Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘விமர்சனம்’ Category

ஒரு குட்டிப் பையன் அப்பாவாகிறான்’சிறுகதையை முன்வைத்து
தி.ஞானசேகரன் படைப்பில் குழந்தைகளின் இயல்புகளும் குழந்தை உளவியலும்
எம்.கே.முருகானந்தன்

தி.ஞானசேகரன் ஒரு பன்முக ஆளுமை கொண்ட எழுத்தாளர். சிறுகதையும் நாவலுமே அவருக்கு ஆரம்பம் முதல் புகழ் சேர்த்துக் கொடுத்திருந்த இலக்கிய வடிவங்கள் என்ற போதும் கட்டுரைகள், பயணக் கட்டுரைகள், நூல் அறிமுகங்கள் விமர்சனங்கள் என்று பல்வேறு துறைகளிலும் தனது திறமையை பதித்திருக்கிறார். ஞானம் இதழாசிரியராக அவரது பங்களிப்பு மற்றொரு விதத்தில் விதந்து சொல்லக் கூடியது.

எவ்வாறு இருந்தபோதும் ஞானசேகரன் என்று சொன்னால் நல்ல சிறந்த சிறுகதை ஆசிரியன் என்பதே பலருக்கும் உடனடியாக நினைவில் வரும். கனமான கருவுள்ள படைப்புகள், எடுத்துக் கொண்ட கருவை சிதையவிடாது கதையை நடாத்திச் செல்லும் லாவண்யமும் தெளிவான நடையும் சிறந்த திருப்பங்களும் அவரது சிறுகதைகளின் சிறப்பிற்கு காரணம் எனலாம். நீண்ட காலமாக படைப்புலகில் இயங்கிவந்த போதும் பல்வேறு மாறுபட்ட உத்திகளை தனது படைப்புகளில் கையாண்டு இருப்பதால்தான் நீர்த்துப் போகாத எழுத்தாளராக இன்னமும் படைப்புலகில் வலம்வர முடிகிறது.

ஞானசேகரன் அடிப்படையில் ஒரு மருத்துவர். இருந்தபோதும் தனது படைப்புகளில் தன்னை ஒரு மருத்துவனாக முன்னலைப்படுத்தியது மிகவும் குறைவு என்றே கருதுகிறேன்.

அல்ஷேசனும் ஒரு பூனைக்குட்டியும், கடமை, கருவறை எழுதிய தீர்ப்பு போன்ற ஒரு சில கதைகளில் தன்னை மருத்துவனாக இனம் காட்டும் பாத்திரங்களை படைத்திருப்பதை அவதானிக்க முடிகிறது. இதில் கடமை ஒரு ஆரம்ப காலப் படைப்பு 1965 ல் கலைச்செல்வியில் எழுதியதாக இருக்க அல்ஷேசனும் ஒரு பூனைக்குட்டியும் இடைக்காலப் படைப்பாக 1996ல் வெளியாகி இருக்கிறது. கருவறை எழுதிய தீர்ப்பு 1997ல் தினக்குரல் பத்திரிகையில் பிரசுரமானது.

கணவனின் சுக்கிலத்தில் விந்தணுக்கள் இல்லாத போது முகம் தெரியாத மற்றொரு ஆணின் விந்தணுக்களை பெற்று செயற்கை முறையில் கருத்தரிக்க வைக்கும் சிகிச்சை முறை (Donor IUI) பற்றி கருவறை எழுதிய தீர்ப்பு பேசுகிறது. இக் கதையானது ஒரு மகப் பேற்று நிபுணரின் பார்வையாக இருந்த போதும், அதற்கு அப்பால் இனப் பிரச்சனையையும் அதையும் தாண்டிய நட்புணர்வு பற்றியும் பேசுகிறது. முடிவு எதிர்பாராதது. கதை முடிந்த பின்னரும் வாசகன் மனத்தில் பல கற்பனைகளை கருக்கொள்ள வைக்கும் திருப்பமாக அமைந்திருப்பது இதன் சிறப்பம்சமாகும்.

இருந்தபோதும் தன்னை மருத்துவனாக அடையாளப்படுத்தாமலே, ஒரு மருத்துவன் சமூகத்திற்கு சொல்ல வேண்டிய கருத்துகளை இன்னும் சில சிறுகதைகளில் சொல்லியிருப்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

கட்டறுந்த பசுவும் கன்றுக் குட்டியும் என்ற கதையானது தாய்பாலின் மகிமையை சொல்லாமல் சொல்கிறது. புpரச்சார நெடி சற்றும் அடிக்காமல் உணர்வுபூர்வமான கதையாக நகர்த்தியிருந்தாலும் தாய்பால் ஊட்டுவது பற்றி மேல்தட்டு நாகரீகப் பெண்களிடையே நிலவிவந்த தவறான கருத்துக்களை அழகாக அப்படைப்பில் சுட்டிக் காட்டுகிறார்.

அவருடைய சிறந்த படைப்புகளில் இதுவும் என்று பல விமர்சகர்கள் சுட்டிக் காட்டியிருப்பதை அவதானித்திருக்கிறேன். இக்க கதை சொல்லும் செய்திக்கு அப்பால் சிறந்த நடையுடன் கூடிய படைப்பாகவும் உள்ளது. அத்துடன் இது ஒரு குறியீட்டுப் படைப்பாக அமைவதையும் அவதானிக்க முடிகிறது.

இது போலவே அவரது உன்னத படைப்புகள் எனப் போற்றப்படும் அல்ஷேசனும் ஒரு பூனைக்குட்டியும், காட்டுப் பூனைகளும் பச்சைக் கிளிகளும் ஆகிய இரண்டும் கூட குறியீட்டுப் பாணியின் அமைந்த படைப்புகளே. இந்த இரண்டையும் குறியீட்டுப் பாணியில் எழுத முனைந்தமைக்கு, அரசு மற்றும் இராணுவத்திற்கு எதிரான கருத்துக்கைளச் வெளிப்படையாகச் சொல்ல முடியாத, அன்றைய பயங்கரமான சூழலும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை.

தமிழர் சார்பாக அரச படைகளுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தவர்கள் கொலை செய்யப்படுவதும் காணமால் போவதும் நித்திய கண்டமாக இருந்த நிலையில் தனது நியாயமான கருத்துக்களை பலமாக முன்வைப்பதற்கு குறியீட்டு வடிவத்தைத் தவிர வேறு தேர்வு அவருக்கு இருந்திருக்க முடியாது. ஆனால் கட்டாயத் தேவைக்காக புகுத்தப்பட்ட வடிவமாக இல்லாமல் சிறந்த கலைப் படைப்புகளாக அவை அமைந்திருந்தன. வெளியான நேரத்திலேயே இவற்றை நான் வாசித்து மகிழ்ந்ததுண்டு. இப்பொழுது மீள்வாசிப்பின் போதும் அந்த உணர்வு கெடவில்லை என்பதை மகிழ்ச்சியோடு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

விமர்சகர்களின் பாராட்டை அதிகம் பெறாதபோதும் சிறந்த ஒரு படைப்பாக நான் கருதுவது ‘ஒரு குட்டிப் பையன் அப்பாவாகிறான்’ என்ற சிறுகதை ஆகும். அந்த படைப்பு பற்றியே இந்தக் கட்டுரையில் முக்கியமாகப் பேச இருக்கிறேன்.

இது அவரது ஆரம்ப கால படைப்புகளில் ஒன்று. 1971 ம் ஆண்டு கதம்பம் சஞ்சிகையில் வெளியாகியிருக்கிறது. கூடவே இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் நடாத்திய அகில இலங்கை சிறுகதைப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் தட்டிக் கொண்டது.

முழுக்க முழுக்க சிறுவனின் பார்வையாகவே இக் கதை சொல்லப்படுவது ரசனைக்கு உரியதாக இருக்கிறது. ஞானசேகரன் படைப்புகள் வழமையாகவே நல்ல தமிழில் இருக்கும். இக்கதையும் அவ்வாறே இருக்கிறது. சிறுவனின் பேச்சு மொழியில் அமைந்திருந்தால் மேலும் சுவையாக இருந்திருக்கும்.

இந்தச் சிறுகதை என்னைக் கவர்ந்து கொண்டதற்குக் காரணம் அது ஒரு சின்னப் பையனின் வாழ்க்கை முறையையும், அவன் எதிர் கொள்ளும் உணர்வுச் சிக்கல்களையும், குழந்தை உளவியலையும் மிக அற்புதமாகச் சொல்கிறது. உண்மையில் இது ஒரு அனுபவம் சார்ந்த அற்புதமான பார்வை போலவே இருக்கிறது. சிறுவயதில் தான் பெற்ற அனுபவமாக இருக்கலாம். இருந்தபோதும் அனுபவம் என்பது சொந்த அனுபவமாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. பிறர் அனுபவத்தை தன் அனுபவமாக உணரும் உள்ளொளி படைத்தவனே சிறந்த எழுத்தாளனாக மிளிர முடியும்.

எனவே குழந்தப் பருவ அனுபவங்களுக்கு அப்பால், வளர்ந்த பின் குழந்தைகளுடன் பிழங்கும் போது அவதானித்து தனது கற்பனைக் குதிரையை தட்டிவிட்டதுடன், பிற்பாடு மருத்துவனாக பெற்ற அனுபவங்களும் சங்கமித்ததன் பலனாக பிறந்த படைப்பு எனக் கருத முடியும்.

ஒரு சின்னப் பையனின் நாளாந்த வாழ்க்கை ஒட்டத்தின் சித்தரிப்பாகவே கதை ஆரம்பிக்கிறது. இரவு நேரகாலத்துடன் படுக்கைக்கு செல்வது எல்லாப் பிள்ளைகளும் போலவே அவனது வழக்கமும் கூட. ஆனால் அன்று மட்டும் 9 மணியாகியும் அவனுக்கு தூக்கம் வரவில்லை.

காரணம் என்ன ?

திருமணமாகி கொழும்பு சென்றிருந்த அவனது அன்பிற்குரிய ஒரே அக்கா நீண்ட நாட்களுக்குப் பின்னர் அன்றிரவு ஊருக்கு திரும்பி வர இருக்கிறாள். அவளது வரவை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்பதால்தான் தூக்கம் அவனை அண்டவில்லை. சாதாரணமாக போகிற போக்கில் சொல்லிப் போகிற ஒரு தகவல் போல முதல் வாசிப்பில் தோன்றலாம் ஆயினும் நிதானமாகப் படிக்கும் போது, குழந்தைகளின் ஒரு இயல்பான குணத்தை கதாசிரியர் வெளிப்படுத்துவதை உணர முடிகிறது.

Curiocity என்று சொல்லப்படும் ஆர்வம் என்ற குண இயல்வை அந்தச் சம்பவம் வெளிப்படுத்துகிறது.
புதியவற்றை அல்லது பிறர் விடயங்களை அறிவதில் ஆர்வம் எல்லோருக்கும் இருக்கவே செய்யும். ஆயினும் குழந்தைகளிடத்தில் இந்த ஆர்வம் அதிகமாகவே இருக்கும்.

‘இரவு எட்டு மணியாகிவிட்டால் எனக்கு நித்திரை வந்து விடும். சாப்பிட்டுவிட்டு படுத்துவிடுவேன். …. மணி ஒன்பது அடித்தது. ஏனக்கு நித்திரை வரவில்லை. … யாழ்தேவி ரெயிலில் அக்கா வருவா…. அக்காவைப் பாரக்க எனக்கு ஆசையாக இருக்கிறது..’

எந்தவித ஆலோபனங்களும் இன்றி மிகவும் இயல்பாக பையனின் ஆசையென அவனது ஆர்வத்தை அவனது வார்தைகளிலேயே ஞானசேகரன் சொல்லியிருக்கிறார்.
இந்த சம்பவத்தில் மட்டுமின்றி திருமணமான பின்னர் தன்மீதான அக்கறை குறைந்து புது வரவான அத்தான் மேல் அவளது அக்கறை விழுவதை அந்தச் சிறுபையன் கவலையோடு கூடிய ஆர்வத்துடன் அவதானிக்கிறான்.

அதே போல அக்காவிற்கு குழந்தை பிறந்த பின்னர் அவளது கவனமானது கணவனிலிருந்து குறைந்து குழந்தை மேல் அதிகம் விழுவது போன்ற சம்பவங்களை கதாசிரியர் விபரித்து செல்கையில் அந்தப் பையனின் கவனங்கள் எங்கெங்கு விழுகின்றன என்பதை உணர முடிகிறது. இவை யாவுமே குழந்தைகளின் துருவிப் பார்க்கும் ஆர்வ இயல்பை (Curiocity) வெளிப்படுத்தி இருக்கின்றன.

குழந்தைகளில் அவதானிக்கக் கூடிய மற்றொரு இயல்பு அதிகமான சுயமரியாதை உணர்வு (self esteem) எனலாம். தன்னைப் பற்றி தானே உயர்வாக நினைத்துக் கொள்ளும் இயல்பை பெரும்பாலான குழந்தைகளில் காணலாம். மாறாக தாழ்வுணர்ச்சி உள்ள குழந்தைகளும் இல்லாமல் இல்லை. குழந்தைகளுக்கு மாத்திரமின்றி பெரியவர்களுக்கும் சுயமரியாதை உணர்வு இருக்க வேண்டும். நாளாந்த வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்களுக்கு முகம் கொடுத்து முன்நகர்வதற்கு இது அவசியமாகிறது.

குழந்தைகளிடத்தில் சுயமரியாதை உணர்வை பெற்றோர்கள் வளர்க்க வேண்டியதன் அவசியத்தை நவீன குழந்தை உளவியல் வலியுறுத்துகிறது. ஏனெனில் தங்களது பலங்களையும் பலவீனங்களையும் உணர்ந்து தம்மைப் பற்றிய தெளிவான நல்லப்பிராயத்தை கொண்டிருக்கும் குழந்தைகளால்தான் எதிர்மறை அழுத்தங்களை இலகுவாகக் கையாளவும், முன்னேற்ற பாதையில் நகரவும் முடியும்.

அதே நேரம் அது போலியான வரட்டுத் தற்பெருமையாக மாறக் கூடாது என்பதும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய மற்றொரு விடயமாகும்.
அக்கா தன்னைக் கண்டவுடன் தன்னை அணைத்துக் கொள்வாள், தனக்குத்தான் பரிசுப்பொருட்கள் வாங்கி வருவாள். தனக்கு மட்டுமே பிஸ்கற் தருவாள். தன்னை அணைப்பாள், தன்னோடு கூடப் படுப்பாள் என ஞானசேகரன் விபரித்து செல்கையில் அந்தப் பையன் தன்னைப் பற்றிய உயர் உணர்வை கொண்டிருப்பதை நாம் புரிந்து கொள்கிறோம்.

‘அக்காவுக்கு என்னிடம் நல்ல விருப்பம். கலியாணஞ் செய்யிறதுக்கு முன்னம், அக்கா எனக்கு ஒவ்வொரு நாளும் குளிக்கவாத்துவிடுவா, தலை சீவிவிடுவா. இரவில் பாடமும் சொல்லித் தருவா’ என்ற வசனத்தை உதாரணம் காட்டலாம்.

‘நாளைக்கு அக்கா என்னோடு கதைச்சாலும் நான் அவவோடை கதைக்க மாட்டன். அவவுக்கு இப்ப பெரிய எண்ணம். கலியாணம் முடிச்ச பிறகு கண்கடை தெரியேல்லை. அவ என்னோடை கதைக்காட்டில் எனக்கென்ன? எனக்கொண்டும் குறையமாட்டுது’ என்று கதாசிரியர் சித்தரிக்கையில் அவனது சுயமரியாதை உணர்வு சீற்றமாக வெளிப்படுகிறது.

இருளைப் பற்றிய பயம் (fear of darkness) என்பது பெரும்பாலான குழந்தைகளிடம் இருக்கும் மற்றொரு உணர்வாகும். அவர்களது கற்பனை திறன் வளர்ச்சியடையும் பருவத்திலேயே இது கூடுதலாக ஏற்படுகிறது. பேய்கள் பூதங்கள் போன்ற கற்பனை உலகிற்கும் நிஜ உலகிற்கும் இடையேயான எல்லைக் கோட்டை புரிந்து கொள்ள முடியாத பருவத்து உணர்வு இது எனலாம். இதனால் அரை இருளில் தெரியும் நிழல் கூட மூன்று தலையுள்ள பயங்கர மிருகமாக அவர்களுக்கு தோன்றி பீதியைக் கிளப்பக் கூடும்.

இருள் சூழ்ந்த சூழலில் சிறுவர்களுக்கு கவனச் சிதறல்கள் (distractions) ஏற்படுவதற்கான சந்தர்பங்கள் குறைவாக இருப்பதே இதற்குக் காரணமாகும். ‘கற்பனைகள் தெறிகட்டிப் பாய்வதனால் பகலில் தன்னை தளும்பவிடாது தற்காக்கக் கூடிய குழந்தை கூட இருளில் பாதிக்கப்படக் கூடும்’ என்று Southern Illinois University யில் துணைப் பேராசிரியரான Dr.Dobbins கூறுவதை இவ்விடத்தில் நினைவுபடுத்தலாம்.

