>முற்போக்கு இலக்கியவாதி சமீம் என்ற நூல் அண்மையில் வெளியாகியுள்ளது. இது இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையின் வெளியீடு ஆகும்.
சமீமுடன் நான் நெருங்கிப் பழகியவன் அல்ல. ஆயினும் பழகிய அளவில் நட்புக்கும் மரியாதைக்கும் உரிய கல்விமானாகவே அவர் எனது மனத்தில் வீற்றிருக்கிறார். ஆனால் ஒரு நூலை மதிப்பீடு செய்வதற்கு இவை எவையும் தகுதிகளும் அல்ல, தகுதிக் குறைபாடும் அல்ல என்பது உண்மையே.
சமீம் யார்
உண்மையில் சமீம் யார்? அவர் பற்றி ஒரு நூல் வருவதற்கான தேவை என்ன? அதற்கான அவரது அருகதை என்ன? டொக்டர்.எம்.எல்.நஜிமுதீன் (மகப்பேற்று நிபுணர்) இந்நூலில் அவர் பற்றி எழுதிய ‘முகம்மது சமீம்- ஒரு முகவுரை’ என்ற கட்டுரையின் ஆரம்ப வசனம் சமீம் பற்றிய மிகச் சுருக்கமான ஆனால் செறிவான தெளிவான பார்வையை முன் வைக்கிறது
‘முகம்மது சமீம் அவர்கள் கல்வித்துறையில் அரும்பணி ஆற்றியவர். புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர். பன்னூல் ஆசிரியர். பண்பாளர். விமர்சகர், நாடறிந்த எழுத்தாளர். மும்மொழிகளிலும் சரளமாகப் பேசக் கூடிய சிறந்த பேச்சாளர். பல்துறைகளிலும் தடம் பதித்து அனைத்து மக்களாலும் மதிக்கப்படுபவர்.’
அத்துடன் ‘முற்போக்கு எண்ணக் கருவிலிருந்து இன்றுவரை மாறாது நிலைத்து நின்று தனது கருத்துக்களை துணிவுடன், ஆதாரத்துடன் அளிப்பவர்தான் அறிஞர் முகம்மது சமீம்’ என முன்னைநாள் அதிபர் மஹ்ரூப் கரீம் எழுதிய வார்த்தைகளையும் சேர்த்துக் கொண்டால் மிகத் தெளிவான பார்வை கிட்டும்.
ஆம்! கல்வி அதிகாரி, ஆய்வாளர், பேச்சாளர், எழுத்தாளர், விமர்சகர் போன்ற பல தகமைகளுக்கு மேலாக முற்போக்கான சிந்தனைகளுடன் தளும்பாது நின்ற காரணத்தால்தான் இன்று வரை பேசப்படுகிறார், மதிக்கப்படுகிறார். தொடர்ந்தும் வரலாற்றில் நிற்கப் போகிறார்.
152 பக்கங்கள் நீளும் இந்த நூலில் மொத்தம் 19 கட்டுரைகளும், சில புகைப்படத் தொகுப்பும் காணப்படுகிறது. அவரது பிறப்பு வளர்ப்பு, இளைமைப் பிராயம், முதல் இன்று வரையான அவரது வாழ்க்கைப் பயணத்தின் பல அங்கங்களை இந்த நூல் சொல்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் சேர்ந்து பயணித்த உறவினர், நண்பர்கள் அறிஞர்களது கருத்துக்கள் இடம் பெற்றருப்பதால் பல புதிய செய்திகளையும் அறிய முடிகிறது.
உள்ளடக்கம்
நூலின் உள்ளடக்கத்தை பார்க்கும்போது எவ்வளவு ஆழமாகச் சிந்திக்கப்பட்டு, திட்டமிடப்பட்டு இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடியும். இந்த நூலைப் படிக்கும் போது நான் அறிந்த பல விடயங்களையும் இரசித்தவற்றையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
என் சகோதரனைப் பற்றி – ஆறிபா ஸாகீர். தனது சொந்தச் சகோதரன் பற்றி எழுதுவதால் அவர்களது இளைமைக் காலம் பற்றி மிகத் துல்லியமாக அறிய முடிகிறது.
