Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஓகஸ்ட், 2007

மிஸ்டர் அன்ட் மிஸஸ் அய்யர்

வன்முறைகள் மலிந்துவிட்ட காலம் இது. மதரீதியாக, இனரீதியாக மொழிரீதியாக வன்முறைகள் மலிந்து கிடக்கின்றது. சகிப்புத்தன்மை என்பது தொலைந்தே போய்விட்டது. கிழக்கில் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையே மோதல், காஸ்மீரில் இந்துக்களுக்குமிடையே முஸ்லீங்களுக்குமிடையே சண்டை, பாலஸ்தீனத்தில் இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்குமிடையே போர் என எங்கு பார்த்தாலும் வன்முறையே கோலோச்சுகிறது. மனித நேயமும், புரிந்துணர்வும் பரஸ்பர நம்பிக்கையும், உதவி ஒத்தாசைகளும், மங்கிமறந்துவிட மாற்றுக் கருத்துக்களை மதிப்பதே மதிப்பற்ற செயல் போலாகிவிட்டது. அடிதடி, கொலை கொள்ளை மூலம் பயப்பீதியைக் கிளப்பி மேலாதக்கம் செய்ய முனைவதே விதிபோலாகிவிட்டது.

ஆனால் வன்முறையானது வன்முறையாளர்களுக்கு மட்டும் உவப்பானது அல்ல. வன்முறைக்கு எதிரான கலையாக்கம் என்ற லேபலுடன் வன்முறைகளை விலாவாரியாகச் சித்தரித்து பணப்பை நிரப்ப முயலும் சினிமாக்காரர்களுக்கு அது பொன்முட்டையிடும் வாத்தாகும். தமிழ்ச் சினிமாவில் இதற்கு உதாரணங்க் சொல்லி அடங்காது.
மிஸ்டர் அன் மிஸஸ் அய்யர் கூட வன்முறை பற்றிய படம்தான். ஆனால் இது வன்முறையைச் சித்தரிக்கும் படம் அல்ல என்பது கவனிக்கத்தக்கது. வன்முறையை நேரடியாகக் காட்டாமலே அது பற்றிய உணர்வை எம் மனதில் சுட்டெரிக்கும் தீயாகக் கொழுந்துவிட்டு எரியச் செய்கிறார் இயக்குனரான அபர்ணா சென். அது வன்முறைக்கு எதிரான உணர்வை எம்மில் துளிர்விடச் செய்கிறார்.

ஒரு சிறிய உதாரணம் வன்முறைக்கும்பல் ஒன்று வயோதிபரான இஸ்லாமியரை பஸ்ஸிலிருந்து விசாரணைக்காக அழைத்துச் செல்கிறது. நடைபெறப் போகும் நிகழ்வின் தாக்கத்தை உணராத அவரின் மனைவி அவரது கண்ணாடியையும் பற்செற்றையம் அவசியத்துக்கு உதவுமே என அப்பாவித்தனத்துடன் அவரிடம் கொடுத்து விடுகிறாள். மற்ற எல்லோர் முகத்திலும் மரணபீதி தாண்டவமாடுகிறது.
இன்னோர் காட்சியில் பத்திரிகைக்காரன் செய்தி எழுதுகிறான். ‘முஸ்லீம் வயோதிபரின் கண்ணாடியும் பற்செற்றும் ஓரை ஓரத்தில் அனாதரவாய் விழுந்து கிடந்தன…’. அவர் கொலையுண்ட சம்பவம் எமக்கு எங்குமே காட்டப்படவில்லை. ஆனால் அவர் கொலைசெய்யப்பட்ட செய்தி புரிந்துவிட, அது தந்த சோகமும் அதன் கோரமும் எம்மனதை கனமாக அழுத்திப் பழிகிறது. வன்முறைக்கு குழந்தைகள், வயோதிபர், பெண்கள், நோயாளிகள் என்ற வேறுபாடே கிடையாது.

திரைப்படத்தின் கதை புதுமையானது என்று சொல்லிவிட முடியாது. வன்முறை நிகழ்வுகளின் இரு கோடிகளில் இருக்கும் சமூகங்களான இந்து முஸ்லீம் மதங்களைச் சேர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே சந்தேகங்கள் மலிந்த சூழ்நிலையின் மத்தியில் மொட்டவிழ்க்கும் உறவை மெல்லெனப் பேசுவதுதான் இத்திரைப்படம். ஆனால் வழமையான தமிழ்த்திரைப்படக் காதல் கதை போன்றது அல்லது என்பதும் குறிபபிடத்தக்கது.

அழகிய இளம் தாயான மீனாட்சி அய்யர் தனது ஒன்பது மாதக் குழந்தையான சந்தானத்துடன் பயணமாகிறாள். இந்தியாவின் கண்கவர் வட எல்லை மலைப்பிரதேசத்திலிருக்கும் தாய்வீட்டிலிருந்து கணவர் இருக்குமிடமான கல்கத்தாவிற்குப் பிரயாணம் செய்கிறாள். அவள் தாய்மொழி பேசும் பிராமணப் பெண். மகள் தனியே பயணமாகிறாளே என்ற கவலை அவளது தாய்க்கு. பஸ்நிலையத்தில் தற்செயலாகச் சந்தத்த நண்பர் மூலம் ராஐ¡ என்ற புகைப்படக் கலைஞனின் அறிமுகம் கிடைக்கிறது. அவனும் கல்கத்தாவிற்கே செல்ல இருப்பதால் வழியில் அவளுக்கு உதவியாக இருக்க ஒப்புக் கொள்கிறான்.

அழகிய மலைகளுடே பஸ் பயணிக்கிறது. உயர்ந்த மரங்களின் செழுமையும் நீ£ரோடைகளின் சலசலப்பும், மேகம் மூடிய வானின் குளிர்மையும் கண்ணுக்கு இதமளிக்கின்றன. ஹெயர்ப்பின் வளைவுகளுடே பஸ் ஒளிந்து மறைந்து பயணிக்கிறது. இயற்கையின் அழகையெல்லாம் கெளதம் கோரின் கமரா அற்புதமாகப் பதிவு செய்கிறது. இயற்கைக் காட்சிகளை மாத்திரமன்றி மனிதர்களின் உணர்வுகளையும் அவரது கமரா ரசனையோடு உள்வாங்குகிறது.

இளைஞர்கள், யுவதிகள், இளம் தம்பதியினர், வயோதிபர் என பலவகைப்பட்டவர்கள் நிறைந்த பஸ். ஆட்டம் பாட்டம் சரஸம் என அமைதியான இனிமையான சூழலில் அது பயணிக்கிறது.
பஸ்ஸில் நடக்கும பல விடயங்களையும் இயக்குநர் நிதானமாகவும் நுணுக்கமாகவும் பதிவு செய்கிறார். இளம் பெண்கள் அடிக்கும் கொட்டத்தைப் பொறுக்கமுடியாத முதியவர் மனைவிக்கு ‘எமது கலியாணத்தின் போது உனது கைகள் கூட பர்தாவுக்குள் மறைந்து கிடந்தன…’ என்று கூறுகின்றார். அந்தக் காலத்தின் மேன்மை பற்றி அவர் சொல்லும்போது அவளின் வெறுமையான கைகள் அவருக்கு எதையோ எடுத்துக் கொடுப்பது எமக்குத் தெரிகிறது.

அவர் காட்டியது அவ்வளவுதான்.
ஆனால் எமது சிந்தனை உலகம் உசுப்பிவிடப்படுகிறது.
‘காலம் மாறும் போது எமது எண்ணங்களும் செயல்களும் பண்பாடும் கூட மாறுகிறது. வயோதிபர்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. அவர்களும் மாறவே செய்கிறார்கள். அது படிப்படியான மாற்றம். ஆனால் இளைஞர்களின் துரித மாற்றம் வயதானவர்களுக்கு உவப்பானதாக இல்லை. தமது ‘பொற்காலம்’ பற்றிய உன்னத கனவுகளிலேயே வயதானவர்கள் வாழ்கிறார்கள்’ என்பதை சொல்லாமல் சொல்லி விடுகிறார்.

பிரயாணத்தின்போது மீனாட்சியின் குழந்தை அழுது முரண்டு பிடிக்கிறது. குழந்தையைப் பார்ப்பதற்கும், குழந்தைக்கு அவள் உணவு தயாரிப்பதற்கும் ராஐ¡ உதவுகிறான். அவள் மனத்தில் அவன் பற்றி நல்லெண்ணம் வளர்கிறது. நன்றியும் கூறுகிறாள்.

