Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘மலட்டுத்தன்மை’ Category

“உங்கடை நிறை கூடிக்கொண்டு போகுது. அதைக் குறைக்க வேண்டும்” என்றேன்.

“உங்களுக்குத் தெரியும்தானே டொக்டர். எனக்கு இந்த பீரியட் நிண்டாப் போலைதான் உடம்பு போட்டுட்டுது” என்றார்.

அது ஏற்கனவே எனக்குத் தெரிந்ததுதான். குடும்ப மருத்துவர்களுக்கு இத்தகைய விடயங்களைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அது தெரிந்திருந்தும் அவரது எடையக் குறைப்பது அவசியம் என்பதை உணர்ந்ததாலேயே எடை குறைப்பு பற்றிப் பிரஸ்தாபித்தேன்.

அவர் சொன்னதிலும் உண்மை உள்ளதுதான். ஆனால் மாற்ற முடியாதது அல்ல.

weight-gain-after-menopause

பெரும்பாலன பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலங்களிலும் அதைத் தொடர்ந்து மாதவிடாய் முற்றாக நின்ற பின்னரும் எடை அதிகரிக்கவே செய்கிறது. இடை அழகியாக இருந்தவர்கள் சள்ளை தொங்கும் குண்டுப் பீப்பாய்களாக மாறுவார்கள். இடுப்பில் மட்டுமின்றி வயிறும் பெரிதாகும். அன்ன நடை நடந்த பெண்கள் ஆயாச நடையில் அரங்கி அரங்கி நடப்பார்கள்.

இது உங்களுக்கும் வரவேண்டுமா?

மாதவிடாய் பொதுவாக 50ற்கு சற்றுப் முன் பின்னராக நின்று போகிறது. 50 முதல் 59 வயதுவரையான பெண்களில் 30 சதவிகிதமானவர்களின் எடை அதிகரிக்கிறது. சாதாரணமான அதிகரிப்பு உள்ளவர்களாக (Over Wight) மட்டுமின்றி அதீத எடை (Obesity) உள்ளவர்களாகவும் அவ் வயதுப் பெண்கள் மாறுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

early-menopause-information

அவ்வாறாயின் மாதவிடாய் நின்ற பெண்களில் எடை அதிகரிப்பது நியதியா என்று கேட்டால். இல்லை என்றே சொல்லலாம். போஷாக்கான உணவு முறைகளையும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் கடைப்பிடித்தால் அந்நேரத்திலும் எடை அதிகரிப்பைத் தடுக்க முடியும்.

ஏன் அதிகரிக்கிறது

மாதவிடாய் நிற்கும் போது பெண்களில் உடலிலுள்ள பெண் ஹோர்மோனான ஈஸ்ரோஜன் அளவுகளில் வீழ்ச்சி ஏற்படுகிறது. இந்த மாற்றமானது உடலின் இயக்கத்தின் வேகத்தைக் குறைத்து சோம்பலைக் கொண்டு வருவவதுடன் அதிகமாக உண்ணவும் வைக்கிறது என எலிகள்pல செய்யப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது. இது பெண்களுக்கும் ஏற்புடையதாக இருக்கலாம்.

hormone-graph

அதேபோல ஈஸ்ரோஜன் அளவு குறையும்போது உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் (metabolic rate) தாழ்ச்சியுறுகிறதாம். மாதவிடாய் நின்ற பெண்களின் சில பிரச்சனைகளுக்காக ஈஸ்ரோஜன் மாத்திரைகளை மருந்தாகக் கொடுக்கும்போது அவர்களது உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரிப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அத்தகைய ஹோர்மோன் மாற்றம் ஏற்படும்போது உடலானது மாப்பொருளையும் குளுக்கோசையும் பயன்படுத்தும் ஆற்றல் குறைகிறது. இதனால் அவை உடலில் கொழுப்பாக சேமிக்கப்பட்டு உடை அதிகரிக்கிறது என்கிறார்கள்.

