Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘காதுக்குடுமி’ Category

கண்களிலிருந்து நீர் வழிய, வேதனையில் முகம் சோர்ந்து கிடக்க காதைப் பொத்திக் கொண்டு வந்தான் பையன். அமைதி காக்க வந்தவர்கள் வன்முறை பிரயோகித்ததால் காதைப் பொத்தி அடி வாங்கி, குருதி வடிய, மருத்து உதவி நாடி ஓடோடி வந்தவர்களின் காலம்தான் ஞாபகத்தில் வந்தது.

“குளிச்சுப் போட்டு வந்தவனின்ரை காதுக் குடுமியை எடுப்பம் என்று இயர் பட்சை வைத்தபோது ஆட்டிவிட்டான். குத்திப் போட்டுது போலக் கிடக்கு” என்றாள் அம்மா.

xara_QTIP_X

பையனின் காதைப் பரிசோதித்தேன். வன்முறைப் பாதிப்பிற்கு ஆளான அளுத்ஹம நகரின் அவலக் கோலம்போல குருதி படர்ந்த குடுமி கிடந்தது.

இங்கு வன்முறையை உபயோகித்தது இன வன்முறையாளர்கள் அல்ல. சொந்தத் தாய்தான். காதைச் சுத்தம் செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் செய்தது வன்முறைபோல் ஆகிவிட்டது.

காதுக் குடுமியை மட்டுமின்றி, குளிக்கும்போதும் தலை முழுகும் போதும் காதிற்குள் போன நீரையும் எடுக்க வேண்டும் என்றெண்ணி, காதைக் கிண்ட முனையும் “18ம் நூற்றாண்டு தாய் தந்தையார்கள்” இன்றும் எமது சமூகத்தில் இருக்கிறார்கள். காதிற்குள் போன நீர் தானாகவே வெளியே வந்துவிடும். அல்லது சற்று நேரம் செல்ல தானகவே உலர்ந்துவிடும் என்பதை இந்த விஞ்ஞான யுகத்திலும் இவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

காதுக்குடுமி

எமது காதிலுள்ள சுரப்பிகளால் காதுக்குடுமி சுரக்கிறது. தூசி, மற்றும் சிறு அந்நியப் பொருட்கள் காதினுள் செல்லாது தடுப்பதற்கானது இது என நம்பப்படுகிறது. தொற்று நோய்கள் காதுச் சருமத்தில் ஏற்படாமல் காக்கவும் செய்கிறது. இது பொதுவாக காய்ந்து உதிர்ந்து தானாகவே வெளியேறிவிடும்.

hqdefault

எல்லோருக்கும்தான் காதில் இவ்வாறு சுரக்கிறது. ஆனால் ஒரு சிலருக்கு மாத்திரம் அது காய்ந்து கட்டியாகி இறுகிவிடுகிறது. இதற்குக் காரணங்கள் சில.

  • சிலரது காதின் சருமம் சொர சொரப்பாக இருந்து அதிகம் உதிர்ந்து குடுமியிடன் சேர்ந்து இறுகக் கூடும்.
  • அல்லது சிலரது காதின் அமைப்பு வளைவானதாக இருந்தால் இது வெளியேறுவது தடைப்படக் கூடும்.
  • சிலர் பட்ஸ் போட்டு எடுக்க முயலும்போது குடுமி வெளியே வருவதற்குப் பதிலாக மேலும் உட்புறமாகத் தள்ளுப்படுவதும் உண்டு. காலப்போக்கில் இவை சேர்ந்து இறுகிவிடலாம்.

சுமார் 100 போரில் 6 பேருக்கு காதில் குடுமி இறுகி அடைத்துவிடுவதாகத் தரவுகள் சொல்கின்றன.

குச்சி, சட்டைப் பின், காது கிண்டி, பஞ்சுத் துண்டு எனப் பலவற்றைத் தேவையின்றி உபயோகித்து ஆபத்தை வாங்குபவர்கள் பலர். காதுக் குடுமிப் பிரச்சனை, காதுவலி, காதில் கிருமித் தொற்று, சீழ் வடிதல் போன்ற பிரச்சனைகளோடு வருபவர்களில் பலர் இவற்றைப் பயன்படுத்தி காதைக் கிண்டுபவர்களாகவே இருக்கிறார்கள்.