பஸ் ஓரிடத்தில் திடீரென நிறுத்தப்படுகிறது. தனிப்பட்ட காரணங்களுக்காக ஒரு முஸ்லீம் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இனக்கலவரம் வெடித்துள்ளது. அங்கு பேசப்படுவதிலிருந்து தெரிய வருகிறது. மாற்று மதத்தவரை பழிவாங்கும் வெறி அப்பிரதேசத்தில் தலைவிரித்தாடுகின்றது. இவர்கள் பஸ் நின்றது ஒரு இந்துக் கிராமம். கலவரக்காரர்கள் எந்த நேரமும் வரலாம் என்பதால் எல்லோரையும் பஸ்சுக்குள்ளேயே இருக்கும்படி பாதுகாப்புத் தரப்பினர் கூறிச் செல்கின்றனர். அப்பொழுது ராஐ¡ தான் ஒரு முஸ்லீம் என்பதை அவளுக்கு வெளிப்படுத்தி, தான் அங்கிருந்து புறப்படுவதே தனக்கும் ஏனைய பிரயாணிகளுக்கும் பாதுகாப்பானதெனக் கூறி விடை பெற முயல்கிறான்.

அவள் முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள். கவலையினால் அல்ல! அவள் முகத்தில் இவ்வளவு நேரமும் இருந்த நட்புத் தன்மை விலக அந்நியத்தன்மை குடிகொள்கிறது.

‘அட ராமா, இவன் கொடுத்த தண்ணீரைக் குடித்தேனே…’
என்பதுதான் அக் கணத்தில் அப்பிராமணப் பெண்ணில் எழுந்த முதல் எதிர்வினையாக இருந்தது. அவனுக்கு ஏதும் ஆபத்தாக நடந்துவிடுமா என்ற அக்கறைக்கும் மனிதாபமானத்திற்கும் மேலாக தனது ஆசாரம் கெட்டுவிட்டதான உணர்வுதான் அவளது முதற் கவலையாக இருந்ததைக் காண்கிறோம்.

இதற்கிடையில் கலவரக் கும்பல் ஒன்று தீப்பந்தங்களுடன் இவர்கள் பஸ்ஸைச் சூழ்ந்து கொள்கிறது. பெயர்களைக் கேட்டு ஒவ்வொருவரையும் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என அடையாளம் காண முயல்னகின்றார்கள். பெயர்களில் சந்தேகம் ஏற்பட்ட போது சுன்னத் செய்திருக்கிறதா எனப் பரிசோதித்துப் பார்த்து அடையாளம் அளவிற்கு அவர்களின் குரோத உணர்வு உச்சத்திலிருக்கிறது. இஸ்லாமியர் என இனங்கண்ட வயோதிபரை விசாரணைக்காக இழுக்காத குறையாத அழைத்துச் செல்கிறார்கள். அது கண்டு இவன் பதைத்து எழ முயல எதுவும் பேசாது குழந்தையை அவன் கையில் திணிக்கிறாள் மீனாட்சி.

இதற்கிடையில் ஒரு வன்முறையாளன் இவர்கள் அருகே வந்து பெயரைக் கேட்க, அவன பதிலளிக்கத் தயங்க, மிஸ்டர் அன்ட் மிஸஸ் அய்யர் சுப்பிரமணிய அய்யர்’ எனத் தயக்கமின்றித் தெளிவாகப் பதில் சொல்கிறாள் அவள். கடும் சார உணர்வும் தான் பிராமண சமூகத்தைச் சார்ந்தவள் என்ற உயர் எண்ணம் கொண்ட அப்பெண்ணில் அக்கணத்தில் இயல்பாக எழுந்த மனிதாபிமான உணர்வை மிக அற்புதமாக தன் முகத்தில் வெளிப்படுத்துகிறார் கொங் கொணா சென். இவர் அபர்ணா சென்னின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. தோற்றத்திலும் நடிப்பிலும் அசல் தமிழ்ப்பிராமணப் பெண்ணாகிவிடுகிறாள்.

இக்கட்டான தருணத்தில் இவ்வாறு அவனது உயிரை அவள் காப்பாற்றி விடுகின்றாள். இப்பொழுது அவளைப் பாதுகாக்க கல்கத்தாவிற்கு கொண்டு செல்வது கடமைபோல் ஆகிவிட்டது. இடையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படுகின்றது. அங்கு சந்திக்க ஒரு காவல்துறை அதியாரி அவர்களை ஒரு காட்டுப் பங்களாவில் தங்க வைப்பதற்கும் பின் தங்கள் வாகன அணியில் கல்கத்தாவிற்கு கொண்டு செல்வதற்கும் உதவி செய்கிறான்.

இன்னும் நடக்கும் சின்னச்சின்ன சம்பவங்கள் அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவும், உணர்வுகளைப் பரிமாறிக் கொள்ளவும் நெருங்கிய சிநேகமாகவும் உதவுகிறது. இக்கட்டான சூழலில் அகப்பட்டுக் கொண்ட அவர்களின் நிஐ வாழ்வின் சோகமும் சோதனைகளும் கலந்த சில கணங்களை நம்பகத்தன்மையடனும் கலாபூர்வமாகவும் வெளிப்படுத்துவதில் அபர்ணா சென் வெற்றி காண்கிறார். கமெராவும் காவியம் படைக்கக் கைகொடுக்கிறது.

ராஐ¡வாக நடிப்பது ராகுல் போஸ். ஆர்ப்பாட்டம் இல்லை. மிக இயல்பான வாழ்வது போன்ற நடிப்பு. நடிகர், எழுத்தாளர், இயக்குநர் என பலதரப்பட்ட ஆளுமை கொண்டவர் ராகுல் போஸ் என அறிகிறேன்.
கல்கத்தாவில் ரயில் நிற்கிறது. நிஐ அய்யர் மனைவியையும் குழந்தையையும் அழைத்துச் செல்ல ரயில் நிலையத்திற்கு வந்திருக்கிறான். மீனாட்சி ரயிலிலிருந்து வெறுங்கையுடன் இறங்கி வருகிறாள். ‘எங்கே குழந்தை’ என்று கேட்ட கணவனுக்கு அவள் மறுமொழி சொல்வதற்கிடையில் ராஐ¡ குழந்தையுடன் இறங்கி வருகிறான். காத்து நிற்கும் தந்தையிடம் இவ்வளவு நேரமும் தந்தைபோல் இஇருந்து பாதுகாத்தவன் குழந்தையை ஒப்படைக்கின்றான். இறுதியில் மிஸ்டர் அய்யராக இவ்வளவு நேரமும் இருந்தவன் நிஐ அய்யரிடமும் மிஸஸ் அய்யரிடமும் குழந்தை சந்தானத்திடமும் விடைபெற்றுச் செல்லும் காட்சி பார்வையாளர்களின் உள்ளத்தை அழுத்திப் பிழிகிறது. அரிதான அனுபவம் எமக் கிடைக்கிறது. இன மத மொழி பேதங்களைக் கடந்ததுதான் அன்பும், நட்பும் என்பதைப் புரிந்து கொள்கிறோம்.

படம் மதரீதியான வன்முறை பற்றியது தான். ஆனால் அவை எழுவதற்கான காரணங்களை ஆராயவோ அல்லது அதன் நியாயஅநியாயங்களைப் பேசவோ அது முன்வரவில்லை. வன்முறையின் கோர முகம் எவ்வாறு தனிமனிதர்களையும் சமூகத்தையும கொத்திக் குதறிக் கூறுபோடுகிறது என்பதை கலா பூர்வமாக சித்தரித்துக் காட்டுகிறது. ஆனால் வன்முறையையும் மீறிய மனிதாபிமானம் மக்களிடையே இன்னமும் மரணித்து விடவில்லை என்பதைத் திரைப்படம் உணர்த்துவது நம்பிக்கையளிக்கிறது. படம் பிரச்சினைக்கான எந்த தீர்வையும் கூறி அதிமேதாவித்தனம் காட்ட முயலவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
படம் இந்தி நடிகர்களைக் கொண்டு வட இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆங்கிலப்படம். ஆயினும் பாத்திரங்கள் தங்களுக்கிடையே தத்தமது தாய்மொழியிலே இயல்பாகப் பேசிக் கொள்கிறார்கள். வசனங்கள் மிகக் குறைவாக இருக்க காட்சிகள் ஊடாகவே படம் சொல்லப்படுவதனால் தெரியாத மொழிகளும் எமக்குப் புரிவதற்குத் தடையாக இல்லை. எனினும் ஆங்கில ளரடிவவைடநள காட்டப்படுவதால் மேலும் தெளிவாகப் புரிகிறது. இடையே மீனாட்சி தனக்குள்ளும், தனது பெற்றோருடனும், குழந்தையுடனும் தமிழிலேயே பேசிக்கொள்வது எமக்கு உவப்பாக இருக்கிறது.