மாதவிடாய் நிற்கும் கால எடை அதிகரிப்பிற்கு ஹோர்மோன் மாற்றங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்பட்டபோதும் அது தவிர்ந்த வேறு பல காரணங்களும் இருக்கின்றன. வயதாகும்போது உடல் உழைப்புச் செயற்பாட்டிலும் வாழ்க்கை முறையிலும் ஏற்படும் மாற்றங்கள் முக்கியமானவை.

உதாரணமாக வயசாகும்போது தசைகளின் திணிவு குறைகிறது. அதே நேரம் அதிலுள்ள கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது. தசைத் திணிவு குறையும்போது அவற்றால் முன்னரைப் போல கலோரிச் சத்தை பயன்படுத்த முடிவதில்லை. ஆனால் இவை தவிர்க்க முடியாத விடயங்கள் அல்ல. உட்கொள்ளும் உணவைச் சற்றுக் குறைத்து உடற் செயற்பாட்டை அதிகரிப்பதன் மூலம் எடை ஏறுவதை நிச்சயமாக் குறைத்துக் கொள்ள முடியும்.

வேறு வார்த்தைகளில் சொல்லவதானால் இள வயதில் உட்கொண்டது போன்ற அளவுகளில் உணவுகளைத் தொடர்ந்து உட்கொண்டபடி உடலுக்கு போதியளவு வேலையைக் கொடுக்கவிட்டால் எடை அதிகரிக்கவே செய்யும்.

பரம்பரை அம்சங்களும் அந்நேர எடை அதிகரிப்பிறகு காரணமாகலாம். உதாரணமாக உங்கள் அம்மா அல்லது அப்பா தொந்தியும் சள்ளையுமான கொண்ட பருத்த உடல்வாகு உள்ளவரானால் நீங்களும் அவ்வாறு ஆவதற்கான சாத்தியம் அதிகமே.

மன உழைச்சல்களும் காரணமாகலாம். அந்த வயதில் பிள்ளைகள் உங்களை விட்டுப் பிரிய நேரலாம், கணவன் மரணமடையலாம், மணமுறிவு ஏற்படலாம். இத்தகைய சம்பவங்களால் மன உழைச்சல்கள் ஏற்படலாம். அதன் காரணமாக ஒருவர் தனது உணவு முறையில் அக்கறை செலுத்தாது விடுவவார்கள். மனம் தளர்ந்து சுறுசுறுப்பாக இயங்காது சோர்ந்து கிடக்கவும் செய்வர். இவற்றால் எடை அதிகரிக்கும்.

60 சதவிகிதமானவர்கள் தங்கள் முதுமையில் போதுமான உடற்பயிற்சி செய்வதில்லை என அறிக்கைகள் கூறுகின்றன. தொடர்ந்து வயது அதிகரிக்கும்போது உடல் இயக்கத்தில் குறைபாடும் அதிகரிக்கிறது. இதைத் தவிர்த்து உள பூர்வமாக உடற் பயிற்சிகளில் ஈடுபடுவது அவசியமாகும்.

எடை அதிகரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் எவை

menopause-pyramid

உடல் எடையானது தேவைக்கு அதிகமாக அதிகரிக்கும் போது உடலில் பல்வேறு சிக்கல்களும் நோய்களும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

  • பிரஸர் அதிகரிக்கும்,
  • நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியம் அதிகமாகும்.
  • மாரடைப்பு நோய்க்கான சாத்தியமும் அதிகமாகும்.
  • அதைபோல மூட்டு வருத்தங்களுக்கான சாத்தியம் அதிகரிக்கும்.
  • குண்டான பலர் முழங்கால் மூட்டில் தேய்வு வீக்கம் என அவதிப்படுவதை நீங்களே அவதானித்திருப்பீர்கள்.