அந்தக் காலத்தில் எந்த வசதியும் அற்ற பதுளை மாநகரைப் பற்றியும், அக்காலத்தில் பொழுது போக்குக்கான வாய்ப்புகள் இல்லத நிலையையும் கூறி ‘வெளியில் பயணம் என்றால் மீனாம்பிகை புத்தகக் கடைதான். எங்களுக்கிருந்த ஒரே பொழுது போக்கு சாதனம் சஞ்சிகைகளும் புத்தகங்களும்தான். அவற்றை சிறுவயதிலிருந்தே படிக்கவும் வாசிக்கவும் ஊக்கம் தந்தவர் எமது அருமை அண்ணாதான்’ எனப் பெருமையாகச் சொல்கிறார்.
உண்மைதான் இளவயதில் வாசிப்தற்கு ஊக்கம் கொடுக்கும் ஒருவர் கிடைப்பது மிகவும் அரிய வாய்ப்பாகும். இங்கு கூடியிருக்கும் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் எழுத்தோடும் வாசிப்போடும் சம்பந்தப்படவர்கள்தான். எம் எல்லோருக்கும் இவ்வாறான ஒருவர் இருந்திருப்பார்.
சகோதரி ஆறிபாவிற்கு சமீம் கிடைத்தது போல எனக்கு சின்னையா பண்டிதர்.பொன்.கிருஸ்ணபிள்ளை, உறவினர் கவிஞர் யாழ்பாணன். அதேபோல அவர்களுக்கு மீனாம்பிகை புத்தகக் கடை போல எனக்கு பருத்தித்துறை வடலங்கா புத்தகசாலை.
இவ்வாவறே உங்கள் ஒவ்வொருவருக்கும் இனிய நினைவுகளும் இருக்கும். ஆனால் எமக்குக் கிடைத்து வாசிப்புப் பழக்கதை அளம் தலைமுறையினருக்குக் கடத்த முடிகிறதா? இளம் தலைமுறையினரில் பெரும்பாலனவர்கள் ரீவி மற்றும் கணனி முன்னிலையில்தானே.
ஜனாப். ஆ. முகமது சமீம்: அவர்களைப் பற்றி நான் அறிந்தவை – சித்தி ஸமீனா நஜிமுதீன். இக்கட்டுரை அவரது பொறாமகளால் எழுதப்பட்ட கட்டுரையாகும்.
About my Father Mr.A.M.Sameem- S.Razna Sameem Imtias– Walking Libray என்கிறார்
முகமது சமீமுடைய இளமைக்கால இலக்கிய செயற்பாடுகள் – குமரன். பதுளை நகரில் ‘சரஸ்வதி வித்தியாசாலை, தர்மதூதக் கல்லூரி போன்றவற்றில் கல்வி கற்ற காலத்தில் சமிமுடைய கல்வி, இலக்யி செயற்பாடுகளை ஆவணப்படுத்துகிறது. பேச்சுப் போட்டிகளில் பங்கு பற்றியதுடன், ‘திருடன் வீடடைந்தான்’ என ஒரு சிறுகதை எழுதியுள்ளார் என்ற தகவலைப் பெற முடிகிறது.
சர்வகலாசாலையின் ஓர் சககால மாணவன் திரு சமீம் அவர்களைப் பற்றிய ஓர கண்ணோட்டம் – ஷகீர். ஷாயிரா கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தனக்கும் அவருக்கம் இருந்து அறிமுகததைத் தெரிவிக்கிறார். அத்துடன் அக்காலத்தில் கல்விக்கு மேலாக உதைபந்தாட்டம், நீச்சல் போட்டி ஆகியவற்றில் அருந்த ஈடுபாட்டையும் சொல்கிறார். அதன் மூலம் இளமைக் காலத்திலேயே அவருக்கிருந்த பனமுக ஆற்றலைக் காண முடிகிறது.
