ரசனைக் குறிப்பு
பரணீதரனின் ‘அல்வாய் சண்டியன்’
‘சிறுகதை, கவிதை, நாவல் போன்ற புனைவுகளின் மீதான ஆர்வம் குறைந்து செல்கிறது’ என மிகச் சிறந்த கவிஞரும் இலக்கியவாதியுமான நண்பர் அ.யேசுராசா அண்மையில் ஒரு கூட்டத்தில் பேசும்போது குறிப்பிட்ட போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இருந்த போதும் தேர்ந்த இலக்கியவாதிவாதியே இப்படி சொல்லும் போது சாதாரண ரசிகனான என் போன்றவர்களின் நிலைமை எப்படி இருக்கும் எனச் சிந்திக்கத் தோன்றியது.
காரணம் என்னவாயிருக்கும்?; எமது வயது காரணமாக இருக்குமா அல்லது பெரும்பலான புனைவுகள் செக்கு மாடுகள் போல சலிக்க வைக்கும் ஒரே பாதையில் சுத்திச் சுத்திச் வருவதால் வாசித்து அலுத்துவிட்டது காரணமாக இருக்குமா தெரியவில்லை.
இருந்தபோதும் அண்மையில் மூன்று புத்தகங்களை ஆர்வத்தோடு படித்து முடித்தேன். ஞானம் பாலசந்திரனின் ‘பொய்மையும் வாய்மையிடத்து’ திருமதி சோமா ஜெயகொடியின் ‘சித்தார்த யசோதரா’ மற்றும் பரணீதரனின் ‘அல்வாய் சண்டியன்’.
பரணீதரனின் நூல் சிறுகதைத் தொகுதி மற்ற இரண்டும் நாவல்கள்.
பரணீதரனின் சிறுகதைத் தொகுதியை ஆர்வமாக படிக்க முடிந்ததற்கான காரணங்கள் எவை?
சிறுகதைகள் என்பவை சிறுகதைகளாக இருக்க வேண்டும். அளவில் மட்டுமல்ல சம்பவக் கோர்வைகளிலும் கூட. நாவல்களின் குட்டிகள் போலவோ காரண காரியங்களை ஆழ்ந்து ஆராயும் கட்டுரைகள் போலவோ வழவழா என்று இருக்கக் கூடாது. பேச வந்த கருவை சுருக்கமாக அழகான மொழியில் நறுக்கென நெஞ்சில் பதியும் வண்ணம் சொல்வதுடன் வாசகனை தன்னுடன் கைகோர்த்து பிணைத்து அழைத்துச் சொல்வது போல சுவார்ஸமானதாக இருக்க வேண்டும். அது இந்தத் தொகுப்பில் உள்ள படைப்புகளில் நிறையவே கிடைக்கிறது.
சுமார் 106 பக்கங்களை மட்டும் கொண்ட இந்தத் தொகுதியில் பத்து சிறுகதைகள் உள்ளடங்கியுளன. ஓவ்வொரு கதையும் சுமார் பத்து பக்கங்கள் மட்டுமே கொண்டுள்ளதாகக் கொள்ளலாம். அளவான சிறுகதைகள். சுருக்கமும் செறிவும் கொண்டவை. முன்னுரை வாழ்த்துரை, ஆய்வுரை. கருத்துரை என வாசகர்களான எங்களின் பொறுமையைச் சோதிக்காது அரைப் பக்க ‘என்னுரை’யைத் தாண்டி நேரடியாக படைப்புகளுடன் கைகோர்க்க முடிகிறது.
இவருடைய கதைகள் பெரும்பாலும் போரின் காரணமான சமூக மாந்தருக்கு ஏற்பட்ட பாதிப்புகளையே பேசுகின்றன. உயிரிழப்பு, உறவிழப்பு, அங்கயீனம், தனிமை, பொருளிழப்பு, வறுமை போன்ற பலவற்றைக் கதைகளுடே தர்சிக்க முடிந்தாலும் அவற்றின் ஊடுபொருளாக பெரும்பாலும் உளவியல் தாக்கங்கள் அமைவதைக் காண முடிகிறது. சகமாந்தரின உள்ளுணர்வுகளையும் மனக்கிடக்கைகளையும் உணர்ந்து கொள்ளக் கூடிய நுண்ணறிவு கொண்ட ஒருவருக்கே இது சாத்தியமாகும். மேலதிகமாக, புத்திபூர்வமான தேடலும் இருந்திருக்கலாம். உளவியலையும் தனது பட்டப் படிப்பில் ஒரு பாடமாக பரணீதரன் எடுத்துக் கொண்டிருந்தாரோ என்பது எனக்குத் தெரியாது .
