கவி மீனாவின் சிறுகதைத் தொகுப்பு
இது முடங்கல் காலம். கொரோனா தொற்று காரணமாக வெளியே திரிய முடியாது வீட்டுக்குள் முடங்க வேண்டிய காலமாயிற்று. சினிமா இல்லை. பூங்கா விஜயம் கிடையாது. உறவினர் வீடுகளுக்கும் போக முடியாது. வாசிப்பும், காணொளியும் மட்டுமே வாழ்வாயிற்று.
https://issuu.com/kavi.meena/docs/_________________
அதற்கு ஏற்றாற் போல, காலத்தின் தேவை போல கவி மீனா தனது முதலாவது சிறுகதைத் தொகுதியை வெளியிட்டிருக்கிறார்.
கூட்டம் இல்லை, வெளியீட்டு விழா இல்லை: எந்த வித ஆரப்பாட்டமும் இல்லாமல் தனது நூலை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.
இதே போலத்தான் ஜோதிகாவின் பொன் மகள் வந்தாள் சினிமாவும் கூட இணையத்தில்தான் வெளியாகியுள்ளது.
20 பக்கங்கள் நீளும் இந்த தொகுதியில் மொத்தம் 9 சிறுகதைகள் அடங்கியுள்ளன.
இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகள் தாயக மண்ணின் மாந்தரின் வாழ்வைப் பேசும் அதே நேரம் புலம் பெயர் வாழ்வின் கோலங்களையும் வாசகர் பார்வைக்கு வைக்கின்றன.
முதல் கதை ஆத்ம திருப்தி என்பதாகும்.
பின் நோக்கிச் சொல்லப்படும் கதை இது.
வெளி நாட்டிற்கு சென்ற ஒருவன் (ரவி) அங்கு தங்கியிருக்க விரும்பாமல் மீண்டும் தாய் மண்ணுக்கு வந்து தந்தை உட்பட உறவுகள் நண்பர்களின் பேச்சுக்கும், ஏளனத்திக்கும் ஆளாகிறான்.
அவன் ஏன் திரும்பி வந்தான். அதைச் சொல்வதுதான் கதை. நிச்சயமாக சொல்லப்பட வேண்டிய கதை.
ஒரு பிரபல பாடசாலையில் மதிப்பு மிகு ஆசிரியராக இருந்த அவன் அங்கு, இங்கு செய்யவும் தயங்கும் பல வேலைகளை மனதைக் கடித்துக்கொண்டு செய்வதும், தங்குவுதற்கு ஆமான இடமின்றி துன்பப்படுவதும், இனத் துவேசத்திற்கு முகம் கொடுப்பதும்…. எத்தனை எத்தனை துன்பங்கள்.
யாழ் மண்ணில் தலைவிரித்தாடும் வெளிநாட்டு மோகத்திற்கு சாட்டை அடி கொடுக்கும் அவசியமான படைப்பு.
அடுத்த கதை ஏங்கித் தவிக்குது தாய் மனம் என்பதாகும். தலைப்பே பொருளை உணர்த்தி நிற்கிறது.
யாழ் மண்ணின் கட்டுப்பாடான பண்பாட்டு முறையில் வாழ்ந்த அவள் ஜேர்மனயில் இப்போது வாழும்போது வளர்ந்த தனது மகளும் அதே விதமான பாரம்பரிய முறையில் பண்பாக வாழ வைக்க வேண்டும் என விருப்புகிறாள்.
மகளும் அடங்கி நடக்கிறாள். ஆனால் திடீரென ஒருநாள் யாவும் தலைகீழாக மாறும் நிலைக்கு முகம் கொடுக்க நேர்கிறது.
வாழும் இடம்இ சூழல் போன்றவை எமது வாழ்க்கை முறையை எவ்வாறு பாதிக்கின்றன. அதிலும் முக்கியமாக இளம் தலைமுறையினர் அந்த மண்ணின் சூழலுக்கு ஏற்பவே வாழ்வார்கள். அதைக் கட்டுப்பாடுகள் விதித்து மாற்ற முயல்வது முடியாத காரியமாக ஆகிவிடும் என்பதைச் சொல்கிறது
யாழ் மண்ணின் சூழலில் வாழ்ந்தவர்களுக்கு இது அதிர்ச்சி தருவதாக அமையக் கூடும் ஆயினும் யாதார்த்தத்தை புரிந்து நடக்க வேண்டும் என்பதை மறைமுகமாகச் சொல்கிறது இக் கதை.
சித்திரையில் சிறுவன் என்பது அடுத்த கதை. சித்திரை மாசத்த்தில் ஆண் குழந்தை பிறந்தால் அது குடும்பத்திற்கு ஆகாது என்பது எமது மக்களின் நம்பிக்கை. இது போன்ற எத்தனையோ காலத்திற்கு ஒவ்வாத பல மூட நம்பிக்கைகளை எமது தமிழ் சமூகம் இன்னமும் சுமந்து வருகிறது. சிறு வயது முதல் பலரும் பல தடவைகள் இவனது பிறப்பை ஒரு தோசமாகச் சொல்லி இவன் மனதைத் துன்ப்பப் படுத்துவதுடன் கோபத்திற்கும் குற்ற உணர்வுக்கும் ஆளாக்குவதை கதாசிரியை சம்பவங்கள் ஊடாக சொல்லிக் கதையை நகர்த்துகிறார்
கரு நாக்கு, நாகதோசம் என்ற பேச்சுக்களும் அவனைத் துன்புறுத்தியதை வாசிக்க மனது நோகிறது. இத்தகைய மூட நம்பிக்கைகளிலிருந்து என்றுதான் எமது சமூகம் விடுபடும் என்ற ஏக்கம் தொற்றுகிறது இக் கதையைப் படித்த போது.
ஒரு ஈழக் கறுப்பன் செய்த காதல் என்பது புகுந்து நாட்டில் வெளிறாட்டுப் பெண்ணை ஏமாற்றி வாழ்ந்து விட்டு கைகழுவிவிடும் நயவஞசகத்தை தோலுரித்துக் காட்டும் கதை.
இப்படியாக ஒவ்வொரு கதையும் எமது வாழ்வைப் பேசுகிறது. உன்னதங்களை மட்டும் பேசாமல் ஏமாற்றுகள் நயவஞ்சகங்களையும் பேசுகிறது.
யதார்த்தமான கதைகள். விழங்க முடியா முடிச்சுகள் கிடையாது. எம் மக்களின் மற்றுமொரு முகத்தைக் காட்டும் கதைகள் எனலாம்
நீங்களே படித்துப் பாருங்கள். உங்கள் கருத்தையும் பகிரலாமே
மறுமொழியொன்றை இடுங்கள்