Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for நவம்பர், 2013

முட்டையில் இப்ப கொலஸ்டரோல் குறைவாம் உண்மையா? முட்டையும் கொலஸ்டரோல் பிரச்சனையும்

ஆனந்தத் தாண்டவம் ஆடாத குறையாக நுழைந்தார் ஒரு பெரியவர்.

Eggs-MAIN

“நல்ல செய்தி ஒண்டு பேப்பரிலை வந்திருக்கு பாத்தியளோ'” என்று கேட்டார்.

“காலையில் வேலைக்குப் போற அவசரத்திலை தலைப்புச் செய்தியளைப் பார்த்துப் போட்டு ஓடுறதுதான். ஒழுங்காப் பாக்க முடியிறதில்லை. ஏதாவது எஸ்எம்எஸ் தகவல் வந்தால்தான் தெரியும்” என்று சொல்ல வாயெடுத்தும், என்ரை வண்டவாளங்களை அவருக்கு ஏன் சொல்லுவான் என நினைத்து அடக்கிக் கொண்டேன்.’

”ஏன் என்ன விசயம்” என மட்டும் கேட்டேன்.

kids-eating

“இப்பத்தைய முட்டையளிலை கொலஸ்டரோல் குறைவாம். முந்தி நாங்கள் முட்டைக் கோப்பி எண்டும், அரை அவியலெண்டும், பொரியல் குழம்பு எண்டும் எவ்வளவு திண்டிருப்பம். கொஞ்சக்காலமா முட்டை கூடாது எண்டு டொக்டர்மார் எங்களைக் குழப்பிப் போட்டினம். இனி வாசிதான், மனிசிக்கும் முட்டை நிறையச் சமை எண்டு சொல்லிப் போட்டன்” என்றார்.

அவர் சொன்னதிலை உண்மையும் உண்டு, ஆராய வேண்டிய விடயங்களும் உண்டு.

முட்டையில் கொலஸ்டரோல்

ஓவ்வொரு முட்டையிலும் சுமார் 225 மி கிராம் கொலஸ்டரோல் உண்டு. அமெரிக்க அரசின் ஆதரவிலான ஆய்வு ஒன்றின்படி தற்போதைய முட்டைகளில் முன்னை நாள் முட்டைகளை விட 13 சதவிகிதம் குறைந்தளவே கொலஸ்டரோல் உள்ளது. அதேநேரம் முட்டையில் விட்டமின் டீ யின் அளவ 64 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

Egg Nutrition Facts

இதற்குக் காரணம் கோழி வளரப்பின் போது கோழி உணவாக வழங்கப்பட்ட எலும்புத் துகள்கள் இப்பொழுது கொடுக்கப்படுவதில்லை. அதற்குப் பதிலாக சோளம் கோதுமை கலந்த புரதம் கூடிய கோழித் தீவனமே உபயோகிக்கப்படுகிறது.

முட்டைகளில் கொலஸ்டரோல் அளவு குறைந்து விட்டமின் டீ யின் அளவு அதிகரித்ததால்தான் முட்டை நல்ல உணவு என பத்திரிகைகள் பேசின. விட்டமின் டீ யானது ஒஸ்டியோபொரோசிஸ் போன்ற எலும்புச் சிதைவு நோய்களைத் தடுக்க உதவும் என்பது உண்மைதான்.

குருதியில் கொலஸ்டரோல்

Anatomy-of-an-Egg

முன்னைய காலங்களில் வாரத்திற்கு இரண்டு முட்டைகள் மாத்திரம் உபயோகிக்கும்படி நீரிழிவு, கொலஸ்டரோல், பிரஷர் போன்ற நோயுள்ளவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. ஏற்கவே மேற்கூறிய நோய்களால் பாதிக்கப்பட்டு இருதய நோய்கள் வர வாய்ப்புள்ளவர்களுக்கு முட்டையினால் கொலஸ்ரோல் அதிகரித்தால் ஆபத்து அதிகமாகலாம் என அஞ்சியதே அதற்குக் காரணமாகும்.

அதாவது அந்த நேரத்தில் நாம் உணவில் உட்கொள்ளும் கொலஸ்டரோலே எமது குருதியில் கொலஸ்டரோல் அதிகரிப்பதற்கான காரணம் என நம்பப்பட்டது.

heart_graph_020508_b

ஆயினும் பின்னர் வந்த ஆய்வுகளின் பிரகாரம் எமது உணவில் உள்ள கொலஸ்டரோலை விட நாம் அதிகளவில் உட்கொள்ளும் எண்ணெய் மற்றும் கொழுப்பு உணவுகளே குருதியில் கொலஸ்டரோல் அதிகரிப்பதற்கான பிரதான காரணம் என்பது கண்டறியப்பட்டது. அதிலும் முக்கியமாக நிரம்பிய கொழுப்பு அமிலம் உள்ள உணவுகளே காரணம் என்பது தெரிய வந்தது.

முட்டைகள் உண்ணலாமா?

எனவே “நான் தினமும் முட்டைகள் உண்ணலாமா?” என நீங்கள் கேள்வி கேட்டால் எனது விடை ‘ஆம்’ என்றே இருக்கும்.

ஆனால் “முட்டையை எவ்வாறு உட்கொள்ளப் போகிறீர்கள்” என்பது எனது குறுக்குக் கேள்வியாக இருக்கும்.