‘அம்மா அம்மா அக்கா வந்திட்டா.’ ஏன்று கூவிக்கொண்டு சந்தோசத்துடன் துள்ளிக் குதித்து படலையடிக்கு ஓடுகிறேன். ‘…. மற்ற நாட்களில் இருட்டிவிட்டால் நான் வீட்டுக்கு வெளியே வரவும் மாட்டேன். இருட்டைக் கண்டால் எனக்கு சரியான பயம்’

கதையில் வரும் இந்தச் சிறு பகுதியானது பையனின் இருள் பற்றிய பயத்தைச் சுட்டிக் காட்டுவதுடன் அக்காவின் வருகை பற்றிய அவனது ஆர்வமானது அந்தப் பயத்தையும் தாண்டிச் செல்லும் கவன மாற்றமாக மாறுவதையும் புரிய வைக்கிறது.
குழந்தைகளில் காணும் மற்றொரு இயல்பை பின் வரும் பராவில் உணர முடியும்.

‘அக்கா ஏன் என்னோடு கதைக்கவில்லை. இருட்டில் நான் நிற்பதை கவனிக்கவில்லையோ? அக்காவுக்கு தெரியும்படியாக முன்னுக்கு போகிறேன். அக்கா இப்பவும் என்னோடு கதைக்கவில்லை. …. (அக்கா) கையில் இருக்கும் பார்சலை வாங்கிக் கொள்வதற்காக நான் கையை நீட்டுகிறேன். அக்கா ஒன்றும் பேசாமல் பார்சலைக் கொடுக்கிறா’

கண்ணுக்கு தெரியும் படி முன்னுக்கு போதல், பார்சலை வாங்குதல் ஆகியவை அக்காவின் கவனத்தை தன்மீது திருப்பும் attention seeking behavior  எனலாம். இது போன்ற செயற்பாடுகள் குழந்தைகளில் இயல்பானது தான். இதைத்தான் ஞானசேகரன் தன் சிறுகதையில் எடுத்துக் காட்டியுள்ளார்.

ஆனால் இந்தப் பழக்கமானது ஒரு குழந்தையில் அடிக்கடி அல்லது எப்பொழுதும் நிகழ்ந்தால் அது சுற்றியுள்ளவர்களுக்கு மிகப் பெரிய தொல்லையாகி விடுவதும் உண்டு. அழுது அடம்பிடித்து கவனத்தை இழுப்பது மட்டும் பிரச்சனை அல்ல. மகிழ்ச்சியூட்டும் செய்கைகளாலும் தொடர்ந்து கவனத்தை ஈர்க்க முயல்வது சிக்கலானது.

கண்டுகொள்ளாமல் விடுவதோ கண்டிப்பதோ இதைத் திருத்தும் வழியல்ல. ‘இப்பொழுது நான் வேலையாக இருக்கிறேன். இதை முடித்த பின்னர் உனது வேலைக்கு வருகிறேன்’ எனத் தன்மையாகச் சொல்லி அப்பழக்கத்தை குறைக்க முயல வேண்டும்.
ஞானசேகரனின் கதையில் வரும் இந்தப் பையன் கவனத்தை ஈர்க்க முயன்ற போதும் அதைத் மற்றவர்களுக்கு தொல்லை தரும்படியாக நீடிக்கவில்லை. அவன் தனது மனத்திற்குள் வேதனைப்படுவதாகவே கதையில் வருகிறது.

பொறாமை (jealousy) உணர்வு எல்லா மனிதர்களிலும் காணப்படக் கூடிய ஒரு உணர்வுதான். என்றாலும் குழந்தைகளில் பொதுவாக அதிகம் காணப்படுவதுண்டு. இது பல காரணங்களால் ஏற்படலாம்.

உதாரணத்திற்கு ஒரு புதிய குழந்தை குடும்பத்தில் பிறக்கும்போது குடும்பத்தினர் அனைவரதும் அக்கறை மூத்த பிள்ளையிலிருந்து, குட்டிக் குழந்தை மேல் விழுவது மூத்த பிள்ளையில் பொறாமையை தூண்டி விடலாம். அந்தப் பொறாமையானது கடுமைiயான எதிர் விளைவை ஏற்படுத்தலாம் அல்லது மென்மையான செய்கைகளாலும் வெளிப்படக் கூடும். தனது தங்கை அல்லது தம்பி மேல் மற்றவர்கள் அன்பு பகிரப்படுவதை பொறுக்க முடியாத பிள்ளைகள் தனது சகோதரம் மீது கோபம் கொள்ளவது, பேசுவது, அடிப்பது, நக்கலடிப்பது அல்லது துன்பம் கொடுப்பதை வாழ்க்கையில் நீங்களும் அவதானித்தே இருப்பீர்கள்.

இந்தக் கதையில் பையனின் மீதான அக்காவின் அக்கறை குறைந்து, அவளது கவனம் முழுக்க கணவன் மேலே விழுகிறது.

‘முந்தியெண்டால் அக்கா என்னுடன்தான் படுப்பா …. இண்டைக்கென்றாலும் நான் அக்காவுடன் படுக்கலாமென்று ஆசையோடு இருந்தேன். அக்காவுக்கு நான் ஒருத்தன் இருக்கிறன் என்ற நினைப்பே இல்லைப் போல …’

‘அத்தானின் மேல் எனக்கு கோபங் கோபமாக வருகிறது. அவருக்கு பெரிய நடப்பு..’ என விபரித்து செல்வதானது அந்தச் சிறுவனுக்கு தனது அத்தானில் ஏற்படும் பொறாமை உணர்வை எடுத்துக் காட்டுகிறது.

குழந்தைகளில் ஏற்படும் மனமுறிவுகளையும் கவலைகளையும் கவனத்தில் எடுக்காது விடக் கூடாது. இல்லையேல் அவர்கள் தாங்கள் உதாசீனப்படுத்துவதாக உணர்வர். இது அவர்களது மனவளர்ச்சியையும் எதிர்கால வாழ்வையும் பாதிக்கக் கூடும். பெரியவர்கள் பிள்ளைகளது மனமுறிவுகளை அவதானித்து அவற்றைச் சீர் செய்ய வேண்டும். Rupture and Repair என இதைக் குறிப்பிடுவர்.

‘ஏனடா உனக்கு என்னோடை கோவம்…’
ஏன்னால் பேச முடியவில்லை. அழுமை அழுகையாக வருகிறது. கண்களில் நீர் முட்டி கன்னங்களில் வழிகிறது.

அக்கா என்னை தன்னுடைய மார்போடு அணைக்கிறா. நான் அக்காவுடைய நெஞ்சிலே முகத்தை புதைத்துக்கொண்டு விம்மி விம்மி அழுகிறேன்…’

அந்தச் சிறுவனில் ஏற்பட்ட மனத்தாங்கலை, அவனை அணைத்து வைத்து ஆதரவுடன் பேசுவதன் மூலம் அக்கா சரிசெய்கிறாள். மனமுறிவு ஆற்றுப்படுத்தப்படுகிறது.

உளவியலில் இன்று பேசப்படும் ஆற்றுப்படுத்தல் (counseling) சிகிச்சை முறையை அக்கா அன்றே செயன்முறையில் காட்டிவிட்டமையானது ஞானசேகரனின் உன்னத படைப்பாற்றலின் வெளிப்பாடாகும்.

ஒரு குழந்தையின் உணர்வுகளை மிக நுட்பமாக பதிவு செய்தது மாத்திரமின்றி அதில் ஒளிந்திருக்கும் குழந்தைகளின் உளவியலை மிகச் சிறப்பான முறையில் கலைப்படைப்பாக்கிய ஞானசேகரன் பாராட்டுக்குரியவர்.

இது அவரது முப்பதாவது வயதுப் படைப்பு. இன்று அகவை 75ல் பேரக் குழந்தைகளுடன் கூடிக் குமாளமடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் குழந்தைகள் பற்றிய அவரது பார்வை மேலும் விரிந்திருக்கும். இன்று அவர் குழந்தைகள் பற்றி எழுதினால் எவ்வாறு இருக்கும் எனக் கற்பனை பண்ணிப் பார்ப்பது சுகமாக இருக்கிறது.

எம்.கே.முருகானந்தன்

தி.ஞானசேகரன் அவர்களது 75 பிறந்ததின விழா மலரில் சென்ற வருடம் எழுதிய கட்டுரை

0.00.0

Read Full Post »

பரணீதரனின் சிறுகதைத் தொகுதியை அண்மையில் படிக்கும் வாய்ப்புக் கிட்டியது.

மீண்டும் துளிர்ப்போம். இது பதின்மூன்று சிறுகதைகளை உள்ளடக்கிய அழகான நூல். இதழ் விரித்து நிற்கும் மலரொன்று அழகிய அட்டைப்படமாக சிலிர்த்து நிற்கியது. வடிவமைத்த மேமன் கவியின் கவிநயம் துலங்குகிறது.

தொகுப்பிலுள்ள ‘யதார்த்தம’; என்ற சிறுகதை என்னை மிகவும் கவர்ந்ததாக இருந்தது. இதற்குக் காரணம் அதிலுள்ள சமூகப் பெறுமானம்தான். எமது சமூகத்தில் முதுமை வாழ்வு பற்றி இன்னும் தளாராமல் இருக்கும் ஒரு கருத்தை இக்கதை மறுபரிசீலனை செய்கிறது. நோகாமல் தவறெனச் சுட்டிக் காட்டுகிறது. இது என்னுள் பல சிந்தனை ஊற்றுக்களை திறந்து விட்டது. அதனைப் பகிர்ந்து கொள்வதுடன் நூலில் உங்களையும் அழைத்துச் செல்லலாம் என எண்ணுகிறேன்.

தனது சொந்தக் காலில் நிமிர்ந்து நிற்கும் வரை முதுமை வாழ்வு என்பது துன்பமானது அல்ல. சொந்தக் கால் என்பது பொருளாதார ரீதியானதைக் குறிக்கவில்லை. நடமாடித் திரிந்து தனது சொந்த அலுவல்களை தானே செய்யக் கூடியதாக இருக்கும் வரை அது தொல்லை கொடுப்பதாக இருக்கமாட்டாது.

வயதிற்கு மதிப்பிருக்கிறது இங்கு. வயது முதிர்ந்தவர்களைக் கௌரவிக்கும், அவர்களது அனுபவபூர்வமான ஆலோசனைககளுக்கு காது கொடுக்கும் சமூகப் பாரம்பரியமும் எம்முடையது. அத்தகைய பண்பாட்டுச் சூழல் இன்னமும் ஒழிந்து விடவில்லை. அதன் காரணமாகவே முதுமை மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது எனக் கூறினேன்.

ஆனால் படுக்கையில் வீழ்ந்துவிட்டால்….? அறளை பெயர்ந்து விட்டால் என்ன நடக்கும்?

வயது முதிர்ந்த நேரத்தில் அதிலும் முக்கியமாக நோயும் இயலாமையும் துன்புறுத்தும்போது தமது தாய் தகப்பனை அல்லது பாட்டன் பாட்டியை தமது வீட்டில் வைத்துப் பராமரிக்க வேண்டியது தமது கடமை என்பதாகவே இன்னமும் பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள். கூட்டுக் குடும்ப வாழ்க்கை முற்றிலும் தொலைந்து விடாத சமூகமாக இருப்பதன் பலன் அது.
ஆனால் படுக்கையில் வீழ்ந்து விட்டபின் ஒரு புதிய பிரச்சனை தலை தூக்குகிறது. ஆழமான அன்பு, பொருளாதார வசதி ஆகியன இருந்தாலும் இப்பிரச்சனையை எதிர்கொள்வது சிரமம்.

மலையகத்தைக் களமாகக் கொண்ட கதை. மண்வாசனைக் கதையல்ல.
கைக் குழந்தையாக இவன் இருந்தபோதே மலைச்சரிவு இவனது தந்தையைக் காவு கொண்டுவிட்டது. அதன் பின்னர் இவனைப் பிள்ளை மடுவத்தில் விட்டு விட்டு, கொழுந்து பறித்து அவனை வளர்தெடுத்தது அந்த அன்னைதான். பல்கலைக்கழகம் வரை படிக்க வைத்து ஆசிரியன் ஆக்குகிறாள். தான் உழைக்கத் தொடங்கியதும் தாயை வேலை செய்வதை நிறுத்தி வீட்டில் ஆறுதலாக இருக்கச் செய்கிறான். தாய் பேரக் குழந்தைகளைப் பராமரிப்பதில் மகிழ்ச்சியடைகிறாள். பாசம் நிறைந்த குடும்பம்.

இந்நிலையில் திடீரெனப் பக்கவாதம் வந்து படுக்கையில் தாயை விழுத்திவிடுகிறது. எவ்வளவுதான் தான் பாசம் இருந்தாலும் கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போக வேண்டியிருப்பதால் தாயைப் பராமரிப்பது பெரும் சுமையாகிறது. இந்த நிலையில் அவர்கள் என்ன செய்ய முடியும். முதியோர் இல்லத்தில் விடுவதுதான் வழி. ஆனால் தாய் மீதான பாசம், பாரமரிப்பு நிலையில் விடுவது பற்றிய குற்ற உணர்வு, ஊர்ப்பழி, போன்ற குடும்ப ரீதியானதும் சமூக ரீதியானதும் காரணங்கள் தடையாக இருக்கின்றன.

இவை பற்றி அலசும் சமூக விழிப்புணர்வுக் கதையாக இருக்கிறது. மகன் சரியாக முடிவெடுக்கிறான். பாராட்டத்தக்கது. ஆனாலும் கதையின் முடிவோடு என்னால் ஒத்துப் போக முடியவில்லை. தாயின் இயற்கை மரணத்தில் முடிப்பதைத் தவிர்த்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.
ஆனால் பரணீதரன் ஏனைய படைப்புகள் பலவும் இதற்கு மாறாக தீர்க்கமாக கருத்துக்களைத் முன் வைக்கிறன. சமூக முன்னேற்றதில் அக்கறையுள்ள படைப்பாளியால்தான் தெளிவான கருத்துக்களை முன்வைக்க முடியும். அழகியலுக்குள் தன்னை மறைத்துக் கொண்டு பேடித்தனமான படைப்புகளை வழங்கும் சிறுமை இவரிடம் காணப்படவில்லை.

கருத்து ரீதியாக ‘யதார்த்தம்’ என்னைக் கவர்ந்த கதையாக இருந்தபோதும் நூலின் முகப்புச் சிறுகதையான ‘உயிரினும் மேலானது’ நல்லதொரு படைப்பு எனலாம். இக்கதையில் படைப்பாளியின் ஆளுமை சிறப்பாக வெளிப்படுகிறது. காதல், போரின் அவலம், விடுதலைப் போராட்டதின் மறுபக்கம், அதிகாரிகளின் சுயநலம் என எமது நிகழ்கால வாழ்வின் பல பக்கங்களைத் தொட்டு சுவார்ஸயமாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அதிர்வு தருவதாக இருப்பது சதீயத்திற்கும் குடும்ப கௌரத்திற்கு எதிராக மனிதாபிமானத்தின பக்கம் நிற்கும் இளைஞனின் உறுதிதான்.

பாலியல் பிறழ்வுகளும் வக்கிரங்களும் கொண்ட ஒருவனின் மனைவியாக வாழ்வதின் துன்பத்தை ‘விடுதலையாகி நிற்பாய்’ பேசுகிறது. பெண்ணியம் இழையோடுகிறது. அவனது செயற்பாடுகள் உளவியல் பிரச்சனையின் வெளிப்பாடு என்பதைச் சுட்டிக் காட்டுவதுடன், உள ஆற்றுப்படுத்தல் அதிலிருந்து மீள உதவும் என்கிறது.

‘எனக்கு விசர் எண்டு சொல்லுறியோ’

இது தனது தன்மானம் பாதிக்கப்பட்ட அந்த ஒற்றைக் கணவனின் எதிர்வினைத் தனிக்குரல் என்று மட்டும் என்னால் கொள்ள முடியவில்லை. மனநோய்கள், உள ஆற்றுப்படுத்தல் போன்றவை பற்றி இன்னும் தவறானக் எண்ணக் கருக் கொண்ட எமது சமூக பண்பாட்டுத் தளத்தின் குரலாகவே ஒலிக்கிறது.
உளவியில் கல்வியறிவு கொண்ட இவரையொத்த இளம் படைப்பாளிகள் தமது எழுத்தாண்மையால் அதை மாற்ற வேண்டிய கடமை உள்ளது.

இத்தொகுதியில் உளவியிலை நேரடியாகப் பேசும் குறைந்து மூன்று கதைகளாவது இருப்பதானது பரணீதரன் செய்வார் என்பதை உறுதிப்படுத்துகிறது. ‘மாறுதல்;, ‘பகிடி வதை’, ‘விடுதலையாகி நிற்பாய்’ என்பன அவை.

இன்றைய இளைய சமூதாயத்தின் போக்கில் விரக்தியுற்றவர்களாக பல பழைய தலைமுறையினர் இருக்கிறார்கள். சிந்தனைகளிலுள்ள வேறுபாடுகளுக்கு தலைமுறை இடைவெளிதான் காரணம். இதனால் மனதில் தாக்கம் ஏற்பட்டு விரக்தியடையும் ஓரு முதியவரை ‘மாறுதல்’ சிறுகதையில் காண்கிறோம். தனது வீட்டிலேயே தமிழ் பண்பாடு, கலாசாரம், மொழி ஆகியவற்றில் ஏற்படும் மாற்றம் அவரை நிலை குலைய வைக்கிறது. உள ஆற்றுப்படுத்தலை (கவுன்சிலிங் ) நாடி வருகிறார்.

