கூன் விழுந்தவர் பாடியவரின் கூன் பிரச்சனைகள்;
‘அரிது அரிது மானிடராதல் அரிது
மானிடராயினும் கூன் குருடு
செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது…’ என்று கூன் விழுந்த பாட்டி ஒளவையார் பாடினார்.

கூன் விழுதல் பொதுவாக முதுமையில் வருவது. ஆனால் ஒளவையார் கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது என்று பாடினார். அதாவது பிறக்கும் போதே கூன் விழுவதைப் பற்றிப் பாடியுள்ளார். பிறப்பிலேயே வரும் நோய் என்று பாடியுள்ளதாக பொருள் கொள்ளலாம். உண்மைதான். பிறப்பிலும் இளவயதிலும் கூட முதுகு வளையலாம். ஆனால் அவ்வாறு வருவது குறைவு. முதுமையில் வருவதே அதிகம்.
முள்ளந்தண்டில் வளைவானது முன்பின்னாகவும் வரலாம். பக்கவாட்டிலும் வரலாம். முன்பின்னாக வருவதை kyphosis என மருத்துவத்தில் சொல்வார்கள்.

அதிலும் முதுவயதில் மேல் முதுகில் வரும் வளைவான கூனை வயது காரணமான Age related Hyperkyphosis என்பார்கள்.