மருத்துவரைக் காண வேண்டுமா?

காதிற்குள் குடுமி இருந்தாலும் பலருக்கும் எந்தவித இடைஞ்சலையும் ஏற்படுத்துவதில்லை. இருந்தபோதும் அது அதிகமாக இருந்தால், அல்லது காய்ந்து இறுகி செவிக்குழாயை அடைத்திருந்தால் பல்வேறு அறிகுறிகள் ஏற்படக் கூடும. உதாரணமாக காது அடைத்துக் கிடப்பது போன்ற உணர்வு ஏற்படக் கூடும். சிலருக்கு காது கேட்பது மந்தமாகவும் கூடும். ஒரு சிலருக்கு தலைச் சுற்று ஏற்படலாம். இன்னும் சிலருக்கு காதினுள் கிணு கிணுவென ஏதாவது சத்தம் ஏற்படலாம். காதில் அரிப்பு ஏற்படவும் வாயப்புண்டு;.

இருந்தபோதும் சாதாரண காது அடைப்பு இருந்தால் மருத்துவரிடம் உடனடியயாக ஓட வேண்டியதில்லை. ஆயினும் கீழ் கண்ட அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காது மருத்துவரை நாடுங்கள்.

  • கடுமையான தலைச்சுற்று, உங்களைச் கூ10ழ இருப்பவை கடுமையாகச் சுழல்வது போன்ற உணர்வு ஏற்பட்டால். வழமைபோல நடக்க முடியாது சமநிலை பாதிபுற்றால்
  • காய்ச்சலும், கடுமையான வாந்தியும் சேர்ந்து வந்தால்.
  • திடீரென காது கேட்காமல் அடைத்துக் கொண்டால்

அக்கறை எடுத்து மருத்துவரைக் காண வேண்டும்.

நீங்கள் சொல்வதைக் கேட்டும், காதை பளிச்சிடும் வெளிச்சததிலும், அதற்குரிய கருவிகள் (ழவழளஉழிந) கொண்டும் பரிசோதித்து உங்கள் காதில் உள்ள பிரச்சனை காதுக்குடுமிதானா அல்லது கிருமித் தொற்று, அந்நியப் பொருட்களா அல்லது வேறு நோய்களா என்று கண்டறிவார்.

காதுக் குடுமியை அகற்றல்

ஒருவரது காதுக் குடுமியானது மிக அதிகமாகமோ மிக இறுக்கமான பாறை போலவோ அல்லாது மெதுமையானதாக இருந்தால் அதைத் தானே அகற்ற முடியும். இருந்தபோதும் செவிப் பறையில் துவாரம் உள்ளவர்கள், காதால் நீர் வடிபவர்கள், காதில் கிருமித் தொற்று உள்ளவர்கள் அவ்வாறு தாங்களே அகற்ற முயல்வது ஆகாது.

எவ்வாறு அகற்றுவது? இயர் பட்ஸ், குச்சி சட்டைப் பின், காது கிண்டி போன்றவற்றை உபயோகிக்க வேண்டாம் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டோம்.

உள்ளங்கையில் சற்று நீரை எடுத்து அதைக் காதிற்குள் விடவேண்டும். பின்னர் தலையைச் சரிக்க உள்ளே விட்ட நீரானது குடுமியைக் கரைத்துக் கொண்டு வெளியே வந்தவிடும். இவ்வாறு சில தினங்களுக்கு குளிக்கும்போது செய்து வர காதுக் குடுமி அகன்றுவிடும்.

குடுமி சற்று இறுக்கமாக இருந்தால் ஒலிவ் எண்ணெய் அல்லது நல்லண்ணெயில் சில துளிகளை ஒரு சில தினங்களுக்கு குறிப்பட்ட காதில் விட்டுவர அவை இளகி வெளியேறும். பேபி ஓயில், கிளிசரீன் போன்றவற்றையும் சிலர் பயன்படுத்துவது உண்டு.

