்தகைய முதலடியுடன் ஆரம்பித்தே புகைத்தலைக் கைவிடுகிறார்கள்.

இரண்டாவது விடயம் நீங்கள் பலமுறை முயன்றும் விடுபட முடியவில்லை என்பதாகும். நீங்கள் மட்டுமல்ல இன்னும் பலரும் மீண்டும் புகைக்க நேர்வதால் கைவிட முடியவில்லை என நினைக்கிறார்கள். அதையிட்டு அவநம்பி;கை கொள்கிறார்கள். ஆனால் முக்கியமான விடயம் என்வென்றால் இவற்றையெல்லாம் தாண்டியே பெரும்பாலானவர்கள் முற்றாகக் கைவிடுகிறார்கள் என்பதாகும்.

எனவே அவநம்பி;க்கை கொள்ளாதீர்கள். நிச்சயம் கைவிடுவீர்கள் உங்கள் தீர்மானம் உறுதியாக இருந்தால்.

முதலில் செய்ய வேண்டியது யாதெனில் நீங்கள் புகைத்தலை நிறுத்துவதற்கென ஒரு குறிப்பிட்ட தினத்தைத் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதால் அந்தக் கால இடைவெளிக்குள் புகைத்தல் இல்லாத காலத்தை பற்றிய ஒரு மனநிலையை உங்களால் உருவாக்க முடியும். சிலர் குறிப்பிட்ட அந்த தினத்தில் புகைத்தலை திடீரென நிறுத்துவார்கள். வேறு சிலர் இந்தக் கால இடைவெளிக்குள் தினமும் தாங்கள் புகைக்கும் சிகரட்டின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைத்து அத் தினத்தில் முற்றாகக் கைவிடுவார்கள்.

நீங்கள் பொதுவாக எந்த நேரத்தில் புகைப்பீர்கள். பலருக்கு மது அருந்தும் போது புகைக்க வேண்டும். வேறு சிலருக்கு சாப்பிட்ட பின்னர் தம் அடித்தால்தான் சரிப்படும். சிலருக்கு கோப்பி குடிக்கும்போது கூட புகைக்க வேண்டியிருக்கும். டென்சனாகும் போது, மன அழுத்தம் ஏற்படும் போது புகைப்பவர்கள் பலர். வாகனம் செலுத்தும்போது புகைப்பவர்கள் இருக்கிறார்கள்.

இப்பொழுது; சிந்தித்துப் பாருங்கள். பொதுவாக எத்தகைய தருணங்களில் நீங்கள் பெரும்பாலும் புகைப்பீர்கள் என்பதை நினைவுபடுத்துங்கள். புகைத்தலை நிறுத்திய பின்னர் உங்களுக்கு புகைத்தலை தூண்டும் அத்தகைய சந்தர்ப்பங்களுக்கு முகம் கொடுப்பதைத் தவிர்க்க முயலுங்கள். ஆனால் பல சந்தர்ப்பங்கள் தவிர்க்க முடியாதவை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். சாப்பிட்ட பின்னர் புகைக்கத் தோன்றுபவர் சாப்பிடாமல் இருக்க முடியுமா? அவ்வாறு எனின் அந்த நேரத்தில் உங்கள் மனதுக்கு இதமான வேறு ஏதாவது ஒரு விடயத்தில் ஈடுபட முனையுங்கள்.

புகைத்தலை நீங்கள் கைவிட இருப்பதை இரகசியமாக உங்களளவில் செய்யாதீர்கள். உங்களுக்கு பிடித்தமான ஒருவர், உங்கள் அன்புக்கு உரிய ஒருவர் அல்லது நீங்கள் மதிக்கும் ஒருவரிடம் நீங்கள் கைவிட இருப்பதை சொல்லுங்கள். இந்த ஆலோசனையை நான் ஒருவருக்கு கூறியபோது அவர் தன் பாசத்திற்குரிய மகளின் தலையில் கைவைத்து சத்தியம் செய்து கைவிட்டார். 20 வருடங்களாகப் புகைத்த அவர் அதன் பின்னர் புகைக்கவே இல்லை. இப்பொழுது 75 வயதிலும் ஆரோக்கியமாக இருக்கிறார்.