பரணீதரனின் பாத்திரங்களும் களங்களும் பலதரப்பட்டவை. வாசகர்களில் பெரும்பாலானவர்கள் போலவே இவரது கதை மாந்தர்களும் பெரும்பாலும் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே. ஆசிரியர்கள் மாணவர்கள், அரச சேவையாளர்கள், மருத்துவர்கள் போன்றவர்கள். இத்தகைய பாத்திரங்களும் களங்களும் உயிரோட்டமாக இருப்பதற்கு காரணம் ஆசிரியருக்கும் நன்கு பரிச்சயமான வாழ்வும் மனிதர்களுமே அவை. அவரது வாழ்வில் காண்பபை கேட்பவை உணர்பவை எனலாம். சொல்லும் மொழியில் சுவை இருந்தால் அனுபவம் சார்ந்த படைப்புகள் உயிரோட்டாக அமைவதில்லை வியப்பில்லை.
ஆயினும் தனக்குச் சற்றேனும் தொடர்பற்ற களங்களில் அமையும் இரு கதைகளான வெட்டியான் மற்றும் நினைந்ததுமற்று நினையாமையுமற்று … ஆகிய இரு கதைகளும் மிகவும் வித்தியாசமானவை. சமூக பொருளாதார நாகரீக நிலைகளில் எட்டாத் துருவங்களில் நிற்பவை.
இருந்தபோதும் அவை இரண்டும் மிகவும் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளன.
நினைந்ததுமற்று நினையாமையுமற்று … மிகவும் வித்தியாசமான கதை. அதன் ஆரம்ப வசனங்களே புதிய சூழலுக்குள் வாசகனை ஈர்த்து ஆர்வமுடன் வாசிக்கத் தூண்டுகின்றன. ‘காலையில் முதலில் எதிர்ப்படுவோரைக் கண்டதும் உதிர்க்கும் பழழன னயலஇ அயவந சூ இதழ்கரையோரம் தோன்றும் சநயனல அயனந புன்சிரிப்பு.’ இவை போதாதா கதையோடு இணைய வைப்பதற்கு.
இக் கதை முழுவதும் வித்தியாசமான புனைவாகவே இருக்கிறது. விசேட அறிவியல் நிபுணத்துவம், முதுமையின் குழந்தைத்தனம், களங்கமற்ற அன்பு, மருத்துவ அறிகுறிகள் இவற்டையே இழையோடும் நுட்பமான புதிர், எனப் பலவும் இச் சிறுகதையில் குறுகப் புனைவாகியுள்ளன. ஆனால் சிறுகதையின் வார்ப்ப்பானது வாசகனை ஒரே மூச்சில் படித்து முடிக்க வைக்கிறது.
மற்றது வெட்டியான் என்ற சிறுகதை. பேராசிரியர் எமில் சமூக அந்தஸ்தில் ஒரு துருவம் என்றால் வெட்டியான் மூர்த்தி சமூக அந்தஸ்தில் மறு துருவம்.
ஒரு குடிகாரன் பற்றிய கதை. குடிப்பவர்களைக் கண்டாலே மருத்துவன் என்ற ரீதியில் எனக்கு கோபம் பொத்துக் கொண்டு வரும். உழைக்கும் காசைக் கொட்டி தங்கள் உடலைக் கெடுத்து நோயை வாங்குகிறார்களே என்றதனால். அத்துடன் தங்கள் பொருளாதார நிலையை குழிதோண்டிப் புதைப்பதுடன் மனைவி பிள்ளை குட்டிகளின் குடும்ப மானத்தை வாங்குகிறார்களே என்ற ஆதங்கம்.
ஆனால் எதற்கும் ஒரு மறுபக்கம் இருக்கக் கூடும் என்பதற்கு இக்கதை நல்ல ஒரு உதாரணம். அன்பான மனைவி, குழந்தைகள் இருந்தும் குடிக்கிறான். ஏன் குடிக்கிறான். குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். பசியாற்ற வேண்டும், பாடசாலை செல்ல வைக்க வேண்டும் என்பதற்காகக் குடிக்கிறான். கேட்பதற்கு அபத்தமாக தோன்றினாலும் அதுதான் இக்கதையின் அடிப்படையாக இருக்கிறது.
கோபப்பட வேண்டிய பாத்திரத்தை மதிக்க வைக்க வைத்துள்ளமை படைப்பாளியின் திறமையைக் காட்டுகிறது.