எடை அதிகரிப்பானது கொழுப்பு அதிகரிப்பதோடு தொடர்புடையதுதானே. இந்த கொழுப்பானது வயிற்றறைப் பகுதியில் அதிகமாகவே சேரும். அதனால் வயிறு பானைபோலாகும். வயிற்றறைச் சுற்றளவானது 35 அங்குலத்திற்கு அதிகமானால் அது மேலே கூறியது போன்ற பலவித ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்பது தெரிந்ததே. எனவே அதைத் தவிர்க்க வேண்டும்.

எடை அதிகரிப்பதைத் தடுப்பது எப்படி?

எடை அதிகரிப்தைத் எடையைக் குறைப்பதற்கு மாயாஜால முறைகள் எதுவும் கிடையாது. மருத்துவர்கள் கிறுக்கித்தரும் மாத்திரைகளோ, ஊடகங்களில் விளம்பரப்படுத்தும் மருந்துகளோ, கிறீன் ரீயோ, கொள்ளுச் சாப்பிடுவது போன்றவையோ மட்டும் உதவப் போவதில்லை.

உங்கள் முயற்சிதான் அதிமுக்கிய விடயாகும்.

1.சோர்ந்திருக்காதீர்கள்

கூடியவளவு உடல் உழைப்பில் ஈடபடுங்கள். சோர்ந்து கிடக்காதீர்கள். நடந்தால் கால் உழைவு கை உழைவு என்று சாட்டுச் சொல்லாதீர்கள். முயற்சியில் இறங்குங்கள். அந்த வயதிற்கு ஏற்றது நடைப் பயிற்சி. வுhரத்தின் பெரும்பாலன நாட்களில் 30 நிமிடங்களுக்கு குறையாது கை கால்களை விசுக்கி வீசி நடவுங்கள். துள்ளல் நடை நீச்சல் பயிற்சிகளும் நல்லது.

வீட்டுத் தோட்டம் செய்யுங்கள். மாடிப்படிகளில் ஏறி இறங்குங்கள்.

இவற்றைத் தவிர நாளாந்த வீட்டு வேலைகளிலும் ஈடுபடுங்கள். கூட்டுங்கள் கழுவுங்கள், தூசு தட்டுங்கள்.

2.உணவில் கவனம் எடுங்கள்.

சாப்பிடுங்கள் பட்டினி கிடக்காதீர்கள். உணவைத் தவிர்க்காதீர்கள்

ஆனால் உணவின் அளவிலும் எத்தகை உணவு உண்பது என்பதிலும் மாற்றங்கள் செய்யுங்கள். எண்ணெய் பொரியில் கொழுப்பு போன்றவ்றறைத் மிகவும் குறையுங்கள். சோறு இடியப்பம் புட்டு பாண் போன்ற மாப்பொருள் உணவுகளை அளவோடு உண்ணுங்கள். அல்லது சற்றுக் குறையும். அதற்கான மொத்த உணவின் அளவைக் குறைக்க வேண்டியதில்லை. காய்கறிகள் பழவகைகளை அதிகம் சேருங்கள்.

3. கலோரி வலு

அதே போல அருந்தும் பானங்களும் அதிக கலோரி வலு அற்றதாக இருக்க வேண்டும். மென்பானங்கள், இனிப்பூட்டிய பழச் சாறுகள், போன்றவற்றைத் தவரிக்க வேண்டும். நாளாந்த அருந்தும் தேநீர் கோப்பி போன்றவற்றிக்கு சேர்க்கும் சீனியின் அளவையும் குறைப்பது அவசியமாகும்.

தண்ணீர், மோர். அதிகம் இனிப்பு சேர்க்காத உடன் பிழிந்த பழச்hசாறுகள், இளநீர் போன்றவற்றை கூடியளவு உபயோகியுங்கள்.

monopause weight gain copy

 

இவற்றைக் கடைப்பிடித்தால் மாதவிடாய் நின்ற பின்னரும் மோகவைக்கும் குமரிபோல உங்கள் உடல் வனப்பைப் பேணிக்கொள்ளலாம்.

எனது ஹாய் நலமா புளக்கில் (12 June 2014) வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

 

0.0.0..0.0.0

 

Read Full Post »

>சந்ததிகளை இழக்கும் அழிவுப் பாதையில் மனித இனம்.
ஆண்ணினம் மலடாகிக் கொண்டு போகிறதா?