‘உங்கடை நண்பர்கள் ஆறு ஏழு பேர் வீட்டைபோய் அவர்களோடை, பிள்ளைகளோடை கதைச்சுப் போட்டு நாளைக்கு வாங்கோ… தொடர்ந்து கதைப்போம்.’

பிரச்சனையை விளக்கி ஆறுதல் கொடுக்கும் கவுன்சிலிங் செய்வதற்குப் பதிலாக இந்த விடை கிடைக்கிறது. ஆனால் உண்மையான கவுன்சிலிங் இதுதான். தானே மற்றவர் அனுபவங்களுடன்  கலந்துணர்ந்து சமூகத்திலிருந்தே கற்றுக் கொள்ள வழிசெய்கிறது. கதையோடு கதையாக உள ஆற்றுப்படுத்தல் பற்றிய பல விபரங்கள் வாசகனுக்குச் சொல்லப்படுவது இக்கதையை மேலும் முக்கியப்படுத்துகிறது.

‘விடுதலையாகி நிற்பாய்’ சிறுகதையில் பிறழ்வு நடத்தையின் அறிகுறிகள் பட்டியலிடுவது போலச் சொல்லப்பட்டதற்குப் பதிலாக சம்பவங்களின் ஊடாக நகர்த்தியிருந்தால் வாசகனிடத்தில் கூடியளவு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும் என எண்ணத் தோன்றுகிறது. நூலாசிரியரின் வேறு பல படைப்புகளையும் சேர்த்து நோக்கும்போது, ஆசிரியர் கூற்றாக நேரடியாக கதையைச் சொல்லிச் செல்லும் பண்பு இவரிடத்தில் அதிகம் இருப்பதாக என் மனதில் பட்டது. இது தன் கருத்தை ஆணித்தரமாகப் பதிப்பதற்கு அவசியமான போதும் ரசனையான வாசிப்பிற்கு துணைபுரியும் எனத் தோன்றவில்லை.

ஆயினும் கட்டுடைத்துப் புதிய இலக்கிய வடிவங்களை தேடிப் பயணிக்கும் இன்றைய இலக்கியச் சூழலில் கதை, கட்டுரை, கவிதை, நாடகம் போன்ற வழமையான வடிவங்களை மீறியும், ஒன்றுக்குள் ஒன்று சங்கமிப்பதுமான மாறுபட்ட வடிவங்கள் ஏற்புடையனவே.

இவரது படைப்புகளில் காணும் மற்றொரு பண்பு வாழ்வில் பற்றுதலை ஊட்டுவதாகும்.

  • சலிப்பு, எதிர்காலம் மீதான நம்பிக்கை வரட்சி ஆகியவற்றை விடுத்து
  • நல்மனத்தோடு விடாமுயற்சி செய்து முன்னேறும் பாத்திரங்களைப் பல படைப்புகளில் காண்கிறோம்.
  • தகப்பனை அல்லது தாயை இழந்த மகன், மகள் குடும்பத்திற்காக உழைத்து, முன்னேற்றுவதான குறிக்கோளுடன் இயங்குகிறார்கள்.
  • குடி, புகைத்தல், பகிடிவதை போன்றவற்றிலிருந்து தப்பித்த
  • இலட்சிய வாழ்வுப் பாத்திரங்கள் சமூக விடிவிற்கான உதாரணங்களாக நிற்கிறார்கள்.

பொதுவாக இலட்சிய இளைய சமூதாயம் நோக்கிய இளைஞனின் புனைவுகளாக இருக்கின்றன.

  • தெணியானின் ‘உளவியல் பார்வை இழையோடும் படைப்புகள்’ என்ற விரிவான அணிந்துரையும்,
  • பேராசிரியர். சபா.ஜெயராசாவின் நுணுக்கமான ‘முன்வாயில்’ ம் நூலுக்கு அணி செய்கின்றன.
  • பின் அட்டையில் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா பரணீதரனை அறிமுகப்படுத்தி வைக்கிறார்.

சஞ்சிகை வெளியீட்டில் தனது தனித்துவத்தைப் பதித்த ஜீவநதி சஞ்சிகையின் மற்றொரு வளர்ச்சியான ஜீவநதி வெளியீடு வந்துள்ளது. இரண்டிலும் தனது தகமையை வெளிக் கொணர்ந்த பரணீதரனைப் பாராட்டுகிறேன்.

ஞானம் சஞ்சிகையில் வெளியான எனது விமர்சனக் கட்டுரை.

எனது மறந்து போகாத சில புளக்கில் 2011 ல் வெளியான கட்டுரை

எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

‘சோக்கவுட்’ நிசப்தம் (The Silence) எனும் நாத வெள்ளம்
கண்கள் இருந்தும் எம்மைச் சூழவுள்ள உலகைத் தெரிந்து கொள்ளாத மடையர்களாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காதுகள் இருந்தும் எம்மைச் சூழவுள்ள உலகிலிருந்து எழும் உன்னத ஒலிகளின் லயநயத்தை ரசிக்கத் தெரியாத கலைஞானம் அற்றவர்களாக உழன்று கொண்டிருக்கிறோம்.

TheSilence_DVD

இருந்த போதும் காலையில் விழித்து எழும்போது எழுகின்ற பறவைகளின் ஒலியும், தென்றலின் இசையும், பல எழுத்தாளர்களின் மனத்தைத் தொடுவதை படைப்புகளுடாக வாசித்து மகிழ்ந்திருக்கிறோம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிச்சயம் ஒரு கலைஞன் ஒளிந்திருக்கிறான். ஒளிந்திருக்கும் அக் கலைஞனை மீட்டெடுத்து சுருதி கூட்ட வேண்டியது அவரவரால்தான் முடியும்.

வீதியில் ஓடும் வாகன இரைச்சலும், தொலைவில் கூவிச்செல்லும் இரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தில் அராத்தும் ஒலியும் தூக்கத்தைக் கெடுத்து பலரையும் இம்சைப்படுத்துகின்றனவே ஒழிய மனம் உருக வைப்பதில்லை.
அடுத்த வீட்டில் கதவை அடித்து மூடும் ஓசையும், பைப் நீர் விழுந்து வாளி நிறைக்கிற ஒலியையும், அதிலிருந்து நீரை மொண்டு குளிக்கிற ஓசையிலும் ஒரு இனிய லயம் கலந்திருப்பதை எங்களில் யாராவது, எப்பொழுதாவது உணர்ந்திருக்கிறோமா?

நித்திரையைக் குழப்புகின்றன, அமைதியைக் குலைக்கினறன என்று எரிச்சல்படத்தான் பலருக்கும் தெரிகிறது. இச் சத்தங்களும் ஒலிகளும் சூழலை மாசடையச் செய்து எமது காதுகளை மந்தமாக்குகின்றன என்ற குற்றச் சாட்டுகளுக்கும் குறைவில்லை. அதில் விஞ்ஞான ஆதாரம் இருப்பதை மறுக்க முடியாதுதான். ஆனால் ஓசை இல்லாத ஒரு உலகத்தை உங்களால் கற்பனை பண்ண முடிகிறதா? எவ்வளவு மந்தமான உயிர்ப்பற்ற சவக்காலையின் வெறுமைக் கலவையாக இருக்கும்.

கண்களால் காணும் காட்சிகளாவன, காதில் விழுபவற்றை விட வேகமாக எமது மூளையில் உறைப்பதால்தான் ஒலியை விட ஒளியில் மறந்து, ரசிக்கத் தெரியாது வாழ்கிறோம்.

குர்ஸிட் பார்வையற்ற ஒரு சிறுவன். அவன் எங்களைப் போல கலாஞானசூனியனாக இல்லை. அவனைப் பொறுத்த வரையில் அவனைச் சுற்றி எழுகின்ற ஒவ்வொரு ஒலியிலும் ஏதோ ஒரு இசை இருக்கிறது. லயம் இருக்கிறது. மனத்தை ஈர்க்கும் அமானுச சக்தி இருக்கிறது. வாத்திய ஒலிகளும், இன்னிசையும் மட்டும் அவனை ஈரப்பதில்லை. அவனைப் பொறுத்தவரையில் உலகே ரம்யமான ஒலிகளின் கூடம்தான். ஆனால் அதில் நல்லதையும் கெட்டதையும் பிரித்தறிந்து ரசிப்பவன்.

காலையில் இவனது வீட்டுக் கதவை கோபத்தோடு ஓங்கி அறைந்து தட்டும் ஒலியும், தொடர்ந்து அவர்களைத் துயில் எழுப்பி வாடகைப் பணத்தை அறவிடச் சத்தமிடும் வீட்டு சொந்தக்காரனின் கோபக் குரலிலும் கூட ஏதோ ஒரு ஓசை நயத்தை அவனால் ரசித்து மகிழ முடிகிறது.

பும் பும் பூம்… பும் பும் பூம்…

TheSilence_003

இசைக்கு அப்பாலும் அவனது உணர்திறன் விசாலித்திருக்கிறது. வேலைக்குச் செல்லும் வழியில் தாம் சுட்ட பிரட்டுகளை விற்பதற்காகப் பெண்கள் நிற்பார்கள். தனது விரல்களின் தொடு உணர்வுகள் மூலம் அவர்களது பிரட்டின் தரத்தை இவனால் சொல்லிவிட முடிகிறது. ஆனாலும் ஒருவளது பிரட் சற்றுக் காய்ந்ததாக இருந்தபோதும் அவளிடம் வாங்கிச் சாப்பிடுகிறான். காரணம் அவளது குரல் இனிமையானது என்கிறான். அவனைப் பொறுத்தவரை உணவின் சுவையை விட இசை மாண்புடையது.

TheSilence_005

10-12 வயது மதிக்கத்தக்க சிறு பையன் அவன். ஒலிகளின் நயத்தைக் கூர்த்தறியும் அற்புத ஆற்றல்  இயல்பாகவே அவனுக்கு வாய்த்திருந்தது. தனது தாயுடன் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறான். தகப்பனற்றவன் எனச் சொல்ல முடியாது. ஏதோ தேவைக்காக ரசியாவிற்கு சென்ற தகப்பனிடமிருந்து எந்தத் தகவலோ உதவியோ கிடையாது. இதனால் மிகவும் வறுமையிலிருக்கும் அவனது குடும்பத்தின் வயிற்றுப்பாட்டிற்கு அவனது உழைப்பு அவசியமாக இருக்கிறது.

அவனது ஆற்றல் அவனுக்கு ஒரு தொழிலைத் தேடிக் கொடுத்திருந்தது. இசைக் கருவிகள் விற்பனை செய்யும் ஒரு கடையில் அவன் அவற்றிக்கு சுருதி மீட்டிக் கொடுப்பவனாகத் தொழில் பார்க்கிறான். ஆனால் எல்லா முதலாளிகளையும் போலவே இவனது முதலாளியும் காசு ஒன்றே குறியானவன். இவனது திறமையை மதிப்பவனாக இல்லை. யாராவது அவன் விற்ற வாத்தியத்தைக் குறை கூறினால், சுருதி சேர்த்துக் கொடுத்த இவனே குற்றவாளியாக ஏச்சு வாங்க வேண்டியவனாகிறான்.

வேலைக்குச் செல்லும்போது பஸ்சில் பயணிக்க நேருகிறது. போகும் வழியெல்லாம் இவன் சூழலிருந்து எழும் ஒலிகள் கேட்காதவாறு, தனது காதுகளைப் பொத்திக் கொண்டே பயணிக்கிறான். அவனாக விரும்பி இதைச் செய்வதில்லை. நல்ல இசை கேட்டால் இவன் தனது சூழலையும், தன்னைக் காத்திருக்கும் பணிகளையும் மறந்து விடுவான். இவனது கால்கள் தன்னிச்சையாக இசை ஒலியைப் பின் தொடரும். எங்கோ செல்ல வேண்டியவன் அதை மறந்து வேறெங்கோ சென்றுவிடுவான்.

இவனது பயணத்தில் உதவுவது ஒரு குட்டித் தோழி நதீரா. ஆனால் இவனிலும் சற்றுப் பெரியவள். பார்வையற்றவனின் கண்களாக அவள் இயங்குகிறாள். அத்துடன் இவன் வாத்தியங்களைச் சுருதி மீட்டும் போது, அது சரியாக இருக்கிறதா எனச் சரிபார்ப்பதும் அவள்தான். அவன் சுருதி மீட்டும் போது மெல்லியதாக அவளது காது வளையம் ஆட ஆரம்பிக்கும், பின் தலை முடி, முகம், கைகள் எனத் தொடர்ந்து இறுதியில் உடலே தாளலயத்திற்கு ஏற்ப ஆடத் தொடங்கிவிடும். அந்த அழகை ரசித்திக் கொண்டே இருக்கலாம். அற்புதமாக நடிக்கிறாள் அந்தப் பெண்.

அவளது உலகம் குர்ஸிட் மட்டுமே. இவனது கவனம் அங்கும் இங்கும் அலையவிடாது கவனமாகக் கூட்டிச் செல்பவள் அவள்தான். அவளால்தான் அது முடியும். தெருப் பாடகனின் இசையில் மயங்கி அவனது ஓசையைப் பின் தொடர்ந்து செல்வதால், வேலைக்குச் செல்லத் தாமதமாகி ஏச்சு வாங்காஙாகாது காப்பாற்றுவது அவள்தான்.

அவன் எல்லா அழகையும் ஆராதிப்பவன். அவளின் புற அழகை அல்ல. அவளின் உள்ளொளியைப் புரிந்து வைத்திருக்கிறான்.

குர்ஸிட் ஒரு வண்டு போன்றவன். அவற்றின் ஓசை இவனுக்குப் பிடித்தமானது. ஆயினும் சாணியில் மொய்க்கும் வண்டுகளின் ரீங்காரம் அபசுரம் என்பான். ஆனால் மலர்களில் தேன் தேடும் தேனீக்களின் ரீங்காரம் அற்புதமானது என ரசிப்பான். தேனீக்களுடன் பாசம் கொண்டவன். அவற்றோடு பேசுவதும் இவனுக்குப் பிடித்தமானது. அவை பற்றிப் பேசுவதில் மகிழ்வு கொள்பவன்.

ஆனால் அவற்றைப் போலவே இவனும் நெறிப்படுத்தப்படாத தேனீ. பதவி, பணம், அந்தஸ்த்து  போன்றவை இவனது இசை ரசனையைப் பாதிப்பதில்லை. தெருப் பிச்சைக்காரன் எழுப்பும் இசை லயத்துடன் அமைகையில் அதில் ஆழ்ந்துவிடுவான். அந்த கானகக் கானமும் இவனை வாவென அழைக்கும்.

நெரிச்சல் மிகுந்த கடைத் தெருவில் இசையின் வழியே பயணிக்கிறான். இளைஞன் கையிலிருக்கும்; ரேடியோவிலிருந்து அற்புதமான இசை வருகிறது. நெருக்கமான சனங்களிடையே, இசையின் நீக்கல்களின் இடையே நெளிந்து வளைந்து புகுந்து பயணிக்கும் இவன் வழி தவறிவிடுகிறான். கூட வந்த நதீரா இவனைக் காணாது பயந்து தேடுகிறாள். என்னவானானோ என நாமும் கலங்கிவிடுகிறோம்.

ஆனால் அவள் எப்படி இவனைக் கண்டுபிடிக்கிறாள் என்பது அற்புதமான காட்சியாகிறது. அவள் தன் இரு கண்களையும் மூடிக் கொண்டு தேடியலைகிறாள். எங்கோ தொலை தூரத்தில் மங்கலாக இசை ஒலி கேட்கிறது. அதில் தன் மனத்தை ஆழச் செலுத்துகிறாள். கண்களை மூடியபடியே அது வரும் திசையில் தட்டுத் தடுமாறிப் பயணிக்கிறாள். அவள் அடைந்த இடம் ஒரு இசைக் குழு கானம் எழுப்பிக் கொண்டிருக்கும் கடையாகும். அங்கு வெளியே மதிலோரம் இசையில் மயங்கி, சுவரில் சாய்ந்தபடி தன் தனியுலகில் இருக்கிறான் குர்ஸிட்.

படம் முழுவதும் இசை பொங்கி வழிகிறது. காற்றில் பறந்தலையும் கடதாசிச் சுருள் போல நாம் அந்த இசையின் ஓட்டத்தில் அள்ளுண்டு பயணிக்கிறோம். மழை ஓசை இசையாகிறது. நாயின் குரைப்பிலும், குதிரையின் குளம்பொலியிலும், பறவைகளின் சிறகடிப்பிலும், செம்மறி ஆடுகளின் கனைப்பிலும் கூட இசை இருக்கிறது என்பதை உணர்ந்து அதிசயிக்கிறோம். ஒருதடவை வாத்தியத்துடன் சென்று கொண்டிருக்கும்போது மழை ஆரம்பிக்கிறது. அதில் குதித்து விளையாடி ஆனந்திக்கிறான். மழை விடவில்லை. நனைந்து தெப்பமாக குளிர்பிடிக்கிறது. ஓடும்போது தடக்கி விழுகையில் வாத்தியம் கை நழுவித் தூரப் போய் விழுகிறது. எங்கென பார்வையற்றவன் கண்டு கொள்வது எப்படி? மிகுந்த துயரம் ஆட்கொள்கிறது. ஏற்கனவே முதலாளி இவனை வேலையிலிருந்து கலைக்க முற்பட்டிருக்கிறான். இப்பொழுது வாத்தியமும் தொலைந்து விட்டால்?