காதுக் குடுமியை இளக வைக்கும் மருந்துகள்

பல விதமான மருந்துகள் கிடைக்கின்றன. பெரும்பாலன அரச மருத்துவ மனைகளிலும் பல தனியார் மருத்துவர்களும் Sodium bicarbonate ear drops  துளி மருந்தைப் பயன்படுத்துகிறார்கள். இது விலை மலிவானது. இலகுவில் தயாரிக்கக் கூடியது. பொதுவாகப் பாதுகாப்பானது. காது சற்று வரண்டது போன்ற உணர்வு சிலரில் ஏற்படலாம். அது தானாகவே மாறிவிடும்.

உபயோகிக்க ஆரம்பித்த காது குடுமி கரையும் மருந்து குப்பிகளை 4 வாரங்களுக்கு மேல் வைத்திருக்க வேண்டாம். அகற்றிவிடவும்.

 

Waxol,  Molcer, Cerumol போன்ற விலை உயர்;ந்த குடுமி இளக்கி மருந்துகளும் இலங்கையில் கிடைக்கினறன.

எவ்வாறு உபயோகிப்பது

How-to-use-ear-drops-2

தினமும் எத்தனை தடவைகள் விட வேண்டும், தொடர்ந்து எத்தனை நாட்களுக்கு விட வேண்டும் என்பவை பற்றி உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள்.  துளி மருந்துகளுடன் வரும் ஆலோசனைக் குறிப்புகளையும் கவனமாகப் படிக்கவும்.

மருந்து விட ஆரம்பிக்க முன்னர் உங்கள் கைகளைக் கழுவிச் சுத்தப்படுத்த மறக்காதீர்கள். உங்களால் உங்களுக்கே துளிகளை விடுவது சிரமமாக இருந்தால் மற்றொருவரின் உதவியைப் பெறுங்கள்.

  • மருந்து விட வேண்டிய காதானது மேற்புறம் பார்க்குமாறு கட்டிலில் சரிந்து படுங்கள்.
  • காதுமடலை சற்று முற்புறமாக இழுத்தால் காதுக் குழாய் நோரகி துளி மருந்து விடுவதற்கு வசதியாக இருக்கும்.
  • 3-4 துளிகளை விடவும். காது மருந்தால் நிறைந்துவிடும்.
  • துளி மருந்துப் போத்தலின் முனை காதில் படாதவாறு மருந்தை விடுவது அவசியம். இல்லையேல் காது மடலில் உள்ள கிருமிகளால் மருந்து மாசடைந்து தொடர்ந்து உபயோகிக்க முடியாது போய்விடும்.
  • தலையை திருப்பாது 5 முதல் 10 நிமிடங்களுக்கு அந்த நிலையிலேயே படுத்திருந்தால் மருந்து காதிலிருந்து வெளியே சிந்தாது உள்ளேயே தேங்கி நின்று குடுமியை கரைத்துவிடும்.
  • நீங்கள் படுக்கையிலிருந்து எழுந்திருக்கும்போது மேலதிக மருந்து தானாகவே காதிலிருந்து வெளியேறிவிடும்.
  • மற்றைய காதிலும் குடுமி இருந்தால் இதைப் போல அதிலும் மருந்தை விடவும்.

பொதுவாக 3 முதல் 5 நாட்களுக்கு இவ்வாறு மருந்தை காதினுள் விட குடுமி கரைந்து வெளியேறிவிடும். ஆயினும் மருந்தை காதினுள் அவ்வாறு விட்டும் நிவாரணம் கிடைக்கவில்லை எனில் மருத்துவரைச் சந்திக்கவும். மிகுந்து இருப்பதை வெளியே எடுப்பதாக எண்ணி இயர் பட்சை காதினுள் வைத்து சுத்தப்படுத்த முயலாதீர்கள். அது வெனிளேநாது மிகுந்து  இருப்பதை மேலும் உள்ளே தள்ளி நிலைமையை மோசமாக்கிவிடும்.

ear wax

குடுமிக்கென மருந்து விட்ட காதினுள் அழுக்குகள் படர்ந்திருந்தால் சற்று தண்ணீரை காதினுள் விட்டு பின்னர் தலையை மறுபுறம் சரிக்க அவை அகன்றுவிடும். வெளிப்புறக் காதை சுத்தமான துணியினால் துடைத்து சுத்தப்படுத்தலாம்.

