யாருடைய புதுவருட வாழ்த்து உங்கள் மனதிற்கு இதமாக இருந்தது?
அதிகாலை கண்விழிக்க முன்னரே காதருகே Happy New Year Darling கிசுகிசுப்புடன் புது வருடம் பிறந்திருக்குமே! மற்ற வேலைகளை எல்லாம் மறந்து வாழ்க்கைத் துணையைக் கணகணப்புடன் கட்டியணைக்க வைத்திருக்குமே. அந்த வாய்மொழி வாழ்த்து பிடித்ததா?
கன்னத்தில் முத்தமிட்டு “Happy New Year Dad” என உங்கள் செல்லக் குட்டி வாழ்த்தியிருக்குமே! இதைவிட வேறென்ன வேண்டும் என மனத்தை நெகிழ வைத்திருக்குமே.
டெலிபோன் கிணுகிணுக்க எரிச்சலுடன் தூக்கம் கலைந்து நேரத்தைப் பார்த்தால் அதிகாலை 5 மணி. இந்த நேரத்தில் யார் என ரிசீவரைத் தூக்குகிறீர்கள்.
“எல்லா செளபாக்கியங்களும் கிட்டி, இந்தப் புதுவருடத்திலும் இனி வரும் காலங்களிலும் நீ நல்லா வழ வேணும்.”. காலையில் கோயிலுக்கும் போகும் அவசரத்திலும் மறக்காமல் வாழ்த்துச் சொன்ன அம்மாவின் வாழ்த்து உங்களை மகிழச்சியில் ஆழ்த்தியதா?
கிக்கீ கிக்கீ என குருவியின் அழைப்புப்போல விடாது இசையாக ஒலித்துக் கொண்டே நண்பர்களும் உறவுகளும் அனுப்பிய வாழ்த்துக்களால் நிரம்பி வழியும் SMS செய்திகள் பிடித்திருந்தனவா?
கணனியைத் திறந்தால் Facebook கிலும், Twitter, Google +, e mail கிலும் வந்திருக்கும் வாழ்த்துக்களும் செய்திகளும் உங்களுக்குப் பிடித்திருக்கும்.
இப்படிப் பல வாழ்த்துகள் கிட்டியிருந்தாலும் அதில் ஏதாவது ஒன்று உங்கள் மனதுக்கு நெருக்கமானதாக மகிழ்ச்சியில் ஆழத்துவதாக அமைந்திருக்கும். அது யாருடையது?
இதே போல எனக்கும் பல வாழ்த்துகள் கிடைத்திருந்தன.
குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், இலக்கிய வட்டத்தினர், ஊடகத் துறை நட்புகள் எனப் பல. பலவிதமாக, பல வடிவங்களில்..
பல நோயாளிகளிடமிருந்து கூட..
அதில் இவரது வாழ்த்து மடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. காரணம் அவர் ஒரு மிகவும் வயது முதிர்ந்தவர். 90 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார். சென்ற வருட கிருஷ்மஸ்க்கு அடுத்த நாள்தான் தனது 87வது பிறந்த தினத்தைக் கொண்டாடியிருந்தார்.
இந்த வயதிலும் தானே கடைக்குப் போய் இந்த வாழ்த்து மடலை எனக்கு வாங்கி அனுப்பியிருக்கிறார். இவர் தானே சென்று வாங்கிய விடயம் நேற்று அவரது மகள் தனது மகனை சிகிச்சைக்காகக் கொண்டு வந்தபோதுதான் தெரிந்தது.
“உங்கள் அப்பாவிற்கு எனது வாழ்த்தையும் அவரது வாழ்த்து மடலுக்கு நன்றியையும் தெரிவியுங்கள்” என்றேன்.
“தானாகவே போய் வாங்கிப் போட்டிருக்கிறார் போலை. அவர் அனுப்பியது எங்களுக்குத் தெரியாது. அப்படி ஒரு அன்பு அவருக்கு உங்கள் மேல்” என்றார்.
எனக்குப் புல்லெரித்ததது.
பணத்தினால் எல்லாவற்றையும் வாங்கிவிடலாம் என்ற மமதையுடைய காலத்தில் தனியார் மருத்துவனான என்னை நினைத்து புது வருட வாழ்த்து அனுப்பியிருக்கிறார். அதில் தனது நடுங்கும் கைகளால் வாழ்த்து எழுத எவ்வளவு சிரமமப்பட்டிருப்பார்.
வாழ்த்து மடலில் அவரது பெயரை மட்டும் மறைத்திருக்கிறேன்.
அவ்வளவு ஆழ்ந்த அன்பு அவருக்கு இருந்திருக்கிறது. சுமார் 32 வருடங்களாக அவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் மருத்துவானாக இருப்பதில் எனக்குப் பெருமையாக இருந்தது.
இப்படி எத்தனை மகிழ்ச்சிகள் குடும்ப மருத்துவனாக இருப்பதில்.
உங்கள் அனுபவங்கள் எப்படி?
0.0.0.0.0.0.0