Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘அந்திம காலம்’ Category

>“இப்ப மனிசியும் இல்லை. கையிலை காசும் இல்லை. உள்ளதை எல்லாம் பிடுங்கிப் போட்டு பிணமாகத்தான் அனுப்பினாங்கள்.”

மனைவியை இழந்த அவர் புலம்பினார்.

தீடீரென மயங்கி விழுந்த அவளை கொழும்பில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் அனுமதித்திருந்தார்.

கடுமையான ஸ்ரோக் (பக்கவாதம்).
நினைவில்லை.
வாயால் பேச முடியாது.
வேண்டியதைக் கேட்க முடியாது.
சாப்பிட முடியாது.
சலம் மலம் போவது தெரியாது.
செத்த பிணம்போலக் கிடந்தாள்.

நெஞ்சாங் கூடு அசைவதும், இருதயம் துடிப்பதும்தான் இன்னமும் உயிருடன் இருக்கிறாள் என்பதைப் புலப்படுத்தின.

நாளங்கள் வழியாக ஊசிகள், குழாய் மூலம் உணவு, மற்றொரு குழாய் மூலம் சிறுநீர் அகற்றல் என சுமார் இரண்டு மாதங்கள் கழிந்தன.

ஆனால் காப்பாற்ற முடியவில்லை.
காப்பாற்றக் கூடிய நோயாளியல்ல.
காப்பாற்றியிருந்தாலும் இன்னும் சிலகாலம்
அவ்வாறு மயக்கமாக கோமா நிலையிலேயே
கிடந்திருப்பாள்.

கணவர் இளைப்பாறிய அரச பணியாளர். உள்ள பணம் அனைத்தையும் மருத்துவனைக்கு தாரை வார்த்துவிட்டார். பிள்ளைகளும் இல்லை.

தனது எதிர்கால வாழ்வு என்னவாகப் போகிறதோ என்ற கவலையில் அவரும் கரைசேர்ந்து விடுவாரோ என எண்ணத் தோன்றியது.

இப்படிப் பலநோயாளிகள் சுய உணர்வின்றிக் கிடக்கின்றார்கள். தான் உயிரோடு இருக்கிறேனா இல்லையா எனத் தெரியாத நிலையில் இருக்கிறார்கள். பராமரிப்பவர்களால் ஈடு கொடுக்க முடிவதில்லை. பொருளாதார ரீதியாகவும் உள, உடல் ரீதியாகவும்.

அவ்வாறு இரண்டு வருடங்களுக்கு மேலாக நோயாளியை கோமா நிலையில் வைத்துப் பராமரித்தவர்களும் உள்ளனர்.

இவ்வாறு வைத்துப் பராமரிப்பது தங்கள் கடமை என்று பலரும் கருதுகிறார்கள்.
தங்களை வளர்த்து ஆளாக்கியவர்களை வைத்துப் பாராமரிப்பது தமது கடமை, மகிழ்ச்சி என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்.

ஆயினும் கூர்ந்து கவனித்தால் அவர்கள்
ஆழ்மனத்துள் படும் வேதனையும்,
உடல் உள நெருக்கீடுகளும்
அளப்பரியது என்பது தெரிய வரும்.

மருத்துவத்தின் வளர்ச்சியும் எதிர்கொள்ளும் சவால்களும்

அவ்வாறான நிலைக்குக் காரணம் என்ன?

மருத்துவ விஞ்ஞானம் அபரிதமாக வளர்ச்சியடைந்து விட்டது.
புதிய மருந்துகள் கிடைக்கின்றன.
உடல் இயக்கத்தை மிக நுணுக்கமாக கண்டறியக் கூடிய அறிவு வளர்ந்திருக்கிறது.
அதற்கு உதவக்கூடிய பரிசோதனை உபகரணங்கள் பாவனையிலுள்ளன. செயற்கையான முறையில் மரணத்தைத் தள்ளிப் போட்டு,
வாழ்வை நீடிக்கக் கூடிய உயிர்காப்பு உபகரணங்கள் கிடைக்கின்றன.

நோயாளிக்கும் உறவினருக்கும் பயன் இல்லை

ஆனால் இவை யாவும் ஒரு இக்கட்டான நிலைக்கு எம்மைத் தள்ளிவிட்டது. விஞ்ஞான வளர்ச்சியின் அபத்தமான நிலை எனவும் சொல்லலாம்.

மேற்கூறிய எவையுமே மரணத்தை நெருங்கிவிட்ட நோயாளிக்கு நன்மை பயப்பனவாக இல்லை.

அதேவேளை நோயாளியை உயிருடன் வைத்திருக்கிறோம் என்ற திருப்தியைவிட வேறேந்த நன்மை உறவினர்களுக்கும் கிடையாது.

நோயாளியின் விருப்பு

மரக்கட்டை போலக் கிடக்கும் நோயாளிக்கும் தனது விரும்பங்களை சொல்ல முடியாதுள்ள நிலை.

“என்னைத் தொந்தரவு செய்யாமல் நிம்மதியாகச் சாக விடுங்கள்.” எனப் பேச முடிந்தால் அவர் சொல்லக் கூடும்.

தானே தீர்மானிதல்

தனக்கு எத்தகைய சிகிச்சை அல்லது கவனிப்பத் தேவை எனத் தீர்மானிக்கும் உரிமை எந்த ஒரு நோயாளிக்கும் இருக்கவே செய்கிறது.