மாணவர்களின் உலகம் அவர்கள் எதிர்கொள்ளும் இடர்கள் உளவியல் தாக்கங்கள் போன்றவற்றை ‘இடமாற்றம்’ மற்றும் ‘அல்வாய் சண்டியன்’ ஆகிய படைப்புகளில் தரிசிக்க முடிகிறது. நல்லாசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும் எவ்வாறு இருக்கக் கூடாது போன்றவை மறைபொருளாக வெளிப்படுகிறது. படமுடியாது இனித் துயரம் சிறுகதையிலும் பாடசாலை வாழ்வின் சில அம்சங்கள் சொல்லப்பட்ட போதும் அது பேசும் உள்ளடக்கம் முற்றிலும் வேறானது.
வெளிநாட்டுக்காரர் நாட்டுக்கு வந்து திரும்புவது பற்றிப் பேசும் படைப்புகள் இரண்டு இருக்கின்றன. வெளிநாடுகளில் எவ்வளவு கஸ்டப்பட்டு உழைத்து சலித்தாலும் இங்கு வந்ததும் தங்கள் பவிசுகளைக் காட்டி உறவுகளை வாய்பிளக்க வைக்கிற பலரைப் போல அல்லாது தனது மண்ணையும் மக்களையும் உறவுகளை நேசிக்கிறவர்கள் பற்றி கதைகளாக இருக்கின்றன. உறவுகளின் நேசத்தில் மனம் நிறையும் மனிதர்களைப் பற்றிய கதைகள் இவை. உறவுகளுக்கு கைகொடுத்து உயர்த்தும் மனம் கொண்ட நல்ல மனதுள்ளவர்கள் முக்கிய பாத்திரங்களாக இருக்கிறார்கள். மீண்டும் பிரிய நேர்வது அவர்கள் மனத்தை சஞ்சலப்படுத்துகிறது.
உண்மையும் அதுதானே வெளிநாடு சென்னறவர்களின் உதவி இல்லையெனில் இங்கு பலர் நட்டாற்றில் நிற்க வேண்டியிருந்திருக்கும்.
எம் இனத்தின் விடிவிற்காக போராடப் புறப்பட்டு அனைத்தையும் இழந்து நிற்பவர்களை எம்மவர்கள் கண்டுகௌ;ளாமலும் புறக்கணித்தும் வருவது வேதனைக்குரியது. அவர்களில் பலர் அங்கயீனர்களாகவும் வறுமையில் உழல்பவர்களாகவும் இருக்கிறார்கள். மீளப் பிறந்தவர்கள் கதை சற்று வித்தியாசமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மாலதி இனத்திற்கான தன் பங்களிப்பை வெளிப்படுத்தி சகாயம் பெற விரும்பாதவளாக இருக்கிறாள். போராளிகளின் கண்ணியத்தையும பெருமையையும் விற்பனைப் பொருளாக்கி அவமானப்படுத்த விரும்பாதவளாக இருக்கிறாள். மனதைத் தொடும் படைப்பு.
சாதீயம் ஒரு கதையில் மட்டுமே கருவாகியுள்ளது.
பரணீதரன் பல்துறை ஆளுமை கொண்டவர். படைப்பாளி, சஞ்சிகை ஆசிரியர், பதிப்பகம், இசை நாடக நடிகர் இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஈழத்து படைப்புகளை ஆவணமாக்கும் பணியில் தன்னை அர்ப்பணிப்போடு ஈடுபடுத்தியுள்ளார்.
இவ்வளவு பணிகளுக்கும் இடையில்; படைப்புலகில் முழுமையாக ஈடுபடுவது அசாத்தியம் என்றபோதும் படைப்பின் மீதான ஆர்வமும், படைப்புலகில் தனது இருப்பை உறுதிப்பபடுத்தியுள்ளமைக்கு இந்தத் தொகுப்பு சான்றாக அமைகிறது. சிறுகதை உலகில் தனது ஆற்றலை மேலும் மெருகுபடுத்திக் கொண்டால் ஈழத்து முன்னணி படைப்பாளிகளில் ஒருவராக வருவது நிச்சயம்.
அழகான வடிவமைப்பு. வாசிப்பதற்கு இதமான தமிழ் பொண்ட். ஜீவநதி வெளியீடு என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஏனெனில் ஜீவநதி பதிப்பகத்தின் நூல்கள் அனைத்துமே அழகான வாசிப்பதற்கு இதமான வடிவமைப்பை கொண்டவையாக இருப்பதுதான்.
இக்கட்டுரையை புதுவிதி வார இதழில் வெளியிட்ட ஆசிரியருக்கு எனது நன்றிகள்
எம்.கே.முருகானந்தன்
0.00.0