ஆச்சரியம் காத்திருக்கிறது. வாத்தியத்தின் மேல் விழும் மழைத்துளிகள் ஓசையை எழுப்புகின்றன. அது ஒரு சீரான ஒலிலயத்தில் அவன் காதில் பாய்கிறது. இசைத்துளி பொழிகிறது. அதுவே அவன் மனத்திற்கு ஒளதடமாகிறது. வாத்தியமும் கிடைத்து விடுகிறது.

எமக்கென்று தனிப்பாதை கிடையாது. வானை எட்டும் முகில்களாகப் பறந்தும், ஆழ்கடல் சிறுமீன்களாக நீந்தியும் இசையுடன் இரண்டறக் கலந்து பயணிக்கிறோம். சுட்டெரிக்கும் தீயும் இல்லாத, குத்தி வலிக்க வைக்கும் முற்களும் இல்லாத ஆனந்தப் பெருவெளி. சண்டை, சச்சரவு, குரோதம் ஏதுவும் எம்மைச் சஞ்சலப்படுத்தாத படம்.

அவன் வாழும் வீடு நதியுடன் இணைந்தது. பாலத்தால் வீதிக்கு வர வேண்டும். அவன் வேலையிலிருந்து வரும்போதும் மரங்களின் நிழல் அமைதியான நீரில் பிம்பமாக விழும் தோற்றம் அற்புதமானது. அதிசயிக்க வைக்கிறது. கை தேர்ந்த ஓவியனின் கன்வஸ் ஓவியம் போல கலைநயம் மிக்கது.

அதேபோல Tajikistan நகரின் கடைத் தெருக்களிலும், வீதிகளிலும் எம்மை கைபிடித்து அழைத்துச் செல்கிறது கமரா. மிகச் சிறப்பான படப்பிடிப்பு. அலங்காரமான கடைகள், அழகான முகங்கள், இவை யாவும் வித்தியாசமான கோணங்களில். நாம் காண்பது அவ்வாறாக இருந்தபோதும், அவர்களின் மொழியும், கலாசாரமும் அந்நியமாக தோன்றியபோதும், அந்த மனிதர்களின் அடிப்படை உணர்வுகள் மற்றெல்லா மனிதர்களுடையது போலவே இருப்பதால், அதில் எங்களையும் அடையாளம் காண முடிகிறது. இதனால் படத்துடன் ஒன்றச் செய்கிறது.

மிகவும் மாறுபட்ட பார்வையில்; மனித வாழ்வின் மறக்கவொண்ணா கணங்களையும், மனத்தில் எழும் கவித்துவ உணர்வுகளையும் இசையில் குழைத்து அள்ளிச் சொரிகிறது இப்படம். உள்ளத்தை அள்ளிப்பிடிக்கும் ஓவியம் போன்றிருக்கிறது. உலகம், மனித வாழ்வு, இசை இவற்றை வெறுமனே சித்தரிப்பதற்கு அப்பாலும் பயணிக்கிறது. கனதியில் எம்மனத்தை ஆழ்த்தியபடியே படம் நிறைவுறுகிறது.

mohsen_makhmalbaf

Mohsen Mahmalbaf

ஈரானின் புகழ்பெற்ற Mohsen Mahmalbaf  ன் படைப்பு இது. அவர் திரைப்படத் துறையில் மிகப் பெரிய ஆளுமையாவார். நெறியாளர் மட்டுமல்ல நல்ல கதாசிரியரும் கூட. ஈரானிய சினிமாவில் புதிய அலை இவருடனேயே ஆரம்பிக்கிறது எனலாம். இவரது மிகப் பிரபலமான முதற் சினிமா கந்தஹர் ஆகும்.

Mohsen Makhmalbaf பற்றிய குறிப்பு

இவரது வாழ்க்கை இவருக்கு நிறையவே கற்றுத் தந்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் நாயகனான குர்ஸிட் போலவே மிகச் சிறுவயதிலேயே குடும்பச் சுமையைத் தனது தோளில் ஏந்த வேண்டியதாயிற்று. 8 வயதிலேயே தந்தை இழந்து பல சின்னசின்னத் தொழில்களைச் செய்து, 15 வயதளவில் விடுதலைப் போராளியாகி, துப்பாக்கிச்; சூடுபட்டு சிறைப்பட்டவராவார். 4 ½ வருட தண்டனையில் தன்னைப் புடம்போட்டுக் கொள்கிறார். தீவிர அரசியலில் இருந்து விடுபட்டு இலக்கியத்தில் தன்னை ஆழ்த்திக் கொண்டு படிப்படியாக வளர்ந்தவர் ஆவார். இப்பொழுது பிரான்ஸ்சில் வசிக்கிறார்.

25 சினிமாக்களுக்கு மேல் இயக்கிய இவரது 5 திரைப்படங்கள் அவரது தாய் நாடான ஈரானில் தடைசெய்யப்பட்டுள்ளன. அதில் நிசப்தம் என்ற இந்தத் திரைப்படமும் அடங்கும்.

ஏன் இது தடைசெய்யப்பட்டது என்பதை படத்தை மனத்துள் மீள்வாசிப்பு செய்தேன்.

குர்ஸிட்டும், நதீராவும் பாதை வழி போகையில் அவள் திடீரென நிற்கிறாள். கையைப் பற்றி அவனையும் நிறுத்துகிறாள். அவள் முகம் பயத்தால் உறைந்திருப்தைக் காண்கிறோம். “அந்த வழியில் துவக்கோடு இளைஞன் நிற்கிறான். பெண்கள் முக்காடின்றி வந்தால் தாறுமாறாக ஏசுவான்” போகிற போக்கில் சொல்லிப் போகும் வசனமாக முதலில் தோன்றியது. அவள் வேறுபாதையால் செல்வோம் என்கிறாள். இது போன்ற வேறு ஓரிரு காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

ஆனால் இரை மீட்கையில் மிகவும் முக்கியமான காட்சியாகப்படுகிறது. தீவிரவாதிகளும், மத கலாசார அடிப்படைவாதிகளும் மாற்றுக் கருத்துகளுக்கு இடமளிப்பதில்லை. துப்பாக்கி, பொல், கடும்சொல் போன்ற ஆயுதங்களால் மக்களை பயமுறுத்தி அடிமைப்படுத்துகிறார்கள். தங்கள் கருத்தை ஆயதமுனையில் திணிக்கிறார்கள். இவற்றைப் பொறுத்துக் கொள்ள முடியாத மக்கள் வேறுபாதையைத் தான் நாடமுடியும். நதீரா தெருப்பாதையை மாற்றுவது ஒரு குறியீடாக ஒலிப்பதாகவே நான் கருதுகிறேன். மிக நாசூக்காக தன் கருத்தைத் தெளிவித்திருக்கிறார். இப்படம் ஈரானில் தடை செய்யப்படுவதற்குக் இதுதான் காரணமாக இருந்ததோ தெரியவில்லை.

படம் முழுவதும் இசை அள்ளி அணைக்கிறது. வருடிக் கொடுத்து இதமளிக்கிறது. கிளுகிளுப்பூட்டிச் சிரிக்கவும் வைக்கிறது. மோனத் துயரில் ஆழவும் வைக்கிறது. இறுதிக் காட்சியில் பீத்தோவனின் 5வது சிம்பனி கம்பீரமாக ஒலிக்கிறது. மேற்கத்தைய உலகின் நாதமும், ஈரானிய கலாசாரத்தின் வாழ்வும், இசையாலும் அற்புதமான கமராக் கண்களாலும் இணையும் உன்னதம் அது.

மங்கிய ஒளி, அமைதியான ஆற்று நீர், அதில் மிருதுவான பூவாக மிதக்கும் ஓடம், தொலைவிலிருந்து அது மெதுவாக நகர்ந்து வருகிறது இவனையும் ஏற்றி வேறிடம் செல்ல. தொலைவில் அவர்கள் வாழ்ந்த வீடு அந்நியமாகி எட்டாத தூரத்தில் மறைந்துகொண்டு வருகிறது.

வேலை போய்விட்டது. வீட்டு வாடகை கட்ட முடியாததால் பொருட்களை தூக்கி எறிந்து அவர்களையும் வீட்டிலிருந்து வெளியேற்றி விடுகிறான் சொந்தக்காரன். நிர்க்கதியாகி நிற்கிறார்கள் அவர்கள். ஆனால் வாழ்வு என்றுமே அஸ்தமித்துப் போய்விடுவதில்லை. ஏனெனில் அஸ்தமனங்ளையும் உதயமாக்க வலு கொடுக்கும் இசை அவனது கைவசம் இருக்கிறது. அவனது கைகள் அசைகின்றன. தலை தாளம் போடுகிறது. லயநயத்துடன் உடல் அசைந்தாடுகின்றது. ஒரு இசை ஞானிக்குரிய நுட்பத்துடன் இசையைப் பிறக்க வைக்கின்றன.

அவனது கையசைவிற்கு ஏற்ப கடைத்தெருவே இசை எழுப்புகிறது. பானை, சட்டி, இசை கருவிகள், வாளால் மரமரிதல் என யாவும் வாத்தியங்களாகின்றன. தொழிலாளிகள் தாள லயத்துடன் தட்டி இசையாக எழுப்புகிறார்கள. சந்தை இசைக் கூடமாகிறது.

TheSilence_010

இசையில் மயங்கி மனக்கண் மூடிக் கிடந்த நாம் ஏதோ அருட்டுணர்வில் மடல் திறக்கையில் படம் முடிந்திருக்கிறது.

0.0

நீண்ட நாட்களுக்கு முன் மறந்து போகாத சில புளக்கில் பதிந்த பதிவு.

நிசப்தம் எனும் நாத வெள்ளம்

எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0.0

Read Full Post »

உங்களுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது.

வேறொன்றும் இல்லை. சின்ன விடயம்தான். ‘அப்பா உங்களுக்கு கலர் சென்சே கிடையாது. என்ன கலர் ஜீன்ஸ்க்கு என்ன கலர் சேட் போட்டிருக்கிறியள்.’ அவள் சொன்னது உங்களுக்குப் பிடிக்கவில்லை.

கோபம் பொத்துக் கொண்டு வருகிறது

அவ்வாறு சொன்னது உங்களுக்கு எதிரான தனிப்பட்ட விமர்சனமாகப் படுகிறது. “எனது மகள் எனக்கு இப்படிச் செல்வதா?” என கிளர்ந்தெழுகிறிர்கள்.

எழுத்தாளர்களும் விமர்சனங்களும்

விமர்சனங்களைப் பற்றி பேச்சு எழுந்தால் முதலில் எழுத்தாளர்கள்தான் நினைவில் வருவார்கள்.

மனிதர்கள் தம்மைப் படைத்ததாகக் தாம் கருதும் இறைவனையே ‘நீ இப்படிச் செய்து போட்டியே’ எனக் கோபமாகக் கேள்வி எழுப்புகிறார்கள்.

அவ்வாறிருக்கும்போது எழுத்தாளர்களை விட்டு வைப்பார்களா? அதிலும் ஒரு எழுத்தாளன் மற்றவனைப் பற்றி ஆவேசமாகவோ அன்றி நாசூக்காக கிணடலடித்து விமர்சனம் எழுப்புவதற்குக் காத்திருப்பான். ஆனால் தன்னைப் பற்றி விமர்சனம் எழும்போது…..

மல்லுக்கட்டல்தான்

பொதுவான எழுத்தாளர்கள் படைப்பு எப்படியாக இருந்தாலும் ஆகா ஓகோ எனப் பாராட்டுக் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். பாராட்டுக் கிடைத்தால் உச்சி குளிரப் புன்னகை வீசி தனது ஆற்றலையிட்டுப் பெருமிதம் அடைவார்கள். மற்ற எந்த நல்ல எழுத்தையும் வாசிப்பதைக் கைவிட்டுத் தன்னைத்தானே படித்துக் கொலரை உயர்திக் கொள்கிறார்கள்.

மாறாக மறையாக விமர்சனம் செய்யதவருடன் மல்லுக்கட்டல்தான். காரசாரமாக விமர்சிக்க வேண்டும் என்றில்லை. சற்று நாசூக்காக ‘இவ்வாறு எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்’ என்று சொல்வபரையும் தனது எதிராளியாகவே கணிக்கத் தொடங்கிவிடுவார்.

ஆனால் இந்தக் கட்டுரையானது எழுத்துலக விமர்சனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதல்ல.

மனதை நோகச் செய்யும் என்பது உண்மை

விமர்சனங்கள் மிகவும் மனதை நோகடிக்கச் செய்யக் கூடியவை என்பது உண்மைதான்.

மனதை நோகடிக்கச் செய்யக் கூடியவையானாலும் …..

ஆனால் அதே நேரம் மிகவும் அவசியமானவை என்பதை மறந்துவிடக் கூடாது. விமர்சனமானது ஒருவர் தன்னை சீர்தூக்கிப் பார்க்கவும், தன்னைத் திருத்திக் கொள்ளவும் அல்லது தன்னை மேன்மைப்படுத்த உதவும் சாதனமாகும்.

சொல்வது சுலபம். ஆனால் கடைப்பிடிப்பது கடினம் என்பதே உண்மை. யாருக்குத்தான் தன்னைப் பற்றி குறைவாகச் சொல்வது திருப்தியைக் கொடுக்கும். ஏனெனில் நாம் சாதாரண மனிதர்கள் தானே. எதையும் உணர்வுபூர்வமாக அணுகப் பழகியவர்கள்.

எம்மை மேன்மைப்படுத்தாத எதுவும் எம்மை மகிழ்சிப்படுத்தாது. எம்மை மேன்மைப்டுத்தாதவன் பற்றி நல்ல அபிப்பிராயம் எழுவதில்லை.

இவ்வாறு நிகழ்வதற்குக் காரணம் என்ன? நீங்கள் ஒரு

  • படைப்பாளியாக இருக்கலாம்,
  • ஒவியனாகவோ,
  • பாடகனாகவோ அல்லது
  • வேறெந்தக் கலைஞனாக இருக்கலாம்.

படைப்புலகம் சாராது

  • ஆசிரியனாகவோ,
  • தொழிலதிபராகவோ, அல்லது
  • சாதாரண உழைப்பாளியகவோ இருக்கலாம்.

விமர்சனமானது உங்கள் செயற்பாடு சம்பந்தமானதாகவே இருக்கும். வீணாக அதற்குள் உங்கள் பெயரைப் புகுத்தி, அது தனிப்பட்ட உங்களுக்கு எதிரானது எனக் கருதுவதைத் தவிர்க்க வேண்டும்.

நீpங்கள் விமர்சனங்களைத் தனிப்பட்ட ரீதியானவை எனக் கருதும்போது பல சிக்கல்கள் உருவாகின்றன.

  • அவ்வாறு கருதும்போது உங்களை அறியாமலே, அக்கருத்திலிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ள முனைகிறீர்கள்.
  • அதற்கு எதிரான வாதங்கள் அமோக மனதிற்குள் விளைகின்றன.
  • அவை சொல்லப்பட்ட கருத்திற்கு எதிரானவையாக பெரும்பாலும் இருப்பதில்லை.
  • கருத்தைச் சொன்னவர் பற்றியும் அவர் அவ்வாறு சொன்னதற்கான காரணங்களையும் கண்மூடித்தனமாக கற்பிதம் செய்ய முனைகிறீர்கள்.

இழப்பும் கிடைப்பும்

இதனால் இழப்பு உங்களுக்குத்தான். கருத்து ரீதியாக எதிர்கொள்ளாமல் தனிப்பட்ட ரீதியானதாக விமர்சனங்களை எடுக்கும்போது அதில் உள்ள ஆரோக்கியமான, உங்கள் எழுத்தை அல்லது செயற்பாட்டைச் செம்மைப்படுத்தக் கூடிய வழிகாட்டக் கூடிய தகவலையும் கைநழுவ விட்டுவிடுவீர்கள்.

மாறாக பொதுமையானதாகக் கருதும்போது

  • மிகத் தீவிரமான விமர்சனத்திலிருந்தும் உங்களால் நல்ல கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு தேவையற்றவையை அசட்டை பண்ண முடியும்.
  • அரிசி மணியிலிருந்து பதரை நீக்குவதுபோல காரமான விமர்சனங்களுக்குள் ஒளிந்திருக்கும் பயன்படக் கூடிய கருத்துக்களைப் பொறுகியெடுக்கப் பழகவேண்டும்.
  • அவற்றை விட மோசமான, கடுமையான, நேரடியாக உங்கள் மனதைப் புண்படுத்த வேண்டும் என வீசப்படும் தனிமனிதக் காழ்ப்புணர்வு விமர்சனங்களையும் பொதுமைப்படுத்தும்போது அது ஒரு பாதுகாப்புக் கவசமாகி உதவும்.
விமர்சங்கள் எழும்போது தன்னிச்சையான எதிர்ப்புணர்வுடன் செயற்படுவதற்குக் காரணம் என்ன?

விமர்சனமானது எமது தன்னங்காரத்துடன் நேரிடையாக மோதுகிறது.

