Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஜூலை, 2019

சொக்லேட், ஐஸ்கிறீம் இனிப்பு போன்ற உணவுகளில் ஆர்வம் அதிகமாக இருக்கின்றது.  கிட்டத்தட்ட இவற்றுக்கு அடிமையாகிவிட்டேன் என்று கூட சொல்லலாம். இதிலிருந்து எப்படி விடுபடுவது டொக்டர்?

வி. சுகி நெல்லியடி

பதில்:- இனிப்பு உணவுகளிலிருந்து விடுபடுவது எப்படி என்று சொல்வதற்கு முன்னர் அதற்கு அடிமையாகிவிட்டேன்  என்று நீங்கள் சொல்வதில் ஏதாவது உண்மை இருக்கிறதா என்பது பற்றி சில வார்த்தைகள் சொல்லியே ஆக வேண்டும்.

இனிப்புக்கு அடிமையாவது என்பது வெறும் பேச்சுச் சொல்ல அல்ல. அது ஒரு நோய் போல பலரைiயும் பீடித்துள்ளது. ஏனெனில் நாம் இனிப்பை உட்கொள்ளும் போது எமது குருதியில் அபின் சார்ந்ததும் டோபமின் போன்றதுமான இரசாயனங்கள் கலக்கின்றன என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

குருதியில் அதிகளவு டோபமின் சேரும்போது எம்மையறியது ஒரு இன்ப உணர்வு ஏற்படுகிறது. அந்த உணர்வை தொடர வேண்டுமாயின் உடலானது இனிப்பை மேலும் உட்கொள்ளத் தூண்டுகிறது. நாட்செல்லச் செல்ல அதே அளவு இன்பத்தைப் பெற கூடியளவிலான இனிப்பை உட்கொள்ள நேர்கிறது. மது மற்றும் போதைப் பொருள்களும் அவ்வாறுதான் அடிமையாக்குகின்றன.

இனிப்பானது கொகேயினை விட அதிகமாக ஒருவரை அடிமைப்படுத்த வல்லது என Cassie Bjork என்ற ஆய்வாளர் கூறுகிறார். அத்துடன் அதிக இனிப்பை உட்கொள்வதால் எடை ஏறுகிறது. இதன் தொடர்ச்சியாக பிரஸர், கொலஸ்டரோல், நீரிழிவு, இருதய நோய்கள் போன்றவை வரும். எனவே நீங்கள் விரும்பியவாறு அதிக இனிப்பிலிருந்து விடுபட வேண்டியது அவசியம்தான்.

இனிப்பு என்பது சீனி சர்க்கரை ஆகியவற்றிலும் அவை சேர்க்;கப்பட்ட உணவுகளிலும் மட்டும்தான் இருக்கிறது என்றில்லை. பழங்களிலும் இருக்கிறது. பழங்களில் உள்ள இனிப்பு தனியாக வருவதில்லை. பழங்களிலுள்ள இனிப்பானது நார்ப்பொருள் மற்றும் ஏனைய போசணைப் பொருட்களுடன் கலந்து வருகிறது. இதனால் அவற்றில் சீனியின் அடர்த்தி குறைவு. எனவே அவற்றை உண்ணும் போது குருதியில் சீனியின் அளவு திடீரென ஏறுவதில்லை என்பதையும் குறிப்பிடலாம். எனவே அவற்றில் அடிமையாகும் நிலை ஏற்படுவதில்லை.

இதிலிருந்து விடுபடுவது எப்படி?

முதல் வேலையாக உங்களது வீட்டிலிருந்து சீனியையும் சீனி சார்ந்த பொருட்களை வீசிவிடுங்கள். அலுமாரிகளிலிருந்து அகற்றுவதுடன் உங்கள் முயற்சி நின்றுவிடக் கூடாது. அவற்றை உண்பதில்லை என திடசங்கற்பம் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஓவ்வொரு நேர உணவையும் சரியான நேரத்தில் போதியளவாகவும் போசாக்கு நிறைந்ததாகவும் உட்கொள்ள வேண்டும். காலை உணவிலிருந்து இதை ஆரம்பிப்பது முக்கியம். இப்பொழுது பலர் வேலை அவசரத்தில் காலை உணவை தவிர்த்துவிட்டு பின்னர் பசி எடுக்கும் போது திடீர் உணவுகளை கடையில் வாங்கித் திணிக்கும் போதே இந்த பிரச்சனை ஆரம்பிக்கிறது. எனவே மாப் பொருள் புரதம் கொழுப்பு போன்ற போசணைகள் சரியான அளவில் உள்ள உணவுகளைத் தேர்ந்தெடுங்கள். ஏதாவது காய்கறி பழவகைகள் சேர்ந்திருப்பது அவசியம்.