ஆண்மை என்பது என்ன?

பரந்து விரிந்த தோள்கள், வலுவான புஜங்கள், தடித்த அடர்த்தியான மீசை. உறுதியான உடல். இவ்வாறு பலவற்றைச் சொல்லிக் கொண்டு போகலாம்.

ஆனால் இவை எல்லாவற்றையும் விட உறவின் போது துணையைத் திருப்பதிப்படுத்துவது ஒன்றேதான் ஆண்மை என ஒவ்வொரு ஆணும் எண்ணுகிறான்.

முடியாதபோது இவன் ஆண்மையற்றவன் எனத் துணையும் தூற்றுகிறாள்.  
ஆனால் ஒரு ஆணின் ஆண்மைத் தன்மைக்கு அத்தாட்சியாக இருப்பது அவனது விந்திலுள்ள (Sperm Count) விந்தணுக்களின் எண்ணிக்கையும் ((Seminal fluid) அதன் தரமும்தான்.

விந்திலுள்ள கோடிக்கான விந்தணுக்களில் ஒன்று மட்டுமே ஏனையவைகளுடன் நீச்சல் போட்டியிட்டு முந்திச் சென்று பெண்ணின் சூலகத்திலிருந்து வெளிவரும் முட்டையுடன் இணைந்து கருவை உண்டாக்கும்.

விந்தணுக்கள் தரமானதாகவும் அதிக எண்ணிக்கையிலும் இருந்தால்தான் அவனால் தகப்பன் ஆகக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. மலடன் ஆகாது தப்பி ஆண்மையுள்ளவன் என நிரூபிக்க முடியும்.

‘மலடி மலடி என வையகத்தார் ஏசாமல்..’ என்றொரு திரைப் பாடல் முன்பு பிரபலமாக இருந்தது.

ஆனால் இன்றைய நிலையில் ‘மலடன் மலடன் என வையகத்தார் ஏசாமல்..’ என தங்களது ஆரோக்கியத்தையும் ஆண்மையையும் காத்துக் கொள்ள வேண்டிய நிலையில் ஆண்கள் இருக்கிறார்கள்.

விந்தணுக்களின் வீழ்ச்சி

ஆரோக்கியமான ஆணின் விந்தணுக்களின் எண்ணிக்கையானது ஒரு மில்லிலீட்டர் விந்தில் 40 மில்லியன் இருக்க வேண்டும். பொதுவாக ஆண் உறவின்போது வெளிப்படுத்தும் விந்து 2-6 மில்லிலீட்டர் அளவாக இருக்கும். 1940 களில் இந்த எண்ணிக்கை 100 மில்லியனுக்கு மேல் இருந்தது. ஆயினும் இன்று சராசரியாக 60 மில்லியனாகக் குறைந்து விட்டது.

ஆனால் மிகவும் கவலைப்பட வேண்டிய விசயம் என்னவெனில் இன்றைய இளம் வயது ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை மேலும் மேலும் குறைந்து வருவதுதான்.

இன்றுள்ள வாலிபர்களில் 15 முதல் 20 சதவிகிதமானவர்களின்  விந்தணுக்களின் எண்ணிக்கை 20 மில்லியனுக்கு குறைவாக இருப்பது நல்ல செய்தியல்ல.

அத்துடன் அவர்கள் உற்பத்தி செய்யும் விந்தணுக்களில் தரமும் தாழ்ந்துவிட்டது.

5 முதல் 15 சதவிகிதமானவை மட்டுமே சாதாரண (Normal) நிலையில் இருக்க மிகுதி யாவும் அசாதாரண (Abnormal) விந்தணுக்களாக இருக்கின்றன.

இது இனவிருத்திக்குப் போதாது.

ஏனைய பாலூட்டிகள்

ஏனைய பாலூட்டி மிருங்கங்களுடன் ஒப்பிடும்போது இயற்கையாகவே மனிதனின் விந்தணு எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது.