  • ஒருவர் எமது செயற்பாட்டை மேலும் மேம்படுத்துவதற்கு உண்மையாகவே ஆலோசனை கூற வரும்போது அதற்குள் ஒரு கசப்பான உண்மை மறைந்திருக்கிறது.
  • அதாவது நீ செய்வது அல்லது எழுதியது திருப்தியானது அல்ல. திருந்த மேலும் இடம் உண்டு என்பதுதான்.
  • அதை சற்றுக் கசப்பான வார்த்தைகளில் சொன்னால் நீ செய்தது பிரமானதானதல்ல. அதாவது நீ ஒரு ஒரு சிறப்பான மனிதன் அல்ல. மாற்றத்தை வேண்டி நிற்கும் ஒரு சாதாரணன் என்பதல்லவா?

இத்தகைய எண்ணம் உங்களைப் புண்படுத்தி விடுகிறது. அதனால்தான் விமர்சனங்களை ஒருவன் எதிர்புணர்வுடன் அணுக நேர்கிறது.

நீங்கள் செய்யக் கூடியது என்ன?

உங்களுக்கு எதிரானதாக நீங்கள் கருதும் விமர்சனத்தை நேரிடையான வார்த்தைகளாகவோ அன்றி எழுத்திலோ எதிர் கொள்ள நேரும்போது நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

  1. அவசரப்பட்டு எதையும் செய்ய முனையாதீர்கள். எதிர்வினைகளாக அந்நேரத்தில் எழும் உணர்வலைகளை வெளிப்படுத்த வேண்டாம்.
  • இணையப் பதிவுலகில் சிறிதும் சிந்தனையற்று எழுந்தமாரியாகப் போடப்படும் விமர்சனங்களை உதாரணமாகக் கொள்ளலாம். உடனடியாக முறைக்கவோ ஏசவோ, காரமான வார்த்தைகளைச் சிந்தவோ, எழுத்தில் வடிக்கவோ வேண்டாம். சற்று ஆறப்போடுங்கள்.
  • உங்களைப் பற்றியதான அதிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு அடங்கும் வரை பொறுத்திருங்கள்.

2. அந்த விமர்சனமானது வேறொருவரைப் பற்றியது எனக் கற்பனை செய்ய முயலுங்கள்.

  • தற்செயலாக உங்களது பெயரைக் கொண்ட வேறொருவர் பற்றியது என நினையுங்கள்.
  • அதுவும் உங்களைப் போன்ற செயற்பாடுடைய வேறெருவரைப் பற்றியது என எண்ண முயலுங்கள்.
  • இன்னொருவரைப் பற்றியது என எண்ணும்போது, தர்க்க ரீதியாக அதிலுள்ள சாதகமான அம்சங்களை இனங்காண முடியலாம்.
வாயை இறுக மூடிக் கொள்ளுங்கள்
  •  வாயை இறுக மூடிக் கொள்ளுங்கள். எதுவும் பேச வேண்டாம். விமர்சனமாகச் சொல்வதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருங்கள். நேரம் கிடைத்தால் குடிகாரக் கணவனின் கோபத்தை அடக்க மனைவியை வாயில் கிறீன் ரீயை வாயிலிட்டு அலசிக் கொண்டிருப்பது பற்றி நான் எழுதிய நகைச் சுவைக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.

நிறம் மாறும் போஸ்டர்களாக அவள் முகம்  

  • ஆத்திரத்தைக் காட்டாது அமைதியாக அது பற்றி மேலும் விளக்கங்களைக் கேளுங்கள். ஆனால் அந்தக் கேள்விகள் தனிப்பட்ட ரீதியானவையாக அமையாமல் விடயம் பற்றிப் பொதுமையாக இருக்கும் வண்ணம் இருப்பது அவசியம்.

இதனால் இரண்டு விதமான நன்மைகள் கிட்டலாம்.

  1. முதலாவதாக அதிலுள்ள சாதகமான அம்சங்களை நீங்கள் இனங்கண்டு பயன்பெற உதவும்.
  2. இரண்டாவதாக விமர்சிப்பவரும் தனது கருத்துக்களை கண்மூடித்தனமாக உங்களைப் பற்றி நேரிடையாகத் தூற்றாது கருத்து ரீதியாக முன்னெடுக்க உதவும்.

இதனால் சூடு தணிந்த பின் நீங்களும் அதனை ஆக்கபூர்வமாக எதிர்கொள்ள முடியும்.

ஆத்திரத்தைக் காட்டாது அமைதியாக ………

இவ்வாறு எதிர்கொள்வதற்கு உங்கள் அடிப்படை நம்பிக்கை முக்கியமானதாகும். இது இரண்டு விடயங்களில் அவசியம் இருந்தே ஆகவேண்டும்.

1.    நீங்கள் என்ன செய்கிறீர்கள், அல்லது சொல்வது என்ன? இது பற்றி தெளிவும் உறுதியும் இருக்க வேண்டும். எத்தகைய கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும் உங்கள் செயற்பாட்டில் பற்றுதி வேண்டும். கைவிடக் கூடாது. தடுமாறக் கூடாது.

2.    எதற்காகச் செய்கிறீர்கள்? அதாவது உங்கள் நோக்கம் அல்லது இலக்கு என்ன என்பது பற்றியும் அவ்வாறே தெளிவும் உறுதியும் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் உங்கள் செயற்பாடு பற்றிய கருத்தறியலை வேண்டும்போது அக் கருத்துக்களில் உள்ள நல்ல அம்சங்களை உள்வாங்கிப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இல்லையேல் அக் கருத்துகள் அதிகார ஆணையாகி மாறி உங்களைத் திசை திருப்பிவிடும் அபாயம் உண்டு.

தெளிந்து சொல்லுங்கள். உறுதியாக நில்லுங்கள். பதரை நீக்கி மணிகளைப் பொறுக்குங்கள். பயன் பெறுவீர்கள். வீண்பகை தவிருங்கள்.

எம்.கே.முருகானந்தன்

ஜீவநதி சஞசிகையில் வெளியான எனது கட்டுரை

Read Full Post »

விஞ்ஞானமும் அறிவியலும் வியத்தகு வளர்ச்சி பெற்றுவிட்டன. ஒவ்வொரு துறையிலும் நுணுக்கமான ஆய்வுகள் மேற்கொள்ளப் படுகின்றன. இதன்பேறாக உலகின் ஒரு மூலையில் பெற்ற ஆய்வு முடிவுகளை மறு அந்தத்தில் உள்ள கிராமங்களும் மறுகணம் பெறக்கூடியவாறு தகவல் புரட்சி வழிவகுத்துள்ளது.

அவற்றைப் பெறுவதற்கு ஆங்கில மொழி அறிவின் போதாமை ஒரு தடைக்கல்லாகப் பலருக்கு இருக்கக் கூடும். அத்துடன் எமது நீண்ட வரலாறு கொண்ட பண்பாட்டுப் பின்னணியானது பருவ மாற்றங்களையும், பாலியல் பிர்ச்சினைகளையும் தமது பிள்ளைகளோடு ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகப் பேசுவதற்குத் தடைக்கல்லாக இருப்பதையும் மறுப்பதற்கில்லை.அதேபோல் பாலியல் கல்வி பாடசாலைக் கல்வித்திட்டத்தில் அடங்கியிருந்த போதும் மேற்கூறிய காரணங்களால் ஆசிரியர்களால் போதிக்கப்படாமல் இருப்பதையும் காண்கிறோம்.

இத்தகைய சூழலில் நடனசபாபதியின் இம்மொழிபெயர்ப்பு முயற்சி எமது சமூகத்திற்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும். பருவமானவர்கள் பற்றிய மிக அண்மைக்கால விஞ்ஞான ரீதியான சிந்தனைகளை அது எமக்குத் தருகிறது. 2000 ஆண்டு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட மூலப்பிரதியை இவ்வளவு விரைவாக எமக்கு தமிழில் தரும் நடனசபாபதி எமது நன்றிக்குரியவர்.

இந்நூல் எவை பற்றிப் பேசுகிறது? பருவமடைதல் தொடர்பான அனைத்து விடயங்களையும் பேசுகிறது எனலாம்.நண்பர் நடனசபாபதி உள்ளத்தால் என்றும் இளைஞர். எமது சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எந்நேரமும் துடிப்பவர். விஞ்ஞான உணர்வும் விஞ்ஞான ரீதியான பார்வையும் எமது சமூகத்தில் காலூன்ற வேண்டும் என்று அவாவி நிற்பவர்.

பருத்தித்துறை ஞானசம்பந்தர் கலாமன்றம், லயன்ஸ் கழகம், இலங்கை விஞ்ஞானச் சங்கம் போன்ற அமைப்புகளூடாகப் பல்வேறு சமூக சேவைகள் ஆற்றியவர். தமிழ்ப் பிரதேசங்களில் விஞ்ஞான அறிவை மாணவர்களிடையேயும் வளர்ந்தவர்கள் இடையேயும் பரப்புவதில் 1975 முதல் இலங்கை விஞ்ஞான சங்கம் ஊடாகப் பெரும் பணியாற்றி வருகிறார்.

ஊற்று, விஞ்ஞான முரசு போன்ற சஞ்சிகைகளில் இவரது பல ஆக்கங்கள் வெளியாகியுள்ளன. விஞ்ஞான முரசின் ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். இலங்கை வானொலி ஊடாகவும் விஞ்ஞான அறிவைப் பரப்புவதில் ஈடுபட்டுள்ளார். யாழ் நீர் பற்றிய இவரது ஆக்கங்கள் பரவலான கணிப்பைப் பெற்றமை இப்பொழுதும் நினைவு கூரத்தக்கதாகவுள்ளது.

மொழிபெயர்ப்பும் இவருக்கு கைவந்த கலை. போர்க்காலச் சிந்தனைகள் என்ற நூல் சில ஆண்டுகளுக்கு முன் தேசிய கலை இலக்கியப் பேரவை ஊடாக வெளிவந்து பெரு வரவேற்பைப் பெற்றது.காலத்தின் தேவையறிந்து அக்கறையோடு செய்யப்பட்ட அவரது இம் முயற்சியைப் பாராட்டுகிறேன். புத்தகங்களோடும், மொழிபெயர்ப்புகளோடும் தமிழ் அறிவியல் இலக்கியத்திற்கு மேலும் வேகத்தோடு அவர் பங்களிக்க வேண்டும் எனவும் வேண்டிக் கொள்கிறேன்.

டாக்டர்.எம்.கே. முருகானந்தன்

22.06.2002.
நன்றி:- pathivukal.com

Read Full Post »

>

எனது உறவினர் ஒருவர் இருந்தார் வயதானவர். நான் பள்ளிச் சிறுவனாக திரிந்தபோது அவருக்கு எழுபது வயதிருக்கும். அவர் கழிப்பறை சென்றால் வெளியே வர குறைந்தது ஒரு மணிநேரமாகும். அவ்வளவு நேரம் அதற்குள் என்ன செய்கிறார் சில குறும்புப் பையன்கள் ஆராச்சி செய்ய முனைவார்கள். ஆனால் அதன் இரகசியம் உள்வீட்டுப் பையனான எனக்குத் தெரிந்திருந்தது. முதல் நாள் வெளிவந்த ஆங்கிலத் தினசரியுடன் உள்ளே சென்றால், அதில் கரை கண்டு முடியவும் அவரது கழிப்புக் கடன் தீரவும் சரியாக இருக்கும். அதன் பின்தான் மிகுதி வேலை எல்லாம்.

அவரைப் போலவே பலருக்கும் தினசரிகள் இல்லாமல் காலை விடிவதில்லை.

மற்றொரு வயதானவரையும் எனக்குத் தெரியும். பத்திரிகையின் முற் பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ள வெளியூர்ப் பதிப்பு என்ற வசனத்தில் படிக்க ஆரம்பித்தால், எந்த நிறுவனத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது என்ற கடைசி வரி படித்து முடியும் வரை சார்மனைக் கதிரையிலிருந்து எழுந்திருக்கவே மாட்டார்.

இவை அந்த நாள்கதைகள். இப்பொழுது காலையில் ரீவி ஒலிபரப்பில், பத்திரிகை நியூஸ் வாசிப்பதை அவ்வப்போது அரைக் காது கொடுத்துக் கேட்பது மாத்திரமே பலருக்கு பத்திரிகை படிப்பதாகிட்டது.

சில தகவல்கள்

இத் தருணத்தில் பத்திரிகை என்ற ஊடகத்தின்; தோற்றம் பற்றியும் சில தகவல்களை நினைத்துப் பார்ப்பது சுவார்ஸமாக இருக்கும்.
2009 ஆண்டு செய்யப்பட்ட ஒரு ஆய்வின் பிரகாரம் உலகளாவிய ரீதியில் 12,297 பத்திரிகைகள் பிரசுரமாகின்றன என World press trends அறிக்கைகள் கூறுகின்றன.

இதில் மிக அதிகமான எண்ணிக்கையில் பிரசுரமாகும் பத்திரிகை ஜப்பானிலிருந்து வெளிவரும் Yomiuri Shimbun என்பதாகும். தினமும் 10,020,000 பிரதிகள் அச்சிடப்படுகின்றன என அறியும்போது ஆச்சரியம் மேவுகிறது.

உலகில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை எது என்பதில் பல சந்தேகங்கள் உள்ளன. பத்திரிகைகளின் முன்னோடியான வடிவங்கள் ஜேர்மனியில் தொடங்கியதாகத் தெரிகிறது. கையால் எழுதப்பட்ட அந்தப் பிரதிகளாவன அங்குள்ள வர்த்தகர்களிடையே பரவியிருந்தன. நாட்டு நடப்பு, போர் செய்திகள், பொருளாதார வர்த்தகச் செய்திகள் எனப் பல அவ்வாறு அவர்களிடையே பகிரப்பட்டன. இது கிட்டத்தட்ட 700 ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்தது.

அச்சில் முதலில் வெளிவந்ததும் ஜேர்மனியில்தான். கைப்பிரசுங்கள் வடிவில் வந்த அவை பெரிதும் பரப்பான விடயங்களைப் பேசின. இவை 1400களின் பிற்பகுதியில் தோற்றம் பெற்றன.

லண்டன் கஸட் என்ற பத்திரிகையே ஆங்கிலத்தில் முதல் முதலாக வந்த செய்திப் பத்திரிகையாகும். இத 16666ம் ஆண்டு வெளியான போதும் அதற்கு முன்னரே இதற்கு முன்னோடியான 1662 The Weekly Newes ல் வெளிவர ஆரம்பித்துவிட்டது.

பணிகள்

செய்திப் பத்திரிகைகள் என்றால் என்ன என்பது பற்றி எங்கள் எல்லோருக்கும் தெரியும். உள்நாட்டு வெளிநாட்டுச் செய்திகள், உபயோகமான தகவல்கள் இவற்றோடு பத்திரிகைகளை வாசகர் வாங்கும் அளவில் குறைந்த விலையில் விற்பதற்கு உதவியாக விளம்பரங்களும் நிறைய இடம் பெறும். நூல்களைப் போல உயர்தரக் கடதாசியாக அல்லாமல் சாதாரண நியூஸ் பிரிண்ட் பேப்பரில் வெளியாவதும் விலை உயராமல் தடுப்பதற்கே ஆகும்.

இப்பொழுது பத்திரிகைகளின் எல்லைகள் அகன்றுவிட்டன. தனியே செய்திகள் என்றில்லாமல் இலக்கிய ரீதியாக கதை, கட்டுரை, கவிதைகள், விஞ்ஞானத் தகவல்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் என் பலவற்றையும் சேர்க்க வேண்டிய கட்டாயம் ஒரு காலகட்டத்தில் இணைந்தது. இப்பொழுது அவற்றுக்காக தனி இணைப்புகளை சஞ்சிகைகள் வடிவில் வழங்க வேண்டியும் இருக்கிறது.

தினசரிப் பத்திரிகைகள் எதிர்நோக்கும் போட்டிகளும் இத்தகைய மாற்றங்களுக்குக் காரணமாகின்றன. போட்டி என்பது பத்திரிகைகளுக்கு இடையே என்ற நிலையையும் தாண்டி, வானொலி, தொலைக்காட்சி, இணையம் என புதிய சவால்களையும் எதிர்கொள்ள நேர்ந்திருக்கிறது. ஆனால் இவற்றால் வாசகர்கள் மேலதிக பயன்பெறுகிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

தினக்குரல்

தினக்குரலும் இத்தகைய போட்டிகளுக்கு ஈடுகொடுத்து தனது தனித்தன்மையைத் தொடர்ந்து தக்கவைத்திருக்கிறது.

இலங்கைத் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான பத்திரிகையாக தினக்குரல் இன்று இருக்கிறது. தமிழ் மக்களின் வாழ்வு மிகவும் நெருக்கடியான நிலையிலிருந்த ஒரு இருண்ட காலகட்டத்தில் இது ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் மக்களின் அவலங்களை வெளிப்படுத்தவும், அவர்களது குரலைத் தேசிய அளவில் ஒலிக்கச் செய்யவும், தமிழ்தேசிய உணர்வுக்கு ஆதரவாகவும் ஆரம்பிக்கப்பட்டதால் மிகுந்த இக்கட்டான நிலைகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது. ஆனாலும் அந்தச் சவால்களைத் தாண்டி கட்டிளம் பருவமான 15 வருட காலத்தை வெற்றிகரமாக எட்டிப்பிடித்து இருக்கிறது.