போதிய நீர் அருந்துங்கள். தினமும் 6 கிளாஸ் நீர் அருந்துவது நல்லது. அவை இனிப்பூட்டப்பட்ட பானங்களாக இருக்கக் கூடாது.

பசி இருப்பது கூடாது. பசி இருந்தால் இனிப்பு சேர்ந்த உணவுகளுக்கான அவா அதிகரிக்கும். எனவே பிரதான உணவுகளுக்கு இடைப்பட்ட வேளைகளில் சிறு உணவுகள் உட்கொள்ளலாம். ஆனால் கேக் பிஸ்கற், ரோல்ஸ், பற்றிஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை தொடவும் கூடாது. பழங்களாகவோ காய்கறிகள் அதிகம் சேர்ந்தவையாகவும் இருப்பது நல்லது.

மாறாக வறுத்த கடலை, கச்சான் எண்ணெய் சேர்க்காத கரட் வறுவல் போன்ற ஏதாவது ஒரு இனிப்பற்ற போசாக்கு சிற்றுணவை தயாராக வைத்திருங்கள். வீட்டில் இருக்கும் போது மட்டுமல்ல வேலைக்கு போகும் போதோ, வெளியே செல்லும் போதோ பசி எடுக்கும்போது இவற்றை உண்ணுங்கள். கடை நொறுக்குத் தீனிகளை சாப்பிடவே வேண்டாம்.

தினசரி ஏதாவது உடல் உழைப்பில் ஈடுபடுங்கள் அல்லது உடற் பயிற்சி செய்யுங்கள். இது உங்கள் குருதியில் சீனியின் அளவை அதிகரிக்க விடாமல் தடுப்பதால் இனிப்பு மீதான நாட்டத்தையும் குறைக்கும். அத்துடன் மனம் மகிழ்ச்சியாக இருப்பதாலும் வெற்றுப் பொழுதுகள் இல்லாததாலும் இனிப்பை நாட வேண்டிய அவசியம் ஏற்படாது.

மனம் மகி;ழ்சியாக இருப்பது அவசியம். மறை சிந்தனைகளில் மூழ்காதீர்கள். தேவையற்ற உணர்வுச் சிக்கலகளில் மூழ்க வேண்டாம். மகிழ்சிசான பொழுதுபோக்குளில் ஈடுபடுங்கள்.

மனஅழுத்தம் இருந்தால் அதை மறக்க பலர் மதுவை நாடுகிறார்கள். உங்களைப் போன்ற இனிப்பிற்கு அடிமையானவர்கள் இனிப்பையே நாடுவார்கள். எனவே மனஅழுத்தத்தை தூண்டும் விடயங்களில் ஈடுபடாதீர்கள். உடற் பயிற்சி, நடைப் பயிற்சி, தியானம், யோகாசனம், மந்திர உச்சாடனம் போன்ற ஏதாவது செயற்பாட்டில் ஈடுபடுவதும் நன்மை தரும். அதே போல போதிய உறக்கமும் அவசியம்.

இக் கட்டுரையைப் படித்து முடித்துவிட்டு சும்மா இருக்காதீர்கள். உடனடியாக எழுந்து உங்கள் வீட்டிலுள்ள சொக்லேட், ஐஸ்கிறீம் முதற்கொண்டு எல்லா இனிப்புகளையும் குப்பைக் கூடையில் வீசுவதிலிருந்து உங்கள் முயற்சியை ஆரம்பியுங்கள். இனிப்பிலிருந்து விடுதலை நிச்சயம்.