இன்றைய சூழலில் மிஸ்டர் அன்ட் மிஸஸ் அய்யர் எமக்கு மிக முக்கியமான படம். தங்கள் மதமும் தங்கள் மொழியும் தங்கள் இஇனமுமே தமது அக்கறைக்கு உரியதாகவும் பெருமை சார்ந்ததாகவும் எண்ணிக்கொண்டு மற்றவர்களை இளக்கமாகவும் ஏளனமாகவும் பார்ப்பது இலங்கையர் எல்லோருக்கும் சகஐமாகி விட்டது. அடித்து உதைத்தேனும் மேலாண்மை பெற ஒவடவொரு இனமும் வெறியோடு முயல்கிறது. மற்றவர்களும் சமமான உரிமைகளும் பண்பாட்டுப் பெருமையும் கொண்டவர்கள் என்பதை எப்போது உணர்ந்து கொள்ளப் போகிறோமோ?. ஒவ்வொரு மனித உயிரும், மனிதாபிமான உணர்வும் எல்லாவற்றையும் விட பெறுமதிமிக்கது என்பதைக் கூறும் இப்படம் எமக்கு அவசியமானதுதான். இலங்கையில் திரை அரங்குகளில் வெளியாகவில்லை. ஆனால் வீடியோ ஆகவும் சீடி ஆகவும் கிடைக்கிறது. தப்பவிட்டு விடாதீர்கள்.
எம்.கே.முருகானந்தன் (கொழும்பு)

நன்றி- pathivukal.com

Read Full Post »

>

கல்விப்பணிக்கு தன்னை அர்ப்பணித்த அதிபர் மணியம் கணபதிப்பிள்ளை

டாக்டர் எம்.கே.முருகானந்தன்

இன்று (26.08.2007) 45 ஆம் நாள் திதி

தும்பளை சிவப்பிரகாச வித்தியாலயத்தின் அதிபர் மணியம் கணபதிப்பிள்ளை சென்ற மாதம் 12.07.2007 அன்று அகால மரணம் அடைந்தார். கோவிலுக்குச் செல்லும் வழியில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் அது. மாஸ்டர் என எம் எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் ம. கணபதிப்பிள்ளையின் மறைவு அவரோடு தொடர்புள்ள பல்லாயிரக்கணக்கான உள்ளங்களை உலுக்கிய மிகத் துயரமான சம்பவமாகும். அவரது திடீர் மறைவானது உற்றார் உறவினர்களிடையே மாத்திரமின்றி நண்பர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், ஊரவர்கள், கல்விச் சமூகத்தினர், நிர்வாக தரத்தினர் எனப் பல்வேறு மட்டங்களிலும் நிரப்ப முடியாத வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது என்ற உணர்வை ஏற்படுத்திவிட்டது.

இவர் அமரர் மணியம் தையல்நாயகி தம்பதியின் அருந்தவப் புதல்வனாக 27.08.1951 ஆம் ஆண்டு வடமராட்சி தும்பளையின் நெல்லண்டைப் பகுதியில் பிறந்தார். சிறு வயதிலேயே துடியாட்டமும் செயலூக்கமும் கொண்டவராக விளங்கிய இவர் பார்வைக்குக் குளிர்ச்சியாகவும் தளதளப்பாகவும் நல்ல நிறத்துடனும் இருந்ததால் அய்யர் எனச் செல்லமாக அழைக்கப்பட்டார். இவரது தகப்பனார் மணியம் மாவத்தகமவில் பிரபல வர்த்தகராக விளங்கியவராவார். இவருடன் இரு சகோதரிகள் கூடப்பிறந்தனர்.

தனது ஆரம்பக் கல்வியை யாழ்.தும்பளை சிவப்பிரகாச மகா வித்தியாலயத்தில் பெற்ற பின்னர் ஹாட்லிக் கல்லூரியில் இணைந்து தனது இடைநிலை மற்றும் உயர் கல்வியை சிறப்புடன் கற்றுத் தேர்ந்தார்.
இதன் பின்னர் தும்பளை நெல்லண்டையைச் சேர்ந்தவரும் கண்டி செல்வம் ஸ்டோர்ஸ் பிரபல வர்த்தகருமான தட்சணாமூர்த்தி அன்னலட்சுமி தம்பதியின் சிரேஷ்ட புதல்வியான தனலட்சுமியைத் திருமணம் செய்து கொண்டார். மனம் இணைந்த இவர்களது இனிய இல்லற வாழ்வின் பயனாக மதிவதனி, மதிவாணன் எனப் பெயர் சூட்டப்பட்ட மகளும் மகனும் பிறந்தனர்.
குழந்தைகள் பிறந்த பின்னர் இவரது மனைவியும் ஆசிரிய சேவையில் இணைந்து கொண்டதன் மூலம் இருவரும் ஒருமித்துப் பணியாற்றித் தமது கல்விப் பணிக்கு மேலும் மெருகூட்டினர்.

தான் முழு விருப்போடு இறங்கிய ஆசிரியத் துறையில் மிக்க அக்கறையோடும் அர்ப்பணிப்போடும் பணியாற்றியதால் மாணவர்களிடையேயும், பெற்றோர்களிடையேயும் எந்நாளும் பெரு மதிப்புப் பெற்றார். முக்கியமாக 5 ஆம் ஆண்டுப் புலமைப் பரீட்சைக்கு மாணவர்களைத் தயார்படுத்துவதில் இவரது திறமை பெரிதும் வெளிப்பட்டது. இவரது வழிகாட்டலின் கீழ் பெருந் தொகையானோர் வருடா வருடம் அப்பரீட்சையில் திறமையாகச் சித்தி எய்தினர். இவரது ஆசிரியப் பணிப் பிரவேசமானது 1972 ஆம் ஆண்டு அவரது 21 ஆவது வயதில் யாழ். மருதங்கேணி இந்து தமிழ்க் கலவன் பாடசாலை ஊடாக அமைந்தது. ஓராண்டு காலம் அங்கு பணியாற்றிய பின்னர் தனது பிறந்த ஊருக்கு சேவையாற்று முகமாக யாழ். தும்பளை சிவப்பிரகாச மகா வித்தியாலயத்திற்கு மாற்றம் பெற்று வந்தார்.

1974 முதல் கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சிபெற்ற பின்னர் தை 1 ஆம் திகதி 1976 இல் இரத்தினபுரி டால் தமிழ் மகா வித்தியாலயத்தில் பயிற்றப்பட்ட ஆசிரியராகக் கடமை ஏற்றார். அங்கிருந்து அநுராதபுரம் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு 1976 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் இடமாற்றம் பெற்று வந்தார். செய்யும் தொழிலே தெய்வம் என அர்ப்பணிப்போடும் கடமை உணர்வோடும் பணியாற்றிய இவர் பணியாற்றிய இடங்களில் எல்லாம் மதிப்பும் மரியாதையும் பெற்ற ஆசிரியராக விளங்கியமை குறிப்பிடத்தக்கது. ஈற்றில் மாற்றம் பெற்று தும்பளை சிவப்பிரகாச மகா வித்தியாலயத்திற்கு வந்தது முதல் தனது இறுதிக் காலம் வரை அங்கேயே பணியாற்றி அதன் உச்ச வளர்ச்சிக்கு தனது முழுப் பங்களிப்பை வழங்கியது குறிப்பிடத்தக்கது. ஆசிரியராகவும், பின் 27.04.1991 இல் பிரதி அதிபராகவும், 16.01.1992 முதல் தனது இறுதி மூச்சுவரை அதிபராகவும் தன்னை அப்பாடசாலையோடு முற்று முழுதாக இணைத்துக்கொண்டார். தான் ஆரம்பக் கல்வி பெற்ற அதே பாடசாலையில் தொடர்ந்து 25 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி அதன் அளப்பரிய துரித வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தமையால் அப்பிரதேச மக்கள் அனைவரும் இவரில் அன்பும் பெரு மதிப்பும் வைத்திருந்தனர்.