எனது விருப்புகள்

தினக்குரலை எடுத்ததும் முற்பக்கச் செய்திகளை மேய்ந்துவிட்டு நான் தாவிப் பாய்வது அதன் நடுப்பக்கத்திற்கே ஆகும். முக்கியமாக கவனத்தை ஈர்ப்பது அங்கு நாலாம் பக்கத்தில் இடம்பெறும் ஆசிரியர் தலையங்கம் ஆகும். கவனத்தில் எடுக்க வேண்டிய விடயங்கள் அதில் அலசப்படுவது வழக்கம். மிகவும் சிறப்பாகவும், பரந்த பார்வையுடன், நல்ல தமிழில் அமைந்திருப்பது அதன் சிறப்பாகும்.

நல்ல பல புதிய தமிழ்ச் சொற்களை அங்கு ஆசிரியர் பயன்படுத்துவது வழக்கம். தமிழ் எழுத்துத்துறையில் இருப்பவர்களுக்கு பயனுடையாக இருக்கிறது. அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட பல தலையங்கங்கள் ‘ஊருக்கு நல்லதைச் சொல்வேன்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்ததும் அறிஞர்களின் பாராட்டுக்களைப் பெற்றதும் அறிந்ததே.

5ம் 6ம் பக்கங்களில் வெளியாகும் சிறப்பான கட்டுரைகள் என்னைக் கவரும் மற்றொரு அம்சமாகும். உள்நாட்டு அரசியல், உலக அரசியல், பொருளாதாரம், விஞ்ஞான முன்னேற்றம் போன்ற பல்வேறு விடயங்களில் தேர்ந்தெடுத்த கட்டுரைகள் அங்கிருக்கும். அவற்றிடையே முற்போக்குச் சிந்தனையுள்ள கட்டுரைகளும் இடம்பெறுவது ஏனைய பத்திரிகைகளில் காண முடியாத விடயமாகும். மறைந்த எழுத்தாளர் டேவிட் ராஜ் அவர்களது இதழ்க் கீற்றான ‘ஒளிவு மறைவின்றி….’ கருத்துச் சித்திரம் ஆகியவற்றை ரசிக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது.

ஞாயிறு தினக்குரலில் வெளியாகும் நேர்காணல்கள், நூல் விமர்சனம், என்னைக் கவரும் பல சிறந்த சிறுகதைகளையும் அது தொடர்ந்து தருகிறது. பெண்ணியம், உளவியல் சார்ந்த கட்டுரைகளும் அதில் சிறப்பானவையாகும்.

தமிழ்ப் பத்திரிகைகள்

தமிழ்ப் பத்திரிகைகள் பலவும் விடயத்திற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை வெளியிடும் முறைக்கு அளிப்பதில்லை. பக்க வடிவமைப்பில் நிறைய முன்னேற்றங்களுக்கு இடம் உண்டு. விடயங்கள் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் கண்களுக்கு இதமாக, வாசிப்புக்கு கவர்ச்சியான தோற்றத்தில் இருந்தால்தான் உள்ளடக்கம் வாசகனைச் சென்றடையும். பத்திரிகைத்தாளின் தரத்திற்கும் வாசக நுகர்ச்சியைத் தூண்டுவதற்கும் நிறையத் தொடர்பு உண்டென்பதையும் மறக்கக் கூடாது.

முற்பக்கத் தலைப்புச் செய்தி வாசகனைக் கவருமாறு எல்லாப் பத்திரிகைகளும் தலைப்புக் கொடுக்கின்றன. இது போலவே ஏனையவற்றிக்கும் கவனம் அளிப்பது அவசியமாகும். கவர்ச்சியும் கொச்சைத்தனமான இரண்டாம் தரத் தலைப்புகள் பொதுவாக இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகளில் இல்லையென்றே சொல்லலாம். ஆயினும் வாசிக்கத் தூண்டும் ஆவலை விதைக்காவிட்டால் அவை வாசகனைச் சென்றடையப்போவதில்லை.

இப்பொழுது பத்திரிகைகள் அதிகரித்துவிட்ட அளவிற்கு தேவையான விடயதானங்கள் கிடைப்பதில்லை போலிருக்கிறது. இதனால் பல பத்திரிகைகளும் இணையத்தில் இருந்தும் விடயங்களைப் பகிர்ந்து கொள்கின்றன. பல கட்டுரைகளும் தகவல்களும் எங்கிருந்து பெறப்பட்டன, யாரால் எழுதப்பட்டன என்ற தகவல்கள் இல்லாமல் அனாதைப் பிள்ளைகள் போல சிதறி வெளியாகின்றன. இதனால் அவற்றின் நம்பகத்தன்மை கெடுகிறது. பகுத்தறிந்து வாசிக்கத் தெரியாத வாசகனை மாயையில் சிக்க வைப்பதுமுண்டு.

உதாரணத்திற்கு நலவியல் தொடர்பான கட்டுரைகள் செய்திகளைச் சொல்லலாம். என்னிடம் வரும் நீரிழிவு நோயாளர்களில் சிலர் சீனியின் அளவு அதிகரித்த நிலையில் வந்தபோது அவர்களது உணவு முறையயைத் தீர விசாரிக்க நேர்ந்தது. பலர் பேரீச்சம் பழம் அதிகம் சாப்பிடுவதாகக் கூறியதுண்டு. “நீரிழிவுக்கு நல்லது” எனப் பத்திரிகைளில் படித்ததாகச் சொல்லுவார்கள். பத்திரிகைச் செய்தி என்பது உண்மையா பொய்யா என்பது தெரியாது.

அது கலோரிச் செறிவுள்ள பழம் என்பதால் மிகக் குறைவாகவே நீரிழிவு நோயாளர்கள் சாப்பிட வேண்டும். தகமையற்றவர்கள் எழுதியதைப் பகிர்ந்து கொள்வதால் வரும் வினை இது. யாரால் எழுதப்பட்டது, அவர் மருத்துவராயின் அவர் எத்துறை சார்ந்தவர், நவீன மருத்துவத்துறை சார்ந்தவரா சுதேசிய மருத்துவ துறை சார்ந்தவரா, அவரது கல்வித்தகமை என்ன அல்லது அது கை வைத்தியமா, என்பது போன்ற விடயங்களை தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். வாசகன் தனக்கேற்றதைத் தெரிவு செய்து படிக்க உதவும்.

மருத்துவக் கட்டுரைகள் இணையத்தில் இருந்து பெறப்பட்டதாயின் அது எந்தத் தளத்திலிருந்து பெறப்பட்டது. அது நம்பிக்கையான தளம்தானா? அது தகுதியானர்களால் எழுதப்பட்டதா என்பது தெளிவு படுத்தப்பட வேண்டும். ஏனெனில் இணையம் கட்டுப்பாடுகள் அற்றது. யார் வேண்டுமானாலும் எதைப்பற்றியும் எழுதலாம்.

நலவியல் கட்டுரைகள் மாத்திரமின்றி எத்துறை சார்ந்த தகவல்களுக்கும் இது பொருந்தும்.

எதிர்காலம்

பத்திரிகைகளுக்கு சவால்கள் பல காத்திருக்கின்றன. வாசகர் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய அவசியமிருக்கிறது. நடுநிலைமையுடன் செயற்பட வேண்டிய தார்மீகக் கடப்பாடு உண்டு. ஆனால் சுதந்திரமான செயற்பாடுகளுக்கு மறைவான தடைகளும், உயிராபத்து அடங்கலான அச்சுறுத்தல்களும் முன் நிற்கின்றன. தினக்குரலுக்கு இது புதிய சவால் அல்ல. பொறுப்புகளை நிறைவேற்ற திறமையும், சாதுர்யமாக செயற்படும் வழிமுறையும் தெரிந்திருக்கிறது.

எனவே வளமான எதிர்காலம் தினக்குரலுக்கும் அதன் வாசகர்களுக்கும் காத்திருக்கிறது என்பது நிச்சயம்.

தினக்குரல் 15 அகவை விசேட மலரில் என்னால் எழுதப்பட்ட கட்டுரை.

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0.0

Read Full Post »

>

‘தவறிப் போனவள்’ பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். முன்னால் ‘நடத்தை’ என்ற சொல்லை அடைப்புக்குறிக்குள் போட்டுவிட்டால் அதன் அர்த்தம் தெள்ளத் தெளிவாகப் புலப்படும்.

ஆனால் அவ்வாறான  ‘தவறிப்போனவன்’ பற்றித் தமிழில் எழுதுவார் யாருமில்லை. எமது இனிய தமிழின், தமிழ்க் கலாசாரத்தின் பாலியல் ரீதியான பாகுபாட்டு அம்சத்தின் அல்லது ஒடுக்குமுறை அம்சத்தின் கயமையான வெளிப்பாடுதான் பெண்பாலான, அந்த சொற்பிரயோகம் எனச் சொல்லலாம்.

‘நடத்தை தவறிப்போனவன்’கள் இல்லாத ‘கோவலன்’ வழி வந்த புனித சமூகம் அல்லவா எம்மது?.

தமிழர்களாகிய நாம் இன ரீதியான பாகுபாடு பற்றிப் பேசுவோம். மொழி ரீதியான ஒடுக்குமுறை பற்றிப் பேசுவோம். பிரதேச ரீதியான பாகுபாடுகள் பற்றியும் வாய்கிழியப் பேசுவோம். பால்ரீதியான பாரபட்சம் பற்றி  மட்டுமே மேலோட்டமாக அவ்வப்போது பட்டும் படாமாலும் பேசுவோம்.

ஆனால் எழுத்து வடிவில் அதிகம் பயன்படுத்தாத மொழிப் பிரயோகத்தைப் தனது படைப்பின் தலைப்பாகக் கையாண்டிருக்கிறார்; எழுத்தாளர் தெணியான். சகல ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் கொடுத்துக் கொண்டேயிருக்கும் தெணியான் அவ்வாறு செய்வது அதிசயமல்ல. ஆனால் அவர் பேசுவதும் ஒழுக்க ரீதியாகத் தவறிப் போனவன் கதையை அல்ல என்பதும் உண்மையே.

எமது பக்கத்தில் பேச்சுவழக்குத் தமிழில் ‘தவறிப் போனான்’ என்று சொல்வது வழக்கம். அந்த அர்த்தத்தில்தான் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. ஆனால் இது ஒரு தவறிப் போனவன் கதை மட்டுமல்ல. தவறிப்போனவன்கள் பலர் பற்றிய கதையாகவும், தவறிப்போனவனாகக் கருதப்பட்டுத் தப்பியவன் கதையாகவும் இருக்கிறது.

எதையும் வழமைபோலச் சொல்லக் கூடாது சற்று வித்தியாமாகச் சொல்ல வேண்டும் எனத் தெணியான் அடிக்கடி சொல்லுவார். அது அவரது படைப்பின் தலைப்பிலும்  வெளிப்படுகிறது.

தவறிப்போனவன் கதை என்பது தெணியான் எழுதிய நாவலாகும். தினகரன் வாரமஞ்சரியில் 2005ம் ஆண்டில் ஆறு மாதங்களாகத் தொடராக வெளியான இந்நாவல் இப்பொழுது கொடகே நிறுவனத்தால் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.

தணிகாசலம் ஒரு ஆசிரியர். தனது பாடசாலையில் உபஅதிபராகக் கடமையாற்றுகிறார். தனது பதவி பற்றி இவ்வாறு சொல்கிறார். “உபஅதிபர் கதிரை இரண்டும் கெட்டான் நிலையுள்ள போலி ஆசனம். கேலியாகப் பேசப்படும். பார்க்கப்படும்…. சம்பளமில்லாத வேலை என்கிறார். இது நூலாசிரியர் தெணியானது ஆசிரியத் தொழில் பற்றிய ஒரு விமர்சனம் எனக் கொள்ளலாம். காலை மணி அடிப்பதற்கு முன் ஆரம்பித்து முடியும் வரை ஒரு பாடசாலையின் நாளந்த நடப்புகளில் அதிபர், ஆசிரியர், மாணவர்களின் நடவடிக்ககைளில் கதையாகவும் சுய விமர்சனமாகவும் வருவது சுவார்ஸமாக இருக்கிறது. அது முதல் அத்தியாயம்.

திடீரென நோய்வாய்ப்பட்ட அந்த மனிதனின் வாழ்வில் சிலநாட்களுக்குள் நடந்த நிகழ்வுகளாகக் கதை சுவார்சமாக விரிகிறது. நோயுற்ற அவன், வீடு தனியார் மருத்துவமனை ஆதார வைத்தியசாலை யாழ் பொது ஆஸ்பத்திரி என அலையும் நேரத்தில், தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள குடும்பம், நண்பர்கள் ஊடாக சமூகத்தைப் பார்ப்பதாக அமைகிறது.

நோய்வாய்ப்பட்டவன் கதையான போதும் உயிர் பறிக்கும் நோயல்ல, ஆனால் பார்த்தவர்களைப் பயமுறுத்துகிற நோய். திடீர் திடீரென மூக்கிலிருந்து இரத்தம் வடியும். மண்டை ஓட்டிற்குள் ஏதோ வெடித்து மூக்கினால் குருதி வடிகிறது என்ற எண்ணத்தைக் கொடுக்கும். இதனால் பயந்தடித்து மருத்துவமனை நோக்கி ஓடுவார்கள். இங்கும் ஓடுகிறார்கள். தனது உடலில் வேறு ஒரு நோய் உபாதியும் இல்லையே என எண்ணி அவன் பயப்படாதபோதும் குடும்பம் சுற்றத்தவர் நெருக்கடியால் ஓட நேர்கிறது. அங்கெல்லாம் பல்வேறு சுவார்ஸமான நிகழ்வுகள் நடக்கின்றன.

மிக இக்கட்டான ஒரு காலகட்டத்தின் கதை இது.

“யுத்த அனர்த்தத்தினால் சிதைந்துபோன கடற்கரைப் பட்டினம் பருத்தித்துறை”,

“கூலாகக் குடிக்கிறதுக்கு ஒண்டுமே இல்லை, ஒரு சோடா வாங்கேலாது,

“இந்த மண்ணில் வாழும் சிந்திக்கத் தெரிந்த ஆருக்கு பிறஸர் வராமல் இருக்கும்”,

“பெற்றோலும் லாம்பெண்ணையும் கலந்து புக்குபுக்கென்று புகைகக்கிக் கொண்டுஅருந்தலாகச் சில கார்கள் அந்தரத்திற்கு ஓடுகின்றன, இறுதியில் மாட்டு வண்டியில் ஏற்றிப்போவதைத் தவிர அவர்களுக்கு மாற்று வழி ஏதுமில்லை…. ஊரடங்கு நேரத்தில் தனது உயிருக்கு அஞ்சாமல் யார் புறப்பட்டுப் போய் வண்டியைக் கொண்டு வருவார்கள்…. வண்டிக்குள் பாயை விரித்து அதன் மேல் படுக்கைச் சேலையை விரித்து.. கிடத்தினார்கள்…. வண்டி நகர்ந்து நூறு மீட்டர் தூரம் போயிருக்க மாட்டாது.. அந்த வண்டிக்குள்ளேயே அவள் உயிர் பிரிந்தது.”

அதே போல அரிக்கன் விளக்கு, சிக்கன விளக்கு, சிரட்டைக்கரி போட்ட ஸ்திரிக்கைப் பெட்டி அந்த நேரத்தில் யாழ் மக்கள் பட்ட துன்ப, துயர அவலங்கள் அநேகம் ஆங்காங்கே படைப்பில் சொல்லப்படுகின்றன.

இவற்றை விடசொல்ல முடியாதவை பல. பதில் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை என்ற அர்த்தத்தில் அல்ல. சொல்ல முடியாத சூழ்நிலை. பெண்டாட்டிக்கும் சக்களத்திக்கும் இடையே மாட்டுப்பட்டவன் நிலையிலும் மோசமானதாக இருந்தது மனித வாழ்வு அக்காலகட்டத்தில்.

“அப்பு வெளியிலை திரிய வேண்டாம். படிக்கிற பிள்ளையள் எண்டு பாராமல் பிடிச்சுக் கொண்டு போகிறான்கள், சின்னவனையும் வெளியிலை விடாதையுங்கோ”. பிடித்துக் கொண்டு போவார்கள் யார் என்று சொல்ல முடியுமா?

மற்றொரு சம்பவம். ஒருவன் சுட்டுக் கொல்லப்படுகிறான்.

“யார் சுட்டது”

பதில் “தெரியாது”,

“ஏன்?’

“தெரியாது?”

‘அறிவுள்ள எந்த ஒரு மனிதன் இந்தக் கேள்விகளுக்கு இப்பொழுது பதில் சொல்லுவான்?’ என்பது கேள்வியாக நாவலில் ஆசிரியர் கூற்றாக வருகிறது.
மகாத்மா காந்தியின் குரங்குப் பொம்மைகள் போல கண் மூடி, வாய் பொத்தி, காது அடைத்து நின்ற வாழ்வு. தீயனவற்றை ஒதுக்க வேண்டும் என்பதற்காக அல்ல. தம் உயிர் காப்பதற்காக ஒண்டி ஒதுங்கிக் கிடந்த நரக வாழ்வு.

ஒருவரல்ல! யார் யாரோவெல்லாம் எமது குழந்தைகளை கழுகுகள் போல கொத்திக் கொண்டு போனார்கள். உளவாளி என்றும், காட்டிக் கொடுப்பவன் என்றும், பயங்கரவாதி என்றும் வயது வேறுபாடின்றிச் சுட்டுக் கொன்றார்கள்.