EggDone2 (1)

எண்ணெயில் பொரித்த முட்டைகளும், நிறைய வெண்ணெய் போட்டுத் தயாரித்த ஒம்லெட்டும் எனில் ஆகாது எனலாம். பொரிப்பதற்கும் வதக்குவதற்கும் நீங்கள் சேர்க்கும் எண்ணெய்களும், பட்டர், மாஜரீன் போன்றவற்றில் கொழுப்பு அதிகம் உண்டு. அவை உங்கள் கொலஸ்டரோலை அதிகரிக்கும்.

அதற்குப் பதிலாக முட்டையை அவித்துச் சாப்பிடலாம். கறி சமைத்துச் சாப்பிடலாம். எண்ணெயின்றி வறுத்தும் உண்ணலாம்.

eggs-in-shell1

“‘அவ்வாறு கொலஸ்டரோலை அதிகரிக்காது என்றால் வகை தொகையின்றி எவ்வளவு முட்டைகளும் சாப்பிடலாமா?”

சமபல உணவு

எவ்வளவும் சாப்பிடலாமா என்பது பகுத்தறிவு இல்லாதவன் மட்டுமே கேட்கக் கூடிய கேள்வியாகும்.

ஏனெனில் ஆரோக்கியமாக வாழ வேண்டுமாயின் போசாக்குள்ள உணவுகளை உண்ண வேண்டும். அந்த உணவானது சமபல அளவுள்ளதாக டியடயnஉநன னநைவ  இருக்க வேண்டும். சமபல உணவில் மாப்பொருள், புரதம், கொழுப்பு, விற்றமின்கள், தாதுப்பொருட்கள் என யாவும் அடங்க வேண்டும். அதனைக் குலைக்காமல் உண்ணலாம்.

egg_protein_chart

முட்டையில் சுமார் 7 கிராம் அளவில் உயர்தரப் புரதம் இருக்கிறது. இதனையொத்த சிறந்த புரதம் பாலில் மட்டுமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முட்டையில் கலோரி மிகக் குறைவு 75 கலோரி மட்டுமே. 5 கிராமளவு கொழுப்பு இவற்றுடன் விற்றமின் ஏ, அயடின், கரோடினொயிட்ஸ் போன்ற போசாக்குகள் உள்ளன. இவற்றுடன் lutein, zeaxanthin போன்றவையும் உண்டு. இவை நோயதிர்புச் சக்தியும் உடையவை.

எனவே நல்ல போசாக்குள்ள உணவு. தினமும் சாப்பிடலாம்

பிரித்தானியாவில் ஒருவர் சராசரியாக வாரத்திற்கு 3 முட்டைகளே உட்கொள்கிறார்களாம். ஆயினும் அவர்களில் கொலஸ்டரோல் பிரச்சனை அதிகமாக இருப்பதற்கு காரணம் கொழுப்புள்ள ஏனைய உணவுகளேயாகும். முக்கியமாக கொழுப்புள்ள இறைச்சி வகைகள், பாலும் பாற் பொருட்களும், அவசர உணவுகளும் நொறுக்குத் தீனிகளும்தான்.

அவர்களைப் பொறுத்தவரையில் சீஸ், பட்டர், ஆடைநீக்காத பால், சொசேஜஸ், கேக், பிஸ்கற், பேஸ்ரி, கொழுப்பு நீக்காத இறைச்சியும் காரணமாகின்றன.

நாங்களும் அவற்றையெல்லாம் இப்பொழுது அமோகமாக உண்ணத் தொடங்கிவிட்டோம். சத்துடன் எங்களுக்கே விசேடமான வடை, முறுக்கு, மிக்ஸர், பகோடா, பற்றிஸ், ரோல்ஸ், சமோசா என அடுக்கிக் கொண்டே போகலாம். நொட்டைத் தீனீ, நொறுக்குத் தீனீ, அவசர உணவு, குப்பை உணவு என எவ்வாறு பெயர் சொன்னாலும் இவை யாவுமே கொழுப்பு அதிகமுள்ள உணவுகள்தான். இவையேதான் இப்பொழுது இங்கு எடை அதிகரிப்பதற்கும், நீரிழிவு பெருகுவதற்கும், மாரடைப்புகள் மலிந்ததற்கும் காரணமாகிவிட்டன.

கொலஸ்டரோல் அதிகரிப்பையும் மாரடைப்பையும் பற்றிய கவலை உங்களுக்கு இருந்தால் நீங்கள் கட்டுப்படுத்த வேண்டியது முட்டையை மட்டும் அல்ல. மேற் கூறிய கொழுப்பு உணவுகளே முக்கியம் என்பதை மறந்து விடாதீர்;கள்.

முட்டையால் வேறு ஆபத்துக்கள்

கொலஸ்டரோலைத் தவிர வேறு முக்கிய ஆபத்தானது முட்டையால் உணவு நஞ்சாதல் ஆகும்.

எவ்வளவும் சாப்பிடலாம் என ஆனந்தத்தோடு வந்தவர் தனது இளமைக் காலத்தில் தனது வீட்டுக் கோழி இட்ட முட்டைகளை சாப்பிட்டிருப்பார். அவற்றில் கிருமி தொற்றுவது குறைவு. இன்று கோழிகள் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன. எதாவது கிருமித்தொற்று ஏற்பட்டால் அது பல கோழிகளுக்கும் பரவியிருக்கும். அந்தப் பண்ணையிலிருந்து வரும் முட்டைகளில் கிருமி தொற்றியிருக்கலாம். பொதுவாக salmonella bacteria தொற்று ஏற்படுகிறது.

“முட்டைக் கோப்பி எண்டும், அரை அவியலெண்டும்” அவர் அந்தக் காலத்தில் சாப்பிட்டது இந்தக் காலதிற்கு சரிவராது. கோப்பி அரை அவியல் சூடானது முட்டையில் உள்ள கிருமிகளைக் கொல்வற்குப் போதுமானதல்ல.