பாடசாலை வளர்ச்சி
இவர் தும்பளை சிவப்பிரகாச மகா வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்று வந்த காலத்தில் அது மகாவித்தியாலயமாக உயர்ச்சி பெற்றுக் கொண்டது. இவர் அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர் இவரது ஆளுமையும், தனிப்பட்ட செல்வாக்கும், எல்லோரையும் அணைத்துச் செல்லும் பண்பும் பாடசாலையின் துரித வளர்ச்சிக்கு உந்து சக்தியாக அமைந்தன. இவரது தலைமையின் கீழ் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஆசிரியர்கள், ஒத்தாசையுடன் பாடசாலை மாணவர்களின் கல்வித் தரம் உயர்ந்தது. பரீட்சைப் பெறுபேறுகள் மிகவும் உச்சத்தை எட்டின. பாடசாலை மாணவர்களினது எண்ணிக்கை அதிகரித்தது. இதனால், வகுப்புகளின் எண்ணிக்கையும் ஆசிரியர்களினது எண்ணிக்கையும் அதிகரித்தன.

பாடசாலையின் பௌதிக வளங்களின் விருத்திக்கும் இவர் காரணமாயிருந்தார். பல மாடிக் கட்டிடங்கள் எழுந்தன. அண்மையில் நிகொட் நிறுவனத்தின் உதவியுடன் நிறுவப்பட்ட கட்டிடத்திற்கு பாடசாலை நிறுவுநர் அமரர் சிதம்பரப்பிள்ளையின் நாமத்தைச் சூட்டி பாடசாலையின் பாரம்பரியத்தை காலத்தால் மறக்கப்படாது நிலைநாட்டியமை முக்கிய நிகழ்வாகும். விளையாட்டு மைதானத்திற்கான நிலம் பெறப்பட்டது. கணினி நிலையம் உருவானது. தளபாடங்களும், பாடசாலைக்கான உபகரணங்களும் விளையாட்டு உபகரணங்களும் போதிய அளவில் பெறப்பட்டன. நூலகம் புதுப்பொலிவு பெற்றது. ஒரே வார்த்தையில் சொல்வதானால் கணபதிப்பிள்ளை மாஸ்டரின் காலம் பாடசாலையின் பொற்காலம் எனலாம்.
தும்பளையில் வாழும் பழைய மாணவர்களை ஒன்று சேர்த்து பழைய மாணவர் சங்கத்தை உதயமாக்கியதன் மூலம் தனது தன்னலமற்ற சேவைக்கு அனைவரினதும் ஒத்துழைப்பையும் பெற்று பாடசாலை வளர்ச்சிக்கு மேலும் உந்துசக்தியை பெற்றுக் கொண்டார்.

மாணவர்களுடன் நெருங்கிப் பழகியதால் அவர்கள் ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட தேவைகளையும் உணர்வுகளையும் இவரால் அறிய முடிந்தது. வசதி குறைந்த, படிப்பைத் தொடர வசதியில்லாத பிள்ளைகளுக்கு கொப்பி, பேனா, புத்தகங்கள் மற்றும் சீருடை போன்றவற்றை நலன் விரும்பிகள் ஆதரவுடன் பெற்றுக் கொடுத்ததன் மூலம் அவர்கள் அறிவுக் கண்ணைத் திறந்து வைத்து வாழ்வை வளமாக்கியதை பலர் கண்ணீர் மல்க நன்றி உணர்வுடன் நினைவு கூர்கின்றனர்.

2004 ஆம் ஆண்டு இலங்கையை உலுக்கிய ஆழிப்பேரலை அநர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வடமராட்சி மக்களுக்கு உதவுமுகமாக தான் பணியாற்றிய பாடசாலையில் முகாம் அமைத்து அவர்களின் துயர் துடைத்தமை போற்றற்குரியது. பாடசாலை வளர்ச்சியில் இவர் பெற்ற வெற்றிக்கு மிக முக்கிய காரணம் பாடசாலையையும் அதனுடைய சமுதாயமான தும்பளைக் கிராமத்தையும் ஒருங்கிணைத்தமையாகும். “இது எமது பாடசாலை. இதன் வளர்ச்சி எமது பிள்ளைகளின் வளர்ச்சியாகும். ஈற்றில் அது எமது சமுதாயத்தின், எமது கிராமத்தின் எழுச்சியைக் கொண்டுவரும்” என்ற உணர்வை ஏற்படுத்தியதாலே தான் பெருவளர்ச்சி சாத்தியமாயிற்று.

சமூக சேவை
சமூகப் பார்வையும், பொதுநல நோக்கும் பரந்த செயற்பாடும் இவரோடு இணைந்து பிறந்தவை. தனது தொழில் வாழ்வின் ஆரம்ப காலத்திலேயே தமிழர் ஆசிரியர் சங்க உபபொருளாளராகப் பணியாற்றியுள்ளார்.
தும்பளை நெல்லண்டை பத்திரகாளி அம்மன் தேவஸ்தான பரிபாலன சபையின் ஆரம்ப கால அங்கத்தவரான இவர் நெல்லண்டை சனசமூக தலைவராகவும், இடைக் காலத்தில் தும்பளை கணக்கியாவத்தை சித்திவிநாயகர் ஆலய பரிபாலன சபையின் செயலாளராகவும் தொண்டாற்றியுள்ளார்.

தனது பழைய மாணவர்களாகிய இன்றைய இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக அரும் பாடுபட்டார். சாதி, மத, சமூக ஏற்றத் தாழ்வுகளைக் கருதாமல் தனது புனிதமான சேவையை அப்பகுதி மக்களுக்கு ஆற்றி அவர்களின் பேரன்பிற்குப் பாத்திரமானார். எத்தனையோ சோதனைகளும் வேதனைகளும் இடர்களும் சமூகத்தில் ஏற்பட்டு மனித வாழ்வே நெருக்கடிக்கு உள்ளான போதும் தனது மண்ணையும், மாணவர் சமூகத்தையும் உற்றார், உறவினர்களையும் வாழவைக்க வேண்டும் என்ற உன்னத இலட்சியம் காரணமாக தான் பிறந்த மண்ணை விட்டு விலகாமல் அங்கேயே அவர்களுடனேயே வாழ்ந்து அந்த மண்ணிற்கே உரமான வாழ்வு எல்லோருக்கும் முன்னுதாரணமாகும்.

விளையாட்டுத் துறை
கல்வித் துறையிலும், சமூக சேவையிலும் மாத்திரமின்றி விளையாட்டுத் துறையிலும் இவருக்கு ஆழ்ந்த ஈடுபாடும் ஆற்றலும் உண்டு. வருடாவருடம் தும்பளை கிழக்கு சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட மெய்வல்லுநர் போட்டிகளில் தனது முழுமையான திறமைகளை வெளிப்படுத்தி அதன் வெற்றியை நிலைநாட்டியமை குறிப்பிடத்தக்கது. சிறந்த கரப்பந்தாட்ட, துடுப்பாட்ட வீரனாகவும், திகழ்ந்த இவர் நெல்லண்டை இளைஞர் கழகத்தினால் 2001, 2002 ஆண்டுகளில் நடாத்தப்பட்ட மின்னொளியிலான கரப்பந்தாட்ட நிகழ்வினை நெல்லண்டை பத்திரகாளி அம்மன் வீதியில் தலைமைதாங்கி சிறப்பாக நடத்தி வைத்தமை நினைவு கூரத்தக்கது. தும்பளை நாவலர் விளையாட்டுக் கழகத்தின் பிரதம ஆலோசகராக சேவையாற்றிய இவர் கழகத்தின் அனைத்துச் செயற்பாடுகளிலும் துடிப்புடன் பங்குபற்றி அதன் வெற்றிக்குத் துணையானார்.

இத்தகைய, ஆளுமை கொண்ட கணபதிப்பிள்ளை மாஸ்டரின் இழப்பானது அப்பாடசாலைக்கு மாத்திரமின்றி வடமராட்சி மக்களுக்கும், கல்வியிலும் சமூக மேம்பாட்டிலும் அக்கறை கொண்ட அனைவருக்கும் பேரிழப்பு என்பதில் சந்தேகமில்லை. அவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போமாக.

நன்றி- தினக்குரல் 25.08.2007

Read Full Post »

நிழல்யுத்தம்!

எமது வாழ்வின் இன்னுமொரு பரிமாணம்! அஜீவனின் இரு குறும்படங்கள்!

