Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘வரலாறு’ Category

அயர்ச்சியும் சோர்வும் அனாதரவான நிலையும் கொண்ட ஒரு பயணத்தில் சென்றுவந்தது போன்ற உணர்வு நிலை என்னைத் தொற்றிக் கொண்டது.

“ஈழப் போரின் இறுதிநாட்கள்” என்ற வெற்றிச் செல்வியின் நூலை படித்து முடித்த போது ஏற்றபட்ட உணர்வு அது.

இந்த இனத்திற்கு ஒரு விடிவு வர வேண்டும் என்ற ஆதங்கத்தில் போராட்டத்தில் இறங்கிய ஒரு உண்மையான போராளிக்கு தனது கனவுகள் சிதைந்தது மட்டுல்ல தனது இனத்தின் மானமே தாரை வா ர்க்கப்பட்டு அவமதிப்பிற்கு ஆளாக்கப்பட்டதான உணர்வு ஏற்பட்டதை இந்த நூலில் உணர முடிந்தது.

பெருங் கனவுகளுடனும் அர்ப்பணிப்புகளுடனும் இறங்கிய விடுதலைக் கனவு கலைந்து படைவீரர்களின் முன் ஒரு போத்தல் தண்ணீருக்கும் பிஸகற்றுக்கும் பிடிசோறுக்கும் கை ஏந்தும் நிலைமை எமது மக்களுக்கு ஏற்பட்டமை மிகப் பெரிய வரலாற்றுச் சோகமாகும்.

எதிரிகளை சுட்டு விழுத்துவதற்கு துப்பாக்கிகளும் ரவைகளும் இல்லாமற் போன ஒரு தருணத்தில் முழு வன்னியிலும் இருந்த பல இலட்சம் மக்கள் முல்லைத்தீவில்  மாட்டுப்பட்டுக் கொள்கிறார்.
குண்டுகளும் ஸெல் வீச்சுகளும் மக்களை வகைதொகை இன்றி கொன்றொழிக்கின்றன. காயப்படுத்துகின்றன

“தப்பியவர்கள் இருக்க இடம் இன்றியும் குடிக்க நீர் இன்றியும் தவித்தனர்…” 

“பிணங்களை புதைக்கவோ எரிக்கவோ வசதியும் இல்லை பொழும் இல்லை.” 
ஒவ்வொருவரும் தமதுஉயிரைக் காப்பாற்ற ஓடிக்கொண்டிருக்கிறார்கள்

இவற்றிற்கெல்லாம் நேரடி சாட்சியாக இருந்தவர் வெற்றிச் செல்வி.

அவரது வார்த்தைகளின் வலிமை வாசிப்பவர் மனத்தை உறைந்து போகச் செய்கிறது

“தொட்டிலிற் கிடந்த குழந்தைக்கும் உடல் சிதறும். தாயின் முலையில் பாலருந்தும் மழலைக்கும் தலை பறக்கும்.  சோற்றை அள்ளி வாயில் வைக்கப் போனவரின் கை துண்டாடப்படும்”

“சாவு நடக்காத குடும்பம் எதுவுமில்லை. கதறல் ஒலி கேட்காது நேரம் கழியவில்லை”.
எவர் காயப்பட்டாலும்அவர்களை கண்டவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கும் அளவு மனிதாதாமானம் மக்களிடம் இருந்தது.
ஆனால் நிலமை மோச அடைய அடைய தான் தப்பினால் போதும் ஓடித் தப்ப வேண்டிய நிலை மக்களுக்கு எற்பட்டது.

 “எரிக்கவோ புதைக்கவோ ஆட்களின்றி பிணங்கள் ஆங்காங்கே வாய் பிழந்து கிடந்தன.” என்பதை வாசிக்கவே மனம் கலங்குகிறது

 மருத்துவ மனைகள் இயங்காது போது. மருத்துகள் இல்லாமல் போயின. மருத்துவர்களும் மருத்து போராளிகளும் கூட மருந்தின்றி அவலமடைய நேர்ந்திருக்கிறது.
இந்த அவலங்களுக்குள்ளும் எண்ணை பொசியும் கடலை வடையை 50 ரூபாவிற்கு விற்று பணம் பண்ணும் காரியத்தையும் சிலர் செய்வதை ஆச்சரியத்தோடு பார்த்தாலும் அத்தகைய சுயநலம்தான் மனிதனின்  உண்மையான குணமோ என அயரவும் வைக்கிறது.