எனவே முட்டைக் கோப்பி அரை அவியல் போன்றவை வேண்டாம்.

இறுதியாக

ஒவ்வொரு முட்டையிலும் சுமார் 225 மிகிராம் உள்ளது. ஆனால் நாம் தினசரி 300 மிகிராம் அளவு கொலஸ்டரோலை மட்டுமே உணவில் இருந்து பெற வேண்டும் என அமெரிக்க இருதயச் சங்கம் பல வருடங்களுக்கு முன்னரே அறிவித்துள்ளது. அதில் எந்த மாற்றத்தையும் மீள அறிவித்ததாகத் தகவல் இல்லை. எனவே ஆரோக்கியமான ஒருவர் நாளாந்தம் ஒரு முட்டை சாப்பிடுவதில் தவறில்லை என்றே சொல்லக் கூடியதாக இருக்கிறது.

இருந்தாலும் கொலஸ்டரோல் குருதியில் அதிகமாக உள்ளவர்களும் மாரடைப்பு வந்தவர்களும் அது வருவதற்கான வாய்ப்பு உள்ளவர்களும் தமது கொலஸ்டரோல் அளவுக்கு ஏற்ப மருத்துவ ஆலோசனையுடன் வாரத்திற்கு எத்தனை முட்டை எனத் தீர்மானிப்பது நல்லது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.0.0.0.0

Read Full Post »

“இரும்பிலைதான் குசினிச் சாமான்களை எல்லாம் வாங்கி வைக்க வேணும் போலை கிடக்கு. சாப்பாட்டு பிளேட் கப் கிளாஸ் என்று ஒண்டும் மிச்சமில்லாமல் போட்டு உடைக்கிறாள்”

தனது மனைவிமேல்தான் அவருக்கு அவ்வளவு கோபம். அவளும் கோபக்காரியா? திரைப்படங்களில் காண்பது போல ஆவேசமான மனைவியா என்று எண்ணி அவளது முகத்தைப் பார்த்தேன். சாந்த சொரூபியாகத்தான் தோற்றமளித்தாள்.

சாந்தசெரூபி போட்டு உடைப்பது ஏன்?

விறைப்பு எரிவு வலிகள்

உடலின் சில குறிப்பிட்ட பகுதிகளில் விறைப்பது போல அல்லது உணர்விழந்தது போன்ற உணர்வு ஏற்படுவது புதினமானது அல்ல. கையை எங்காவது இசகு பிசகாக வைத்து தூங்கிக் காலை விழித்து எழுந்தவுடன் அவ்விடம் விறைந்தது போலவும், கூச்சம் போல அல்லது அதிர்வு போலவும் தோன்றுவதை உதாரணம் கூறலாம்.

tingling-in-fingertips

ஆனால் இது கைகளில்தான் ஏற்படும் அல்ல. கைகளில் கால்களில் விரல்களில் மேல்கைகளில் தொடைப்புறத்தில் தோள் பட்டையில் என உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் தோன்றலாம்.

சுவாரஸ்யமான காரணங்கள்.

மருத்துவ மாணவர்களாக இருந்த காலத்தில் Honeymoon palsy என விரிவுரையாளர் எனக் கற்பிக்கும்போது கிளர்ச்சியடைந்தோம். திருமணமான முதலிரவில் புது மனைவியுடன் கலந்து கலந்து களைத்து அவளும் சோர்ந்து உங்கள் கைளிலிலேயே தலை வைத்துத் தூங்கியிருப்பாள்.

காலையில் விழித்து எழும்போது உங்கள் பெருவிரலும், சுட்டி விரலும் நீட்டி மடக்க முடியாதபடி மரத்துக் கிடப்பதைக் கண்டு பதறுவீர்கள். ராசி அற்ற பெண் என மனதுள் திட்டுவீர்கள். இது அநனயைn நெசஎந நீண்ட நேரம் அழுத்தப்படதால் ஏற்பட்டதாகும். தானாகவே குணமாகும்.

இதே போன்றதே Saturday night palsy என்பதுவும் ஆகும். வார இறுதிநாள் போதையில் கதிரையின் கைப்பிடியில் கை போட்டபடி தூங்கிய பின் காலை விழிதெழும்போது சயனயைட நெசஎந அழுத்துப்படுவதால் ஏற்படுவதாகும்.

வேறு பல காரணங்கள்

மேலே கூறிய கிளுகிளுப்பான காரணங்கள் தவிர, வேறு ஏராளமான காரணங்கள் இருக்கவே செய்கின்றன.
ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்;ந்திருக்கும்போது, அதுவும் காலுக்கு மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கும்போது மரப்பதற்கான சாத்தியம் அதிகம். ஆனால் இது தற்காலிகமானது. சிறிது நேரத்தில் குணமாகிவிடும்.

முள்ளந் தண்டு எலும்புகள் தேய்ந்து, முண்நாணிலிருந்து வெளியே வரும் நரம்புகளை அழுத்துவதாலும் ஏற்படும். கழுத்து எலும்புகளில் ஏற்படும் தேய்வானது கைகளில் எரிவு, மரத்தல் போன்ற அறிகுறிகளைக் கொண்டு வரும். அதேபோல நாரிப்பகுதி முள்ளந் தண்டு பாதிப்புறுவதால் ஏற்படும் வலி விறைப்பு போன்றவை கால்களில் வெளிப்படும்.

to the foot.