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

 

0.0.0.0.0.0

 

Read Full Post »

காதைப் பொத்திக் கொண்டு வந்தாள் அந்தப் பெண்மணி.
காது வலியின் தாக்கத்தால் முகம் சோர்ந்திருந்தது.

தெளிவாகப் பார்ப்பதற்காக காதைத் திருப்பி கூர்வெளிச்சப் பக்கம் திருப்ப முயன்றபோது,

“தொடாதையுங்கோ, காதைத் தொட்டால் உயிர் போகிற வலி” என்றாள்.

“என்ன நடந்தது” என விசாரித்தேன்.

“வழமையாக காது கடிக்கிறதுதான். இண்டைக்கு திடீரென இப்படியாயிற்று”

“காது கடித்தால் என்ன செய்வீர்கள்?” வினவினேன்.

“நெருப்புக்குச்சி, சட்டைப் பின், இயர்பட்ஸ் என்று எது கிடைத்தாலும் காதைக் குடையுறதுதான் வேலை” என்றான் கூட வந்த மகன்.

காது மென்மையானது. திடப்பொருட்களால் கிண்டியதால் உராய்வு ஏற்பட்டு கிருமி தொற்றிவிட்டது.

நுண்ணுயிர் கொல்லி மருந்துகளும் வலி நிவாரணி மருந்துகளும் கொடுக்கக் குணமாயிற்று.

இன்னுமொரு இளம் பையன் நீச்சலடித்த பிறகு காதுவலியோடு துடித்து வந்தான்.

நீந்திய பிறகு காது அடைப்பது போல இருந்ததாம். காதுக்குள் தண்ணி போய்விட்டதென எண்ணி இயர்பட்ஸ் வைத்துத் காதைத் துடைத்தான். வலி மோசமாகிவிட்டது.

காதுக்குள் குடுமி இருந்தால் குளிக்கும்போதோ நீந்தும் போதோ நீர் உட்சென்றால் காது அடைக்கும்.

அது தற்காலிகமானது. உட்காதுக்குள் நீர் போய்விட்டதோ என பயப்பட வேண்டியதில்லை.

காதுக்குடுமி நீரில் ஊறிப் பருத்ததால் காது அடைப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

அது உலர அடைப்பு எடுபட்டுவிடும்.

இந்தப் பையன் இயர்பட்ஸ் வைத்து நீர் எடுக்க முயன்றபோது குடுமி காதின் உட்பக்கமாக நகர்ந்து செவிப்பறையை அழுத்தியதால் கடுமையான வலி ஏற்பட்டது. நல்ல காலம் செவிப்பறை உடையவில்லை. உடைந்திருந்தால் கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.

தவாறான அணுகுமுறைகள்

இப்படி எத்தனையோ சம்பவங்களைக் கூறலாம். குளிக்க வார்க்கும் போது கைக்குழந்தைக்கு காதுக்குள் தண்ணி போனது என அதைச் சுத்தப்படுத்தப்போய் குழந்தையைச் செவிடாக்கியிருக்கிறார்கள் பல பாட்டிமார்கள்.

காதுக்குள் தண்ணீர், காதுக்கடி, அரிப்பு என எத்தனையோ காரணங்களுக்காக தேவையற்று காதைச் சுத்தப்படுத்த முனைவதால் ஏற்படும் பாதிப்புகள் இவை.

காதுக்கடி, அரிப்பு எனில் காதைக் கழுவுவதால் பிரயோசனமில்லை. அதற்கான மருத்துவத்தைச் செய்ய வேண்டும்.

காது குப்பைக் கூடையோ, சுத்தப்படுத்த வேண்டிய உறுப்போ அல்ல.

காதுக்குடுமி பயனுள்ளது

காதுக்குள் உற்பத்தியாகும் குடுமி, காதைப் பாதுகாப்பதற்காகவே சுரக்கிறது.