உதாரணமாக எருதுகளின் விந்தணுக்களின் எண்ணிக்கை மில்லியன்களாக அன்றி பில்லியன் கணக்கில் இருக்கின்றன.

அத்துடன் மனிதரில் சாதாரண விந்தணு எண்ணிக்கை 5 முதல் 15 சதவிகிதமாக இருக்க எருதுகளிலோ அது 90 சதவிகிதத்திற்கு மேல் இருக்கிறது.

மலட்டுத்தன்மையை நோக்கி

இத்தகைய காரணங்களால் மனிதர்களில் இனவிருத்தி குறைந்து கொண்டு போகிறது. ஏழு தம்பதிகளில் ஒரு தம்பதியினருக்கு குழந்தைப் பேறு கிட்டாது போய்விடுகிறது.

இதில் பெரும்பாலான தம்பதியினரக்கு ஆண்களின் குறைபாடே காரணமாக இருக்கிறது. போதியதும் தரமானதுமான விந்தணுக்குள் இல்லாமைக்கு பல காரணங்கள் சொல்லலாம்.

  • விதைப்பையிலுள்ள நாளங்கள் புடைத்திருப்பது (Varococele) முக்கிய காரணமாகும். இது கால்களில் ஏற்படும் நாளப்புடைப்பு (Varicose Veins) நோயை ஒத்தது.
  • பாலியல் தொகுதியில் உள்ள பிறவிக் குறைபாடுகள்,
  • பாலியல் நோய்த் தொற்றுகள். குpளாமிடியா, கொனரியா, சிபிலிஸ் போன்றவற்றால் விந்தணு பயணம் பண்ணும் குழாயில் தடிப்புகள் ஏற்பட்டு பாதை தடைப்படலாம்.
  • கூகைக்கட்டு (பொன்னுக்கு வீங்கி), புரஸ்ரேட் சுரப்பியில் கிருமித் தொற்று, சலக்குழாயில் தொற்று போன்றவையும் காரணமாகலாம்.
  • ஆண்மைக் குறைபாடு மற்றொரு காரணமாகும். ஆண் ஹோர்மோன் ஆன டெஸ்டஸ்டரோன் குறைபாடு (testosterone Deficiency) முக்கியமானது.
  • வாழ்க்கை முறைகள் காரணமாகின்றன. உதாரணமாக மனஅழுத்தம், போசணைக் குறைபாடு, அதீத எடை, மதுவும் ஏனைய போதைப் பொருட்களும் ஆண் மலட்டுத்தன்மைக்கு இட்டுச் செல்கின்றன.

விந்தணுக்களின் எண்ணிக்கையும் தரமும் குறையக் காரணங்கள்

  1. இறுக்கமான உள்ளாடைகளை தொடர்ந்து அணிதல், நீண்ட நேரம் தொடைகளை நெருக்கியபடி உற்கார்ந்திருத்தல் போன்றவற்றால் விதைப்பையின் வெப்பம் அதிகமாகி விந்தணுக்களின் எண்ணிக்கையும் தரமும் குறைகிறது. விதைகள் விதைப்பையுக்குள் இறங்காமை.
  2. தினமும் 4 மணித்தியாலயங்களுக்கு மேல் செல் போனில் பேசுபவர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையும் தரமும் குறைவதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்நன.
  3. வேலை நெருக்கடி, மன உளைச்சல் போன்ற பல்வேறு காரணங்களால் வாரத்திற்கு 2 -3 தடவைகளாவது உடலறவு வைக்க முடியாது போவது கூட குழந்தையின்மைக்கு ஒரு காரணம்தான்.

இவை எல்லாவற்றிக்கும் மேலாக மற்றொரு காரணம் இப்பொழுது முன்வைக்கப்படுகிறது.
மனிதனின் தவறான வாழ்க்கை முறை என்பதற்கு மேலாக

  • அவனது தாயின் அல்லது 
  • பெற்றோரின் தவறான வாழ்க்கைமுறைதான் காரணமாகலாம் என்கிறார்கள் சில வல்லுணர்கள்.