டொக்டர். ஏம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

Read Full Post »

நிகழ்வாழ்வின் கோலங்களாக விரியும் கவிதைகள்
மணற்கும்பி

அட்டைப்படத்தில் உள்ள மணல் மேட்டையும் மணற்கும்பி என்ற நூலின் தலைப்பையும் பார்த்த உடனேயே நூலைப் படிக்க வேண்டும் என்ற ஆவலை அடக்க முடியவில்லை. ஆயினும் நூலாசிரியர் ரஜிதா இராசரத்தினம் நூலைத் தந்த போது நோயாளி அருகில் காத்திருந்ததால் அட்டைப்படத்தை ஆசையோடு மிருதுவாகத் தடவுவது மட்டுமே சாத்தியமானது.

நானும் வடமராட்சி மண்ணைச் சார்ந்தவன். வல்லிபுர தீர்த்தக் கடற்கரையிலும், மணற்காட்டிலும் நாகர்கோவிலிலும் பரந்து கிடந்த மணல் மேடுகளில் மாணவப் பருவம் முதல் இளைக்க இளைக்க ஓடி ஏறிய அனுபவங்கள் நிறையவே உண்டு. ‘நாசியேறக் கனிந்திருக்கும் நாவற்பழங்களின் சுவையையும்..’ அனுபவித்தவன் நான். ஆனால் அண்மைக் காலங்களில் சென்ற போது 70 வயதிலிலும் மூச்சிளைக்காது அங்கு நடக்க முடிந்தது. மூச்சளைக்காததற்கு காரணம் எனது நல்ல ஆரோக்கியம் அல்ல.

‘அம்மா சொன்ன அந்த
பனையளவு உயர மணல்கும்பி
இப்போது தேடியும்
கிடைக்கவில்லை…’

ஆம் தொலைத்துவிட்டோம் இயற்கை வளங்களை. மிஞ்சி இருப்பவற்றையும் தொடர்ந்தும் சூறையாடி அழித்துக் கொண்டே இருக்கிறோம்.

மணற்கும்பிகளை மட்டுமல்ல.

‘…ஆசையாய் ஊஞ்சல்
கட்டி ஆடிய – அந்த
வயதான வேப்பமரங்களும்
விறக்குக்காய் வெட்டுண்டு
போனதுவே…’

இயற்கையே நேசிப்பதும், ரசிப்பதும், அதில் ஊறித் திளைப்பதும் கவிஞனுக்கு கிடைத்த வரம். அதை அழிப்பது கண்டு கலங்கும் மனமும் அங்கிருக்கும். ரஜிதா இராசரத்தினம் அவர்களிடம் இத்தகைய பண்புகள் நிறையவே இருப்பதை மேற் கூறிய உதாரணங்களில் மட்டுமின்றி இன்னும் பல கவிதைகள் ஊடாக அறிந்து கொள்ள முடிகிறது. தான் ரசித்ததை இனிய வரிகளில் சொல்லி அந்த ரசனையை எங்களுக்கும் தொட்டவைக்கவும் முடிகிறது அவரால்.

இன்னொரு கவிதையில் பொலித்தீன் பாவனை பற்றி இவ்வாறு

‘மிச்ச எலும்போடு
இப்பகூட உக்கியிருக்காத
அந்த லஞ்ச்சீட் பையும்…’

ரசனையோடு நின்றுவிடாது பரம்பரை பரம்பரையாக கடத்தப்பட்டு வரும் மூடப் பழக்கவழகங்களை கண்டித்துத் திருத்தும் அறிவியல் பார்வையையும் இவரது கவிதைகளில் காண முடிந்தது.

‘வடக்காலயோ
கிழக்காலயோ
இல்ல தெற்காலயோ…’
‘அட கோதாரி விழுவாரே
பல்லி தன்ர பசியிலை கத்திது
அதின்ர வாய்
நீங்கள் பாக்காம – உங்கட
சோலிய பாருங்கோ …’

பொதுவாக கவிதை என்பது உணர்வு நிலை சார்ந்தது. சொல் ஆளுமை, கலைத்துவ வெளிப்பாடு ஆகியன கருத்து வெளிப்பாட்டை மேவிநிற்கும். ரஜிதாவின் படைப்புகளில் இரண்டிற்கும் இடையேயான ஒரு சமநிலையை பேணப்படுவதை அவதானிக்க முடிகிறது. ஆம் அவரது கவிதைகளில் வலுவான செய்தி இருக்கிறது. அதே நேரம் அவற்றை கலைநயத்தோடு வெளிப்படுத்த முனையும் கவிதா மொழியையும் காண்கிறோம்.