புகைக்கும் சிலர் ஒன்று சேர்ந்து கூட்டாக புகைத்தலை நிறுத்துவதும் உண்டு. அதுவும் நல்ல பலனைத் தரக்கூடிய முறையாகும்.

ஒரு சிலருக்கு புகைத்தலை நிறுத்துவதற்கு மருத்துவ உதவி தேவைப்படும். அது பல வகைப்படலாம்.

புகையிலையில் உள்ள நிக்கரின் என்ற பதார்த்தமே புகைத்தலுக்கு அடிமையாக்குகிறது. எனவே அதை மூக்கில் அடிக்கும் ஸ்ப்ரேயாக. தோலில் ஒட்டும் மருந்தாக, வாயில் போடும் லொசென்சாக என ஏதாவது ஒரு விதத்தில் மருத்துவர்கள் கொடுத்து அதையும் படிப்படியாக நிறுத்துவதன் மூலம் கைவிட வைப்பார்கள்.

வாயினால் உட்கொள்ளும் மருந்துகளும் உள்ளன. இவற்றை மருத்துவரின் நேரடிக் கண்காணிப்பின் கீழேயே செய்ய வேண்டும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

எனக்கு வயது 25 . நான் ஒரு பெண்.  அதிகமாக தலைமுடி உதிர்கின்றது. தீர்வு என்ன?

வி. கஜானி கண்டி

பதில்- எமது முடிகள் நிரந்தரமானவை அல்ல அவை உதிராமல் இருப்பதற்கு. தினமும் 50 முதல் 100 வரையான முடிகள் உதிரவே செய்கின்றன. அதே நேரம் புதிதாக முளைக்கவும் செய்கின்றன. ஓவ்வொரு முடியும் 5- 6 ஆண்டுகள் வளர்ந்து வாழ்ந்து பின்னர் உதிர்கின்றன. வேறு முளைக்கின்றன. இது இயற்கையானது. ஆனால் வயதாகும்போது உதிர்வதற்கு ஏற்றளவு புதிதாக முனைப்பதில்லை.

ஆனால் நீங்கள் இளம் வயதுக்காரி. எனவே உதிர்வாற்கு ஏற்ப புதிதாக முளைக்க வேண்டும். ஆனால் நீங்கள் சொல்வதைப் பார்த்தால் உங்களுக்கு வழமையைக் விடக் கூடுதலாக உதிர்வது போலத் தெரிகிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். உங்கள் தந்தை அல்லது தாயிடமிருந்து வந்த பரம்பரை அம்சங்கள் காரணமாக இருக்கலாம். உங்களது வாழ்க்கை முறைகளில் ஏதாவது தவறு இருக்கலாம். சில தருணங்களில் சில நோய்களும் காரணமாக இருக்கலாம்.

ஏனைய விடயங்களைப் பற்றிப் பேச முன்னர் உங்கள் வயதில் வரக் கூடிய இரண்டு முக்கிய நோய்கள் இல்லை என்பதை நிச்சயப்படுத்த வேண்டும்.

உங்கள் தைரொயிட் சுரப்பி சரியாக வேலை செய்யவில்லை எனில் முடி அதிகமாக உதிரக் கூடும். தைரொயிட் என்பது எமது கழுத்துப் பகுதியில் உள்ள ஒரு சுரப்பி. தைரொக்சின் ஹோர்மோனை சுரக்கும். இது குறைவாக சுரந்தால் எடை அதிகரிப்பு, மாதவிடாய்க் குழப்பங்கள், சோம்பேறித்தன்மை, முடி உதிர்தல் போன்ற பல அறிகுறிகள் தோன்றலாம். சிலருக்கு வேறு எந்த அறிகுறிகளும் இன்றி முடி ஐதாவதே ஒரே ஓரு அறிகுறியாக இருக்கும். TSH என்ற இரத்தப் பரிசோதனையைச் செய்வதன் மூலம் உங்களுக்கு இந்தக் குறைபாடு இருக்கிறதா என்பதை சுலபமாகக் கண்டறியலாம்.