தற்போது செய்ய வேண்டியது என்ன, எதிர்காலத்தில் சிகிச்சை செய்ய வேண்டியவை எவை என்பது பற்றியும் அவரே தீர்மானிக்க வேண்டும்.

தெளிவுபடுத்தல்

ஆனால் அதற்கு முதல்
அவரது நோயென்ன,
அதற்கு எத்தகைய சிகிச்சைகள் செய்ய முடியும்,
சிகிச்சையின் பலன்கள் எவ்வாறு அமையும்,
நோய் எத்திசையில் பயணிக்கும் போன்ற விபரங்கள் அவருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.

அவர் தெளிந்த மனநிலையில் இருக்கும்போது தெளிவுபடுத்த வேண்டும். அத்தகைய சூழலில் அவர் தனக்கு அளிக்கப்படும் சிகிச்சையை ஏற்கக் கூடும். அல்லது வேண்டாம் என மறுக்கவும் கூடும்.

பத்திர வடிவில்

எதிர்காலத்தில் நோய் தீவிரமாகி அவர் சுயநினைவிழந்தால், அல்லது காப்பாற்ற முடியாது என்ற நிலைக்கத் தள்ளப்பட்டால் அந்த நேரத்தில் எத்தகைய கவனிப்பு கொடுக்க வேண்டும் என்பதை இப்பொழுதே அவர் தனக்குத்தான் தீர்மானித்து அதை பத்திர வடிவில் கொடுக்கலாம்.

அதற்கு உதவ வேண்டியது சுற்றியிருப்பவர் கடமை.
முக்கியமாக, உயிரோடு இருக்கும் காலத்தை நீடிக்கும் எத்தகைய சிகிச்சைகள் எதிர்காலத்தில் தனக்கு வேண்டும் அல்லது வேண்டாம் என்பதைத் தானே இதன் மூலம் தெளிவுபடுத்த முடியும்.

சுருக்கமாகச் சொல்வதாயின் அந்திம கால மருத்துவ பராமரிப்புக்கான முன்னேற்பாடு (Advance Care Planning) என்பது பின்வரும் விடயங்களில் நோயாளிக்கு உதவுவதாகும்.

  • நோய் பற்றிய விபரங்களையும் அதன் எதிர்காலம் எப்படி அமையும் என்பதையும் தெளிவுபடுத்துவது.
  • இப்பொழுது உள்ள நோய்க்கு எதிர்காலத்தில் மருத்துவம் அளிக்கக் கூடிய சிகிச்சை முறைகள் பற்றிய விளக்கங்கள்.
  • தற்போதும் எதிர்காலத்திலும் அளிக்கப்படும் சிகிச்சைகள் மூலம் கிடைக்கக் கூடிய நல்விளைவுகளையும், மாறாக அதன் சுமைகளையும் தெரியப்படுத்தல்.
  • நோயாளி தனது விருப்பத்தையும் தெரிவுகளையும் குடும்ப அங்கத்தவர்களுடனும். மருத்துவருடனும் கலந்தாலோசித்து முடிவுகளை ஆவணப்படுத்தல்.
  • தன்னால் முடிவு எடுக்க முடியாத வேளையில் புதிய பிரச்சனைகள் வந்தால் அதற்கான முடிவை தனக்காக அந்நேரத்தில் எடுப்பதற்கான ஒரு பிரதிநிதியை நியமித்தல்.
உறவினருக்கும் மன அமைதி

“இவ்வாறான அந்திம கால மருத்துவச் சேவைகளுக்கான முன்னேற்பாடு செய்வதன் மூலம் நோயாளிகளை இறுதி காலத்தில் பராமரிப்பதில் முன்னேற்றம் ஏற்படுவதுடன், உறவினர்களிடையே

  1. உளநெருக்கீடு,
  2. மனப்பதகளிப்பு நோய்,
  3. மனச்சோர்வு நோய்

ஆகியன ஏற்படுவதைக் குறைக்கவும் முடிகின்றது”.

இவ்வாறு பிரபல மருத்துவ இதழான BMJ அண்மையில் வெளிவந்த கட்டுரை கூறுவதானது இதற்கு ஆய்வுரீதியான வலுவையும் கொடுக்கிறது.
இது அவுஸ்திரேலியாவில் செய்யப்பட்ட ஆய்வு. இது பற்றி மேலும் அறிய கீழே .சொடுக்கவும்

இது எமது நாட்டிற்கான ஆய்வு அல்ல எனக் கூறி இப்பிரச்சனையை மூடி மறைப்பதில் எவ்வித பிரயோசனமில்லை.

காலாசார செழுமைக்கு இழுக்கா?

கலாசார செழுமைமிக்க எமது வாழ்க்கை முறையில் இது அவசியமற்றது என்று எண்ண வேண்டாம்.

முதியோர் இல்லங்களின் அவசியம் பற்றி சுமார் 20-25 வருடங்களுக்கு முன் பேசியபோதும் இவ்வாறே பலரும் தட்டிக்கழித்தனர். ஆனால் அப்படிப் பேசிய சிலரே நல்ல முதியோர் இல்லம் எங்கே இருக்கிறது எனக் கேட்டு இப்பொழுது வருகின்றனர்.

எனவே பிரச்சனை உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும்வரை வாழாதிருக்க வேண்டாம்.

வீரகேசரி வாரவெளியீட்டில் ஏப்ரல் 18, 2010 அன்று வெளியான எனது கட்டுரையின் மீள்பிரசுரம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »