“இந்தப் பிள்ளைக்கு சரியான வயிற்று வலி” சிங்களத்தில் சொன்னார்.
நான்கே வயதான குட்டிப் பையனை இரு கைகளாலும் கிடையாகத் தூக்கி கொண்டு வந்தார்.
ஓட்டமா நடையா என்று சொல்ல முடியாத வேகம். அந்தரப்பட்டு வந்திருந்தார்.
குழந்தை படுக்கவும் முடியாமல் இருக்கவும் முடியாமல் வேதனையில் முனங்கியபடி திணறிக் கொண்டிருந்தது.
“ஒண்டுமே சாப்பிடுதும் இல்லை. குடிக்கிதும் இல்லை.” என்றாள் தொடர்ந்து வந்த பெண்.
பின்னால் ஒரு பெரிய கூட்டம்.
எனது கொன்சல்டேசன் அறைக்கு அப்பால், நடைபாதை, வரவேற்பறை எல்லாம் நிறைந்ததால், வாசலில் தெருவோரத்திலும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
பொது கழிப்பறையில் நிலமெல்லாம் பரவும் மூத்திர வெள்ளம் தோற்றுப்போகும்
தேசத்தின் தென்கோடியிலிருந்து சுற்றுலா வந்திருந்தார்கள். பஸ் நிறையச் சனம். நேற்று இரவு புறப்பட்ட பயணம். இரவிரவாகப் பயணித்து கொழும்பு வந்திருந்தார்கள்.
அதனால்தான் பட்டியிலிருந்து திறந்துவிட்ட மாடுகள் போல, சாலை விதிகளை மதிக்காது சிதறிக் கிடந்தார்கள்.
மிருகக் காட்சிசாலை, நூதனசாலை எனக் காலையில் சுற்றியடிக்கும்போது குழந்தைக்கு வலி தொடங்கிவிட்டது. என்னிடம் வரும்போது மதியம் தாண்டிவிட்டது. குழந்தை வலியால் மயங்காத குறை.
“படுக்கையில் கிடந்துங்கோ. சோதித்துப் பாப்பம்”
தகப்பன் கிடத்த முயன்றபோது சிவபெருமான் கழுத்தில் பாம்பாக குழந்தை கைகளால் சுற்றிக் கொண்டது.
தூக்குக் கயிறாகி தகப்பனை கைலாசத்திற்கு அனுப்பிவிடும் என்ற பயத்தில் பரிசோதிக்கும் முயற்சியைக் கைவிட வேண்டியதாயிற்று.
“குழந்தை என்ன சாப்பிட்டது”
“காலையிலை பணிஸ் சாப்பிட்டு பாலும் குடிச்சது. பிறகு சோடாவும் குடிச்சது. இப்ப இரண்டு மணித்தியாலமாகத்தான் இந்தக் குத்து.”
வந்த இடத்திலை கண்ட சாப்பாட்டையும் பிள்ளைக்குச் சாப்பிடக் கொடுத்திருக்குங்கள். செமியாமல் இருக்கும். அல்லது உணவு நஞ்சானதால் ஏற்பட்டிருக்கும்.
“சத்தியும் இருக்கோ?” எனக் கேட்டேன்.
“இல்லை” எனப் பதில் வந்தது.
காய்ச்சல் இருக்கோ எனத் தொட்டுப்பார்க்க முயன்றேன்.
தொற்றாட் சுருங்கிபோல என்னைக் கண்டதும் சோர்ந்தது குழந்தை.எனது கையில் தனக்கெதிரான ஆயுதங்கள் எதுவும் இல்லை என அறிந்ததும் நிம்மதியடைந்தது. ஊசி, காய்ச்சல் கம்பி, ஸ்டெதஸ்கோப் எதுவும் என் கையில் இருக்கவில்லை!!.
தொட்டபோது உடல் வியர்திருந்ததே ஒழிய காய்ச்சல், குளிர் எதுவும் இல்லை.