பொலிசிஸ்டிக் ஓவேரியன் சின்ரோம் (PCOS) என்ற நோயும் உங்கள் வயதில் இருக்க வாய்ப்புண்டு. எடை அதிகரிப்பு மாதவிடாய்க் குழப்பங்கள் முகப் பருக்கள் போன்ற அறிகுறிகள் இருக்கலாம். மருத்துவ ஆலோசனை மூலம் இந்தப் பிரச்சனை இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

வேறு பல காரணங்களையும் சொல்லலாம்.

அண்மையில் ஏதாவது உளவியல் தாக்கங்கள் இருந்திருந்தாலும் முடி அதிகமாக உதிரக் கூடும். அண்மையில் குழந்தை பிறந்திருந்தாலும் அக் காலத்தில் ஏற்படுகிற ஹோர்மோன் மாற்றங்களாலும் முடி உதிரக் கூடும். மாறாக கர்ப்பமாக இருந்த காலத்தில் முடி மிகவும் அடர்த்தியாக இருந்ததை நீங்கள் நினைவு கூரக் கூடும். தலையில் பங்கஸ் தொற்று நோய் போன்ற சரும நோய்கள் இருந்தாலும் அதிகமாக முடி உதிரும். தொற்று நோயல்லாத வேறு சரும நோய்களாலும் முடி உதிரலாம்.

எனவே உங்கள் முடி கடுமையாக உதிர்கிறது எனில் அது வேறு நோய்கள் காரணமாக இல்லை என்பதை மருத்து ஆலோசனை மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரைகளை உட்கொளு;ளும் பெண்களுக்கும் அதிகமாக முடி உதிர வாய்ப்பு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும். அதே போல உயர் இரத்த அழுத்தம், இருதய நோய்கள், மூட்டு நோய்கள், மனச்சோர்வு போன்ற நோய்களுக்கு உபயோகிக்கும் சில மருந்துகளும் முடி உதிர்தலை அதிகரிக்கும். நீங்கள் அவ்வாறு உபயோகித்தால் அதுதான் காரணமா என அறியவும் மாற்று மருந்துகளுக்கான ஆலோசனைக்காகவும் உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.

முடி உதிர்வதற்கு உங்கள் தவறான வாழ்க்கை முறைகளும் காரணமாகலாம். மிக நெருக்கமான பற்களை உடைய சீப்புகளைத் தவிர்த்து சற்று அதிக இடைவெளி உடைய பற் சீப்புகளை உபயோகியுங்கள். இறுக்கமான பற்கள் உடைய சீப்புகள் முடிகளை இழுத்து பிடுங்கிவிடவும் வாய்ப்புண்டு. அதேபோல முடியை அலங்கரிக்கும் போது மிக இறுக்மாக முடியைக் கட்டுவதும் கூடாது. இறுக்கமான பின்னல் இறுக்கமான போனி ஸ்டைல் போன்றவற்றை தவிர்த்து சற்று தொளதொளப்பாக முடியைச் சீவிக்க கட்டுவது நல்லது.

இரத்த சோகை போசாக்கு குறைபாடு போன்றவையும் காரணமாகலாம். எனவே விற்றமின்கள், இரும்புச் சத்து, புரதம்  போன்றவை உள்ள மீன், கீரை, பருப்பு பயறு வகைகள், காய்கறி பழவகைகள் உள்ளடங்கிய போசாக்கு உணவுகளை உண்பது அவசியம்.

முடி மீண்டும் வளர்வதைத் தூண்டுவதற்கான தலைக்கும் பூசும் சில மருந்துகள் இருக்கின்றன. உங்கள் முடி உதிர்விற்கு வேறு நோய்கள் காரணம் இல்லை எனில் மருத்துவர் அதை உங்களுக்கு சிபார்சு செய்வார்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

கர்ப்பகால உடல் நிறையை எவ்வாறு குறைப்பது?
புனிதா மட்டக்களப்பு

பதில்:- கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பது என்பது இயற்கையானது. கட்டாயம் அதிகரிக்கவே வேண்டும். நிறைமாதத்தில் ஒரு கர்ப்பணியின் எடையானது சுமார் 10-11 கிலோ அதிகரிக்கும். ஆனால் அதைவிட அதீதமாக அதிகரிப்பது கூடாது.

அவ்வாறு அதீதமாக அதிகரித்தால் அதற்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிந்தே சிகிச்சை செய்ய வேண்டும்.