அத்துடன் சமீம் எழுதிய 9 நூல்களையும் பட்டியல் இட்டுக் காண்பிப்தும் இக் கட்டுரையின் முக்கிய அம்சமாகும். அவையாவன
1. இஸ்லாமிய கலாசாரம்,
2. இஸ்லாமிய தத்துவ ஞானம்,
3. முஸ்லீம் திருமன சம்பிரதாயங்கள்,
4. ஒரு சிறுபான்மை இனத்தின் பிரச்சனைகள் – 4 பாகங்கள்,
5. படைப்பாளிகளும் ஆய்வுகளும்,
6. இலக்கிய விமர்சனக் கட்டுரைகள்,
7. எமது இலக்கியத் தேடல்,
8. கைலாசபதி 10 சில்லையூர் செல்வராஜன்,
9. ஒரு விமர்சனப் பார்வை
எனது நண்பன் சமீம் – தி.சிறினிவாசன். சக பல்கலைக்கழக மாணவனாக இருந்த காரணத்தால் பல்கலைக்கழக வாழ்ககை பற்றி நேரடியான பார்வையைத் தருகிறார். அத்துடன் இன்று சமீம் தலைமை வகிக்கும் Harrow International college ல் சமீமின் தலைமைத்துவத்தில் எவ்வாறு சிறப்பாகக் கல்விப் பணி செய்கிறது என்பதை சிறப்பாக எடுத்துக் கூறுகிறார்.
இளமைக் காலம் பற்றி மேற்படி கட்டுரைகள் பேச ஏனைய பல கட்டுரைகளும் அவரது பிற்கால வாழ்க்கையும் சாதனைகளையும் பேசுகிறன்றன.
பன்னூலாசிரியர் அறிஞர் அ.முகமது சமீம் அவர்கள் – மஹ்ரூப் கரீம். இக் கட்டுரையின் முதற் பகுதி சமீமின் டிதாழில் சார்ந்த பணிகள் பற்றிய விபரத்தைத் தருகிறது. ஈயினும் இரண்டாம் பகுதியான 15 பக்கங்கள் நீளும் இலக்கியப் பணி பற்றிய பகுதி மிக முக்கியமானது. என்னைக் கவரந்தது. உங்கள் பலருக்கும் விருப்புடையதாக இருக்கும் ஏனெனில் இது சமீமின் இலக்கியக் கட்டுரைகள் ஊடாக அவர் பற்றிய பார்வையை முன் வைக்கிறது.
நான்கு பாகங்கள் கொண்ட ‘ஒரு சிறுபான்மை இனத்தின் பிரச்சனைகள்’ என்ற நூலைப் பற்றிப் பேசும்போது ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்து ஆற்ற வேண்டிய கல்வி, இலக்கியச சேவையை வெளியில் இருந்து ஆற்றுகிறார். உண்மைதான் அந்த நூலை நானும் மேலோட்டமாகப் படித்திருக்கிறேன்.
‘இலங்கையில் பேரினவாதிகளின் – பேரினவாத அரசாங்கங்களின் இனவாதக் கொள்ளைகளாலும், அட்டூழியங்களாலும், அடக்கு முறைகளாலும் அழிவுகளாலும் தமிழ் முஸ்லீம் மக்ள் பட்ட கஷ்டங்களையும் சம்பவங்களையும் திட்டமிட்ட சதிகள் பற்றியும் ஆதாரபூர்வமாக வரலாற்றுச் சான்றுகளுடன் இந்நூல் எழுதப்பட்டுள்ளது’ எனக் கட்டுரையாசிரியர் கூறுவதுடன் நானும் முழமையாக உடன்படுகிறேன்.
அத்துடன் இரண்டாவது சிறுபான்மை இனமாக முஸ்லீம் சமூகம் பட்ட கஸ்டங்கள் பலவற்றையும் உணர முடிகிறது.
இலக்கியக் கட்டுரைகளில் சமீமின் முற்போக்குக் கருத்துகள் முனைப்பாக வெளிப்படுவதை பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறார்.