கடுமையான வலியாக இருப்பதாலும், குழந்தை படுக்க முடியாமல் குறண்டியபடி தகப்பன் கைகளில் சுருண்டு கிடப்பதால் குடல் கொழுவல், அப்பன்டிசைடிஸ், பெரிடனைடிஸ் என ஏதாவது ஏடாகூடமான நோயாக இருக்கலாம்.
தீவிரமாக யோசிக்க வேண்டியிருந்து.
நோயைப் பற்றி அல்ல! எவ்வாறு குழந்தையை படுக்கையில் விட்டுப் பரிசோதிப்பது என்பதையிட்டு.
அப்பொழுது சுவீப் எனக்கு விழுந்தது.
பிள்ளையைதை் தொடாமலே நோயை ஊகிக்க முடிவதைவிட வேறென்ன சுவீப் எனக்குக் கிடைக்க முடியும்?
குழந்தை சற்று அமைதியாகி தனது தகப்பனின் கைகளில் சற்று உடலை நிமிர்த்திப் படுத்தது. குறண்டிக் கிடந்த உடல் நிமிர அதன் வயிற்று பகுதி தெளிவாகத் தெரிந்தது.
“பிள்ளையை பாத்ரூமிற்கு கொண்டு போய் காலை நன்கு குளிரக் கழுவிட்டு மூத்திரம் கழிக்க விடுங்கோ”
ஆச்சரியம் தகப்பன் முகத்தில் படர்ந்தது.
குழந்தை பரிசோதிக்காமல், வேதனையைத் தணிக்க மருந்தும் தராமல் பாத்ரூமிற்குக் கலைக்கிறாரே என்றதில் சிறிது கோபமும் தெறித்தது போலிருந்தது.
மறுக்க முடியாமல், வெறுப்போடு குழந்தையைத் தூக்கிக் கொண்டு சென்றார்.
திரும்பி வந்தபோது குழந்தையின் முகத்தில் வேதனையின் சுவட்டையே காண முடியவில்லை.
கட்டிலில் கிடத்தியபோது மறுப்பின்றி நீட்டி நிமிர்ந்து படுத்து, ஆயாசம் அடங்க கண்ணை மூடியது.
வயிற்றைப் பார்த்தேன்.
அடிவயிற்றில் இருந்த முட்டி காணமல் போயிருந்தது. தொட்டபோது வேதனை இல்லை.
வேறொன்றும் இல்லை. இரவிரவாகப் பயணம், பகல் முழுவதும் ஊர் சுற்றிப் பொழுதுபோக்கு. முதல் நாள் இரவிலிருந்து சிறுநீர் கழியாததால், அடைத்து வயிறு வீங்கி வலி எடுத்திருந்தது.
காலைக் கழுவி உடலைச் குளிர வைத்ததும் அடைத்த பைப் திறந்துவிட்டது.
திறந்து மூத்திரம் வெளியேற்றியதும் முட்டி போல வீங்கியிருந்த மூத்திரப்பை காலியாகிவிட்டது.
வலி குணமாகிவிட்டது.
அடுத்த முறை இரவு பஸ்சில் யாழ்ப்பாணம் போகும்போது எனக்கு வயிற்றுக் குத்து வந்தால் என்ன செய்வது என்ற பயம் வந்தது.
வெள்ளவத்தையில் வெளிக்கிட்டு ‘நொன் ஸ்டொப் டிரைவிங்’ செய்தால் வயது போன ஆம்பிளையள், அதுவும் புரஸ்ரேட் வீக்கக்காரர் பாடு அதோகதிதான்.
கணவன் கழிப்பதற்கு மனிசிமாரால் தூக்கிக் கொண்டு போக முடியுமா?
எலக்சன் காலத்திலை அரசாங்கக் கட்சி வேட்பாளருக்குத் தெரிந்திருந்தால், வீதி எங்கும் கக்கூஸ் (பாத்ரூம்) கட்டுவதாக வாக்களித்திருப்பார்கள்.
பிறகென்ன?
தோற்றவுடன் காணாமல் போயிருப்பார்.
ஞாயிறு வீரகேசரியில் நான் எழுதிய கட்டுரை
எனது அனுபவப் பகிர்வு புளக்கான Steth இன் குரல் ல் ஏற்கனவே வெளியான கட்டுரை