எழுதியவர்: டொக்டர்எம்.கே.முருகானந்தன்

மேற்குலக நாடுகளுக்கு புலம் பெயர்வது. இதுதானே எம்மவர்கள் பலரினதும் கனவாக, இலட்சியமாக எல்லாமாகவே உள்ளது.

ஆம்! இலங்கைத் தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பெரும்பாலோரினதும் கனவுகளிலும் கற்பனைகளிலும் வலம் வருவது மேற்குலக நாடுகளின் பொருளாதார வசதிகளும், ஆடம்பரமும், படோபடமும் கொண்ட வழமான வாழ்க்கைதான். பெற்றோர்களும் கூட தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டால் தமது கடமை முடிந்துவிடும் என எண்ணுகிறார்கள். இதன் காரணமாக பல இளம் பெண்கள் தமது கணவன்மாரோடு அல்லது வருங்கால கணவன்மாரோடு இணைந்து கொள்ள பறந்து செல்லுகிறார்கள். பறந்து செல்லும் அவர்கள் எதிர்கால வசந்தங்கள் பற்றிய கனவுகளோடேயே பறந்து செல்கிறார்கள்.

ஆனால் அவர்கள் அங்கு சென்றதும் அவர்களது கனவுகள் மெய்ப்படுகின்றனவா? அல்லது அவை யாவுமே அடித்து நெருக்கப்பட்டு கசப்பான வாழ்வு அவர்களுக்குக் காத்திருக்கிறதா?

இப் பிரச்சினை பற்றிய ஒரு கலைத்துவமான பார்வையை எம் முன் வைக்கிறது அஜீவனின் ~நிழல் யுத்தம் என்ற குறும்படம். ராதிகா இத்தகைய கற்பனைக் கோட்டைகளுடன் ஜேர்மன் மண்ணில் கால் பதித்திருக்கிறாள். அங்கு அவளது கணவன் பகல் இரவு தெரியாத அளவிற்கு வேலை செய்து உழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறான். வந்த கடனைத் தீர்க்க வேண்டும், பெற்றோர்களை வசதியாக வாழ வைக்க வேண்டும், தங்கைகளின் திருமணங்களை நடத்தப் பணம் அனுப்ப வேண்டும், இவற்றிக்காக மாடாக உழைக்கிறான். எல்லாப் புலம் பெயர்ந்தவர்களின் வாழ்க்கை போலவே அவனது வாழ்வும் இயந்திரமயமாகிவிட்டது.

இயந்திரங்களிடையே இன்னுமொரு இயந்திரம் போல் பாலச்சந்தினை; சிக்கி நாள் முழுவதும் அல்லாடும் காட்சியுடன் படம் ஆரம்பமாகிறது. தனிமை, நீண்ட நேர கடின உழைப்பு, அனுதாபம் காட்டாத கடுமையான மேலதிகாரி என அவன் உடலும் உள்ளமும் சோர்வடைகின்றன. அலுப்போடு வீடு திரும்புகிறான்.

அவளும் வீட்டில் தனிமையில் தவிப்பதும் காட்சிப்படுத்தப்படுகிறது. காலையில் முகம் பார்க்கும் கண்ணாடியைச் சுத்தம் செய்வது முதல் சமையல் வரை நான்கு சுவர்களுக்கு மத்தியில் தனிமையில்தான். மொழி தெரியாத முற்றிலும் அன்னியமான சூழல். நாள் முழுவதும் யாருடனும் பேச முடியாது. பேசுவதென்ன யாரையும் காணக் கூட முடியாத தனிமை. ரேடியோவில் ஒலிபரப்பாகும் பாடல்களைக் கேட்டுக் கொண்டே நாள் முழுவதும் அவள் வீட்டு வேலைகளைச் செய்வதன் மூலம் அவளது தனிமையை எமக்கு உணர்த்துகிறார். ஊருக்கு டெலிபோன் எடுத்து உறவுகளுடன் பேசலாம் என்றால் வெளிநாட்டிற்கு கோல் எடுக்கும் வசதியைக் கூட இரத்துச் செய்துவிட்டான். மன ஆறுதலுக்கான ஒரே வழியைக் கூட அவன் அடைத்துவிட்டான். அவள் உள்ளத்துள் குமுறுகிறாள்.
அவனும் கூட அவளுக்குத் துன்பம் கொடுக்க வேண்டும் என்பதற்காக டெலிபோனை மறிக்கவில்லை. ஏற்கனவே உள்ள உள்ள செலவுகளுக்கு மேலாக அவளினது செலவுகளும் அவளைக் கூப்பிட்டதற்கான கடனும் ஏறிவிட்ட சூழலில் டெலிபோன் காசைக் கூட கட்ட முடியாத நிலையில் வேறுவழியின்றி இதைச் செய்திருக்கிறான்.

தனிமையில் சிறைப்பட்டுக் கிடக்கும் அவள் ~இன்று வெள்ளிக்கிழமை. கோயிலுக்குப் போக வேண்டும் என்கிறாள். கோயிலுக்குப் போவதைவிட இச்சிறையிலிருந்து சற்றேனும் விடுபட வேண்டும் என்பதே அவளது உள்ளக்கிடக்கையாக இருந்திருக்க வேண்டும் என உணர்கிறோம். அவனும் ஓம்படுகிறான். அவள் அழகாக சிரத்தையோடு உடுத்துக் காத்திருக்கிறாள். ஆனால் அவன் வரவில்லை. உடுத்த உடுப்போடு மனம் சோர்ந்து படுக்கையில் சாய்கிறாள்.

இத்தகைய சூழலில் அன்பும் காதலும் கனிய வேண்டிய அந்த இளம் தம்பதிகளிடையே ஒரு நிழல் யுத்தம் ஆரம்பமாகிறது.

இதற்கிடையில் அவள் மனத்தில் ஒரு சந்தேகத் தீயும் பற்றிக் கொள்வதான திருப்பத்தை மிக லாகமாக இயக்குனர் கொண்டு வருகிறார். தற்செயலாக வந்த டெலிபோன் அழைப்பின் மூலம் இவளது கணவன் இரண்டு பஞ்சாபி டிரெஸ்களை இந்தியாவிலிருந்து வந்தவன் மூலம் எடுப்பித்தது அவளுக்குத் தெரியவருகிறது. அவளிடம் கொடுக்கவில்லை, யாருக்குக் கொடுத்தான் என்ற சிந்தனையில் கறி சட்டியோடு கருகுகிறது. உணர்வுகள் இறுகி அவனோடு மோதும்போது ~கள்ளம் பிடிப்படுப் போச்சு என வார்த்தைகள் சாட்டையாக விழுகிறது.

இறுதியில் காரில் போகும் போது கூட வார்த்தைகளால் குதறி எடுக்கிறாள். அந்த நேரத்தில் இன்னொரு வாகனம் குறுக்கே வர ஸ! இன்னுமொரு எதிர்பாராத திருப்பம்.

மிகச் சிறிய படம்தான். 15 நிமிடங்கள் மட்டுமே ஓடுகிறது. அந்தக் குறுகிய நேரத்தை எமக்குப் பயன்படும் விதத்தில் நெறியாண்டு தயாரித்ததில் அஜீவனின் திறமை தெரிகிறது. உரையாடல் ஊடாக கதையை நகர்த்துவதும், சொற்களினனூடாக உணர்வை வெளிப்படுத்துவதும் சிறுகதை, நாவல் போன்ற படைப்புகளுக்குத்தான் பொருந்தும். மாறாக சினிமாவும், குறும்படமும் காட்சி ஊடகங்களாகும். குறுகிய மனத்தைத் தொடும் சட்டங்கள், குறைந்தளவு உரையாடல், காட்சிப்படுத்தல் ஊடாக கதையை நகர்த்தல் போன்ற திரைப்படக் கலையின் சூட்சுமங்களை புரிந்து அஜீவன் தயாரித்திருக்கிறார்.

ராதிகாவின் எதிர்பார்ப்புகள் கருகி அழிவது போலவே அடுப்பில் கறி தீய்ந்து போவதும், அவள் மனம் போலவே கடல் கொந்தளிப்பதும் போன்ற குறியீடுகளைக் குறிப்பிடலாம். நவீன சினிமாவின் போக்குகளை நெறியாளர் உணர்ந்து செயற்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. ராதிகாவின் நடிப்பு நன்றாக இருக்கிறது. தனிமையும் ஏக்கத்தையும் அவரது முகம் நன்றாக வெளிப்படுத்துகிறது. பாலச்சந்திரனும் தனது பாத்திரத்தை உணர்ந்து ஆர்ப்பாட்டம் காட்டாது நடித்திருக்கிறார்.