தாம் நினைப்பவற்றை எம்மைப் பேசச் சொல்லி நிர்ப்பந்தித்தார்கள். அல்லது ஊமைகள் போல வாய் மூடி இருக்கச் சொன்னார்கள்.

அந்த வாழ்வை அப்படியே வெளிப்படையாகச் சித்தரிந்திருந்தால் நூலாசிரியரும் அக்காலத்திலேயே தவறிப் போனவன் ஆயிருப்பார். “கத்தி முனையில் நடப்பதுபோல மிகுந்த நிதானத்துடன் சிலவற்றை எழுத்தில் சொல்லியிருக்கிறேன்.” என நூலாசிரியர் தனதுரையில் சொல்லிருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆனால் நாவல் என்பது சிறுகதை போன்றதல்ல. அது ஒரு மையக் குறியை நோக்கி நகர வேண்டியதில்லை. பரந்த வாழ்வின் அகண்ட் சித்தரிப்பு. அதனால்தான் இந்த நாவலிலும் பல விடயங்கள் பேசப்படுகின்றன. யாழ் சமூகத்தின் போர்க்கால வாழ்வு, சாதீயம், சமூக சீர்கேடுகள் எனப் பலவும் பேசப்படுகின்றன. பருத்தித்துறையில் ஆதியில் சேவை புரிந்த செல்லப்பா, விசுவலிங்கம், தம்பிப்பிள்ளை போன்ற மருத்துவர்களின் ஒரு முகம் புலப்படுகிறது. சுமார் 40-50 வருடங்களுக்கு யாழ் மாவட்டத்தில் எமக்குக் கிடைத்த மருத்துவ வசதிகளின் கோட்டு வரைவும் இருக்கிறது.

துறைமுகமும், சந்தை,கோடு(Magistrate and district Courts)  பொலீஸ் ஸ்டேசன், என எந்நேரமும் கலகலப்பாக இருந்த நகரம் அது. அந்த நகரின் நினைவுகளைக் கிளற வைக்கிறது இந் நூல்.

சுமார் 40-50 வருடங்களுக்கு முன்னான அக்கால வாழ்வு முறையில் காதல் உணர்வு எவ்வளவு அடக்கமானதாக இருந்ததையும், வெளிப்படுத்;த முடியாத சூழல் கொண்டதாகவும் உணரமுடிகிறது.

கதை முழுவதும் நல்ல தமிழில் எழுதப்பட்டுள்ளது. ஒரு நல்ல தமிழாசியரின் அழகான வசன நடை. ஆங்காங்கே யாழ் மண்ணின் பேச்சுத் தமிழ் மென்முறுவல் காட்டி நயக்க வைக்கிறது. கட்டிளம் பருவத்தில் தோன்றுகின்ற முகப்பருக்களுக்கு ‘குமர்ப் பருக்கள்’என்றும், சத்திர சிகிச்சைக்கு “கொத்தித்தான் பார்க்க வேண்டும்” என டொக்டரே ஓரிடத்தில் சொல்வதும் நயக்கின்றன. தகப்பனை ‘அப்போய்’ என ஆசையோடு அழைப்பதில் உள்ள நேசம் மனதில் நிற்கிறது. அதே போல தந்தை மகனை ‘அப்பு’ என நேச நெருக்கத்தோடு விளிப்பதையும் காண முடிகிறது.

மற்றொரு சுவார்ஸமான விடயம் அந்தக் காலத்துப் பேதி குடித்தல் பற்றியதாகும். இன்றும் ஒரு சிலர் மருத்துவர் என்ற முறையில் என்னிடம் பேதி குடிக்க மருந்து கேட்பதுண்டு. மருத்துவ ரீதியாகப் பேதி இப்பொழுது கொடுக்கப்படுவதேயில்லை. கொடுப்பது தீது என்பதே காரணம். சின்னப் பையனாக இருந்த காலத்தில் வயிற்று வலிக்காக சுதேசிய மருத்துவரால் தணிகாசலத்திற்கு கொடுக்கப்பட்டது. பேதி போவதற்குப் பதிலாக கடுமையாக வயிற்றை வலித்து வாந்திதான் போனது. அதற்குப் பிறகு யார் என்ன சொன்னபோதும் அதைக் குடிக்க மறுத்துவிட்டார்.

தெணியானின்  மற்றொரு நூல் பற்றிய எனது விமர்சனம் படிக்க …  

சுவாரஸ்சமாக நாவல் நகருகிறது. ஒரே மூச்சில் படித்து முடிக்க வைப்பது அதன் சிறப்பு. சிறந்த ஆற்றொழுக்கான நடையும் வாழ்வோடு ஒன்றிய சுவார்ஸமான நிகழ்வுகளும், மனித வாழ்வின் பல்வேறு பக்கங்களை பூமாலை போலத் தொடுத்த நுணக்கமும் அதற்குக் காரணமாகும்.

சில எழுத்துப் பிழைகளும், சொற்கள் பிரிந்து கிடப்பதும் மனத்தை அருட்டினாலும் சிறந்த வகையில் நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ் நூல் வெளியீட்டுத்துறைக்கு கொடகே நிறுவனம் பங்களிக்க முன்வந்தமை பாராட்டத்தக்கது. ஆயினும் பரந்த வளமும் அனுபவ விஸ்தாரமும் கொண்ட அவர்கள் இன்னமும் செம்மையாகச் செய்யலாம் என எண்ணத் தோன்றுகிறது.

இந்த நாவல் எனக்கு  பிடித்ததற்கான காரணங்கள் பலவான போதும்,
தனிப்பட்ட காரணமும் உண்டு. ஏனெனில் இது எனது பிரதேசத்தின் கதை. கதை மாந்தர்கள் பெரும்பாலானவர்கள் எனக்கு அறிமுகமானவர்கள். தவறிப் போனவர்கள் அனைவரும் எனக்குத் தெரிந்தவர்கள். தவறிப்போனவனாகக் கருதப்படும் தணிகாசலம் ஆசிரியர் எனது மிக நெருங்கிய நண்பர். அவர் வேறு யாருமல்ல. நூலாசிரியர் தெணியான் அவர்களே. எனவே இது தெணியானின் சொந்த அனுபவம்.

“தவறிப் போனவன் கதை” என்னும் இந்தப் படைப்பினுள் நான் மறைந்திருக்கவில்லை. எனது வாழ்வில் 1996ல் சம்பவித்த மிக நெருக்கடியான சம்பவம் ஒன்றினை மையமாக வைத்துக் கொண்டே இந்த நாவல் நகருகிறது” என வாக்குமூலம் தருகிறார்.

அதற்கு மேலாக நானும் அந்த நாவலில் பாத்திரமாக வருகிறேன். டொக்டர் ஆனந்தன், ஆனந்தன் வைத்தியசாலை யாவும் நானும் என்னைச் சுற்றியவையுமே.

எனது பருத்தி்த்துறை மருத்துவநிலையம் அன்று

அந்தச் செய்தி எட்டியபோது நானும் எனது நண்பர்களும் பட்ட மனஅவஸ்தை சொல்லி மாளாது. நண்பர் குலசிங்கம் உடனடியாகவே தகவல் தந்தார்.

நேற்றுப் பார்த்த நண்பனை இவ்வளவு விரைவாக இழப்போம் எனக் கனவும் கண்டதில்லை. ஆனால் இழப்பது அன்றைய போர்ச் மூழலில் ஆச்சரியமானதல்ல. இரவு 7 மணிக்கு சந்தித்த நண்பன் நெல்லை.க.பேரனை காலையில் கண்விழ்த்தபோது இழந்ததாகச் செய்தி கேட்ட போது பட்ட துயரத்திற்கு மேலானது தெணியான் பற்றிய செய்தி.

நோயாளிகள் காத்திருந்ததால் என்னால் விட்டகல முடியவில்லை. என்ன நடந்தது என அறிய நண்பர்கள் குலசிங்கமும், ரகுவரனும் தெணியானது வீடு நோக்கி சைக்கிளில் விரைந்தனர். நான் மனப்பதற்றத்துடன் பணியில் ஈடுபட நேர்ந்தது. எதிர்பாராதது! ஆனால் நல்ல செய்தியுடன் திரும்பி வந்தனர்.

“தெணியான் சுகமே உள்ளார். காலமானது வேறொரு ஆசிரியர்.” என்றார்கள். மகிழ்ந்தோம். மற்றொருவர் இறப்பில் நாம் மனமகிழ்ச்சியடைய நேர்ந்தது வாழ்க்கையில் அந்த ஒரே தடவையாகத்தான் இருக்கும். நண்பர் தப்பிவிட்ட நிம்மதியானது வேறு சிலர் துன்பத்தைக் கணக்கெடுக்காது மகிழ வைத்த முரண் அனுபவம் அது.

பன்முக ஆற்றல் கொண்ட தெணியானின் எழுத்தாள முகத்தின் ஒரு பக்கம்தான் நாவல். நாவல் படைப்புத்துறையில் பஞ்சம் மிக்க எமது நாட்டில் நாவல், குறுநாவல் என ஏற்கவே எட்டு நூல்களை தெணியான் எழுதி வெளியிட்டுள்ளார். பல வருடங்களுக்கு முன் வெளியான ‘கழுகுகுள்’ என்ற நாவலும் மருத்துவமனைகளையும், மருத்துவர்களையும் சுற்றிப் படர்ந்திருந்தாலும் ஒன்றுக்கொன்று முடிச்சுப்போட முடியாத மிக வித்தியாசமான படைப்பு ‘தவறிப்போனவன்’ ஆகும்.

அவர் எழுதிய சிறுகதைகளில்; பெரும்பாலானவை நான்கு தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. சிறுகதை, கட்டுரை, கவர்ச்சியான பேச்சாற்றல், ஆசிரியத்துவம் என கைவைத்த ஒவ்வொரு துறையிலும் தன் ஆளுமையைப் பதித்துள்ளார்.

சுமார் 5 தசாப்தங்களாகப் படைப்புலகில் இருந்தாலும் அவரது படைப்பாற்றல் இன்னும் வற்றாத சுனையாகப் பிரகாவித்து, வித்தியாசமான புனைவுகளுடன் மெருகேறிக் கொண்டேயிருக்கிறது. இன்னும் பல பொக்கிஸங்கள் அவரது பேனாவிலிருந்து சுரந்து கொண்டே இருக்கும் என நம்பலாம்.

எம்கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0.0

Read Full Post »

>அண்மையில் ஜீவநதி ஆண்டு மலர் படிக்கக் கிடைத்தது. அருமையான பல கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் என நிரவிக் கிடந்தது.

அதில் ஸ்ரீரஞ்சனி என்ற ஒரு எழுத்தாளரின் படைப்பான சிறுகதையைப் பற்றி சில கருத்துக்களைக் கூறலாம் என நினைக்கிறேன். மிக வித்தியாசமான சூழலில் அமைந்த கதைதான் ‘உள்ளங்கால் புல் அழுகை’.

இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் வாழும் எமக்கு அந்நியமான ஒரு பிரச்சனை பற்றிப் பேசுகிறது. களம் புதிது, காரியம்; புதிது. ஆனால் அதிலுள்ள அடிப்படைப் பிரச்சனை அனைவருக்கும் பொதுவானது.

ஓரு பெண் குழந்தையின் பார்வையாக சிறுகதை சொல்லப்படுகிறது. சொல்லப்படும் விதத்தைப் பொறுத்த வரையில், நிகழ் காலத்தில் ஆரம்பித்து, கடந்த காலத்தில் நனைவது எமக்கு ஒன்றும் புதினமானது அல்ல. ஆனால் எதிர்காலத்தில் கால் பதித்து நிறைவுறுவது சற்று தாக்கத்திற்குரிய மாற்றமாகத் தென்படுகிறது.

ஒரு குழந்தையின் பண்புகளை, நடவடிக்கைகளை தீர்மானிப்பதில் சமூகத்தின் பங்கு எவ்வளவு ஆழமானது என்பதை முகத்தில் ஓங்கி அறைவது போலச் சொல்லி முடிகிறது. ஆனால் ஆசிரியர் கூற்றாக அல்ல. எமது சிந்தனையை விரிவிப்பதன் மூலம் நாமாக புரிந்து கொள்ள வைப்பதே அதன் சிறப்பு.

குற்றம் செய்த தகப்பனைத் தண்டித்து, நோயுள்ள தாயை பிள்ளைகளிடமிருந்து பிரித்து மருத்துவம் செய்யப்படும்போது, இவை எவற்றிலும் சம்பந்தப்படாத குழந்தை மனிதாபமின்றித் தண்டிப்புக்கு ஆளாவதையே இச் சிறுகதை பேசுகிறது.

புதிர் போல ஆர்ம்பிக்கிறது கதை. “மை நேம் இஸ் ரோசி.வட்ஸ் யுவர் நேம்” குழந்தை பேசாமல் நிற்கிறது.

“சோ யு ஆர் நொட் ரெடி ரு ரோக் ரு மீ”

நன்றாக ஆங்கிலம் பேசக் கூடிய தமிழ்க் குழந்தை இது. இவளைப் பராமரிப்பதற்கான இடத்திலுள்ள பெண் அவ்வாறு பேசுகிறாள். அவளைப் பாரத்ததும் தனது ஸ்கூலில் ரீச்சர் வராத நாட்களில் வரும் சப்பிளை ரீச்சர்தான் ஞாபகத்திற்கு வருகிறது. ஏனெனில் இவளது வழமையான ரீச்சரைப்போல அல்லது அம்மா போல பிள்ளையில் அன்பும் கரிசனை உள்ளவர்களாக இல்லை.

சம்பளம் வாங்கிப் பணி புரியும் பெண்தான் ரோசி. அவள் அம்மா போல இருக்க முடியாது. தாயைப் பிரிந்து தனியே புது இடத்திற்கு வந்திருக்கும் குழந்தையின் சோகத்தை, ஏக்கத்தைப் புரிந்து கொள்ளாத வெறும் ஊழியர் அவர். சாப்பிட மாட்டேன் என மறுக்கும் குழந்தைக்கு ஆறுதல் வார்த்தை கூறத் தெரியாதவள்.
“அபர்ணா வில் டேக் கெயர் ஒவ் யூ” எனச் சொல்லித் குழந்தையின் பாலான தன் கடமையை முடித்துக் கொண்டு பைல் லுக்குள் மூழ்கமட்டும் தெரிந்த கடமையுணர்ச்சியுள்ள பெண் அவள்.

ஏன் அவள் பெற்றோரைப் பிரிந்தாள் என்பது நினைவோட்டமாக வருகிறது. வழமையாக தாய் தகப்பனுக்கு இடையேயான முறுகல் அன்று சற்று தீவிரமாகிவிட்டது. தகப்பன் தாயின் தலை முடியைப் பிடித்து அடிக்க அவள் குளற, பக்கத்து வீட்டுக்காரன் பொலீசுக்கு போன் பண்ண பொலீஸ் அவனைப் பிடித்துக் கொண்டு போய்விட்டது. தாயையும் மனநிலை பிறந்தவள் என அழைத்துப் போய்விடுகிறது.

சிறுகுழந்தையான இவளது தங்கையுடன் இவளையும் வீட்டில் வைத்துப் பராமரிக்க முடியாது என்பதால்தான் இவள் காப்பகத்திற்கு வர வேண்டியதாயிற்று. தாய் இல்லை. தந்தையில்லை. கூட விளையாடும் தங்கையும் இல்லை. கடல் மீனைக் கரையில் தூக்கிப் போட்டது போலாயிற்று அக் குழந்தையின் நிலை.

எவ்வளவு சமூக அக்கறை அற்ற மனிதர்களாக மாறிவிட்டது உலகம். தனது அமைதியான வாழ்வில் அடுத்த வீட்டுச் சத்தம் கூட குறுக்கிடக் கூடாது என நினைக்கும் நிலைக்கு வந்துவிட்டது. பாரம்பரிய சமூகமாக இருந்தால் அடுத்த வீட்டுப் பிரச்சனையில் தலையிட்டுத் தீர்த்து வைத்திருக்கும் அல்லது பிரச்சனை வரும்போது ஒத்தாசையாக நின்று உதவியிருக்கும். ஆனால் இவர்களுக்கு பொலீசைக் கூப்பிட்டு பிரச்சனையைப் பெருப்பிக்கவே தெரிகிறது.

குடும்பம் சிதைகிறது. குழந்தைகள் நிர்க்கதியாகின்றனர். ஆனால் யாரையும் குற்றம் சொல்ல முடியாது. ஏனெனில் அவர்கள் சட்டப்படியே நடக்கின்றனர்.

ஆனால் குழந்தையின் மனநிலையைப் பற்றி யாருமே கவலைப்படவில்லை. குழந்தையின் ஏக்கம் தனது அம்மாவுடன், அவளது அன்பில் தோய்ந்து, அரவணைப்பில் கட்டுண்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். தனது முன்னைய வாழ்வுக்குத் திரும்ப வேண்டும் என்பதே. அதற்கு என்ன செய்ய வேணடும் எனச் சிந்திக்கிறது.

அந்தப் பிள்ளை எடுக்கும் முடிவுதான் அதிர்ச்சியாக இருக்கிறது. வன்முறையின் மூலமே தனது தேவையைப் பூர்த்தி செய்ய முடியும், அதன் மூலமே பொற்காலமான பழைய வாழ்வு கிடைக்கும் என எண்ணத் தோன்றுகிறது.