படைப்பாளிகளும் ஆய்வாளர்களும் என்ற கட்டுரையில் பேராசிரியர் கைலாசபதி (பக் 40)
திருக்குறள் (பக் 42),
சிலப்பதிகாரம் (பக் 43)
நீர்வை பொன்னையன் (பக் 43),
எஸ்.எஸ்.கார்மேகம் எழுதிய ‘கண்டிய மன்னர்கள்’ (பக் 45),
மூதூர் முகைதீன் எழுதிய ‘இழந்துவிட்ட இன்பங்கள்’ (பக் 46), மு.பொன்னம்பலத்தின் சூத்திரர் வருகை (பக் 47),
என்.கே.ரகுநாதனின் ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி (பக் 47)
முற்போக்கு கலை இலக்கியம்: சமீமின் செயற்பாடுகள்- நீர்வை பொன்னையன் ஒரு முக்கியமான கட்டுரை. ஐம்பதுகளில் முற்போக்கு இலக்கிய இயக்கத்தில் இணைந்த முகமது சமீம் அன்றிலிருந்து இன்றுவரை நிலை தளும்பாமல் எமது முற்போக்கு கலை இலக்கியத்தில் உறுதியாக நின்று அயங்குகிறார் என மனம் திறந்து சொல்கிறார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமைக் குழு உறுப்பினராக இருந்து ‘பாரதி விழா’, பாரதி நூற்றாண்டு விழா, சோமசுந்தரப் புலவர் விழா, ஆறுமுகநாவலர் விழா போன்ற விழாக்களை ஏற்பாடு செய்வதிலும், அவற்றை வெற்றிகரமாக நடத்துவதிலும் பெரும் பங்களித்துள்ளார்.
தமிழ் நாட்டிலிருந்து நூல் இறக்குமதி
பண்டிதர் குழாமிற்கு எதிரான போராட்டம், புதமை இலக்கிய சஞ்சிகை வெளியீடு.
தன்னைபிரபல்யப்படுத்தி சுயலாபம் பெறுவதற்கு இ.மு.எ.ச நடாத்திய இலக்கிய மகாநாடுகளை பயன்படுத்தியதில்லை என சான்றளிக்கிறார்.
இ.மு.எ.ச இயங்க முடியாத நிலை ஏற்பட்ட போது இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையை உருவாக்குவதில் ஈடுபட்டதுமன் அதன் செயற் குழு உறுப்பினராக செயற்படுகிறார்.
ஒரு முற்போக்குவாதியின் இலக்கிய வளர்ச்சியின் உச்சம் – ஏ.இக்பால். சமீமின் இலக்கியப் பயணத்தை விபரிக்கிறார்.
வரலாறு கண்ட முஸ்லீம் தலைவரகள், சீனாவில் முஸ்லீம்கள் ஆகிய முக்கிய கட்டுரைகள் இன்னமும் நூல் உருப் பெறாததை இலரது கட்டுரை மூலம் அறியக் கூடியதாக இருக்கிறது. அவற்றையும் நூலாக்குவது அவசியமாகத் தெரிகிறது.
ஏனைய கட்டுரைகள்
முகமது சமீம் ஒரு ஞானத் தேடல் – அல்ஹாஜ் எம்.வை.எம்.முஸ்லீம், எம்.ஏ.எம்.சமீம் – கே.சண்முகலிங்கம்,
இலங்கை அரசியல் வரலாற்றின் ஆராச்சி அறிஞர் அ.முகமது சமீம் – அல்ஹாஜ் எஸ்.ஐ.ஆர்.எம்.செயித் ஹஸன் மௌலானா,
அறிஞர் பெருமான் – சாரணா கயூம்,
முகமது சமீம் அவர்களும் எழுத்தும் – த.சிவசுப்பிரமணயம்,
வரலாறு படைக்கும் வரலாற்று நாயகன் – பாலஷண்முகி,
அறிஞர் பெருமான் சமீம் – திருமதி.சண்முகராஜா,
முகமது சமீம் ஒரு முகவுரை – டொக்டர்.எம்.எல்.நஜிமுதீன்,
கல்விமான் சமீம் – ஐ.எல்.எம்.சுஹைப்
ஆகிய கட்டுரைகளும் இடம் பெறுகின்றன.
என்னைப் பற்றி சில குறிப்புகள் – முகமது சமீம். தானே தன்னைப் பற்றி எழுதிய கட்டுரை மிக முக்கியமானது.
இதில் பதுளை நகரம் பற்றி எழுதப்பட்ட பகுதிகள் மிகவும் சுவார்ஸமானவை. சுரஸ்வதி வித்தியாலயத்தில் படிக்கும் போது தலை ஆசிரியர் வீட்டிற்கு தோட்டத்தில் வேலை செய்வதற்கு அனுப்பதை எதிர்த்த சம்பவமானது சிறு வயதிலேயே அவரிடத்தில் இருந்து ஒடுக்குமுறைக்கு அடங்காத பண்பைச் சுட்டிக் காட்டுகிறது.
மிகச் சுவார்ஸமான இன்னொரு விடயம் முட்டை வீச்சுச் சம்பவம் பற்றிய அவரது நேரடிப் பங்கு பற்றிய விபரிப்பு. இன்று பேராசிரியர் சிவத்தம்பி முதல் பலரும் அதனை ஒரு தவறான செய்கையாகக் கூறுகின்றனர்.
‘சிவத்தம்பி கூட்டதிலிருந்து கிளம்பிவிட்டார். முற்போக்கு எழுத்தாளர்கள்தான் செய்தார்கள் என்று சொல்வதற்கு எந்த அருகதையும் இல்லை’ என்கிறார்.
‘சூரத் மகாநாட்டில் எப்படி ஒரு திருப்பம் ஏற்பட்டதோ அதேபோல இந்தச் சம்பவத்திற்குப் பிறகு முற்போக்கு எழுத்தாளர்களுடைய புதிய பார்வையை இலக்கிய உலகம் ஏற்றுக் கொண்டது இலங்கை இலக்கிய வரலாற்றில் இது ஒரு மைல்கல்லாக அமைந்தது. ….. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு பண்டிதர்களின் இரும்புப் பிடியில் இருந்த தமிழிலக்கியம் மக்கள் இலக்கியமாக மாறியது’
முடிவாக
மிகச் சிறப்பாகத் தொகுக்கப்பட்ட நூல். அந்த நூலைத் தொகுத்த ஏ.இக்பால், மற்றும் நூலை வெளியிட்ட இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையும் பாராட்டுக்கு உரியவர்கள்.
ஆயினும் சில குறைபாடுகள்
1. இந்த நூலை மேலும் சிறப்பாகத் திட்டமிட்டு தயாரித்திருக்கலாம்.
2. சொல்வது மீளச் சொல்வது பல இடங்களில் இடம்பெறுகிறது. முக்கியமாக அவரது தொழிற் பணிகள் வாழ்க்கை பற்றி
3. அவரது படைப்புலகம் பற்றிய பார்வைகள் மிகக் குறைவு.
4. ஓவ்வொரு நூலையும் தனித்தனியாக ஒவ்வொரு விமர்சகர் மூலம் ஆய்வு செய்து விமர்சனம் எழுதியிருந்தால் மிக முக்கியமான ஆவணமாகப் பயன்பட்டிருக்கும்.
5. அவரால் எழுதப்பட்டு நூலக வெளிகரா படைப்புகள் பற்றிய தரவுகள் மிகக் குறைவு. இக்பாலது கட்டுரை சில தரவுகளைத் தந்திருப்பது பாராட்டதக்கது.
சமூக முன்னேற்றத்திற்கு உந்து கோலாக இருந்த நபர்களின் பணிகளை ஆய்வு செய்யும் இத்தகைய நூல்களின் வரவு முக்கியமானது.
எம்.கே.முருகானந்தன்.