நரம்புக் கொப்பளிப்பான் பற்றி அறிந்திருப்பீர்கள். ஏதாவது ஒரு நரம்பின் பாதையில் மட்டும் கொப்பளங்கள் தோன்றும். இதனால்; வலி எரிவு போன்ற பாதிப்புகளை அந்த நரம்பின் பாதையில் மட்டுமே கொண்டுவரும். சிலரில் இந்த வலியானது கொப்பளங்கள் கருகி நோய் மாறிய பின்னரும் நீண்ட காலத்திற்கு தொடரும்.

சிலரில் பெருவிரல் சுட்டு விரல், நடுவிரல் அடங்கலான கைகளின் வெளிப்புறத்தில் வலி, விறைப்பு போன்ற அறிகுறிகள் இருக்கும்.

19687

இதை Carpal tunnel syndrome என்பார்கள். இது மணிக்கட்டின் உட்புறம் ஊடாக உள்ளங்கை மற்றும் விரல்களுக்கு வரும் நரம்பு அழுத்தப்படுவதால் வருவதாகும். பொதுவாக மூட்டுவாதம், தைரொயிட் நோய்கள். அதீத எடை போன்றவை இருப்பவர்களில் அதிகமாக ஏற்படும்.

கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட பெண்ணுக்கு இருந்தது இந்த நோய்தான். அடிப்படைக் காரணத்தை கண்டறிந்து சிகிச்சை செய்ய வேண்டும். இவருக்கு அவ்விடத்தில் ஊசி போட நேர்ந்தது. வேறு சிலருக்கு நரம்பில் ஏற்படும் அழுத்ததைக் நீக்க சிறிய சத்திர சிகிச்சையும் தேவைப்படுவதுண்டு.

9-diet-dos-and-donts-for-diabetic-neuropathy-1

நீரிழிவு

‘எங்கை அப்பா ஒரு செருப்பை விட்டிட்டு வந்தனீங்கள்’ மனைவி நக்கலாகக் கேட்டதும் குனிந்து பார்த்தார் ஆம் ஒரு காலில் செருப்பைக் காணவில்லை. ஒரு காலிலிருந்த செருப்பு கழன்று விடுபட்டதை அறியாமல் நடந்து வந்திருக்கிறார். இதற்குக் காரணம் காலின் உணர்திறன் நரம்புகள் பாதிப்புற்றதுதான்.

கால்கள் மெத்தைபோல இருப்பதாக இவர்கள் சொல்லுவார்கள். தார் ரோட்டில் கால் வைத்தாலும் சுடாதளவு விறைப்பு உள்ளவர்கள் காலில் பெரும் புண்களோடு வருவார்கள். கோயிலிலும் கடற்கரையில் வெறும் காலுடன் நடக்குப்போது முள்ளு ஆணி கிளாஸ் துண்டு ஏதாவது குத்தி ஏறியிருக்கும். உள்ளுக்குள் கிடந்து சீழ்பிடித்து மனைந்தபின்தான் அவர்களுக்கே தெரியவரும்.

கால்கள் மரத்துப்போவது மாத்திரமன்றி சிலருக்கு எரிவு உளைவு போன்ற வேதனைகளும் இருக்கலாம். விற்றமின் குறைபாடு, தொழுநோய் அடங்கலான பல்வேறு நோய்கள் காரணமாக இருக்கலாம். ஆனால் நாம் அதிகமாகக் காண்பது நீரிழிவு நோயாளரில்தான்.

நீரிழிவாளர்களில் கால்களில் விறைப்பு வந்துவிட்டால் முற்று முழுதாக மாற்றுவது கஷ்டம். ஆரம்ப காலம் என அலட்சியப்படுத்தாது நீரிழிவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதே இது வராமல் தடுக்கக் கூடிய ஒரே வழியாகும்.

பக்கவாதம்

பக்கவாதம் வரும்போது அங்கங்கள் செயலிழப்பது மட்டுமின்றி எரிவு, விறைப்பு போன்ற உணர்திறன் பாதிப்புகளும் ஏற்படுவதுண்டு. அதேபோல வலிப்பு நோய் வருபவர்களிலும் நரம்புகள் பாதிப்பு ஏற்பட்டு விறைப்பு எரிவு போன்ற அறிகுறிகள் ஏற்படுவதுண்டு.

பக்கவாதம் போலவே தோன்றி மறையும் வாதம் எனவும் ஓன்று உண்டு. பக்கவாதம் போலவே கை கால்கள் செயலிழத்தல், மயக்கம் வருதல் போன்ற அறிகுறிகள் தோன்றி எந்தவித சிகிச்சையும் இன்றி தானே மறைந்து விடும். இதனை மருத்துவத்தில் Transient ischemic attack (TIA), அல்லது ‘mini-stroke’ என்பர். குணமாகிவிட்டது என நிம்மதியாக இருக்க முடியாது. இத்தகையவர்களுக்கு முழுமையான பக்கவாதம் வருவதற்கான சாத்தியம் அதிகம் என்பதால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

கால்களில் விறைப்பு ஏற்படுவதற்கு விட்டமின் பீ12 (Vitamin B12)  குறைபாடு ஒரு முக்கிய காரணமாகும். இது முக்கியமாக மீன், இறைச்சி, ஈரல், சிறுநீரகம், பால் போன்றவற்றில் காணப்படுகிறது. இதனால் தாவர உணவு மட்டும் உண்பவர்களில் இது வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும். கால் விறைப்பு மட்டுமின்றி, இரத்த சோகை, வாயில் புண்கள், கடைவாய்ப் புண், நாக்கு அவிச்சல் போன்ற பிரச்சனைகளையும் விட்டமின் ஏவையஅin டீ12  குறைபாடு ஏற்படுத்தும்.