  • அது காதின் சுவர்களை உலரவிடாமல் ஈரலிப்பாக வைத்திருக்க உதவுகிறது. போதிய காதுக்குடுமி சுரக்காமல் வரட்சியாக இருப்பவர்களுக்கே பெரும்பாலும் காது அரிப்பு காதுக்கடி போன்றவை ஏற்படுகின்றன.
  • பக்றீரியா, பங்கஸ் போன்ற கிருமிகள் காதின் சுவுர்களைத் தாக்காமல் பாதுகாக்கின்றன.
  • பூச்சி, வண்டுகள் போன்றவை காதிற்குள் புகாமல் தடுக்கின்றன

காதிற்குப் பாதுகாப்பை அளிப்பதால் அதை நீங்கள் அகற்ற வேண்டியதில்லை.

காதைக் கழுவும் முறை

ஆயினும் வேறு காரணங்களுக்காக காதைச் சுத்தப்படுத்த வேண்டும் என நீங்கள் விரும்பினால் தலையைச் சற்று சரித்துப் பிடித்துக் கொண்டு காதுக்குள் கைகளால் ஏந்திய சுத்தமான தண்ணீரை ஊற்றுங்கள். குளிக்கும்போது சுலபமாகச் செய்யலாம்.


பின் தலையை மறுபக்கமாகச் சரிக்க நீர் வெளியேறிவிடும். இவ்வாறு இரண்டு மூன்று தடவைகள் நீர் விட்டு சுத்தப்படுத்தலாம்.

காதுக்குள் விடும் நீர் தலைக்குள் போகாது, செவிப்பறை தடுத்து நிறுத்தி விடும்.

ஆயினும் காதிலிருந்து சீழ் அல்லது நீர் வடிபவர்கள் இவ்வாறு நீர் விட்டுச் சுத்தப்படுத்தக் கூடாது. முன்பு அவ்வாறு வடிந்தவர்களும் மருத்துவ ஆலோசனையுடன் மட்டுமே அவ்வாறு சுத்தப்படுத்தலாம்

இப்படிச் சுத்தம் செய்யும்போது காது அடைத்தால் பயப்படாதீர்கள். நீர் உலர்ந்ததும் அடைப்பு மறைந்துவிடும்.

உலர்ந்த காதுக் குடுமி

சிலருக்கு காதுக் குடுமி உலர்ந்து காதை அடைப்பதும் உண்டு. இது அதிகமானால் காது கேட்பதில் குறைபாடு ஏற்படவும் கூடும்.

இதனை காது பட்ஸ், கெயர்பின், குடுமி நீக்கும் கிண்டிகள், போன்றவை கொண்டு அகற்ற முற்படுவது ஆபத்தானது. அது மேலும் உட்புறமாகத் தள்ளுப்பட்டு நிலைமையை மோசமாக்கும்

அடைத்த காதினுள் ஒலிவ் ஓயில் விட்டு அதனை இளகச் செய்யலாம்.  அல்லது அதற்கான பிரத்தியேக மருந்துகள் கிடைக்கின்றன. அவற்றை காதினுள் விட்டு குடுமியை மெதுமையாக்கலாம். ஒரு நாளில் மென்மையாகாவிட்டால் மேலும் ஓரிரு நாட்களுக்கு அவ்வாறு செய்யலாம்.

மெதுமையான பின் முற் கூறியதுபோல நீர் விட்டுச் சுத்தப்படுத்தலாம்.

ஹாய் நலமா புளக்கில் முன்பு எழுதிய கட்டுரை சில விரிவாக்கங்களுடன் இங்கு பிரசுரமாகிறது.

Read Full Post »

>

‘காதுக் குடுமியை அகற்றுவது எப்படி?’ இப்படிக் கேட்பவர்கள் பலர். குப்பை வாளிக்குள் (Dustbin) இருக்கும் குப்பைகளை அகற்றுவதுபோல காதுக்குடுமியையும் அகற்ற வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள்.


உண்மையில் காதுக் குடுமி என்பது காதையும் செவிப்பறையையும் பாதுகாப்பதற்காக எமது உடல் தானகவே உற்பத்தி செய்யும் பாதுகாப்புக் கவசம் போன்றது.