இப்படமானது புலம் பெயர்பவர்களது கற்பனைக் கோட்டைகள் தகர்வதை மட்டும் வெறுமனே பேசவில்லை. புரிந்துணர்வின்னைமயானது ஒரு குடும்பத்தின் அமைதியான நீரோட்டத்தையும், குதூகலத்தையும் குலைத்து வரண்ட பாலைவனமாக்கிவிடும் என்பதை பேசாமல் பேசுகிறது. ஒரு நல்ல கலைப்படைப்பு என்பது வரண்ட போதனை அல்ல. படைப்பாளியின் அனுபவம் சுவைஞனின் அனுபவத்துடன் கலக்கும் போது கிளர்ந்தெழும் அற்புத உணர்வாகும். அதை அஜீவனின் படைப்பு எனக்குத் தந்தது.

கோயிலுக்கும் போவதற்கெனக் காத்திருந்த அவளை ஏமாற்றியது வேண்டும் என்று அல்ல. வீடு மாறும் நண்பனுக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே. தமிழர்கள் அங்கொன்று இங்கொன்று என பிரிந்து வாழும் சூழலில் ஒருவருக்கு ஒருவர் உதவுவது அவசியம் என்று புரிகிறது. இன்று இவன் உதவினால்தான் நாளை அவன் இவனுக்கு உதவுவான். உண்மைதான். அதற்காக அவளைக் காத்திருக்க வைக்க வேண்டுமா? ஒரு தொலைபேசி அழைப்பெடுத்து தான் இன்று வர நேரமாகும். கோயிலுக்கு சற்றுப் பிந்தியோ அல்லது இன்னொரு நாளோ போகலாம் எனத் தகவல் கூறியிருக்கலாம் அல்லவா?

இக் காட்சியின் போது, இப்ப நான் உதவினால் தானே அவன் எங்களது கலியாணத்தின் போது உதவுவான் என பாலச்சந்திரன் ஒரு வசனம் சொல்வது எவ்வளவு அர்த்தம் பொதிந்தது. புலம் பெயர்வானது எமது நித்திய வாழ்க்கை மற்றும் கலாசாரத் தளங்களில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தி விட்டது என ஏங்க வைத்தது.

அதேபோல அந்தப் பஞ்சாபி உடை பற்றிய பிரச்சனை. எதற்காக வாங்கினீர்கள் என அவனிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலம் அல்லவா? மாறாக சந்தேகப் பிசாசு ஆட்கொள்ள, ‘கள்ளம் பிடிபட்டுப் போச்சு’ என நச்சு வார்த்தைகளைக் கொட்டுகிறாள். இங்கு நெறியாளர் ஆண் பக்கமோ பெண் பக்கமோ சாயவில்லை. வெறுமனே சம்பவங்களை ஒழுங்கு நேர்த்தியாகக் காட்சிப்படுத்துகிறார். நாம்தான் எமது புத்தியைத் தீட்ட வேண்டும், கற்பனைகளைப் பறக்க விட வேண்டும், உணர்வுகளை உரசிப் பார்க்க வேண்டும். அவற்றிலிருந்து செய்தியையோ பாடத்தையோ கற்றுக் கொள்ள வேண்டும்.

எந்த ஒரு கலைப்படைப்பிற்கும் சீரிய நோக்கும், சமூகப் பார்வையும் இருக்க வேண்டும் என்பது உண்மையே. ஆனால் அதே நேரம் அது பைபிளைப் போலவோ, குரானைப் போலவோ, அல்லது வேதத்தைப் போலவோ நன்னெறிகளைப் போதிக்கும் ஆன்மீக நூல் அல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். நல்ல கலைப்படைப்பு எதையும் புட்டுப் புட்டு வைப்பதில்லை. பூடகமாக, கலையழகுடன் சொல்லப்பட வேண்டும். அதையே அஜீவன் இப் படத்தில் செய்ய முனைந்திருக்கிறார்.

அந்த வகையில், ராதிகாவைப் போல புலம் பெயர்ந்து சென்றவர்கள் மட்டுமல்ல, புலம் பெயர்ந்து செல்ல இருப்பவர்களும், அத்தகையோரின் உறவினர்களும் பார்க்க வேண்டியப படம் இது. வெறுமனே ரசனைக்காகப் பார்ப்பதற்கான படம் மட்டுமல்ல, உணரவேண்டிய சங்கதிகளும், கற்க வேண்டிய பாடங்கள் பலவும் இதிலுள்ளமை முக்கியமாகப் பதிவு செய்யப்பட வேண்டிய உண்மையாகும்.

சென்ற பெப்ரவரி மாதம் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இப்படத்தை வெள்ளவத்தை பெண்கள் கல்வி மற்றும் ஆய்வு மையத்தில் காணக் கிடைத்தது. விபவி இலக்கிய வட்டம் இதனை ஒழுங்கு செய்திருந்தது. அஜீவனின் இன்னுமொரு திரைப்படமான ‘அழியாத கவிதை’யும் அபர்ணா சென்னின் புகழ் பெற்ற திரைப்படமான ‘மிஸ்டர் அன்ட மிஸஸ் ஜயர்’ படமும் அன்று காட்டப்பட்டன. அஜவனின் குறும்படங்களின் பின் சிறிய கலந்துரையாடலும் இடம் பெற்றமை முக்கிய அம்சமாகும்.

அழியாத கவிதை!

அஜீவனின் மற்ற குறும் படமான அழியாத கவிதை என்னை உணர்வு ரீதியாகப் பாதித்தது. இதுவும் கூட இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்குப் புலம் பெயர்ந்த ஒருவரின் அனுபவங்கள்தான். புலம் பெயர்ந்து லண்டனில் வசிக்கும் மகனிடம் போய்ச் சேரும் ஒரு முதியவரின் துயரங்களை இது பேசுகிறது. முதியவராக நடிப்பவர் பண்பட்ட நடிகரான ஏ.இரகுநாதன் ஆவார். மிக விறுவிறுப்பாகப் படம் ஆரம்பமாகிறது. எல்லையைக் கடந்து நெடுஞ்சாலையில் வழுகிச் செல்லும் கார் ஒதுக்குப்புறமாக நிற்கிறது. டிரைவரின் சீட்டுக்கு பக்கத்திலிருந்து தயக்கத்துடன் இறங்கியவர் திருடன் போல் அக்கம் பக்கம் நோட்டமிடுகிறார். யாரும் பார்க்கவில்லை எனத் தெரிந்ததும் விரைவாகக் காரின் பின்புறம் சென்று டிக்கியைத் திறக்கிறார். அதற்குள் வாழை இலையைப் போல சுருட்டி மடக்கிக் கிடந்த முதியவர் ஒருவர் பயப் பீதியுடன் தயங்கி வெளியே வந்து கைகால்களை நீட்டி மடக்கி உடலை இயக்க முனைய அவரைக் காருக்குள் இருத்திக் கொண்டு வேகமாகப் பயணிக்கிறார்கள்.

அகதி அந்தஸ்து பெறுவதற்காக திருட்டுத்தனமாக மிகுந்த இன்னல்களுக்குள் பயணமாகும் எம்மவர்களின் துயரக் கதையின் ஒரு துளி அத்தியாயத்தை கலாரீதியாகப் பதிவு செய்திக்கிறார் அஜீவன்.

மனைவியை இழந்த அவர் தாயகத்தில் தனியாக வாழ முடியாது என்ற காரணத்தால்தான் லண்டன் வருகிறார். ஆனால் லண்டன் வாழ்க்கையோ நேரத்தோடு போட்டி போட்டுக் கொண்டு ஓடும் இயந்திர மயம். கணவன் மனைவியோடு பேசுவதற்குக் கூட நேரம் கேட்டுத்தான் ஒதுக்க வேண்டும். கார், வீடு முதல் வீட்டுச் சாமான்கள் வரை கடனில் வாங்கிவிட்டு மாதாமாதம் கடனைக் கட்ட முடியாது திண்டாடும் பொருளாதார நிலையும் கொண்டது. இத்தகைய லண்டன் வாழ்வில் அவர் தேடி வந்த உறவுகள் ஊடான நெருக்கம் சாத்தியமாகுமா?