“நான் பிரளி பண்ண வேண்டும், சாமான்களைப் போட்டு உடைக்க வேண்டும். அப்பொழுதுதான் ரோசியால் என்னைச் சமாளிக்க முடியாது போய்விடும். என்னை அம்மாவிடம் கொண்டு போய் விட்டுவிடுவாள்” என அந்தப் பிஞ்சு மனம் சிந்திக்கிறது.

வன்முறை தவிர்த்த சரியான வழியில் குழந்தைகளைச் சிந்திக்க வைக்க எமது சமூகம் சரியான வழி காட்டுமா?

அல்லது பழைய குருடி கதவைத் திறவடி கதைதானா?

நல்ல சிறுகதையைத் தந்த எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனிக்கும் ஜீவநதி சஞ்சிகைக்கும் வாழ்த்துகளும், பாராட்டுக்களும்.

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0

உள்ளங்கால் புல் அழுகை’ சிறுகதையைப் படிக்க
தேவையான பகுதிமேல் கிளக் பண்ணிப் பெரிதாக்கிப் படிக்கவும்.

  இரண்டாம் பகுதி

 மூன்றாம் பகுதி

நாலாம் பகுதி

ஐந்தாம் பகுதி

நன்றி ஜீவநதி

Read Full Post »

>

நெருக்கடிகள் மிக்க சூழலில் முதல் பலி மனிதத்துவமே.

கலாசார மேன்மைகளைக் கேள்விகுள்ளாக்கும் திரைப்படம்

குருட்டுமை Blindness!– /* Style Definitions */ p.MsoNormal, li.MsoNormal, div.MsoNormal {mso-style-parent:””; margin:0in; margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:12.0pt; font-family:”Times New Roman”; mso-fareast-font-family:”Times New Roman”;} h3 {mso-margin-top-alt:auto; margin-right:0in; mso-margin-bottom-alt:auto; margin-left:0in; mso-pagination:widow-orphan; mso-outline-level:3; font-size:13.5pt; font-family:”Times New Roman”;} @page Section1 {size:8.5in 11.0in; margin:1.0in 1.25in 1.0in 1.25in; mso-header-margin:.5in; mso-footer-margin:.5in; mso-paper-source:0;} div.Section1 {page:Section1;} –>



அமெரிக்காவின் மிகவும் பரபரப்பு மிக்க வீதி ஒன்றில் திடீரென வாகன நெரிச்சல். ஒன்றுக்குள் மற்றொன்றாக நெரிபடுகின்றன. ஹோர்ன் சத்தங்கள் அலறுகின்றன. காரணம் என்னவென்றால் வாகனம் ஓட்டி வந்த ஒருவருக்கு திடீரென பார்வை மங்கிக் குருடாகிப் போவதுதான். இதேபோல விமானங்கள் தாறுமாறாகத் தரை இறக்கப்படுகின்றன. இதுவரை அறியப்படாத புதிய தொற்றுநோய் காரணமாகவே அவர்களது பார்வை போயிற்று.

நோயாளியின் கண்ணைப் பரிசோதித்த கண்மருத்துவரின் பார்வை அன்று இரவே பறிபோகிறது. மிக வேகமாகத் தொற்றும் இந்த நோயால் பலர் பார்வையற்றுப் போகிறார்கள். இவ்வாறு குருடாகும் போது பார்வை இருண்டு போகவில்லை. எல்லாமே பால் போல வெள்ளையாக, வெளிச்சமாக இருக்கும் ஆனால் உருவங்கள் பொருட்கள் எதுவும் தெரியாது.White Blindness என்கிறார்கள்.

பன்றிக் காய்ச்சலை விட மிக மோசமாக மக்களைப் பீதிக்கு உள்ளாக்குகிறது. யாருக்கு எப்பொழுது தொற்றுமோ என்ற அச்சத்தில் அந்த நகரமே பீதியில் உறைகிறது.

பார்வை இழந்தவர்களை முகமூடி அணிந்த சுகாதார ஊழியர்கள் ஆம்புலன்ஸ் வண்டிகளில் ஏற்றி ஒதுக்குப் புறமாக இருக்கும் ஒரு மருத்துவ மனையில் கொண்டு போய் அள்ளிப் போடுகின்றனர்.



அங்கு அவர்களைக் கவனிக்க மருத்துவர்கள் கிடையாது. பாராமரிக்க ஊழியர்கள் இல்லை. கூட்டித் துப்பரவு செய்ய எவரும் இல்லை. பார்வையற்றவர்களுக்கு எதுவுமே முடியவில்லை. தடுமாறுகிறார்கள். தடக்கி விழுகிறார்கள். காயப்படுகிறார்கள். உதவுவதற்கு எவருமில்லை. ஏதாவது தேவையெனக் கேட்கப் போனால் வாசலைத் தாண்ட முன்னரே எட்டத்தில் நிற்கும் காவலர்களால் கேள்வியின்றிச் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.

கண் மருத்துவரின் மனைவி தனது கணவனுக்கு உதவுவதற்காக தானும் பார்வை இழந்தவள் போல இரகசியமாக வந்துவிடுகிறாள்.

நல்ல காலம் அவளது பார்வை பறிபோகவில்லை. அவள் மட்டுமே அவர்களுக்கான ஒரே உதவி. இவர்கள் பிறவிக் குருடர்கள் அல்ல. இற்றை நாள்வரை பார்வையுள்ள உலகிற்கு பரிச்சயமானவர்களுக்கு திடீரென எல்லாமே சூன்னியமாகிவிடுகிறது.

உணவு சமைப்பதற்கு யாருமில்லை. உணவு பெட்டிகளில் கொண்டு வந்து வெளியே போடப்படும். அதுவும் போதுமானதாக இல்லை. முறையிட யாருமில்லை. பசி, தாகம், இயலாமை, வெறுப்பு. குளிப்பதற்கு போதிய நீரில்லை. எதிர்காலம் பற்றிய பயம், சட்டம் ஒழுங்கு இல்லாமை. அதனால் எல்லாம் தான் தோன்றித் தனமாக நடைபெறுகிறது.

வல்லவர்கள் மற்றவர்களை ஒடுக்குகிறார்கள். பசி கோர தாண்டமாடுவதால் உடலைக் கொடுத்தால்தான் உணவு என சில வல்ல மிருகங்கள் அடாத்துகின்றன. ஒரு பெண் இரக்கமற்றவர்களுக்குப் பலியாகிறாள். மனிதம் மரணித்துவிட கோபமும், ஆக்ரோசமும், பொறாமையும், தகாத ஆசைகளும் கோலோச்சுகின்றன. அதற்குள் சிலருக்கு எல்லை மீறிய காமமும் கிளர்ந்தெழுகிறது.

அவர்கள் வாழ்வு மிகவும் பரிதாபத்திற்குரியதாகிறது. வேலையாட்கள் இல்லாததாலும், இவர்களுக்கு பார்வை தெரியாததாலும் அழுக்கும் அசுத்தமும் சூழ்ந்து கொள்கிறது. அழுக்கான உடைகளும், கழிவுப் பொருட்களும் மருத்துமனை விடுதியெங்கும் குவிந்து கிடக்கின்றன.

மலமும், சிறுநீரும் கூட ஆங்காங்கே கிடக்கின்றன. அதில் வழுக்கி விழுந்து தங்களையும் தமது உடைகளையும் சிலர் அசுத்தப்படுத்திக் கொள்கிறார்கள்.

சிலர் அணிந்திருந்த தமது உடைகளையும் களைந்து விட்டு அம்மணமாகத் திரிகிறார்கள்.

அந்த அம்மணத்தின் அலங்கோலத்தை மற்றவர்களால் காணமுடியாதிருக்கிறது. பார்த்திருக்கும் எம் மனம்தான் கூசுகிறது.

ஆம் பார்வையாளர்களின் பாலுணர்வைக் கிளர்ந்தெழச் செய்வதற்காகவே திரைப்படங்களில் நிர்வாணக் காட்சிகளைச் சேர்க்கிறார்கள். ஆனால் இங்கு அதே நிர்வாணம் மனத்தில் கவலையை, பரிதாபத்தை, ஏன் குற்ற உணர்வையும் ஏற்படுத்துகின்றது.

நிர்வாணத்தினூடாக மனத்தில் வலியை எழச் செய்யும் நெறியாளரும், கமராமென்னும் பாராட்டுக்குரியவர்கள். Cesar Charlone லின் படப்பிடிப்பு திரைப்படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் எனலாம். நகரத்தின் சிதைவை அவர் மிக அற்பதமாகவம், நுணுக்கமாகவும் மனத்தைத் தொடும் வண்ணம் காட்சிப்படுத்தியுள்ளார்.

நெருக்கடிகள் மிக்க சூழலில், சமூக மற்றும் சட்டரீதியான கட்டுப்பாடுகள் தளர்ந்த நிலையில், தன்னிச்சையாக காட்டு மிருகங்கள் போல வாழும் கட்டற்ற வாழ்வின் அவலம் இத்திரைப்படம் போல வோறெங்கும் சித்தரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

போர்த்துக்கலைச் சேர்ந்த Jose Saramago வின் நோபல் பரிசு பெற்ற நாவலின் (1995) திரைப்பட வடிவம் இது. Fernando Meirelles நெறியாள்கை செய்து திரைப்படமாக ஆக்கியுள்ளார். அவர் City of God என்ற தனது முதற் திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மெக்சிகோ சேரி வாழ்வின் இருண்ட பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.



Blindness என்ற இத்திரைப்படத்தில் Julianne Moore, Mark Ruffalo, Danny Glover, Gael Garcia Bernal ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். 120 நிமிடங்கள் வரை சுவார்ஸமாக ஓடுகிறது.

ஒரு அதிகற்பனைக் கதை என்பது உண்மைதான். ஆயினும் இது எதைச் சொல்ல வருகிறது?

ஆழ்ந்த சமூகக் கருத்து ஒன்றைக் குறியீடாகச் சொல்கிறது எனலாம். அந்த மனிதர்களின் குருட்டுத்தன்மையூடாக சமூகத்தின் குருட்டுத் தன்மையையே சுட்டிக் காட்ட முன் வருகிறது எனத் தோன்றுகிறது. உண்மையில் கண்பார்வையிழந்தவர்கள் அடைபட்டிருக்கும் மருத்துவமனையை ஒரு சமூகத்திற்கு ஒப்பிடலாம்.

சட்டம் ஒழுங்கு குலைந்த நிலையில் அவர்களிடையே நிகழும் சம்பவங்களைப் பார்க்கும் போது, நாம் போற்றும் எமது காலசார உன்னதங்கள் எவ்வளவு போலித்தனமானவை என்பதை உணர முடிகிறது.

உணவுக்காகவும், செக்ஸ்க்காகவும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்கிறார்கள். கொல்லவும் தயங்கவில்லை.

கட்டுப்பாடுகள் தளர்ந்தால் மிருகங்களுக்கும் மனிதர்களான எங்களுக்கும் இடையே எவ்வித வித்தியாசமும் கிடையாது.

ஆம் சிந்திக்கத் தூண்டும் இத் திரைப்படம் பல கேள்விகளையும் எழுப்புகிறது.

மிக மோசமான உயிருக்கு ஆபத்தான, எதிர்காலம் பற்றிய நம்பிக்கையீனம் நிறைந்த இடர்மிகு சூழலில் மனிதத்துவம் தப்பித்திருக்க முடியுமா?

சுரண்டலும் அடக்குமுறையும் கொடூரமும் தாண்டவமாடும் சூழலில் மரியாதையையும், வினயத்தையும் எதிர்பார்க்க முடியுமா?

அங்கு அன்பும் காதலும் நற்பண்புகளும் தாக்குப் பிடிக்க முடியுமா?

இவை போன்றவற்றிக்கு இப்படம் விடையைத் தேட முயற்சிப்பதாகவே நான் நினைக்கிறேன்.

இதை வெளிப்படுத்துவதற்காக மிகவும் அருவருப்பான காட்சிகளுடாகவும் எங்களை அழைத்துச் செல்கிறார் நெறியாளர். நரகத்தின் ஊடாக சொர்க்கம் நோக்கிய பயணம் எனலாம்.

இறுதியில் என்ன நடக்கிறது? உணவு அடியோடு இல்லை. எந்தவித உதவிகளும் கிட்டவில்லை. இந்த நிலையில் அங்கு திடீரென நெருப்புப் பற்றிக் கொள்கிறது. சிலர் அதற்குள் அகப்பட்டுவிட மற்றவர்கள் உயிரைப் பயணம் வைத்து வெளியேற முயல்கிறார்கள்.

என்ன ஆச்சரியம்!

வழமையாக தலைக்குறி தென்பட்டவுடன் துப்பாக்கியால் சுடும் காவலருள் ஒருவனைக் கூடக் காணவில்லை. ‘we are free..’ என ஆனந்தத்தில் கத்திக்கொண்டு வெளியேறுகிறார்கள்.

வெளியேறினாலும் நிம்மதி கிட்டவில்லை.

மேலும் துன்பங்கள் காத்திருக்கின்றன.

நகரில் யாரையும் காணமுடியவில்லை.

உதவிக்கு அழைக்க யாரும் தென்படவில்லை.

மனித நடமாட்டம் இன்றி நகரம் வெளிச்சோறிக் கிடக்கிறது.



வாகனங்கள் ஆங்காங்கே கைவிடப்பட்டுள்ளன.

குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.

உணவு பெற முடியவில்லை.

ஓரிடத்தில் இறந்து கிடக்கும் மனிதன் ஒருவனைக் நாய்கள் குதறியெடுத்துத் தின்று பசியைத் தணிக்கின்றன.

நகரத்தின் வெறுமை எம்மையும் அப்பிக் கொள்கிறது.

Blindness என்பது மிகுந்த கருத்தாழம் கொண்ட தலைப்பு என எண்ணத் தோன்றுகிறது. இங்கு பார்வை இழந்தவர்கள் அல்லது குருடர்கள் என்று தலைப்பிடப்படவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். குருட்டுத்தன்மை அல்லது குருட்டிமை என்றே சொல்கிறது.



Blindness என்ற இத்திரைப்படம் குருட்டுமையை கண்பார்வை இழந்தவர்களின் செயற்பாடுகள் மூலமாகவும், மற்றொரு புறத்தில் பார்வையிழந்தவர்களின் நலன்களைக் கருத்தில் எடுக்காது கண்ணை மூடிக்கொண்ட சமூகத்தின் பொறுப்பற்ற தன்மை ஊடாகவும் உணர்த்த முயல்கிறது.

நாம் எங்களது பிரச்சனைகளை மட்டுமே ‘பார்க்கிறோம்’. எங்கள் தேவைகளை மட்டுமே முனைப்புடன் நோக்குகிறோம். மற்றவர்கள் துன்பங்களைப் பார்ப்பதில்லை அல்லது தயக்கத்துடன் அல்லது அரைமனத்துடன் மட்டுமே பார்க்கிறோம். இதுவே குருட்டுமை எனலாம்.

ஆம் அந்த நகரத்தில் வாழ்ந்த மக்கள் எல்லோரும், அவர்களின் அரசு உட்பட தமது நலன்களையே எண்ணிக் கொண்டன. தமது தேவைகளையே பூர்த்தி செய்தன. தமது எதிர்காலம் பற்றியே சிந்தித்தன. மற்றவர்களைப் பற்றி குறிப்பாக கைவிடப்பட்ட, பார்வையிழந்த மக்களைப் பற்றிச் சிந்திக்கவே இல்லை.

அவர்களது வாழ்வு பற்றியோ, அவர்களது தேவை பற்றியோ கவனம் செலுத்தவில்லை. தமது நலனிற்காக அவர்களைப் பலியிட்டன. அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்று கூடக் கவலைப்படவில்லை. அவர்கள் எப்பாடு பட்டாலும் படட்டும் நாம் சுகமாக வாழவேண்டும் என்று சுயநலத்தோடு வாழ்ந்தன.

ஜனநாயகம், மக்கள் நலன், என்றெல்லாம் தலைவர்களும் அரசுகளும் கூச்சல் போடுவதும் தம்பட்டம் அடிப்பதும் போலித்தனம்தானா? அரசுகள் இவ்வாறுதானா நடந்து கொள்ளும்.

ஆனால் திரைப்படம் இத்துடன் முடிந்து விடவில்லை. கிளைமக்ஸ் இனித்தான் வருகிறது. ஓரளவு முன்பே யூகித்ததுதான். அதையும் கூறி உங்கள் ஆர்வத்தைக் கெடுக்கக் கூடாது அல்லவா?

உண்மையில் இது ஒரு சுவாரஸ்மான மனத்தை அலைக்கழிக்கும் திரைப்படம். பல அடிப்படை விடயங்கள் பற்றிய சிந்தனைகளைத் தூண்டிவிடுகிறது. ஆனால் சந்தோஸமாக நேரத்தைக் கழிக்கக் கூடிய பொழுதுபோக்குப் படம் அல்ல என்பதும் உண்மையே.

இத் திரைப்படம் பற்றி முதலில் எமது பதிவுலக நண்பர் ஒருவரின் கட்டுரை மூலமே அறிந்தேன். அவருக்கு கருத்துரையும் இட்டிருந்தேன். ஆயினும் அவர் யார் என்பது இப்பொழுது ஞாபகம் வரவில்லை. அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்

எம்.கே.முருகானந்தன்.

நன்றி:- வீரகேசரி வாரவெளியீடு

26.07.2009

Read Full Post »