பொதுவாக இது ஒரு மென்படலம் போல காதுக் குழாயின் சுவரின் தோலில் படிந்திருக்கும். இதனால் கிருமிகள், சிறுகாயங்கள், நீர் போன்றவவை காதைத் தாக்காது பாதுகாக்கிறது. அத்துடன் காதை ஈரலிப்பாகவும் வைத்திருக்கவும் உதவுகிறது. அதிலுள்ள கிருமியெதிர்ப்பு (antibacterial properties) பண்பானது வெளிக் கிருமிகள் தொற்றி, காதின் உட்புறத்தில் நோயை ஏற்படுத்துவதையும் தடுக்கிறது.

காதுக்குடுமி (Cerumen) என்பது இயல்பாக எண்ணெய்த் தன்மை உள்ள ஒரு திரவமாகும். சருமத்தில் உள்ள சில சுரப்பிகளால் (Sebaceous and Ceruminous glands) சுரக்கப்படுகிறது. ஒவ்வொருவரது உடல் நிலைக்கும் ஏற்ப இது நீர்த்தன்மையாகவோ, பாணிபோலவோ, திடமான கட்டியாகவோ இருக்கக் கூடும்.

காதின் சுவரிலிருந்து உதிரும் சருமத் துகள்கள், முடித் துண்டுகள், ஆகியவற்றுடன் கலந்து திடப் பொருளாக மாற்றமுறும். தலை முடியின் உதிர்ந்த கலங்கள் அதிகமாக இருப்பதும், எவ்வளவு நீண்ட காலம் வெளியேறாது காதினுள்ளே இருந்தது என்பதும் எந்தளவு இறுக்கமாகிறது என்பதற்கு முக்கிய காரணங்களாகச் சொல்லலாம்.

காதுக்குடுமி காதின் பாதுகாப்பிற்கு மிக அவசியமானது என்பதால் வழமையாக எவரும் அதனை அகற்ற வேண்டியதில்லை. தினமும் புதிது புதிதாக உற்பத்தியாகி வர பழையது எம்மையறியாது தானாகவே சிறிது சிறிதாக வெளியேறிவிடும்.

மென்மையான குடுமியானது முகம் கழுவும் அல்லது குளிக்கும் நீருடன் கலந்து வெளியேறிவிடும். அல்லது காய்ந்து உதிர்ந்துவிடும். சிலருக்கு, பல்வேறு காரணங்களால் வெளியேறாது உள்ளேயே தங்கி இறுகி விடுவதுண்டு. காதுக்குழாய் ஒடுங்கலாக இருப்பதும் சற்று வளைந்து இருப்பதும் காரணமாகலாம்.

சிலருக்கு அது இறுகி, கட்டியாகி வெளியேற மறுப்பதுண்டு. அது அதிகமாகி செவிக்குழாயின் விட்டத்தின் 80 சதவிகிதத்ததை அடைத்துக்கொண்டால் காது கேட்பது மந்தமாகும். ஒரு சிலருக்கு வலி ஏற்படலாம். வேறு சிலருக்கு கிருமித் தொற்றும் ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளது.



காதுக் குடுமிப் பிரச்சனை என மருத்துவர்களிடம் வருபவர்கள் அனேகர். வருடாந்தம் கிட்டத்தட்ட 12 மில்லியன் அமெரிக்க மக்கள் இப்பிரச்சனைக்காக மருத்துவ உதவியை நாடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 2/3 ருக்கு அதாவது 8 மில்லியன் பேருக்கு மருத்துவ ரீதியாக அதனை அகற்ற வேண்டிய தேவை ஏற்படுகிறது.

இதை அகற்றவது எப்படி?



பஞ்சு முனையுள்ள இயர் பட்ஸ் நல்லதா, சட்டைப் பின் நல்லதா, நெருப்புக் குச்சி நல்லதா?

இவற்றைக் காதுக்குள் விடுவதைப் போன்ற ஆபத்தான செயல் வேறெதுவும் கிடையாது. அவை காதிலுள்ள மென்மையான சருமத்தை உராசி புண்படுத்தக் கூடும். அல்லது அவை உராசிய இடத்தில் கிருமி தொற்றிச் சீழ்ப் பிடிக்கக் கூடும். அல்லது அவை காதுக் குடுமியை மேலும் உற்புறமாகத் தள்ளி செவிப்பறையைக காயப்படுத்தலாம். இதனால் நிரந்தரமாக காது கேட்காமல் செய்துவிடவும் கூடும். எனவே இவற்றை உபயோகிப்பது அறவே கூடாது.