சிறுசிறு காட்சிகள் மூலம் இவரது கனவுகள் கருகுவதும், ஏமாற்றம் ஆட்கொள்வதும் ஆவணப்படுத்தப்படுகின்றன. நீண்ட நெடும் பயணத்தின் பின் மகனுடைய வீட்டிற்கு வந்து சேர்கிறார். மகனுடன் பேசிக் கொண்டிருக்கையில் குட்டைச் சட்டையுடன் மாடிப்படியில் இறங்கி வரும் மருமகளின் நவநாகரீகத் தோற்றம் இவருக்கு அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் அதிர்ச்சி ஊட்டுவதுபோல மருமகள் இவரை வரவேற்கவோ, கூட இருந்து குசலம் விசாரிக்கவோ இல்லை. தான் வேலைக்குப் போக நேரமாகிவிட்டதாகவும் பிறகு வந்து பேசுவதாகவும் போகிற போக்கில் சொல்லிக் கொண்டு போகிறா. அவளுக்கு அவளது வேலை அவசரம். நேரத்தையும், பணத்தையும் விட உறவுக்கும், பாசத்திற்கும் விருந்தோம்பல் பண்பிலும் ஊறித் திளைத்த யாழ்ப்பாணப் பாரம்பரியத்தில் வந்த இவருக்கோ பெருத்த ஏமாற்றம். மகனோடு பேசி மகிழ்ந்து, நிம்மதியாக வாழ முடியும் என்ற கனவிற்கு முற்றுப் புள்ளி வைக்கின்றன.

அங்கு அடுத்து நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களும் இவரது எதிர்பார்புகளையும் நம்பிக்கைகளையும் சிதைக்கவே செய்கின்றன. ஊரில் ரேடியோ போடுவது போல உச்ச சத்தத்தில் ~எங்கே நிம்மதி.. பாட்டைப் போட பக்கத்து வீட்டுக்காரன் வந்து குற்றம் சொல்கிறான். தன்னை ஊரிலிருந்து ஊப்பிட்டதற்குப் பட்ட கடனைப் பற்றி மகனும் மருமகளும் விவாதிப்பது இவரது காதில் விழுகிறது, அதற்கு மேலே அவரை வைத்துப் பார்ப்பது தனக்கு கஸ்டம் என மருமகள் மகனிடம் முறையிடுவதும் கேட்டுவிடுகிறது. மகனின் அருகே உடல் ரீதியாகச் சென்று விட்ட போதும் மனோ ரீதியாக ஒருவித தனிமையும் வெறுமையும் ஆட்கொள்கிறது. மனம் சோர்கிறது.

மனைவியை நினைக்கிறார். இத்தகைய அவமதிப்புகளுக்கும் ஏமாற்றங்களுக்கும் ஆளாகாமால் இறந்துவிட்ட அவளைக் கொடுத்து வைத்தவளாகக் காண்கிறார். தன்னைத் தனிமையில் வாடவிட்டுச் சென்ற மனைவியை நினைத்து மனம் சோர்கிறார்.

இந்த நிலையில் அம்மாவை இழந்த நேரத்தில் தனிமை உணர்வில் தவித்த என் அப்பாவின் நினைவு வர இது எங்களின் கதையும் கூட என்ற எண்ணத்தில் உள்ளம் ஆற்றாமையில் ஆழ்ந்தது. ஆக அஜீவனின் இக்குறும் படம் புலம் பெயர் வாழ்கையை மட்டும் சித்தரிக்கவில்லை. அதற்கு மேலே துணையை இழந்து தவிக்கும் ஒவ்வொரு முதியவரினதும் இழப்புத் துயரையும், தனிமை ஏக்கத்தையும் பேசுவதாகவே எண்ணத் தோன்றுகிறது.

ஆயினும் பின்நோக்கிப் பார்க்கும்போது சில குறைகளையும் உணரமுடிகிறது. ரகுநாதனின் தற்போதைய தோற்றப் பொலிவு தாயகத்திலிருந்து இப்பொழுதுதான் வருபவர் போல் தோன்றவில்லை. பெண்கள் போன்ற நீண்ட முடியும் கொழுகொழுப்பான தோற்றமும் போரினால் அலைக்கழிந்து சோர்ந்தவர் போலில்லை. படத்தின் இறுதியில் பூங்காவில் தனிமையிலிருந்து வருந்தும் கட்டம் முற்றாக நாடகப் பாணிப் பேச்சாக இருக்கிறதே அன்றிக் காட்சிப்படுத்தப்படவில்லை.

ரகுநாதனின் பண்பட்ட நடிப்புடன் மகனாகவும் மருமகளாகவும் வருபவர்களின் நடிப்பு சோபிக்கவில்லை. உரையாடல்கள் பல இடங்களில் தெளிவாக இருக்கவில்லை.

இப்படிச் சில குறைகளைச் சொன்னாலும் அவை அத்துணை பாராதூரமானவை அல்ல. இம் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது. ஈழத்து இலக்கியத்தில் புலம்பெயர் இலக்கியம் தனியிடத்தை பெற்றுள்ளது. அது போலவே குறும்படத் துறையிலும் தனியிடத்தைப் பெறும் என்ற நம்பிக்கையைத் தருகிறது. தாயகத்தில் இத்தகைய குறும் பட முயற்சிகள் மிகவும் குறைவு. விடுதலைப் புலிகளின் திரைப்படப் பிரிவு பல குறும்படங்களையும் சில திரைப்படங்களையும் தயாரித்து முன்னோடியாகச் செயற்படுகிறார்கள். ஆயினும் தனிப்படவர்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.

அத்துடன் குறும்படங்கள் சாதாரண மக்களைச் சென்றடைவதும் அரிதாகவே இருக்கிறது. காரணம் இதற்கான ஒரு விநியோக வலைப் பின்னல் இல்லாததே ஆகும். இந் நிலையில் இவ்விரு குறும் திரைப்படங்களையும், இதற்கு இரு மாதங்களுக்கு முன் ஸ்கிரிப்ட் தயாரிப்பான ஏழு குறும் படங்களையும் ஒழுங்கு செய்த விபவி மற்றும் பெண்கள் ஆய்வு மன்ற நிர்வாகத்தினர் பாராட்டுக்குரியவர்கள்.

அதிமானுட கதாநாயகர்களையும், பார்வையாளர்களின் சுயபுத்தியைக் கேலிகுள்ளாக்கும் சண்டை மற்றும் பாடல் காட்சிகளைப் பார்த்து வெறுத்துப்போன எங்களுக்கு, எமது வாழ்வின் இயல்பான, இன்னோரு பரிமாணத்தைக் காட்சிப்படுத்தும் இக் குறும் படங்கள் பெரு விருந்தாக அமைந்தன. மேலும் இத்தகைய குறும்படக் காட்சிகளை ஒழுங்குசெய்வது எமது ரசனையை வளர்ப்பதுடன், புதிய அனுபவங்களையும் சாத்தியமாக்கும்.
kathirmuruga@gmail.com
Tuesday, 12 April 2005
(நன்றி: பதிவுகள்.கோம்)

Read Full Post »

>தொண்டையில் கழலை இல்லை, தைரொயிட் நோயா ?

“கை கால் உளைவு, களைப்பு, உடம்பு நோ, சோம்பல், தூக்கக் குணம், மலச்சிக்கல், உடம்பு பாரமாக இருக்கு, தசைப்பிடிப்பு ….” என்று சொல்லிக் கொண்டே போனாள்.

அந்தப் பெண்மணியின் நோய் அறிகுறிகள் தண்டவாளம் போல முடிவின்றி நீண்டு கொண்டே போயின. அவரை நோட்டமிட்டேன்.

வயது அய்ம்பது இருக்கும். ‘வதனமே சந்திரபிம்பமோ’ என்பது போல உருண்ட வட்ட முகம், கொழுத்த உடம்பு, வரண்ட தோல், சற்றுக் கரகரத்த குரல், அதிகம் கொட்டியதால் அடர்த்தி குறைந்த தலை முடி.

அவர் கூறிய அறிகுறிகளையும், நான் அவதானித்த குறிகளையும் இணைத்துப் பார்க்கும் போது இவருக்கு தைரொயிட் சுரப்பியின் செயற்பாடு குறைவாக இருக்கலாமோ எனத் தோன்றியது.
இவற்றுடன்

  • குளிர் சுவாத்தியத்தைத் தாங்க முடியாத தன்மை, 
  • மறதி, 
  • மனச் சோர்வு, 
  • தசைப் பிடிப்பு போன்ற அறிகுறிகளும் சேர்ந்திருப்பதுண்டு. 