மது அருந்துபவர்களிலும் விறைப்பு எரிவு நோய்கள் வருவது அதிகம். மது அருந்தும் சிலர் ஒரு Vitamin B12    ஊசி அடித்துவிடுங்கோ என வருவதுண்டு. ஓட்டைப் பானையில் தண்ணி விட்டு நிரப்ப முனைபவர்கள் அவர்கள். மதுவினால் பல பாதிப்புகள் ஏற்படும். அதில் போசாக்கு உணவின்மையால் ஏற்படும் B12 குறைபாடும் ஒன்று. ஊசி போடுவதால் மட்டும் அவர்களைக் குணமாக்க முடியுமா?

புகைத்தலும் மற்றொரு காரணமாகும்.

எமது உடலில் கல்சியம், பொட்டாசியம்; போன்ற தாதுப் பொருட்கள் உள்ளன. இவற்றில் ஏற்படும் குறைபாடுகளும் மாற்றங்களும் அத்தகைய அறிகுறிகளுக்கு காரணமாகலாம்.

விறைப்பும் உணர்வு குறைதலும் பல பிரச்சனைகளை பாதிப்புற்றவருக்கு ஏற்படுத்தும். பொருட்களை இறுக்கமாக பற்ற முடியாமை, கால்களில் ஆணி முள்ளு ஆகிய குத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றிக் கூறினோம். உணர் திறன் குறைவாக இருப்பதால் நடக்கும்போது அடி எடுத்து வைப்பது திடமாக இருக்காது. இதனால் விழுவதற்கும் காயம் படுவதற்கான சாத்தியங்களும் அதிகமாகும். வீதி விபத்துகளில் மாட்டுப்படும் அபாயமும் உண்டு.

உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டுமா?

பெரும்பாலான விறைப்பு எரிவு என்பன படிப்படியாக வருபவை. அவற்றை நீங்களாகவே அவதானித்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

ஆயினும் கீழ்க் கண்ட அறிகுறிகள் இருந்தால் காலம் தாழ்த்தாது உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

  • திடீரென அங்கங்கள் செயலிழந்து ஆட்டி அசைக்க முடியாது இருந்தால் அவசர சிகிச்சை பெற வேண்டும்.
  • விழுந்து அல்லது தலை கழுத்து அல்லது முள்ளந்தண்டில் அடிபடுவதைத் தொடர்ந்து விறைப்பு எரிவு போன்ற அறிகுறிகள் தோன்றினாலும் உடனடியாக ஆலோசனை பெறுங்கள்.
  • திடீரென உங்களது அங்கங்களை ஆட்டி அசைக்க முடியாது போனாலும்.
  • மலம் சலம் வெளியேறுவதை உங்களால் திடீரென கட்டுப்படுத்த முடியாதுவிட்டால்.
  • திடீரென மயக்கம், நினைவுக் குழப்பம் மாறாட்டம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால்.
  • திடீரென ஏற்படும் பார்வைக் குறைபாடு, கொன்னித்தல், நடைத்தடுமாற்றம் போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரை நாடுங்கள்,

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை கை கால்களில் எரிவு விறைப்பு வலிகள் வருவது ஏன்?

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

0.0.0.0.0.0.0.0

Read Full Post »

“ஈரலில் கொழுப்புக் கூடிப் போச்சு” என்பது இப்பொழுது புதினமான கதை அல்ல.

“உங்கடை ஈரலிலை கொழுப்பு விழுந்திருக்காம்” என்று சொன்னதும் கொழு கொழு என மதத்திருந்த குண்டான மனிதரது முகம் தொய்ந்துவிட்டது.

“இதென்ன புதுக் கதையாக் கிடக்கு. வயித்துக் குத்து எண்டு உங்களட்டை வந்தனான். சலக் குழாயிலை கல்லு இருக்கும் போலை எண்டு ஸ்கான் பண்ண அனுப்பினியள். இப்ப எல்லாத்தையும் விட்டிட்டு ஈரலிலை கொழுப்பு எண்டு சொல்லுறியள்.”

fatty liver

உண்மைதான் இப்பொழுதெல்லாம் பலரது வயிற்றறையை வேறு தேவைகளுக்காக அல்ரா சவுண்ட் ஸ்கான் செய்த (ultra Sound Scan of Abdomen)  ரிப்போட்டுகளைப் பார்க்கும்போது அவர்களது ஈரலில் கொழுப்பு என ஸ்கான் செய்த ரேடியோலஜிட் ரிப்போட் அனுப்புகிறார்கள். கொழுப்புள்ள ஈரல் (Fatty liver) இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள்.

எவரது ஈரலிலிலும் சற்று கொழுப்பு இருப்பது இயல்பானதே. ஆனால் அதன் அளவானது ஈரலது நிறையின் 5மூ-10மூ சதவிகிதத்திற்கு அதிகமாகும் போதுதான் அதை கொழுப்புள்ள ஈரல் என்போம்.

ஈரலில் கொழுப்பு படிவதை இரண்டு வகையாகப் பார்க்கலாம்

  1. மதுவினால் ஏற்படும் கொழுப்புள்ள ஈரல்
  2. மது அற்ற காரணங்களினால் ஏற்படும் கொழுப்புள்ள ஈரல்

மதுவினால் ஏற்படும் கொழுப்புள்ள ஈரல்

முடாக் குடியர்களின் பிரச்சனை இது. மதுவை அதீதமாக உபயோகிக்கிறவர்கள் அமெரிக்காவில் மட்டும் 15 மில்லியன் மக்கள் இருக்கிறார்களாம்.