காதுக் குடுமியை கரைத்து இளகவைத்தால் தானாகவே வெளியேறிவிடும். மிகவும் சுலபமானது குடுமி இளக்கி நீர்தான். உப்புத் தண்ணீர், சோடியம் பைகார்பனேட் கரைசல், ஒலிவ் ஓயில் போன்றவையும் உதவக் கூடும். அதற்கெனத் தயாரிக்கப்பட்ட விசேட (Waxol, Cerumol)காதுத்துளி மருந்துகளும் உள்ளன. ஐந்து நாட்கள் காலை, மாலை அவ்வாறு விட்டபின் சுத்தமான வெள்ளைத் துணியை திரி போல உருட்டி அதனால் காதைச் சுத்தப்படுத்துங்கள். பட்ஸ், குச்சி போன்றவற்றைப் பாவிக்க வேண்டாம். அல்லது சுத்தமான நீரை காதினுள் விட்டும் சுத்தப்படுத்தலாம்.



இவ்வாறு வெளியேறாது விட்டால் மருத்துவர் சிறிய ஆயுதம் மூலம் அகற்றக் கூடும்.

அல்லதுஅதனை கழுவி வெளியேற்றுவார். இதற்கென விசேடமாகத் தயாரிக்கப்பட்ட ஊசி போன்ற குழாய்கள் மூலம் நீரைப் பாச்சி கழுவுவார்கள். இதன்போது எந்தவித வலியும் இருக்காது. சில விசேட சிறு ஆயுதங்கள் மூலம் அல்லது உறிஞ்சி எடுக்கும் (Suction device) உபகரணம் மூலம் சுலபமாக அகற்றவும் முடியும்.தற்போதுள்ள குடுமி அகற்றப்பட்ட போதும் சிலருக்கு இது மீண்டும் மீண்டும் சேரக் கூடிய சாத்தியம் உண்டு.



மீண்டும் ஏற்படாமல் தடுக்க முடியுமா?

அதற்கென மருந்துகள் எதுவும் கிடையாது. வாரம் ஒரு முறை குளிக்கும் போது கையால் ஒரு சிரங்கை நீரை காதுக்குள் விட்டுக் கழுவுவது அதனை இறுகாமல் தடுக்கக் கூடும். ஆயினும் காதில் கிருமித் தொற்றுள்ளவர்களும், செவிப்பறை துவாரமடைந்தவர்களும் அவ்வாறு சுத்தம் செய்வது கூடாது.

அடிக்கடி குடுமித் தொல்லை ஏற்படுபவர்கள் 6 முதல் 12 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறவோ குடுமியை அகற்றவோ நேரலாம். ஆயினும் காதுக் குடுமியை நாமாக அகற்றுவதை விட, தன்னைத்தானே சுத்தம் செய்யும் படி காதின் பாதுகாப்பை அதனிடமே விட்டு விடுவதுதான் உசிதமானது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

குடும்ப வைத்தியர்

ஜீவநதி

Read Full Post »

>நாட்பட்ட இருமலும் காதுக்குடுமியும்

அந்த முதியவருக்கு இருமல். கடுமையானது அல்ல. ஆயினும் நீண்ட நாட்களாத் தொல்லை கொடுக்கின்றது. சளி கிடையாது. வெறும் வரட்டு இருமல்.

‘பார்க்காத வைத்தியர் கிடையாது. (என்னையும் சேர்த்துத்தான் சொன்னார்) செய்யாத சிகிச்சையும் கிடையாது. செத்தாப் பிறகுதான் நிற்கும்போலை’ என மிகுந்த மனக் கவலையுடன் கூறினார்.

கேட்டபோது மனவேதனையாக இருந்தது. குற்ற உணர்வும் ஏற்பட்டது.அவரைச் சோதித்துப் பார்த்தபோது எந்த வித்தியாசமான குறிகளும் தெரியவில்லை. பழைய பரிசோதனை அறிக்கையிலும் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. மீண்டும் மிக நிதானமாக ஆராய்ந்து பார்த்ததில் இரண்டு காதிற்குள்ளும் குடுமி அடைந்திருப்பது தெரிந்தது.