இந்தத் தேசம் இந்து சமுத்திரத்தில் மிதக்கும் தீவு அல்ல. குருதிக் கடலில் ருசி தேடும் யம தேசம். 79, 83, முள்ளிவாய்க்கால் பேரழிப்பு, ஏப்ரல் 21 தற்கொலைத் தாக்குதல்கள் என முடிவில்லாமல் இரத்ததாகம் கொண்ட நாடு.

ரஜிதாவின் குரலில் இவ்வாறு

‘தீச்சுடர் புசித்த தேசமடி
இரத்தவாடையுடனாய்
மூச்சையற்றோம்…
….. மலங்களோடு மாமிசமானோம்
பிண்டமறுந்த நர ஊன்களு10டாய்
ஏதோவென்றைப் பற்றி
குருதிக் கடலில்
எங்கோ வந்தும் சேர்ந்தோம்,…’

குருதிக்கடல் மட்டுமல்ல தொலைத்த உறவுகளும் ஏராளம். அவர்கள் விடும் கண்ணீர் பதவியில் இருப்போர் கண்களில் படுவதில்லை. தற்செயலாக அவர்கள் காதில் விழுந்தாலும் நிறைவேற்றப்பட்டாத பொய் வாக்குறுதிகள் மட்டுமே கிடைக்கும்.

காணமல் ஆக்கப்பட்ட தந்தையைப் பற்றிய ஒரு பிள்ளையின் நினைவுகள் இவ்வாறு .

‘மூன்று வயதில் பார்த்தது
முகங் கூட நினைவில் இல்லை..
தேடி கண்டு பிடிக்கக் கோரி
பல இடம் கொடுத்த நிழற்படங்கள் ஏராளம்’

ரஜிதாவின் கவிதை மொழி இயல்பானது. வாசகனை கைகோர்த்து கூடவே அழைத்துச் செல்வதாகவே இருக்கிறது. மருள வைக்கும் வெற்றலங்கார சொற் சோடனைகள் கிடையாது. திகைத்து ஒதுங்க வைக்கும் மொழியாடல் கிடையாது. வட்டார வழக்குகள் இயல்பாக கலந்து வருகின்றன.

வடமராட்சி கிழக்கு மண்ணின் பேச்சு வழக்கு கவிதைகளில் கலந்து வருவது யதார்த்த வாழ்வைப் பிரதிபலிப்பதுடன் சுகமான அனுபவமாகவும் இருக்கிறது. அளாப்பி, அப்பேக்க, எழுதேக்க, கோதாரி விழுவாரே, எணை, உண்ணான, பிசகாம,… எடுத்துக் காட்டிக் கொண்டே போகலாம். பக்கம் பக்கமாக நீளும்.

வாழ்க்கை என்பது ஒரு முடிவிலா போராட்டம். சவால்கள் பலவற்றை எதிர்கொள்ள நேரும். துன்பங்களும் இனிய நிகழ்வுகளும் சங்கிலித் தொடராய் முடிவின்றி நீளும். சலிக்காது வாழ்வது மட்டும் போதாது. அதை ரசிக்கவும் வேண்டும்.

ரஜிதா ஒரு இளம் பெண், இது அவரது கன்னி முயற்சி. ஆயினும் அவர் வாழ்வை ரசிக்கிறார். கடந்தவற்றில் திளைக்கிறார். நிகழ்வாழ்வை ரசனையோடு அனுபவிக்கிறார். எதிர்காலத்தை நம்பிக்கையோடு பார்க்கிறார். அவரது படைப்பாளுமையின் கூறுகள் கூடாக நாமும் வாழ்வை ரசிக்க முடிகிறது. மனித வாழ்வின் மறைந்திருந்த கோலங்கள் பற்றிய பரந்த பார்வையை நாவற்பழம் என இனிக்கும் மொழில் நாமும் பெறுகிறோம்.

இது அவரது முதல் நூல். புதிய வீச்சுக்களுடன் இன்னும் பல படைப்புகளை அவர் தர வேண்டும் என வாழ்த்துகிறேன். அதற்கான கீற்றுகளை இப்பொழுதே காண முடிகிறது.

ஜீவநதி ஜீலை 2019 இதழில் வெளியான கட்டுரை

எம்.கே.முருகானந்தன்

0.00.0

Read Full Post »