நாங்கள் குறைவில்லை. சராசரியாக அதிகளவு மது அருந்துவர்கன் நாடுகளின் பட்டியலில் செக்சொஸ்லேவியா. பிரான்ச் மற்றும் ரஷ்யா மட்டுமே இலங்கையை முந்தி நிற்கின்றன. அதிலும் யாழ் மாவட்டம் போட்டியில் முன் நிற்கிறது.

இவ்வாறு அதீதமாக மது பாவிக்கும் அனைவருக்கும் (90%-100% )  ஈரலில் கொழுப்பு வருவது நிச்சயம். தொடர்ந்து அதிகமாக மது அருந்துபவர்களில் மட்டுமின்றி குறிப்பிட்ட குறுகிய காலத்திற்கு அதீதமாக மது அருந்துபவர்களிலும் ஈரலில் கொழுப்பு ஏற்படக் கூடும். மதுவைத் தவிர்ப்பது மட்டுமே இவர்கள் அனைவருக்கும் அவசியமானதாகும்.

ஒரே குடும்ப அங்கத்தவர்களிலும் பரம்பரையாகவும் ஈரல் கொழுப்பு பிரச்சனை அதிகம் காணப்படுகிறது. குடும்பத்தில் நிலவும் மதுப் பழக்கமும், அதிகமாக அருந்துகின்ற பழக்கமும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என எண்ணப்படுகிறது.

மதுப் பாவனையைத் தவிர வேறு காரணங்களும் ஈரலில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

  • பொதுவாக எடை அதிகமாக உள்ளவர்களிடம் இது ஏற்படுகிறது.
  • தவறான உணவு முறை மற்றொரு முக்கிய காரணமாகும். ஈரல் கொழுப்புக்குக் காரணம் உணவில் கொழுப்பு அதிகமாக இருப்பதே என்பதை ஊகிப்பது சிரமமல்ல. அதிலும் முக்கியமாக ரான்ஸ் (Trans fats – trans fatty acids) கொழுப்பு முக்கிய காரணமாகும்.
  • இரும்புச் சத்து அதிகமாகும்போதும் இது நேரலாம்.
  • ஹெபரைரிஸ் பீ (Hepaptitis B) எனும் வைரஸ் ஈரல் அழற்சியின் பின்னரும் இது ஏற்பட வாய்ப்புண்டு.

மது அல்லாத காரணங்களால் ஏற்படும் ஈரல் கொழுப்பு நோய்

இப்பொழுதெல்லாம் மதுவைத் தொடாத பலரிலும் காண முடிகிறது. இது பற்றியே இங்கு அதிகம் பேசுகிறோம்.  ‘மது அல்லாத காரணங்களால் ஏற்படும் ஈரல் கொழுப்பு நோய்’ (Nonalcoholic Fatty Liver Disease -NAFLD) என்பார்கள்.

4198685_f520

இது பொதுவாக ஆபத்தான பிரச்சனை அல்ல போதும் சிலரில் அது ஈரலில் அழற்சியையும் பின்னர் அதன் செயற்பாட்டுத் திறனையும் பாதித்து ஈரல் சிதைவு நோய் (Cirrhosis) ஆகலாம். அரிதாக ஈரல் புற்றுநோயும் ஏற்படலாம்.

காரணங்கள்

மது இல்லாமலும் ஈரலில் கொழுப்பு ஏன் விழுகிறது என்பதற்கான காரணங்கள் தெளிவாகத் தெரியவில்லை.

ஆயினும் அதிக மற்றும் அதீத எடையுள்ளவர்களிடமும் அதிகம் காணப்படுகிறது. இது பரம்பரையிலும் ஒரே குடும்பத்தவர்களிலும் அதிகம் காணப்படுகிறது. பொதுவாக நடுத்தர வயதினரைப் பாதிக்கிறது. அத்துடன் கொலஸ்டரோல் அதிகரிப்பு, நீரிழிவு அல்லது நீரிழிவின் முன்நிலையும் சேர்ந்திருப்பதுண்டு.

Obese Peter

வைரஸ் ஈரல் அழற்சி நோய்கள், சில மருந்துகள், போஷாக்கற்ற உணவு முறை, திடீரென எடை குறைதல் போன்றவையும் காரணமாகலாம்.

உணவு முறையே முக்கிய காரணமாகும்.

எடை அதிகரிப்பதற்கும், ஈரலில் கொழுப்பு விழுவதற்கும் அதிக கொழுப்புள்ள உணவுகள் பிரதான காரணமாகும். அதிலும் முக்கியமாக ரான்ஸ் (Trans fats – trans fatty acids) கொழுப்பு அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பெரும்பாலன கடைப் பண்டங்களிலும், துரித உணவுகளிலும் இது அதிகம் இருக்கிறது.

இந்த ரான்ஸ் கொழுப்பு என்பது என்ன?

தாவரக் கொழுப்புகளை (எண்ணெய்கள்) திடமானதாக ஆக்குவதற்காக ஹைரஜனை தயாரிப்பாளர்கள் சேர்க்கும்போதே Trans fats உருவாகிறது.

ரான்ஸ் பற்ஸ் சை எதற்காகப் பயன்படுத்துகிறார்கள்?