“நேற்றிரவு தலைவர் போயிட்டார்.  எஞ்சிய போராளிகள் சரணடையிறதாக கதை” என்பதும்,

  “யுத்தம் முடிஞ்சுப் போச்சு. பிரபாரன் செத்தாச்சு. இனிப்பயம் வேணாம்” என்பது போன்றவை காதில் விழும் உரையாடல்களாக தகவல்களைத் தருக்கின்றன.

“தயவு செய்து குப்பிகளைக் கடிக்காதீங்க அக்கா. நேற்று பின்னேரம் கூட காயம்பட்ட பிள்ளைகள் இருந்த பங்கருக்கை போய் சொன்னன். விடியப் போய் பாக்கிறன் குப்பி கடிச்சு  செத்து கிடக்குகள்” …….

  “ஒருதருக்கும் பிரயோசனம் அல்லாத சாவுகள் புதைக்கக் கூட இடம் இல்லை…” 

இவ்வாறு சொல்வது ஒரு போராளி. வாழ்வின் நியாயத்தை உணர்ந்த ஒருவன் என்பேன்.

 ஒருவாறு உயிர்தப்பி படையினர் பகுதிக்குள் வந்ததுதம். சனம் அலை மோதுகிறது.

“நிற்கும் இடத்திலிருந்து காலைத் தூக்கினால் தூக்கியபடியே நிற்க வேண்டியதுதான். மீண்டும் இடம் பிடித்து காலை ஊன்ற அரைமணிநேரம் தேவைப்படும்.”

 குளிப்பதற்கு நீரில்லை

உணவில்லை.

 சுட்டெரிக்கும் வெயிலில் அவர்களது மனம் போலவே அவர்களும் கருகிப் போகிறார்கள்.

துவேசமும் மூர்க்கமும் நிறைந்த படையினரிடையே ஓரிரு நல்ல மனம் படைத்தவர்களை போராளிகளால் இனம் காண முடிகிறது.

 நல்ல குணங்களும் கெட்ட குணங்களும் இனம் சார்ந்தவை அல்ல. அவை தனிநபர் சார்ந்தவை என்பதை புதிய உலகம் அவர்களுக்கு உணர்த்துவதை காண முடிகிறது
 ஒரு முக்கிய நூல் இது. எமது வரலாற்று ஆவணத்தின் ஒரு பகுதியாகவும் கொள்ளலாம்.
 இது தமிழகத்திலிருந்து தோழமை வெளியீடாக வந்திருக்கிறது.

பிரதிகள்  இங்கு சுலபமாகக் கிடைப்பதில்லை

நூலாசிரியரின் நூலை வாங்கியே படிக்க நேர்ந்தது.
இலங்கையில் மீள் பதிப்பு வரவேண்டியது அவசியம்.
இலங்கையில் மறுபதிப்பு வந்திருக்கிறது.
154 பக்கங்களைக் கொண்ட நூல் இது.
(விலை ரூபா 500).
மிகவும் நேர்த்தியான பதிப்பு.
தொடர்புகளுக்கு aanathy10@gmail.com
Phone 0776576807
சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்தால் சகோதர இனமும் முழு உலகமும் எமது மக்களின் ஒரு அவலக் கணத்தை உணர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும்.
ஆசிரியரின் பிற நூல்கள்
சென்ற வருடம் ஜீலை மாதம் எனது மறந்து போகாத சில புளக்கில் வெளியான போது மிக அதிகமான வாசகர்கள் அக்கட்டுரையை படித்திருந்தனர்
இந்த மீள் பதிவு சில சிறிய மாற்றங்களுடன் வெளிவருகிறது,

எனது இக்கட்டுரையை தனது புதிய பதிப்பில் முன்னுரையாக சேர்த்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது
அவருக்கு எனது நன்றிகள்.

நண்பர் சிறீ சிறிஸ்கந்தராசா அவர்களின் கட்டுரையும் முன்னுரையாக வந்திருக்கிறது. மிகவும் மகிழ்ச்சி.

“முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னும் உயிரோடு இருக்கும் எனது மக்களுக்கு” இந் நூலை சமர்ப்பித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

0.00.0

Read Full Post »