நாடி பிடித்துப் பார்த்தபோது நாடித் துடிப்பு சற்றுக் குறைந்திருந்தமை எனது சந்தேகத்தை வலுப்படுத்தியது. இளம் பெண்களுக்கு மாதவிடாய்க் குழப்பங்களும் ஏற்படுவதுண்டு.
“உங்களுக்கு தொண்டையில் உள்ள தைரொயிட் சுரப்பி வேலை செய்வது குறைவு போல இருக்கு. இரத்தம் பரிசோதித்துப் பார்ப்போம்” என்றேன்.
“எனக்கு தொண்டையில் வீக்கம் ஒன்றும் கிடையாதே. ஏன் தைரொயிட் நோய் என்கிறீர்கிறீர்கள்?” என என் முடிவில் சந்தேகம் எழுப்பினார்.

தைரொயிட் என்பது எமது தொண்டைப் பகுதியில் உள்ள ஒரு சுரப்பி. இதனால் தைரொயிட் நோய் என்றாலே தொண்டைப் பகுதியில் கழலை என்பதுதான் பெரும்பாலானவர்களின் எண்ணமாயிருக்கிறது.

பள்ளிப் பாடப் புத்தகத்தில் படித்த அயடின் குறைபாட்டால் வரும் தொண்டைக் கழலை (Goitre) தான் பலரின் ஞாபகத்திற்கு வரும். எனவே அவரது சந்தேகத்தில் நியாயம் இருக்கவே செய்கிறது.

சுரப்பியில் வீக்கம் எதுவும் இல்லாமலே பல தைரொயிட் நோய்கள் வருவதுண்டு. அது

  • குறைவாகச் சுரப்பதால் ஏற்படும் கைபோதைரொயிடிசம் (Hypothyroidism),
  • அதிகம் சுரப்பதால் ஏற்படும் கைபேர்தைரொயிடிசம் (hyperthyroididm) ஆகியவை இத்தகையவே.

தொண்டையில் உள்ள தைரொயிட் சுரப்பியில் வீக்கம் (கழலை)இருந்தால் அது முன்பு குறிப்பிட்ட

  • அயடின் குறைபாட்டால் ஏற்படும் கட்டியாகவோ, அல்லது 
  • நீர்க் கட்டியாகவோ (Cyst) இருக்கலாம். 
  • புற்று நோயாலும் அவ்விடத்தில் கட்டி தோன்றலாம். 

எனவே தைரொயிட் சுரப்பியில் பல்வேறு விதமான நோய்கள் ஏற்படலாம் என்பதை நாம் உணர வேண்டும். அவற்றிற்கு வெவ்வேறு விதமான சிகிச்சை முறைகள் இருக்கின்றன. எத்தகைய சிகிச்சை தேவையென வைத்தியர்தான் தீர்தானிக்க முடியும்.
மேற் கூறிய பெண்ணுக்கு இரத்தப் பரிசோதனைகள் செய்தபோது அது சுரப்பியின் குறைச் செயற்பாட்டால் வரும் நோய் (Hypothyroidism) என்பது தெளிவாகியது. தைரொக்சின் (Thyroxine) மாத்திரைகள் கொடுத்தபோது அறிகுறிகள் நீங்கிக் குணமாகியது.

ஆயினும் அம் மருந்தை அவர் பெரும்பாலும்

  • வாழ்நாள் முழுவதும் உபயோகிக்க வேண்டி நேரிடும். 
  • காலையில் வெறும் வயிற்றில் போட வேண்டிய மாத்திரை அது. 
  • மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இரத்தப் பரிசோதனை செய்து மருந்தின் அளவை தீர்மானிக்க வேண்டியிருக்கும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
குடும்ப வைத்திய நிபுணர்

Read Full Post »

திடீரென வந்து மறைந்த பக்கவாதம்

அந்த மரணச் செய்தியை அறிந்தபோது மிகுந்த கவலையாக இருந்தது. போதிய வைத்திய வசதி இல்லாத பிரதேசத்தில் வாழ்ந்த அந்த அறுபது வயதான குடும்பத் தலைவரை வீணாக இழக்க நேர்ந்ததோ எனச் சிந்திக்க வைத்தது. ஆயினும் மருத்துவம் என்பது கடவுளுக்கோ அல்லது இயற்கை நியதிக்கோ சவால் முடியாதது என்பதையும் மனம் ஒத்துக் கொண்டது.

நடந்தது இதுதான். கடையில் வேலையாக இருந்து விட்டு, மதியம் வீடு திரும்பி சாப்பிட உட்கார்ந்தவருக்கு திடீரென தலைசுற்றி தூக்கி எறியுமாற் போல இருந்தது. வாய் கொன்னித்தது. ஒரு பக்கம் கையும் காலும் செயலிழந்து சோர்ந்தன. எல்லோரும் பயந்துவிட்டார்கள்.

பக்கவாதம் தான் (Stroke) வந்து விட்டதோ என! மனைவி அவசர அவசரமாக எதோ கஷாயம் அவித்துக் கொடுக்க மகன் வைத்தியரிடம் ஓடினான். பட்டம் பெற்ற வைத்தியர் அருகில் கிடையாது.

சுதேச வைத்தியர் தான் பரிவோடு உதவினார். அன்றே குணமாகிவிட்டது. ஆயினும் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் அது திரும்ப வந்தபோது வைத்தியசாலையில் அனுமதித்த போதும் காப்பாற்ற முடியவில்லை.

இது ஒரு சிறிய அளவிலான பக்க வாதம் (Minor Stroke) ஆகும். மருத்துவத்தில் தற்காலிகமாகத் தோன்றி மறையும் நாடி அடைப்பு ( Transient Ischemic attack-TIA) என்பார்கள். அத்தகைய சிறிய பக்க வாதம் வந்தவர்களில் பத்து சதவீதத்தினருக்கு மீண்டும் அத்தகைய சிறிய பக்கவாதம் அல்லது பாரிய பக்க வாதம் ஓரிரு வாரங்களுக்குள் வரக் கூடும் என்பது 20 வருடங்களுக்கு மேலாக மருத்துவ ரீதியாகத் தெரிந்த செய்தியாகும்.

ஆயினும் பெரும்பாலான மேலை நாடுகளில் கூட இத்தகையவர்களுக்கு வெளி நோயாளர் பிரிவிவலயே சிசிச்சை அளிக்கப்படுகிறது. தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதில்லை.

“இது தவறு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டால் அது மீண்டும் வருவதற்கான சாத்தியம் குறைந்து விடும்” என 1314 பேரைக் கொண்டு ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்த டாக்டர் பீற்றர் ரொத்வெல் கூறுகிறார்.

நோய்க்கு முன்னும் பின்னுமாக 5 வருடங்களாகச் செய்த ஆய்வு இது. இந்த ஆய்வின் போது நோயுற்றவர்களுக்கு உடனடியாக 300 மி.கி. அஸ்பிரினும், 300 மி.கி குளொபிடோகிரல் (clopidogrel) மருந்தும் கொடுக்கப்பட்டது. இவற்றிற்கு இரத்தம் உறைதலைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. இவை தொடர்ந்து கொடுக்கப்பட்டதோடு, கொலஸ்டரோலைக் குறைக்கும் மருந்தான சிம்வஸ்டடின் 40 மி.கி மருந்தும், தேவை ஏற்படும் போது இரத்த உறைதலைத் தடுக்கும் விசேட மருந்துகளும் கொடுக்கப்ட்டன.

இவ்வாறு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட 656 பேரில் ஒருவருக்குக் கூட நோய் திரும்ப வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தீவிர சிகிச்சை அளிக்கப்படாத 658 பேரில் ஒன்பது பேருக்கு திரும்ப வந்தது.

எனவே நாம் செய்ய வேண்டியது என்ன? சிறிய பக்க வாதம் (Minor Stroke)யாருக்காவது வந்தால் உடனடியாக ஒரு அஸ்பிரின் மாத்திரையைக் குடிக்கக் கொடுத்து விட்டு வைத்தியரிடம் கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிப்பதுதான்.

குடிக்க கொடுக்க வேண்டியது அஸ்பிரின் அல்லது டிஸ்பிரின் மாத்திரைதான், பரசிட்டமோல் அல்ல என்பதை நினைவில் வைத்திருங்கள். ஏனெனில் அஸ்பிரின் மாத்திரைக்குதான் இரத்தம் உறைதலைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.

0.0.0

Read Full Post »