விலை குறைவாக இருப்பதுடன் இதைக் கொண்டு செய்யப்படும் உணவுகள் சுவையாக இருக்கும். அத்துடன் அச் சுவையானது வாயில் நீண்ட நேரம் நீடிக்கும். எண்ணெயில் பொரிக்கும் வதக்கும் வறுக்கும் உணவுகளில் இது அதிகம் உண்டு. உதாரணமாக ப்ரன்ஜ் ப்ரை, லோனட், பேஸ்ரி, பிட்ஸா, குக்கி, பிஸ்கற், எமது உணவு வகைகளில் பொரியல்கள், வடை, ரோல்ஸ், போண்டா, மிக்சர், போன்ற பலவும் அடங்கும்.

19514

அப்படியானால் நாம் அத்தகைய உணவுகளை உண்ணவே கூடாதா? கூடும்! மிகக் குறைந்த அளவில் உண்ணலாம்.

ஆனால் நாம் ஒரு நாளில் உள்ளெடுக்கும் கலோரியின் அளவு 2000 எனில் அதில் 20 மட்டுமே ரான்ஸ் பட்டாக இருக்க வேண்டும். ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பால் போன்றவற்றில் இந்த ரான்ஸ் பற் சிறியளவு இருக்கிறது. இது மட்டுமே அந்த 20 தைக் கொடுத்துவிடுவதால் ஏனைய ரான்ஸ் பற் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

ஈரலில் கொழுப்பு உள்ளவர்கள் செய்ய வேண்டியது என்ன?;

ஈரலில் கொழுப்பு என்று சொன்னவுடன் மருந்துகளை நாடி ஓடக் கூடாது. எமது உணவு உடற் பயிற்சி அடங்கலான வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதே முக்கியமானது

எடை குறைப்பு – ஈரல் கொழுப்பிற்கான சிகிச்சையின் முக்கிய அம்சம் எடையைக் குறைப்பதுதான். எடைக் குறைப்பைப் பற்றிப் பேசும்போது ஒருவரது உயரத்திற்கான மிகச் சிறந்த எடைக்கு (Ideal weight) வர வேண்டும் என்பதல்ல. பெரும்பாலோனோரில் அது முடியாத காரியமாகவும் இருக்கும். தங்களது தற்போதைய எடையில் 10 சதவிகிதத்தைக் குறைப்பதே மிக நல்ல பலனைக் கொடுக்கும். 5 சதவிகிதம் குறைத்தாலும் நன்மையே. எனவே எடை குறைப்பு முயற்சியில் தளரக் கூடாது.

Weight reduction

எடை குறைப்புச் செய்ய முனையும்போது திடீரென கடுமையாகக் குறைப்பதும் நல்லதல்ல. ஒரு வாரத்திற்கு 1.5 கிலோ எடைக்கு மேலே குறைக்க முயல்வது உசிதமானதல்ல. எடை குறைப்பின் முக்கிய அம்சங்களாவன உண்ணும் உணவின் கலோரி அளவைக் குறைப்பதும் உடற் பயிற்சியை அதிகரிப்பதும்தான்.

உணவைக் குறைப்பது என்பது பட்டினி கிடைப்பதல்ல. உணவு முறை மாற்றங்கள்தான். உணவில் அதிக கலோரி வலுவைக் கொடுப்பது எண்ணெய் கொழுப்பு உணவுகள்தான். அதிலும் ரான்ஸ் பற் உணவுகள் பற்றி ஏற்கனவே சொன்னோம்.

ஆசிய நாட்டவர்கள் ஆகிய எங்கள் உடலில் மேலை நாட்டவர்களின் உடலில் இருப்பதை விட அதிக கொழுப்பு இருக்கிறது. இந்தக் கொழுப்பானது ஈரல் வயிற்றறை உறுப்புகளில் மட்டுமின்றி எமது சருமத்திலும் இருக்கிறது. இவ்வாறு கொழுப்பு அதிகமாயிருப்பதற்கு கொழுப்பு உணவுகள் மட்டும் காரணமல்ல. நாம் பிரதானமாக உண்ணும் அரிசி மற்றும் கோதுமை போன்ற மாப்பண்ட உணவுகளை அதிகளவில் உண்பதே காரணமாகும். அதாவது சோறு இடியப்பம். பிட்டு, போன்ற எல்லா மாச்சத்து உணவுகளை அதிகமாக உண்கிறோம்.

எனவே நாம் எடையைக் குறைக்க வேண்டுமாயின் மாச்சத்துள்ள உணவுகளின் அளவைக் குறைக்க வேண்டும். குறைத்த அளவிற்கு ஈடாக காய்கறிகளையும் பழ வகைகளையும் சேர்;த்துக் கொள்ள வேண்டும். அதனால் பசியை அடக்கும் அதே நேரம் உட்கொள்ளும் கலோரி அளவைக் குறைக்க முடியும்.

ஈரல் கொழுப்பைக் குறைப்பதற்கு ஒமோகா 3 மீன் எண்ணெய் (omega-3 fatty acids)  உதவும் என நம்பிய போதும் அதற்கான திடமான விஞ்ஞான ஆய்வுகள் இல்லை. ஈரலில் குத்தி திசுக்களை எடுத்து ஆய்வு செய்து (Biopsy)  ஈரல் கலங்களில் பாதிப்பு உள்ளது எனக் கண்டறிந்தால் விற்றமின் ஈ (Vitamin E)  கொடுப்பதுண்டு. ஏனையவர்களில் அவசியமில்லை.

எடையைக் குறைப்பதற்கு சத்திர சிகிச்சை உதவும் என்ற போதும் கொழும்பு ஈரல் பிரச்சனைக்காக அதைச் செய்வது நல்லது என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. ஈரல் சிதைவு (cirrhosis)  ஏற்பட்டால் செய்வது நல்லது என்கிறார்கள்.