கருவில் வளரும்போதே மலடாவதற்கான விதை விதைக்கப்படுகிறது என்பதுதான்.

விந்தணு உற்பத்தி

விந்தணுக்ளின் உற்பத்தி Spermatogenesis பதின்ம வயதில்தான் ஆரம்பிக்கிறது. ஆனால் அதற்கான அத்திவாரம் அவன் கருவில் இருக்கும்போதே ஆரம்பித்துவிடுகிறது.

அதாவது விதைகளின் விருத்தியானது கருவாக இருக்கும்போதே ஆரம்பித்து 6 மாதக் குழந்தையாக இருக்கும் போதே முற்றுப் பெறுகிறது.

எனவே இந்தக் காலகட்டத்தில் அதன் விருத்திக்கு ஏதாவது இடையூறு நேர்ந்தால் பின்பு வாழ்நாள் முழுவதும்  அவனது குழந்தை பெறும் ஆற்றல் பாதிப்படையும்.

புகைத்தல்

விந்தணுக்கள் குறைவதற்கு வேறு காரணங்களும் உண்டா? புகைத்தல் ஒரு முக்கிய காரணமாகும். அண்மைய ஆய்வுகளில் புகைப்பவர்களது விந்தணு எண்ணிக்கை 15 சதவிகிதத்தால் குறைவடையும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

ஆயினும் புகைத்தலை நிறுத்தினால் அது மீண்டும் வழமை நிலையை அடையும். ஆயினும் அவனது தாயானவள் கருவுற்றிருக்கம் நேரத்தில் புகைத்திருந்தால் அது 40 சதவிகிதம் குறையும்.

இது முக்கிய கண்டுபிடிப்பு. ஆயினும் விந்தணு குறைந்த எல்லோரது தாய்மார்களும் புகைத்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. தந்தை புகைப்பதால் அதன் பாதிப்பு தாயின் ஊடாக கருவிற்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்குமா என்பது பற்றி அந்த ஆய்வு எதுவும் கூறவில்லை. ஆயினும் அதற்கான சாத்தியத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது.

வேறு காரணங்கள் இருக்கலாமா?

  • உணவு முறை மாற்றங்கள், 
  • உடல் உழைப்பற்ற வாழ்க்கைமுறை,
  • இயற்கையோடு இசையாத வாழ்வு,
  • சூழல் மாசடைதல்,
  • காலநிலை மாற்றங்கள்

என எத்தனையோ விரும்பத்தகாத பல மாற்றங்கள் இன்று மனித குலத்தில் ஏற்பட்டிருக்கின்றன. இவற்றின் தாக்கங்கள் யாவை? இவை போன்றவற்றாலும் ஆண்மைக் குறைபாடு ஏற்பட்டிருக்கலாமா என்பதையிட்டும் ஆய்வுகள் அவசியம்.

பெண்களில்

அதே நேரம் பல பெண்களும் மாதவிடாய்க் கோளாறுகளாலும் அதன் பலனாக கருத்தங்கலில் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். அதீத எடை, இன்சுயிலின் செயற்பாடு பாதிப்பு, சூலக நோய்கள் போன்றவை இவற்றிக்கு காலாக உள்ளன. இவற்றில் பலவும் தவறான வாழ்க்கை முறைகளின் பயனே.

எது எப்படி இருந்த போதும் மனித குலம் தொடர்ந்து வாழ இனப்பெருக்கம் அவசியம். அதற்கு ஆண்மைக் குறைபாடு அல்லது பெண்களின் நோய்கள் காரணமாக வந்துவிடக் கூடாது.

ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை கடைப்பிடிப்பதே அதற்கு வழிபோலத் தெரிகிறது.

ஞாயிறு வீரகேசரியில் வெளிவந்த எனது கட்டுரையின் மீள் பிரசுரம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0.0

Read Full Post »