எடை அதிகரிப்பானது படிப்படியாக அமையும். முதல் மூன்று மாதங்களில் எடை அதிகரிப்பானது சுமாராகவே இருக்கும். அக் காலப்பகுதியில் சுமார் 1-2 கிலோ அதிகரிப்பே காணப்படும். அதன் பின்னர் வாராவாரம் சுமார் 0.5 கிலோ அதிகரிக்கக் கூடும்.

இந்த எடை அதிகரிப்பில் 2 முதல் 2.5 கிலோவானது கருப்பையில் உள்ள குழந்தை மற்றும் நச்சுகொடிக்கானதாகும். சுமார் 2 கிலோ கர்ப்பிணியின் மார்பக மற்றும் ஏனைய ஏனைய திசுக்கள் அதிகரிப்பதால் ஏற்படுவதாகும். மிகுதி 1.25 கிலோவானது அம்னியோடிக் திரவம் மற்றும் அதிகரித்த ஏனைய நீர்களிலானதாகும்.

கர்ப்பத்தின் குறித்த காலத்தில் ஏற்படும் எடை அதிகரிப்பானது எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தால் காரணத்தைக் கண்டறிய வேண்டும்.

ஆனால் கருவறையில் இருப்பது இரணைக் குழந்தைகளானால் அதிகரிப்பு சற்று அதிகமாக இருக்கும்.

கர்ப்பகாலத்தில் திடீரென கூடுதலாக எடை அதிகரிப்பது நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம்.

அத்துடன் பிரஸர் அதிகரிப்போடு கூடிய (Pre eclampsia) பிறீஇக்கொலம்சியாவின் அறிகுறியாகவும் இருக்கலாம். இரத்த சிறுநீர் மற்றும் இரத்த அழுத்தப் பரிசோதனைகளை மருத்துவர் அல்லது தாதி உடாக செய்து காரணத்தைக் கண்டறிந்து அதற்கான பரிகாரம் தேடவேண்டும்.

நோய்கள் காரணமல்லாத எடை அதிகரிப்பு என்று அறிந்தால் அவர் தனது உணவு முறையில் ஆரோக்கியமான மாற்றங்களைச் செய்வதுடன் சற்று உடற் பயிற்சியும் செய்து தேவைக்கு அதிகமான எடை அதிகரிப்பை சரி செய்ய வேண்டும்.

உதாரணமாக எண்ணெயில் பொரித்த, வதக்கிய உணவுகளைத் தவிர்க்க வேண்டும். தினமும் பால் அருந்த வேண்டும். அதை ஆடை நீங்கிய பாலாக அருந்த வேண்டும்.

சீனி அதிகம் சேர்ப்பதையும் இனிப்பான பானங்களையும் தவிர்க்க வேண்டும். லட்டு, கேசரி,தொதல்,கேக், சொக்ளட், டோநட் போன்ற போன்ற இனிப்பான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

அதீத எடை உள்ளவர்கள் உப்பையும் குறைப்பது நல்லது. ஏனெனில் உப்பானது உடலில் மேலதிக நீர் தேங்கிநிற்கச் செய்யும். அது எடையை அதிகரிக்கும்.

உடலில் தேங்கியுள்ள மேலதிக கொழுப்பைக் குறைப்பதற்கு உடற் பயிற்சியம் அவசியம். பொதுவாக நீந்துவது கர்ப்ப காலத்திற்கு ஏற்றதாகும். ஆயினும் எத்தகைய உடற் பயிற்சி நல்லதென்பதை இட்டு மருத்துவரோடு கலந்தாலோசிப்பது நல்லது.

கலோரி வலுக் கூடிய உணவுகளை மட்டுமே அதிக எடையுடைய கர்ப்பணிகள் தவிர்க்க வேண்டும். ஆயினும் போசாக்கு நிறைந்த உணவுகளான பால் முட்டை இறைச்சி காய்கறிகள் பழவகைகள் பருப்பு பயறு வகைகள் போன்றவற்றை போதியளவு உட்கொள்வது அவசியம்.

எதிரொலி பத்திரிகையின் சொல்லுங்கோ டொக்டர் கேள்வி பதில் பகுதியில் வெளியானது

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

Older Posts »