வேறு பரிசோதனைகள் தேவையா?

ஈரலில் கொழுப்பு இருப்பதான ஸ்கான் அறிக்கை கிடைத்ததும் உங்கள் மருத்துவர் நீரிழிவு, நீரிழிவின் முன்நிலை போன்றவை இருக்கிறதா எனக் கண்டறிவார். மதுப் பாவனை பற்றிக் கேட்டறிவார். பெரும்பாலும் வேறு பரிசோதனைகளைச் செய்வதில்லை.

இருந்தபோதும் ஈரலில் கொழுப்பு இருக்கிறதா என்பதை மட்டும் அறிவதற்காக

எவரையும் ஸ்கான் பரிசோதனை செய்வது அவசியமல்ல. அதேபோல ஒருவருக்கு இருந்தால் அவரது ஏனைய குடும்ப அங்கத்தவர்களையும் ஸ்கான் செய்து பார்க்க வேண்டியதும் இல்லை.

எனவே உங்களுக்கு ஈரலில் கொழுப்பு என்று சொன்னவுடன் கதி கலங்காதீர்கள். உங்கள் வாழ்க்கை முறையை மாற்றி நலமாக வாழுவதற்கான வழிகளைத் தேடுங்கள். அது போதுமானது.

ஹாய் நலமா புளக்கில் வெளியான எனது கட்டுரை

ஈரலில் கொழுப்பு – ஸ்கான் பரிசோதனையில் சொன்னால்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.0.0.0.0

Read Full Post »

அந்தப் பெண் என்னை  ஒரு கணம் மலைக்க வைத்தாள். மலைக்க வைத்தது அவளது உருவம் அல்ல. அவள் செய்திருந்த வேலைதான் அவ்வாறு செய்தது.

அவள் கட்டிப் போடும் மருத்துவம் செய்திருந்தாள். இது கட்டிப் பிடி மருத்துவமல்ல. கட்டிப் போட்ட வைத்தியம்.இதைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நேரிடையாக இப்பொழுது பார்க்க முடிந்தது.அவளது முகத்தில் ஒரு கருமையான முளை. கழலை என்றும் சொல்வார்கள்.

கருப்புத் திட்டி போல அவளது முகத்தின் வலது பக்க கன்னத்தில் இருந்தது. Mole என ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். சருமத்தில் இவ்வாறான பல்வேறு சிறிய சிறிய வளர்த்திகள் வருவதுண்டு. moles, freckles, skin tags, benign lentigines, and seborrheic keratoses என இவற்றில் பல வகைகள் உள்ளன. பொதுவாக கறுப்பாக அல்லது தவி்ட்டு நிறத்தில் இருக்கும்.
வேறு வேறு தோற் கழலைகள்

இவை பெரும்பாலும் ஆபத்து அற்றவை. அரிதாக சருமப் புற்றுநோயாக இருப்பதுண்டு.

இந்த முளைக்குத்தான் அவள் கட்டிப்போடு மருத்துவம் செய்திருந்தாள். தனது தலை முடியால் அதன் அடிப்பாகத்தில் இறுக்கிக் கட்டியிருந்தாள். அவ்வாறு கட்டினால் அதற்கு தேவையான குருதி கிடைக்காது. அது இறந்து கருகி விழும். இது முற்காலத்தில் வீட்டு மருத்துவமாகச் செய்யப்படுவது வழக்கம்.

ஆனால் மருத்துவ வசதிகள் மிகச் சிறப்பாக  இருப்பதால் இப்பொழுது ஒருவரும் அதை நாடுவதை நான் நீண்ட காலமாகக் காணவில்லை.

ஏதோ ஒரு உந்துதலில் அவ்வாறு தலை முடியினால் கட்டிப் போட்டுவிட்டாள். அடுத்த அடுத்த நாட்களில் பயம் பிடித்தது. ஏதாவது ஆகுமா. முகத்தில் புண் ஏற்பட்டுவிடுமா, சீழ் பிடிக்குமா எனப் பலபல சந்தேகங்கள்.

இப்பொழுது என்ன செய்ய வேண்டும் எனத் தீர்மானிப்பது என தலையில் விழுந்தது.

பிரச்சனைகள் ஏற்படாமல் தீர்க்க அதை நீக்குவோம் என்றேன். ஏற்றுக் கொண்டாள்.

அவ்விடத்தை சுத்தம் செய்து, மரக்கச் செய்யும் மருந்தைப் போட்டு அகற்ற முடிவு செய்தோம்.

அவ்வாறே செய்தோம்.

சிறிய காயம் என்பதால் மூடித் தையல் போட வேண்டி நேரவில்லை. வெறுமனே மருந்திட்டு பிளாஸ்டர் போட்டு அனுப்பி வைத்தேன்.

ஐந்து நாளில் மீண்டும் வருவார். காயம் ஆறியிருக்கும். சில நாட்களில் அழகு வதனம் முன் போல ஆகிவிடும்.

இவ்வாறு சுய வைத்தியம் செய்யலாமா எனக் கேட்காதீர்கள். கிருமி தொற்றிவிடலாம். அல்லது ஆபத்தான புற்று நோய் போன்ற கட்டியில் தானே சிகிச்சை செய்ய முனைந்து பிரச்சனையை மோசமாக்கலாம்.

மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதே நல்லது.

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை இது கட்டிப் போட்ட வைத்தியம். கட்டிப்பிடி வைத்தியம் அல்ல

Read Full Post »