காதுக் குடுமி இயற்கையாக உற்பத்தியாவது. நோயல்ல. காதுக்குள் சுரக்கும் எண்ணெய் போன்ற திரவமே அடிப்படையானது. இது காதின் பாதுகாப்பிற்காகவே சுரக்கின்றது. வாயை மென்று உண்ணும்போது தசைகளில் ஏற்படும் அசைவுகள்மூலம் தானாகவே சிறிது சிறிதாக வெளியேறி விடுகின்றது. சிலருக்கு காதின் தோலிலிருந்து உதிரும் கலங்களும் ரோமங்களும் அதனுடன் சேர்ந்து இறுகிக் கட்டியாகி விடுவதுண்டு.

காதுக் குடுமி இயற்கையானது என்பதால் பொதுவாக எந்தத் தொல்லையும் கொடுப்பதில்லை. முன் கூறியது போல இறுகிக் கட்டியாகி விட்டால் கூட பலருக்கும் எவ்வித தொந்தரவும் ஏற்படுவதில்லை. காது கேட்பது மந்தமாக இருக்கலாம். சிலருக்கு மென்மையான வலி ஏற்படலாம். தலைக்கு முழுகும்போது அல்லது நீந்திய பின்னர் காது அடைப்பது போலிருப்பதுடன், வலியும் ஏற்படக்கூடும். வேறு சிலருக்கு காதிற்குள் இரைச்சல் ஏற்படக்கூடும். தலைச் சுற்றும் வரக்கூடும். வெகு அரிதாகவே நாட்பட்ட இருமல் காரணமாக காதுக் குடுமி இருப்பதுண்டு. அதனால் வைத்தியர்களின் கவனத்தை அதிகம் ஈர்ப்பதில்லை. அந்த முதியவருக்கு தொல்லை கொடுத்த நாட்பட்ட இருமலானது காதுக் குடுமியை அகற்ற நின்றுவிட்டது.

இதை வாசித்தவுடன் நாட்பட்ட இருமல் உள்ளவர்கள் காதுக் குடுமியை அகற்றுவதற்கான ஆயுதங்களைத் தேடி ஓடவேண்டாம். என்ன ஆயுதங்கள்? காது கிண்டி, நெருப்புக் குச்சி, சட்டைப்பின், கடதாசிச் சுருள், பஞ்சு முனைக் குச்சி (Ear Buds) இப்படி இன்னும் பல. இவற்றை நீங்கள் உபயோகிப்பது ஆபத்தானது. எடுக்க முயலும்போது குடுமி வழுகி உட்புறமாகத் தள்ளுப்பட்டு செவிப்பறையை சேதமாக்கலாம். இதனால் காது செவிடுபடவும் வாய்ப்புண்டு. அல்லது கிண்டுவதால் உரசல் ஏற்பட்டு புண்படலாம். கிருமித் தொற்று ஏற்பட்டு சீழ் வடியலாம். இப்பொழுது காதில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு பஞ்சு முனைக் குச்சிகள்தான் காரணம் எனக் காது வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கின்றார்கள் என்பதை நினைவில் வைத்திருந்து அவற்றை உபயோகிப்பதைத் தவிருங்கள்.

காதுக்குடுமி இருந்தால் வைத்திய ஆலோசனை பெறுங்கள். அது கரைந்து வெளியேறுவதற்கான துளி மருந்துகளை அவர் தரக்கூடும். அது தானே கரைந்து வெளியேறும் இல்லையேல் வைத்தியர் காதைக் கழுவி அகற்றுவார். சிலருக்கு கருவிகள் மூலமும் அகற்றக்கூடும்.

காதுக் குடுமியை அகற்ற வேண்டுமா? வேண்டாமா? அகற்றுவது அவசியமாயின் எந்த முறையில் அகற்றுவது என்பன பற்றி வைத்திய ஆலோசனைப்படியே நடவுங்கள்.

Read Full Post »