இவர்களின் மேல் முதுகு முள்ளந்தண்டு எலும்புகள் வழமைக்கு மாறாக அதீதமாக முன்பக்கமாக வளைந்திருப்பதே கூனுக்கு காரணமாகும். மணிக்கணக்காக கணனியின் முன் உட்கார்ந்திருப்பவர்களுக்கும் இத்தகைய கூன் (Hyperkyphosis) வர வாய்ப்புண்டு.
பக்கவாட்டு வளைவானது சாதாரண கண்களுக்கு கூன் தெரிவதுபோல வெளிப்படையாகத் தெரிவது குறைவு. பக்கவாட்டு வளைவை மருத்துவத்தில் (Scoliosis) என்பார்கள்,
நாளாந்தம் பல கூன் விழுந்த முதியவர்களைக் காண்கிறோம். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். மிகுந்த சிரமத்துடுன் கைத்தடி ஊன்றி அடியெடுத்து நடந்து வருவார்கள்.
உண்மையில் முதியவர்களில் 20 முதல் 40 சதவிகிதமானவர்கள் கூன் விழுதலால் பாதிப்படைகிறார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன. அதிலும் முக்கியமாக பெண்களே பாதிப்படைவது அதிகம். இந்த வளைவிற்கு பாதிப்புற்றவர்களது வழமையான இருக்கும் மற்றும் நிற்கும் நிலைப் போக்குகள் (Posture) காரணமாக இருக்கக் கூடும். பெண்கள் அதிகமாகப் பாதிப்படைவதற்குக் காரணம் மகப்பேறு, பாலுட்டுதல், மற்றும் போதிய கல்சியம் உட்கொள்ளமை காரணமாக இருக்கிறது.
இருந்தபோதும் முக்கிய காரணம் வயதாவதன் காரணமாக அவர்களது முள்ளெலும்பில் ஏற்படும் பாதிப்புகளும் தாக்கங்களும்தான். முக்கியமாக அவர்களது முள்ளெலும்புகளில் ஏற்படும் உடைவுகளும் சேதங்களும்தான். கூனல் விழுந்தவர்களில் மூன்றில் ஒருவருக்கு முள்ளந்தண்டு உடைவு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. வயதாகும் போது முள்ளெலும்பில் ஏற்படும் உடைவுகள் விழுந்து அடிபடுவதால் ஏற்படுவதல்ல.
வயதாகும் போது அவர்களின் எலும்புகளில் உள்ள கல்சியம் சத்தின் அடர்த்தி குறைகிறது. இதனால் முள்ளெலும்புகளின் நலிவடைகின்றன. உடலின் பாரத்தை சுமக்க முடியாமல் அவை நசிந்து உடைகின்றன. இவ்வாறு எலும்பு நலிவடைவதற்கு வயது மட்டும் காரணமல்ல. ஸ்டிரொயிட் வகை மருந்துகளை நீண்ட காலம் தொடர்ந்து உபயோகிப்பதும் காரணமாகிறது.
உதாரணத்திற்கு சொல்வதானால் ஆஸ்த்மாவுக்கு உபயோகிக்கும் சில வகை இன்ஹேலர்களில் ஸ்டிரொயிட் மருந்துகள் இருக்கின்றன. ஆனால் இவை மிகமிகக் குறைந்த அளவில் இருப்பதால் பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால் பலருக்கு இன்ஹேலர்கள் உபயோகிக்க விரும்பமில்லாததால் மாத்திரைகளை உபயோகிக்கிறார்கள். இம் மாத்திரைகளில் உள்ள ஸ்டிரொயிட் மருந்துகளின் அளவு மிக அதிகம். அதனால் எலும்பு சிதைவு மட்டுமின்றி நீரிழிவு உட்பட பல நோய்கள் வரலாம்.
முள்ளந் தண்டுகளை இணைப்பது வட்டமான மென்மையான இடைத்தட்டங்கள் (Intervertebral disc) ஆகும். வயதாகும் இவை ஈரலிப்பை இழந்து சுருங்க ஆரம்பிக்கும். இவையும் கூன் முழுவதை மோசமடையச் செய்யும். இடைத்தட்டம் சுருங்குவதால் உடலைத் திருப்புவது குனிவது, வளைவது போன்ற பல்வேறு செயற்பாடுகளும் சிரமமாக இருக்கும். அவற்றை முழுமையாகச் செய்வது இயலாதிருக்கும்.
பொதுவாக வலிகள் படுத்து ஆறுதல் எடுக்கும் போது தணிந்து விடும். ஆனால் முள்ளந்தண்டு வளைந்திருப்பதால் படுக்கும் போது அவை அழுத்தப்படுவதால் வலி ஏற்படுவது அதிகம்.
மிக அரிதாக ஆனால் முள்ளெலும்புகளில் என்புப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. இதுவும் முள்ளெலும்பை வளையச் செய்யலாம்.
சிறிய கூனல் உடல் ரீதியாக பெரிய பாதிப்புகள் எதையும் ஏற்படுத்துவதில்லை. இருந்தபோதும் கடுமையான கூனலானது பல்வேறு பாதிப்புகளைக் கொண்டுவரும்.
கூனலானது உடல் தோற்றத்தை முற்று முழுதாகப் பாதிப்பதால் உளரீதியாகவும் மனத்தாக்கம் ஏற்படலாம். தனது தோற்றம் பற்றிய தாழ்வுணர்ச்சி, விழுந்துவிடுவோமோ என்ற பாதுகாப்பற்ற உணர்வு, மற்றவர்களில் தங்கியிருக்க வேண்டி இருக்கிறதே கவலை போன்றவை ஏற்படக் கூடும். உள வலியுடன் உடல் வலியையும் இணைந்து கொள்ளும்.
அத்துடன் கடுமையான கூனலானது சுவாசப்பையை அழுத்தக் கூடும். அவ்வாறு சுவாசப்பையில் கடும் அழுத்தம் ஏற்படுமாயின் சுவாசித்தலில் சிரமங்களும் ஏற்படக் கூடும்.
அவ்வாறே கடுமையான கூனலானது குடல் மற்றும் உணவுத் தொகுதிகளையும் அழுத்தக் கூடும். அவ்வாறு அழுத்தினால் உணவை விழுங்குவதில் சிரமங்கள் தோன்றக் கூடும். அத்துடன் வயிற்று ஊதல் பொருமல் ஏப்பம், நெஞ்செரிப்பு போன்ற அறிகுறிகளும் தோன்றுவதற்கான சாத்தியங்கள் உண்டு.
கூன் விழுவது முள்ளம்தண்டு எலும்புகளைப் பாதிப்பதுடன் அவற்றை இயங்கவைக்கும் தசைத் தொகுதிகளையும் நலிவடையச் செய்யும். இதனால் நாற்காலியிலிருந்து எழும்புவது சிரமமாக இருக்கும். கைபிடி உள்ள கதிரையாயின் அவற்றை கைகளால் பற்றிக் கொண்டே எழ நேரும்.
அத்துடன் இயல்;பாக நடப்பதிலும் சிரமங்கள் ஏற்படும். நடப்பதில் உள்ள சிரமங்கள் காரணமாக விழுவதற்கான சாத்தியங்கள். இத்தகைய விழுகைகளால் வேறு எலும்பு முறிவுகளையும் ஏற்படுத்துவதற்கான சாத்தியங்கள் மிக மிக அதிகமாகும்.
இவ்வாறான பல்வேறு பாதிப்புகளால் மரணத்திற்கான சாத்தியம் முன்நோக்கி நகர்கிறது.
வயது மூப்பினால் ஏற்படும் கூன் பிரச்சனையைத் தீர்க்க சிகிச்சைகள் ஏதும் பயன்படுமா. அல்லது ‘வயசு போனவர்தானே. இனி வைத்தியம் செய்து என்ன பிரயோசனம். ஏதோ இதோடை சமாளிக்க வேண்டியதுதான்… ‘ என்று சொல்லி கைகழுவிட வேண்டியதுதானா?
கைவிட வேண்டியதில்லை. பல வழிகளில் முயலலாம். பலன் கிடைக்கும்.
சத்திரசிகிச்சைகள் உள்ளன. ஆனால் முதியவர்களில் அதற்கான சத்திரசிகிச்சைகள் சாத்தியமில்லை அத்தகைய சத்திரசிக்சிசைகளைத் தாங்குவதற்கான உடல் வலிமை இருக்காது என்பதுடன் மயக்க மருந்து கொடுப்பதிலும் சிக்கல்கள் இருக்கலாம்.
முள்ளந்தண்டு வளைவுகளை நிமிர்த்துவதற்கான பட்டிகள் (back braces) கிடைக்கின்றன. இவற்றை அணிவதால் ஓரளவு நிவாரணம் கிடைக்கும்.
மிக முக்கியமானது முள்ளந்தண்டுகள் அவற்றை தசைநார்கள் ஆகியவற்றைப் பலப்படுத்துவதற்கான பல பயிற்சிகள் உள்ளன. இவற்றைத் தொடர்ந்து செய்வதன் நல்ல பலன் கிடைக்கும் என்பதை ஆய்வுகளும் உறுதி செய்கின்றன. இத்தகைய பயிற்சிகளை உடற் பயிற்சி மருத்துவம் செய்பவர்களின் அறிவுறுத்தலுடன் செய்வது நல்லது.
சுவாசப் பிரச்சனைகள் இருந்தால் சுவாசப்பையின் ஆற்றலை அதிகரிப்பதற்கான சுவாசப் பயிற்சிகள் தேவைப்படும்.
இவ்வாறான பயிற்சிகள் மூலம் கூன் உள்ளவர்கள் தங்கள் பாதிப்புகளை ஈடு செய்து மகிழ்வோடு வாழ முடியும்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
குடும்ப மருத்துவர்
0.00.0
Read Full Post »